Monday, June 24, 2019

பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறு



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*


I. 1 அரசர் 19:16,19-21
II. கலாத்தியர் 5:1,13-18
III. லூக்கா 9 : 51-62


*திருப்பலி முன்னுரை*:


பொதுக்காலம் ஆண்டின் 13ஆம் ஞாயிறைக் கொண்டாடத் திருஅவை அழைக்கும் இவ்வேளையில் நம் ஆலயத்தில் ஒருமனதோராய்க் குழுமியிருக்கும் இறைமக்களாகிய உங்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.

கலப்பை, நுகம் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களை அலங்கரிக்கும் சொற்கள். இன்றைய முதல் வாசகத்தில், கலப்பைப் பிடித்து உழுது கொண்டிருந்த எலிசாவைத் தேடி வந்து தன் சீடராக எடுத்துக் கொள்கின்றார் இறைவாக்கினர் எலியா. கிறிஸ்துவில் உயிர்பெற்றெழுந்த கலாத்திய திருஅவை மக்கள் மீண்டும் அடிமைத்தனம் என்னும் 'நுகத்தை' ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று இரண்டாம் வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் பவுல். நற்செய்தி வாசகத்தில் 'கலப்பையில் கைவைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என இறையாட்சிக்கான சீடத்துவத்தின் பண்பு பற்றிச் சொல்கின்றார் இயேசு.

கலப்பைக் களத்தில் இறங்கினால்தான் கலப்பையின் நோக்கமும், உழுபவரின் நோக்கமும், விவசாய நிலத்தின் நோக்கமும் நிறைவேறுகிறது. இவைகளின் நோக்கம் நிறைவேறவில்லை என்றால் விதை விதைப்பதும், விதை விளைச்சல் தருவதும் சாத்தியமல்ல.

நம் சிந்தனையில்/ இறைவார்த்தைகளால் நம் உள்ளத்தை உழுது/ நிலைவாழ்வு என்னும் விளச்சலை அடைய,/ ஈடுபாடு உள்ளக் கிறிஸ்துவ வாழ்வை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள/ இத்திருப்பலிக் கொண்டாடங்களில் உளமாறப் பங்குக்கொண்டு செபிப்போம்.


*வாசக முன்னுரை*:


*முதல் வாசக முன்னுரை*:


இன்றைய முதல் வாசகம் எலிசா இறைவாக்கினராக அருட்பொழிவு செய்யப்பட்டதைப் பற்றிக் கூறுகிறது. எலிசாவின் மீது போர்வையைப் போட்டு எலியா அவரை அழைத்தபோது அவருக்கு முன் இரண்டு வழிகள் இருந்தன. ஒன்று  தன்னுடைய பழைய விவசாய வாழிவிவேயே நிலைத்திருப்பது அல்லது அனைத்தையும் இழந்தவிட்டு இறைவனுக்குப் பணியாற்ற முன் வருவது. எலிசா இறைஅழைத்தலை ஏற்றார். இறைஅழைத்தலை ஏற்க நம்மை அழைக்கும் இந்த வாசிகத்திற்குக்  கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:


 இன்றைய இரண்டாம் வாசகத்தில் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர் பெற்றுள்ள உரிமை வாழ்வு பற்றி பேசும் திருத்தூதர் பவுலடியார், அந்த உரிமை வாழ்வில் இணைந்த ஒருவர் தான் கொண்டிருந்த இறந்த காலத்தை, அந்த அடிமை வாழ்வை, அதற்குத் துணை போகும் ஊனியல்பை முற்றிலும் தூக்கி எறிய வேண்டும் என அறிவுறுத்துகின்றார். தூயஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப நாம் வாழ முற்படும்போது நமது அழைப்பை உணர்ந்து நடக்கிறோம் என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கருத்துடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப் பாடல்*


திபா 16: 1-2, 5. 7-8. 9-10. 11
*பல்லவி: ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து*.

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன்.  ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.  ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி


 *நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! “ஆண்டவரே பேசும். உம் அடியான் கேட்கின்றேன். நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன ”.  அல்லேலூயா


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:


1. அன்புத் தந்தையே! எம் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் பாகுபாடு இன்றி / கிறிஸ்துவின் மாண்பிலும், மகத்துவத்திலும், இறையாட்சிப் பணியில் நிலைத்து நின்றும்,/ தமது சொல்லாலும், செயலாலும் சான்றுப் பகிர்ந்திடவும்,/ உம் எளிய நுகத்தை மகிழ்வுடன் ஏற்ற வாழ வரமருள / வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளைத் தேடிவந்த எம் அன்பு தெய்வமே! இன்றைய உலகில் பாவத்தைக் குறித்த பயமோ கவலையோ / அச்ச உணர்வற்ற இக்காலத்தில் / அறிவியல் முன்னேற்றங்கள் போன்ற / சில மாயைகளை மனத்திலிருந்து விலகி, / உம்மோடு ஒப்புறவாகத் தூய மனச்சான்றுடன்/ எங்கள் சொல்லாலும்,/ செயலாலும் வாழ்ந்திட / எங்களை நல்வழிக் கொணர /வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நல்ஆயனே எம் இறைவா! புதிய கல்வியாண்டில் நுழையும் எம் இளையோர் அனைவரையும் உம் பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் தொழில் முன்னேற்றங்கள் இவைகளால் ஏற்படும் அறிவு சார்ந்த செயல்களில் / தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இறைஅச்சம் குறைந்தவர்களாய்/ தங்கள் வாழ்வை இழக்காமல் உண்மையை உணர்ந்தவர்களாக / வாழத் தேவையான அருளைப் பொழிய / வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நலன்களின் நாயகனே எம் இறைவா! இன்றைய உலகில் பரவிவரும் புதிய நோய்கள், புதிய மருந்துகள் இவைகளினால் மனுகுலம் வலுவிழந்து / பாவத்தினால் வரக்கூடிய வியாதிகளிலிருந்து / உமது குணமளிக்கும் ஆற்றலினால் / நாமே உம்மைக் குணமாக்கும் ஆண்டவர் /என்ற இறைவார்த்தைக்கு ஏற்ப / எம் மனிதச் சமுதாயத்தை/ உம் இரக்கத்தினால் தொட்டுக் குணமளிக்க / வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம் இறைவா! எம் வாழ்வில் நாங்கள் சந்தித்த அனைத்துப் போராட்டங்களும், / படும் வேதனைகளும் /எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கும் வெற்றிவாகை /என்பதைனை உணர்ந்து / குடும்பவாழ்வில் தனிமை, வருத்தம், நெருக்கடி, தோல்வி, வேதனை / இவைகளிலிருந்து மீண்டும் எழுந்திட / குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் தழைத்தோங்க /வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment