Wednesday, May 28, 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 2025

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபேசியர் 9:24-28;10:19-23
லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லைவரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.

அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

1. மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

2.  ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

3. ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:

1. ஆண்டவரின் விண்ணேற்புப் பெருவிழாவை கொண்டாடுகிற இந்நாளில் “இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்று சீடர்களுக்குப் பணிக்கப்பட்ட கடமையை நினைவு கூர்கிறோம். இறைமக்களாகிய நாங்கள் யாவரும், உலகின் எல்லாத் திசைகளிலும், உம்முடைய உயிருள்ள சாட்சிகளாக விளங்கவும், எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ, மற்றும் திருஅவைத் தலைவர்கள் அனைவரும், சாட்சிய வாழ்வில் நாங்கள் நிலைத்திருக்க, எங்களைத் துடிப்புடன் வழிநடத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அவர்கள் கண்கள் முன்பாக மேலே எடுத்துக்கொள்ளப்பட்ட ஆண்டவரை, அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த சீடர்களைப் போன்று, நாங்களும் எங்கள் கண்களை உம்மை நோக்கி உயர்த்துகிறோம். தந்தையின் வலப்புறம் வீற்றிருந்து ஆட்சி செய்கிற நீர், உலகிற்கு அமைதி அருளவும், போர், கலவரம், வன்முறை, தீவிரவாதம் ஆகிய கொடுமைகளிலிருந்து மானுடத்தை மீட்கவும், அமைதிக்காக உழைக்கும் நல்மனதினை, நாடாளும் தலைவர்களுக்கு நல்கிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கடவுளுடைய இல்லத்தின்மீது அதிகாரம் பெற்ற பெரிய குருவாக விண்ணகம் நுழைந்து, விண்ணக வாயிலைத் திறந்து வைத்துள்ள இறைமகனே, இறைமக்கள் அனைவரும், மண்ணுலகத் தேவைகளில் புதையுண்டு போகாமல், விண்ணுலகுச் சார்ந்தவற்றை நாடுகின்ற ஊக்கம் நிறைந்த எதிர்நோக்கின் பயணிகளாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். உறுதியான நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்வோமாக” என்கிற திருமுக வரிகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் உம்மை அணுகி வருகிறோம். இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், குறைகள் யாவும் நீங்கப்பெற்ற நிறை வாழ்வைப் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்ற உம்மொழிக்கேற்ப, தூய ஆவியாரின் துணையோடு செம்மையான வாழ்வை நாங்கள் மேற்கொள்ளவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்குகிற இவ்வேளையில், மாணவ மாணவியர் அனைவரும், ஆசிரிய பெருமைக்களும், ஆவியின் வரங்களாலும் கொடைகளாலும் நிரப்பப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, May 18, 2025

பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் 6ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை

ஆண்டவர் அருளும் அமைதியைப் பெற்றுக் கொள்ள, பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு திருப்பலிக்கு வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பப் போகிற தூய ஆவியாராகிய துணையாளர் பற்றியும், அவர் நம்மோடு இருந்தால் நம்மை அவர் எவ்வாறெல்லாம் வழிநடத்துவார் என்பது பற்றியும் இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, என் பெயரால் வரும் தூய ஆவியார் உங்களுக்குத் துணையாளராக இருந்து அனைத்தையும் கற்றுத்தருவார், நினைவூட்டுவார், நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம் என்று தூய ஆவியார் துணை கொண்டு துணிவுடன் நடக்க நம்மை அழைக்கிறார்.
இதே தூய ஆவியானவர் கிடைக்கப் பெற்ற துணிவுடன், எருசலேம் சங்கத்தில் விருத்தசேதனம் பற்றிய கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, தைரியமாகவும், துணிவுடனும், நாங்களும் தூய ஆவியாரும் சேர்ந்து தீர்மானித்தோம் என்று பவுலும் பர்னபாவும் கூறுகின்றனர்.
புனித யோவானும் தூய ஆவி என்னை ஆட்கொண்டதால்தான் திருக்காட்சிகள் தமக்குக் கிடைத்ததாகக் கூறுகின்றார்.
ஆவியானவர் நம்மோடு இருக்கும்போது ஆண்டவர் அருளும் அமைதி நம்மிடையே என்றென்றும் நிலைத்து நிற்கும். இறைப் பிரசன்னம் நம்மை, அன்பால், அமைதியாய், மகிழ்ச்சியால் நிரப்ப வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகம் திரு அவையின் மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கின்றது. விருத்தசேதனம் தேவையா என்ற சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம் என்று புனித பவுலும் பர்னபாவும் கூறும் வார்த்தைகளுக்கு
செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை : 

இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த புனித யோவானின் காட்சியை எமக்கு எடுத்துரைக்கின்றது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளிவீசிய அந்த நகருக்கு பன்னிரு வாயில்கள் மற்றும் அவற்றில் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தன என்பதை விவரிக்கும் வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி : யோவா 14:23

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு இதனை நான் ஒரு நல்ல அறிவுடன்  அறிந்து கொள்ளவும், எனக்குத் தெரியும்.  அதற்கு  என்னால் முடியும்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1. “என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்” என உறுதியளிக்கும் ஆண்டவரே, எங்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தூய ஆவியாரின் துணையோடு எமை வழிநடத்தவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், ஒன்றுபட்ட திருச்சமூகமாய்ப் பின்தொடர வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றுரைத்த இறைவா, உலகெங்கிலும், குறிப்பாக, எங்கள் இந்திய பாக்கிஸ்தான் எல்லையிலும், நிலையான அமைதி நிலவவும், “மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக!” என்கிற திருப்பாடல் வரிகளுக்கு ஏற்ப, நாடாளும் தலைவர்களும், குடிமக்களும், உமக்குப் புகழ் சேர்க்கும் வழிதனில் பயணிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.” எனப் புதிய எருசலேமைச் சித்தரிக்கும் திருவெளிப்பாடு நூல் கூறுவதுபோல, பத்தாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள எம்மாணவச் செல்வங்களும், அவர்களது பெற்றோர்களும், இறைவன் அருளுகிற ஒளியிலும், கடவுள் தருகிற வழியிலும் பயணித்து, சிறந்ததோர் எதிர்காலத்தைப் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம்” எனக்கூறி சீடர்களைத் திடப்படுத்திய இறைவா, தோல்வி, உடல்நலக்குறைவு, பணப்பற்றாக்குறை, ஏமாற்றம் போன்ற பல்வேறு இன்னல்களால் சோர்ந்துபோயிருக்கும் அனைவரும், மீண்டும் திடம் பெற்று, எதிர்நோக்கின் திருப்பயணிகளாய் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார்” என்ற உம்மொழிக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம் சொற்படி நடக்கவும், தந்தையாகிய கடவுளும், திருமகனாகிய நீரும், தூய ஆவியாராகிய துணையாளரும் என்றென்றும் எம்மோடு குடிகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                                      Print Friendly and PDF

Tuesday, May 13, 2025

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

  பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

Gospel of John 13:31-33A, 34-35 - Fifth Sunday of Easter Year C - Articles,  Commentaries, Homilies

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

அன்பு இறைமக்களே, பாஸ்கா காலத்தின் 5ஆம் ஞாயிறு திருப்பலிக்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். முழு விவிலியமும் நமக்குக் கூறும் ஒரே கருத்து அன்பு ஒன்று தான். கடவுள் அன்பாயிருக்கிறார். நாமும் அன்பாய் இருப்போம் இக்கருத்தினையே இன்றைய வாசகங்கள் நமக்கு அறிவுறுத்துகின்றன. ஆண்டவராகிய இயேசு, "ஒருவர் மற்றவரிடம் அன்புச் செலுத்துக்கள்” என்ற புதிய கட்டளையைக் கொடுக்கிறார். ஏனெனில், இன்னும் சிறிது காலம்தான் அவர் சீடர்களோடு இருப்பார். தான் இல்லாமல் சீடர்கள் இவ்வுலகத்தினை எதிர்கொள்ள அவர்களுக்குத் தேவையானது அன்பு. ஏனெனில் ஒருவர் மற்றவரை ஏற்றுக் கொண்டு வாழ்வதற்குத் தேவை அன்பே என்பதை உணர்ந்திருந்தார். இதனையே இன்னும் ஆழமாக1 கொரிந்தியர் 13ஆம் அதிகாரத்தில் எடுத்துக்கூறுகிறார் புனித பவுல்.
இந்த அன்பினால் உந்தப்பட்டவர்களாய் புனித பவுலும் பர்னபாவும், ஊர் ஊராக, நகர் நகராகச் சென்று மக்களை இறையாட்சியின்பால் நிலைத்திருக்க ஊக்குவிக்க முடிந்தது என்பதை இன்றைய முதல் வாசகமும், அன்பு நிறை இறைச் சமூகமாக நாம் வாழ்ந்தால் மட்டுமே. புதிய மண்ணகத்தையும, புதிய விண்ணகத்தையும் நம்மால் காண முடியும் என்பதை இரண்டாம் வாசகமும் எடுத்துக் கூறுகின்றன. இயேசுவின் அன்புதான் நம்மை ஒன்று சேர்க்கிறது. அவரின் அன்பு நம்மிடையே இருக்குமானால் நாமும் அவரின் சீடர்களாக இருப்போம். அவரின் அன்புச் சீடர்களாய் அவரின் அன்பை விதைப்போம், அன்பு நிறை இறைச் சமூகத்தினைக் காண்போம் என்ற எதிர்நோக்கோடு இத்திருப்பலியில் இணைந்து மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை :

பவுலும் பர்னபாவும்  மனம் தளர்ந்தவர்களுக்கு  'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். மக்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்திய நிகழ்வை எடுத்துக்கூறுகிறது. பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு நாம் உட்பட முடியும் என்று அறிவுரை வழங்கும் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் பற்றிக் கூறுகிறார். நம் கண்ணீர் அனைத்தையும் துடைக்கும் கடவுளின் மக்களாக வாழ நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம். சாவு, துயரம், அழுகை இல்லாத புது வாழ்வை வழங்கக் கடவுள் வல்லவராய் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கைக் கொண்டு வாழ அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா! “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் புதிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களும், ஏனைய திருஅவைத் தலைவர்களும், தாங்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்துவதிலும், நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவிப்பவதிலும் சிறந்தோங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், பிற இனத்தவர்க்கு நம்பிக்கைக் கொள்ளும் வாய்ப்பினைக் கொடுத்ததையும், பவுலடியாரும் பர்னபாவும் அறிவித்தது போல, "கிறிஸ்து என்னும் ஒருவரில் நாம் அனைவரும் ஒன்றே" என்கிற விருதுவாக்கோடு, தம் திருப்பணியைத் தொடங்கியுள்ள எம்புதிய திருத்தந்தையுடன், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்றித்துப் பயணிக்கவும், ஒளியாம் கிறிஸ்துவை உலகிற்கு அறிவிக்கவும் அருள் தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறி அரியணையில் வீற்றிருக்கும் ஆண்டவரே, தீவிரவாத தாக்குதல்கள் மற்றும் போர் சூழல்களால் அவைதியுறும் எம்தேசத்தையும் பிற நாடுகளையும், நீர் தாமே அமைதியின் பாதைக்கு மீண்டும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார்; அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்துவிடுவார்” என்கிற இரண்டாம் வாசக இறைவாக்கு, இன்னலுறும் இவ்வுலகிற்கும், எங்கள் அனைவருக்கும், ஆறுதலாக இருப்பதோடு, எதிர்நோக்கின் திருப்பயணிகளாகப் பயணிக்கவும் உதவிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையின் பொருளை உணர்ந்தவர்களாய், முதன்முதலில் எங்கள் குடும்பத்திலும், அதன் பின்னர் நாங்கள் வாழ்கிற பங்கிலும், சமூகத்திலும், ஒருவர் ஒருவருக்கு அன்புச் செலுத்தவும், அதன் மூலம், நாங்கள் உம் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Print Friendly and PDF

Thursday, May 8, 2025

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:

ஆண்டவரின்‌ குரலுக்குச்‌ செவிசாய்க்க அழைக்கும்‌ பாஸ்கா காலத்தின்‌ 4ஆம்‌ ஞாயிறு திருப்பலிக்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்‌.  
இன்றைய நற்செய்தி வாசகத்தில்‌, நல்ல ஆயனாக இருந்து தன்‌ ஆடுகளை வழிநடத்தும்‌ இயேசுவை நாம்‌ பார்க்கிறோம்‌. ஆயனின்‌ வார்த்தைகளை ஏற்று அவர்பின் தொடர்ந்தால்‌ நிலைவாழ்வை அளிப்பதாக வாக்கு கொடுக்கிறார்‌ நம்‌ ஆண்டவர்‌.  
இதையே யூத மக்களைப்‌ பார்த்து எடுத்துக்‌ கூறுகிறார்கள்‌. புனித பவுலும்‌ பர்னபாவும்‌. கடவுளின்‌ வார்த்தைகளை உதறித்‌ தள்ளினால்‌, நீங்கள்‌ நிலைவாழ்வைப்‌ பெற்றுக்‌ கொள்ளமாட்டீர்கள்‌. அவ்வார்த்தைகளை யார்‌ ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள்‌ நிலைவாழ்வுக்குத்‌ தகுதியுடையவர்கள்‌ என்று. முதல்‌ வாசகத்தில்‌ கூறுகிறார்‌. இரண்டாம்‌ வாசகத்தில்‌ புனித யோவானோ, ஆயனாம்‌ இருப்பவரே ஆட்டுக்குட்டியாய்‌ மாறி நமக்கு நிலைவாழ்வுப்‌ பெற்றுக்கொடுப்பவர்‌ என்றும்‌ கூறுகிறார்‌.  
நூறு ஆடுகளில்‌ ஓர்‌ ஆடு செவிகொடுக்காமல்‌ தப்பிப்‌ போனாலும்‌ அந்த ஆட்டையும்‌ கண்டுபிடித்துத் தன் மந்தையில்‌ சேர்க்கும்‌ நல்ல ஆயனாம்‌ இயேசு இன்று நம்மையும்‌ அவர்‌ வார்த்தைகளுக்குச்‌ செவிகொடுக்க அழைக்கிறார்‌. நிலைவாழ்வைப்‌ பெற்றுக்கொள்ள நாமும்‌ நல்ல ஆடுகளாய்‌ அவரைப்‌ பின்‌ தொடரும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ இணைந்து வேண்டுவோம்‌.    

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதைக் கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் மீட்பிற்காகத்‌ தன்னையே கையளித்த அந்த ஆட்டுக்குட்டியின்‌ இரத்தத்தில்‌ துவைத்தெடுத்த வெண்ணிற ஆடையை அணிந்தவர்கள்‌ மட்டுமே இறைவனின்‌ அரியணைக்கு முன்பாக நிற்கத்‌ தகுதி பெற்றவர்கள்‌ என்று நமக்குத் தெளிவுப்படுத்தும் இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன” என்றுரைத்த நல்லாயனே இறைவா, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை  14 -ஆம் லியோ அவர்களை நீர் தாமே தாங்கி வழிநடத்த வேண்டுமென்றும், திருஅவையானது, அவரது தலைமையின் கீழ் உமது வழியில் நடக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார்” என்கிற இரண்டாம் வாசக கூற்றின்படி, எங்கள் இந்திய எல்லையில் நடைபெறுகிற தீவிரவாதத் தாக்குதல்கள் முற்றிலும் ஒழித்தழிக்கப்படவும், இந்திய-பாக்கிஸ்தான் எல்லையில் நிலவுகிற போர் பதட்டங்கள் நீங்கி, அமைதி திரும்பவும்  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளைப் பெற்றுள்ள மாணவச்செல்வங்கள், விரும்புகிற கல்லூரிகளில், விரும்புகிற பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்கிற வாய்ப்பினை நீர் உருவாக்கித்தர வேண்டுமென்றும், அவர்களும் அவர்களது பெற்றோர்களும் சரியான பாதையைத் தெரிவு செய்ய நீர் தாமே உதவ வேண்டுமென்றும், தோல்வியுற்ற மாணவர்கள் துவண்டு போகாமல் மீண்டும் மும்மரமாய் உழைத்து வெற்றிபெற  வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர்” என்கிற முதல்வாசக உண்மைக்கேற்ப, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நம்பிக்கையில் நிலைத்திருந்து, எதிர்நோக்கில் பயணித்து, பிறரன்பில் வளர்ந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.     தேவையான உம் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


Print Friendly and PDF