கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல் திரு இரத்தம் பெருவிழா
இன்றைய வாசகங்கள்:
தொடக்க நூல் 14:18-20
1 கொரிந்தியர் 11:23-26
லூக்கா 9:11-17
திருப்பலி முன்னுரை:
உலகம் உயிர்ப்புடன் இயங்க தன் உயிரைத் தானமாய் தந்து இயேசுவின் திருவுடல் திரு இரத்த பெருவிழாவை இன்று அன்னையாம் திரு அவை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றது.
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்க தனது உடலையே உணவாகத் தந்து தனது ரத்தத்தை உயிர் வாழ உதவும் பானமாகத் தந்த இயேசுவின் பேரன்பை நினைத்து இன்று அன்னையாம் திரு அவை விழா எடுக்கின்றது.
ஆம், தன் உடலின் ஒவ்வொரு அணுவையும் மக்களுக்கென வழங்கிய இயேசுவைப் போல், நாமும் மக்களின் நல்வாழ்வுக்கு, ஏதோ ஒரு வகையில், நம்மையே வழங்கும் வழிகளைக் கற்றுக்கொள்ள, கிறிஸ்துவின் தூய்மைமிகு திருஉடல், திருஇரத்தம் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
நம்மை எவ்வாறு பிறருக்கு பகிர்ந்து கொடுப்பது ? நமது திறமைகளை, நமது உழைப்பை நமது நேரத்தை நமது பணத்தை நமது நல்ல மனதை பிறருக்கு தாராளமாய் தந்து உதவுவதன் மூலம் நம்மைப் பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்.
பகிர்தளிலும் இழப்பதிலும் கிடைக்கின்ற இன்பத்தைச் சுவைத்திட தம் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு நம்மை நேசித்த இயேசுவை நெருக்கமாய் நேசிப்போம்.
தன் உடலையும் உயிரையும் நமக்குக் கொடையாகத் தந்த இயேசுவின் வழியில் இரத்தத் தானம் உடல் உறுப்புத் தானம் போன்றவை செய்திட மனமுவந்து முன்வருவோம். கொடுப்பதில் இன்பம் பெறுவோம். இழப்பதில் நிறைவு காண்போம். அதற்கான அருளை இன்றைய திருப்பலியில் கொடையாகப் பெறுவோம்.
வாசக முன்னுரை :
முதல் வாசக முன்னுரை :
கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நம்பிக்கையின் நாயகனான ஆபிரகாமுக்கு உன்னத கடவுளின் குருவாக இருந்த மெல்கிசதேக் வாழ்த்து கூறுவதை இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கொள்கிறது. குருத்துவம் என்னும் சிறப்பு அழைப்பைப் பெற்றவர்கள் நமக்கு ஆசீர் வழங்கும்போது அது பன்மடங்காக நிலைக்கிறது என உணர்ந்தவர்களாய் நமது ஞான மேய்ப்பர்களை மதிக்கவும் அவர்களிடமிருந்து நிறைவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளவும் நம்மாலான தாராள செப, பொருள் உதவிகளை ஆலய பங்கு வளர்ச்சிக்கு வழங்கவும் இறையருள் வேண்டி முதல் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 110: 1. 2. 3. 4
பல்லவி: மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே.
1 ஆண்டவர் என் தலைவரிடம், `நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். பல்லவி...
2 வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஓங்கச் செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! பல்லவி…
3 நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப் போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்! பல்லவி…
4 "மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே" என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார்; அவர் தம் மனத்தை மாற்றிக்கொள்ளார். பல்லவி.
இரண்டாம் வாசக முன்னுரை :
திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது நாம் கிறிஸ்துவின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் உணவாக உட்கொள்கிறோம் என்பதாகும். கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம் அவரது சாயலாக மாற வேண்டும். கிறிஸ்துவின் சாயலாக நமது வாழ்வு மாற அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமடுப்போம்.
கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா
தொடர்பாடல் (குறுகியபாடம்)ஒலிவடிவில்
-----------------------------------------------
சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
1
எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
இயலாது உன்னால் அவரைப் புகழ,
இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.
உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
போற்றுதற்குரிய இப்பேருண்மை இன்று
சிந்தனைக்கு ஏற்றப் பொருளே
2
தூய விருந்தின் பந்தியில் அன்று
பன்னிரு சோதரர் கூட்டம் அதற்கே
கிடைத்த உணவிது; ஐயமேயில்லை.
ஆர்ப்பரிப்புடனே இனிமையும் கலந்த
நிறைபுகழ் கீதம் ஒலிப்பதோ டன்றி
மகிழ்வும் மனதில் பெருகிடுமே.
3
நல்ல ஆயனே, உண்மை உணவே,
இயேசுவே, எம்மேல் இரங்கிடுவீரே,
எமக்கு நல்அமுதே ஊட்டிடுவீரே.
நும் திருமந்தை எம்மைக் காத்து,
நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :
அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் :
1. “மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே” என்கிற திருப்பாடல் வரிகளின்படி, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், தங்கள் பணிக்குருத்துவத்திலும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், எங்களது பொதுக்குருத்துவத்திலும், பிரமாணிக்கமாக இருக்கவும், கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னதக் கடவுள்” ஆபிராமுக்கு ஆசி வழங்கியது போலவே, இவ்வுலகிற்கும், உலகாளும் தலைவர்களுக்கும், ஆசியும் ஞானமும் வழங்கும் அமைதியின் அரசராய் விளங்கவும், போர்கள், சண்டைகள், கலவரங்கள், பயங்கரவாதம், தீவிரவாதம் போன்ற தீங்குகள் யாவும் நீங்கப்பெற்ற நிம்மதியான சூழலை உருவாக்கித்தர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் “நற்கருணை இல்லையேல், திருஅவை இல்லை; குருக்கள் இல்லையேல் நற்கருணை இல்லை” என்பதை உணர்ந்தவர்களாக, நாங்கள் அனைவரும், நற்கருணை, குருத்துவம் ஆகிய திருவருட்சாதனங்களின் மேன்மையைப் போற்றவும், தேவ அழைத்தலுக்காக ஜெபிக்கவும், தேவ அழைத்தலை எங்கள் குடும்பங்களிலே ஊக்குவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம், ஆண்டவருடைய சாவை, அவர் வரும்வரை அறிவிக்கிறோம்” என்கிற நம்பிக்கையின் மறையுண்மையை, எங்கள் வாய்களால் மட்டுமல்லாமல், வாழ்க்கையாலும் அறிக்கையிடவும், ஒரே அப்பத்தை உண்டு, ஒரே கிண்ணத்திலிருந்து பருகுவதன் மூலம், ஒன்றிப்பின் சாட்சிகளாக விளங்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, அவற்றின்மீது ஆசிக் கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறச்செய்து, அனைவரும் வயிறார உண்ணச்செய்த ஆண்டவரே, எங்களது நற்கருணை பக்தியானது வழிபாட்டோடு நின்றுவிடாமல், பிறரோடு, குறிப்பாக வறியவரோடு, பகிருகின்ற வாழ்வாகத் தொடர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.