Thursday, May 8, 2025

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:

ஆண்டவரின்‌ குரலுக்குச்‌ செவிசாய்க்க அழைக்கும்‌ பாஸ்கா காலத்தின்‌ 4ஆம்‌ ஞாயிறு திருப்பலிக்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்‌.  
இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌, நல்ல ஆயனாக இருந்து தன்‌ ஆடுகளை வழிநடத்தும்‌ இயேசுவை நாம்‌ பார்க்கிறோம்‌. ஆயனின்‌ வார்த்தைகளை ஏற்று அவர்பின் தொடர்ந்தால்‌ நிலைவாழ்வை அளிப்பதாக வாக்கு கொடுக்கிறார்‌ நம்‌ ஆண்டவர்‌.  
இதையே யூத மக்களைப்‌ பார்த்து எடுத்துக்‌ கூறுகிறார்கள்‌. புனித பவுலும்‌ பர்னபாவும்‌. கடவுளின்‌ வார்த்தைகளை உதறித்‌ தள்ளினால்‌, நீங்கள்‌ நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ளமாட்டீர்கள்‌. அவ்வார்த்தைகளை யார்‌ ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள்‌ நிலைவாழ்வுக்குத்‌ தகுதியுடையவர்கள்‌ என்று. முதல்‌ வாசகத்தில்‌ கூறுகிறார்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித யோவானோ, ஆயனாம்‌ இருப்பவரே ஆட்டுக்குட்டியாய்‌ மாறி நமக்கு நிலைவாழ்வுப்‌ பெற்றுக்கொடுப்பவர்‌ என்றும்‌ கூறுகிறார்‌.  
நூறு ஆடுகளில்‌ ஓர்‌ ஆடு செவிகொடுக்காமல்‌ தப்பிப்‌ போனாலும்‌ அந்த ஆட்டையும்‌ கண்டுபிடித்துத் தன் மந்தையில்‌ சேர்க்கும்‌ நல்ல ஆயனாம்‌ இயேசு இன்று நம்மையும்‌ அவர்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிகொடுக்க அழைக்கிறார்‌. நிலைவாழ்வைப்‌ பெற்றுக்கொள்ள நாமும்‌ நல்ல ஆடுகளாய்‌ அவரைப்‌ பின்‌ தொடரும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ இணைந்து வேண்டுவோம்‌.    

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதைக் கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் மீட்பிற்காகத்‌ தன்னையே கையளித்த அந்த ஆட்டுக்குட்டியின்‌ இரத்தத்தில்‌ துவைத்தெடுத்த வெண்ணிற ஆடையை அணிந்தவர்கள்‌ மட்டுமே இறைவனின்‌ அரியணைக்கு முன்பாக நிற்கத்‌ தகுதி பெற்றவர்கள்‌ என்று நமக்குத் தெளிவுப்படுத்தும் இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன” என்றுரைத்த நல்லாயனே இறைவா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை  14 -ஆம் லியோ அவர்களை நீர் தாமே தாங்கி வழிநடத்த வேண்டுமென்றும், திருஅவையானது, அவரது தலைமையின் கீழ் உமது வழியில் நடக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின்படி, எங்கள் இந்திய எல்லையில் நடைபெறுகிற தீவிரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் ஒழித்தழிக்கப்படவும், இந்திய-பாக்கிஸ்தான் எல்லையில் நிலவுகிற போர் பதட்டங்கள் நீங்கி, அமைதி திரும்பவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவச்செல்வங்கள், விரும்புகிற கல்லூரிகளில், விரும்புகிற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கிற வாய்ப்பினை நீர் உருவாக்கித்தர வேண்டுமென்றும், அவர்களும் அவர்களது பெற்றோர்களும் சரியான பாதையைத் தெரிவு செய்ய நீர் தாமே உதவ வேண்டுமென்றும், தோல்வியுற்ற மாணவர்கள் துவண்டு போகாமல் மீண்டும் மும்மரமாய் உழைத்து வெற்றிபெற  வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர்” என்கிற முதல்வாசக உண்மைக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நம்பிக்கையில் நிலைத்திருந்து, எதிர்நோக்கில் பயணித்து, பிறரன்பில் வளர்ந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.     தேவையான உம் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF

No comments:

Post a Comment