Wednesday, January 18, 2017

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 22.01.2017



பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு  22.01.2017



இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-


எசாயா 9:1-41
கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23


முன்னுரை:-


பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இறைசாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பணிக்காக அழைக்கப்படுகிறோம். இயேசு தனது விருப்பங்களை இந்த மண்ணுலகில் மனித உறவுகளில் நிறைவுக் காணத் தனது சீடர்களை அழைக்கின்றார். மனமாற்றத்தைக் காணத்தான் இயேசு அழைக்கின்றார். உண்மை அழைத்தல் என்பது வெளிக்குறத் தோற்றத்தை வைத்துத் தீர்மானிப்பது அல்ல. மாறாக அடிப்படையில் மனநிலை மாற்றம் காண்பதோயகும்.இதனையே இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை மாற மனமாற்றம் முதலில் தேவை என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்.
அன்புள்ளம் கொண்டு நம்மைக் கரம் பிடித்து அழைத்த இயேசு கிறிஸ்து நம்முடன் கடைசி வரை இருக்கின்றார். இறைவனில் அழைத்தல் இல்லறமோ துறவறமோ எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்து நின்று வாழத் தேவையான வரங்களை இத்திருப்பலி வழியாக இறைவனிடம் மன்றாடுவோம். வாரீர்!

  வாசகமுன்னுரை:-



முதல் வாசக முன்னுரை:-


செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் பாழ்படுத்தப்பட்டதன் விளைவாக அம் மக்கள் அடிமைகளாய் முகவரி இல்லா மக்களாய் வாழ்ந்தபோது இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் அவர்களின் சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றினார். இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் பேரொளியை உதிக்கச் செயதார். மக்கள் அக்களிப்பதுபோல் களிகூர்ந்தனர் என்று இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.



இரண்டாம் வாசக முன்னுரை:-

கொரிந்து நகர் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளால் யார் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்களும் தன்னலம் மிகுந்தபோக்கும் நிறைந்துபோனது. இவ்வாறு ஏற்றப்ட்டப் பிரிவினையால் வருந்தியத் திருத்தூதர் பவுல் நம் அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். எனவே நமக்குள் பிரிவினைப் பேதங்கள் இருக்க்கூடாது என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து மனமாற்றம்பெற முயற்சிப்போம்.




பதிலுரைப்பாடல்:-



பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.

திருப்பாடல்: 27: 1,4, 13-14

ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்சவேண்டும்?ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதிகொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி 


மன்றாட்டுகள்:-


1.  அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவை கிறிஸ்துவின் விலைமதிக்கமுடியாத மதிப்பீடுகளான உண்மை, அன்பு, நீதி, சமத்துவம் ஆகிய நற்பண்புகளை அடிப்படையாகக் கொண்டு உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வு மலர்ந்திட இறைமனித உறவு ஒன்றுப்பட்ட வாழத் தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. துன்புறுவோரின் துணையாளரே எம் இறைவா! உலகில் நிலவும் ஏழ்மை, வறுமை, இல்லாமை என்ற நிலைகள் மாறி இருப்பவர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப, சேமித்து அளவுக்கு அதிகமான பொருட்களை, சொத்துக்களைச் சேமிக்காமல் எழைகளோடு பகிர்ந்து கொண்டு உண்மையான கிறிஸ்தவ, ஆதிதிருச்சபை கொண்டு வந்த அர்த்தமுள்ள, கிறிஸ்தவ வாழ்வு வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிபாட்டின் நாயகரே எம் இறைவா! இன்றைய சூழலில் வழிபாடுகள் பெறும் வெற்றுச் சடங்குளாக அல்லாமல் அர்த்தமுள்ளதாக அமையவும் வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாடிக்கையான ஒரு செயலாக இல்லாமல் பொருள் உள்ள வழிபாட்டின் முழுநிறைவையும், முழுமையாகப் பெற்றுத் திருமுழுக்கு யோவானைப் போல் சாட்சிய வாழவு வாழத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம்மை அரவணைக்கும் எம் இறைவா! இளையோர்கள் தாங்கள் விரும்பிய வாழ்வைத் தங்கள் விருப்பம் போல் வாழாமல் கிறிஸ்து இயேசுவை அடிக்கல்லாகவும், அவரின் வாழ்வை மூலைக்கல்லாகவும் கொண்டு புதியச் சிந்தனைகளோடும் புதிய ஆற்றவோடும் பணிவாழ்வே தங்களின் வாழ்வின் நிலையான வாழ்வு என்பதை உணர்ந்து வாழ்ந்திடத் தூய ஆவியின் வழி நடத்துதலில் வாழ்ந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், விவசாயிகளின் தற்கொலைகள், நீரின்றி வறட்சியால் வாடும் அனைத்து நிலங்களும் உம் அருள் பொழிவதால் நல்ல மழையை அருளி வாடியப் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற முன்னோர்களின் வாக்கிற்கு இணங்க உம் இரக்கத்தை இக்காலச்சூழலில் ஏழைகள் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

                                           www.anbinmadal.org

1 comment: