Monday, April 22, 2024

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - 28-04-2024

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - 28-04-2024


இன்றைய வாசகங்கள் :

திருத்தூதர் பணிகள் 9: 26-31
1யோவான் 3: 18-24
யோவான் 15: 1-8

திருப்பலி முன்னுரை :

உலகின்‌ ஒளியாய்‌ உயிர்த்த இயேசுவில்‌ என்‌ அன்பார்ந்த சகோதர சகோதரிகளே ! பாஸ்கா காலத்தின்‌ ஐந்தாம்‌ ஞாயிறு திருப்பலியில்‌ பங்கேற்க ஆலயத்தில்‌ திரண்டிருக்கும்‌ உங்கள்‌ அனைவரையும்‌ அன்போடு வரவேற்கின்றேன்‌. மக்கள்‌ கண்டு அஞ்சிய சவுல்‌ இறை இயேசுவால்‌ மனம்‌ மாறிப் பவுலாகி இயேசுவோடு ஒன்றிக்கிறார்‌. தன்‌ அறிவையும்‌ ஆற்றலையும்‌ இயேசுவைப்‌ பற்றிப்‌ பேசுவதற்கே அர்ப்பணிக்கின்றார்‌. இயேசுவோடு இணைந்த சவுல்‌, கனிதரும்‌ பவுலாக மாறுகிறார்‌. இயேசுவின்‌ அன்புக்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடிக்கும்போது அவரோடு நாம்‌ இணைந்திருக்கிறோம்‌. இறைவனும்‌ நம்மோடு இணைந்திருக்கிறார்‌.   
நாம்‌ கனிதரும்‌ உயிருள்ள கிளைகளாக வாழ இறைவனின்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடித்து, அவரோடும்‌ அயலாரோடும்‌ ஒன்றித்து வாழ வேண்டும்‌. “மெளனத்தின்‌ கனி செபம்‌, செபத்தின்‌ கனி அன்பு; அன்பின்‌ கனி சேவை, சேவையின்‌ கனி மகிழ்ச்சி' என்று அன்னை தெரசா கூறுகிறார்‌. பகிர்தலே பேரின்பம்‌! மரத்தின்‌ கனி முழுவதும்‌ மரத்திற்கில்லை; யாழின்‌ இசை முழுவதும்‌ யாழிற்கில்லை என்பதையும்‌ இயற்கை நமக்குக்‌ கற்றுத்‌ தருகிறது. இயேசுவோடு இணைந்து, கனிதருபவர்களாக வாழ இத்திருப்பலியில்‌ தொடர்ந்து செபிப்போம்‌.    

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை :

கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

பதிலுரைப் பாடல்

திருப்பாடல்: 22:26-27, 28,30, 31-32
பல்லவி: ஆண்டவரே! நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!!

உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! -பல்லவி

பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக் கொள்ளாதோரும் அவரை வணங்குவர். -பல்லவி

வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர். இனி பிறக்கப்போகும் மக்களுக்கு "இதை அவரே செய்தார்" என்பர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

நம்‌ உண்மையான அன்பைச்‌ செயலில்‌ காட்ட வேண்டும்‌ என்றும்‌ இறைவனின்‌ அன்புக்‌ கட்டளைகளைக்‌ கடைப்பிடிப்பவர்‌ இறைவனோடு இணைந்திருக்கிறார்‌. இறைவனும்‌ அவரோடு இணைந்திருக்கிறார்‌ என்னும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.  

நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா!  உம் அன்பு குழந்தைகளாகிய  திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்துப் பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில்  விதைத்த புதியதொரு விண்ணகத்தை  இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அன்பு தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்து தீவிரவாதத்தை கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழத் தேவையான மனமாற்றத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவ
ர்கள் இயேசுவின் உடனியிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப்பயணத்தையும் காண தேவையான  ஞானத்தையும், ஆற்றலையும் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF


Monday, April 15, 2024

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு - 21-04-2024

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு - 21-04-2024


இன்றைய வாசகங்கள்:

திருத்தூதர் பணிகள் 4: 8-12
1 யோவான் 3: 1-2
யோவான் 10: 11-18

திருப்பலி முன்னுரை:

அன்பார்ந்த இறைமக்களே!
உயிர்ப்புக்காலம் நான்காம் ஞாயிறு - நல்லாயன் ஞாயிறு என்று திருஅவைக் கொண்டாடி வருகிறது. இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவரையும் வழி நடத்த ஓர் ஆயன் தேவைப்படுகிறார். நமது வாழ்க்கைப் பயணத்தில் யார் நமது ஆயன் என்று சிந்திக்க அழைக்கிறது இந்த ஞாயிறு.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே, நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி" என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்ற தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால், இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பதும் உறுதி.

பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை :

இகழ்ந்து விலக்கப்பட்ட கல் இன்று முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகின்று. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மானிடருக்கு மீட்பு கிடையாது. நாம் மீட்புப் பெறுவதற்காகவே இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினர். இந்த உண்மையை உணர்ந்து செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கவிருக்கும் திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவி
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி
ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் அவரது மக்கள் என நாம் அழைக்கப்படுகின்றோம். இறைமக்களாகவே இருப்போம். இயேசு குற்றமற்றவராய் இருப்பதுபோல நாமும் குற்றமற்றவர்களாய் நம்மைக் காத்துக் கொள்ள அழைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒலிக்கும் திருதூதர் யோவனின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா! திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும், செயலாலும், தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று, பணிபுரியவே என்று எம்கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. நீதியின் நாயகரே! எம் இறைவா!எம்நாட்டை ஆளும் தலைவர்கள் இனம், மொழி, சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும், ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம்தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும், தீவிரவாதம், சாதியின் பெயரால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி, அதனால் தங்கள் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப், போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம்நற்செய்தியின் நாயனரே! எம் இறைவா! விதவைகள், அனாதைகள், கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும், உள்நாட்டு போரால் தவிக்கும் சிரியாவின் மக்களுக்கு உமது உதவிக் கரம் நீட்டி அவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5 இரக்கத்தின் ஆற்றலே! எம் இறைவா! இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள்வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும், இளையோர் இவ்வுலக மாயைகளால் தங்களை இழந்த விடாமலும் இருக்கவும், உமது இறையழைத்தலை அனைவரும் உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அருள் புரியுமாறு  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org


Print Friendly and PDF

தவிர்க்க முடியாத காரணங்களால் 14-04-2024 ஞாயிறு திருப்பலி முன்னுரை மற்றும் மன்றாட்டுகள் பதிவேற்றம் தாமதமானதற்கு வருந்துகிறோம்.

உங்கள் அன்புக்கு நன்றி.

