Monday, November 18, 2019

கிறிஸ்து அரசர் பெருவிழா

*பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு *

*கிறிஸ்து அரசர் பெருவிழா*


*இன்றைய நற்செய்தி வாசகங்கள்*

2 சாமுவேல் 5:1-3
கொலேசையர் 1:12-20
லூக்கா 23: 35-43

*திருப்பலி முன்னுரை*

கிறிஸ்து அரசரின் அன்பில் வளர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவைத் தாய்த் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவின் திருப்பாடுகளின் நினைவுக் கூறப்படுகின்ற வேளையில் அன்று “நீ யூதரின் அரசனானால் உன்னையே நீ விடுவித்துக் கொள்“ என்று எள்ளி நகையாடியக் காட்சியை நாம் நினைவுகூறுகின்றோம். “இவர் யூதர்களின் அரசன்” என்று கிறிஸ்து அரசருக்கு அன்றே முடிச் சூட்டி அவரது சிலுவையில் எழுதி வைத்தார்கள். அதனை நினைவுகூறும் வகையில் பொதுக் காலம் இறுதிநாளில் கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். என்றும் அரசர் கிறிஸ்துவின் பெயரைச் சொன்னால் மூவுலகமும் ஆர்ப்பரிக்கும். கிறிஸ்து அரசர் பெருவிழாப் பொருளுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் அமைந்திருக்கின்றது என்பதை நமது மனதில் பதிவு செய்து திருவருகைக் காலத்தை வரவேற்க ஆயத்தமாவோம்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடும் நாம் இயேசுவை நம் தலைவராக ஏற்று ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெற இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்துக் கிறிஸ்து அரசரின் நல்லாசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

*வாசக முன்னுரை*

 

*முதல் வாசக முன்னுரை*


தாவீதை இஸ்ரயேலின் அரசராக இஸ்ரயேலின் பெரியவர்கள் திருப்பொழிவுச் செய்கின்றனர். அரசர் என்பவர் ஆள்பவர், தலைவர், வழிகாட்டி, வழிநடத்துபவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். ஆள்பவர்கள் சுயநலமில்லாமல் ஆண்டவரின் உதவியோடு தலைமைத் தாங்கி வழிநடத்தும் நல்ல ஆயனாகச் செயல்பட முன்வர வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*


பிளவுகளும், பரிவுகளும் ஏற்படுவதைத் தவிர்த்து இயேசுவை முன் மாதிரியாக் கொண்டு தன்னையே அர்ப்பணித்த உடைந்துபோன உறவுகளைப் புதுப்பித்து ஒப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும். இந்தக் கருத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. புனித பவுலடியாரின் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நாமும் இறையரசில் நுழைவோம்.

*பதிலுரைப்பாடல்*

*அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.*
திருப்பாடல் 122: 1-2, 4-5

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்  எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். *பல்லவி*

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.  அங்கே நீதி வழங்க அரிணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். *பல்லவி*

*நற்செய்திக்கு முன் வாழ்த்துரை*

 

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப் பெறுக. வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப் பெறுக! அல்லேலூயா.


*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*


1.    உலகைப் படைத்தாளும் இறைவா! உமது திருஅவையிலுள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவைத் தம் இதய அரசராக ஏற்று, அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.    அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! நம் பங்கிலுள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது மகத்துவத்தை அறிந்து உம்மைத் தங்கள் இல்லங்ளின் அரசராக ஏற்றுத் தங்களின் வாழ்க்கை முறையால் தமக்கு அருகில் இருப்போருக்கு உம் இறையரசின் சாட்சிகளாய் வாழ்ந்துக் காட்டிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.    அன்புக்கும் ஒற்றுமைக்கும் ஊற்றான இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இஸ்ரவேலின் மேய்ப்பரே எம் இறைவா! இறைமகன் இயேசுவுடன் சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளியின் வேண்டுகோளைக் கேட்டது போல எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். நாங்கள் அனைவரும் ஒரு நாள் உமது இல்லம் வந்தடைய தேவையான எல்லா வரங்களையும் தூயஆவியின் வழியாக அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment