Tuesday, February 6, 2024

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு – 11-02-2024

  பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு – 11-02-2024

https://media.vaticannews.va/media/content/dam-archive/vaticannews/multimedia/2019/10/11/Vangelo-della-Domenica-XXVIII-C---GesU-guarisce-lebrosi-2aem.jpg/_jcr_content/renditions/cq5dam.thumbnail.cropped.750.422.jpeg
Mosaic of Jesus healing a leper, by Fr Marko Rupnik, SJ

இன்றைய வாசகங்கள்:

லேவி 13:1-2, 44-46
1கொரிந்தியர் 10:31-11:1
 மாற்கு 1: 40-45

திருப்பலி முன்னுரை:


பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு. இன்று 32வது உலக நோயாளர் தினம். திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் 1991 பிப்ரவரி 11 ஆம் நாள் லூர்துநகர் அன்னை திருவிழா அன்று தொடங்கப்பட்டது. மருத்துவருக்கெல்லாம் மருத்துவராம் இயேசு கிறிஸ்து தொழுநோயாளி ஒருவருக்கு நலமளிக்கும் நிகழ்வே இன்றைய வாசகத்தின் மையக்கருத்து.
குணமளிப்பவர் இறைவனாக இருப்பினும் நம் நம்பிக்கையே, அதுவும் அசையா ஆழ்ந்த நம்பிக்கையே குணமளிக்கும் என்பதைக் கடந்த வாரங்களில் நாம் வாசிக்கக் கேட்டோம். இன்று உலக நோயாளர் தினம் கொண்டாடப்படும் இந்நேரம் நமது நம்பிக்கையைச் சோதித்துப் பார்ப்போம் அது எவ்வாறு உள்ளது என்று?
உலக நோயாளர் தினத்தை வர்த்தக உலகம் இன்னும் அபகரிக்கவில்லை. அபகரிக்கவும் தயங்கும். ஏனெனில், இந்தத் தினத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாதே! வர்த்தக உலகின் ஆதிக்கம், ஆர்ப்பாட்டம் இவை ஏதும் இல்லாத இந்த நாளை நமக்கு வழங்கி, நமது எண்ணங்களையும், கவனத்தையும் நோயாளர் மீது திருப்பியுள்ளதற்காக நாம், தாய் திருஅவைக்கும், சிறப்பாக, புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்கான முதல் படி என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பயில்கிறோம். நாம் நம்பிக்கைப் பெறவும், நோயாளர்கள் அனைவரும் நலம் பெறவும் இன்றைய திருப்பலியில் இறைவனிடம் மனமுறுக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒருவரின் வாழ்வில் நோய் அதுவும் தொழுநோய் வந்தால் அவர் படும் இன்னல்கள் எண்ணிலடங்கா. யூதச் சமுதாயத்தில் தொழுநோய் என்பது பாவத்தின் சம்பளமாகப் பார்க்கப்பட்டது. மோசேவின் கட்டளைப்படி அந்த நோயாளி தனிமைப் படுத்தப்பட்டு நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவராய் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார் என்பதாகும். இவ்வாசகத்திற்குச் செவிமெடுக்கும் நாம் இறைவனில் நம்பிக்கைக் கொண்டு அனைவரும் நலமடைய வேண்டுவோம்.

பதிலுரைப்பாடல்

திபா 32: 1-2, 5, 11
பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். -பல்லவி

`என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். -பல்லவி

நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் தாம் கிறிஸ்துவைப் பின்பற்றி நடப்பது போல நம்மையும் அவ்வாறு நடக்க அழைக்கிறார். எதைச் செய்தாலும் அதை இறைவனின் மாட்சிக்காகச் செய்யுங்கள் என்கிறார். அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்டு நாமும் வேறுபாடுகளைக் களைந்து இறைமாட்சியில் மகிழ்ந்திடுவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. ஆண்டவர் உருவாக்கும் புதிய உலகில் நீதி தழைத்தோங்கும் என்ற எங்களுக்கு வாக்களித்துள்ளீரே இறைவா! அத்தகைய நீதி நிறைந்த உலகை உலருவாக்கும் பணியில் திருஅவையில் உள்ள அனைவரும் ஆர்வமுடன் இணைந்து உமக்கு உண்மையான கருவிகளாகச் செயல்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பரிவன்பமிக்க எம்தந்தையே, இறைவா! எம்பங்கில் உள்ள ஏழைகள், திக்கற்ற எளியோர்கள், வறியோர்கள், முதியோர்கள், அனாதைகள் ஆகிய அனைவருக்கும் இரக்கம் காட்டும். அவர்கள் நோய்நெடியின்றி வாழ உலக நோயாளர்கள் தினத்தில் சிறப்பாக அவர்களுக்கு நலம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 அனைவருக்கும் தந்தையாகிய இறைவா! சிறார் முதல் இளைஞர்கள்வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவாகள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம் நமது பண்பாட்டிற்கும் வாழ்க்கை தரத்திற்கும் ஏற்றதாகவும் பயிலும் மாணாக்கர்கள் தங்கள் கல்வியை சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இளைஞனே எழு! எழுந்து ஒளிவீசு என்ற எம் இறைவா! கலாச்சார மாற்றங்கள், மின்னணு சாதனங்கள், நவீன தகவல் தொடர்புகள் மேலோங்கி இளைஞர்கள் நிலை தடுமாற வைக்கும் இந்நாட்களில் அவர்கள் பிறரன்பு பணி செய்ய நல்ல மனநிலையும், சேவை மனப்பான்மையும் பெற்று நேரிய இறையரசு பாதையில் பயணித்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 
5. எம்வாழ்க்கையில் ஒவ்வொருகட்டத்திலும் எம்மைக் காக்கும் இறைவா! எம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் உள்ள நலிந்தோரையும், நோயாளிகளையும், கைவிடப்பட்டடோர்களையும், நாடோடிகளாய் வாழும் எளியோரையும் பேணிக்காத்து அவர்கள் வாழ்வு உயர நாங்கள் அனைவரும் உழைக்க, உதவிட வேண்டிய நல்ல மனதினைத் தருமாறு உலக நோயாளர்கள் தினத்தில் சிறப்பாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
                       
www.anbinmadal.org


Print Friendly and PDF

No comments:

Post a Comment