-*- 



Saturday, April 13, 2024

பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு


இன்றைய திருப்பலியின் வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 3:13-15, 17-19
1 யோவான் 2:1-5
லூக்கா 24:35-48

திருப்பலி முன்னுரை

வெற்றி வேந்தனாம் உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசுவின் பெயரால் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு.
நம்‌ ஆண்டவர்‌ உயிர்த்த பின்‌ தன்‌ சீடர்களுக்குக்‌ காட்சித்‌ தந்தார்‌. அவர்களோ ஐயோ! இது ஆவி என்றெல்லாம்‌ அச்சம்‌ அடைந்து நடுங்கினார்கள்‌. இயேசு காட்டிய அடையாள அட்டை என்ன? என்‌ கைகளைப்‌ பாருங்கள்‌. கால்களைப்‌ பாருங்கள்‌. என்னைத்‌ தொட்டுப்‌ பாருங்கள்‌, எனக்கு எலும்பும்‌ தசையும்‌ இருப்பதைக்‌ காண்கிறீர்களே! இவை ஆவிக்குக் கிடையாதே என்றார்‌ (லூக்‌. 24:89). என்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌ என்று இயேசு கூறவில்லை. தன்‌ கைகளிலும்‌, கால்களிலும்‌ ஏற்பட்டத்‌ தழும்பைப்‌ பார்க்கும்படி சொல்கிறார்‌. ஏனெனில்‌ மகிமையுடன்‌ உயிர்த்த நம்‌ ஆண்டவர்‌ இயேசு பாடுகளின்‌ தழும்புகளுடன்‌ உயிர்த்தார்‌ என்பதை ஒருபோதும்‌ மறக்க முடியாது. அவரது விழுப்புண்கள்தான்‌ நமக்கு வாழ்வு தந்தது.
உயிர்த்த இயேசு பலஉருவங்களில் காட்சியளித்தார். ஆனால் சீடர்கள் மந்த‌ புத்தியுடன்‌ மதி மயங்கியவர்களாக இருந்தார்கள்‌. எனவே அவர்கள் இயேசுவை கண்டுக்கொள்ளவில்லை. அவர்களின் மனக்கண்களை திறந்தார். தன்னைப் பற்றிய மறைநூலில் கூறப்பட்டவைகளை கூறி இவைகள் அனைத்துக்கும் நீங்கள் சாட்சிகள் என்று அறிவிக்கின்றார்.
மனமாற்றம் காண்போம். இயேசுவின் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்…

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர்‌ பேதுரு அச்சம்‌ நீங்கித் துணிவு பெற்றவராய்‌ குற்றமற்ற இயேசுவை யூத மக்கள்‌ சிலுவைச்‌ சாவுக்குக்‌ கையளித்துப்‌ பாவம்‌ செய்துள்ளனர்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டி மனம்‌ மாறி இயேசுவிடம்‌ திரும்பி வர அழைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌.  

பதிலுரைப் பாடல்

திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)
பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே. அல்லது: அல்லேலூயா.
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி
‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். - பல்லவி
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசுவே நம்‌ பாவங்களுக்குக்‌ கழுவாய்‌ என்றும்‌, கடவுளின்‌ கட்டளைகளின்படி நடப்போர்‌ கடவுளிடம்‌ அன்பு கொண்டு அவரோடு இணைந்து வாழ்பவர்‌ என்றும்‌ அவரைப்‌ பற்றி அறிந்தும்‌ அவருடைய கட்டளைகளைக்‌ கடைப்பிடியாதோர்‌ பொய்யர்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ திருத்தூதர்‌ யோவானின்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம்பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவையில் அதன் பணியாளர்களாகிய திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நன்மையின்‌ இறைவா ! எம்நாட்டைச் சீர்மிகு வழியில்‌ நடத்திச்‌ செல்லவும்‌, நாட்டின்‌ வளங்களைப்‌ பாதுகாத்து மக்கள்‌ அனைவருக்கும்‌ உணவு, உடை, உறையுள்‌ கிடைக்கச்‌ செய்யவும்‌, மனித நேயமுள்ள நல்ல ஆட்சியாளர்களைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.
3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இறைவா! ௨ம்‌ மக்களாகிய நாங்கள்‌ நீர்‌ அளித்துள்ள வாழ்வுதரும்‌ நற்செய்தியை நாள்தோறும்‌ படித்துணர்ந்து எங்கள்‌ வாழ்க்கையின்‌ மூலம்‌ மிகச்‌ சிறப்பாக நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Wednesday, April 3, 2024

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2



இன்றைய வாசகங்கள்

I திருத்தூதர் பணிகள் 4: 32-35
II 1 யோவான் 5: 1-6
III யோவான் 20: 19-31


திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும், இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. 

இயேசுவின் வார்த்தைகளை அருகிலிருந்து கேட்டுணர்ந்தச் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்தபோது, மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை அறிவித்தும், நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். இரக்கத்தின் தேவனாகிய இயேசு அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஒளியை ஏற்றி, தான் இரக்கத்தின் தேவன் என்பதை உணரச் செய்தார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காய் சாட்சிப் பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.


ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களைவிடக் காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திடச் சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்து, அனைவரோடும் அன்புப் பாராட்டிச் சமத்துவம், சகோதரத்துவம், பொதுஉடமை போன்ற தத்தவங்களை அறிவுறுத்தும் திருத்தூதர் லூக்காவின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகத்திற்குச் செவிமெடுத்து நாம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 118: 2-4. 16ab-18. 22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! - பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. கடவுளையும் பிறரையும் நாம் அன்புச் செய்யும்போதும் நாமும் கடவுளாலும், பிறராலும் அன்பு செய்யப்படுகிறோம் என்பதை உணரத்தும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகம் வழியாக அழைக்கப்படுகிறோம் மனதில் பதிவு செய்து வாழ முயற்சிப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாகச் செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். இன்று வரை தொடரும் இந்தத் திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொண்டு, இதனை உணர்ந்து உம் திருஅவையைச் சிறப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு கூடிவரும் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவிச் செய்ததோடு, நம்பிக்கைக் குன்றியவர்களுக்குத் துணிவையும் தந்து, நாங்கள் அனைவரும் இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கையில் ஒருமனத்தோடு வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நன்மையின்‌ இறைவா ! எம்நாட்டைச் சீர்மிகு வழியில்‌ நடத்திச்‌ செல்லவும்‌, நாட்டின்‌ வளங்களைப்‌ பாதுகாத்து மக்கள்‌ அனைவருக்கும்‌ உணவு, உடை, உறையுள்‌ கிடைக்கச்‌ செய்யவும்‌, மனித நேயமுள்ள நல்ல ஆட்சியாளர்களைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

4. விண்ணும் மண்ணும் அழிந்துப் போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா, மீண்டும் வந்துள்ள தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்திச் சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து நல்ல உடல்நிலைத் தரவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. இளமை வாழ்வதற்காக என்று மொழிந்த எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைமையைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின்  அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, March 27, 2024

உயிர்ப்புப்‌ பெருவிழா - 31.03.2024

உயிர்ப்புப்‌ பெருவிழா - 31.03.2024  

இன்றைய வாசகங்கள்

திருத்தூதர் பணி 10:84-49
கொலோசையர் 8:1-4
யோவான் 20:1-9

திருப்பலி முன்னுரை

கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு, வரலாற்று ஏடுகளில்‌ புதைந்துபோன அல்லது அழிந்துபோன நிகழ்வல்ல. மாறாக நமக்கும்‌ கடவுளுக்கும்‌ இடையில்‌ உள்ள தடைகளை உடைத்து நம்மை இறைவனோடு இணைக்கும்‌ உன்னத நிகழ்வாகும்‌. உயிர்ப்பு இல்லையெனில்‌ நற்செய்தியில்லை, உயிர்ப்பு இல்லையெனில்‌ கிறிஸ்தவ சமூகம்‌ இல்லை. உயிர்ப்பு நம்மைப் பிரிக்கும் சக்திகளை உடைத்தெரியும்‌ மக்களாக வாழ அழைப்பு விடுக்கிறது. தோற்றுவிட்டோம்‌. எல்லாம்‌ முடிந்துவிட்டது என்று கலங்கிக்‌ கொண்டிருந்த சீடர்களுக்கு, கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு வளமையையும்‌ வாழ்வையும்‌ தந்தது.

நாமும்‌ உயிர்த்த இயேசுவின்‌ நற்செய்தியைப்‌ பிறருக்கு கொண்டு செல்ல வேண்டும்‌. உயிர்ப்பின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ என அழைப்பு விடுக்கிறது. எனவே உயிர்த்த கிறிஸ்துவின்‌ அன்பையும்‌, ஆசிகளையும்‌ அனைவருடனும்‌ பகிர்ந்து கொள்வோம்‌ என்ற உறுதிப்பாட்டோடு இந்தத்‌ திருப்பலியில்‌ பங்கெடுப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

கிறிஸ்து காட்டும்‌ பாதையில்‌ அன்பு உண்டு. அமைதி உண்டு. வெற்றி உண்டு. நாமும்‌ கிறிஸ்துவோடு இணைந்து அவரது பாதையில்‌ செல்லப் புனித பேதுரு இவ்வாசகம்‌ மூலம்‌ நமக்கு அழைப்பு விடுக்கிறார்‌. நம்மை முழு மனிதராக்கும்‌ கிறிஸ்துவின்‌ பாதையில்‌ நாமும்‌ பயணம்‌ செய்ய இறைவனுக்கு ஏற்புடைய செயல்களை நாம்‌ செய்ய வேண்டும்‌ எனக்‌ கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌

பதிலுரைப் பாடல்

திபா 118: 1-2. 16-17. 22-23 (பல்லவி: 24)

பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! - பல்லவி
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். - பல்லவி
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :   

கிறிஸ்துவின்‌ உயிர்ப்பு என்பது புதிய தொடக்கமாகும்‌. உலகம்‌ சொல்லும்‌ அனைத்து விதமான கருத்துகளுக்கும்‌ முற்றுப்புள்ளி வைத்த இந்த நிகழ்வு விண்ணக வாழ்விற்குப்‌ புதிய தொடக்கமாகிறது. அவரது உயிர்ப்பினால்‌ அவரோடு புனித படைப்பான நாமும்‌ விண்ணக வாழ்வைப்‌ பற்றி எண்ணி கிறிஸ்துவோடு இணைந்து துன்பங்களை மறந்து வாழ்வோம்‌ என அழைக்கும்‌. வாசகத்தைக்‌ கவனமுடன்‌ கேட்போம்‌.

தொடர்பாடல்

இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.

பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.

மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.

சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.

வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.

உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.

சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.

கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.

மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. எம்தாய்த் திருஅவையை வழிநடத்தும்‌ திருத்தந்தை, ஆயர்கள்‌, குருக்கள்‌ அனைவருக்கும்‌ உமது ஆசியை அளித்தருளும்‌. அவர்கள்‌ உமது உயிர்ப்பின்‌ செய்தியைத் தங்கள் வாழ்வாலும்‌, போதனையாலும்‌ மக்களுக்கு அறிவிக்க வேண்டிய அருளைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

2. அன்பு இறைவா ! உமது உயிர்ப்பில்தான்‌ எங்களது விசுவாசம்‌ பொருளுள்ளதாய்‌, உயிருள்ளதாய்‌ இருக்கிறது என்பதை நாங்கள்‌ உணர்கிறோம்‌. எங்களது அன்றாட வாழ்க்கையில்‌ வரும்‌ துன்ப துயரங்கள்‌, வேதனைகள்‌, சுமைகளை நிறைவாக ஏற்றுக்கொண்டு உம்மில்‌ நம்பிக்கை கொண்டு, இலட்சியத்தோடு போராட உமது உயிர்ப்பில்‌ நாங்களும்‌ பங்குபெற வரம்தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌. 

3. எங்களது துன்பத்தில்‌ பங்கெடுக்கும்‌ இறைவா ! துயருறுவோர்‌ யாவருக்காகவும்‌ செபிக்கிறோம்‌. துன்பத்தின்‌ மூலமே ஒருவர்‌ இன்பத்தை அடைய முடியும்‌ என்பதை உமது உயிர்ப்பின்‌ மூலம்‌ நாங்கள்‌ உணர்ந்து வாழவும்‌, பிறரது துன்பங்களில்‌ பங்கெடுத்து அவர்களில்‌ இரண்டறக்‌ கலந்து, உமது உண்மை அன்பை செயலில்‌ காட்டும்‌ மாமனிதர்களாக வாழ்ந்திட வரம்தர உம்மை மன்றாடுகிறோம்‌.

4. வெற்றியின்‌ நாயகனே இறைவா ! உம்‌ மகன்‌ இயேசுவின்‌ உயிர்ப்பினால்‌ எம்பங்கு மக்கள்‌ யாவரும்‌ ஒளிபெற்று, ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்து, விட்டுக்‌ கொடுத்து ஏற்றுக்‌ கொண்டு, உமது மதிப்பீடுகளின்படி வாழ வரம்‌ தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌. 

நன்றி: இனிய தோழன்

Tuesday, March 26, 2024

ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம் 24-30மார்ச் 2024

 ஆண்டவருடைய திருப்பாடுகளின் வாரம்
24-30மார்ச் 2024



 

 
இராவுணவு

 

 

திருப்பாடுகளின் வெள்ளி

 

 
பாஸ்கா திருவிழிப்பு

 


அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா  நல் வாழ்த்துக்கள்

இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும்  என்றும் இருப்பதாக!

அன்பின் மடல் -நவராஜன்

Monday, March 18, 2024

குருத்து ஞாயிறு 24.03.2024

குருத்து ஞாயிறு 24.03.2024 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 50:4-7
பிலிப்பியர் 2:6-11
மாற்கு 14:1-15:47

திருப்பலி முன்னுரை

அன்புடையீா,
இன்று குருத்து ஞாயிறைக்‌ கொண்டாடுகிறோம்‌. புனித வாரத்தின்‌ தொடக்கமாகவும்‌, நுழைவு வாயிலாகவும்‌ குருத்து ஞாயிறு அமைகின்றது. தாவீதின்‌ மகனுக்கு ஓசான்னா முழக்கங்களோடும்‌, ஒலிவக்‌ கிளைகளைக் கைகளிலே ஏந்திய வண்ணமாய்‌ எபிரேயர்‌ எருசலேமிற்குள்‌ வீரப்பயணம்‌ மேற்கொள்கிறார்கள்‌. இந்தப்‌ பயணம்தான்‌ இயேசு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும்‌, மீட்பின்‌ முதல்‌ படியாகவும்‌ அமைகிறது. ஈராயிரம்‌ ஆண்டுகளாய்‌ விடுதலைக்காய்‌, வாழ்வின்‌ விடியலுக்காய்‌ ஏழை எளிய மக்களுக்கு நம்பிக்கையையும்‌, புத்துயிரையும்‌ கொடுப்பதாகவும்‌ அமைகிறது. எனவே இப்புனிதமான நாளில்‌ நாம்‌ நமது கரங்களில்‌ ஏந்தும்‌ குருத்து மடல்களும்‌ நாம்‌ இசைக்கும்‌ ஓசான்னா கீதமும்‌ இந்தச்‌ சமுதாயத்தில்‌ இருக்கும்‌ சுயநலம்‌, அழிவுக்‌ கலாச்சாரம்‌, நுகர்வுக்‌ கலாச்சாரம்‌, அநீதிகள்‌ போன்றவற்றிற்குச்‌ சாவுமணி அடிக்கும்‌ உரிமைக்‌ குரல்களாக ஒலிக்கட்டும்‌. இத்திருப்பவனியின்‌ வழியாக இயேசுவோடு கல்வாரிக்குப்‌ பயணமாவோம்‌.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

