Friday, October 23, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 25-10-2015

ஆண்டின்  30ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


எரேமியா 31:7-9 
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52


முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு.  இந்த ஞாயிறு  இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை அருளாளர் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் இஸ்ரயேல் மக்களை இறைவன் எப்படி வழிநடத்திச் செல்வார் என்று எரேமியா இறைவாக்குரைக்கிறார். நீரோடை - வளமை. அழுகையோடு அவர்கள் வந்தாலும், ஆறுதலோடு அணைத்துக்கொள்வார் .இறைவன் என இறைவனின் புதிய வாக்குறுதியை முன்வைக்கின்றார் எரேமியா. இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படி தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். இயேசுவுக்கு இந்த அழைப்பு கடவுளிடமிருந்துதான் வருகிறது. 'நீர் என் மைந்தர். இன்று நான் உம்மைப் பெற்றெடுத்தேன்' என்று கடவுள் அவரைத் தேர்ந்து கொள்கிறார். தான் தெரிந்து கொள்ளப்பட்ட பணியை இயேசுவும் இனிதே செய்து முடிக்கின்றார்.

'தாவீதின் மகன்' - இதுவரை இயேசுவுக்கு பயன்படுத்தாத ஒரு தலைப்பை இங்கு பயன்படுத்துகிறார் மாற்கு. . 'என்மேல் இரங்கும்' - நாம் திருப்பலியில் பயன்படுத்தும் 'ஆண்டவரே இரக்கமாயிரும்' என்ற மன்னிப்பு வழிபாடு உருவானது இன்றைய நற்செய்திப்பகுதியிலிருந்துதான். 'மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளிக் குதிக்கின்றார்' - பார்வை பெறுவதற்குமுன்னே தன் பிச்சையெடுக்கும் தொழிலுக்கு ஆதாரமான மேலுடையைத் தூக்கி எறிகின்றார். ஆக, மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும்.இன்று கடவுள் என்னிடம் 'உனக்கு நான் என்ன  செய்யணும்?' என்று கேட்டால், பர்த்திமேயு போல என்னால் உடனடியாகப் பதில் சொல்ல முடியுமா? பர்த்திமேயுக்கு இருந்த இலக்கு தெளிவு என்னிடம் இருக்கிறதா? இவற்றையெல்லாம் சிந்தித்து சீர்தூக்கி பார்க்க இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் பாரவோன் அடிமைத்ததனத்தில் அல்லலுற்ற தன் மக்களை இறைவன், மோசேயின்  தலைமையில் ஒன்றிணைத்து பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். அழைத்தவர் விடுத்த
கட்டளைகளை மறந்தார்கள். அவர்களுக்கு புது வாழ்வு தர இறைவாக்கினர் எரேமியாவை அழைத்தார். அழுகையோடு  அவர்கள் திரும்பி வருவார்கள். ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவோன் என்று கூறும் நம் கடவுள் நம்மை  ஆதரித்து வழிநடத்தும் உண்மைத் தந்தை இந்த நம்பிக்கை தரும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இயேசுவைத் தலைமைக்குரு என்று முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் அவர் எப்படி தலைமைக்குருவானார் என்பதை இன்றைய இரண்டாம் வாசகப்பகுதியில் எழுதுகின்றார். நம் வலுவிக்மையைப் போக்க இயேசுவுக்கு அழைப்பு வந்ததைப் போன்று  நாமும் பிறருடைய துன்பங்களைப் போக்க இயேசு நமக்கும் அழைப்பு  விடுக்கின்றார். நம்மில் எத்தனைபேர் இந்த அழைப்பை ஏற்று வாழ முன் வருகிறோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின்  இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்



திபா 126: 1-2. 2-3. 4-5. 6

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.

1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம்.
2 அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

2 "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

4 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
-பல்லவி
6 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

மன்றாட்டுகள்:



திருச்சபைக்காக:

அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!  வத்திக்கானில் நடைபெற்றுவரும் குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள்  மாமன்ற நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தாரும், பொதுநிலையினர்க்கும்   நல்ல முடிவுகளை எடுக்கவும், குடும்பங்கள் திருஅவையோடு மறைப்பணியைப் பகிர்ந்து வேண்டி ஞானத்தையும்,  விவேகத்தையும் பெற்றிட  இவ்வுலகில் வாழ வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்காக:

எங்கள் நம்பிக்கையான எம் இறைவா!  நமக்கு எதிராக இருப்பவர்களை கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம்,  நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர்
எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களை பெற்றிட வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் நாட்டு மக்களுக்காக:

ஏழைகளின் நண்பனே எம் இறைவா இன்று எம் பாரதநாட்டில் ஏழைகள் நசுக்கப்பட்டு அவர்களின் அடிப்படை  வாழ்வாதாரம் இல்லாமல் விவசாயம் நலிந்து அவர்கள் நேரிடையாக விற்பனை செய்யமுடியாத நிலை, அரசால்
கொடுக்கப்படும் மானியம் மறுக்கப்படுதல் மின்பற்றாக்குறை இவற்றால் அவதிப்படும் என் மக்களுக்கு நல்வாழ்வு ஏற்ப  வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் இளம் சதமுதாயத்திற்காக:

இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்கு தங்களையே சுயத்தை இழந்து கலாச்சார சீர்கேடுகள்,  சமூகத்திறிகு எதிரான தீய சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம்  இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளை பின்பற்றி வாழ  வரமருள வேண்டுமென்று  இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment