Sunday, May 26, 2019

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 9: 24-28
லூக்கா 24 :46-53

திருப்பலி முன்னுரை:

 

அன்பு சகோதர சகோதரிகளே! ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட நம் ஆலயத்தில் ஒருமனப்பட்டுப் பெரும் மகிழ்ச்சியுடன் குழுமியிருக்கும் அனைவருக்கும் எல்லாப் பெயர்களிலும் மேலான இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள் உரித்தாகுக!

உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாற்பது நாட்களின் உடனிருப்பு முடிவுப்பெறும் வேளையில் தம் சீடர்களை அழைத்து, தனக்குப் பின் தந்தையின் இறையாட்சியை எப்படித் தூதுரைக்க வேண்டும்? அவர்களின் சாட்சியவாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்றும், அதற்குத் துணையாகத் தூய ஆவியாரின் வல்லமை மிகுந்த ஆற்றலைப் பெற்றுக் கொண்டு உலகின் கடைசி எல்லை வரை அறிவித்ததை இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.


அண்ணாந்துப் பார்த்து நின்றச் சீடர்கள் வீறுக்கொண்டு எழுந்து, நிறைவாழ்வை இவ்வுலகில் முன் நிறுத்தி, உலக மாந்தர்கள் அனைவரையும் இயேசுவின் அன்புச் சீடர்களாய் மாற்றியது போல, நாமும் இயேசுவின் ஆற்றலால் இத்தகைய நற்செயல்களைச் செய்திட, அதனால் நாம் எதிர் நோக்கும் சவால்களை வெற்றிக் கொள்ள, இறைஇரக்கத்தின் திருமுகமாம் இயேசுவின் அருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள் மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களைத் துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் வலிமை மிக்கத் தம் ஆற்றலை, கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, இறந்த அவரை உயிர்த்தெழச் செய்து, விண்ணுலகில் தமது வலப்பக்கத்தில் அமர்ந்தினார். அதன் மூலம் அனைவருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். வேறு எப்பெயருக்கும் மேலாகவும் அவரை உயர்த்தினார். அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச்செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். இவைகளை உணர்ந்து கொள்ள ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வராக! என்ற இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 47: 1-2, 5-6, 7-8

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி
 

நம்பிக்கையாளரின்மன்றாட்டுகள்:


1.இறைஞ்சுவோருக்கு இரங்கிடும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியார், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப்பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்றுப் பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்துக் காட்டிட எங்களுக்குத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2உறவை வளர்க்கும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சிப் பறைச்சாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எமையாளும் அன்பின் அரசே! இறைவா! உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். உமது பணியின் நிமித்தம் துன்பப்படும் உமது ஊழியர்களையும் மற்றும் உம்மை ஏற்றுக் கொண்ட மக்களையும் பாதுகாத்து, அவர்களை இறைநம்பிக்கையில் வேருன்றி வளர்ந்திடவும், அவர்களைத் துன்புறுத்துவர் மனமாறி நல்ல வழியில் நடத்திடவும் உமது அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் வாழ்வின் ஒளியும் வழியுமாய் இருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. வாழவளிக்கும் வள்ளலே எம் இறைவா! உம் திருவுளப்படி அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளீர். புதிய அரசு உமது விழுமியங்களை ஏற்று அனைவருக்கும் வளமான நலமான வாழ்வை அளித்து அனைத்து மக்களிம் ஏற்றம் பெற உழைத்திட நல்மனமும் ஞானத்தையும் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


www.anbinmadal.org

 


Wednesday, May 22, 2019

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 15: 1-2,22-29
திருவெளிப்பாடு 21: 10-14,22,23
யோவான் 14 :23-29

திருப்பலி முன்னுரை:


அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் அமைதியையும் அவரது துணையாளரையும் பெற்றுக் கொண்டு புது வாழ்வுப் பெற நாம் அனைவரும் இத்திருப்பலியில் பங்கேற்போம்.
வெறும் சட்டத்திட்டங்களை மட்டும் மையமாகக் கொண்டதல்ல நம் கிறிஸ்தவ வாழ்வு. மாறாக அன்பே அடித்தளமாக இருக்க வேண்டும். மனிதருக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதன் மூலம் இறைவனின் மாட்சியையும் ஒளியையும் பெற்றுக்கொள்ள முதல் இரு வாசகங்களும் எடுத்துரைக்கின்றது.
நமது உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம். அவர் அனுப்பும் அவரது துணையாளரை ஏற்றுக் கொண்டு இவ்வுலகில் அமைதியின் தூதுவராக, ஒருங்கிணைந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


பழைய ஏற்பாட்டின் யாவே கடவுள் மோசே வழியாகக் கொடுத்த மரபு சட்டங்களையும், முறைமைகளையும் புதிய ஆதாமாகிய கிறிஸ்துவை நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது விருத்தசேதனம் பிற இனத்தவர்கள் செய்து கொள்ள வேண்டுமென்று கட்டாயமல்ல. இப்பிரச்சனைக்குத் திருத்தூதர்கள் பவுல், பர்னபா இருவரும் கையாண்ட விதமும், அவர்களின் அணுகுமுறைகளும் பெரும் வியப்புக்குரியதாக இருந்தது. கிறிஸ்துவின் சட்டம் அன்பின் சட்டம். அவரின் நுகம் அழுத்தாது. அவரின் சுமை எளிது என்பதை உணர்த்தும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

 
எருசலேம் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அத்திருநகருக்குத் தூயஆவியார் அழைத்துச் சென்று கடவுளின் மாட்சியையும், ஒளியையும் இஸ்ரயேல் மக்களின் 12 குலங்களின் பெயர்கள் அதன் வாயில்களில் பொறிக்கப்பட்டிருப்பதையும் திருத்தூதர் யோவானுக்குக் காட்டினார். எல்லாம் வல்லக் கடவுளாகிய ஆண்டவர் அதன் ஆட்டுக்குட்டியே என்று எடுத்துரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 67: 1-2. 4. 5,7

பல்லவி: கடவுளே! மக்களினத்தார் எல்லாரும் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக! அல்லது: அல்லேலூயா.

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அருள்கொடைகளின் நாயகனே! எம் இறைவா! திருஆட்சியாளர்கள் தங்கள் வாழ்வில் உம் சொற்களால் ஊட்டம் பெற்றுத் தம் விசுவாச வாழ்வில் வெற்றிப் பெறவும், உம் விசுவாசம் உம்மை நலமாக்கும் என்றும் உம் வார்த்தைகளை வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! மனிதன் பாங்குடன் வாழ இயற்கையைப் படைத்து ஆளும் எம் இறைவா! எங்கு நோக்கினும் இயற்கையை அழித்து மனிதனுக்குத் தேவையான காற்று நீர், நிலம், ஆகாயம், பூமி ஆகியவற்றை வீணடிக்கும் வீணர்களிடமிருந்து காத்திடவும், தண்ணீர் பற்றக்குறையால் அவதிபடும் உம் மக்களுக்கு நிறைவாய் மழைப் பொழியச் செய்து வளமுடன் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உம் ஒரே மகனை எமக்கு உணவாக அளித்த இறைவா! எங்கள் குடும்பங்களில் நிலைவாழ்வுத் தரும் இயேசுவின் அன்பு உறவில் நிலைத்து வாழ்ந்திடவும், உலகக்காரியங்களிலிருந்து விடுபட்டுப் புதுவாழ்வுப் பெறவும், எங்கள் மனங்கள் புதிப்பிக்கப்படவும், உண்மையான நீதியிலும், தூய்மையிலும் வாழ வேண்டிய வரம் கேட்டு உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் இறைவா, எமது நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனின் மனநிலையில் மக்களை வழி நடத்தவும் சுயநலத்தையும் அதிகாரத்தின் சுயநலபிடியிலிருந்து தளர்ந்துச் சமத்துவச் சமுதாயம் படைத்திட வேண்டிய அருள் வரங்களை நிறைவாய் பொழிந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். தடுக்காதீர்ககள் என்று மொழிந்த இயேசுவே சிறார் முதல் இளைஞர்கள் வரை உமது பொற்பாதங்களில் அர்ப்பணிக்கின்றோம். அவாகள் ஏறெடுக்கும் கல்வி மற்றும் கலாச்சாரம் நமது பண்பாட்டிற்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் ஏற்றதாகவும் பயிலும் மணாக்கர்கள் தங்கள் கல்வியைச் சிறந்த முறையில் கற்றிட வரம் வேண்டி இயேசுவே உம்மை மன்றாடுகிறோம்.

Tuesday, May 14, 2019

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 14:21ஆ-27
திருவெளிப்பாடு 21:1-5அ
யோவான் 13:31-33அ, 34-35

திருப்பலி முன்னுரை:


அன்பு சகோதர சகோதரிகளே! பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து இயேசுவின் புதிய கட்டளையை அறிந்து கொள்ள ஆவலுடன் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்!

நம் வாழ்க்கையே ஒரு பயணம் தான். இந்தப்பயணத்தில் நாம் மகிழ்வோடு பயணிக்க வேண்டுமென்றால் தியாக அன்பு நம் அனைவரிலும் இருக்க வேண்டும். “நான் உங்களை அன்புச் செய்தது போல நீங்களும் ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்” என்ற இயேசுவின் அன்புக் கட்டளையை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது.

பர்னபா, பவுல் இவர்களின் வெற்றியின் காரணம், பர்னபா பவுலடியார் மீது கொண்டுள்ள தன்னலமற்ற அன்பையும், தியாக அன்பையும் சுட்டிக்காட்டுகிறது. இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:



முதல் வாசகமுன்னுரை:


 பவுலும் பர்னபாவும் மனம் தளர்ந்தவர்களுக்குத் 'துன்பங்கள் வழியே தாம் இறையரசுக்குள் நுழைய முடியும்' எனக் கற்பிக்கின்றனர். 'செபித்து, நோன்பிருந்து, இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து'த் தலைவர்களை நியமிக்கின்றனர். இதில் இவர்கள் தங்கள் மக்கள்மேல் கொண்டிருந்த அக்கறையும், பொறுப்புணர்வும் தெரிகிறது.  இப்படியாக, இயேசுவின் புதிய கட்டளையை வாழ்ந்துக் காட்டி, அன்பின் வழியாகத் தாங்கள் இயேசுவின் சீடர்கள் என்பதற்குச் சான்றுப் பகர்கின்றத்  திருத்தூதர் பணிகள் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:


இந்த அன்புக் கட்டளையை நாம் எப்படி வாழ்வது? என்ற கேள்விக்குப் பதில் தருகிறது இன்றைய இரண்டாம் வாசகம் (திவெ 21:1-5அ). இன்றைய இரண்டாம் வாசகத்தில், 'புதிய வானகமும், புதிய வையகமும் இறங்கி வருவதைக்' காட்சியில் காண்கின்றார் யோவான். அவர் கூறும் ஐந்து கருத்துக்கள். 1. அன்பின் முதற்படித் தீமைக் களைவது. 2. 'இதோ நான் அனைத்தையும் புதியனவாக்குகிறேன்'. 3. 'இனி கடவுளின் கூடாரம் மனிதர்கள் நடுவே!' . 4. 'இறைவன் அவர்களோடு!'  5. . 'அவர்கள் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.' அன்பின் கரம் கண்ணீர் துடைக்க வேண்டும். இந்த வாசகத்திற்கு அன்புடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்


பல்லவி: என் கடவுளே, உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்!
திருப்பாடல்: 145: 8-13.


ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர். எளிதில் சினம் கொள்ளாதவர். பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர். தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும். உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள். உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு. உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! `ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

 

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்:

1.அன்பின் இறைவா! உம் அன்புக் குழந்தைகளாகிய திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்றுப் பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்துப் பழகிய நாங்கள் களங்மில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில் விதைத்துப் புதியதொரு விண்ணகத்தை இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழத் தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. 'அன்புத் தீவினையில் மகிழ்வுறாது' என்ற பவுலடியார் வார்த்தைகளுக்கு இணங்க உலகில் உள்ள தீவிரவாதிகள் இயேசுவின் அன்பான ஆழமும், அகலமும், நிபந்தனையும், எல்லையும் இல்லா அன்பை உய்த்து உணர்ந்துத் தீவிரவாதத்தைக் கைவிட்டு அனைவரும் அமைதியில் வாழத் தேவையான மனமாற்றத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்துக் கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையைப் பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Wednesday, May 8, 2019

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 13: 14,43-52
திருவெளிப்பாடு 7: 9,14b-17
யோவான் 10: 27-30

திருப்பலி முன்னுரை:


பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறுக் கொண்டாடங்களில் கலந்து வந்துள்ள உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! ரையும் அன்புடன் வரவேற்கிறோம். இயேசுவின் குரலுக்குச் செவிசாய்க்கும் அனைவரும் இயேசுவின் உண்மைச் சீடர்கள் என்ற கருத்தை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. நல்லாயனாம் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு மட்டுமல்ல, அதைச் செயலில் வாழ்ந்துக் காட்டுகின்ற மக்களாக இருக்க வேண்டும். வெறும் வாய்ச்சொல் வீரர்களாக மட்டும் இருந்தால் அஃது ஒன்றுக்கும் உதவாது என்ற கருத்தை இன்றைய இரண்டாம் வாசகம் நம் முன்வைக்கிறது.

நான் தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் உலகில் சென்று பலன் தரும்படியாக நான் தான் உங்களைத் தேர்ந்துக்கொண்டேன் என்ற இயேசுவின் வார்த்தையைச் சிந்தித்துப் பார்த்தால் இறையழைத்தலின் மகிமையை நன்கு உணரலாம். இயேசுவின் அழைப்பை ஏற்ற அவரது அடிச்சுவட்டில் வாழ நம்மையே இறைவனுக்கு அர்ப்பணிப்போம். அதற்கான இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


தாங்கள் அறிவித்த நற்செய்திக்கு யூதர்கள் 'செவிமடுக்காததால்', தங்கள் நற்செய்தியை புறவினத்தாரிடம் கொண்டு செல்கின்றனர் பவுலும் பர்னபாவும். புறவினத்தார் இந்தப் புதிய நற்செய்தியை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். புறவினத்தாரின் மகிழ்ச்சி, யூதர்களின் பொறாமையாக உருவெடுக்கிறது. ஆண்டவரை அறிதல் மனிதர்கள் நடுவில் பிளவை ஏற்படுத்துகிறது  இதை கூறும் இன்றைய முதல் வாசகமான திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்க கவனமுடன் கேட்போம்.




இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் தன் ஆடுகளை அறிந்த இயேசு தானே ஆட்டுக்குட்டியாகத் தன்னை பலியாக்குகின்றார். இவரின் குரலுக்குச் செவிமடுத்து இவரைப் பின்பற்றியவர்களின் ஆடைகளை இவர் தன் இரத்தத்தால் தூய்மையாக்குகின்றார். பலியான ஆட்டுக்குட்டியே அவர்களை மேய்க்கின்றார். அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுகிறார்' என்று நமக்கு தெளிவுப்படுத்தும் வாசகத்திற்கு கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5


பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்!
மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! -பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்!
அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள்,
அவர் மேய்க்கும் ஆடுகள்! -பல்லவி

5 ஏனெனில், ஆண்டவர் நல்லவர்;
என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு;
தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


 1. எம் நல்ல மேய்ப்பனாம் எம் இறைவா! திருஅவை இறையழைத்தல் ஞாயிறைக் கொண்டாடும் இவ்வேளையில் உம் திருஅவையின் பணியாளர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் குரலுக்குச் செவிசாய்த்து அவர் காட்டிய பாதையில் இனிதே பயணிக்கத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. என்றுமே மாறாத அன்பு கொண்ட எம் இறைவா, இன்றைய சூழலில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் நல்ல தலைவர்களாகவும், சமுதாயத்தில் நல்ல வழிகாட்டிகளாகவும், தடுமாறுகிறவர்களுக்குப் புதிய பாதையாகவும், வாழ்வை இழந்தவர்களுக்கு வாழ்வாகவும் எம் ஆயனாம் இயேசுவின் பாதையில் தடம் மாறாதுப் பயணம் செல்லத் தேவையான அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இன்று உலகில் நடைபெறும் மாற்றங்களால் நலிவடையும் மற்றும் மழைப்பொழிவை இழந்து தவிக்கும் என் விவசாயப் பெருமக்களை உம் முன் வைக்கிறோம். நல்ல மழையை பொழியச் செய்து நீர் வளம் பெறுகவும், அரசாங்கத்தாலும், மற்றவர்களாலும் அவர்கள் உழைப்புச் சுரண்டப்படாமல், உழைப்புக்கேற்றப் பலனையும் மதிப்பையும் அடையவும், பொருளாதர வளர்ச்சிக் கண்டு இன்புறவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அறுவடையே அதிகம் ஆட்களோ குறைவு என்று உம் பணிக்கு எம்மை அழைத்த இறைவா! தேவ அழைத்தல் எந்த நிலையிலும் உண்டு என்பதை உணர்ந்து, உமது பணிச் செவ்வனே செய்யவும், எம் தாய்நாட்டிலிருந்து உம் சேவைக்காய் வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் ஆயனின் பணிகளைச் சிறப்புடன் செய்திட நல்ல மனதையும், உடல்நலத்தையும், உம்மேல் உறுதியான நம்பிக்கையுடன் அருட்பணிகள் செய்திட வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் கலங்கரைவிளக்காம் தந்தையே எம் இறைவா! கல்வியாண்டுத் தேர்வுகளில் வெற்றிப் பெற்றுப் புதிய கல்விநிலையங்களுக்குச் செல்லும் எம் பிள்ளைகளை உம் கரம் ஒப்படைக்கின்றோம். ஒழுக்கத்திலும், படிப்பிலும் சிறந்து விளங்கித் தம் பெற்றோரின் நல்ல எதிர்பார்ப்புகளைப் புர்த்திச் செய்து ஒளிமயமான எதிர்காலத்தை அடையத் தேவையான உம் அருளைப் பொழிய வேன்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


www.anbinmadal.org

Thursday, May 2, 2019

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு


பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு

 

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


திருத்தூதர் பணிகள் 5:27a-32,40b-41
திருவெளிப்பாடு 5:11-14
யோவான் 21:1-19


திருப்பலி முன்னுரை:


அன்புச் சகோதரர் சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறை இறை மன்னிப்பை உணர்த்தும் ஞாயிறாகக் கொண்டாட வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். உயிர்த்த இயேசு தன்பாடுகளின் போது தனியே தன்னை விட்டுவிட்டு ஓடியச் சீடர்களைத் தேடிச் சென்று மன்னிப்பின் மாண்பைத் தன் செயல்களின் மூலம் காட்டி அவர்களிடமே தன் இறையாட்சியை உலகமக்களுக்குப் பறைசாற்றும் பணியைத் தருகிறார்.