அநீதிகளும்‌, அராஜகங்களும்‌, சுயநலமும்‌ நிறைந்த உலகத்தினை எதிர்த்துப்‌ போராடுகிறபோது, பல துன்பங்களும்‌ அவமானங்களும்‌ ஏற்படும்‌. பலர்‌ இகழ்வார்கள்‌. ஆனால்‌ தாழ்ச்சியோடும்‌, துணிவோடும்‌ அவைகளை எதிர்த்துப்‌ போராட ஆண்டவர்‌ இயேசு நமக்குத்‌ துணையாயிருக்கிறார்‌. அவரை நாடுங்கள்‌ அவர்‌ நம்மை எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ வழிநடத்துவார்‌ என்று எசாயாவின்‌ நம்பிக்கையூட்டும்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?
திபா 22:7-8, 16-17, 18-19, 22-23
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து,`ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர். பல்லவி

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள். என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். பல்லவி

என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். பல்லவி

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்துப் பாடுவேன். ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசு இறைமகன்‌. அவருக்கு எல்லாவற்றின்‌ மேலும்‌ அதிகாரமும்‌, வல்லமையும்‌ இருந்தாலும்‌ அன்புகருதி, அமைதிகருதி, சமாதானம்கருதி அவர்‌ தன்னையே வெறுமையாக்கினார்‌. தாழ்த்திக்கொண்டார்‌. தாழ்ச்சி என்பது வீழ்ச்சி அல்ல. ஆனால்‌ அவரை அனைத்திற்கும்‌ மேலாகத் தந்தை உயர்த்தினார்‌. நாமும்‌ நமக்கு அறிவுத்‌ திறமை, ஆள்திறமை, பணம்‌, பதவி ஆகியவை இருந்தாலும்‌ பணிவோடு பிறர்‌ வாழ்வு முன்னேற முயற்சி செய்யும்போது கடவுள்‌ நம்மையே மேன்மைப்படுத்துகிறார்‌ என்று கூறும்‌ இவ்வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

நம்பிக்கையாளரின்‌ மன்றாட்டுகள்‌

1. அருட்பெருக்கின் நாயகனே! எம் இறைவா! திருத்தந்தை, அவரோடு இணைந்து உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையால் பலன் அளிக்கக் கூடியவர்களாகத் தொடர்ந்து பணி செய்திட, இயேசுவே ஆண்டவர் என்று முழுக்கமிட தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நன்மைகளின் நாயகனே எம் இறைவா! வரவிருக்கும் இப்புனித வார நாட்களில் நாங்கள் எங்கள் பாவங்களையும், பலவீனத்தையும், குற்றங்குறைகளைக் களைந்து வழக்கமாக மேற்கொள்ளும் நிகழ்வாக உம் பாஸ்கா விழாவைக் கொண்டாடாமல், உள்ளத்தில் மாற்றம் நிறைந்தவர்களாகத் தூய மனதுடன் உம்மை அணுகி வர இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. ஏழைகளின் திருவுருவே எம் இறைவா! இந்த அருளிரக்க நாட்களில் தவமுயற்சிகளில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தாமல் உள்ளத்தில் மனமாற்றமும், அதன் வெளிப்பாடாக, ஏழைகள் மட்டில் கவனம் செலுத்தி, அவர்களின் வாழ்வு சிறந்து விளங்கிட, அந்த மீட்புச் செயலின் வழியாக உம் சீடத்துவ வாழ்வில் அவர்களும் பங்கேற்கத் தேவையான மீட்பின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. பாராளும்‌ பரமனே எம்‌ இறைவா ! நாட்டிற்காகவும்‌ நாட்டை ஆளுகின்ற தலைவர்களுக்காகவும்‌ மன்றாடுகின்றோம்‌. அவர்களுக்கு உமது ஆசிகளை நிறைவாய்‌ வழங்கியருளும்‌. அவர்கள்‌ தன்னலத்தோடு வாழாமல்‌, தங்களைத்‌ தேர்ந்தெடுத்த மக்களின்‌ தேவைகளை நிறைவேற்றவும்‌, நாடு வளமும்‌, நலமும்‌ பெற அவர்கள்‌ உழைக்கவும்‌, அவர்களுக்கு நல்மனதை தந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்‌.

5. துன்பம் இல்லாமல் இன்பம்‌ இல்லை. சிலுவை இல்லாமல் சிம்மாசனம்‌ இல்லை என்பதை உணர்த்திய எம்‌ இயேசுவே! எங்களுக்கு வரும்‌ துன்பத்‌ துயரங்களைத் தாங்கிக்கொள்ளவும், பிறர்‌ வாழ்வில்‌ உள்ள சுமைகளைப்‌ பகிர்ந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும்‌ நல்‌மனதைத்‌ தந்தருள உம்மை வேண்டுகிறோம்‌.

6.எம்மை அரவணைக்கும் இறைவா! எம்பங்கில் அனைவரும் இத்தவக்காலத்தில் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட்டு,  ஒருவரை ஒருவர் மன்னித்துப் புதுமனிதர்களாக, புது வாழ்வை நோக்கிப் புத்துயிர் பெற்றுச் செயலற்ற, உம் அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Wednesday, March 13, 2024

தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2024

 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு - 18-03-2024


இன்றைய வாசகங்கள் :

எரேமியா 31: 31-34
எபேசியர் 5: 7-9
யோவான் 12: 20-33

திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
தவக்காலத்தின் இறுதி வாரத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். அடுத்த ஞாயிறு குருத்து ஞாயிறு. அதைத் தொடர்ந்து பாடுகளின் வாரம். தவக்காலத்தின் இந்த இறுதி ஞாயிறன்று வசந்த காலத்தை நமக்கு நினைவுறுத்தும் அழகான ஒரு கூற்றை இறைமகன் இயேசு நமக்கு முன் வைக்கிறார். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அஃது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தாவர உலகம் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்தக் காலத்தில் இயேசுவின் இந்தக் கூற்று பல எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது. விதைக்கப்பட்ட இந்த எண்ணங்கள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்பது நம் எண்ணம், நம் வேண்டுதல்.
இதுவரை தன் நேரம் இன்னும் வரவில்லை என்று உணர்ந்திருந்த இயேசு, இன்று தன் நேரம் வந்துவிட்டது என்று சொல்கிறார். எதற்கான நேரம் இது? மானிட மகன் மாட்சி பெறும் நேரம்... உணவாக மாறி மற்றவரை வாழ்விப்பதும், விதையாக மாறித் தன் இனத்தைப் பெருக்குவதும் கோதுமை மணிக்கு மட்டுமல்ல, உலகில் படைக்கப்பட்ட அனைத்து தானிய மணிகளுக்கும் உள்ள இயல்பான இரண்டு காரணங்கள். இயேசுவும் தான் மரித்து மண்ணில் புதைக்கப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து இந்த மானிடம் மீட்பு பெற வேண்டும் என்று விரும்பியதால் தான் நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறார்.
ஆம் அன்பர்களே, நாமும் இயேசு என்னும் நிலத்தில் புதைக்கப்பட்டு மீண்டும் புத்துயிர் பெற்று பலன் தரும் கோதுமை மணியாக மாறிட நேரம் விந்து விட்டது என்று இயேசு அழைப்பது நாம் காதுகளிலும் ஒலிக்கின்றது அல்லவா? கோதுமை மணி தன் சுய உருவை, உயிரை இழந்தது போல் நாமும் சுயநலம் இழந்துப் பிறருக்கு பலன் தரும் மானிடராக இவ்வுலகில் வலம் வரத் தந்தையாம் இறைவனிடம் இறைஞ்சுவோம். வாரீர்.

முதல் வாசக முன்னுரை :

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் புதியதோர் உடன்படிக்கையைச் செய்யப் போவதாக இறைவாக்கினர் எரேமியா வாயிலாக வாக்களிக்கின்றார். அனைவரையும் ஈர்க்க ஓர் உடன்படிக்கை. மனிதனின் இதயப் பலகையில் எழுதப்படும். அதன் முக்கியச் சிறப்பு இனி இறைவாக்கினர் வழியாக அல்ல இறைவனே முன் வந்து போதிப்பார். இன்னொரு சிறப்பு மக்கள் கடவுளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். ‘நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன். அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்’. இந்த நெருக்கமான நேரடி உறவை எடுத்துக்கூறும் இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திபா 51: 1-2. 10-11. 12-13
பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

அனைவரையும் ஈர்க்க ஒரு சிலுவைப்பலி! மன்னுயிரை மீட்பதற்காகச் சிலுவைச் சாவை ஏற்க முன் வந்தவர் தான் கிறிஸ்து இயேசு. மண்ணக மாந்தர் வாழ்வு பெற கோதுமை மணியென மண்ணிலே புதைக்கப்பட்டுத் துன்பங்கள் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்று, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவருக்கும் முடிவில்லா மீட்பிற்குக் காரணமானவர் கிறிஸ்து என்று இறையச்சத்தையும் கீழ்படிதலையும் எடுத்துரைக்கும் பவுலடிகளாரின் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்

`எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,' என்கிறார் ஆண்டவர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்பும் அருளும் உள்ளவரே! எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்காலப் பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும், உயிருள்ள ஆலயமாகிய உமது உடலை உட்கொள்ளும் நாங்கள் உம்மீது ஆழ்ந்த அன்பும், நம்பிக்கைக் கொள்ளவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! எமது நாட்டு அரசியல் தலைவர்களுக்காக வேண்டுகிறோம். அவர்கள் மக்களின் தேவைகளை உணர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அனைவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தைக் கண்டடையச் செய்திடவும், சமுக உறவில் ஒன்றுபட்டு வாழ வழிவகைச் செய்திடவும், நாட்டிற்கும் உலகிற்கும் பயன் உள்ளவர்களாக வாழ வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அனைவருக்கும் நன்மைச் செய்யும் ஆண்டவரே! எம் இறைவா! நான் மட்டும் பகிர்வதால் என்ன செய்ய முடியும் என்ற எதிர்மறை எண்ணங்களிலிருந்து எம்மை விடுவித்துப் பகிர்வு மனப்பான்மை வளரவும், உம் திருமகன் இயேசுவைப் போல் பகிர்ந்துண்டு வாழும் அவரின் சிறந்த சீடர்களாக எம் அயலாருடன் இணைந்து வாழ்ந்திடவும்,ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோருக்கு உமது பரிவிரக்கத்தைப் பகிர்ந்தளிக்கும் அன்பு கருவியாக நாங்கள் வாழ வரம் வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் அன்பு தந்தையே இறைவா! எமது பிள்ளைகள் தங்களின் வீணான எண்ணங்களுக்கேற்ப வாழாமல் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்து புதிய மனிதருக்குரிய இயல்புகளை அணிந்துத் தூய்மையான புதிய படைப்பாய் மாறிடவும், கோதுமைமணிபோல் ஒன்றுக்கு நூறு மடங்காய் பலனளிக்கும் சீடராய் வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org


Print Friendly and PDF


Tuesday, March 5, 2024

தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024

 தவக்காலம் நான்காம் ஞாயிறு - 10-03-2024
 'அகமகிழ்தல்' ஞாயி
று


இன்றைய வாசகங்கள் :

குறிப்பேடு 36:14-16,19-23
எபேசியர் 2:4-10
யோவான் 3:14-21


திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
தவக்காலத்தின் உயிர் நாடியாக விளங்கும் கருத்து, மாற்றம்தானே! வெளிப்புற மாற்றம் அல்ல, உள்ளார்ந்த மாற்றம். மனமாற்றம், அதன் விளைவாக உருவாகும் வாழ்வு மாற்றம். இதனைப் பெற்றுக்கொள்ளவே நாம் இன்று ஆலயத்தில் கூடியுள்ளோம்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன் வருகை "உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல" என்று நமக்கு நினைவுறுத்துகிறார். உண்மைக்கேற்ப வாழும்போது, நாம் ஒளியிடம் வருகிறோம். நமது பாவங்களால், நாம் குற்ற உணர்வுக் குறைந்து, சுயக் கெளரவம் அதிகமாகி , பாவசங்கீர்த்தனம் செய்வது செல்வதில்லை நாம். குற்ற உணர்வு, நாம் மனம் திரும்பி, மாற்றம் அடைவதற்குப் பெரிய தூண்டுதலாக இருக்கும். நாம் நமது பாவங்களை நினைத்து அவமானம் அடைகிறோம், அதனால், நமது பாவங்கள வெளியே தெரிந்துவிடும் என நாம் பயப்படுகிறோம்.
எனினும், இயேசு, நம் சுயகெளரவத்தையும், நமது பயத்தையும், போக்க நாம் அனுமதித்தால், இயேசு அதனையெல்லாம் போக்கி மகிழ்ச்சித் தருவார். குருவானவர் மூலமாக இயேசு நம்மிடையே பேசி, மன்னிப்பையும், இரக்கத்தையும், நிபந்தனையற்ற அன்பையும் நமக்கு வழங்குகிறார். இன்றைய நற்செய்தியில்,இயேசு "உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்."என்றும், அவர்மீது நம்பிக்கைக் கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை" என்றும் நினைவூட்டுகிறார்.
நாம் நமது குற்றங்களை ஒத்துக் கொள்ளும்போது, கிறிஸ்துவின் பணியாளிடம் (குருவிடம்) சொல்லும்போது, நாம் இயேசுவினால் காப்பாற்றப்படுகிறோம். குருவின் குரல்மூலம், இயேசு நம்மிடம் பேசுவதைக் கேட்கிறோம். மேலும் பாவங்களைச் செய்யாமல் இருக்க இயேசுவிடமிருந்து, ஆற்றலைப் பெறுகிறோம். இருளிலேயே ஏன் இன்னும் துன்புற்று இருக்க வேண்டும்? இயேசு நம்மை மீட்க வந்துள்ளார்! என்பதை உணர்ந்து முழுமனமாற்றத்தைப் பெற இறைவனை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை :

கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார். கல்தேயரின் மன்னன் வழியாகக் கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்தார். கடவுள் தன் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்று உரைக்கும் முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 137:1-2, 3, 4-5, 6.
பல்லவி: 'உன்னை நான் நினையாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!"

பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம். அங்கிருந்த அலரிச் செடிகள்மீது, எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம். -பல்லவி

ஏனெனில், அங்கு எங்களைச் சிறையாக்கினோர் எங்களைப் பாடும்படி கேட்டனர்; எங்களைக் கடத்திச் சென்றோர் எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு கேட்டனர். ' சீயோனின் பாடல்களை எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்' என்றனர். -பல்லவி

ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை அன்னிய நாட்டில் எங்ஙனம்; பாடுவோம்? எருசலேமே! நான் உன்னை மறந்தால் என் வலக்கை சூம்பிப்போவதாக! -பல்லவி

உன்னை நான் நினையாவிடில், எனது மகிழ்ச்சியின் மகுடமாக நான் எருசலேமைக் கருதாவிடில், என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபேசியர்களுக்குப் புனித பவுல் எழுதிய கடிதத்தில் கடவுளுடைய அன்பும், தாராள மனப்பான்மையும், மிகுந்த இரக்கத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. மிகுந்த இரக்கமுடைய கடவுள் நம்மீது அன்புக் கொண்டதால் நாம் மீட்கப்பட்டோம். நாம் கடவுளின் கலைப்படைப்பு. நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து இயேசு வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம். முற்றிலும் கடவுளுடைய ஒப்புயர்வற்ற அன்பின் கொடைகள் இவைகள்! என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வசனம்:

"தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்".

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நாங்கள் நற்செயல்கள் புரிவதற்கென்றே கிறிஸ்து வழியாய்ப் படைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை இன்றைய வாசகங்கள்மூலம் உணர்த்திய அன்பும் அருளும் மிக்க எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் இத்தவக்காலத்திலும் அதன் பின்பும் நாளுக்கு நாள் நற்செயல்கள் புரிவதில் வளர அன்பையும் அருளையும் நிறைவாய் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உமது மகன் இயேசுவில் நம்பிக்கைக் கொள்வோர் நிலைவாழ்வுப் பெறுவர் என்ற வாக்களித்த எம் இறைவா! எங்கள் நம்பிக்கை இறை இயேசுவில் நிலைப்பெற்று, எம்வாழ்வு ஏற்றம் பெறவும், அதனால் நாங்கள் உம் இறையரசின் சாட்சிகளாய் ஒளிர்ந்திடவும், அடுத்திருக்கும் எம்மக்களையும் இறையரசில் இணைத்திட உழைக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பராமரித்தாளும் எங்கள் இறைவா! இன்றைய உலகில் துன்புறும் திருஅவைக்காக உமது இரக்கத்தையும் பாதுகாப்பையும் வேண்டுகிறோம். சிறப்பாகச் இந்தியாவிலும், மற்ற நாடுகளிலும் ஆட்சியாளர்களால் வஞ்சிக்கப்பட்டும், கொடுமைப்படுத்தப் பட்டுவரும் உம் எளிய மக்கள் விரைவில் விடுதலைப் பெற்று புதிய புனர்வாழ்வுப் பெற்றிடத் தேவையான மாற்றங்களை அவர்கள் பெற உமது அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்முன்னோருக்கு வழிகாட்டி நடத்திய தெய்வமே! எம் இறைவா! கல்வியாண்டு இறுதிதேர்வை எழுதி வரும் எம் அன்பு பிள்ளைகளுக்காக உம்மிடம் வேண்டுகிறோம். படிப்பதற்கு நல்வழிகாட்டி, அவற்றை மறக்காமல் சரியான விடைகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, சமூகத்தில் உயர் நிலைக்கு வரத் தேவையான ஞானத்தையும், உம்மில் நம்பிக்கைப் பெற்றவும் உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.மகிழ்ச்சியின் இறைவா! அகமகிழ்தல் ஞாயிறைக் கொண்டாடும் நாங்கள் “ஒளியாக மாறுவதே, இருளை வெல்வதற்கு ஒரே வழி.” என்பதை உணர்ந்து, கிறிஸ்து என்ற ஒளியை நெருங்கிச் செல்ல, அவரைப் போல் ஒளியாக மாறத் தேவையான ஞானத்தையும், மனத்திடனையும் அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Wednesday, February 28, 2024

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03-03-2024

 தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - 03-03-2024

 இன்றைய வாசகங்கள் :

விடுதலைப் பயண நூல் 20:1-17
1கொரிந்தியர் 1:22-25
யோவான் 2:13-25

திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
சென்ற வாரம் இயேசுவை நாம் மலைமீது சந்தித்தோம். உருமாறி, ஒளிவெள்ளத்தில் தோன்றிய இயேசு அவர். தவக்காலத்தின் மூன்றாவது ஞாயிறான இன்று இயேசுவைக் கோவிலில் சந்திக்கிறோம். கோபக்கனல் தெறிக்கத் தோன்றும் இந்த இயேசு நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

"யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்(யோவான் 2: 13) என்று இன்றைய நற்செய்தி துவங்குகிறது. இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பாஸ்கா விழாவையொட்டி எருசலேமுக்குச் செல்ல வேண்டும், அந்த ஆண்டுக்கான காணிக்கையைக் கோவிலில் செலுத்த வேண்டும். இயேசுவும் யூதருக்குரிய தன் கடமைகளை நிறைவேற்றக் கோவிலுக்குச் சென்றார். அங்குச் சென்றவர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். ஒவ்வோர் ஆண்டும் அவர் அங்குச் சென்று திரும்பியபோதெல்லாம் அவர் உள்ளத்தை வேதனையும், கேள்விகளும் நிறைத்திருக்க வேண்டும். இத்தனை ஆண்டுகள் அந்த வேதனைகளுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி வந்த இயேசு, இன்று தானே விடையாக மாறத் துணிந்தார்.

இறைமக்களாகிய நாம் அனைவரும் இறைவனின் ஆலயங்களே! கடவுளின் ஆலயம் தூயது. நீங்களே அந்த ஆலயம். நீங்கள் கடவுளின் கோயிலென்று உங்களுக்குத் தெரியாதா? என்கிறார் புனித பவுல். நம் உடலாகிய கோயில் பாவ நாட்டங்களால் தீட்டுப்படும்போது கடவுள் வெளியேறி விடுகிறார். நாம் மற்றவருக்குத் தீங்கிழைக்கும்போது கடவுளுக்கே தீங்கிழைக்கிறோம் என்பதை உணர்ந்து தூயவாழ்வு நடத்தி நமது உடலாகிய ஆலயத்தைப் பேணுவோம், வாழ்வையே வழிபாடாக மாற்றுவோம். வாரீர்.

 முதல் வாசக முன்னுரை :

மக்களைப் பாவத்தில் இருந்தும் அழிவில் இருந்தும் பாதுகாக்க இறைவன் பத்துக் கட்டளைகளைக் கொடுத்ததை இன்றைய முதல் வாசகம் நினைவு படுத்துகிறது. இக்கட்டளைகள் உறவு வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டவை. முதல் மூன்று கட்டளைகள் இறை - மனித உறவைப் பற்றியும் அடுத்த ஏழு கட்டளைகள் மனிதருக்கும் - மனிதருக்குமான உறவைப் பற்றியதாகவும் அமைந்துள்ளன. சீனா மலையின் உடன்படிக்கையின் வெளிப்பாடே பத்துக் கட்டளைகள். அவற்றை மீறுவது இறைவனின் உடன்படிக்கையையே மீறுவதாகும். இதனைச் சிந்திக்க அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 19: 7. 8. 9. 10
பல்லவி : ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.
1. ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிரளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
2. ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
3. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.-  பல்லவி
4. அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.-  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல்  ஞானத்தை பெரிதும் மதித்துத் தேடும் யூதர்கள், கிரேக்கர்கள் இறைஞானத்தை உணரவில்லை என்பதை உணர்த்துகிறார். மெசியாவாகிய இயேசு கொண்டு வரும் புதுவாழ்வு உலகிற்கு உரியவற்றைச் சிலுவையில் அறைந்து விட்டு, சிலுவையைப் பின்பற்றி  நடப்பதாகும். அதாவது உள்ளத்தில் எழுதப்பட்டுள்ள கடவுளின் கட்டளைகளின்படி நடப்பதாகும். பழைய உடன்படிக்கை கற்களில் எழுதப்பட்டது. புதிய உடன்படிக்கை மனித இதயத்தில் எழுதப்பட்டது என்று உரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

1. இரக்கம் நிறைந்த எம் இறைவா! திருஅவை உள்ள அனைவரும் ஓப்புறவு அருட்சாதனத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கின்ற தவறான கண்ணோட்டங்களைக் களைந்து, நல்ல ஒப்புறவு அருட்சாதனத்தில் பங்குகொண்டு இத்தவக்கால பலன்களை முழுமையாக அனுபவிக்கவும், இயேசுவின் உயிர்ப்பில் இணைந்திட வேண்டிய உறுதியான மனநிலையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.ஞானத்தின் உறைவிடமான எம் இறைவா! கல்வித் தேர்வு காலமான இந்நாள்களில் எம்பிள்ளைகள் நன்றக படித்து, படித்தவற்றை தேர்வு நேரங்களில் மறக்காமல், தடுமாற்றம் இல்லாமல் சிறப்பாகத் தேர்வு எழுதவும், பெற்றோர்கள் அவர்களை அன்போடு ஊக்குவிக்கவும் தேவையான ஞானத்தை அனைவருக்கும் வழங்கிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல் ஆயனே! எம் இறைவா! இன்றைய உலகில் நிலவும் இளையோர்க்கு எதிராக எழுப்பப்படும் கலாசார சீர்கேடுகள், மாயகவர்ச்சிகள், பாலியல் வன்முறைகள் இவை அனைத்திலிருந்து எம் இளையோரை பாதுகாத்து, அவர்கள் உம் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவற்றின் மறைபொருளை அறிந்து நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணையின் தெய்வமே! எம் இறைவா! சமூகத்தில் தனக்கு யாருமே இல்லை என்று தனித்து விடப்பட்ட விதவைகள் அனாதைகள், கைவிடப்பட்டோர், ஒதுக்கப்பட்டோர் அனைவரும் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட உம் பாடுகளின் வழியாக அவர்கள் தங்களை புதுப்பித்த உம் இறை அருள் அவர்களுக்கு உதவிக்கரமாக அமைய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் சிலுவை நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், மலை அனுபவத்தில் 'இவருக்குச் செவி கொடுங்கள்!' என்ற உமது கட்டளையை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, February 19, 2024

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - 25-02-2024

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - 25-02-2024

இன்றைய வாசகங்கள் :

தொடக்க நூல் 22:1-2,9-13,15-18
உரோமையர் 8:31ஆ-34

மாற்கு 9:2-10  

திருப்பலி முன்னுரை :

அன்பார்ந்த இறைமக்களே!
சென்ற ஞாயிறு சிந்தனையில் பாலை நிலத்தில் இயேசுவைச் சந்தித்த நாம், இன்று மலையுச்சியில் அவரைச் சந்திக்க வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, இருவேறு மலைகளில் நிகழும் இரு வேறுபட்ட, முற்றிலும் மாறுபட்ட நிகழ்வுகள் இந்த ஞாயிறு, நமது சிந்தனைக்குத் தரப்பட்டுள்ளன. இவ்விரு நிகழ்வுகளில் ஆபிரகாம் வாழ்வில் நிகழ்ந்த ஒரு கொடுமையான சோதனையை நமது சிந்தனைகளின் மையமாக்குவோம்.
மகனைப் பலி கேட்ட இறைவன், ஆபிரகாமுக்கு மலையுச்சியில் இறை அனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில் சீடர்களும் இறை அனுபவம் பெறுகின்றனர். இயேசுவின் உருமாற்றம் என்ற அந்த இறை அனுபவம் பெற்ற சீடர்களிடம் இறைவன் பலியை எதிர்பார்க்கிறார். வேதனையை அனுபவித்தபின் இறை அனுபவத்தைப் பெறுவதும், இறை அனுபவத்தைப் பெற்றபின், வேதனைகளை அனுபவிக்க தயாராவதும் வாழ்வில் நாம் சந்திக்கும் ஓர் உண்மை.
மலையின் உச்சியில் இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கிய சீடர்களைப் போல், நாமும் இந்த இறை அனுபவத்தை இத்திருப்பலியில் பெற்று சராசரி வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாமல் தவிப்பவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
உருமாறிய இறைமகனைக் கண்ணாரக் கண்ட சீடர்களை அழைத்துக் கொண்டு, இயேசு மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்.

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

ஆபிரகாமை இறை நம்பிக்கையின் தந்தை என்கிறோம். நமது இறை நம்பிக்கை எத்தகையது? இன்னல், இடர்ப்பாடுகள் நேரும்போது கடவுளை முழுமையாக நம்புகிறோமா?  நமது இறை நம்பிக்கை எத்தகையது என்பதைச் சிந்திக்க இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் ஒரு கொடுமையான சோதனையைச் சந்திக்கிறார்.  இதனைக் கவனமுடன் கேட்டு நம்மைச் செம்மைப்படுத்த வேண்டிய காலம்  இத்தவக்காலம் என்பதை உணர்ந்துச் செயல்படுவோம்.

பதிலுரைப்பாடல்

திபா 116: 10,15. 16-17. 18-19
பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில், நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்.

1. `மிகவும் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. -பல்லவி

2. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி

3இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்; உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை :

 இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியானர் கடவுள் நம்மோடு இருக்கையில் நமக்கு எதிராக யார் செயல்பட முடியும்? என்ற வினா எழுப்புகின்றார். அவரின் உடனிருப்பு நம்பும்பொழுது நம்மை யார் குற்றம் சொல்லமுடியும? சிலுவையில் தன் சாவை ஏற்று இறந்த பின் உயிருடன் கடவுளின் வலப்பக்கம் இருக்கும் இயேசுவின் உடனிருப்பை நம்பும்படி நம்மை அழைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

ஒளிரும் மேகத்தினின்று தந்தையின் குரலொலி கேட்டது: ``என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.''

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அருட்கொடைகளின் நாயகனே எம் இறைவா! எம் திருஅவையின் திரு ஆட்சியாளர்கள், தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்று நம்பிக்கை வாழ்வில் தளர்ச்சியுற்ற வேளையில் சோர்ந்து விடாமல், உம் நம்பிக்கை உன்னை நலமாக்கியது என்றும் வார்த்தையை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எம்மில் என்றும் வாழும் இறைவா! மாந்தரின் சிறப்புக்கு அளவுகோலான பிற மாந்தருக்கும், பிற உயிரினங்களுக்கும் அவர் காட்டும் அன்பு, இரக்கம், மன்னிப்பு, சமாதானம், சமத்துவம் என்பவைகளை எம்வாழ்வில் கடைப்பிடித்து இயேசுவின் சாட்சிகளாய் மாறிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அனைத்திற்கும் ஊற்றான எம் இறைவா! இன்று எம்நாட்டில் நிலவும், சிறுபான்மை மத மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை, தீவிரவாதம் இவைகள் உம் அருள் இரக்கத்தினால் ஒழிந்திடவும், எல்லோரும் இந்தத் தேசத்தின் மன்னர்கள் என்ற தெளிந்தச் சிந்தனையை மதவாத சக்திகள் புரிந்து கொண்டு செயல்பட உம் தூயஆவியினால் அனைவரும் உண்மையான மனமாற்றத்தை உணரத் தேவையான அருளைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஏழைகளின் அருள் துணையே எம் இறைவா! ஏழைகளுக்கு உதவுகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான் என்ற வார்த்தைக்கு ஏற்ப எம்சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்றுப் பகர, ஏழை - பணக்காரன் என்ற வித்தியாசம் திருஅவையில் இன்னும் ஒரு கொடிய நோயாகவே இருக்கின்றது. இந்த நிலை மாற நீர் அனைத்து மாந்தரும் மனமாற்றம் பெற்றுத் தளரா மனதுடன் ஏழைமக்களுக்கு உதவி புரியத் தாராள மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுன்றோம்.
5. அரசு பொதுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிற மாணவச் செல்வங்களுக்கு ஆசியளித்தருளும். உம் தூய ஆவியாரின் ஞானத்தைக் கொடுத்து, அவர்கள் நல்லமுறையில் தேர்வு எமுதித் தேர்ச்சி பெறவும், ஒளிமயமான எதிர்கால் வாழ்வைப் பெறவும் வரம் அருள உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, February 14, 2024

தவக்காலம் முதல் ஞாயிறு – 18-02-2024

  தவக்காலம் முதல் ஞாயிறு – 18-02-2024



இன்றைய வாசகங்கள்:

தொடக்க நூல் 9:8-15 |   1பேதுரு 3: 18-22  |   மாற்கு 1: 12-15  

திருப்பலி முன்னுரை:

ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்கத் திருச்சபை நம்மை அழைக்கிறது. தவக்காலம் புத்துயிர் தரும் வசந்தகாலம். ஆம் பழைய வாழ்விலிருந்து புது வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் ஒரு நல்லகாலம். சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கிய அம்சம், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மைகளை நாம் உணரலாம்.
சோதனைகளுக்கும், அவற்றின் மூல காரணமான தீய சக்திகளுக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால் உள்ளத்தில் நம் உறுதி, நம்பிக்கை இவை குலைகிறதே... அதுதான் இன்று உலகத்தில் பலர் சந்திக்கும் மாபெரும் ஒரு சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். நம் ஆழ்மனதில் உள்ள தீய நாட்டங்கள், மிருக உணர்வுகள் இவைகளைத் தட்டி எழுப்பும் சோதனைகள் சக்தி மிகுந்தவைதான். உண்மை தான். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவைகளோடு போராடி வெற்றி பெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும், உறுதியான மனமும் உள்ளன. இதையும் நாம் நம்ப வேண்டும்.
“சோதிக்கப்படுவது வேறு, சோதனையில் விழுவது வேறு.” இயேசு சோதிக்கப்பட்டார். ஆனால், சோதனையில் விழவில்லை. நாமும் சோதனைகளைச் சந்திக்கும்போது, அந்த இறைமகன் சொல்லித்தந்த பாடங்களையும், அவர் சொல்லித்தந்த அந்த அற்புத செபத்தின் வரிகளையும் நினைவில் கொள்வோம். "எங்களைச் சோதனையில் விழவிடாதேயும், தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும்." என இன்றைய திருப்பலியில் இயேசுவை போலச் சோதனைகளை வென்றிட இறையருள் வேண்டிடுவோம்.

முதல் வாசக முன்னுரை:

அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவனை நமக்கு நினைவுறுத்துகிறது இன்றைய முதல் வாசகம். நோவாவின் காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில் இறைவன் புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் ஓர் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 25: 4-5. 6-7. 8-9
பல்லவி: ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போரின் பாதைகள் உண்மையானவை.
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும். ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் இரக்கமுள்ளவர். நேர்மையானவர். எளியோரை நேர்வழியில் நடத்தி அவர்களுக்குத் தம் புதிய வழித்தடங்களைக் கற்பிப்பவர் என்ற எண்பித்தார். கிறிஸ்து நம் அனைவருக்காகவும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரின் இறப்பின் வழியாக நாம் அனைவரும் வாழ்வு பெற்றோம். அந்த வாழ்வில் இறுதிவரை நிலைத்திருக்கப் புனித பேதுரு இன்றைய இரண்டாம் வாசகத்தில் நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அந்த அழைப்பிற்கு செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. அழிவுகளிலும் அற்புதங்களை நிகழ்த்தும் இறைவா! தவக்காலத்தைத் தொடங்கியுள்ள உம் திருஅவையில் உள்ள அனைவரும் நீர் அளித்த அருட்சாதனங்களின் மேன்மைகளை உணர்ந்து, அதன் வழியாக உமது இறையரசை அடைய வேண்டிய மனமாற்றத்தையும், அதற்கான தவ வாழ்க்கையை மேற்கொள்ளத் திறந்த மனதையும் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! ஒரே குடும்பமாகக் கூடியுள்ள எம்பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். தங்களின் அன்றாட வாழ்வில் உம்மைப் பிரதிபலிக்கவும் பிறர் நலனில் அவர்கள் அக்கறை கொண்டு வாழவும், சோதனைகளைச் சுகமான சுமைகளாக மாற்ற உம் வார்த்தைகளின் படி வாழ்ந்திடும் மனத்திடனை அவர்களுக்கு நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3 நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா! எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும், இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வைத் தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்றப் பிள்ளைகளாக வாழ இத்தவக்காலம் உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா! எம் இளையோர், இயேசுவின் நண்பர்களாக வாழ்ந்து, துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல், சோதனைகளை வென்றடுத்த இயேசுவை மனதில் பதிவு செய்து, இத்தவக்காலத்தைப் பயன்படுத்தவும், அதன் மூலம் புதுவாழ்வு அடைய வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.நலமானதெல்லாம் நல்கிடும் இறைவா! தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள், உலகக் கவர்ச்சிகள் எம்மைச் சோதிக்கும்போது அவற்றை  எதிர்க்க வலுவற்றவர்களாக இருக்கம் எங்கள்மீது மனமிரங்கியருளும். இத்தவக்காலத்தில் எம்மைச் சீாபடுத்திக் கொள்ள றாங்கள் எடுக்கும் முயற்சிகயில் எமக்குத் துணையாக இருந்து மனவுறுதியுடன் உம்மைப் பின்பற்றி வாழ அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

www.anbinmadal.org


Print Friendly and PDF