Tuesday, January 26, 2021

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு




இன்றைய வாசகங்கள் :


இணைச் சட்டம் 18:15-20
1கொரிந்தியர் 7:32 -35;
மாற்கு 1:21-28  

திருப்பலி முன்னுரை :


பொதுக்காலம் நான்காம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகின்றோம்.

இன்றைய நற்செய்தி, இயேசுவின் அதிகாரத்தையும், அவர் யார் என்பதையும் காட்டுகிறது. அதிகாரம் என்பது நாம் தினமும் சந்திக்கும் ஒரு மனித அனுபவம். இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், எத்தனையோ பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும், தீர்க்க முடியும். நமது குடும்பங்களில் ஆரம்பித்து, உலக நாடுகளின் பேரவைகள் வரை அதிகாரம் பல வடிவங்களில் இருக்கின்றது.

போட்டியிட்டுப் பெறும் பதவிகளால் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகாரம் நிரந்தமானது அல்ல. மாறாக, உன்னதமான பண்பு, அல்லது உயர்ந்த அறிவு இவைகளைக் கொண்டு ஒருவர் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் அதிகாரம் அவர் வாழ்நாள் முழுவதும் தொடரும். ஒருவர் சுயமாகத் தனக்குள் வளர்த்துக்கொள்ளும் இந்த அதிகாரம், உள்மனச் சுதந்திரத்தைத் தரும், உண்மைகளைப் பேச வைக்கும். அது கேட்பவர்களையும் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி அவர்களை வழி நடத்தும். இயேசுவின் அதிகாரம் இந்த வகையைச் சார்ந்தது.

குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம் சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து கொள்வோம். நமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளும் உன்னதப் பண்புகளால் நாம் மற்றவர்களின் மதிப்பைப் பெற வேண்டும் என்று இயேசு வாழ்ந்துக் காட்டிய அந்த வழியில் வாழ இன்றைய திருப்பலியில் உளமாற இறையருளை மன்றாடுவோம்.

வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :


இன்றைய அருள்வாக்கு வழிபாடு கடவுளுடைய வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து அதன்படி வாழ நம்மை அழைக்கிறது. இன்றைய முதல் வாசகத்தில் உன்னைப் போன்ற இறைவாக்கினர்களை இஸ்ரயேல் மக்களிடமிருந்தே தேர்ந்தெடுத்து நான் அனுப்புவேன். அவர்களுக்குச் செவி கொடாதவனை நான் வேரறுப்பேன் என்று இறைவன் மோயீசனுக்குக் கூறுவதாக இணையச்சட்டத்திலிருந்து வரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். இறைவாக்கினர் இறைவனின் குரலாக ஒலித்து மக்களுக்கு நம்பிக்கையூட்டி நல்வழிப்படுத்துவதாக!

பதிலுரைப்பாடல்


திபா 95: 1-2. 6-7. 8-9
பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர்; ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்.

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். -பல்லவி
 
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர் முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! -பல்லவி
 

அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :


இறைவனின் குரலைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டிய மனிதர்கள் பிளவுபட்டவர்களாக இருப்பதை இன்றைய இரண்டாம் வாசகம் சுட்டுகிறது. ஒருபுறம் கடவுளின் குரல் மறுபுறம் உலக ஈர்ப்பு. ஒருவர் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது. எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் நீங்கள் முழுமனத்தோடு ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவுமே இவ்வாறு சொல்கிறேன் என்று புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் விடுக்கும் அவரின் ஆழ்ந்த அர்த்தமுள்ள அறிவுரையைக் கவனத்துடன் கேட்போம்.


