ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபேசியர் 9:24-28;10:19-23
லூக்கா 24 :46-53
திருப்பலி முன்னுரை:
அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!
உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லைவரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.
வாசக முன்னுரை:
முதல் வாசக முன்னுரை:
இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.
1. மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி
2. ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி
3. ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:
1. ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில் “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று சீடர்களுக்குப் பணிக்கப்பட்ட கடமையை நினைவு கூர்கிறோம். இறைமக்களாகிய நாங்கள் யாவரும், உலகின் எல்லாத் திசைகளிலும், உம்முடைய உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும், எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ, மற்றும் திருஅவைத் தலைவர்கள் அனைவரும், சாட்சிய வாழ்வில் நாங்கள் நிலைத்திருக்க, எங்களைத் துடிப்புடன் வழிநடத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அவர்கள் கண்கள் முன்பாக மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டவரை, அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சீடர்களைப் போன்று, நாங்களும் எங்கள் கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறோம். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்து ஆட்சி செய்கிற நீர், உலகிற்கு அமைதி அருளவும், போர், கலவரம், வன்முறை, தீவிரவாதம் ஆகிய கொடுமைகளிலிருந்து மானுடத்தை மீட்கவும், அமைதிக்காக உழைக்கும் நல்மனதினை, நாடாளும் தலைவர்களுக்கு நல்கிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குருவாக விண்ணகம் நுழைந்து, விண்ணக வாயிலைத் திறந்து வைத்துள்ள இறைமகனே, இறைமக்கள் அனைவரும், மண்ணுலகத் தேவைகளில் புதையுண்டு போகாமல், விண்ணுலகுச் சார்ந்தவற்றை நாடுகின்ற ஊக்கம் நிறைந்த எதிர்நோக்கின் பயணிகளாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்வோமாக” என்கிற திருமுக வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மை அணுகி வருகிறோம். இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறைகள் யாவும் நீங்கப்பெற்ற நிறை வாழ்வைப் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்ற உம்மொழிக்கேற்ப, தூய ஆவியாரின் துணையோடு செம்மையான வாழ்வை நாங்கள் மேற்கொள்ளவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்குகிற இவ்வேளையில், மாணவ மாணவியர் அனைவரும், ஆசிரிய பெருமைக்களும், ஆவியின் வரங்களாலும் கொடைகளாலும் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.