பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு 20.09.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-
ஏசாயா 55: 6-9
பிலிப்பியர் 1: 20c-24, 27a
மத்தேயு 20: 1-16
திருப்பலி முன்னுரை:-
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 25-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் "திராட்சைத் தோட்ட வேலையாட்கள்" உவமையின் வழியாக இறைவனின் கணக்கு மனிதக் கணக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை இயேசு நமக்கு உணர்த்துகிறார். முதலில் வந்தவர்களுக்கும், இறுதியில் வந்தவர்களுக்கும் ஒரே கூலியைக் கொடுக்கும் தோட்ட உரிமையாளர், அநீதி இழைப்பவர் அல்ல; மாறாக அவர் தாராள குணமும் இரக்கமும் கொண்டவர்.
"என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகள் அல்ல" என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் கூறுகிறார். "வாழ்வது கிறிஸ்துவே" என்ற உயர் இலட்சியத்தைப் புனித பவுல் இரண்டாம் வாசகத்தில் நமக்கு முன்வைக்கிறார். நாம் எவ்வளவு காலம் உழைக்கிறோம் என்பதை விட, எவ்வளவு ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் இறைவனோடு இணைந்து வாழ்கிறோம் என்பதே முக்கியம். பொறாமை மற்றும் குறுகிய மனப்பான்மையைக் களைந்துவிட்டு, இறைவனின் தாராளமான அருளைப் போற்றிப் புகழ வரம்கேட்டு, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
வாசக முன்னுரைகள்:-
முதல் வாசக முன்னுரை :-
ஆண்டவரைக் காணக்கூடிய காலத்தில் அவரைத் தேடுங்கள் என்று ஏசாயா இறைவாக்கினர் அழைக்கிறார். தீயவர்கள் தங்கள் வழியை விட்டுத் திரும்பி வந்தால், இறைவன் அவர்களுக்கு நிறைவாக மன்னிப்பு வழங்குவார். இறைவனின் எண்ணங்களும் வழிகளும் மனித அறிவுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்:-
பல்லவி: தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
திபா 145: 2-3. 8-9. 17-18
நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை :-
வாழ்ந்தாலும் சரி, செத்தாலும் சரி, கிறிஸ்து என் வாழ்வில் மாட்சிபெற வேண்டும் என்பதே என் விருப்பம் என்று புனித பவுல் அடியார் கூறுகிறார். "வாழ்வது கிறிஸ்துவே, சாவு எனக்கு ஆதாயமே" என்ற உன்னத விசுவாச அறிக்கையையும், கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தகுந்தபடி வாழுமாறு விடுக்கப்படும் அழைப்பையும் இவ்வாசகத்தில் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும்…அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-
1. “வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன்” எனச் சூளுரைத்த பவுலடியாரைப் போல, தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், இறைமக்கள் ஆகிய நாங்கள் அனைவரும் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்து, பயனுள்ள பணி செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. போர் பதட்டகங்களாலும், வன்முறைச் சூழல்களாலும், அமைதியிழந்து தவிக்கிற இவ்வுலகில், “கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக” என்கிற ஏசாயாவின் இறைவாக்கு நிறைவேறவும், இவ்வுலகை ஆள்பவர்களும், எங்கள் நாடு மற்றும் மாநிலத்தின் தலைவர்களும், மக்களின் நலன்களைக் காப்பதிலும், அமைதியான நல்வாழ்வை உறுதிப்படுத்துவதிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன” என்கிற இறைவாக்கின் பொருளுணர்ந்து, எம் இளையோரும், குழந்தைகளும், மனம் போன போக்கிலும், கவர்ச்சிக்குப்பின்னும் செல்லாமல், ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுகிறவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்” என்று தியானப்பாடலின் பதிலுரையில் பகர்ந்த நாங்கள், எங்களில் வலுவற்றோருக்காகவும், நலிவுற்றோருக்காகவும், நோயுற்றோருக்காகவும், தனிமைப் பட்டோருக்காகவும், எதிர்காலத்திற்கான வழிதெரியாது தவிப்போருக்காகவும் உம்மை நோக்கி மன்றாடுகிறோம். அவர்கள்மீது நீர் தாமே இரக்கம் காட்டி, ஈடேற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நற்செய்தி உவமையில் தென்படுகிற அநீதிகுறித்து கேள்வி எழுப்புவதில் காட்டுகிற ஆர்வத்தை, நாங்கள் வாழுகிற இன்றைய சமூகத்தில் நிலவுகிற அநீதிகளைக் களைய எங்களால் இயன்றதைத் துணிவுடன் செய்வதில் காட்டவும், எங்கள் தனிப்பட்ட வாழ்வில், நீதியுள்ளவர்களாகவும் பரிவுள்ளவர்களாகவும் விளங்கி, கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ள, அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.






