Monday, May 13, 2024

தூய ஆவியாரின் பெருவிழா 19.05.2024

தூய ஆவியாரின் பெருவிழா

 இன்றைய வாசகங்கள்:

1. திருப்பணி 2:1-11
2. 1கொரி 12:3,7,12-13  
3. நற்செய்தி யோவான் 20:19-23

திருப்பலி முன்னுரை

ஆவியிலும்‌, உண்மையிலும்‌ வழிபட வந்திருக்கும்‌ இறை இயேசுவில்‌அன்புக்குரிய சகோதரர்‌ சகோதரிகளே! தூய ஆவியாரின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாட கோவிலில்‌ குழுமியிருக்கும்‌ உங்கள்‌ அனைவரையும்‌ பெருமகிழ்வுடன்‌ வரவேற்கின்றோம்

இன்று தாயாம்‌ திருஅவையின்‌ பிறந்த நாள்‌ ! கிறிஸ்துவின்‌ மறையுடலாக விளங்கும்‌ திருஅவையின்‌ தொடக்க நாள்‌! அன்னை மரியாவுடன்‌ செபத்தில்‌ இணைந்திருந்த சீடர்கள்‌ நடுவில்‌ தூய ஆவியார்‌ இறங்கி வந்தபோது திருஅவை பிறந்தது. இயேசுவின்‌ உயிர்ப்பு, விண்ணேற்றம்‌, தூய ஆவியாரின்‌ வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும்‌, நமது கிறிஸ்தவ நம்பிக்கையின்‌ அடித்தளமான உண்மைகள்‌. இவை மூன்றும்‌ நம்‌ வாழ்வில்‌ நல்ல மாற்றங்களைக்‌ கொண்டுவரும்‌ பெருவிழாக்கள்‌ !

தூய ஆவியார்‌ என்பவர்‌ ஓர்‌ ஆற்றல்‌ ! வேறுபாடுகளைக்களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வல்லவர்‌. தூய ஆவியார்‌ மூவொரு கடவுளின்‌ மூன்றாம்‌ ஆளாக விளங்குகிறார்‌. இவர்‌ இறைத்தந்தையுடனும்‌, இறைமகன்‌ இயேசுவுடனும்‌ ஒன்றாக ஆராதனையும்‌ மாட்சியும்‌ பெறுகின்றவர்‌. தூய ஆவியாரின்‌ வல்லமையால்தான்‌ அன்னை மரியாவின்‌ கருவில்‌ இயேசு உருவானார்‌. இயேசு திருமுழுக்குப்‌ பெற்றபோதும்‌ தாபோர்‌ மலையில்‌ தோற்றமாற்றம்‌ அடைந்தபோதும்‌ தூய ஆவியார்‌ புறா வடிவில்‌ அவர்மீது இறங்கி வந்தார்‌.

தூய ஆவியாரின்‌ பெருவிழா நாளில்‌ அவர்‌ தங்கியிருக்கும்‌ நம்‌ உடலைத் தூய்மையாகப் பேணவும்‌, ஆற்றல்களையும்‌, திறமைகளையும்‌ பொது நன்மைக்காகப்‌ பயன்படுத்தவும்‌, தூய ஆவியாரின்‌ செயல்களுக்கு இசைந்து நடந்து இயேசுவின்‌ சாட்சிகளாக வாழவும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ தொடர்ந்து செபிப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

இறை இயேசு உயிர்த்த ஐம்பதாம்‌ நாளன்று அவர்‌ வாக்களித்தபடியே ஒரே இடத்தில்‌ கூடியிருந்த சீடர்கள்‌ அனைவரையும்‌ பிளவுபட்ட நாவு வடிவில்‌ தூய ஆவியார்‌ ஆட்கொண்டதையும்‌ அவரின்‌ தூண்டுதலால்‌ சீடர்கள்‌ பல்வேறு மொழிகளில்‌ பேசும்‌ ஆற்றல்‌ பெற்றதையும்‌ இயேசுவின்‌ நற்செய்தி உலகில்‌ பலருக்கும்‌ அவரவரது தாய்‌ மொழிகளிலேயே அறிவிக்கப்பட்டதையும்‌ எடுத்துரைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்கு செவிசாய்ப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1,24 29-30. 31,34
பல்லவி : ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

 
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி 


ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. ஊனியல்பின்‌ இச்சை தூய ஆவியாருக்கு முரணானது என்றும்‌, அந்த இச்சைகளில்‌ ஈடுபடுவோர்‌ இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்றும்‌, தூய ஆவியின்‌ துணையால்‌ வாழ்வதால்‌ அவர்‌ காட்டும்‌ நெறியில்‌ நடக்க முயலுவோம்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.

****தொடர் பாடல்* பாடல் இசையுடன்********

 

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1.திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பைத் தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
3.அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்குத் துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.
4.மாணவ செல்வங்களுக்காக…
வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைக் கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்புகள் நல்ல தரமான கல்வி கூடங்களில் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.
5. இளைய சமுதாயத்திற்காக...
நன்மை பயக்கும்‌ இறைவா! உலகில்‌ உள்ள அனைத்து இளைஞர்களும்‌ இளம்‌ பெண்களும்‌ நல்ல பண்புகளை வளர்த்துக்‌ கொள்ளவும்‌, தீயப்‌ பழக்கங்களில்‌ சிக்காகமல்‌ விழிப்புடன்‌ இருக்கவும்‌, நாட்டுக்கும்‌ வீட்டுக்கும்‌ நன்மை பயப்பவர்களாக வாழவும்‌, எரிச்சல்‌ அடையாமலும்‌, சினம்‌ கொள்ளாமலும்‌, பொறுமையாகவும்‌, கனிவாகவும்‌, உதவும்‌ மனப்பான்மையுடனும்‌ பணியாற்றவும்‌, ஒருவர்‌ மற்றவரை மன்னித்து, மதித்து, விட்டுக்கொடுத்து வாழவும்‌ அவர்களுக்கு மனமாற்றத்தைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding


Monday, May 6, 2024

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 12/05/2024

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 4: 1-13
மாற்கு 16 :15-20

திருப்பலி முன்னுரை:

குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.

விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பது தான் அது. ஆம். உலகத்தை எல்லாத் துன்பத் துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறியபோது, அந்தக் குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.

வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் ஆல்பெர்ட் ஸ்க்வேட்ஸர், புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தூய ஆவியாரின் துணையோடு நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், ஆழ்மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்!

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களை துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இயேசுவின் விண்ணேற்பில் அடங்கியள்ள மறைபொருளை வெளிப்படுத்துகிறார். மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் என்ற ஒரே எதிர்நோக்குடன் வாழ அழைக்கும் புனித பவுலடியாரின் வார்த்தைக்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.மாட்சிமைமிக்க எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப் பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்று பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து காட்டிட தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2அன்பே உருவான எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சி பறைசாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கமுள்ள எம் இறைவா! உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். உமது பணியின் நிமித்தம் துன்பப்படும் உமது ஊழியர்களையும் மற்றும் உம்மை ஏற்றுக் கொண்ட மக்களையும் பாதுகாத்து, அவர்களை இறைநம்பிக்கையில் வேரின்றி வளர்ந்திடவும், அவர்களைத் துன்புறுத்துவர் மனமாறி நல்ல வழியில் நடத்திடவும் உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைவருக்கும் மீட்பராகிய எம் இறைவா! எங்கள் பங்கில் உள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் ஆண்டவராகிய தந்தையே! எம் இறைவா! இவ்வேளையில் உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடும் நாங்கள் அன்னை மரியாளைப் போல் குடும்பங்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், கலங்கரை விளக்காகவும் இருந்து எங்களை வழிநடத்திட, எங்களின் அன்னையர்களுக்குத் தேவையான இறையருளையும், உள்ளசுகமும், உடல்சுகமும் தர வேண்டுமென்று அன்னை மரியாவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, April 30, 2024

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு

பாஸ்கா காலம் 6-ஆம் ஞாயிறு


 

இன்றைய வாசகங்கள்

திப 10:25-26, 34-35, 44-48
1யோவா 4:7-10
யோவா 15:9-17

திருப்பலி முன்னுரை:

அன்பார்ந்த இறைமக்களே!
இன்று பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு. மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்"
நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார்,
இயேசு நம்மை அன்பு செய்தது போன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்கின்றபோது இறைவன் நமக்கு எத்தகைய கைம்மாறு தருவார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டிக்கட்டத் தவறவில்லை
இந்த இடத்தில் தூய அகுஸ்தினார் உண்மையான அன்பு என்பதற்கு கூறுகின்ற விளக்கத்தினை நம்முடைய சிந்தனைக்கு உட்படுத்திப் பார்ப்போம். “அன்புக்குக் கைகள் உண்டு, அவை அழுவோரின் கண்ணீர் துடைப்பதாக இருக்கும்; அன்புக்குக் கால்கள் அவை அவலநிலையில் இருப்போருக்கு உதவிட விரைவதாக இருக்கும். அன்புக்குக் கண்கள் உண்டு; அவை அல்லல்படுவோர்மீது பரிவு கொள்வதாய் இருக்கும்; அன்புக்கு காதுகள் உண்டு. அவை அண்டிவருவோரின் குறைகள் கேட்பதாய் இருக்கும். அன்பிற்கு இதயம் உண்டு. அது அயலானுக்காகவும், அடுத்திருப்பவருக்காகத் துடிப்பதாக இருக்கும்” என்று அவர் கூறுவார். ஆம், உண்மையான அன்பு என்பது வெறும் சொல்லல்ல, அது செயல்.
ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம், அவரைப் போன்று ஒருவர் மற்றவரை அன்பு செய்வோம், எல்லாருக்கும் இரங்குவோம், அதன் வழியாக இறைவனின் அன்பு மக்களாக வாழ்வோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதையும், ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு என்பதை உணர்த்தியவாறு, கடவுளுக்கு அஞ்சி நேர்மையாக நடப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் என்று கூறி நம்மையும் நேர்மையாக நடந்திட அழைக்கும் திருத்தூதர்பணிகளிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் யோவான் எழுதியுள்ள இன்றைய இரண்டாம் வாசகத்தில் அன்பே கடவுள். அது கடவுளிடமிருந்த வருகிறது. அன்பே வடிவான கடவுள் தன் அன்பின் வெளிப்பாடாகத் தன் மகனை நம் பாவங்களுக்குப் பரிகாரமாக நமக்களித்துள்ளார். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும்  என்பதை தெளிவுர எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பதிலுரைப்பாடல் திபா. 98:1-4

பல்லவி: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்: ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.  பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்: பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.  உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்!  மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.  பல்லவி

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. எங்களுக்கு முடிவில்லா வாழ்வளிக்கு இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர் அனைவரும் உம் அன்பின் இறையரசைப் பரப்பத் தங்கள் வார்த்தையாலும் வாழ்க்கையாலும் சாட்சியம் பகர அருள்வரங்ளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்புடன் எங்களை ஆதரிக்கும் இறைவா! வாழ்க்கையே போராட்டமாக மாறியுள்ள நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் சகோதர சகோதரிகளின் வறுமையைப் போக்கி அவர்கள் குடும்பங்கள் வளமான புது வாழ்வுப் பெற்றிட அருள்வரங்ளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. வானகத்தந்தையே எம் இறைவா! நோயினாலும், பொருளாதாரத்தினாலும் ஒதுக்கப்பட்டுள்ள வயோதியர்கள், அனாதைக் குழந்தைகள், அகதிகள் அனைவரும் உம் பரிவிரக்கத்தால் நலமும் வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழத் தேவையான வரங்களை அளித்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உறவை வளர்க்கும் இறைவா! நீர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களிலும், உறவுகளிடமும் அன்புப் பாராட்டவும். ஒற்றுமையாய் அன்பு உள்ளங்களைப் பகிர்ந்து கொண்டு எம் இல்லங்களில் மகிழ்ச்சிப் பொங்க வரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் இறைவா! தங்கள் இறுதிக் கட்டப்படிப்புகளை முடித்த விட்டு, மேற்படிப்பிற்காகத் தங்களைத் தயாரித்து வரும் எம்பிள்ளைகள் பெற்றோர்களின் கவலைகளை உணர்ந்து, படித்துச் சிறப்புடன் தேர்வுப் பெற்றிட ஞானத்தையும், அறிவையும் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
6. நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா! உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்



www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, April 22, 2024

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - 28-04-2024

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - 28-04-2024


இன்றைய வாசகங்கள் :

திருத்தூதர் பணிகள் 9: 26-31
1யோவான் 3: 18-24
யோவான் 15: 1-8

திருப்பலி முன்னுரை :

உலகின்‌ ஒளியாய்‌ உயிர்த்த இயேசுவில்‌ என்‌ அன்பார்ந்த சகோதர சகோதரிகளே ! பாஸ்கா காலத்தின்‌ ஐந்தாம்‌ ஞாயிறு திருப்பலியில்‌ பங்கேற்க ஆலயத்தில்‌ திரண்டிருக்கும்‌ உங்கள்‌ அனைவரையும்‌ அன்போடு வரவேற்கின்றேன்‌. மக்கள்‌ கண்டு அஞ்சிய சவுல்‌ இறை இயேசுவால்‌ மனம்‌ மாறிப் பவுலாகி இயேசுவோடு ஒன்றிக்கிறார்‌. தன்‌ அறிவையும்‌ ஆற்றலையும்‌ இயேசுவைப்‌ பற்றிப்‌ பேசுவதற்கே அர்ப்பணிக்கின்றார்‌. இயேசுவோடு இணைந்த சவுல்‌, கனிதரும்‌ பவுலாக மாறுகிறார்‌. இயேசுவின்‌ அன்புக்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடிக்கும்போது அவரோடு நாம்‌ இணைந்திருக்கிறோம்‌. இறைவனும்‌ நம்மோடு இணைந்திருக்கிறார்‌.   
நாம்‌ கனிதரும்‌ உயிருள்ள கிளைகளாக வாழ இறைவனின்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடித்து, அவரோடும்‌ அயலாரோடும்‌ ஒன்றித்து வாழ வேண்டும்‌. “மெளனத்தின்‌ கனி செபம்‌, செபத்தின்‌ கனி அன்பு; அன்பின்‌ கனி சேவை, சேவையின்‌ கனி மகிழ்ச்சி' என்று அன்னை தெரசா கூறுகிறார்‌. பகிர்தலே பேரின்பம்‌! மரத்தின்‌ கனி முழுவதும்‌ மரத்திற்கில்லை; யாழின்‌ இசை முழுவதும்‌ யாழிற்கில்லை என்பதையும்‌ இயற்கை நமக்குக்‌ கற்றுத்‌ தருகிறது. இயேசுவோடு இணைந்து, கனிதருபவர்களாக வாழ இத்திருப்பலியில்‌ தொடர்ந்து செபிப்போம்‌.    

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை :

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 22:26-27, 28,30, 31-32
பல்லவி: ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!!

உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! -பல்லவி

பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். -பல்லவி

வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர். இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்" என்பர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

நம்‌ உண்மையான அன்பைச்‌ செயலில்‌ காட்ட வேண்டும்‌ என்றும்‌ இறைவனின்‌ அன்புக்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடிப்பவர்‌ இறைவனோடு இணைந்திருக்கிறார்‌. இறைவனும்‌ அவரோடு இணைந்திருக்கிறார்‌ என்னும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.  

நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா!  உம் அன்பு குழந்தைகளாகிய  திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்துப் பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில்  விதைத்த புதியதொரு விண்ணகத்தை  இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அன்பு தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழத் தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவ
ர்கள் இயேசுவின் உடனியிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப்பயணத்தையும் காண தேவையான  ஞானத்தையும், ஆற்றலையும் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, April 15, 2024

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு - 21-04-2024

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு - 21-04-2024


இன்றைய வாசகங்கள்:

திருத்தூதர் பணிகள் 4: 8-12
1 யோவான் 3: 1-2
யோவான் 10: 11-18

திருப்பலி முன்னுரை:

அன்பார்ந்த இறைமக்களே!
உயிர்ப்புக்காலம் நான்காம் ஞாயிறு - நல்லாயன் ஞாயிறு என்று திருஅவைக் கொண்டாடி வருகிறது. இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவரையும் வழி நடத்த ஓர் ஆயன் தேவைப்படுகிறார். நமது வாழ்க்கைப் பயணத்தில் யார் நமது ஆயன் என்று சிந்திக்க அழைக்கிறது இந்த ஞாயிறு.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே, நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி" என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால், இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி.

பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை :

இகழ்ந்து விலக்கப்பட்ட கல் இன்று முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகின்று. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மானிடருக்கு மீட்பு கிடையாது. நாம் மீட்புப் பெறுவதற்காகவே இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினர். இந்த உண்மையை உணர்ந்து செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கவிருக்கும் திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவி
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் அவரது மக்கள் என நாம் அழைக்கப்படுகின்றோம். இறைமக்களாகவே இருப்போம். இயேசு குற்றமற்றவராய் இருப்பதுபோல நாமும் குற்றமற்றவர்களாய் நம்மைக் காத்துக் கொள்ள அழைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒலிக்கும் திருதூதர் யோவனின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா! திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும், செயலாலும், தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று, பணிபுரியவே என்று எம்கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் நாயகரே! எம் இறைவா!எம்நாட்டை ஆளும் தலைவர்கள் இனம், மொழி, சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும், ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம்தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும், தீவிரவாதம், சாதியின் பெயரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி, அதனால் தங்கள் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப், போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம்நற்செய்தியின் நாயனரே! எம் இறைவா! விதவைகள், அனாதைகள், கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும், உள்நாட்டு போரால் தவிக்கும் சிரியாவின் மக்களுக்கு உமது உதவிக் கரம் நீட்டி அவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5 இரக்கத்தின் ஆற்றலே! எம் இறைவா! இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள்வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும், இளையோர் இவ்வுலக மாயைகளால் தங்களை இழந்த விடாமலும் இருக்கவும், உமது இறையழைத்தலை அனைவரும் உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அருள் புரியுமாறு  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

தவிர்க்க முடியாத காரணங்களால் 14-04-2024 ஞாயிறு திருப்பலி முன்னுரை மற்றும் மன்றாட்டுகள் பதிவேற்றம் தாமதமானதற்கு வருந்துகிறோம்.

உங்கள் அன்புக்கு நன்றி.

-*- 



Saturday, April 13, 2024

பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு


இன்றைய திருப்பலியின் வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 3:13-15, 17-19
1 யோவான் 2:1-5
லூக்கா 24:35-48

திருப்பலி முன்னுரை

வெற்றி வேந்தனாம் உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசுவின் பெயரால் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு.
நம்‌ ஆண்டவர்‌ உயிர்த்த பின்‌ தன்‌ சீடர்களுக்குக்‌ காட்சித்‌ தந்தார்‌. அவர்களோ ஐயோ! இது ஆவி என்றெல்லாம்‌ அச்சம்‌ அடைந்து நடுங்கினார்கள்‌. இயேசு காட்டிய அடையாள அட்டை என்ன? என்‌ கைகளைப்‌ பாருங்கள்‌. கால்களைப்‌ பாருங்கள்‌. என்னைத்‌ தொட்டுப்‌ பாருங்கள்‌, எனக்கு எலும்பும்‌ தசையும்‌ இருப்பதைக்‌ காண்கிறீர்களே! இவை ஆவிக்குக் கிடையாதே என்றார்‌ (லூக்‌. 24:89). என்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌ என்று இயேசு கூறவில்லை. தன்‌ கைகளிலும்‌, கால்களிலும்‌ ஏற்பட்டத்‌ தழும்பைப்‌ பார்க்கும்படி சொல்கிறார்‌. ஏனெனில்‌ மகிமையுடன்‌ உயிர்த்த நம்‌ ஆண்டவர்‌ இயேசு பாடுகளின்‌ தழும்புகளுடன்‌ உயிர்த்தார்‌ என்பதை ஒருபோதும்‌ மறக்க முடியாது. அவரது விழுப்புண்கள்தான்‌ நமக்கு வாழ்வு தந்தது.
உயிர்த்த இயேசு பலஉருவங்களில் காட்சியளித்தார். ஆனால் சீடர்கள் மந்த‌ புத்தியுடன்‌ மதி மயங்கியவர்களாக இருந்தார்கள்‌. எனவே அவர்கள் இயேசுவை கண்டுக்கொள்ளவில்லை. அவர்களின் மனக்கண்களை திறந்தார். தன்னைப் பற்றிய மறைநூலில் கூறப்பட்டவைகளை கூறி இவைகள் அனைத்துக்கும் நீங்கள் சாட்சிகள் என்று அறிவிக்கின்றார்.
மனமாற்றம் காண்போம். இயேசுவின் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்…

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர்‌ பேதுரு அச்சம்‌ நீங்கித் துணிவு பெற்றவராய்‌ குற்றமற்ற இயேசுவை யூத மக்கள்‌ சிலுவைச்‌ சாவுக்குக்‌ கையளித்துப்‌ பாவம்‌ செய்துள்ளனர்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டி மனம்‌ மாறி இயேசுவிடம்‌ திரும்பி வர அழைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌.  

பதிலுரைப் பாடல்

திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)
பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே. அல்லது: அல்லேலூயா.
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி
‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். - பல்லவி
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசுவே நம்‌ பாவங்களுக்குக்‌ கழுவாய்‌ என்றும்‌, கடவுளின்‌ கட்டளைகளின்படி நடப்போர்‌ கடவுளிடம்‌ அன்பு கொண்டு அவரோடு இணைந்து வாழ்பவர்‌ என்றும்‌ அவரைப்‌ பற்றி அறிந்தும்‌ அவருடைய கட்டளைகளைக்‌ கடைப்பிடியாதோர்‌ பொய்யர்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ திருத்தூதர்‌ யோவானின்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம்பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவையில் அதன் பணியாளர்களாகிய திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நன்மையின்‌ இறைவா ! எம்நாட்டைச் சீர்மிகு வழியில்‌ நடத்திச்‌ செல்லவும்‌, நாட்டின்‌ வளங்களைப்‌ பாதுகாத்து மக்கள்‌ அனைவருக்கும்‌ உணவு, உடை, உறையுள்‌ கிடைக்கச்‌ செய்யவும்‌, மனித நேயமுள்ள நல்ல ஆட்சியாளர்களைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.
3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இறைவா! ௨ம்‌ மக்களாகிய நாங்கள்‌ நீர்‌ அளித்துள்ள வாழ்வுதரும்‌ நற்செய்தியை நாள்தோறும்‌ படித்துணர்ந்து எங்கள்‌ வாழ்க்கையின்‌ மூலம்‌ மிகச்‌ சிறப்பாக நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Wednesday, April 3, 2024

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2



இன்றைய வாசகங்கள்

I திருத்தூதர் பணிகள் 4: 32-35
II 1 யோவான் 5: 1-6
III யோவான் 20: 19-31


திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும், இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. 

இயேசுவின் வார்த்தைகளை அருகிலிருந்து கேட்டுணர்ந்தச் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்தபோது, மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை அறிவித்தும், நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். இரக்கத்தின் தேவனாகிய இயேசு அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஒளியை ஏற்றி, தான் இரக்கத்தின் தேவன் என்பதை உணரச் செய்தார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காய் சாட்சிப் பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.


ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களைவிடக் காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திடச் சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்து, அனைவரோடும் அன்புப் பாராட்டிச் சமத்துவம், சகோதரத்துவம், பொதுஉடமை போன்ற தத்தவங்களை அறிவுறுத்தும் திருத்தூதர் லூக்காவின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகத்திற்குச் செவிமெடுத்து நாம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 118: 2-4. 16ab-18. 22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! - பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. கடவுளையும் பிறரையும் நாம் அன்புச் செய்யும்போதும் நாமும் கடவுளாலும், பிறராலும் அன்பு செய்யப்படுகிறோம் என்பதை உணரத்தும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகம் வழியாக அழைக்கப்படுகிறோம் மனதில் பதிவு செய்து வாழ முயற்சிப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாகச் செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். இன்று வரை தொடரும் இந்தத் திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொண்டு, இதனை உணர்ந்து உம் திருஅவையைச் சிறப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு கூடிவரும் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவிச் செய்ததோடு, நம்பிக்கைக் குன்றியவர்களுக்குத் துணிவையும் தந்து, நாங்கள் அனைவரும் இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையில் ஒருமனத்தோடு வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நன்மையின்‌ இறைவா ! எம்நாட்டைச் சீர்மிகு வழியில்‌ நடத்திச்‌ செல்லவும்‌, நாட்டின்‌ வளங்களைப்‌ பாதுகாத்து மக்கள்‌ அனைவருக்கும்‌ உணவு, உடை, உறையுள்‌ கிடைக்கச்‌ செய்யவும்‌, மனித நேயமுள்ள நல்ல ஆட்சியாளர்களைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

4. விண்ணும் மண்ணும் அழிந்துப் போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா, மீண்டும் வந்துள்ள தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்திச் சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து நல்ல உடல்நிலைத் தரவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின்  அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF