Tuesday, June 10, 2025

மூவொரு இறைவன் பெருவிழா 2025

மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31 
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இருந்தவரும்‌ இருப்பவரும்‌ வரவிருக்கின்றவருமான தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ என்னும்‌ தூய்மைமிகு மூவோரு இறைவனின்‌ பெருவிழாவை சிறப்பிக்கத் திரு அவையாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ அன்புடன்‌ வரவேற்கின்றோம்‌.

விண்ணகத் தந்தை, மனிதனாக மண்ணிற்கு வந்த இறைமகன்‌ இயேசு, துணையாளராக நமக்குத் தரப்பட்ட தூய ஆவியாரால்‌ மூவரும்‌ இணைந்து மூவொரு இறைவனாக, ஒரே கடவுளாக, ஒரே எண்ணம்‌, ஒரே சிந்தனை, ஒரே சொல்‌, ஒரே செயல்‌ என யாவிலும்‌ இணைந்தவர்களாக இருக்கிறார்கள்‌. குடும்பத்தைக் கட்டியெழுப்ப கடவுளால்‌ படைக்கப்பட்ட இறைமக்கள்‌ சமூகமாகிய நாம்‌ ஒவ்வொருவரும்‌ மூவோரு இறைவனின்‌ சாயலை நமதாக்கி வாழும்போது நமது குடும்பங்கள்‌ ஒற்றுமையின்‌ விளைநிலமாக, மகிழ்ச்சியின்‌ பிறப்பிடமாக, நன்மைகளின்‌ ஊற்றாகத் திகழும்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை நமது இறுதி நியத்தீர்ப்பின்போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கைப்படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, இருந்தவரும்‌ இருக்கின்றரும்‌ வரஇருக்கின்றவரும்‌ எல்லாம்‌ வல்லவருமான கடவுள்‌, தந்‌ைத, மகன்‌, தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத, இந்த நம்பிக்கையின் மறைபொருளை, உணர்ந்து, உள்வாங்கி, கூட்டொருங்கியக்க திருஅவையாய் விளங்குவதன்மூலம், பறைசாற்றிடத் தேவையான அருளினை, எம்திருத்தந்தை லியோ அவர்களுக்கும், ஏனைய திருஅவை தலைவர்களுக்கும், இறைமக்களாகிய எங்களுக்கும் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பூவுலகு உண்டாகுமுன்னே இருந்து செயலாற்றிய இறைவனின் ஞானம், மனித உள்ளங்களிலும், குறிப்பாக உலகத்தலைவர்கள், மற்றும் எங்கள் நாட்டுத்தலைவர்கள் மனங்களிலும் செயலாற்றி, திரித்துவக் கடவுளிடம் நாங்கள் கற்றுக்கொள்ளுகிற ஒற்றுமை, இணைந்த செயல்பாடு, போட்டிகள் துறந்து அமைதியில் நிலைத்தல், ஆகிய நற்குணங்களின்படி வாழவும், ஆளவும் வேண்டிய அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், குடும்பம் என்கிற குட்டித்திருஅவையைக் கட்டியெழுப்பிட வேண்டுமென்றும், தாய், தந்தை, கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், சுற்றம் சூழல் ஆகிய அனைவரும், மேட்டுமை எண்ணங்களை விட்டொழித்து, திரியேக இறைவனில் இருக்கிற ஒரே சிந்தனை, ஒத்துணர்வு, ஒன்றித்த செயல்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டு, அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்' என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து, அந்த உன்னத நிலையில் என்றும் நிலைத்திருக்க வேண்டிய அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் துணையுடன், “துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும்” என்றும் “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” என்றும் நம்புகிற திருக்கூட்டமாய், நாங்கள் விளங்கிட வேண்டுமென்றும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, என்றைக்குமே எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



https://anbinmadal.org

Print Friendly and PDF

No comments:

Post a Comment