Monday, October 28, 2019

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்


சாலமோனின் ஞானம் 11: 22 - 12: 2
2திமோத்தேயு 1:11 – 2:2
லூக்கா 19:1-14

முன்னுரை


திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடானது, இரு கண்களாக நம் மனமாற்றம், இறைவனின் மீட்பு இவ்விரண்டையும் நம் சிந்தனைக்கு விருந்தாகத் தருகின்றது! ஒன்று சக்கேயுவின் கண்கள் மற்றென்று இயேசுவின் கண்கள். கண்கள் சந்தித்தன. மனமாற்றம் விரைவாக ஏற்பட்டது. இயேசுவின் வரவால் அவர் இல்லத்திற்கு மீட்பு உண்டானது. குள்ளமான சக்கேயு இன்று உயர்த்தப் பட்டார். எழுந்து நின்றுத் தவறுகளை ஏற்றுக்கொண்டு அதற்குக் கைம்மாறுச் செய்யவும் தயாரானார். சக்கேயு காட்டு மரத்தில் ஏறினார் எரிக்கோவில். இயேசு கல்வாரி மரத்தில் ஏறினார் எருசலேமில். சக்கேயு ஏறியதால் அவருக்கு மீட்பு கிடைத்தது. இயேசு ஏறியதால் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்பு கிடைத்தது.

திருவழிப்பாட்டு ஆண்டின் இறுதிக் கட்டத்திருக்கும் நமக்கு இந்நிகழ்வுகள் எத்துணை அற்புதமாக உணர்வுகளைத் தருகின்றது. இந்த நிலை உயர வேண்டுமென்றால் முதலில் இயேசுவின் கண்களும், நம் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதற்காக இத்திருப்பலியில் நற்கருணை நாதரை உற்று நோக்குவோம். நிலைவாழ்வுக்கான மீட்பை அவரிடம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

இறைவனின் கண்பார்வை மனுக்குலத்தின் மேல் உள்ளது. தீமை, பாவம், குற்றம் என விரிசல் விழும் நேரங்களில் அங்கே அவரின் பரிவிரக்கம் நிறைவையும், முழுமையையும் கொண்டுவருகிறது. உயிர்கள் மீது அன்புக் கூர்கின்றவர் எல்லாவற்றையும் வாழ விடுகின்றார். தவறு செய்பவர்களை மெல்ல மெல்லத் திருந்த அவகாசம் தருகிறார் என்று சாலமோன் கடவுளின் பரிவிரக்கத்தை எடுத்துரைக்கும் சாலமோன் ஞானநூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்குடன் காத்திருந்த தெசலோனிக்கியத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலும் இன்று உங்கள் அழைப்புக்கு ஏற்ப உங்களைத் தகுதியாக்குங்கள் என்றும் நல்லெண்ணத்தால் தூண்டப்பெறும் நற்செயல்களில் நிலைத்திருங்கள். ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்ற கூறினால் உள்ளம் கலங்கவேண்டாம் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எழுதுகின்றார். தூய பவுலடியாரின் இவ்வேண்டுகோளைக் கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.
திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.  பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.   பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

உன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்பு இறைவா! எம் திருஅவைத் தனது சொல்லாலும் செயலாலும் தன் கடமையிலும், நெறிதவராது, இவ்வுலகில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்து வாழ்ந்த வாழ்வை இவ்வலகிற்குப் பிரதிபலிக்கக் கூடியவர்களாகத் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. நேர்மையின் நாயகனான எம் இறைவா! எங்கள் நாட்டில் நிலவும் மதம், மொழி, இனவேறுபாடுகள் இவைகளைக் களைந்து நாட்டு நலனில் அக்கறை கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான, வேலைவாய்ப்புகள், கல்வியறிவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்துச் சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. உலகில் நிலவும் பஞ்சம் கொலை, கொள்ளை, தீவிரவாதம், மதச்சண்டைகள் இவை அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்காக. இப்படிபட்டத் தீமையான செயல்களில் தங்களை ஈடுபடுத்தாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் வாழத் தேவையான நல்ல மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. ஒளியான எம் இறைவா! இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலக நாட்டங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கிப் பரிவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


                                                   www.anbinmadal.org

Wednesday, October 23, 2019

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் : 35: 12-14, 16-18
2 திமொத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14


திருப்பலி முன்னுரை


திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வரவேற்கிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது. திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமை மூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவையாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்துப் பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவி செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


முதல் ஏற்பாட்டில் முதல் சகோதரர்கள் காயினும், ஆபேலும் கடவுள்முன் காணிக்கைகள் கொண்டுவருகின்றனர். ஆபேல் ஏற்புடையவராகிறார். காயின் ஆகவில்லை. ஒருவரை ஏற்புடையவராக்குவது கடவுளே அன்றி, தனிநபரின் செயல்கள் அல்ல. இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கும், 'ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களின் மன்றாட்டு முகில்களை எட்டும்' என்று சொல்கின்றார். ஆண்டவரின் விருப்பத்தைப் புரிந்தவர்களாய் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


தூய பவுலடியார் தன் நண்பர் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார். திமொத்தேயுவுக்கான தன் அறிவுரையை நிறைவுச் செய்யும் பவுலடியார், 'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி

ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி

உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. செம்மையான வழியை எமக்குக் காட்டும் எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் திருதூதர் பவுலடியார் போல் தம் பணியைச் சிறப்பாக முடித்து வெற்றிவாகைப் பெற்றவும், அவரைபோல் இறைபணியில் தாங்களையே பலியாக அர்ப்பணிக்கவும் தேவையான ஞானத்தை, ஆற்றலையையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா! ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில்தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! தாழ்ச்சியுள்ள இதயத்தோடு செபிக்கும் எங்கள் அனைவரின் செபத்தை ஏற்று எங்கள் வாழ்வு நலமும் வளமும் அடையவும், எம் தலைவர்கள் தம் மக்களின் மீது தொண்டுள்ளம் கொண்டு தன்னலமற்றுப் பணியாற்றிடத் தேவையான ஆற்றலையும், உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இறையரசை அறிவிக்க அழைத்த எம் இறைவா! உமது பணிக்காகத் தங்கள் தாய்நாட்டை விட்டு உலகமெங்கும் சென்று உழைக்கும் பணியாளர்களைக் கண்நோக்கும். தனிமையில், உடல்நலத்தில், பொருளாதாரத்தில் வெறுப்பரசியலாலும் அவதிப்படும் அவர்கள் உற்சாகத்துடனும், முழுபலத்தோடு இறையரசை அறிவிக்கும் பணியில் என்றும் சிறப்புடன் நிறைவேற்றத் தேவையான வரங்களைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                                          www.anbinmadal.org

Wednesday, October 16, 2019

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் வாரம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் வாரம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயணம் 17:8-13
2திமொத்தேயு 3:14-4:2
லூக்கா 18:1-8

திருப்பலி முன்னுரை


திருவழிபாட்டின் பொதுக்காலம் இருபத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைமக்களே! உங்கள் அனைவரையும் இறைஇயேசுவின் அன்பில் வரவேற்கின்றோம். இன்றைய வார்த்தை வழிபாடு ‘இடைவிடாத செபம் இறையருளைப் பெற்றுத் தரும்’ என்ற சீரியக் கருத்தை நமக்கு வழங்குகின்றது.

விடுதலைப் பயணநூலில் மோசேயின் கரங்கள் உயர்ந்திருந்தபோது இஸ்ரயேல் மக்கள் வெற்றியைக் கண்டனர். இறைஇயேசு உவமைகளின் மூலம் நம்மைத் தொடர்ந்து செபிக்க அழைக்கின்றார். கைம்பெண் தன்னுடைய விடாமுயற்சியினால் நேர்மையற்ற நடுவரிடமிருந்து நல்ல தீர்ப்பைப் பெறுகிறார்.

இயேசு தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையோடு செப உறவில் நிலைத்திருந்தார். காலையிலும் மாலையிலும், ஒவ்வொரு நிகழ்வைத் தொடங்கும் முன்பும் செபித்தார். எனவே தான் திருத்தூதர் பவுல் கூறுகிறார், இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள் என்று.

இன்று திருஅவை மறைபரப்புப்பணி ஞாயிறு கொண்டாடுகிறது. இறையரசை அறிவிப்பது நம் கடமை என்பதை உணர்ந்து, இணைந்து செயல்படுவோம் இறையரசை அறிவிக்க.. நாம் இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இடைவிடாது செபிக்க, கடவுளிடம் நம்பிக்கையும், தன்னம்பிக்கையுடன் அவரை நாட வேண்டிய வரங்களைப் பெற்றிட நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை


விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அமலேக்கியரோடு போர் தொடுக்கிறார்கள். மோசேயின் கைத்தளர்ந்தபோது ஆரோன் ஒருபக்கமும், கூர் மறுபக்கமும் அவருடைய கையைத் தாங்கிப்பிடித்து, இஸ்ரேயல் மக்கள் எதிரிகளிடமிருந்து வெற்றிபெற உதவிபுரிகிறார்கள். இங்கே அவர்களின் விடாமுயற்சி அவர்களுக்கு வெற்றியைத் தேடித்தந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த விடாமுயற்சி எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை


இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில், “அன்புக்குரியவரே! நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்” என்று வாசிக்கின்றோம். என்றைக்கு நாம் நமது விடாமுயற்சியில் நிலைத்து நிற்கின்றோமோ, அன்றைக்கு நாம் நினைத்த காரியத்தில் வெற்றியைப் பெறுவோம் என்பது உண்மையாக இருக்கின்றது. முதல் முயற்சியிலேயே நாம் வெற்றியைப் பெற்று விடுவதில்லை. தொடர் உழைப்பினால், விடாமுயற்சியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற முடியும் என்ற உண்மையை உணர்த்தும் வாசகத்தைக் கருத்துடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல்: 121: 1-2, 3-4, 5-6, 7-8.
பல்லவி: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரே எனக்கு உதவி. 

1.மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். பல்லவி

2.அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்: உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை: உறங்குவதும் இல்லை. பல்லவி

3.ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்: அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்: அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது: இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. பல்லவி

4.ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்: அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூடியவரே!எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் தொடர்ந்து பயணிக்கவும், இடைவிடாத நம்பிக்கையில் உறுதியும் உம் பணிச் செய்திடவும் ஆற்றல் தருவது செபமே என்பதை உணர்ந்து இடைவிடாதுச் செபிக்க வேண்டிய அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. உலகின் கடை எல்லைவரை நற்செய்தியை அறிவிக்க அழைத்த எம் இறைவா! மறைபோதக ஞாயிறுவிழாவைக் கொண்டாடும் நாங்கள் உம் சீடர்கள் போல் நாங்களும் சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வரவும், எம் பங்களிப்பால் உமது பணியாளர்களைத் தாங்கிக் கொள்ளும் நல்மனதையும், எளியோருக்கு நல்ல சமாரியனாக மாறி உம்மை அவர்களில் காணும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


3. எம்மை உமது உரிமைச் சொத்தாய் ஏற்றுக் கொண்ட எம் இறைவா! உலகமெங்கும் எங்கும் அமைதி நிலவும் சூழலைத் தந்து, எல்லா இனத்தரும் உமது படைப்பின் நன்மைகளை உய்த்துணர்ந்து வாழ, உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


4. இடைவிடாதுச் செபிக்க அழைத்த எம் தந்தையே இறைவா! செபமே ஜெயம் என்பதை நாளும் உணர்ந்தவர்களாய் தொடர்ந்து சோர்வில்லாமல் செபிக்கவும், பரிந்துரைச் செபத்தால் எமக்கு அடுத்திருப்பவர்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுக்காகச் செபித்து அவர்களை ஆற்றுப்படுத்தும் உள்ளத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


5. நற்செய்தியை உலகம் முழுவதும் அறிக்கையிட அழைத்த இறைவா! மறைபரப்புப் பணிக்காக உலகமெங்கும் பணியாற்றும் குருக்களுக்காகவும், அவர்களுடன் உழைக்கும் பணியாளர்களுக்கும் தேவையான இறைஞானமும், பாதுகாப்பும், நற்சுகமும், மக்களின் அன்பான அரவணைப்பும் கிடைத்து நற்பணியாற்றிட அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Monday, October 7, 2019

பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு


 பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்


2அரசர்கள் 6:14-17
2திமோத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

திருப்பலி முன்னுரை



  பொதுக்காலம் ஆண்டின் 28ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் எல்லாப் பெயர்களுக்கும் மேலான இறைமகன் இயேசுவின் பெயரால் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
சிரியாஅரசனின் படைத்தலைவனான நாமானின் நம்பிக்கை அவரது நோயிலிருந்து விடுதலைக் கொடுத்தது. இஸ்ரயேலரின் கடவுள் யாவே தவிர வேறு எந்தக் கடவுளும் இல்லை என்று அறிக்கையிடுகிறார். இயேசுவோடு நாம் இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரோடு நிலைத்திருந்தால் அவரோடு ஆட்சி செய்வோம். என்று தன் ஆழமாக நம்பிக்கையை உறுதியாகப் பதிவுசெய்கிறார் பவுலடியார்.
இயேசுவின் மீது வைத்த விசுவாசம் தொழுநோயுற்ற சமாரியரின் உடலையும், ஆன்மாவையும் காப்பாற்றியது. அவரது குறைகள் குணப்படுத்தப்பட்டது. சமாரியரான அவர் தன்னை யார் குணப்படுத்தினாரோ அவரைப் பாராட்டினார், நன்றி கூறினார். கடவுளுக்கு அவராலே அவருக்குக் கொடுக்க முடியாத ஒன்று நம் எல்லாரிடமும் இருக்கிறது: அவருக்கு வாழ்த்துக்களும், போற்றுதலும், வேண்டுதலும், நன்றியும் நம்மிடமிருந்து வரவேண்டும். இயேசு திவ்ய நற்கருணை வழியாக உங்களிடத்தில் வருவதற்கு, நாம் இயேசுவுக்கு நன்றியும், போற்றுதலும் கூறுகிறோமா? நன்றி மட்டுமே விரும்பும் அவருக்கு நாம் செய்யும் கைம்மாறுத் தான் என்ன? சிந்திப்போம்.
இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நன்றியோடு இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, மகிழ்வுடன் பங்கு கொள்வோம்.


வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை


எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


இன்றைய இரண்டாவது வாசகத்தில், " இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்” என்பது தனது நற்செய்தி என அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்..


பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி

ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி

உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி


நற்செய்திக்க முன் வாழ்த்தொலி


அல்லேலுயா, அல்லேலுயா  எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காக கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள்வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. அல்லேலுயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத் தந்தையே எம் இறைவா! இன்றைய சூழ்நிலையில் கிறிஸ்தவச் சமூகங்களுக்கும், மானிட வாழ்விற்கும், இறைமனித உறவிற்கும் எதிராக நடைபெறும் அனைத்துப் பிரச்சனைகளுக்கு இயேசுகிறிஸ்துவின் மனநிலையோடு எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் பாதையில் பயணம் செய்யத் தேவையான ஞானத்தையும், உடல் நலத்தையும் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் ஒரே நீதியை வழங்கிடும் எம் இறைவா! இன்று எம் நாட்டில் நிலவும், சுயநலம், மற்றவர்களை அடிமைப்படுத்துக்கூடிய ஆணவம் இவைகளை மறந்து எல்லா மாநிலங்களும் தங்களிடம் உள்ளத் தேவைக்கு அதிகமான அனைத்தையும் ஒருவர் மற்றவர்களுடன் பகிர்ந்துப் பிரிவு மனப்பான்மைக்கு இடந்தராமல், சமத்துவச் சகோதரத்துவ வாழ்வுச் சிறந்து விளங்கிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளின் நாயகனே எம் இறைவா! இன்று உலகளவில் நவீனப் பொருளாதாரச் சீர்கேடுகள், ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவர் என்ற வேற்றுமை நிலைக் களைந்து ஒற்றுமையோடு செயல்படவும், ஒன்றுபட்டால் நம் அனைவருக்கும் வாழ்வு உண்டு என்று, உம் உன்னத மனநிலையோடு ஏழைகளுக்கு இரங்குகின்றவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கின்றான் என்ற விவிலியசிந்தனையை உணர்ந்து உமது இரக்கம் எம் மீது பொழியப் பட வேண்டுமென்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நீதியினிமித்தம் துன்புறுத்துப்படுவோர் பேறுபெற்றோர் என்னும் கூற்றுக்கு இணங்க இன்று சமூகத்தில் நிலவும் அவலங்கள், கொலை, கொள்ளை, திருட்டு, வன்முறை, தீவிரவாத செயல்கள் இவற்றிலிருந்து மக்கள் அனைவரையும் பாதுகாத்துப் பெண்கள் சமூகத்தில் மாண்புடன் நடத்தப்பட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                              www.anbinmadal.org

Wednesday, October 2, 2019

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:


அபாக்கூக்கு 1:2-3, 2:2-4
 2திமோத்தேயு 1:6-8,13-14
 லூக்கா 17:5-10

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவில் விசுவாசம் கொண்டு பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
நம்பிக்கைத் தான் வாழக்கை! இறைஇயேசுவின் மீதுள்ள நம்பிக்கைத் தான் கிறிஸ்தவர்களின் வாழ்க்கை. இந்த நம்பிக்கை - விசுவாசம் இவற்றைப் பற்றியே இன்றைய வாசங்கள் அமைந்துள்ளன.
இன்றைய முதல் வாசகம் நம்பிக்கையின் மேன்மைப் பற்றியே பேசுகிறது. தன் சமகாலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள். இந்த இறைவாக்கின் இரண்டாம் பகுதியைத்தான் தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் இந்த இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
சீடர்கள் 'இன்னும் கொஞ்சம் நம்பிக்கையை அதிகப்படுத்துங்கள்!' என இயேசுவிடம் விண்ணப்பிக்கின்றனர். ஆனால், இயேசு அதற்கு இடம் கொடுக்கவில்லை. உள்ளதே போதும் - இதைக் கொண்டே நீங்கள் அரிய பெரிய காரியங்கள் செய்யலாம் என்கிறார். தாழ்ச்சி, மன்னிப்பு என வாழ்வியல் பாடங்களை வழங்கும் இயேசு அவற்றின் ஒரு பகுதியாக நம்பிக்கைப் பற்றியும் சொல்கின்றார். இறைவன் தான் நம் வாழ்வின் உரிமையாளர் எனவும், நாம் அதன் பணியாளர் எனவும் நினைக்கும்போது தேவையற்றக் கவலைகள் மறைந்து விடுகின்றன என்பதை மனதில் கொண்டு. இயேசுவின் சீடர்களாய் இத்திருப்பலியில் இணைந்துச் செபித்திடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகம்  நம்பிக்கையின் மேன்மை பற்றியே பேசுகிறது. அபக்கூக்கு அவர்களின் காலத்தில் நிலவிய வன்முறை மற்றும் அநீதிகளைக் கண்டு கடவுளிடம் முறையிடுகின்றார் இறைவாக்கினர் அபக்கூக்கு. 'நம்பாதவர் உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர். நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்று அவருக்கு வெளிப்படுத்துகிறார் ஆண்டவராகிய கடவுள்.  இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


தூய பவுலடியார் உரோமையருக்கு எழுதும் திருமுகத்தில் ”இறைவாக்கு நம்பிக்கை அதைக் கொண்டிருப்பவருக்கு வாழ்வளிக்கும்” என்பதைத் அடிக்கடி மேற்கோள் காட்டுகின்றார். இதே நம்பிக்கையின் செய்தியைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் திமொத்தேயுவுக்கு எழுதுகின்றார்: 'கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு...' திமோத்தேயுவின் வாழ்வு அனைத்திற்கும் அடிநாதமாக இருக்க வேண்டியது நம்பிக்கை என்ற ஒன்றே என்று அறிவுறுத்தும் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்;  நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.   நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;  புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம்.  அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;  நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அன்புத் தந்தையே எம் இறைவா! எம் திருஅவையை வழிநடத்தும் எம் திருத்தந்தை அவரோடு உடன் உழைக்கும் அனைத்துத் திருஆட்சியாளர்கள், அருட்பணியாளர்கள், துறவியர் ஆகிய அனைவரும் அளவற்ற கருணையால் இவ்வுலகம் தழைத்தோங்கப் பணிப் புரியவும், உம் ஞானத்தின் துணைக் கொண்டு உலகப் பற்றுகளைத் துறந்து உம்மை மட்டும் நம்பி வாழும் வரத்தினை நிறைவாய் பொழிந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மூவொரு இறைவனே எம் இறைவா! எம் நாட்டில் நிலவும் கொலை, வன்முறை, தீவிரவாதம், பாலியல் வன்முறைகள், இனக்கலவரம், சாதி வேறுபாடு, தீண்டாமை அவைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாமல் சிக்கித் தவிக்கும் எம் உடன்பிறவா சகோதர சகோதரிகள், முதியோர் ஆகிய அனைவரும் மீதும் உம் கருணையின் பார்வையைப் பொழிந்து நிம்மதியோடும், சமாதானத்தோடும் வாழ வழிவகைச் செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நீதியின் கதிரவனே! எம் இறைவா! இன்று தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையினால் ஏற்படும் விவசாயப் பாதிப்புகளை, அதனால் எம் விவசாயிகள் படும் வேதனைகளை நீர் கண்ணேக்கி எகிப்தில் என் மக்கள் படும் வேதனைகளை நான் கண்ணாரக் கண்டேன் என்று அவர்களுக்கு விடுதலை வாழ்வை அளித்த போல எம் மக்களின் துயரைப் போக்கி நல்ல மழையைப் பெய்வித்து, அதனைப் பாதுகாத்து, அதனால் நாங்கள் அனைவரும் பொருளாதாரத்தில் முன்னேறத் தேவையான அருளை வழங்கி வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எம் குடும்பத்தில் உள்ள பெற்றோர், பெரியோர் ஆகிய அனைவரையும் நாங்கள் ஒரு சுமையாகக் கருதாமல் அவர்கள் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட உம் ஆசீர்வாதங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் தலைமுறையினருக்கும் கொண்டு செல்லக் கூட்டுகுடும்பத்தின் நன்மைகளை அறிந்துச் சாட்சிய வாழ்வு வாழ இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                                           www.anbinmadal.org