பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு
![]()
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1.அரசர்கள். 12:13, 16-19
உரோமையர் 8: 28 -30
மத்தேயு 13: 44-52
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு 'ஞானம்' மற்றும் 'மதிப்புமிக்கத் தேர்வு' குறித்த சிந்தனைகளை நமக்கு முன்வைக்கிறது. முதல் வாசகத்தில், சாலமோன் அரசர் இறைவனிடம் செல்வத்தையோ அல்லது நீண்ட ஆயுளையோ கேட்காமல், நீதியோடு ஆட்சி செய்யத் தேவையான 'ஞானத்தை' மட்டுமே கேட்கிறார்.
நற்செய்தியில் இயேசு, விண்ணரசை நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கும், விலைஉயர்ந்த முத்துக்களுக்கும் ஒப்பிடுகிறார். அந்தப் புதையலைப் பெறுவதற்காகத் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்கத் துணிந்த அந்த மனிதனைப் போல, நாமும் இறைவார்த்தையையும் இறையாட்சியையும் நமது வாழ்வின் முதன்மையான செல்வமாகக் கருத அழைக்கப்படுகிறோம். உலகப் பொருள்கள் தரும் தற்காலிக மகிழ்ச்சியை விட, இறைவனின் அன்பு தரும் நிலையான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான ஞானம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 3: 5, 7-12)
இளம் வயதில் அரசராகப் பொறுப்பேற்ற சாலமோனிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று ஆண்டவர் கேட்கிறார். சாலமோன் உலகச் செல்வங்களைக் கேட்காமல், நன்மை தீமை எதுவென்று ஆய்ந்தறியும் 'ஞானத்தை'க் கேட்கிறார். சாலமோனின் இந்தத் தாழ்மையான வேண்டுதலால் மகிழ்ந்த ஆண்டவர், அவருக்கு நிகரற்ற ஞானத்தை வழங்கியதை விவரிக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130
ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 28-30)
கடவுளிடம் அன்புகூருபவர்களுக்கும், அவருடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் எல்லாமே நன்மைக்கே நடக்கும் என்று புனித பவுல் உறுதி கூறுகிறார். நாம் அவருடைய மகனின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றப்பட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. தாம் முன்குறித்து வைத்தோரை அழைப்பவரும், தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்குபவருமான கடவுள், தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சாலமோன் அரசனுக்கு நீர் அருளியதுபோலவே, உலகாளும் தலைவர்களுக்கும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களுக்கும் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்துள்ள மறைப்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும், தம் அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வை மேற்கொள்வும், மேலும் பல இளைஞர், இளம்பெண்கள் இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, பணிவாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நாங்கள் அனைவரும் எத்தகைய இடர்கள் நிறைந்த சூழலில் இருந்தாலும், இடுக்கண் நிறைந்த வாழ்வை மேற்கொண்டாலும், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாக, நம்பிக்கையுடனும் துணிவுடனும் செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நிலத்தில் மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பவர் போலவும், விலை உயர்ந்த ஒரு முத்தைத் தனதாக்க அனைத்தையும் இழக்கத் தயாராயிருப்பவர் போலவும், விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள உம்மையும், உமக்குரியவற்றையும் மட்டுமே நாடுகின்ற நல்லுள்ளம் பெற்றவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.