 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள் :


1. ஞானத்தின் ஊற்றான அன்பு இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது குரலுக்குச் செவிசாய்த்துச் சுதந்திரம் அடையச் செய்யும், உண்மையை நோக்கி உம் மந்தையாம் இத்திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஐயங்கள் அகற்றி எம்மை அன்புணர்வில் ஒன்றுசேர்க்கும் இறைவா! நீர் எங்களுக்குக் கொடுத்துள்ள உறவுகளுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆனால் இன்று தவறான போதனைகளாலும், போலியான புரிதல்களாலும், தீய சக்திகளாலும், பொறாமையாலும் பிரிந்திருக்கின்ற எங்கள் உறவுகளை மீண்டும் உமதருளால் புதுப்பித்து, ஒன்றிணைத்து ஒற்றுமையிலும், அன்பிலும், மன்னிப்பிலும் என்றும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நம்பிக்கையின் புகலிடமே! எம் இறைவா! குடும்பப் பொறுப்புகளில் ஆரம்பித்து, அரசியல், மதம், சமுதாயம் என்று பல துறைகளிலும் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் அதிகாரம் என்பதைச் சரியான கண்ணோட்டத்தில் அறிந்து அதன்படி பிறருடன் உன்னதப் பண்புடன் நடந்திட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வெற்றி என்னும் இலக்கில் எம்மை வழிநடத்தும் இறைவா! நாங்கள் வாழும் இந்த நவீன உலகில் இளைஞர்கள் சந்திக்கும் எண்ணற்றத் துன்பங்கள், சோதனைகள் அனைத்தையும் முறியடித்து, தமது வெற்றி இலக்கான இயேசுவைத் தேடிவரவும், தங்கள் பெற்றோர்களுக்கும் நற்பெயர் பெற்றுத் தரவும், தூயவாழ்வு வாழ்ந்திட அருள்வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.விடுதலை நாயகனே! எம் இறைவா! உண்மைக்கும், நீதிக்கும், உரிமைக்கும் போராடும் மக்களுக்கெதிராக நடத்தப்படும் அலட்சியபோக்கிலிருந்தும், கொடுமைகளிலிருந்தும், பொய் வழக்குகளிலிருந்தும் விடுதலை பெற்று தங்களின் நியாயமானக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு நல்ல தீர்ப்பைப் பெற்றிட தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

                                                          www.anbinmadal.org

Tuesday, January 19, 2021

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு

 பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு


இன்றைய வாசகங்கள்:


யோனா  3:1-5 10
1 கொரிந்தியர் 7:29-31
மாற்கு 1:14-20
 

திருப்பலி முன்னுரை:


பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இறை மக்களே, உங்களை அன்புடன் வாழ்த்துகின்றோம்
இன்றைய ஞாயிறு நற்செய்தி, நாம் கடவுளிடம் முழுமையாகச் சரணடையவேண்டும் என நம்மை அழைக்கிறது. "காலம் நிறைவேறிவிட்டது" - 2000 வருடங்களுக்கு முன்பு அல்ல. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது அல்ல, இப்பொழுதே நம் வாழ்வில் இயேசு தேவையாக இருக்கிறார்.
"இறையாட்சி நம் கைகளில்" - கடவுளிடமிருந்து நமக்கு என்ன தேவையோ, அஃது இங்கே நம் கைகளில் தயாராக இருக்கிறது.
"மனம் மாறி , கடவுளின் நற்செய்தியை நம்புங்கள்" என்பதற்கு அர்த்தம், "என் பின்னால் வாருங்கள், என்னிடமிருந்து கற்றுக் கொண்டு, என்னைப் போல் மாறுங்கள்" என்பதாகும். முதல் சீடர்களுக்கு , உங்களிடம் உள்ளது அனைத்தையும் துறந்து விட்டு, எல்லா நேரத்திலும், இயேசுவோடு, முழு வாழ்வும் அவரோடு இணைந்து செயல்படவேண்டும்" என்று சொல்லப்பட்டது. அதையே தான் நமக்கும் இன்று நற்செய்திக் கூறுகிறது: இயேசுவின் பின் நாமும் செல்ல வேண்டும்.
இன்றைய நாகரீக உலகில், இயேசுவை விட , நவீன எலக்ட்ரானிக் கருவிகளோடு தான் நாம் அதிக நேரம் செலவிடுகிறோம், மேலும் அதையே நம்பியிருக்கிறோம். நம்மில் பலர், திருப்பலியில் கூட ஒன்றிணையாமல் தங்கள் செல்போனிலேயே கவனமாக இருக்கின்றார்கள். இன்று போல் நாளை இராது. எனவே இன்று நாம் ஞாயிறன்று, இயேசுவோடு நேரம் செலவழித்து, நம்மையே நாம் புதுப்பித்துக் கொள்ளவோம்.
இவ்வுலகிலேயே இறையரசின் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள, நாம் மனமாற்றம் அடைந்து இயேசுவைப் பின் செல்ல இத்திருப்பலியில் இறைவனிடம் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் தன் ஊழியன் யோனா மூலம் நினிவே நகரத்து மாந்தார்களுக்கு மனமாற அழைப்பு விடுக்கின்றார் கடவுள். யோனா இறைவாக்கினர் வழியாக இறைச் செய்தி வந்தவுடன் நிதானித்தார்கள். இறைவாக்கினர் குரல் வந்த இறைவனை நம்பினார்கள். மனம் மாறினார்கள். தங்கள் பழைய வாழ்வின் திசையை மாற்றி, புதிய திசையில், இறையொளியில் பயணித்தார்கள். தண்டனை விலக்கப்பட்டது. இந்த இரக்கத்தின் ஆண்டவருடைய அழைப்பைத் தரும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 25: 4-9, 6-7, 8-9
பல்லவி: ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்

ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்; -பல்லவி

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

 

இரண்டாம் வாசக முன்னுரை:

புனித பவுலடியாரின் தனது திருமுகத்தில் பொருந்து நகரமக்களுக்கு உலகச் செல்வங்களைப் பயன்படுத்துவோர், உலகக் காரியங்களில் ஈடுபடுவோர் அவற்றில் மூழ்கிவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இப்போது இருப்பதுபோல் அது நெடுநாள் இராது என்று அறிவுறுத்துகின்றார்.  இந்த வாசகத்தின் கருத்து அன்று மட்டுமல்ல இன்று உண்மையாகவே உள்ளது. எனவே கவனத்துடன் கேட்போம். என்றும் மாறாத இறைவனின் அழைப்பைத் தியானிப்போம்...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. எம் அன்புத் தந்தையே ! எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது மனமாற்ற நற்செய்தியினை உணர்ந்து தங்களின் வாழ்வால் மற்றவர்களுக்கு அழைப்பின் மேன்மையை உணரச் செய்யும் இயேசுவின் சீடர்களாய் ஒளிர்ந்திடத் தேவையான வரங்களை அருள் மாறிப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அரவணைக்கும் தந்தையே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் நினிவே மக்களைப் போல் மனமாறி இவ்வுலக நாட்டங்களிலிருந்தும், அழிவுகளிலிருந்தும் தங்களைக் காத்துக் கொண்டு புதுவாழ்வுப் பெற்றிட உம்மில் என்றும் ஒன்றிணைந்து வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. கரிசனை அன்பு மிகுந்த தந்தையே! எம் இறைவா! உலகெங்கும் துன்புறும் திருஅவைக்காகவும், உம் பணியாளர்கள் படும் வேதனைகளிலும், அவர்களின் நோயிலும், அச்சுறுத்தலிலும் உடனிருந்து அவர்களைக் காத்து நலமுடன் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருஅவையின் அச்சாணிகளாய் இளைஞர்களை உருவாக்க அவர்களின் பெற்றோர்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிப் பெறவும், தம் தூயவாழ்வால் இவ்வுலகம் அவர்களைத் திரும்பிப் பார்க்கின்ற இயேசுவின் சீடர்களாய் மாறிடத் தேவையான ஞானத்தையும், திறமைகளையும், மன உறுதியையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நலம் அருளும் எம் தந்தையே! இறைவா! தொற்று நோயின் தாக்கத்திலிருந்து எங்களை காத்தருளும். மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் அனைவரையும் உமது வல்லமை மிக்கக் கரத்தால் பாதுகாத்து, தன்னலமற்ற இந்த சேவையில் சிறப்புடன் செயல்பட தேவையான வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org


Wednesday, January 13, 2021

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

  பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்:


1 சாமுவேல் 3: 3b-10, 19   |  1 கொரிந்தியர் 6: 13-15,17-20 |  யோவான் 1: 35-42

திருப்பலி முன்னுரை:


இறைமகன் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள். நன்றி திருவிழாவாம் பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடி இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு வந்துள்ள மகிழ்வில், மெசியாவைக் கண்டு கொண்டு, இந்த இனிய நாளை அவரோடு மகிழ்வுடன் கழித்திட, அவர் இல்லம் வந்துள்ள இறைகுலமே உங்கள் வரவு நல்வரவாகுக.

பொங்கிவரும் மகிழ்வில் நீர் தெளித்து அடக்கிவிடும் கடந்த கால நெருடல்களையும் உள்வாங்கி, நம் மனங்களில் நன்றி உணர்வும், பகிரும் உணர்வும் பொங்குவதற்கு இந்த விழாக்காலங்களில் இறைவன் நமக்குத் துணைச் செய்யவேண்டும்.

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவைத் தன் சீடர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சிச் சொல்லப்பட்டுள்ளது. சாமுவேலுக்கு இறைவன் கோவிலில் அறிமுகமாகிறார். இங்கோ, யோவானின் சீடர்களுக்கு வழியோரம் இந்த அறிமுகம் நடைபெறுகிறது. கோவில்களிலும், புனிதத் தலங்களிலும் இறைவன் அறிமுகம் ஆவதை விட, சாதாரண, எளியச் சூழல்களில் அவர் அறிமுகம் ஆன நிகழ்வுகளே மனித வரலாற்றிலும், விவிலியத்திலும் அதிகம் உள்ளன என்பதை உணரலாம். வழியோரம் அறிமுகமான இயேசுவை வழியோரமாகவே விட்டுவிட்டு அந்தச் சீடர்கள் தங்கள் வழியில் செல்லவில்லை. மாறாக அவர்கள் இயேசுவைக் கண்டுகொண்டார்கள். அவரோடு சென்றார்கள். அவரோடு தங்கி, அவரில் ஒன்றிணைந்தார்.

எத்தகைய சவால்களையும், எத்தனை முறைச் சந்திக்க நேர்ந்தாலும், இறைதேடலைக் கைவிடாது, சாமுவேல் போலவும், யோவானின் சீடர்கள் போலவும் இறைமகன் இயேசுவின் உடன்இருப்பை உணர்ந்தவர்களாய் வாழ இறையருளைப் பெற இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றடுவோம். இறைமகன் இயேசுவின் சாட்சிகளாய் இவ்வுலகினை வென்றெடுப்போம்.


வாசக முன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


மனுக்குலத்தை மீட்க விழைந்த இறைவன் சாதாரண மனிதர்கள் வாயிலாகவே அதனை நிறைவேற்ற விழைகிறார். இன்றைய முதல் வாசகத்தில் சாமுவேலை இறைவன் பெயர் சொல்லி அழைக்கிறார். இறைவனின் அழைத்தலுக்குத் திறந்த மனத்துடன் தான் கீழ்படியத் தயார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக சாமுவேல் ஆண்டவரே! பேசும் உம் அடியான் கேட்கிறேன் என்று குரு ஏலியின் தூண்டுதலோடு பதில் கூறுவதைப் போலவே நாமும்  இந்த அழைப்பினை ஏற்றுக்கொள்ளும் மனதினைப் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

திபா 40: 2,3. 6-7. 7b-8. 9
பல்லவி: உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்.

அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக் கொணர்ந்தார்; சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கி எடுத்தார்; கற்பாறையின் மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.  புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார். -பல்லவி

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, `இதோ வருகின்றேன்.' -பல்லவி

என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். -பல்லவி

என் நீதியை, நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். -பல்லவி

 

இரண்டாம் வாசக முன்னுரை:


