Monday, June 24, 2019

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*


I. 1 அரசர் 19:16,19-21
II. கலாத்தியர் 5:1,13-18
III. லூக்கா 9 : 51-62


*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாடத் திருஅவை அழைக்கும் இவ்வேளையில் நம் ஆலயத்தில் ஒருமனதோராய்க் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிக்கும் சொற்கள். இன்றைய முதல் வாசகத்தில், கலப்பைப் பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல். நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு.

கலப்பைக் களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. இவைகளின் நோக்கம் நிறைவேறவில்லை என்றால் விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல.

நம் சிந்தனையில்/ இறைவார்த்தைகளால் நம் உள்ளத்தை உழுது/ நிலைவாழ்வு என்னும் விளச்சலை அடைய,/ ஈடுபாடு உள்ளக் கிறிஸ்துவ வாழ்வை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள/ இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம்.


*வாசக முன்னுரை*:


*முதல் வாசக முன்னுரை*:


இன்றைய முதல் வாசகம் எலிசா இறைவாக்கினராக அருட்பொழிவு செய்யப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது. எலிசாவின் மீது போர்வையைப் போட்டு எலியா அவரை அழைத்தபோது அவருக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று  தன்னுடைய பழைய விவசாய வாழிவிவேயே நிலைத்திருப்பது அல்லது அனைத்தையும் இழந்தவிட்டு இறைவனுக்குப் பணியாற்ற முன் வருவது. எலிசா இறைஅழைத்தலை ஏற்றார். இறைஅழைத்தலை ஏற்க நம்மை அழைக்கும் இந்த வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:


 இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வு பற்றி பேசும் திருத்தூதர் பவுலடியார், அந்த உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை, அந்த அடிமை வாழ்வை, அதற்குத் துணை போகும் ஊனியல்பை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். தூயஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் வாழ முற்படும்போது நமது அழைப்பை உணர்ந்து நடக்கிறோம் என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப் பாடல்*


திபா 16: 1-2, 5. 7-8. 9-10. 11
*பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து*.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன்.  ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


 *நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! “ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கின்றேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன ”.  அல்லேலூயா


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:


1. அன்புத் தந்தையே! எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் பாகுபாடு இன்றி / கிறிஸ்துவின் மாண்பிலும், மகத்துவத்திலும், இறையாட்சிப் பணியில் நிலைத்து நின்றும்,/ தமது சொல்லாலும், செயலாலும் சான்றுப் பகிர்ந்திடவும்,/ உம் எளிய நுகத்தை மகிழ்வுடன் ஏற்ற வாழ வரமருள / வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளைத் தேடிவந்த எம் அன்பு தெய்வமே! இன்றைய உலகில் பாவத்தைக் குறித்த பயமோ கவலையோ / அச்ச உணர்வற்ற இக்காலத்தில் / அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற / சில மாயைகளை மனத்திலிருந்து விலகி, / உம்மோடு ஒப்புறவாகத் தூய மனச்சான்றுடன்/ எங்கள் சொல்லாலும்,/ செயலாலும் வாழ்ந்திட / எங்களை நல்வழிக் கொணர /வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்ஆயனே எம் இறைவா! புதிய கல்வியாண்டில் நுழையும் எம் இளையோர் அனைவரையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றங்கள் இவைகளால் ஏற்படும் அறிவு சார்ந்த செயல்களில் / தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைஅச்சம் குறைந்தவர்களாய்/ தங்கள் வாழ்வை இழக்காமல் உண்மையை உணர்ந்தவர்களாக / வாழத் தேவையான அருளைப் பொழிய / வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலன்களின் நாயகனே எம் இறைவா! இன்றைய உலகில் பரவிவரும் புதிய நோய்கள், புதிய மருந்துகள் இவைகளினால் மனுகுலம் வலுவிழந்து / பாவத்தினால் வரக்கூடிய வியாதிகளிலிருந்து / உமது குணமளிக்கும் ஆற்றலினால் / நாமே உம்மைக் குணமாக்கும் ஆண்டவர் /என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப / எம் மனிதச் சமுதாயத்தை/ உம் இரக்கத்தினால் தொட்டுக் குணமளிக்க / வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் இறைவா! எம் வாழ்வில் நாங்கள் சந்தித்த அனைத்துப் போராட்டங்களும், / படும் வேதனைகளும் /எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கும் வெற்றிவாகை /என்பதைனை உணர்ந்து / குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை / இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட / குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்தோங்க /வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Wednesday, June 19, 2019

இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா

 இயேசுவின் திருவுடல் திருஇரத்தம்  பெருவிழா

 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


தொடக்க நூல் 14:18-20 
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவில் அன்பார்ந்த மக்களே! இயேசுவின் திருவுடல் திருஇரத்தம் பெருவிழா ஞாயிறைக் கொண்டாட நம் ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களாகிய உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

சக்கேயு தன்னிடம் மிகுதியாக உள்ளதைக் கொடுத்தான். ஏழைக் கைம்பெண்ணோ தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தாள். இயேசுவோ உள்ளதையும் கொடுத்து ஏன் தன்னையும் பகிர்ந்துக் கொடுத்தார். மனிதக் குலத்தைத் தனியாய் விட்டுச் செல்ல மனமில்லாதவராய்த் தன்னை அப்பத்திலும் இரசத்திலும் வெளிப்படுத்தியுள்ளார். மானிட சமூகத்தின் மீது கொண்ட அன்பின், உறவின், பகிர்வின் உச்சகட்டமே இயேசு தன்னேயே கொடுத்த நிகழ்வாகும்.

