Tuesday, May 13, 2025

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

  பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

Gospel of John 13:31-33A, 34-35 - Fifth Sunday of Easter Year C - Articles,  Commentaries, Homilies

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

அன்பு இறைமக்களே, பாஸ்கா காலத்தின் 5ஆம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். முழு விவிலியமும் நமக்குக் கூறும் ஒரே கருத்து அன்பு ஒன்று தான். கடவுள் அன்பாயிருக்கிறார். நாமும் அன்பாய் இருப்போம் இக்கருத்தினையே இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆண்டவராகிய இயேசு, "ஒருவர் மற்றவரிடம் அன்புச் செலுத்துக்கள்” என்ற புதிய கட்டளையைக் கொடுக்கிறார். ஏனெனில், இன்னும் சிறிது காலம்தான் அவர் சீடர்களோடு இருப்பார். தான் இல்லாமல் சீடர்கள் இவ்வுலகத்தினை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையானது அன்பு. ஏனெனில் ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்குத் தேவை அன்பே என்பதை உணர்ந்திருந்தார். இதனையே இன்னும் ஆழமாக1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் எடுத்துக்கூறுகிறார் புனித பவுல்.
இந்த அன்பினால் உந்தப்பட்டவர்களாய் புனித பவுலும் பர்னபாவும், ஊர் ஊராக, நகர் நகராகச் சென்று மக்களை இறையாட்சியின்பால் நிலைத்திருக்க ஊக்குவிக்க முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகமும், அன்பு நிறை இறைச் சமூகமாக நாம் வாழ்ந்தால் மட்டுமே. புதிய மண்ணகத்தையும, புதிய விண்ணகத்தையும் நம்மால் காண முடியும் என்பதை இரண்டாம் வாசகமும் எடுத்துக் கூறுகின்றன. இயேசுவின் அன்புதான் நம்மை ஒன்று சேர்க்கிறது. அவரின் அன்பு நம்மிடையே இருக்குமானால் நாமும் அவரின் சீடர்களாக இருப்போம். அவரின் அன்புச் சீடர்களாய் அவரின் அன்பை விதைப்போம், அன்பு நிறை இறைச் சமூகத்தினைக் காண்போம் என்ற எதிர்நோக்கோடு இத்திருப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை :

பவுலும் பர்னபாவும்  மனம் தளர்ந்தவர்களுக்கு  'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்திய நிகழ்வை எடுத்துக்கூறுகிறது. பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்று அறிவுரை வழங்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றிக் கூறுகிறார். நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புது வாழ்வை வழங்கக் கடவுள் வல்லவராய் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டு வாழ அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா! “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தாங்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்துவதிலும், நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவிப்பவதிலும் சிறந்தோங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், பிற இனத்தவர்க்கு நம்பிக்கைக் கொள்ளும் வாய்ப்பினைக் கொடுத்ததையும், பவுலடியாரும் பர்னபாவும் அறிவித்தது போல, "கிறிஸ்து என்னும் ஒருவரில் நாம் அனைவரும் ஒன்றே" என்கிற விருதுவாக்கோடு, தம் திருப்பணியைத் தொடங்கியுள்ள எம்புதிய திருத்தந்தையுடன், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றித்துப் பயணிக்கவும், ஒளியாம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிக்கவும் அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறி அரியணையில் வீற்றிருக்கும் ஆண்டவரே, தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் சூழல்களால் அவைதியுறும் எம்தேசத்தையும் பிற நாடுகளையும், நீர் தாமே அமைதியின் பாதைக்கு மீண்டும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார்; அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார்” என்கிற இரண்டாம் வாசக இறைவாக்கு, இன்னலுறும் இவ்வுலகிற்கும், எங்கள் அனைவருக்கும், ஆறுதலாக இருப்பதோடு, எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்கவும் உதவிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையின் பொருளை உணர்ந்தவர்களாய், முதன்முதலில் எங்கள் குடும்பத்திலும், அதன் பின்னர் நாங்கள் வாழ்கிற பங்கிலும், சமூகத்திலும், ஒருவர் ஒருவருக்கு அன்புச் செலுத்தவும், அதன் மூலம், நாங்கள் உம் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Print Friendly and PDF

No comments:

Post a Comment