அத்துடன் நிற்காமல், தன் உடனிருப்பு உலகம் முடியும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதைச் சீடர்களிள் மனதில் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். மூன்று முறை மறுதலித்த பேதுருவிடம் அவரின் ஆழமான அன்பை வெளிக்கொணர்ந்து அவரிடமே தன் ஆடுகளாகிய நம்மை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பைக் கொடுக்கின்றார். என்னே! அவரது மாபெரும் இரக்கம்! நாமும் மன்னிப்பின் மாண்பை உணர்ந்து இயேசுவின் உண்மைச் சீடர்களாக வாழ இறையருளைப் பெற வேண்டி இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் இயேசுவை நோக்கி மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகமுன்னுரை:


தூய ஆவியானவரின் வருகையால் துணிவுபெற திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்தினருக்கு அடிபணிய மறுத்து, அவர்களுக்கே இயேசுவின் மகிமையை எடுத்துரைத்து, கடவுள் எவ்வாறு அவரை உணர்த்தியுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்தினர். அதனால் தண்டிக்கப்பட அவர்கள் இயேசுவில் மகிழ்ச்சியுடன் சென்றதை இன்றைய முதல் வாசகம் திருத்தூதர்கள் பணி நூலிலிருந்து வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை:


இரண்டாம் வாசகமான திருவெளிப்பாடு நூலில் திருத்தூதர் யோவான் இயேசுவைச் செம்மறியாகக் காட்சிப்படுத்துகின்றார். தன் கண்டக் காட்சியாகிய இயேசுவின் மாட்சிமையை நமக்கு எடுத்துரைக்கிறார். இயேசுவிற்கு விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் விழுந்து வணங்கியதைப் பதிவுச் செய்யும் இரண்டாம் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்:
திருப்பாடல்: 30: 1,3-5. 10-12

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்: ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்: என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்: சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்: தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்: அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்: மாலையில் அழுகை: காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்: என்மீது இரங்கும்;: ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்: என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! எங்கள் திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.மனமாற்றத்தின் நாயகனே எம் இறைவா! இறை அழைத்தலின் மேன்மையை, அனைத்து மாந்தரும் உணர்ந்து, சுயநலம் கருதாமல் குருத்துவத்தின் மேன்மையைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தித் திருச்சபைக்குப் பணிச் செய்திடத் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டிய அருள் வரங்களைப் பொழிய வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அணைகடந்த உமது அன்பினால் எம்மை அரவணைக்கும் இறைவா! இன்று உலகில் நடைபெறும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்கள், துறவற வாழ்வை மேற்கொண்டவர்களுக்கும் எதிராக நடைபெறும் வன்முறைகள், மதத்தின் பெயரால் ஆங்காங்கே நடைபெறும் செயல்களை இனம் கண்டு, மனித வாழ்வின் மேன்மையை இவர்கள் உணரவும்,இஉம் ஆவியின் ஆற்றலை இவர்களும் உணர்ந்துச் சாட்சிய வாழ்வு வாழ வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உமது நீதியின் வழியில் எம்மை நடத்திச் செல்லும் அன்புத்தந்தையே! எம் நாட்டுத் தலைவர்களுக்காகவும், ஒன்றுபட்டு எம் பாரதத்தில் பல நல்லெண்ணம் கொண்ட சிறந்த தலைவர்களை உருவாக்கவும், நடைபெறுகின்ற புதிய அரசுக்கான தேர்தல்களில்
நீதியுடனும், நேர்மையுடனும், நல்ல முடிவுகளைத் தந்தருள வேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எல்லாம் வல்ல இறைவா! ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், நோயாளிகள் ஆகியோருக்கு உமது அன்பையும், இரக்கத்தையும், அவர்கள் வாழ்வு ஏற்றம் பெறத் தேவையான உதவிகளைச் செய்யும் நல்மனதை எங்களுக்குத் தருமாறுஉயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

6. எம் நல்லாயனை! இறைவா! இலங்கை வாழும் கிறிஸ்தவர்கள் மீண்டும் புதுவாழ்வுப் பெற்று உமது அன்பிலும், அடைக்கலத்திலும் பாதுகாப்பான சமய வாழ்வும், இழப்புகளினால் ஏற்பட்ட சோகங்களிலிருந்தும், வேதனைகளிலிருந்தும் விட்டுபட்டு, தங்களின் வளமையான, அமைதியான வாழ்வுப் பெற்றிட வேண்டி உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
www.anbinmadal.org