Tuesday, April 29, 2025

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19

திருப்பலிமுன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின்போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடிய சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பை தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்கு பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:

திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. அனைத்திற்கும் மேலாக உம்மீது கொண்ட அன்பை உறுதிச் செய்தபின், “என் ஆடுகளை மேய்” எனச்சொல்லி, பேதுருவிடம் தலைமைப்பணியை ஒப்புவித்த இறைவா, புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யக் கூடியிருக்கும் கர்தினால்களை, தூய ஆவியாரால் வழிநடத்தி, காலத்திற்கு ஏற்ற நல்ல திருஅவைத் தலைவரை எங்களுக்குத் தந்தருளும்படியாக, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என அனைத்துலகப் படைப்புகளாலும் ஆராதிக்கப்படுகிற, அரியணையில் வீற்றிருப்பவரான ஆட்டுக்குட்டியே, எம் இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், போருக்கு முனைப்புக் காட்டுவதைத் தவிர்த்து, உயிர்த்த ஆண்டவரின் கொடையான அமைதியை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், அதே நேரம், தீவிரவாதமும் பயங்கரவாதமும் முற்றிலும் ஒழிந்துபோக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்கிற தெளிவான உறுதியோடிருந்த திருத்தூதர்களைப் போல, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, இறைத் திருவுளப்படி வழிநடத்தவும், இளையோர் யாவரும், தங்கள் மேல்படிப்பு, பணியமர்வு, திருமணம் போன்றவற்றைத் தெரிவுச் செய்வதில், உமக்குக் கீழ்ப்படிவதன் மூலம், வாழ்வில் உயர்வு காணவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்” மகிழ்ச்சியுற்ற திருத்தூதர்கள் அடிச்சுவட்டில், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவருமே, எங்கள் துன்ப துயரங்கள், வேதனை, சோதனைகள் நடுவிலும், “ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு” என மெய்ப்பிக்கும் விதமாக, பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வினை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கருணைக் கடலாகிய இறைவா, வெய்யில் கால வெக்கையைச் சற்றே தணிக்கவும், நோயற்ற நல்வாழ்வை எமக்குத் தரவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF

Tuesday, April 22, 2025

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:12-16
திருவெளிப்பாடு 1:9-11அ,12-13, 17-19
யோவான் 20:19-31

முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா கால இரண்டாம் வாரத்திற்கு வந்துள்ளோம். இறைஇரக்க ஞாயிறு என்றும் இன்று அழைக்கப்படுகின்றது. இறைஇரக்கத்தை நாடி ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

இறந்து உயிர்த்த இயேசு முதல் முதலாகத் தன் சீடத்தி மதலா மரியாவின் வழியாகத் தனது உயிர்ப்பை உறுதிச் செய்து விட்டுக் கலிலேயாவில் தன் சீடர்களைச் சந்திக்கச் செல்லுகிறார். இயேசுவின் மரணத்திற்குப் பின் மற்ற சீடர்கள் பயந்திருக்கத் துணிவோடு வெளியே சென்று வந்த தோமையார் மூலம் மீண்டும் தன் உயர்ப்பை அறிக்கையிடச் செய்கிறார். நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்! என்று போற்றி ஆண்டவரைக் கண்டு கொண்ட தோமையார் மூலம் காணாமல் இயேசுவை நம்பும் நம்மை எல்லாம் பேறு பெற்றோர் என்று வாழ்த்துகின்றார்.

இயேசுவைச் சந்தித்த பலரும் தாங்கள் வாழ்க்கையில் பெரியதோர் மாற்றத்தை அடைந்தது போல நாமும் அவர் பெயரில் நம்பக்கைக்கொண்டு அவரின் பேரிரக்கத்தைப் பெற்று அவரின் சாட்சிகளாக வாழ வரம் வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாட்டங்களில் நிறைவாய் பங்கேற்போம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகைக்குப் பின் துணிவுடன் இயேசுவுக்குச் சான்றுப் பகர்ந்தத் திருத்தூதர்களின் வாழ்க்கை முறைப் பற்றிப் பதிவுச் செய்கின்ற லூக்கா, அவர்கள் வழியாக நடந்தேறிய அருஞ்செயல்கள் மற்றும் அரும் அடையாளங்கள் பற்றியும் இயேசுவுக்கும், திருத்தூதர்களுக்குமான இடைவெளியை மிக அழகாகப் பதிவு செய்கின்றார். தொடர் ஓட்டத்தில் ஓடுவதுபோலக் கையில் இறையாட்சி என்னும் தீபத்தை எடுத்துக் கொண்டு ஓடிய இயேசு, அதைத் தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டார். நிழலாக இன்றும் தொடர்கின்றார். இதனை விளக்கும் முதல் வாசகமான திருத்தூதர் பணிகளின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 118:2-4, 22-24, 25-27அ

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

1.`என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!  `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! -பல்லவி

2.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!  ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். -பல்லவி

3.ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

பத்முதீவுக்கு நாடுகடத்தப்படும் திருத்தூதர் யோவான் கிறிஸ்துவைக் காட்சியாகக் காண்கின்றார். அவரைக் கண்டபோது அவரிடம் எழுந்த உள்ளுணர்வுகளையும், இந்தக் காட்சியை எழுதி வைக்குமாறு அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளையையும், இயேசு உயிர்த்தபின் மனித நிலையிலிருந்து மாறி, இறை நிலையில் உயர்ந்து நிற்பதையும் நாம் இரண்டாம் வாசகத்தில் அறிகின்றோம். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு நூலிருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. உயிர்ப்புப் பெருவிழாவின் அடுத்த நாளிலே, இவ்வுலக வாழ்விலிருந்து நிலைவாழ்வுக்குக் கடந்து சென்றுள்ள எமது மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன்” என்று யோவானுக்குத் தன்னை வெளிப்படுத்திய, என்றென்றும் வாழ்பவரான இயேசுவின் இரக்கப்பெருக்கினால், புனிதர்களின் திருக்கூட்டத்தில் சேர்ந்து அகமகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒருமனத்தவராய்க் கூடி வந்ததை விவரிக்கும் முதல் வாசகத்திற்கு ஏற்ப, தாயாம் திரு அவையானது ஒருமனப்பட்ட திருக்கூட்டமாய், புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்ய, தூய ஆவியார் துணை புரிய வேண்டுமென்றும், திருஅவைத் தலைவர்களும் இறைமக்களும், ‘ஒரே ஆயன், ஒரே மந்தை’ என்கிற மனநிலையோடு பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறை இரக்கப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில், உமது பேரிரக்கத்தை நாங்கள் அனுபவிக்க வேண்டுமென்றும், தொடக்கக் காலத் திரு அவையை வளர்த்தெடுத்து உறுதிப்படுத்த, நீர் ஆற்றிய அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும், இன்றைக்கும் தொடர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு” என்கிற திருப்பாடல் வரிகளை, நாங்கள் எந்நாளும் பறைசாற்றுகிற வண்ணம், எங்கள் வாழ்வின் குறைகள், நோய்கள், பிணிகள், பிணக்குகள், வறுமை, வாட்டம், அனைத்தும் நீங்கப் பெற்றவர்களாய், உயிர்த்த ஆண்டவரின் உன்னத வழிநடத்துதலில், எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாங்கள் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொள்” என்கிற உம் அழைப்பினை ஏற்று “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்” என்று அறிக்கை செய்த தோமாவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நம்பிக்கையில் உறுதி பெற வேண்டுமென்றும், உமது உயிர்ப்பின் கொடையாகிய அமைதியினை, எங்கள் வீடும், நாடும், நாங்கள் வாழ்கிற இவ்வுலகும், அனுபவிக்க வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

6. எம்வாழ்வின் வழிகாட்டியான இறைவா! தங்கள் பள்ளிப்படிப்புக்களை முடித்து விட்டு மேற்படிப்பிற்காகக் கல்லூரிகளில் இடம் தேடி அலையும் எம் இளையோர், சிறந்த வழிகாட்டிகளின் மூலமாகத் தாங்கள் விரும்பும் கல்வியினைப் பெற்று, பெற்றோருக்கும், திருஅவைக்கும், நாட்டிற்கும் உவந்தவர்களாகத் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


Print Friendly and PDF


Wednesday, April 9, 2025

புனித வார நிகழ்வுகள்-2025

 புனித வார நிகழ்வுகள்-2025




புனித வார நிகழ்வுகள்-வாசகங்கள்-மன்றாட்டுகள்-திருச்சடங்கு முறைகள்

 

 

குருத்து ஞாயிறு  13/04/2025

 


பெரிய வியாழன் |  17/04/2025
ஆண்டவருடைய இரவு விருந்து


புனித வெள்ளி | 18/04/2025
ஆண்டவருடைய பாடுகள் வெள்ளி


பாஸ்காத் திருவிழிப்பு | 19/04/2025
பாஸ்கா ஞாயிறு/20/04/2025

 


உயிர்த்த இயேசுவின் சீன ஒவியம் 

அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா  நல் வாழ்த்துக்கள்

இறை இயேசுவின் அமைதி உங்கள் இல்லத்திலும், உங்கள் உள்ளங்களிலும்  என்றும் இருப்பதாக!

அன்பின் மடல் -நவராஜன். 9382879082