பொதுக்காலம் ஆண்டின் 22ஆம் ஞாயிறு 30.08.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எரேமியா 20: 7-9
உரோமையர் 12:1-2
மத்தேயு 16:21-27
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 22-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
சென்ற வாரம் இயேசுவை "மெசியா" என்று அறிக்கையிட்ட பேதுரு, இன்று இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏற்க மறுக்கிறார். மானிடச் சிந்தனையோடு இருந்த பேதுருவைக் கடிந்துகொள்ளும் இயேசு, "என்னைத் பின்செல்ல விரும்பும் எவரும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்செல்லட்டும்" என்று சீடத்துவத்திற்குரிய நிபந்தனையை விதிக்கிறார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் இறைப்பணியில் வரும் துன்பங்களைக் கண்டு புலம்பினாலும், இறைவார்த்தை அவர் இதயத்தில் "எரியும் நெருப்பாய்" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில், "இவ்வுலகின் போக்கின்படி வாழாமல், உங்களையே உயிருள்ள பலியாக ஒப்புக்கொடுங்கள்" என்று பவுல் அடியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார். வாழ்வைப் பற்றிக் கொண்டிருப்பவர் அதை இழப்பார்; கிறிஸ்துவுக்காக வாழ்வை இழப்பவர் அதைக் கண்டடைவார். இந்த மேலான உண்மையை உணர்ந்து, நம் சிலுவைகளைத் துணிவுடன் சுமக்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
வாசக முன்னுரை
முதல் வாசக முன்னுரை
இறைவார்த்தையை அறிவித்ததால் எரேமியா இறைவாக்கினர் ஏளனத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார். "இனி ஆண்டவரைப் பற்றிப் பேசமாட்டேன்" என்று அவர் நினைத்தாலும், இறைவார்த்தை அவர் எலும்புகளுக்குள் எரியும் நெருப்பைப் போலத் தூண்டுகிறது. இறைவனின் அழைப்பிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
திபா 63: 1. 2-3. 4-5. 7-8
பல்லவி: கடவுளே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.
கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது; நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி
உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன். ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி
என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன். அறுசுவை விருந்தில் நிறைவடைவது போல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி
ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். நான் உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்டேன்; உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது. -பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 12: 1-2)
புனித பவுல் அடியார் நம்மை ஒரு புதிய வழிபாட்டிற்கு அழைக்கிறார். விலங்குகளைப் பலியிடுவதற்குப் பதிலாக, நம்மையே 'தூய, உயிருள்ள பலியாக' இறைவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும் என்கிறார். இவ்வுலகின் மாயைகளுக்கு அடிமையாகாமல், கடவுளுக்கு உகந்தது எது என ஆய்ந்தறிய அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணாமல், கடவுளுக்கு ஏற்றவைபற்றி எண்ணவும், பேசவும், செயல்படவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. பரந்த இவ்வுலகு, எம்பாரதத் திருநாடு மற்றும் எங்கள் மாநிலம் ஆகியவற்றை ஆளுகிற தலைவர்களும், குடிமக்களாகிய நாங்களும், எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதைத் தேர்ந்து தெளிந்து, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை வளர்க்கிற நேரிய பாதையில் பயணிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உலகின் கவர்ச்சிகளால் சுண்டியிழுக்கப்படும் எம்பிள்ளைகளும், இளையோரும், உலகத்தின் போக்கின்படி ஒழுகாமல், உள்ளம் புதுப்பிக்கப்பெற்று கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிந்து, தங்கள் எதிர்கால வாழ்வை சீரிய முறையில் கட்டமைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. பொருள் ஈட்டுவதிலும், உயர் பதவிகள் பெறுவதிலும், வசதிகளைப் பெருக்குவதிலும், வெளிநாடுகளில் குடியேறுவதிலும் தான் மகிழ்ச்சி அடங்கியுள்ளது எனக் கருதி, குடும்ப உறவுகளுடனும், கடவுளாம் உம்முடனும் காட்ட வேண்டிய நெருக்கத்தை தொலைத்துவிடுகிற அனைவரும், “உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தம் வாழ்வையே இழந்தால் கிடைக்கும் பயன் என்ன?” என்பதை உணர்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஞாயிறு மற்றும் கடன் திருநாள் அனுசரிப்பில் மட்டுமே எங்கள் நம்பிக்கை என்று வாழ்வை குறுக்கிக் கொள்ளாமல், கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக எங்களையே படைத்து, தன்னலம் துறந்து, எங்கள் சிலுவையைத் தூக்கிக்கொண்டு உம்மைப் பின்பற்றும் உள்ளார்ந்த வழிபாடு செய்திடும் துணிவு பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.






