Tuesday, April 29, 2025

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19

திருப்பலிமுன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின்போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடிய சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பை தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்கு பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதை சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றையத் திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:

திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; அனைத்தையும் படைத்தவர் அவரே; மானிடக்குலத்தின்மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. அனைத்திற்கும் மேலாக உம்மீது கொண்ட அன்பை உறுதிச் செய்தபின், “என் ஆடுகளை மேய்” எனச்சொல்லி, பேதுருவிடம் தலைமைப்பணியை ஒப்புவித்த இறைவா, புதிய திருத்தந்தையைத் தேர்வு செய்யக் கூடியிருக்கும் கர்தினால்களை, தூய ஆவியாரால் வழிநடத்தி, காலத்திற்கு ஏற்ற நல்ல திருஅவைத் தலைவரை எங்களுக்குத் தந்தருளும்படியாக, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என அனைத்துலகப் படைப்புகளாலும் ஆராதிக்கப்படுகிற, அரியணையில் வீற்றிருப்பவரான ஆட்டுக்குட்டியே, எம் இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், போருக்கு முனைப்புக் காட்டுவதைத் தவிர்த்து, உயிர்த்த ஆண்டவரின் கொடையான அமைதியை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்றும், அதே நேரம், தீவிரவாதமும் பயங்கரவாதமும் முற்றிலும் ஒழிந்துபோக வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?” என்கிற தெளிவான உறுதியோடிருந்த திருத்தூதர்களைப் போல, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, இறைத் திருவுளப்படி வழிநடத்தவும், இளையோர் யாவரும், தங்கள் மேல்படிப்பு, பணியமர்வு, திருமணம் போன்றவற்றைத் தெரிவுச் செய்வதில், உமக்குக் கீழ்ப்படிவதன் மூலம், வாழ்வில் உயர்வு காணவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால்” மகிழ்ச்சியுற்ற திருத்தூதர்கள் அடிச்சுவட்டில், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவருமே, எங்கள் துன்ப துயரங்கள், வேதனை, சோதனைகள் நடுவிலும், “ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு” என மெய்ப்பிக்கும் விதமாக, பிரமாணிக்கம் நிறைந்த வாழ்வினை மேற்கொள்ள அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. கருணைக் கடலாகிய இறைவா, வெய்யில் கால வெக்கையைச் சற்றே தணிக்கவும், நோயற்ற நல்வாழ்வை எமக்குத் தரவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF

1 comment: