Tuesday, June 17, 2025

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா

கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா



இன்றைய வாசகங்கள்:

தொடக்க நூல் 14:18-20 
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17

திருப்பலி முன்னுரை:

உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது. 
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது. 
ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது. 
நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் நம்மைப் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.  
பகிர்தளிலும் இழப்பதிலும் கிடைக்கின்ற இன்பத்தைச் சுவைத்திட தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசித்த இயேசுவை நெருக்கமாய் நேசிப்போம். 
தன் உடலையும் உயிரையும் நமக்குக் கொடையாகத் தந்த இயேசுவின் வழியில் இரத்தத் தானம் உடல் உறுப்புத் தானம் போன்றவை செய்திட மனமுவந்து முன்வருவோம். கொடுப்பதில் இன்பம் பெறுவோம். இழப்பதில் நிறைவு காண்போம். அதற்கான அருளை இன்றைய திருப்பலியில் கொடையாகப் பெறுவோம்.  

வாசக முன்னுரை : 

முதல் வாசக முன்னுரை : 

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின் நாயகனான ஆபிரகாமுக்கு உன்னத கடவுளின் குருவாக இருந்த மெல்கிசதேக் வாழ்த்து கூறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கொள்கிறது. குருத்துவம் என்னும் சிறப்பு அழைப்பைப் பெற்றவர்கள் நமக்கு ஆசீர் வழங்கும்போது அது பன்மடங்காக நிலைக்கிறது என உணர்ந்தவர்களாய் நமது ஞான மேய்ப்பர்களை மதிக்கவும் அவர்களிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் நம்மாலான தாராள செப, பொருள் உதவிகளை ஆலய பங்கு வளர்ச்சிக்கு வழங்கவும் இறையருள் வேண்டி முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.  

பதிலுரைப் பாடல்

திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...

2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி…

3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி…

4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார்.  பல்லவி.

இரண்டாம் வாசக முன்னுரை :  

திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறோம் என்பதாகும். கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம் அவரது சாயலாக மாற வேண்டும். கிறிஸ்துவின் சாயலாக நமது வாழ்வு மாற அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம். 



கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தொடர்பாடல் (குறுகியபாடம்)ஒலிவடிவில்

-----------------------------------------------
சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
1
எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.

உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று 
சிந்தனைக்கு ஏற்றப் பொருளே
2
தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்டம் அதற்கே
கிடைத்த உணவிது;  ஐயமேயில்லை.

ஆர்ப்பரிப்புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடுமே.
3
நல்ல ஆயனே, உண்மை உணவே,
இயேசுவே, எம்மேல் இரங்கிடுவீரே,
எமக்கு நல்அமுதே ஊட்டிடுவீரே.

நும் திருமந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : 

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

1. “மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிக்குருத்துவத்திலும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், எங்களது பொதுக்குருத்துவத்திலும், பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னதக் கடவுள்” ஆபிராமுக்கு ஆசி வழங்கியது போலவே, இவ்வுலகிற்கும், உலகாளும் தலைவர்களுக்கும், ஆசியும் ஞானமும் வழங்கும் அமைதியின் அரசராய் விளங்கவும், போர்கள், சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற தீங்குகள் யாவும் நீங்கப்பெற்ற நிம்மதியான சூழலை உருவாக்கித்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் “நற்கருணை இல்லையேல், திருஅவை இல்லை; குருக்கள் இல்லையேல் நற்கருணை இல்லை” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், நற்கருணை, குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் மேன்மையைப் போற்றவும், தேவ அழைத்தலுக்காக ஜெபிக்கவும், தேவ அழைத்தலை எங்கள் குடும்பங்களிலே ஊக்குவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிவிக்கிறோம்” என்கிற நம்பிக்கையின் மறையுண்மையை, எங்கள் வாய்களால் மட்டுமல்லாமல், வாழ்க்கையாலும் அறிக்கையிடவும், ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுவதன் மூலம், ஒன்றிப்பின் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, அவற்றின்மீது ஆசிக் கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறச்செய்து, அனைவரும் வயிறார உண்ணச்செய்த ஆண்டவரே, எங்களது நற்கருணை பக்தியானது வழிபாட்டோடு நின்றுவிடாமல், பிறரோடு, குறிப்பாக வறியவரோடு, பகிருகின்ற வாழ்வாகத் தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, June 10, 2025

மூவொரு இறைவன் பெருவிழா 2025

மூவொரு இறைவன் பெருவிழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நீதிமொழிகள் 8:22-31 
உரோமையர் 5: 1-5
யோவான் 16:12-15

திருப்பலி முன்னுரை:

இருந்தவரும்‌ இருப்பவரும்‌ வரவிருக்கின்றவருமான தந்தை, மகன்‌, தூய ஆவியார்‌ என்னும்‌ தூய்மைமிகு மூவோரு இறைவனின்‌ பெருவிழாவை சிறப்பிக்கத் திரு அவையாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ அன்புடன்‌ வரவேற்கின்றோம்‌.

விண்ணகத் தந்தை, மனிதனாக மண்ணிற்கு வந்த இறைமகன்‌ இயேசு, துணையாளராக நமக்குத் தரப்பட்ட தூய ஆவியாரால்‌ மூவரும்‌ இணைந்து மூவொரு இறைவனாக, ஒரே கடவுளாக, ஒரே எண்ணம்‌, ஒரே சிந்தனை, ஒரே சொல்‌, ஒரே செயல்‌ என யாவிலும்‌ இணைந்தவர்களாக இருக்கிறார்கள்‌. குடும்பத்தைக் கட்டியெழுப்ப கடவுளால்‌ படைக்கப்பட்ட இறைமக்கள்‌ சமூகமாகிய நாம்‌ ஒவ்வொருவரும்‌ மூவோரு இறைவனின்‌ சாயலை நமதாக்கி வாழும்போது நமது குடும்பங்கள்‌ ஒற்றுமையின்‌ விளைநிலமாக, மகிழ்ச்சியின்‌ பிறப்பிடமாக, நன்மைகளின்‌ ஊற்றாகத் திகழும்.

தந்தை மகன் தூயஆவி என்னும் கூட்டுக் தத்துவம் நம்மில் இருக்கும் பகைமை எண்ணங்களை நீக்கிச் சுயநலத்தைப் போக்கி நட்புறவில் வாழத் தேவையாக வரங்களை இன்றைய தமதிருத்துவப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாடங்களில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

உலகம் தோன்றுவதற்கு முன்பே ஞானம் இவ்வுலகில் கடவுளோடு செயலாற்றியது என்பதையும் அந்த ஞானம் தனக்குத் தானே பேசிக்கொள்வதை இங்கே பதிவு செய்கின்றார். நீதிமொழி 1:7ல் இறை அச்சமே ஞானத்தின் தொடக்கம் எனக் கூறுவதை நாம் காணமுடிகின்றது. விவிலியத்தில் பல பெண்கள் குறிப்பாக எஸ்தர், யூதித், தெபோரா, அன்னை மரியாள் போன்றோர் போற்றப்படுவதற்கு இவர்கள் தேர்ந்து கொண்ட ஞானமே அவர்களுக்கு அடையாமாக இருக்கின்றது. எனவே நாமும் ஞானத்தைக் கண்டடைய, பெற்றுக்கொள்ள இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

நம்பிக்கை என்பது நாம் காணக்கூடிய அல்ல. மாறாக விசுவாசத்தின் அடிப்படையில் நாம் எதிர்நோக்கி இருப்பது. இந்த நம்பிக்கை நமது இறுதி நியத்தீர்ப்பின்போது எல்லோரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்றும் நமக்கு ஒரு துணையாளரை அனுப்பப் போகின்றேன். அவர் உங்களை நிறைவாழ்விற்கு அழைத்துச் செல்வார் என்ற கிறிஸ்துவின் வெளிப்பாடுகளைத் தூய பவுல் இத்திருமுகத்தில் விவரிக்கின்றார், எனவே இம்மூவொரு இறைவனின் இறைவெளிப்ப்பாட்டை நாம் தூய ஆவியின் வழியாகப் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 8: 3-4. 5-6. 7-8
பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் உள்ளது!

உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? -பல்லவி

ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;
மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். உமது கைப்படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். -பல்லவி

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி : 

அல்லேலூயா, இருந்தவரும்‌ இருக்கின்றரும்‌ வரஇருக்கின்றவரும்‌ எல்லாம்‌ வல்லவருமான கடவுள்‌, தந்‌ைத, மகன்‌, தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. மூவொரு இறைவனின் பெருவிழாவைக் கொண்டாடுகிற இந்நாளில், மனித அறிவினால் புரிந்துகொள்ள முடியாத, இந்த நம்பிக்கையின் மறைபொருளை, உணர்ந்து, உள்வாங்கி, கூட்டொருங்கியக்க திருஅவையாய் விளங்குவதன்மூலம், பறைசாற்றிடத் தேவையான அருளினை, எம்திருத்தந்தை லியோ அவர்களுக்கும், ஏனைய திருஅவை தலைவர்களுக்கும், இறைமக்களாகிய எங்களுக்கும் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பூவுலகு உண்டாகுமுன்னே இருந்து செயலாற்றிய இறைவனின் ஞானம், மனித உள்ளங்களிலும், குறிப்பாக உலகத்தலைவர்கள், மற்றும் எங்கள் நாட்டுத்தலைவர்கள் மனங்களிலும் செயலாற்றி, திரித்துவக் கடவுளிடம் நாங்கள் கற்றுக்கொள்ளுகிற ஒற்றுமை, இணைந்த செயல்பாடு, போட்டிகள் துறந்து அமைதியில் நிலைத்தல், ஆகிய நற்குணங்களின்படி வாழவும், ஆளவும் வேண்டிய அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப் பட்டுள்ளது” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், குடும்பம் என்கிற குட்டித்திருஅவையைக் கட்டியெழுப்பிட வேண்டுமென்றும், தாய், தந்தை, கணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள், சுற்றம் சூழல் ஆகிய அனைவரும், மேட்டுமை எண்ணங்களை விட்டொழித்து, திரியேக இறைவனில் இருக்கிற ஒரே சிந்தனை, ஒத்துணர்வு, ஒன்றித்த செயல்பாடு ஆகியவற்றைப் பின்பற்றி வாழ்ந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டு, அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம்' என்பதை நன்றியோடு நினைவுகூர்ந்து, அந்த உன்னத நிலையில் என்றும் நிலைத்திருக்க வேண்டிய அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின் துணையுடன், “துன்பத்தால் மன உறுதியும், மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும்” என்றும் “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது” என்றும் நம்புகிற திருக்கூட்டமாய், நாங்கள் விளங்கிட வேண்டுமென்றும், இந்த யூபிலி ஆண்டில் மட்டுமல்லாது, என்றைக்குமே எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, June 2, 2025

தூய ஆவியாரின் பெருவிழா 2025

 தூய ஆவியாரின் பெருவிழா

https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1d/Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg/500px-Maino_Pentecost%C3%A9s._Lienzo._285_x_163_cm._Museo_del_Prado.jpg

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

திருப்பலி முன்னுரை :

