Wednesday, May 22, 2019

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை:


அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் அமைதியையும் அவரது துணையாளரையும் பெற்றுக் கொண்டு புது வாழ்வுப் பெற நாம் அனைவரும் இத்திருப்பலியில் பங்கேற்போம்.
வெறும் சட்டத்திட்டங்களை மட்டும் மையமாகக் கொண்டதல்ல நம் கிறிஸ்தவ வாழ்வு. மாறாக அன்பே அடித்தளமாக இருக்க வேண்டும். மனிதருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் இறைவனின் மாட்சியையும் ஒளியையும் பெற்றுக்கொள்ள முதல் இரு வாசகங்களும் எடுத்துரைக்கின்றது.
நமது உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம். அவர் அனுப்பும் அவரது துணையாளரை ஏற்றுக் கொண்டு இவ்வுலகில் அமைதியின் தூதுவராக, ஒருங்கிணைந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


பழைய ஏற்பாட்டின் யாவே கடவுள் மோசே வழியாகக் கொடுத்த மரபு சட்டங்களையும், முறைமைகளையும் புதிய ஆதாமாகிய கிறிஸ்துவை நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது விருத்தசேதனம் பிற இனத்தவர்கள் செய்து கொள்ள வேண்டுமென்று கட்டாயமல்ல. இப்பிரச்சனைக்குத் திருத்தூதர்கள் பவுல், பர்னபா இருவரும் கையாண்ட விதமும், அவர்களின் அணுகுமுறைகளும் பெரும் வியப்புக்குரியதாக இருந்தது. கிறிஸ்துவின் சட்டம் அன்பின் சட்டம். அவரின் நுகம் அழுத்தாது. அவரின் சுமை எளிது என்பதை உணர்த்தும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

 
எருசலேம் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அத்திருநகருக்குத் தூயஆவியார் அழைத்துச் சென்று கடவுளின் மாட்சியையும், ஒளியையும் இஸ்ரயேல் மக்களின் 12 குலங்களின் பெயர்கள் அதன் வாயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதையும் திருத்தூதர் யோவானுக்குக் காட்டினார். எல்லாம் வல்லக் கடவுளாகிய ஆண்டவர் அதன் ஆட்டுக்குட்டியே என்று எடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அருள்கொடைகளின் நாயகனே! எம் இறைவா! திருஆட்சியாளர்கள் தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்றுத் தம் விசுவாச வாழ்வில் வெற்றிப் பெறவும், உம் விசுவாசம் உம்மை நலமாக்கும் என்றும் உம் வார்த்தைகளை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! மனிதன் பாங்குடன் வாழ இயற்கையைப் படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்குத் தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திடவும், தண்ணீர் பற்றக்குறையால் அவதிபடும் உம் மக்களுக்கு நிறைவாய் மழைப் பொழியச் செய்து வளமுடன் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் ஒரே மகனை எமக்கு உணவாக அளித்த இறைவா! எங்கள் குடும்பங்களில் நிலைவாழ்வுத் தரும் இயேசுவின் அன்பு உறவில் நிலைத்து வாழ்ந்திடவும், உலகக்காரியங்களிலிருந்து விடுபட்டுப் புதுவாழ்வுப் பெறவும், எங்கள் மனங்கள் புதிப்பிக்கப்படவும், உண்மையான நீதியிலும், தூய்மையிலும் வாழ வேண்டிய வரம் கேட்டு உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் இறைவா, எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்துச் சமத்துவச் சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். தடுக்காதீர்ககள் என்று மொழிந்த இயேசுவே சிறார் முதல் இளைஞர்கள் வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவாகள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம் நமது பண்பாட்டிற்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் ஏற்றதாகவும் பயிலும் மணாக்கர்கள் தங்கள் கல்வியைச் சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

No comments:

Post a Comment