Thursday, May 19, 2016

மூவொரு இறைவன் பெருவிழா 22/05/2016



மூவொரு இறைவன் பெருவிழா 22/05/2016

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! மூவொரு இறைவன்  பெருவிழாவை கொண்டாட நம் ஆலயத்தில் ஒன்றாக் குழுமியிருக்கும் அனைவருக்கும் இயேசு கிறிஸ்தவின் அருளிலும், கடவுளின் அன்பிலும் தூயஆவியின் நட்புறவிலும் இனிய அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக! 

கடவுள் தமதிருத்துவமாய் இருப்பது அவரின் இயல்பைக் கூட்டுவதோ, குறைப்பதோ இல்லை .ஆனால், நாம் கடவுளை எப்படிப் பார்க்கிறோமோ, அப்படித்தான் நம்மையும், மற்றவர்களையும் பார்க்கின்றோம். தமதிருத்துவம் பற்றிய புரிதல் நம் வாழ்க்கை மற்றும் உறவு நிலைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, நம்மைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நாம் ஓடுவது போன்றது. நாம் எத்துணை வேகமாக ஓடினாலும், நம்மை நம்மால் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நாம்' என்பதும், 'நமது' என்பதும் ஒன்றே.

     இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நாம் நம்மையே புரிந்துகொள்கிறோம். நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நாம் நம் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறோம்.

தந்தை மகன் தூய ஆவியாகிய மூவரும் எப்படி நிலையான உறவில் நிலைத்திருந்து ஆக்கப்பணிகளில் செயல்படுகிறார்களோ, அதுபோல மனிதர்கள் அனைவரும் அருள் நிலையில் வாழ்ந்து அனைவரிலும் ஒற்றுமையை உருவாக்க முன்வர வேண்டும். தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கி சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழ தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவ பெருவிழா திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது  என்பதையும் மனிதஇனம் மட்டுமே பேசக்கூடிய சொல்லாக செயல்படுவது ஞானமே. எனவே தான்  ஒரு மனிதராக உருவகிக்கும் ஆசிரியர், அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் என கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தை கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

  நம்பிக்கை என்பத நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. எனவே தான் எபிரேயர் 11:1ல் மிக அழகாக விவரிக்கின்றது. இந்த நம்பிக்கை நாம் இறுதி நியத்தீர்ப்பின் போது  எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளை தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாக பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

 


பதிலுரைப் பாடல்


திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி


ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி



மன்றாட்டுகள்:

1. இறைஅச்சமே ஞானத்தின் தொடக்கம் என்றுரைத்த எம் இறைவா!  திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் ஆகிய அனைவரும் மூவொரு கடவுளைப் போன்று ஒற்றுமையின் அடையாளமாகவும், சமத்துவத்தின் சங்கம்மாகவும் ஒருங்கிணைந்த செயல்பாட வேண்டிய ஞானத்தையும் புரிதலையும் பெற்று திருஅவை சிறப்புடன் திகழ தேவையான ஆற்றலை நிறைவாக பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருளிலும், அன்பிலும், நட்புறவிலும் ஒன்றிணைந்திருக்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறையருளின் துணையோடு இறையனுபவத்தை பெற்றிட, உம்மை போல் ஒன்றாய் ஒற்றுமையுடன் வாழவும், உண்மையான கிறிஸ்தவராக எப்போதும் கடவுளோடும், பிறரோடும், உறவோடு வாழ எமக்கு தேவையான வரங்களைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பின் அரசே! எம் இறைவா! 'உடன்பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களைவிட மதிப்பிற்கு உரியவர் என எண்ணுங்கள்' என்ற பவுலடிகளாரின் வார்த்தைகளக்கேற்ப்ப அடுத்திருப்பவருடன் அன்பும், சுயநலமில்லாத சேவை மனப்பான்மை மனம் கொண்டவர்களாகவும், உலகமெங்கும் உம் அன்பின் சாட்சிகள் வலம் வர உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.உலகின் ஒளியே இறைவா! உலகில் தோன்றும் ஒவ்வொரு மனிதரையும் ஒளிர்விக்கின்றவர் நீரே. எங்கள் இதயங்களையும் ஒளிர்வித்தருளும். உமது வார்த்தையாலும் உணவாலும் ஊட்டம் பெற்ற நாங்கள் எப்பொழுதும் உமக்கு உகந்தவற்றையே நாடவும், பிறரை நேர்மையான உள்ளத்தோடு அன்பு செய்து வாழ இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment