Tuesday, July 18, 2017

பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2017

* (பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு 23.07.2017) *

*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*


சாலமோனின் ஞானம். 12:13, 16-19

உரோமையர் 8: 26 -27
மத்தேயு 13: 24-43


 *முன்னுரை*


அன்புடையீர்,
இன்று பொதுக்காலம் ஆண்டின் 16ஆம் ஞாயிறு. நல்ல விதைகளாய்ப் பலன் தரும் சீடர்களாய் மானிட மகனின் அருளாசி வேண்டி இவ்வாலயத்திற்கு வருகை வந்துள்ள உங்கள் அனைவரையும் நூற்றூக்கு நூறு பலம் தரும் அன்பர்களாய் மாறிட மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
மீண்டும் உவமைகளின் மூலம் பேசும் இறைமகன் தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால், தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன் இவ்வுலகில் பலன் தரும் கதிர்களாய் வாழ்ந்திட நம்மை மீண்டுமாய் அழைக்கின்றார். அதற்கான செயல் திட்டங்களாக உள்ளவை (1) நம் விசுவாசத்தை இன்னும் உறுதியோடு வளர்த்தல் , (2) மற்றவர்களின் மன மாற்றத்திற்கு அழைத்தல். (3) உண்மையான கிறிஸ்துவ வாழ்வு வாழ்ந்துச் சமூகத்தை மாற்றுதல். இன்றைய நற்செய்தியில், இயேசுவும் உவமைகள் மூலம் இதே மூன்று குறிக்கோளை நமக்குப் போதிக்கிறார்.
வெறுப்பு, வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல், அன்பு, அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரத்தை இத்திருப்பலியில் அமைதியின் இளவரசனாம் இயேசுவிடம் வேண்டுவோம்.



*வாசகமுன்னுரை*



*முதல் வாசக முன்னுரை*


கடவுள் நீதியுள்ளவர் என்றும், எல்லார் மீதும் இரக்கம் உள்ளவராய் இருக்கிறார் என்றும், சரியான தீர்ப்பு வழங்குவார் என்றும் எடுத்துரைக்கிறது. எனவே நீதிமான்கள் மனிதநேயம் கொண்டு மக்களை நடத்த வேண்டும், என்றும் கடவுள் மன்னிப்புக் கேட்டும் எவருக்கும் தவறாமல் மன்னிப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ள சாலமோனின் ஞானநூலிருந்து எடுக்கப்பட இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை* 


தெளிவான கண்ணோட்டத்தை உரோமைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவும், தூயஆவியின் செயலைப் பற்றித் தெளிவாக அவர்கள் புரிந்துக் கொள்ளவும் எழுதுகிறார் திருத்தூதர் பவுல். தூய ஆவியானவர் நமக்குப் புதுவாழ்வைத் தருகின்றார். எனவே நம்பிக்கைக் கொள்வோர், பாவம், சாவு இவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர். மேலும் நம் ஒவ்வொருவருக்காகவும் தூய ஆவியார் கடவுளிடம் பரிந்துப் பேசுகிறார். தூய ஆவியைப் பெறுவதன் மூலம்தான் நாம் கடவுளின் பிள்ளைகளாக மாற முடியும் என உரோமை மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.



*பதிலுரைப்பாடல்*

திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர். 


என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

*மன்றாட்டுகள்*


1. ஞானத்தின் தொடக்கமே எம் இறைவா! உம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள ஆகிய அனைவரும், தம் சொல்லாலும், செயலாலும் உண்மைக்குச் சான்று பகர,  திருப்பலியில் தன்னை மறைத்து இறைமக்களுக்கு மறுகிறிஸ்துவாகப் பிரதிபலிக்கவும், எடுத்துக்காட்டான வாழ்வு வாழவும் தேவையான ஞானத்தைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. படைப்பின் நாயகனே எம் இறைவா! இவ்வுலகம் உம் இறைவெளிப்பாடு என்பதனை நாங்கள் அனைவரும் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவிப் புரியவும், இருப்பவர்கள் இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழவும், அன்பு, மகிழ்ச்சி. பரிவு இவை இன்று மனிதசமுதாயத்தில் நலிவடையாமல் பிறருக்கு உதவிபுரியவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

3. குழந்தைகள் விண்ணரசின் சொந்தங்கள் என்று மொழிந்த எம் இறைவா, எம் குழந்தைகள், இளமையில் அதிகமாக உம்மைத் தேடவும்., உம் வர்த்தைகளை வாழ்வாக்கி, தம் சொல்லாலும் திருஅவைக்கும், மனிதகுலச் சமுதாயத்திற்கும். சான்றுப் பகரும் வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

4. . இளைஞனே எழுந்திரு, எழுந்து ஒளி வீசு என்றவரே! எம் இறைவா! இவ்வலகத் தலைவர்கள் தங்கள் வாழ்வால் எடுத்துக்காட்டான வாழ்வை, பெரும்பாலும் அவர்களால் கொடுக்க முடிவதில்லை. நீரோ, உம் சொல்லும், செயலும் விண்ணகத் தந்தையோடு இணைந்திருந்தது போல, எம் இளையோர் அனைவரும் உம் வார்த்தையை வாழ்வாக்கி, உப்பாக உலகிற்கு ஒளியாகத் திகழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களின் தலைவரே எம் இறைவா! இன்றைய நவீன வாழ்விலொன்றுக் கூடிச் செபிக்கவும், உரையாடவும், உறவுகளை மேம்படுத்தவும், மதிக்கவும் நாங்கள் மறந்திருக்கின்றோம். நீர் கொடுத்த இந்த உறவுகள் உண்மையான, மகிழ்ச்சி நிறைந்த வாழ்வை வழங்கிடவும், குடும்பங்களில் கூடிச் செபிக்கவும், இறை அழைத்தலை அதிகமாக ஊக்குவிக்கவும், எம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாக மாறிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்..

www.anbinmadal.org


No comments:

Post a Comment