Wednesday, May 31, 2017

தூய ஆவியாரின் வருகை பெருவிழா (04.06.2017)


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

 

திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான்  20:19-23

 *முன்னுரை*


அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளை குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும்  இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க  வந்துள்ள இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், , கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும் , தடையும் தாண்டிக் கிறிஸ்தவம்  வளர்ந்திருக்காது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களில் இருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்.!.ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள் . இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக்
கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப்பாடல்*

*ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்*
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.*பல்லவி*

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர் *பல்லவி*

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். *பல்லவி*

         
*தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524) *

*தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524) *

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா

*மன்றாட்டுகள்*


1.இயேசுவின் துணையாளராம் தூய ஆவியை எமக்களித்த இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய  ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும்  அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை  வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை  மன்றாடுகின்றோம்.


2.வானகக் கொடைகளை வழங்கி வரும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. அருட்கொடை வள்ளலே எம் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை  மன்றாடுகிறோம்.


4. அன்பு நிறைந்த  எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள்  சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல்  பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Thursday, May 25, 2017

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28.05.2017

*ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 28.05.2017*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

*முன்னுரை*

அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதுமில்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. 

இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதா லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப்பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள“ என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

*இரண்டாம் வாசக முன்னுரை*

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.


*பதிலுரைப்பாடல்*

*பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.*
திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. *பல்லவி*
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். *பல்லவி*
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி *

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

*மன்றாட்டுகள்*

1. அன்புத் தந்தையே இறைவா! இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் தொடர்ந்து ஆற்றிடத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றம் பொதுநிலையினர் அனைவருக்கும் தேவையான ஞானத்தையும் உறுதியான நம்பிக்கையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணில் வாழ்பவராம் இறைவா, எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு, இறுதீலக்கு இவற்றை நமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

                                                   www.anbinmadal.org


Thursday, May 18, 2017

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 21.05.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 15:18-21

*முன்னுரை*


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம் தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்வுப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.


*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்..


*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப்போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


*பதிலுரைப்பாடல்*



பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
*திருப்பாடல் 6: 1-7. 16,20*


அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, `உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை' என்று சொல்லுங்கள். *பல்லவி*

`அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. *பல்லவி*

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! *பல்லவி*

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

*மன்றாட்டுகள்*

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திரு அவையை வழி நடத்தும் எம் திருதந்தை, அவர் வழியாய் மந்தைகளைச் செவ்வனே பராமரித்து வழி நடத்தும் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக மீண்டும் தங்கள் பணிவாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைசமூகத்தை ஆன்மீக வாழ்விற்கு அழைத்துச் செல்லத் தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2.ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! இன்று ஏழைகள் மீது திணிக்கப்படும் பொருளாதார நெருக்கடிகள், வரிவிதிப்புகள் மூலம் சமூகத்தின் பல இடங்களில் ஏழைகள் நசுக்கப்பட்டு, அவர்களின் உழைப்புகள் சுரண்டப்படாமல், அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழ அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா! நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா! புதிய கல்வி ஆண்டில் புதிய கல்விக்காகக் கல்லூரிகளிலும், கல்விக்கூடங்களுக்கும் செல்ல இருக்கும் எம் இளையோர்களைக் கரம்பிடித்து அழைத்துச் சென்று, அவர்கள் சிறந்த கல்வினைப் பெற்றிடவும், நவீன உலகமாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்ததைப் பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                                          www.anbinmadal.org


Thursday, May 11, 2017

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 14.05.2017


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

*முன்னுரை*


அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு. ‘நானே உங்களுக்கு எல்லாம்’ என்று இறைமகன் இயேசு ஆணித்தரமாகத் தன் வார்த்தைகள் மூலம் தன் உடனிருப்பைப் பதிவுச் செய்யும் இன்று கிறிஸ்துவின் சீடர்களாய் ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
யோவான் நற்செய்தியில் இயேசு ஏழு முறைத் தன்னைப் பற்றி "நானே..." என்ற வாக்கியங்களைக் கூறியுள்ளார். எனினும் நம் அனைவரின் உள்ளங்களில் ரீங்காரமிடும் மிகவும் பிரபலமான இயேசுவின் வாக்கியமாய் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே..." என்ற வாக்கியம் என்றால் அது மீகையாது.. இயேசு தன்னைப்பற்றிக் கூறிய "நானே..." வாக்கியங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால், எல்லாமே எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு கூறிய வார்த்தைகள் என்பதை உணரலாம். தன்னைச் சுற்றிப் போராட்டமும், குழப்பமும் நெருக்கும்போது ஒருவர் 'நான் இப்படிப்பட்டவன்' என்று கூறுவதில் நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இயேசு இன்று அத்தகைய பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறார்.
இது மேமாதம். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பலருக்கு வேலை மாற்றம், இடம் மாற்றம், வீடு மாற்றம், கல்விக்கூட மாற்றம் என்று பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் எழுந்திருக்கலாம். பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில் தெரியும்போது, இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக் காட்டவேண்டும் என்று நம் வழியும், உண்மையும், வாழ்வும் ஆன உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