பாவ வாழ்வை விட்டு இறைவனை முழுமையாகப் பற்றிக் கொண்டு வாழ வேண்டும். உங்கள் உடல் தூய ஆவியின் ஆலயம் என்கிறார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல். கடவுள் நம்மை கிறிஸ்து என்னும் விலையைக் கொடுத்து மீட்டுள்ளார். நம் உடல் கிறிஸ்துவின் உறுப்பு. எனவே கிறிஸ்துவை நம் உடலின் மகிமைப்படுத்த வேண்டும் என்ற இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! மெசியாவை, அதாவது அருள்பொழிவு பெற்றவரைக் கண்டோம். அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. விண்ணையும் மண்ணையும் ஆண்டு நடத்துகிறவரே! எம் இறைவா! எம் திருஅவையில் துறவு வாழ்வுக்கும் குருத்துவ வாழ்வுக்கும் அழைக்கப்பட்டவர்கள் கிறிஸ்துவின் இடத்தில் இருந்து இறைமக்களுக்குப் போதிக்கவும், புனிதப்படுத்தவும் ஆயர்களாக இருந்து வழிநடத்தவும் அவர்களது வாழ்வாலும், வார்த்தையாலும் இறையனுபவம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எல்லாம் வல்ல இறைவனே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உமது அழைப்பின் மேன்மையை உணர்ந்துத் தங்களின் வாழ்வில் உமது குரலைக்கேட்டு உமக்குச் சாட்சிகளாக, அதன் மூலமாக மற்றவர்கள் உம்மை அறிந்து கொள்ள நேரிய வாழ்க்கை நடத்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எம்மை அரவணைத்து வழியில் நடத்திடும் எம் இறைவா! எம் நாட்டில் சிறுபான்மையினாகக் கருதப்படும் மக்கள் தம் விசுவாசத்தைக் கடைப்பிடிப்பதில் உள்ள பல்வேறு அச்சுறுத்தல்களையும், இடையூறுகளையும் கடந்து மதசுதந்திரத்துடனும், ஒருவரை ஒருவர் அன்பினால் பிணைத்துக் கொள்ளவும், சிறப்புடன் வாழ்ந்திடத் தேவையான வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! திருச்சபையின் வலுவான தூண்களாக இளைஞர்களை உருவாக்கத் திருத்தந்தை எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெறவும், இளைஞர்கள் இறைஅழைப்பை ஏற்றுக் கொள்ள ஞானத்தையும், தூய ஆவியின் வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Thursday, January 7, 2021

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு

 ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு

 ஆண்டவரின் திருமுழுக்கு விழா



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 55:1-11
1யோவான் 5:1-9
மாற்கு 1:7-11

திருப்பலி முன்னுரை:

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இதன்வழியாக இயேசு தான் யார் என்பதை உலக மக்களுக்குச் சூட்டிக்காட்டுகின்றார். இயேசு புதிய உலகைத்தைப் படைக்க வந்த ஒரு புதிய பிறவி. இந்த உண்மையை நமக்கு எடுத்துச் சொல்லும் விழாதான் இயேசுயின் திருமுழுக்குத் திருவிழா.

இயேசு புதிய கொள்கை வரைதோடு இலட்சியத் தெளிவோடும் புதிய சமுதாயம் படைக்க வந்தார். தன் செயலால், செயலால், வாழ்வால் புதிய சமுதாயத்தை அமைத்துக் காட்டியதை அறிவோம். இயேசுவின் மறைந்த வாழ்வு முடிந்துப் பொது வாழ்வு தொடங்குகிறது. அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறுவதன் வழியாகத் தந்தையாகிய இறைவனால் உலகிற்கு அடையாளப்படுத்தபட்டு, தூயஆவியானவரால் திருப்பொழிவு செய்யப்பட்டுத் தனது பணியைத் தொடங்கினார் இயேசு.

திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும், சில குறிகோள்களை, இலக்குகளையும் நமதாக்கிக் கொண்டு அதில் இறுதிவரை நிலைத்திருக்க நம்மையே உட்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று இந்த அருட்சாதனம் வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:


முதல் வாசகமுன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்துத் திரிந்த மக்களுக்குக் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்:


எசாயா 12: 2-3, 4, 5-6
பல்லவி: மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்.