இணைந்து பயணிக்கும்‌ அன்பியமாகத் திரு அவையை வழிநடத்தக்கூடிய பெந்தகோஸ்து பெருவிழா எனச் சிறப்பிக்கத் திருச்‌சமூகமாய்‌ ஒன்று கூடிய உங்கள்‌ ஒவ்வொருவரையும்‌ பாசத்தோடு வாழ்த்தி வரவேற்கின்றோம்‌. தூய ஆவியாரின்‌ திருவிழாவை அன்னையாம்‌ திரு அவை தனது திரு அவையின்‌ பிறப்பு பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றது. உடைந்து சிதைந்து கிடந்த திருத்தூதர்களை ஒன்றிணைத்து உலகெங்கும்‌ சென்று படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தியை பறைசாற்றக்கூடிய கருவிகளாக உருவாக்கியவர்‌ தூய ஆவியாரே.
அடுத்து என்ன செய்யலாம்‌ என்று கலங்கி நின்ற திருத்தூதர்களுக்கு ஆண்டவரைப்‌ பற்றிய நற்செய்தி அகிலமெங்கும்‌ எடுத்துரையுங்கள்‌ என உள்ளொளி தந்து உடனிருந்து வழிநடத்தியவர்‌ தூய ஆவியார்‌.
தூய ஆவியாரின்‌ துணையோடு இயங்குபவர்கள்‌ கடவுளின்‌ மக்கள்‌ என்பதை உணர்ந்து உண்மை, அன்பு, நீதி, நேர்மை, கனிவு, தாழ்ச்சி என்னும்‌ தூய ஆவியாரின்‌ கனிகளாலும்‌ வரங்களாலும்‌ நிரப்பப்படவும்‌ புதிய கல்வி ஆண்டுத் தொடங்கவிருக்கும்‌ இந்நாள்களில்‌ நமது குழந்தைகள்‌ அறிவிலும்‌ ஞானத்திலும்‌ சிறந்து விளங்கித் தூய ஆவியாரின்‌ துணையோடு சிந்திக்கவும்‌ படிக்கவும்‌ கல்வி ஆண்டின்‌ தொடக்கமுதலே ஞானத்தோடு பாடங்களை உள்வாங்கிக்‌ கொள்ளவும்‌
இறையருள்‌ வேண்டிக் கல்வாரி பலியில்‌ பக்தியோடு பங்கெடுப்போம்‌…

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்:
1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.  
2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. 
இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை  நாமும் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல் 

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே ஒருவர் கடவுளின் பிள்ளையென அழைக்கப்பட முடியும். எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
 

*********  தொடர் பாடல்  பாடல் இசையுடன்  *********   

தொடர் பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.  

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :

அல்லேலூயா, அல்லேலூயா!  தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்.  அல்லேலூயா.

1. அன்பு இறைவா ! எல்லோரோடும்‌ அமைதியுடன்‌ வாழுங்கள்‌ என்ற மகிழ்வின்‌ செய்தியை நற்செய்தியாக எங்களுக்கு வழங்கக்கூடிய திருத்தந்தை, ஆயாகள்‌, அருள்பணியாளர்கள்‌, இருபால்‌ துறவறத்தார்‌
செல்லும்‌ இடமெல்லாம்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு பயணிக்க வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

2. நாட்டை வழிநடத்தக்கூடிய நாட்டுத்‌ தலைவர்கள்‌ தூய ஆவியாரால்‌ வழங்கக்கூடிய ஞானத்தையும்‌ விவேகத்தையும்‌ கொடையாகக்‌ கொண்டு தூய ஆவியாரின்‌ கனிகளான அன்பு, அமைதி, மகிழ்ச்சி,
பரிவு என்ற பண்புகளால்‌ தொடர்ந்து வழிநடத்த வரம்‌ தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்‌.

3. தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்ற மொழிந்த அன்பு இறைவா ! திருமுழுக்கின்‌ வழியாக நற்செய்தி பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும்‌ திரு அவையின்‌
கடமைகளையும்‌ தேவைகளையும்‌ உணர்ந்து இறையன்பிலும்‌ பிறர்‌ அன்பிலும்‌ வளர வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.

4. உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. அன்பு இறைவா! புதிய கல்வி ஆண்டில்‌ காலடி எடுத்து வைக்க இருக்கும்‌ எம்‌பங்கு மாணவ செல்வங்களுக்காகவும்‌ அவர்களை அறிவிலும்‌ ஞானத்திலும்‌ பக்தியிலும்‌ ஒழுக்கத்திலும்‌ வளர்த்‌தெடுக்கக்கூடிய கடமையை ஏற்றுள்ள எல்லா ஆசிரியர்களுக்காகவும்‌ வேண்டுகின்றோம்‌. இவர்கள்‌ தூய ஆவியாரின்‌ துணையோடு மனிதநேய மாண்புகளில்‌ சிறந்து விளங்கிட வரம்‌ தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்‌.



https://anbinmadal.org

Print Friendly and PDF