Tuesday, August 30, 2016

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு 04/09/2016



பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17
லூக்கா 14:25-33



முன்னுரை:

இறைஞானத்தைத் தேடி இன்று ஆலயம் நுழைந்துள்ள இறைஇயேசுவின் இதயத்திற்கு நெருக்கமானவர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் நன்றியோடும், மகிழ்ச்சியோடும் பங்குக்கொள்ள அன்புடன் வரவேற்கின்றோம்.
சாலமோன் கடவுளிடம் முதன்மையாகக் கேட்ட ஞானமே! யூதர்களை ஆண்டுவழி நடத்த அவர் விரும்பியதுவும் அதுவே. இறைத்திட்டத்தை அறிந்து கொள்ளக் கடவுளிடம் ஞானத்தையும், தூயஆவியாரையும் பெற வேண்டும் என்கிறது முதல் வாசகம். அன்பு, மன்னிப்பு, அடுத்தவரை அன்புடன் ஏற்றுக்கொள்ளுதல் போன்ற உயரிய கிறிஸ்தவப் பண்புகளை இரண்டாம் வாசகம் எடுத்துக்கூறுகிறது.
இயேசுவின் சீடராய் மாறிட எல்லாவற்றையும் ஏன் தன் உயிரையும் விடத் தயாராக இருப்பவரே தன் சீடனாக இருக்கமுடியும், தன் சிலுவையைச் சுமப்பவர்கள் மட்டுமே என் சீடராக இருக்கமுடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார் இயேசு. ஞானத்தைத் தேடுபவர்களாய், கிறிஸ்தவ மதிப்பீடுகளை ஏற்றவர்களாய், தன் துன்பங்களை முழுமனதுடன் ஏற்று இயேசுவின் சீடராய் வாழக் கூடிய நல்ல சூழலைத் தர வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


நான் உம் அடியான்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும் திருச்சட்டமும் பற்றிச் சிற்றறிவு படைத்தவன் என்று தன்னிலை உணர்ந்து அதே வேளையில் யூதர்களின் முரட்டுத் தனத்தையும் உணர்ந்துக் கடவுளிடம் ஆசிரியர் கேட்ட ஒரு வேண்டுதல் என்னவாகயிருக்கும்? அது தான் இறைவனின் அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும் என்பதே. சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப் பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமை செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரிய கருத்தை எடுத்து கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..


பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்;
`மானிடரே
! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன
. -பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்;
அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்துபோகும்
. -பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்;
அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்
.
13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை?
உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்
. -பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்;
அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்
.
17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக
!
நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்
!
ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்
! - பல்லவி 



மன்றாட்டுகள்:




1. அனைவரும் மீட்படைய விரும்பும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஆகிய உமது திட்டத்தையும், உமது  திருவுளத்தையும் உய்த்துணர்ந்து திருஅவையை திறம்பட நடத்திடத் தேவையான ஞானத்தையும், தூய ஆவியாரின் அருளும் பெற்றிடவும், உவர்ப்பற்றுப் போகாத நல்ல உப்பாக அடுத்திருப்பவரை வளப்படும் மக்களாய் வாழ்ந்திடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. புனிதரின் பேரின்பமாகிய எம் இறைவா! எம் வாழ்நாளில் எம் கண்முன் உலாவி வந்த அருட்பணியாளரான அன்னை தெரசாள் அவர்களை உமது புனிதர்களின் திருக்கூட்டத்தில் இணைத்து எங்களுக்காய் நல்வரங்கள் வேண்டிட நீர் செய்த நன்மைகளுக்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் அவரின் தொண்டுள்ளத்தை பெற்று அவரைப்போல் என்றும் தொண்டாற்றி உம்மை எம் உள்ளத்தில் வைத்துக் கொள்ள அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



3. இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! நீர் அருட்பொழிவு செய்து தேர்ந்துக் கொண்ட எம் இளம் குருக்களை உம் சிறகுகளின் அரவணைப்பில் வைத்து காத்தருள வேண்டுகிறோம். குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாள்களில் அனேக இளம்குருக்கள் நோயினாலும், விபத்துகளினாலும் மரித்ததால் ஏற்பட்ட வெற்றிடத்தை விரைவாய் நிறைப்பிடவும், உமது பணிகளில் என்றும் நிலைத்திருந்து இறையரசை அறிவிக்க வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



4. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வு, அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


                            www.anbinmadal.org

Wednesday, August 24, 2016

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 28/08/2016



பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


சீராக்கின் ஞான நூல் 3: 17-18,20,28-29
எபிரேயர் 12: 18-19, 22-24
லூக்கா  14: 1,7-14


முன்னுரை:

பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டியில் பங்கேற்க ஓர் இனமாய் ஆலயம் வந்துள்ள இறைமக்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
இயேசு குறுகலான பாதையின் வழியாகச் சென்ற வாரம் நிறைவாழ்வுக்கு அழைத்தவர், இன்று பணிவு, தாழ்ச்சி, தன்னடக்கம் ஆகிய மகத்தானச் செயல்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் மாபெரும் கொடையாய் கடவுள் முன்பாக உயர்த்தப்படுவதை இன்றைய வாசகங்கள் மூலம் எடுத்துரைக்கின்றார்.
தாழ்ச்சியுள்ளவர்கள் மற்றவர் மீது குறிப்பாக ஏழைகள் மீது அக்கறை காட்ட முடியும். தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகின்றது. இவர்கள் ஆண்டவரை மாட்சிப்படுத்தும் பேறுபெற்றவர்கள். மரியாள் இதற்கு ஓரு சாட்சியாக உள்ளார். இறைவனின் அடிமை நான் என்று தன்னைத் தாழ்த்தியவர் அடைந்த உன்னத நிலையை நாம் அறிவோம்.
விட்டுக் கொடுப்பவர் வீழ்ந்ததில்லை. தாழ்ச்சியுடையோர் நிறைவாழ்வில் இறைவனால் உயர்த்தப்படுகின்றனர் என்பதை மனதில் பதிவு செய்து தாழ்வுமனப்பான்மையை ஒழித்துவிட்டு நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன் என்ற இயேசுவின் அமுதமொழியை வாழ்வாக்க இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்...

 



வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


சீராக்கின் ஞானநூலின் ஆசிரியர் குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்: அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்புக் காட்டுவர். என்று கூறுகிறார். மனிதர் முன் உயர்ந்தவர் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் போல் தோன்றினாலும் கடவுள் முன்னிலையில் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவர். எனவே பணிவோடு நடந்து கொள்ள வேண்டியதின் அவசியத்தை இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஒரு காலத்தில் கடவுள் அச்சம் தரும் நெருப்பிலும், இருண்ட மேகத்திலும், கொடிய இருளிலும், சூழல்காற்றிலும் வெளிப்பட்டார். ஆனால் நமது காலத்தில் வானதூதர்களாலும், நீதிமான்களாலும் சூழப்பட்ட அமைதியின் கடவுளாக, தாழ்ச்சியின் கடவுளாகக் காட்சியளிக்கின்றார் என்று சினாய் மலைக்கும் சீயோன் மலைக்கும் உள்ள வித்தியாசங்களின் மூலம் இயேசு கிறிஸ்து நம்மை மீட்டு இறைவனோடு ஒப்புறவாகி உள்ளார் என்பதை வலியுறுத்தும் திருத்தூதர் பவுலின் எபிரேயருக்கு எழுதப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..



பதிலுரைப்பாடல்


ஒடுக்கப்பட்டோர்க்கு கடவுளே, மறுவாழ்வு அளித்தீர்
திருப்பாடல்
: 68: 3-10
நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர். கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரைப் போற்றுங்கள்; `ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம். - பல்லவி
திக்கற்ற பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் கணவனை இழந்தாளின் காப்பாளராகவும் இருப்பவர், தூயகத்தில் உறையும் கடவுள்! தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார். - பல்லவி
கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர். உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன; கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர். - பல்லவி


மன்றாட்டுகள்:



1. மூவொரு கடவுளே! இறைவா! பரம்பொருளே! உமது கனிவையும் மனத்தாழ்ச்சியையும் உம் திருஅவையிலுள்ள அனைவரும் மேற்கொண்டு பணிவு, தாழ்ச்சி ஆகிய உயரிய நோக்கங்களைத் தன் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்து உம் வார்த்தையின் ஆழத்தைப்புரிந்து செயலாற்ற வேண்டிய ஞானத்தையும், அன்பையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. விண்ணுக்கும் மண்ணுக்கும் ராஜாதிராஜனே! அமைதியின் அரசரே! எம் இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் தொண்டு உள்ளம் கொண்டு அனைத்து மக்களையும் சமமாக நடத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கல்வி, பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார உதவிகள் ஆகியவற்றை உம்மைப்போல் கனிவுடன் செய்து நல்லாட்சிப் புரிந்திடத் தேவையான ஞானத்தை நிறைவாய் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. பரிவன்புமிக்க எம் இறைவா! எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றி தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணை நிறைந்த இறைவா! கிறிஸ்துவின் சீடர்கள் எனப் பெருமை கொள்ளும் நாம் இயேசுவின் பணிவு, தாழ்ச்சி, பிறருக்குப் பணிச் செய்வது, தாராள உள்ளத்தோடு உதவிடும் நிலைகளை எடுத்துரைத்த இன்றைய வாசகங்களை உள்வாங்கி, அதன்படி நம் வாழ்வில் இயேசுவின் சீடராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org