பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 16.08.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 56:1,6-7
உரோமையர் 11:13-15,29-32
மத்தேயு 15: 21-28
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.இன்றைய நற்செய்தி விசுவாசத்தின் வலிமையையும், கடவுளின் அன்பு எல்லைகளற்றது என்பதையும் பறைசாற்றுகிறது. ஒரு கானானியப் பெண் தன் மகளுக்காக இயேசுவிடம் வந்து மன்றாடுகிறார். அவர் இஸ்ரயேல் இனத்தைச் சார்ந்தவர் அல்ல என்றாலும், அவரது தளராத விசுவாசத்தைக் கண்டு இயேசு வியந்து போகிறார். "அம்மா, உமது விசுவாசம் பெரிது!" என்று பாராட்டி, அவரது மகளைக் குணமாக்குகிறார்.
இறைவனின் இல்லம் "எல்லா மக்களுக்கும் செப இல்லம்" என்று அழைக்கப்படும் என முதல் வாசகத்திலும், கடவுள் எல்லாருக்கும் இரக்கம் காட்டவே அனைவரையும் கீழ்ப்படியாமையில் இருக்கச் செய்தாரென இரண்டாம் வாசகத்திலும் வாசிக்கிறோம். மீட்பு என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ அல்லது மொழிக்கோ உரியது அல்ல; அது இறைவனைத் தேடும் ஒவ்வொரு இதயத்திற்கும் உரியது. அந்தப் பெண்மணியைப் போல நாமும் சோர்ந்து போகாத விசுவாசத்தைப் பெற்றிடவும், எவ்விதப் பாகுபாடுமின்றி அனைவரையும் அன்பு செய்யவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இறைவனைத் தேடி வரும் அன்னியர்களையும் இறைவன் கைவிடுவதில்லை. அவர்கள் ஆண்டவரின் பெயருக்கு அன்பு காட்டி, அவரது உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், அவர்களைத் தமது புனித மலைக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியூட்டுவதாக ஆண்டவர் வாக்குறுதி அளிக்கிறார். இறைவனின் இல்லம் எல்லா மக்களுக்கும் உரியது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.பதிலுரைப்பாடல்
திபா 67: 1-2. 4. 5,7
பல்லவி : கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.
1. கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். - பல்லவி
2. வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். - பல்லவி
3. கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
புனித பவுல் அடியார் பிற இனத்தாருக்குத் திருத்தூதராகத் தான் பணியாற்றுவதைப் பெருமையாகக் கருதுகிறார். இஸ்ரயேல் மக்கள் புறக்கணித்ததால் உலகம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டது. கடவுள் தமக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீதும் இரக்கம் காட்டுகிறார் என்ற உன்னத உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா!நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. உமக்குத் திருப்பணி செய்வதற்கும், உமது பெயர்மீது அன்புகூர்வதற்கும், உம் ஊழியராய் இருப்பதற்கும், நீர் தெரிந்துகொண்ட எங்கள் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், ஆகிய அனைவரும், “விடுத்த அழைப்பையும் கொடுத்த அருள்கொடைகளையும் திரும்பப் பெற்றுக் கொள்ளாத” உம்மைப் போலவே, பிரமாணிக்கம் தவறாது இருக்கவேண்டுமென்றும், இறைமக்களாகிய எங்களையும் பிரமாணிக்கத்தின் பாதையில் வழிநடத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.2. அன்னையின் விண்ணேற்புப் பெருவிழாவையும் எம் இந்தியத் திருநாட்டின் விடுதலைத் திருநாளையும் நேற்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்த நாங்கள். “நான் வழங்கும் விடுதலை அண்மையில் உள்ளது; நான் அளிக்கும் வெற்றி விரைவில் வெளிப்படும்” என்று இறைவாக்கினர் ஏசாயா வழியாக நீர் தரும் வாக்குறுதியில் நம்பிக்கை கொள்ளவும், எமை ஆளும் தலைவர்கள் “நீதியை நிலைநாட்டுங்கள், நேர்மையைக் கடைப்பிடியுங்கள்” என்கிற உமது அறிவுறையை ஏற்று ஆட்சி செய்யவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்” என்றுரைத்து, அனைத்து மக்களையும் அரவணைக்கத் துடிக்கும் உம்மைப் பின்பற்றி, நாங்கள் அனைவரும், சாதி, சமய, மொழி, இன ஏற்றத்தாழ்வு கருதாமல், அனைவரோடும் அன்புறவோடு வாழவும், சமயச்சார்பற்ற, சமூகநீதி தழைக்கிற செழுமையான ஒரு சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. அனைவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகவும், உலகம் கடவுளோடு ஒப்புரவாகவும், தம் சொந்த மகனையும் தாரை வார்த்த தந்தையே, நாங்கள் எத்தகையோராய் இருந்தாலும் எங்களைக் கண்ணோக்கி, உமக்கு உரியவர்களாய் மாற்ற வேண்டுமென்றும், நவீன உலகின் மாயக் கவர்ச்சிகளில் சிக்கித் தவிக்கும் எம் இளையோரை நல்வழிப்படுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இன்றைய நற்செய்தியிலே வருகிற கனானேயப் பெண்போல, உம்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு, எவ்வளவு துன்பப்பட்டாலும், எவ்வளவு அவமானப்பட்டாலும், தொடர்ந்து ஜெபிக்கவும், இடைவிடாது உழைக்கவும், இதன் வழியாக அற்புதங்களை அனுபவிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.