திருத்தூதர்கள் இறைபணியிலும், இறைவேண்டலிலும் அதிகமாய் ஈடுபட்டு அதில் உறுதியாய் நிலைத்திருக்க, மற்றப்பணிகளில் ஈடுபடுவது சரியல்ல என்பதை எடுத்துரைக்கும் வகையில் இறைஞானம் நிறைந்த எழுவரை அப்பணியில் ஈடுபடுத்தினர். இதன் மூலம் திருத்தூதர்கள் இறையரசை அறிவிக்கும் பணியைச் செவ்வனே செய்து திரளான மக்களை இயேசுவின் சீடர்களாக்கினர். நாமும் இறைவேண்டலிலும் நற்செய்திப் பணிகளில் சிறந்து விளங்க இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகம் உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள் என்று அழைக்கின்றது. அதன் மூலம் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், தூய மக்களினத்தினராகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் ஆக்கப்படுகிறோம். எனவே வியத்தகு ஒளிக்கு அழைத்துவந்தவரின் மேன்மைகளை அறிவிப்பது நம் கடமை என்று வலியுறுத்தும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.


*பதிலுரைப்பாடல்*


*பல்லவி*: ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33:1-2,4-5, 18-19
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

*மன்றாட்டுகள்*


1. எம்மைப் படைத்து  ஆளும் எம் இறைவா! எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகி வரும் இவ்வுலகில் உம் திருஅவையின் ஆயனாம் திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற இயேசுவின் வார்த்தைகளைத் தங்கள் உள்ளத்தில் பதித்து உம் உயிருள்ள சாட்சிகளாய் வலம் வரவும், பிறரன்பில் நிலைத்திருந்து நல் வழிகாட்டிகளாய் வாழ்ந்திடத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

2. மனமாற்றத்தை விரும்பும் எம் அன்புத் தந்தையே இறைவா! எம் குடும்பத்தில் நிகழவிருக்கும் பலவேறு மாற்றங்களான எங்கள் பணிமாற்றம், இடமாற்றம், பாடசாலை மாற்றங்கள், திருமணங்கள் போன்ற மாற்றங்களைச் சந்திக்கத் தூயஆவின் கொடைகளாம் உறுதி, துணிவு, ஞானம் ஆகியவற்றைத் தந்து எங்கள் குடும்பங்கள் மகிழ்வுட பயணிக்கச் சரியான வழியை, சரியான திசையை எமக்குக் காட்ட வேண்டும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமக்கு நல்வழிக் காட்டும் எம் இறைவா! எம் குடும்பங்களில் பல இளையோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு கூறும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற வார்த்தைகள் அவர்களை நல் வழிக்கு, ஒளிமிக்க, உண்மையான வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

4. உம் அன்பால் எம்மை ஒன்றிணைக்கும் இறைவா! அனம் பறக்கும் இவ்வெயில் காலத்தில் இவ்வையகமும், நாங்களும் சிந்தைக் குளிர்ந்திட, வறட்சியும் வறுமையும் நீக்கிட, வெயிலின் தாக்கத்தால் துன்புறும் எம் முதியோர், நோயுற்றோர், குழந்தைகள் அனைவரின் நலம் காக்கப்பட எங்களுக்கு உமது இரக்கத்தை அருள்மாரிப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. தாயும் தந்தையுமான எம் இறைவா! நூறு ஆண்டுகளுக்கு முன் பாத்திமாநகரில் மூன்று சிறார்களுக்கு எம் அன்னை அளித்த காட்சியை நினைவுகூறும் இவ்வேளையில் அன்னையின் மூலமாக நீர் அளித்த செய்திகளை மனதில் ஏற்று இவ்வுலக அமைதிக்காகவும், உலகத்தின் கடைக்கோடி வரையுள்ள அனைவரும்  ஒன்றிணைத்து உம் இறையரசில் அழைத்து வரத் தேவையான வரங்களை எங்களுக்கு வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

                                  

Wednesday, May 3, 2017

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு 07.05.2017



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*



திருத்தூதர் பணிகள் 2:14அ  ,36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

*முன்னுரை*


அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் நான்காம் ஞாயிறான இன்று நல்லஆயன் ஞாயிறாகக் கொண்டாட இறைவனின் திருவடி நாடி நம் ஆலயம் வந்துள்ள இயேசுவின் அன்பார்ந்த இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இயேசு தன் ஆடுகளுக்கு முன்னே பாதுகாப்பாகச் செல்லும் நல்ல ஆயனாக இருக்கின்றார். இந்த நல்ல ஆயன் மானிடராகிய நம் வாழ்விற்காகத் தன்னையே தியாகம் செய்யும் தாயுள்ளம் படைத்தவராகத் தான் இருப்பதை இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் பதிவு செய்கின்றார்.

இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று நாமும் இயேசுவைப் போல் தந்தையுடன் இறைவேணடலில் நிலைத்திருந்து அவரின் சீரியப் பார்வையில் நம்மிடம் காணப்படும் அனைத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்துச் செயல்படுவோம் இறையரசை அறிவிக்க..

இறையழைத்தல் ஞாயிறான இன்று அவரவர் இருக்கும் நிலையில் இருந்து இறைவனின் அழைத்தலை உணர்ந்து எத்தனை தோல்விகள் வந்து வாட்டினாலும் அதனை வெற்றிக்கொள்ள இத்திருப்பலியின் வழியாக நம் ஆயனாம் இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் ஒர் அணியாக...


*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*

இறைமகன் இயேசுவைக் கொலைச் செய்த  இஸ்ரயேல் மக்களுக்குச் சீடர்கள் விடுக்கும் அழைப்பான ”மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும் பொருட்டுத் திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூயஆவியைப் பெற்றுக்கொள்ளவீர்கள் என்பதே ஆகும். இவ்வாறு மனம் மாற இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


நன்மை செய்தும் துன்பத்திற்கு ஆளாகும் நாம் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும் போது அவை கடவுளுக்கு ஏற்றதாக உள்ளது. இவ்வாறே இயேசுவும் துன்புற்று ஒரு மாதிரியை விட்டுக் சென்றுள்ளார். இதைப் பின்பற்றி நீதிக்காகவே வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனத்தில் உள்வாங்கிச் சிந்திப்போம்.


*பதிலுரைப்பாடல்*

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். *பல்லவி*

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். *பல்லவி*

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. *பல்லவி*

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். *பல்லவி*


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா




*மன்றாட்டுகள்*


1. நல்லஆயன் நானே என்ற இறைமகனின் திருப்பயணத்தில் இணைந்து இறைபணியாற்றிடத் திருப்பொழிவு செய்து தேர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், ஆயாகள், திருப்பணியாளர்கள் அருட் சகோதரர்கள், சகோதரிகள் பொதுநிலையினர் அனைவரும் நல்ல மேய்ப்பனாகத் தன் ஆடுகளுக்காகத் தன்னையே தருகின்ற ஆற்றல் கொண்டவர்களாகிட, தங்களின் அழைப்பை உணர்ந்து உழைத்திட வேண்டிய அருள்வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம்மை ஆளும் எம் தலைவா! நாட்டில் செயல்படும் தலைமை பொறுப்பாளர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலம் காணவும் ஏற்ற தாழ்வு இல்லா சமத்துவ சமுதாயம் படைத்திட அவர்களுக்கு போதுமான ஞானத்தையும் அருள் வாழ்வையும் அவர்கள் மீது பொழிந்து  உம் மக்களை பேணி காக்கும் நல்ல ஆயனாக செயல்படவேண்டிய வரத்திற்காக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை என்று இயம்பிய இயேசுவே! உமது திருப்பணியாளர்கள் சமுதாயத்தல் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாக ஏற்றுக் கொண்டு உம் திருப்பணியைத் திறம்பட ஆற்றிட உம் துணையாளரின் துணை அவர்களோடு இணைந்து இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஆற்றலை இவர்களுக்கு நிறைவாய் பொழிந்து அவர்கள் உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் என்றுரைத்த இயேசுவே! இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை நாங்கள் உணர்ந்து உம்பாதம் அவர்களை அர்ப்பணிக்கின்றோம். இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறையழைத்தலை உணர்ந்து நல்ல கனி தரும் உமது ஊழயர்களாக அவர்கள் வளர்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.                  
            
.
www.anbinmadal.org