Wednesday, February 22, 2017

பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு 26.02.2017



*பொதுக்காலம்  எட்டாம் ஞாயிறு  26.02.2017*




*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*





*முன்னுரை*



ஆண்டில் பொதுக் காலத்தின் ட்டாம் ஞாயிறான இன்று இயேசுவின் இனிய நாமத்தில் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.  கவலையில்லாத மகிழ்ச்சியான மனநிலையில் இத்திருப்பலியில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.

இன்றைய வாசகங்கள் கவலைப்படுவதால் நாம் எதையும் சாதிக்கமுடியாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆனால் கவலையில்லாத மாந்தரைக் காண்பது அரிது. எல்லாவற்கும் கவலைப்பட்டு வாழ்க்கை இழந்த பலரை இன்று காண்கின்றோம். இறைவன் எவ்வளவு ஆழமாக அன்பு செய்கின்றார் என்றால் உன் தாய் மறந்தாலும் நான் உன்னை மறவேன் என்று ஆறுதல் தருகின்றார். நமக்காக ஒருவர் கவலைப்படும் போது நாம் ஏன் கவலைப்படவேண்டும். அவை அனைத்தையும் அவரிடமே ஒப்படைத்துவிடுவோம். அதற்காக தானே தன் அன்பார்ந்த  மகனை நமக்குத் தந்தார். காட்டு செடிகளுக்கு வண்ணமலர்களால் அழகு பார்ப்பவர், வானத்துப்பறவைகளுக்கு உணவளிப்பவர்  நம் வானகத்தந்தை தன் சாயலாகப் படைத்து பராமரித்த வரும் அவா நமக்கு எத்தகைய கைம்மாறு அளித்து பாதுக்காக்கின்றார் என்ற நல்சிந்தனைகளை மனதில் பதித்து நம்பிக்கையோடு இறைவார்த்தையில் ஊன்றி இந்த உலகை வலம் வருவோம். நாளைய கவலைகளை மறந்து உடன்பயணிக்கும் இயேசுவின் கரம் பற்றி இன்றைய திருப்பலியில் கலந்திடுவோம். வாரீர்.

..


*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*




இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கு உரைக்கும் எசாயா, கடவுள் மறந்துவிட்டாரா? அல்லது மறக்கவில்லையா? என்ற பிளவுபட்ட நிலையைச் சரி செய்கின்றார். எபிரேயத்தில் 'மறத்தல்' என்பது 'புறக்கணித்தல்'. நாம் எதைப் புறக்கணிக்கிறோமோ அதைத்தானே மறந்துவிடுகிறோம். இஸ்ரயேல் மக்கள் கடவுளை மறந்தனர். இருந்தாலும், கடவுளின் மற்றொரு தன்மை - அவரின் தாய்மை அவரின் தண்டித்தலை விட அது மேலோங்கி நிற்கிறது. வலுவற்ற குழந்தையான இஸ்ரயேல் மக்களைத் தன் இரக்கத்தால் தாயாகத் தாங்குகின்றார். அவர்களைக் குனிந்துப் பார்க்கின்றவராக இருக்கின்றார் யாவே இறைவன். அவரின் தாயுள்ளத்தைப் புடமிட்டுக் காட்டும் இவ்வாசகத்திற்குச் செவிமேடுப்போம்.




*இரண்டாம் வாசக முன்னுரை*



இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து நகரத் திருச்சபையில் நிலவியப் பிளவுகளைக் கடிந்து கொள்ளும் பவுல், இதற்கான அதிகாரம் தனக்குக் கடவுளிடமிருந்தே வருகிறது என்கிறார். மற்றவர்களும், தானும் தனக்குத் தரும் தீர்ப்பு தேவையில்லை எனவும்இறைவன் ஒருவரே தீர்ப்பிடுபவர் எனவும் சொல்கிறார் பவுல். மற்றவர்களின் தீர்ப்பை மனதில் கொண்டால் பவுல் அவர்கள் சார்பாக நடந்து கொள்ளவும், ஆள்பார்த்துச் செயல்படவும் வாய்ப்புக்கள் உண்டு. தனக்குத் தானே தீர்ப்பிட்டுக் கொண்டால் அது சில நேரங்களில் குற்றவுணர்வில் போய் முடியலாம். ஆக, தீர்ப்பைக் கடவுளுக்கு விட்டுவிடுகின்றார் திருத்தூதர் பவுல். இவ்வாறு திருத்தூதர் பவுலடியாரின் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப் பாடல்
திபா
62: 1-2. 5-6. 7-8
பல்லவி: என் நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு.


கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தேஉண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். - பல்லவி


நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு; ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே; உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன்.- பல்லவி


என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன; என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே.  மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில்உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள். - பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.


*மன்றாட்டுகள்*


1. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவியர் அனைவரும் உண்மையான பணியாளர்களாகவும், எல்லோரின் நம்பிக்கைக்குரிவர்களாகவும், மக்களின் உன்னத வழிகாட்டிகளாகவும் இருந்திட வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.


2. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பின்பற்றித் தங்களை வெறும் மக்களை ஆளுகின்ற ஆணவ வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற நல்ல மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  எங்களை பராமரித்து பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ,  இத்தலைமுறையினர் பெரியவர்களின் மேன்மையை உணர்ந்து அவர்களை பாதுகாக்க தேவையான அருளை பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..


4. தந்தையும் தாயும் ஆன வல்லரே எம் இறைவா!  எம் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் அரசுதேர்வு எழுதப்போகும் அனைத்து மாணவ மாணவியர்களை உம் பாதத்தில் வைக்கின்றோம். அவர்கள் பயம், கவலை, மறதி போன்ற தீயசக்திகளிடமிருந்து விடுவித்துஞானத்தோடு செயல்பட, எதிர்காலத்தின் கனவுகள் நினைவாகிட உம் ஆவியின் வல்லமையை பொழிந்திட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.



www.anbinmadal.org










No comments:

Post a Comment