பொதுக்காலம் ஆண்டின் 18ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 55:1-3
உரோமையர் 8: 35,37-39
மத்தேயு 14: 13-21
திருப்பலி முன்னுரை:
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 18-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு இறைவனின் எல்லையற்ற தாராள குணத்தையும், அவர் நம் மீது கொண்டுள்ள பிரிக்க முடியாத அன்பையும் பறைசாற்றுகிறது. "தாகமாய் இருப்பவர்களே, நீர்நிலைகளுக்கு வாருங்கள்; காசில்லாதவர்களே, வந்து வாங்கி உண்ணுங்கள்" என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் அழைப்பு விடுக்கிறார். இது இறைவன் தரும் இலவசமான, நிறைவான வாழ்விற்கான அழைப்பு.
நற்செய்தியில், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இயேசு உணவளிக்கும் அதிசயத்தைக் காண்கிறோம். திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். நம்மிடம் உள்ள மிகச் சிறிய காரியங்களைக் கடவுளிடம் ஒப்படைத்தால், அவர் அதனை ஆசீர்வதித்துப் பலமடங்காக மாற்ற வல்லவர் என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை எதுவும் பிரிக்க முடியாது என்ற பவுல் அடியாரின் நம்பிக்கையை இரண்டாம் வாசகத்தில் கேட்கிறோம். அந்தப் பேரன்பில் திளைக்கவும், பிறரோடு பகிர்ந்து வாழவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 1-3)
இறைவன் தரும் அருட்கொடைகள் விலையற்றவை. தாகத்தோடும் பசியோடும் இருப்பவர்கள் இறைவனிடம் வந்து தாராளமாக அருளைப் பெற்றுக்கொள்ள ஏசாயா இறைவாக்கினர் அழைக்கிறார். அழியும் உணவுக்காக உழைப்பதை விடுத்து, நிலைவாழ்வு தரும் இறைவார்த்தைக்குச் செவிசாய்க்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 145: 8-9. 15-16. 17-18. (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். - பல்லவி
எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். - பல்லவி
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். - பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 35, 37-39)
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மை யாரால் பிரிக்க முடியும்? துன்பமோ, வறுமையோ, அச்சுறுத்தலோ அல்லது சாவோ எதுவுமே நம்மை இறை அன்பிலிருந்து பிரிக்க முடியாது என்று புனித பவுல் உறுதியாகக் கூறுகிறார். எதிலும் வெற்றி வாகை சூடச் செய்யும் அந்தத் தெய்வீக அன்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. தாம் தெரிந்துகொண்ட இஸ்ராயேல் இனத்தாரோடு “என்றுமுள
உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்” என்றுரைத்த தந்தையே! தாயாம் திருஅவையை வழிநடத்த நீர் தெரிந்தெடுத்துள்ள திருத்தந்தை லியோ அவர்கள்மீதும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவர்மீதும், மாறாத பேரன்பை காட்டிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. மீண்டும் மீண்டும் தலைதூக்கும் போர்களாலும், அடுத்தடுத்து நடக்கும் வன்முறைகளாலும், இடைவிடாது நடைபெறும் தீச்செயல்களாலும் துயருறும் இவ்வுலகிற்கும், எம்நாட்டிற்கும் அமைதிநிறை நல்வாழ்வை அருள வேண்டுமென்றும், தலைவர்களுக்கும், குடிமக்களாகிய எங்களுக்கும் சரியானதை தேர்வு செய்து, நேரிய வழியில் நடந்திடும் ஞானத்தை தந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இன்றைய முதல் வாசகத்தின் உட்பொருளை உணர்ந்து, நிறைவு தராத ஒன்றிற்காய் எங்கள் உழைப்பை வீணாக்காமல் இருக்கவும், கண்டவற்றின் மீது தாகம் கொண்டு அலையாமல் இருக்கவும், உமக்குக் கவனமாய் செவிகொடுத்து, உமது வார்த்தை எனும் நல்லுணவை உண்டு, வாழ்வடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. பெருந்திரளான மக்கள்மீது பரிவு கொண்டு, உடல் நலமற்றோருக்கு குணம் தந்து, பசித்திருந்தோருக்கு உணவைப் பகிர்ந்தளித்து, உமது பேரன்பையும் கருணையையும் எண்பித்த இறைவா, நாங்களும் பசித்தோருக்கு உணவளித்து, நலிந்தோருக்கு உதவி புரிந்து, தனிமையில் தவிப்போருக்கு துணையிருந்து, எங்கள் அறச்செயல்களாலும், பிறரன்புச் செயல்களாலும், எங்களையே நல்ல கிறித்தவ மக்களாக எண்பிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பவுலடியாரின் நம்பிக்கையைப் பகிர்ந்தவர்களாக, வேதனையோ நெருக்கடியோ, இன்னலோ, பட்டினியோ ஆடையின்மையோ, இடரோ, சாவோ, எதுவும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து எம்மைப் பிரிக்க முடியாது என்கிற உறுதியான நம்பிக்கை கொண்டு வாழவும், எம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாங்கள் வெற்றிமேல் வெற்றி அடைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.





