பொதுக்காலம் ஆண்டின் 19ஆம் ஞாயிறு 09.08.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1 அரசர்கள் 19:9அ,11-13அ
உரோமையர் 9:1-5
மத்தேயு 14: 22-33
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
வாழ்க்கைப் பயணத்தில் எதிர்பாராமல் வரும் புயல்களையும், போராட்டங்களையும் நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம்? இன்றைய திருவழிபாடு இக்கேள்விக்கு விடை தருகிறது. முதல் வாசகத்தில், எலியா இறைவாக்கினர் கடும் காற்றிலோ, நிலநடுக்கத்திலோ, நெருப்பிலோ இறைவனைக் காணவில்லை; மாறாக, மென்மையான தென்றல் காற்றில் இறைவனின் பிரசன்னத்தை உணர்கிறார்.
நற்செய்தியில், சீடர்கள் கடலில் புயலால் அலைக்கழிக்கப்படும்போது, இயேசு நீரின் மேல் நடந்து வருகிறார். பயத்தினால் சீடர்கள் அலறும்போது, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று தைரியம் கூறுகிறார். பேதுருவின் விசுவாசம் தடுமாறும்போது, இயேசு தம் கரம் நீட்டி அவரைக் காப்பாற்றுகிறார். நம் வாழ்வின் புயல்கள் நம்மை மூழ்கடிக்கப் பார்க்கும்போதெல்லாம், ஆண்டவர் அருகில் இருக்கிறார் என்ற நம்பிக்கையை இன்றைய மறைவாக்குகள் நமக்குத் தருகின்றன. புயலின் நடுவே அமைதி தரும் அந்த இறைவனைச் சந்திக்க, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 19: 9a, 11-13a)
இறைவாக்கினர் எலியா தன் உயிருக்கு அஞ்சி ஓடி, ஒரு குகையில் தஞ்சம் புகுகிறார். ஆர்ப்பரிக்கும் இயற்கைச் சீற்றங்களுக்கு மத்தியில் அல்ல, மாறாக அமைதியான, மென்மையான ஒரு தென்றல் காற்றில் இறைவன் தம்மை வெளிப்படுத்துகிறார். இறைவன் ஆரவாரத்தில் இல்லை, அமைதியிலேயே இருக்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பையும் மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
திருப்பாடல்: 85: 8-13
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன். தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி. நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும். நீதியும் நிறைவாழ்வும் ஒன்றை யொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும். விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி
நல்லதையே ஆண்டவர் அருள்வார். நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும். அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 9: 1-5)
தன் சொந்த இனமாகிய இஸ்ரயேல் மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதது குறித்து புனித பவுல் அடியார் பெரும் மனவேதனையோடு பேசுகிறார். அவர்களின் மீட்பிற்காகத் தான் சாபத்திற்கு உள்ளாகவும் அவர் தயாராக இருக்கிறார். கிறிஸ்துவின் வழியாகக் கிடைத்த உன்னதப் பேறுகளை விவரிக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின்றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன் அல்லேலூயா!
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், உம் பேரன்பையும், மீட்பையும், நிறைவாழ்வையும் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் வாக்களிக்கிறீர் என்பதை உணர்ந்து, இன்றைய பதிலுரை பாடலில் சொன்னது போல, ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்டு எம்வாழ்க்கையை நடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. இன்றைய தியானப் பாடலாக அமைந்த திருப்பாடல் எண்பத்து ஐந்து கூறுவது போல, இவ்வுலகிலும், எம்நாட்டிலும், ஆண்டவரின் மாட்சி குடிகொள்ளவும், பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கவும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடவும், மண்ணினின்று உண்மை முளைத்தெழவும், நல்விளைவை எம்நாடு நல்கவும், தலைவர்களும் குடிமக்களும் இவற்றிற்காகப் பொறுப்புடன் செயலாற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. தன் சொந்த இனத்தைச் சேர்ந்த சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக எந்தத் தியாகத்தையும் பழியையும் ஏற்கத் தயாராக இருந்த பவுலடியாரை பின்பற்றி, மதவாதமும், சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளில் வேகமும் அதிகரித்திருக்கும் இன்றையச் சூழலில், எம் இந்திய தேசம் உண்மை ஒளியாம் உம்மை ஏற்கவும், அதற்காக நாங்கள் அனைவரும் ஊக்கத்தோடு செயல்பட்டு, எங்கள் சாட்சிய வாழ்வின் மூலமும், துணிவான அறிக்கையிடுதல் வழியாகவும் மீட்பிற்கான வழியைப் பறைசாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. புயல் சூழ்ந்த துன்பச்சூழல்களால் எங்கள் வாழ்க்கைப் படகு அலைக்கழிக்கப்பட்டு, நாங்கள் திகிலுற்று தவிக்கும்போது, “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்கிற உமது உடனிருப்பை உணர்ந்து கொள்ளவும், இன்றைய முதல் வாசகத்தில் வருகிற இறைவாக்கினர் எலியா, மெல்லிய தென்றலில் உம து குரலொலியை கேட்டது போல, நாங்களும் பிரமாண்டங்களுக்காகக் காத்திராமல், எங்களது தினசரி வாழ்வின் எதார்த்தங்களிலும், அமைதியான எங்கள் தனிப்பட்ட இறைவேண்டலிலும் உம்மைக் கண்டுணர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்று கூறி, படகிலிருந்து இறங்கி, கடல்மீது நடந்து உம்மை நோக்கி வந்த பேதுருவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எதற்கும் அஞ்சாமல் உம்மையே நம்பி வாழவும், உம்மையே நோக்கி வரவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.





