Monday, February 16, 2026

தவக்காலம் முதல் ஞாயிறு - முதலாம் ஆண்டு

தவக்காலம் முதல் ஞாயிறு  

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

தொடக்கநூல் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். இவற்றைத் தான் நாம் நாள்தோறும் திருப்பலியில் நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் ஆண்டுக்கு ஒரு முறை சிந்தித்த சீர்தூக்கிப் பார்க்க நம்மைத் திருச்சபை அழைக்கிறது தவக்காலத்தின் வழியாக...
இவ்வாண்டின் முதல் தவக்கால ஞாயிறைச் சிறப்பிக்க இத்திருப்பலியில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தவக்காலம் என்றவுடன் ஏதோ கவலையோடும், வருத்தத்தோடும் காட்சி கொடுப்பது என்பதல்ல. மாறான இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். ஒப்புரவின் நல்ல காலம். நிலைவாழ்வுக்கு உரமிடும் காலம். மனித வாழ்வில் சோதனை என்பது ஒரு தொடர்கதை. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது மானிடரின் உள்ளத்தை வருடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்தச் சோதனைகளையும் வென்று சாதனை படைத்த நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி. இயேசு செய்த அரும்பெரும் சாதனை. ஆதிப்பெற்றோரின் அடிமைத்தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில் பாவநிலையிலிருந்து வெற்றிப் பெற்ற புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். இறைவார்த்தை இயேசுவுக்குச் சோதனைகளை வெல்ல உறுதுணையாக இருந்தது. எனவே நாமும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இல்லையேல் “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்ற பரிசேயர்களைப் பார்த்துச் சொன்ன இயேசு நம்மையும் பார்த்துச் சொல்லுமுன் விழிப்புடன் செயல்படுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

தவக்காலத்தின்‌ முதல்‌ ஞாயிறாகிய இன்று தொடக்கநூல்‌ வாசகம்‌ மனிதனின்‌ படைப்பு, அவனது வீழ்ச்சிபற்றிக் கூறுகிறது. தவக்காலத்தின்‌ குறிக்கோள்‌ மனிதன்‌ தன்‌ பாவ வாழ்க்கையை உணர்ந்து மனம்‌ திரும்பி, இறைவனின்‌ புதுப்‌ படைப்பு என்ற நிலைக்குத்‌ திரும்பி வருதலேயாகும்‌. இந்நிலைக்கு வர வேண்டுமாயின்‌ அவன்‌ முந்திய நிலையை உணர வேண்டும்‌ என்ற கருத்திலே இன்றைய வாசகம்‌ பொருந்தி அமைகிறது. இவ்வாசகத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனின் வார்த்தைகளைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள்: 51: 1-4. 10-12,15

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார் வையில் தீயது செய்தேன். பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னி லையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

முதல் மனிதன் ஆதாம் செய்தப் பாவத்தால் சாவைக் கொணர்ந்தான். ஆயினும் கடவுளின் கட்டளைகளை மீறிப் பாவம் செய்யாதவரும் சாவுக்குள்ளானார்கள். ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். இவ்வாறு நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் பவுலடியார் அழைக்கின்றார். கேட்போம் கவனமுடன்...

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. திரு அவையின் ஆட்சிபீடத்தில் இருப்போர் முதல், கடைசி பொதுநிலையினர் வரை, அனைவருமே, “கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்வதுதான்’ தங்களுக்கான அழைத்தலும் கடமையும் என்பதை உணர்ந்து செயல்பட, அருளின் காலமாகிய இந்தத் தவக்காலம் பயன்பட வேண்டுமென்று, திருத்தந்தை லியோ, அனைத்து  அருள் பணியாளர்கள் மற்றும் துறவியவருக்காகவும், எங்கள் ஒவ்வொருவருக்காகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆசை, அகந்தை, அதிகார வேட்கை போன்ற அலகையின் வலைகளில் சிக்கி, அமைதியின் பாதையைத் துறந்து, அலங்கோலப்பட்டு நிற்கும் அவனிக்கு, மனந்திரும்புதலின் பதையில் பயணிக்கும் வரமருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், தீமையின் வழிகளைத் துறந்து நன்மையின் செயல்களில் ஈடுபடவும், மக்கள் அனைவரையும் அறவழியில் வழிநடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருப்பதாகக் கருதி, கடவுளின் கட்டளையை மீறிய எம் ஆதிப்பெற்றோர் போலவே, இன்றைக்கும், உலகின் மாயக் கவர்ச்சிகளாலும், அறிவியல் வளர்ச்சி தருகிற அதீத சுகத்தாலும், வசதிகளாலும், நுகர்வுக் கலாச்சாரம் என்கிற நயவஞ்சக வலையில் சிக்குவதாலும், படைத்தவராம் கடவுளை மறந்து, படைப்புகளில் தன்னைத் தொலைத்துவிட்ட நவீன உலகின் மக்களாகிய நாங்கள், ஒறுத்தல், தவம், ஜெபம், புண்ணியம் போன்றவற்றின் மேன்மையை உணர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள்’ ஆனதை, கிறிஸ்துவின் வழியாய் அனுபவிக்கும் நாங்கள், ‘அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் நாங்கள் வாழ்கிறோம்’ என்பதை உணர்ந்து, கடவுளின் கட்டளைகளுக்கும், சமூக நன்னெறிகளுக்கும் கீழ்ப்படிந்து வாழுகிற நல்லொழுக்கம் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது” என்கிற பவுலடியாரின் கூற்றினால் திடம்பெற்று, எம்பாவங்களை உணர்ந்து, நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, இறையருளை நிரம்பப் பெறுகிற காலமாக இந்தத் தவக்காலத்தை மாற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 

Monday, February 9, 2026

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு முதலாம் ஆண்டு

 பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் 15:15-20
1கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அழைக்கின்றது. நல்லது- தீயது, நெருப்பு- நீர், வாழ்வு- சாவு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் நமது விருப்பத்தைப் பொறுத்தது.
இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிப்படுத்துகின்றார். திருச்சட்டத்திலிருந்து அனைத்தும் நிறைவேறாதவரை அச்சட்டத்தின் எழுத்தோ சிறுபுள்ளியோ ஒழியாது என்று பதிவு செய்கின்றார். இறைவாக்கு நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்பு விடுக்கின்றார். இதனை மறந்து மனம்போன போக்கில் வாழ்ந்து அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார்.
இயேசுவின் நெறியோ அகமனப் பக்குவத்தைச் சார்ந்தது. நற்சிந்தனைகளுக்கும் தூய எண்ணங்களுக்கும் முக்கிவத்துவம் கொடுப்பது. ஏனென்றால் அகமனப் பக்கவத்தைப் பொறுத்தே நம் வெளிச் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இங்கு நன்கு உணர்த்துகின்றார் இயேசு. சுயநலமற்ற, அன்புக் கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபத்தைத் தான் ஆணடவர் இயேசு பரிசேயரிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினர். ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொண்டு இத்திருப்பலியில் கலந்து இறையருள் நாடிடுவோம் வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

சீராக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும் நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. மாந்தர்கள் முன் வாழ்வும், சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். கடவுள் மனிதர்களின் அனைத்துச் செயல்களையும் காண்கின்றார். பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுதும் சிறந்த நூலாகிய சீராக் ஞானநூலின் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: 119: 1-2, 4-5, 17-18, 33-34
1. மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.  அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். . பல்லவி

2. ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.  உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!. பல்லவி

3. உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.  உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி

4. ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.  உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

நமது வாழ்வின் வழி எளிமையானதல்ல. அது மிகக் கடினமானது. இத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்க நமக்கு இறைஞானம் வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் வெளிப்படுத்துகின்றார். மாந்தருக்கு வேண்டியது உலக ஞானம் அல்ல. இறைஞானமே! நாம் மேன்மைப் பெற வேண்டும். வாழ்வுப் பெற வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதே இறைஞானம். இறைஞானம் இறைவனை அன்புச் செய்வோருக்குத் தூய ஆவியார் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இவற்றை விளக்கம் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

 அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன், உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்த இறை ஞானத்தைப் பின்பற்றுகிற தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், எதிர்வருகிற தவக்காலத்தில், இறைவேண்டல், தவமுயற்சிகள், பிறரன்பு செயல்கள் ஆகியவற்றில், புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்துடன் ஈடுபட்டு, ஏற்புடைய காலமாக இந்தக் காலத்தை மாற்றிட, அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும்” என்கிற முதல் வாசகம் இன்றைய உலகிற்கு முன் இருக்கும் சவாலை எம்மனதிற்குள் எழுப்புகின்றது.  போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், வாழ்விற்கான வழிகளைத் தெரிவு செய்து பயணிக்க, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்” என்கிற சீராக்கின் ஞானம், எங்களையும், எங்கள் இளையோரையும் பிள்ளைகளையும் நிரப்பவும், இறைதிருவுளப்படியும், நல்மனித விழுமியங்களின்படியும், சமூக வழிகாட்டு நெறிமுறைகளையின்படியும் எங்கள் வாழ்க்கையை அமைத்து, ‘ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்’ என்கிற திருப்பாடல் ஆசியுரையை எமதாக்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைத்தையும் துருவி ஆய்கிற தூய ஆவியாரின் பார்வையில் நாங்கள் அனைவரும் மாசற்றவர்களாய் விளங்கவும், கொலை, விபசாரம் போன்ற மாபாதகங்களை தவிர்க்கும் மக்களாக மட்டுமல்லாமல், பொய் சொல்லாத தூய நாவுடையவர்களாகவும், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுகிற நேர்மையுடையவர்களாகவும் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
     
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றுபவர்களாகவும், பகைமை பாராட்டாத நல்மனத்தோராகவும், ஒப்புரவையும் ஒன்றிப்பையும் விரும்புகிற மக்களாகவும் எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், சமுதாயத்திலும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, February 3, 2026

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு

 பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு  


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 58:7-10
1கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16

திருப்பலி முன்னுரை

பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்மைச் சுவையுள்ளவர்களாகவும், அனைவருக்கும் ஒளியாகவும் இருக்க அழைக்கின்றது. திருமுழுக்கின்போது நாம் உவர்ப்புடையவர்களாக உப்பைச் சுவைப்பதின் மூலமாக மாற்றப்படுகிறோம்.
 
கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் வாழ்வான அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவைக் கூட்டி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உப்பின் உவர்ப்புத் தன்மை மாறினால் அதை என்ன செய்வது என்று இயேசு கேட்கிறார். அதற்குப் பதில் கடவுள் நம்மை மீண்டும் உப்பாகக் கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்.

திருமுழுக்கில் நாம் கையில் மெழுகுவர்த்தியைப் பெறும்போது அனைவருக்கும் ஒளியாக இருக்கிறோம். இயேசு நம்மை ஒளியாக இருக்க அழைக்கிறார். அது மற்றவர்களுக்குத் தெரியும்படியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மற்றவர்களின் வாழ்வில் இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். இருள் நடுவே நம் ஒளி உதிக்க வேண்டும். நற்செயல்களால் கடவுளுடன் இணைந்திடுவோம். இவரின் ஞானத்தையும் வல்லமையையும் பெற்றிட இத்திருப்பலியில் உப்பாய் ஒளியாய் கலந்திடுவோம் வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

நாங்கள் உண்ணா நோன்பிருந்தபொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று இறைவனிடம் முறையிட்டப் போலிப் பக்தர்களுக்கு, பசித்தோருக்கு உணவளித்தும் உறைவிடம் இல்லாதோருக்குத் தங்க இடமளிப்பதும், உடையற்றோருக்கு உடையை வழங்குவதுமே இறைவன் விரும்பும் நோன்பு உண்மையான நோன்பின் குறிக்கோளை விளக்கும் இறைவாக்கினர் எசாயா மூலம் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர்க்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மளிர்வர்.
திருப்பாடல்: 112: 4-5, 6-7, 8-9
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.  மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்... பல்லவி

எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.  தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்... பல்லவி

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.  அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்... பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

நமது நம்பிக்கையின் அடிப்படைக் கடவுளின் வல்லமையே தவிர மனித ஞானம் அல்ல. இதன் அடிப்படையில் தூய பவுலடியார் தனது பணிவாழ்வை மேற்க்கொண்டார். போர்வீரனாக இருந்த அவர் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகவோ அல்லது ஞானம் பெற்ற அறிஞராகவோ இருந்தது இல்லை. ஆயினும் அவர் பறைசாற்றிய நற்செய்திகள் அனைத்தும் தூய ஆவியாரின் வல்லமையான செயல்களே என்று அழுத்தமாகப் பதிவுச் செய்யும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் கவனமுடன் செவிமெடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே” என்கிற திருமுக வாசகத்தின் உண்மையை உணர்ந்து, தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், மனித அறிவையும் ஆற்றலையும் மட்டுமே நம்பியிராமல், இறைஞானத்தால் வழிநடத்தப்பட, எம்மையே ஒப்புவிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகுக்கு “இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்கிற ஏசாயாவின் இறைவாக்குப் புத்தெழுச்சி தரவும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், ஒளியின் ஆட்சி நோக்கிப் பயணிக்கவும், செயல்படவும், அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பணமும், பதவியும், பகட்டும், எம்மைக் கவர்ந்திழுக்கும் சூழலில், சிலுவையில் அறையுண்ட மெசியாவாகிய இயேசுவைத் தவிர, நாங்கள் பற்றிக்கொள்ள வேறு ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் யாவரும், குறிப்பாக இளையோரும், எங்களிடையே இருக்கும் உலகப்பற்று எனும் நுகத்தை அகற்றிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு வாழ்கின்ற ஞானத்தையும், தாழ்ச்சியையும், மனௌறுதியையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு எங்களிலே நிறைவேறி “அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்” என்பதுவும் உண்மையாகி, எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லாதோர்க்குத் துணை நிற்பதும், உடையற்றோருக்கு உடுக்கக் கொடுப்பதும், வறியோரின் தேவையை நிறைவு செய்வதும் தான், நீர் விரும்பும் நோன்பு என்றுணர்ந்து அறச்செயல்கள் புரியவும், அதன் வழியாக, இவ்வுலகிற்கு நாங்கள், ஒளியாகவும் உப்பாகவும் விளங்க வேண்டுமென்றும், எங்களது நற்செயல்களைக் காண்கின்ற எல்லோரும், விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

Tuesday, January 27, 2026

பொதுக் காலம் நான்காம் ஞாயிறு - முதலாம் ஆண்டு

 பொதுக் காலம் நான்காம் ஞாயிறு
 
Matthew 5:1–12

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

செப்பனியா2:3, 3:12-13
1கொரிந்தியர் 1:26-31
மத்தேயு 5:1-12

திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் பிரியமானவர்களே! உங்கள் அனைவரையும் ஞாயிறுத் திருவழிப்பாட்டின் நாயகனாம் இறைஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்.

இன்றைய வழிபாடானது ஏழ்ழை வாழ்வும், எளிய மக்களின் குறைகளையும், வென்றெடுக்க, இறைவாக்கினர் செப்பனியா வழியாக யாவே கடவுள் அவரின் கட்டளைக் கடைபிடிக்கவும், நேர்மையையும், நீதியையும் நாம் வாழும் சமூகத்தில் நிலை நாட்டவும் தீமையை அறவே விட்டுவிட அழைப்பு விடுக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் திருத்தூதர் பவுலின் வழியாகக் கடவுள் எதற்காக நம்மை இவ்வுலக வாழ்விற்கு அழைத்திருக்கின்றார்? அந்த அழைப்பினை நாம் உணர்ந்தவர்களாக வாழ்ந்திருக்கின்றோமா? கடவுள் திருமுன் எவரும் உயர்ந்தவர்கள் இல்லை. நம்முடைய ஞானமெல்லாம் கிறிஸ்துவினிடமிருந்தே வருகின்றது.

ஏழைகள் மட்டில் இரக்கம் கொண்ட கிறிஸ்து மலைமீது அமர்ந்து, ஏழைகள் இவ்வலகில் வாழச் இச்சமூகத்தில் தகுதி இல்லாதவர்கள் எனக் கருதபட்ட, அனைவரும் கடவுளின் பார்வையில் தகுதியுடையவர்களாகவும், பாராட்டுக்குறியவர்களாகவும் நற்சான்றுப் பெற்றவர்கள் என ஆறுதல் கூறும் அனைத்து வழிபாட்டு வாசகங்களும், இறைவன் தரும் இம்மாபெரும் விருந்திற்கு அழைக்கின்றார். அழைப்பின் குரலுக்குச் செவிச் சாய்த்துப் பங்கேற்போம் திருப்பலியில், வார்த்தைகளால் அல்ல! வாழ்வாகத் தொடர்வோம். வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

