Saturday, April 13, 2024

பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு


இன்றைய திருப்பலியின் வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 3:13-15, 17-19
1 யோவான் 2:1-5
லூக்கா 24:35-48

திருப்பலி முன்னுரை

வெற்றி வேந்தனாம் உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசுவின் பெயரால் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு.
நம்‌ ஆண்டவர்‌ உயிர்த்த பின்‌ தன்‌ சீடர்களுக்குக்‌ காட்சித்‌ தந்தார்‌. அவர்களோ ஐயோ! இது ஆவி என்றெல்லாம்‌ அச்சம்‌ அடைந்து நடுங்கினார்கள்‌. இயேசு காட்டிய அடையாள அட்டை என்ன? என்‌ கைகளைப்‌ பாருங்கள்‌. கால்களைப்‌ பாருங்கள்‌. என்னைத்‌ தொட்டுப்‌ பாருங்கள்‌, எனக்கு எலும்பும்‌ தசையும்‌ இருப்பதைக்‌ காண்கிறீர்களே! இவை ஆவிக்குக் கிடையாதே என்றார்‌ (லூக்‌. 24:89). என்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌ என்று இயேசு கூறவில்லை. தன்‌ கைகளிலும்‌, கால்களிலும்‌ ஏற்பட்டத்‌ தழும்பைப்‌ பார்க்கும்படி சொல்கிறார்‌. ஏனெனில்‌ மகிமையுடன்‌ உயிர்த்த நம்‌ ஆண்டவர்‌ இயேசு பாடுகளின்‌ தழும்புகளுடன்‌ உயிர்த்தார்‌ என்பதை ஒருபோதும்‌ மறக்க முடியாது. அவரது விழுப்புண்கள்தான்‌ நமக்கு வாழ்வு தந்தது.
உயிர்த்த இயேசு பலஉருவங்களில் காட்சியளித்தார். ஆனால் சீடர்கள் மந்த‌ புத்தியுடன்‌ மதி மயங்கியவர்களாக இருந்தார்கள்‌. எனவே அவர்கள் இயேசுவை கண்டுக்கொள்ளவில்லை. அவர்களின் மனக்கண்களை திறந்தார். தன்னைப் பற்றிய மறைநூலில் கூறப்பட்டவைகளை கூறி இவைகள் அனைத்துக்கும் நீங்கள் சாட்சிகள் என்று அறிவிக்கின்றார்.
மனமாற்றம் காண்போம். இயேசுவின் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்…

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர்‌ பேதுரு அச்சம்‌ நீங்கித் துணிவு பெற்றவராய்‌ குற்றமற்ற இயேசுவை யூத மக்கள்‌ சிலுவைச்‌ சாவுக்குக்‌ கையளித்துப்‌ பாவம்‌ செய்துள்ளனர்‌ என்பதைச்‌ சுட்டிக்காட்டி மனம்‌ மாறி இயேசுவிடம்‌ திரும்பி வர அழைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்குச்‌ செவிகொடுப்போம்‌.  

பதிலுரைப் பாடல்

திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)
பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே. அல்லது: அல்லேலூயா.
எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி
‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். - பல்லவி
இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இயேசுவே நம்‌ பாவங்களுக்குக்‌ கழுவாய்‌ என்றும்‌, கடவுளின்‌ கட்டளைகளின்படி நடப்போர்‌ கடவுளிடம்‌ அன்பு கொண்டு அவரோடு இணைந்து வாழ்பவர்‌ என்றும்‌ அவரைப்‌ பற்றி அறிந்தும்‌ அவருடைய கட்டளைகளைக்‌ கடைப்பிடியாதோர்‌ பொய்யர்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ திருத்தூதர்‌ யோவானின்‌ இரண்டாம்‌ வாசகத்திற்குச்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம்பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவையில் அதன் பணியாளர்களாகிய திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நன்மையின்‌ இறைவா ! எம்நாட்டைச் சீர்மிகு வழியில்‌ நடத்திச்‌ செல்லவும்‌, நாட்டின்‌ வளங்களைப்‌ பாதுகாத்து மக்கள்‌ அனைவருக்கும்‌ உணவு, உடை, உறையுள்‌ கிடைக்கச்‌ செய்யவும்‌, மனித நேயமுள்ள நல்ல ஆட்சியாளர்களைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.
3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. இறைவா! ௨ம்‌ மக்களாகிய நாங்கள்‌ நீர்‌ அளித்துள்ள வாழ்வுதரும்‌ நற்செய்தியை நாள்தோறும்‌ படித்துணர்ந்து எங்கள்‌ வாழ்க்கையின்‌ மூலம்‌ மிகச்‌ சிறப்பாக நற்செய்தியை உலகுக்கு அறிவிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF


1 comment:

  1. Really disappointed in the delay of the uploading of mass intro and prayers of the faithful.

    ReplyDelete