Tuesday, November 20, 2018

கிறிஸ்து அரசர் பெருவிழா

கிறிஸ்து அரசர் பெருவிழா


இன்றைய வாசகங்கள்



தானியேல்     7:13-14
திருவெளிப்பாடு  1:5-8
யோவான்     18:33-37

திருப்பலி முன்னுரை:


கிறிஸ்துவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே!
இன்று திருவழிபாட்டு ஆண்டின் கடைசி ஞாயிறு. உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துஅரசரின் பெயரால் நல் வாழ்த்துக்கள்! 

உலகெங்கும் முடியாட்சி மாறி மக்களாட்சி மாறும் காலகட்டத்தில் நாம் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

பிலாத்துக் கிறிஸ்துவிடம் 'நீ யூதர்களின் அரசரா?' என்று கேட்டப்போது அவர் 'என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல' என்று கூறினார். அவர் உலக மக்களுக்காகத் தன்னையே கொடுத்து நிலையாட்சிக்கு அழைத்துச் செல்லவே வந்தார்.

அவர் நம் அரசர். ஆம்! ஏழ்மையின் அரசர். அன்பின் அரசர்! பணிவின் அரசர்! தாழ்ச்சியின் அரசர்! எனவே தான் அவர் மாளிமையில் பிறக்கவில்லை. தன் சீடர்களின் கால்களைக் கழுவிப் பிறர்க்குப் பணிச் செய்து தன் அன்பின் ஆட்சியை அறிவித்தார். அவரது ஆட்சியுரிமை என்றுமுளதாகும்: அதற்கு முடிவே இராது: அவரது அரசு அழிந்துப் போகாது.

மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்: இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே. தொடக்கமும் முடிவும் ஆன அவரின் வருகையை எதிர்கொள்ள நம்மையே நாம் தயாரிக்க அவரோடு மனம் ஓன்றித்து இன்றைய திருப்பலி வழிபாட்டுக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு மன்றாடுவோம். இந்த வழிபாட்டு ஆண்டில் நாம் பெற்ற ஆசீர்களுக்காக நன்றி கூறுவோம்.

வாசக முன்னுரை:


 முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் தானியேல் தான் கண்டக் காட்சி இங்கே விவரிக்கிறார். மானிட மகனின் வருகையையும், கடவுளின் அரசு எத்தகையது? யாருக்குரியது? அஃது எப்படி இருக்கும்? என்பதைப் பற்றி எடுத்துரைக்கிறார். மானிடமகன் முடிவற்ற அரசையும் மகிமையையும் பெறுகின்றார். இறையரசைப் பற்றிய நம்பிக்கையைத் தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் தனது திருவெளிப்பாடு நூலில் இயேசுவை மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர் என்று அறிவிக்கிறார். இயேசுவின் தலைமை என்பது அன்பின் வழி விடுதலைப் பெற்றுத் தருவதாகும். கிறிஸ்து அரசர் தன்னை முதன்மைப்படுத்தி மக்களை வாழ வழிவகுத்தார். மக்கள் அரசைரைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் கிறிஸ்து அரசரோ மக்களைத் தேடிச்சென்றார். இதனைத் தெளிவுப்படுத்தும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


 பதிலுரைப் பாடல்


திபா 93: 1. 1-2. 5

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார் அது அசைவுறாது. உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி

உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை ஆண்டவரே!  என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக!  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்புத் தந்தையே எம் இறைவா! திருஅவையில் தலைமைஆயர் தொடங்கிப் பொதுநிலையினர் வரை திருஅவைக்காக உழைத்தவர்கள், இன்றும் உழைக்கின்றவர்கள், உழைத்து மரித்தவர்கள் அகிய அனைவரையும் உமக்கு அர்ப்பணிக்கின்றோம். அவர்களின் ஆன்மீகக் கருத்துக்கள் ஈடேற்றம் அடைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.நாட்டை ஆளும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைப் பின்பற்றித் தங்களை வெறும் மக்களை ஆளுகின்ற வர்க்கமாக இல்லாமல், மக்களின் பணிசெய்வதற்கே என்ற மனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.இப்பொழுது எம் தமிழகத்திலுள்ள கஜா புயலால் பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் தங்கள் இருப்பிடம் இழந்து, உறவுகளை இழந்து, வேதனையில் தவிக்கும் எம் சகோதர, சகோதரிகளுக்கு நீரே ஆறுதலாய் இருந்து, அவர்களைத் தேற்றி, மீண்டும் பழைய இயல்பு வாழ்க்கைத் திரும்ப வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது என்று கூறிய எம் இறைவா இந்த மழையினால் டெங்குகாய்ச்சல், காலரா போன்ற தொற்று நோயிகள் பரவாமல், குழந்தைகளை நிறைவாக ஆகீர்வதித்து அவர்களை உம் சிறகுகளின் கீழ் அரவணைத்த பாதுகாத்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கிறிஸ்து அரசர் பெருவிழா ஆன இன்று யாரும் நினையாத உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருக்கின்ற ஆன்மாக்கள் அனைவரையும் உம் பாதத்தில் அர்ப்பணிக்கின்றோம். அவர்கள் அனைவரையும் விரைவாக உம் இல்லத்தில் அழைத்து, பரிசுத்தர்கள் கூட்டத்தில் சேர்த்து, உம்மைப் போற்றிப் புகழ வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org

No comments:

Post a Comment