பாலைவனத்தில் மன்னாவை உணவாகக் கொடுத்த இறைவன் பரிசுத்த திருச்சபைக்கு இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்தை வாழ்வளிக்கும் உணவாகக் கொடுத்தார். கொடுக்கும் போதும் பகிரும் போதும், கொடுப்பவனும் பெறுபவனும் மனநிறைவுப் பெறுகின்றனர். அந்த நிறைவில் மகிழ்வைத் தேட இறைவன் நம்மை இன்று அழைக்கின்றார். இதனை உணர்ந்துத் திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொள்வோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் தொடக்கநூலின் பதிவாகிய ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்தவர்களையும் வென்று வந்தற்கு நன்றி பலியாக உன்னதக் குருவும், இயேசுவின் முன்னோடியுமான மெல்கிசெதேக் அப்பத்தையும் இரசத்தையும் இறைவனுக்குக் காணிக்கையாக அர்ப்பணித்த நன்றிப்பலியைப் பற்றி வாசிக்க, அதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


நற்கருணை நம்மைக் கிறிஸ்துவோடு மட்டுமல்ல, உறவின் அடிப்படையில் நம் அனைவரையும் இணைக்கிறது. அப்பம் ஒன்றே ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கின்றோம். எனென்றால் நாம் அனைவரும் ஒரே அப்பத்தில் தான் பங்கு பெறுகிறோம். இயேசுவின் திருவுடலும் திருஇரத்தமும் நம்மை இயேசுவோடு ஒன்றிணைக்கிறது. இக்கருத்துகளை ஏடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 110: 1. 2. 3. 4


பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.

1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...
 
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி..
 
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி..

4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி..

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் இறைஇரக்கத்தின் உடனிருப்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உம் சீடர்களோடு இருந்ததுபோல இன்று எம் திருஅவையில் உமது ஆற்றலினால் உத்வேகத்தோடு தங்கள் வாழ்வால் திருத்தந்தை முதல் கடைநிலைப் பொதுநிலையினர் வரை அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாகத் திருஅவையை வழி நடத்த வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! உமது இரக்கத்தில் வாழ்ந்து வரும் நாங்கள் அனைவரும் ஏழைகளுக்கும் வறியோருக்கும், அநாதைகளுக்கும், கைம்பெண்களுக்கும் தனிமையில் வாடுவோருக்கும் சாதி, மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகள் இன்றி உதவிபுரியத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இயற்கையைப் படைத்து இவை அனைத்தையும் உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள் என்ற எம் இறைவா! இன்றைய உலகலாவிய புவியின் வெப்பமையமாதல் பல்வேறு இயற்கை மாற்றங்களால் மனித வாழ்வில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் என அனைத்து நிலையினருக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நாங்கள் முற்றிலுமாக விடுபட நாங்கள் இயற்கைக்கு எதிராகச் செய்தத் தவற்றை நினையாது, இரக்கத்தின் ஆற்றலை மழையாகப் பொழிந்த எம் தாகம் தீர்க்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! நாட்டை ஆள்வோர் இனி தங்களுக்கென்று வாழாமல் நாட்டுமக்களின் தேவைகளை, அவர்களின் எண்ணங்களை உணர்ந்து உமது தூயஆவியின் ஆற்றலினால் உந்தப்பட்டவர்களாக அவர்கள் தங்கள் சொல்லாலும் செயலாலும் சாட்சிய வாழ்வு வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எல்லாம் வல்ல இறைவா! புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைத்துள்ள எம் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குச் சாலமோன் ஞானத்தையும், தாவீதின் தைரியத்தையும், தூயஆவியாரின் கொடைகளையும் கொடுத்துத் தாங்கள் எதிர்நோக்கும் எல்லாவற்றையும் வென்றிடத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, June 10, 2019

மூவொரு இறைவன் பெருவிழா


 மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



நீதிமொழிகள் 8:22-31 
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:


அன்பு சகோதர சகோதரிகளே! மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒன்றாக் குழுமியிருக்கும் அனைவருக்கும் இயேசு கிறிஸ்தவின் அருளிலும், கடவுளின் அன்பிலும் தூயஆவியின் நட்புறவிலும் இனிய அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

கடவுள் ஒருவர் இருப்பதைப் பகுத்தறிவால் அறிய முடியும். ஆனால், ஒரே இறைவன் எப்படி மூன்று ஆட்களாக வாழ்கிறார்? இறைவன் எப்படி ஆள்தன்மையோடு இருக்க முடியும்? என்ற கேள்விகளைத் தீர்க்க நமது பகுத்தறிவு மட்டும் போதாது, அதற்கு இறைவெளிப்பாடுத் தேவை. மூவொரு கடவுளைப் பற்றிக் கிறிஸ்து நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்.

பிதா, சுதன், தூய ஆவி ஆகிய மூன்று ஆட்களுக்கும் அன்புதான் அடிப்படை. தந்தை மகனை அன்புச் செய்கிறார். மகன் தந்தையை அன்புச் செய்கிறார். இருவரிடமிருந்தும் அன்பாகவும் ஆற்றலாகவும், தூய ஆவிப் புறப்பட்டு வருகிறார். மூன்று ஆட்களுக்கும் ஒரே ஞானம், ஒரே சித்தம், ஒரே வல்லமை, ஒரே இறையியல்பு இருப்பதால் ஒன்றிப்பு நிலவுகிறது. தந்தை படைப்பவராகவும், சுதன் மீட்பவராகவும், தூய ஆவி அர்ச்சிப்பவராகவும், சாதாரண முறையில் நாம் புரிந்துக் கொண்டாலும் எந்த ஒரு பணியையும் எந்த ஓர் ஆளும் தனித்துச் செய்வதில்லை. மூன்று ஆட்களும் எல்லாவற்றிலும் இணைந்துச் செயல்படுகின்றனர்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை நமது இறுதி நியத்தீர்ப்பின் போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!
உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றுரைத்த எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பாட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்றுத் திருஅவைச் சிறப்புடன் திகழத் தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தைப் பெற்றிட, உம்மைப் போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்குத் தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசே! எம் இறைவா! 'உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவர் என எண்ணுங்கள்' என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளக்கேற்ப அடுத்திருப்பவருடன் அன்பும், சுயநலமில்லாத சேவை மனப்பான்மை மனம் கொண்டவர்களாகவும், உலகமெங்கும் உம் அன்பின் சாட்சிகள் வலம் வர உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எல்லாம் வல்ல இறைவா! நாங்கள் சந்திக்கும் ஏழைகள், இன்னலுறுவோர், அனாதைகள், கைவிடப்பட்டோர், ஆதரவுற்றோருக்குத் தாராளமான மனமுவந்து உதவிகரம் நீட்டவும், நாங்கள் சிறந்த முறையில் பருவமழையைப் பெற்று வளமுடன் வாழ உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Monday, June 3, 2019

தூய ஆவியாரின் பெருவிழா 09/06/2019



தூய ஆவியாரின் பெருவிழா



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*


திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

*திருப்பலி முன்னுரை*:


அன்புச் சகோதரச் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுவின் துணையாளராம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாட அன்று மாடியில் கூடியிருந்தத் திருத்தூதர்கள் போல நம் ஆலயத்தில் ஒன்றிணைந்து ஆவலுடன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!
மரியாளோடு ஒரு மனத்தோடுகூடிச் செபிக்கும்வேளையில் துணையாளராம் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்டனர் சீடர்கள். பல வல்லசெயல்கள் அரங்கேறியது. கூடியிருந்த மக்கள் தத்தம் மொழிகளில் சீடர்கள் பேசியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். புதிய ஆற்றல் பெற்றுப் புதுபொலிவுடன் பயம் தெளிந்தச் சீடர்கள் இறையரசை அறிவிக்க உலகெங்கும் புறப்பட்டுச் சென்றார்கள்.
தூய ஆவியானவரின் வருகை நமக்குச் சொல்வது இதுதான். தூய ஆவியானவர் நம்மைத் தழுவிக்கொடுக்கும் தென்றல் அல்ல. மாறாக அவர் நம்மை வாரிச் சுருட்டும் சூறாவளி. தூய ஆவியார் நம்முள் செயல்படும்போது பழையனக் கழிகின்றன. புதியனப் புகுகின்றன. எனவே தாவீது அரசர் "கடவுளே புதுப்பிக்கும் ஆவியை என்னுள் உருவாக்கி அருளும்" என்று மன்றாடியது போல் நாமும் அவற்றைப் பெற இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

*வாசக முன்னுரை*:



*முதல் வாசக முன்னுரை*:

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்: 1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.  2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை  நாம் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:

  இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே உருவர் கடவுளின் பிள்ளை என அழைக்கப்பட முடியும் . எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப் பாடல்*

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி


****தொடர் பாடல்* பாடல் இசையுடன்****


தொடர் பாடல்

 
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.* அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:


பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

 1.நாங்கள் செல்லும் இடமெல்லாமெம்மோடு பயணிக்கும் எம் இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும் அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

2.உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

3. சாவின் இருள் சூழ்ப் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தால் எம்மைப் பாதுக்காக்கும் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

4. எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

5. உமது ஆவியானவரால் எம்மைப் பலப்படுத்திய அன்பு இறைவா! நீரின்றித் தவிக்கும் எங்களைக் கண்நோக்கும். விரைவில் நல்ல மழையைப் பெறவும், குடிநீர் பிரச்சனை நீங்கவு, விவசாயப் பெருமக்கள் மகிழ்வுடன் தங்கள் தொழிலைச் சிறப்புடன் செய்யவும், தவிக்கவிடப்பட்டோர் நலமம் வளமும் பெற்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!


www.anbinmadal.org