Wednesday, July 11, 2018

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

                                    *ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு *

 



*இன்றைய வாசகங்கள் *


ஆமோஸ் 7: 12-15
எபேசியர் 1:3-14
மாற்கு 6: 7-13

திருப்பலி முன்னுரை


இறைஇயேசுவில் அன்பார்ந்தவர்களே! ஆண்டின் பொதுக்காலம் 15 ஆம் ஞாயிறு ஆன இன்று நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் தாம் என்று உணர்த்துகின்ற இன்றைய வாசகங்கள், நம் அனைவருக்குமே தேவையான பாடங்களைச் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.

போலி இறைவாக்கினர்கள் மத்தியில் ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு, வாழ்வைத் தேடுவது வேறு என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்க்கைப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள் இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர் தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவர முடியும். சுயநலத்தில் சிக்குண்டுச் சின்னாபின்னமாகியுள்ள நம் உலகிற்கு, இணைந்துச் செயல்படுவதாலேயே சாதிக்க முடியும் என்று இயேசு சொல்லித்தரும் இந்தப் பாடம் மிகவும் தேவை. 


காலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு நம்மை இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை ஏற்று இறைவனின் பணியாளராய் வாழ உறுதி கொண்ட நெஞ்சமும், அன்பு நிறை உள்ளமும் வேண்டி இத்திருப்பலியில் இறைவனை இறைஞ்சிடுவோம் வாரீர் உறுதியுடன்....


வாசக முன்னுரை



முதலாம் வாசக முன்னுரை

 
 ஆடு மாடுகளை மேய்த்து வந்த அப்பாவியாகிய ஆமோஸை இறைவன் அழைத்து பெத்தேலில் இறைவாக்கு உரைக்க அனுப்புகிறார். அங்குள்ள குரு அமட்சியா தன் பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதாக  உணர்ந்து ஆமோஸை நாட்டைவிட்டே விரட்ட முற்படுகிறார். ஆனால் இறைவனால் அவர் பணிக்கு முன்குறித்த ஆமோஸ் அங்கே தன் பணியைத் தொடங்குகிறார். ஆமாஸின் இறைவாக்குப்பணிக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தை கேட்டு நமது இறைஅழைப்பை நாமும் உணர்ந்து செயல்படுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

 
 கடவுள் நம்மை முன்குறித்துள்ளது நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர்திருமுன் விளங்கும்படி கிறிஸ்துவின் வழியாக நம்மை தேர்ந்தெடுத்துள்ளார். கிறிஸ்துவின் இரத்ததால் நமக்கு மீட்பு தந்துள்ளார். நாமும் நமக்கு  மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, நம்பிக்கையின் மூலம் தூயஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளோம். அந்த தூயஆவியால் மீட்படைவோம் என்பதை அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.



பதிலுரைப் பாடல்


திபா 85: 8-9. 10-11. 12-13

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

 
1.வாழ்க்கையில் வீழ்ந்த மக்களைத் தூக்கிவிடும் கிறிஸ்துவின் கரங்களாக, காணாமல்போன ஆடுகளைத் தேடி அலையும் கிறிஸ்துவின் கால்களாக, ஏழைகள் ஆதரவற்றோர் அழுவோரின் குரலைக்கேட்டு ஆறுதல் தர கிறிஸ்துவின் குரலாக, நீதிக்காகச் சமத்துவத்திற்காக சமுதாயத்தில் குரல் கொடுக்க எம் திருஅவையிலுள்ள அனைவரும் ஒருமனதோராய் பணியாற்றிட தேவையான அருள்வரங்களை தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

2.  காலங்களைக் கடந்த எம் இறைவா! எம் நாட்டில் உள்ள இளையோர் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஒப்பற்ற நாயகனே எம் இறைவா! இன்றைய நவீன உலகில் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 

 4. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கிலும், எம் குடும்பங்களிலும் உள்ள. எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வும், அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
.
5.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம். 



www.anbinmadal.org

No comments:

Post a Comment