Sunday, May 18, 2025

பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் அருளும் அமைதியைப் பெற்றுக் கொள்ள, பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராகிய துணையாளர் பற்றியும், அவர் நம்மோடு இருந்தால் நம்மை அவர் எவ்வாறெல்லாம் வழிநடத்துவார் என்பது பற்றியும் இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என் பெயரால் வரும் தூய ஆவியார் உங்களுக்குத் துணையாளராக இருந்து அனைத்தையும் கற்றுத்தருவார், நினைவூட்டுவார், நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம் என்று தூய ஆவியார் துணை கொண்டு துணிவுடன் நடக்க நம்மை அழைக்கிறார்.
இதே தூய ஆவியானவர் கிடைக்கப் பெற்ற துணிவுடன், எருசலேம் சங்கத்தில் விருத்தசேதனம் பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தைரியமாகவும், துணிவுடனும், நாங்களும் தூய ஆவியாரும் சேர்ந்து தீர்மானித்தோம் என்று பவுலும் பர்னபாவும் கூறுகின்றனர்.
புனித யோவானும் தூய ஆவி என்னை ஆட்கொண்டதால்தான் திருக்காட்சிகள் தமக்குக் கிடைத்ததாகக் கூறுகின்றார்.
ஆவியானவர் நம்மோடு இருக்கும்போது ஆண்டவர் அருளும் அமைதி நம்மிடையே என்றென்றும் நிலைத்து நிற்கும். இறைப் பிரசன்னம் நம்மை, அன்பால், அமைதியாய், மகிழ்ச்சியால் நிரப்ப வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் திரு அவையின் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கின்றது. விருத்தசேதனம் தேவையா என்ற சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம் என்று புனித பவுலும் பர்னபாவும் கூறும் வார்த்தைகளுக்கு
செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை : 

இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த புனித யோவானின் காட்சியை எமக்கு எடுத்துரைக்கின்றது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளிவீசிய அந்த நகருக்கு பன்னிரு வாயில்கள் மற்றும் அவற்றில் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன என்பதை விவரிக்கும் வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : யோவா 14:23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு இதனை நான் ஒரு நல்ல அறிவுடன்  அறிந்து கொள்ளவும், எனக்குத் தெரியும்.  அதற்கு  என்னால் முடியும்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்” என உறுதியளிக்கும் ஆண்டவரே, எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தூய ஆவியாரின் துணையோடு எமை வழிநடத்தவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், ஒன்றுபட்ட திருச்சமூகமாய்ப் பின்தொடர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றுரைத்த இறைவா, உலகெங்கிலும், குறிப்பாக, எங்கள் இந்திய பாக்கிஸ்தான் எல்லையிலும், நிலையான அமைதி நிலவவும், “மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!” என்கிற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, நாடாளும் தலைவர்களும், குடிமக்களும், உமக்குப் புகழ் சேர்க்கும் வழிதனில் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.” எனப் புதிய எருசலேமைச் சித்தரிக்கும் திருவெளிப்பாடு நூல் கூறுவதுபோல, பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள எம்மாணவச் செல்வங்களும், அவர்களது பெற்றோர்களும், இறைவன் அருளுகிற ஒளியிலும், கடவுள் தருகிற வழியிலும் பயணித்து, சிறந்ததோர் எதிர்காலத்தைப் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்” எனக்கூறி சீடர்களைத் திடப்படுத்திய இறைவா, தோல்வி, உடல்நலக்குறைவு, பணப்பற்றாக்குறை, ஏமாற்றம் போன்ற பல்வேறு இன்னல்களால் சோர்ந்துபோயிருக்கும் அனைவரும், மீண்டும் திடம் பெற்று, எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்” என்ற உம்மொழிக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம் சொற்படி நடக்கவும், தந்தையாகிய கடவுளும், திருமகனாகிய நீரும், தூய ஆவியாராகிய துணையாளரும் என்றென்றும் எம்மோடு குடிகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                                      Print Friendly and PDF

No comments:

Post a Comment