1. கடவுள் என் மீட்பர், அவர் மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன், ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர். - பல்லவி

2.அந்நாளில் நீங்கள் சொல்வதாவது - ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். அவர் திருப்பெயரைப் போற்றுங்கள். மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள். அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். - பல்லவி

3.ஆண்டவருக்கு புகழ்ப்பா அமைத்தப் பாடுங்கள், ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார். அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள், இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் தான் கடவுளின் அன்பு அடங்கியுள்ளது. அவர் கட்டளைகள் சுமையாய் இருப்பதில்லை. எனவே கடவுளிடமிருந்த பிறக்கும் இவை அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்வது நம் நம்பிக்கையே. கடவுள் தம் மகன் இயேசுவிற்குச் சான்று பகர்ந்துள்ளார். அதுவே சிறந்த சான்று. இயேசு இறைமகன் என்று தூயஆவியும் நீரும் சான்று பகர்கின்றன என்று பதிவுச் செய்யும் திருத்தூதர் யோவான் எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்துரை:


அல்லேலுயா, அல்லேலுயா! இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான் ”இதோ கடவுளின் செம்மறி! செம்மறியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்” என்றார். அல்லேலுயா.
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம் கனிவானத் தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே எம் இறைவா! எம் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களுக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே எம் இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. மருத்துவராய் நலம் அளிக்கும் தந்தையே, எம் இறைவா! நோய்களின் உருமாற்றத்தால் செய்வதறியாமல் தவிக்கும் எங்களைக் கண்ணோக்கும். சிறந்த மாற்றுமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தேவையான ஞானத்தையும் அறிவாற்றலையும் எம் மருத்துவர்களுக்குத் தந்து எம் நலம் காக்க அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


  www.anbinmadal.org

Friday, January 1, 2021

ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா

   ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா


 இன்றைய வாசகங்கள்  


எசாயா 60: 1-6
எபேசியர் 3: 2-3அ, 5-6
மத்தேயு 2: 1-12  

 திருப்பலி முன்னுரை


ஆண்டவரின் திருக்காட்சியைக் கண்குளிரக் கண்டு ஆராதிக்க ஆலயம் திரண்ட வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
மத்தேயு நற்செய்தி மட்டும் வரும் இந்த மூவரும் கடந்த 20 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள், முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு...
இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குப் போட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.
உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.
இதயத்தின் கண்களைத் திறந்துப் பார்த்தால், இந்த உலகில் பல அதிசயங்களைப் பார்க்கலாம். அந்த அதிசயங்களின் ஊற்றான இறைவனையும் பார்க்கலாம்.
தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்..

 வாசக முன்னுரை


 முதல் வாசக முன்னுரை


மீட்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கடவுள் தமது எளிமைக் கோலத்தை மறைத்து மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். வானில் தோன்றிய விண்மீனும், மூன்று ஞானிகளும், அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளும் இறைமாட்சிமையின் அடையாளங்கள் தான். ஆண்டவரின் மாட்சிமை உன் மேல் உதித்துள்ளது என்ற எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்


பல்லவி: ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.


கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!   பல்லவி

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.   பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.   பல்லவி

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


மீட்பு என்பது யூத இனத்தார்க்கு மட்டும் உரியத் தனியுரிமை அல்ல. அது எல்லா இனத்தார்க்கும் உரியது என்பதைத் திருக்காட்சிப் பெருவிழா உணர்ர்கிறது. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப்பேற்றுக்கு உரியவர்கள் என்கிறார் புனித பவுல். பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள், மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர் என்ற கருத்துகளை எதிர் ஒலிக்கும் பவுலடிகளாரின் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா!  ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம்.  அல்லேலூயா

நம்பிக்கையாளின் மன்றாட்டுகள்

 
1. உம் மாட்சிமையை எம்மேல் உதிக்கச் செய்த எம் இறைவா! எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர்கள் பொதுநிலையினர் அனைவரும் உமது மாட்சிமை மிக்கத் திருக்காட்சியின் அடையாளங்களைக் கண்டுணர்ந்துத் தங்களின் நற்செயல்களாலும், நன்னடத்தையாலும் பிறர் முன் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வீண்மீனாக வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அருள் வழங்கும் வள்ளலாகிய எம் இறைவா! தங்கள் உரிமைக்காகப் போராடும் விவசாயப் பெரும் மக்களைக் கண்ணோக்கியருளும். அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலம் பாராமல் விவசாயிகளின் நியமான கோரிக்கைகளை ஆராய்ந்து அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்காதவகையில் நல்ல முடிவுகளை எடுக்க எம் தலைவர்களுக்கு ஞானத்தை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org