Wednesday, December 7, 2016

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 11/12/2016

*திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு *



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

எசாயா 35:1-6,10 
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

*முன்னுரை*


இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - மகிழ்ச்சியின் ஞாயிறு. இறைவனின் ஆசீரை நாடி அவரின் இல்லம் வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.
மீண்டும் இறைவாக்கினர் எசாயா அகமகிழ்ந்து பூரித்துக் கூறுவதாவது பாழ்நிலங்கள் புத்துயிர் பெற்றுப் பூத்துக் குலுங்கும். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் காண்பார்கள். மக்கள் அனைவரும் நலமும் வளமான வாழ்வும் பெற்றுப் பெரும் மகிழ்ச்சியில் சீனோனுக்கு வருவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும் என்றார்.
பயிரிடுபவரைப் போலக் காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருங்கள். தண்டனைத்தீர்ப்பு ஆளாகாதவாறு உங்களைக் காத்துகொள்ளுங்கள் என்று திருத்தூதர் யாக்கோபு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.
இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் மெசியாவைக் கண்டு கொண்டதின் மகிழ்ச்சியில் தம் சீடர்களை உறுதிசெய்ய அனுப்பிவைக்கின்றார். இறைவாக்கினரை விட மேலானவர் என்றும் மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவர் என்றும் தன் முன்னோடிக்குப் புகழ்மாலைச் சூட்டுகிறார். ஆம் அன்பர்களே யோவாயைப் போல் மெசியாவைக் கண்டுணர்ந்துக் கரடுமுரடான பாதையை வெற்றிகரமாகக் கடந்து அவர்தரும் நிலைவாழ்வை மகிழ்ச்சியோடு நோக்கிப் பயணிக்க அவரின் உடனிருப்பை தேடி, வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

*வாசகமுன்னுரை*


*முதல் வாசக முன்னுரை*


எசாயா நூலிருந்த எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம் அடிமைத்தனத்தலிருந்து விடுபட்டுத் திரும்பும் இஸ்ரயேலரின் மனநிலையைப் பிரதிப்பலிக்கின்றது. யாவே கடவுள் பாழ்நிலங்களைச் சோலையாக மாற்றுகிறார். நலிவுற்றோரைப் புதுபலன் பெற்றவைத்துப் பயணிக்க வைக்கிறார். மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் முகம் மலர்ந்திருக்கும். மெசியாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் எசாயாவின் இவ்வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


பயிர்செய்வோர் எப்படிப் பொறுமைக் காத்துக் காலம் கனியும் வரை காத்திருந்து தன் உழைப்பின் பயனைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதைபோல் நாம் ஆண்டவரின் வருகைக்கு நம் உள்ளங்களை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரைக் கூறும் திருத்தூதர் யாக்கோபு, ”நடுவர்கள் வந்து விட்டார்கள். எனவே நிலைவாழ்வைக் காத்துக்கொள்ள நம்பிக்கையோடு பயணியுங்கள்” என்று விடுக்கும் மகிழ்சிசியின் அழைப்பைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப்பாடல்*


 ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.

திருப்பாடல் 146: 7,8,9,-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.  பதிலுரை

 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பதிலுரை 

 
ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பதிலுரை 

*மன்றாட்டுகள்*


1. அனைத்தையும் 'கடந்தவர்.' இருந்தாலும் எம் 'உள் உறைபவரான கடவுளே! மெசியாவின் வருகையின்போது ஒரு தலைகீழ் மாற்றம் உருவாகிறது. அல்லது ஒரு புதிய பிறப்பு உண்டாகிறது. பழையது மறைகிறது. குறைகள் நீங்கி நிறைவு பிறக்கிறது. இப்படியாக, மாற்றம், புதிய பிறப்பு, நிறைவு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்துக் கொள்ளவும், உமது வருகையை எதிர்நோக்கியுள்ள உம் திருஅவைக்குத் தேவையான ஞானத்தையும், உம் வழிகாட்டுதலையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பொறுமையின் சிகரமே எம் இறைவா! உழைப்பின் பயனைஅடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வழங்கி இறுதியில் நிலைவாழ்வு என்றும் மகிழ்ச்சியைப் பெற்றிட ,இந்த வருகைக் கால்த்தில் எங்களை நாங்கள் உமது வருகைக்காகத் தயாரிக்க, பகைமை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கத் தேவையான உம் ஆசீர் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம்காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உமது நலன்களால் நிரப்பிடும் எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் மகிழ்ச்சி. பொறுமையாக வரும். நிலைத்து நிற்கும். மகிழ்ச்சி ஆழமானது. அஃது உள்ளம் சார்ந்தது. நம் புலன்களுக்குப் புலப்படாத அவரில் இருப்பதுதான் மகிழ்ச்சி என்பதை உலகமக்கள் அனைவரும் உணர்ந்துக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி எங்கள் தயாரிக்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.                     

                                      www.anbinmadal.org

2 comments:

  1. Very useful message, and this website. Thank you.

    ReplyDelete
  2. Very useful message, and this website. Thank you.

    ReplyDelete