செப்பனியா, யோசியா காலத்தில்‌ இறைவாக்கு உரைத்தவர்‌. சமய வாழ்வின்‌ மறுமலர்ச்சிக்காக உழைத்தவர்‌. சீர்‌ கெட்ட மக்களை இறைவன்‌ தண்டிப்பார்‌ என்று எச்சரித்தவர்‌. எனினும்‌ இறைவனுக்கு அஞ்சி நல்வழி நடப்போர்‌ அவரது அன்பையும்‌ அருளையும்‌ பெறுவர்‌ என்று ஆறுதலும்‌ கூறியவர்‌. எஞ்சியுள்ளோரின்‌ எழில்மிகு வாழ்வு இங்குச்‌ சித்தரிக்கப்படுகிறது.  இறைவனின்‌ கோபாக்கினைக்குத்‌ தப்பிக்க கூடியவர்‌ இறைவனுக்கு அஞ்சி நடக்கும்‌ எளியோரே என்ற ஆறுதலான மொழியையும்‌ நாம்‌ கேட்கிறோம்‌. இறைவனது எச்சரிப்பு எனக்கு எட்டுகிறதா?  இவ்வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல்: 146: 7. 8-9a. 9bc-10
பல்லவி : ஏழையரின் உள்ளத்தோர் பெறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களதே.

1. ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்: பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்: சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

2. 
ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்: தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்: நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்: பல்லவி

3. அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்: ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

யூதமக்கள் கிறிஸ்துவின் சிலுவை மீட்பை ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் சிலுவை அவமானத்தின் சின்னம். ஆனால் அதன் மூலமாக வெற்றிக் கொண்டார். கிரேக்கர்கள் கிறிஸ்துவின் உயிர்ப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உயிர்ப்பின் மூலம் மீட்பைத் தந்தார். நம்மை மீட்க மடமை என்று கருதியதை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு இறைமகன் தாழ்ச்சி கொண்டார். உலக ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமையைப் பாராட்டாமல் மனத்தாழ்ச்சி கொண்ட இயேசுவின் பெருமைப் பாராட்ட அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், ஆண்டவரைத் தேடுகிற, நேர்மையை நாடுகிற, மனத் தாழ்மையை விரும்புகிற மக்களாக வாழவும், எங்களது வாழ்க்கை நிலை, செல்வம், செல்வாக்கு, பதவி, படிப்பு என எதிலும் பெருமை கொள்ளாமல், ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டும் இறைக்குலமாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்’ விழாவினை நாளைய தினம் கொண்டாடவிருக்கும் வேளையில், அர்ப்பண வாழ்வினை மேற்கொண்டுள்ள துறவியர் அனைவரும், “நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள்” என்கிற பவுலடியாரின் நினைவூட்டலை உள்வாங்கி, தங்கள் அழைத்தலின்   மேன்மையை உணர்ந்து, தங்களது அர்ப்பணத்திலும், பணிவாழ்விலும் சிறந்து விளங்கி, பிரமாணிக்கத்துடன் பயணிக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அவர்கள் “கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்” என்கிற நிலையை இந்தப் பூவுலகு அடைவதற்கு ஏதுவாக,   உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கடவுள், ஞானிகளை வெட்கப்படுத்த, மடமையென உலகம் கருதுபவற்றையும், வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவையென உலகம் கருதுபவற்றையும், உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்துவிட, அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் தேர்ந்துகொண்டார் என்கிற பேருண்மையை உணர்ந்தவர்களாய், இறைமக்களாகிய நாங்களும், குறிப்பாக இளைஞர் இளம்பெண்களும், எங்கள் கல்வியறிவு, திறமைகள், ஆற்றல்கள் ஆகியவற்றை வளர்க்கும் அதே வேளையில், இறைஞானத்திலும், மனத்தாழ்மையிலும் வளர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
       
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இயேசுவின் மலைப்பொழிவின் சாரத்தை உள்வாங்கி, ஏழையரின் உள்ளத்தோராகவும், கனிவுடையோராகவும், தூய்மையான உள்ளத்தோராகவும், இரக்கமுடையோராகவும், அமைதி ஏற்படுத்துவோராகவும், நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோராகவும், அதன்பொருட்டு துன்பத்தை ஏற்க துணிவுள்ளவர்களாகவும் விளங்கி, பேறுபெற்றோராகவும், விண்ணரசுக்கு உரிமை பெற்றோராகவும் மாறிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

Tuesday, January 20, 2026

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

எசாயா 9:1-4
கொரிந்தியர் 1:10-13,17
மத்தேயு 4:12-23

திருப்பலி முன்னுரை:-

பொதுக் காலத்தின் மூன்றாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இறைசாயலில் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்டப் பணிக்காக அழைக்கப்படுகிறோம். இயேசு தனது விருப்பங்களை இந்த மண்ணுலகில் மனித உறவுகளில் நிறைவுக் காணத் தனது சீடர்களை அழைக்கின்றார்.

 மனமாற்றத்தைக் காணத்தான் இயேசு அழைக்கின்றார். உண்மை அழைத்தல் என்பது வெளிக்குறத் தோற்றத்தை வைத்துத் தீர்மானிப்பது அல்ல. மாறாக அடிப்படையில் மனநிலை மாற்றம் காண்பதோயகும். இதனையே இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. வாழ்க்கை மாற மனமாற்றம் முதலில் தேவை என்பதை இயேசு வலியுறுத்துகின்றார்.

அன்புள்ளம் கொண்டு நம்மைக் கரம் பிடித்து அழைத்த இயேசு கிறிஸ்து நம்முடன் கடைசி வரை இருக்கின்றார். இறைவனில் அழைத்தல் இல்லறமோ துறவறமோ எதுவாக இருந்தாலும் அதில் நிலைத்து நின்று வாழத் தேவையான வரங்களை இத்திருப்பலி வழியாக இறைவனிடம் மன்றாடுவோம். வாரீர்! 

வாசகமுன்னுரை:-

முதல் வாசக முன்னுரை:-

செபுலான், நப்தாலி ஆகிய பகுதிகள் பாழ்படுத்தப்பட்டதன் விளைவாக அம்மக்கள் அடிமைகளாய் முகவரி இல்லா மக்களாய் வாழ்ந்தபோது இறைவன் இறைவாக்கினர் எசாயா மூலம் அவர்களின் சோகத்தை மகிழ்ச்சியாக மாற்றினார். இருட்டில் வாழுகின்ற மக்களின் வாழ்க்கையில் பேரொளியை உதிக்கச் செயதார். மக்கள் அக்களிப்பதுபோல் களிகூர்ந்தனர் என்று இறைவாக்கினர் எசாயா எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்:-

பல்லவி: ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு.
திருப்பாடல்: 27: 1,4, 13-14

1. ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. யாருக்கு நான் அஞ்ச வேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம். யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி
2. 
நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். அதையே நான் நாடித் தேடுவேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும். அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி
3. வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன் னும் நம்புகின்றேன். நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு. மன உறுதி கொள். உன் உள்ளம் வலிமை பெறட்டும். ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

கொரிந்து நகர் திருச்சபையில் ஏற்பட்ட பிரிவினைகளால் யார் பெரியவர்கள் என்ற ஏற்றத்தாழ்வும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதங்களும் தன்னலம் மிகுந்தபோக்கும் நிறைந்துபோனது. இவ்வாறு ஏற்றப்ட்டப் பிரிவினையால் வருந்தியத் திருத்தூதர் பவுல் நம் அனைவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் தான் திருமுழுக்குப் பெற்றுள்ளோம். எனவே நமக்குள் பிரிவினைப் பேதங்கள் இருக்க கூடாது என்று அறிவுறுத்தும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகளுக்குச் செவிமெடுத்து மனமாற்றம்பெற முயற்சிப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! இயேசு விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. இறைவாக்கு ஞாயிறை சிறப்பிக்கும் இந்நாளில், தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், இறை வார்த்தை ஒளியில் எங்கள் வாழ்வை அமைத்து, உலகிற்கு ஒளியாகவும், சுவை சேர்க்கும் உப்பாகவும் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் பதட்டங்களும், வன்முறைப் போக்குகளும், பொருளாதார நெருக்கடிகளும் இந்த உலகை இருட்டிற்குள் இழுத்துச் செல்லும் இன்றைய சூழலில், “காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” என்கிற இறைவாக்கு நிறைவேற வேண்டுமென்றும், ஆட்சி புரிவோரும், அனைத்து மக்களும், அமைதியின் பாதையில் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எம்நாட்டின் குடியரசுத் தினத்தை நாளைய தினம் சிறப்பிக்கவிருக்கும் இந்தியர்களாகிய நாங்களும், எம்நாட்டின் தலைவர்களும், குடிமக்களும், சாதி மத பேதமின்றி, உயர்ந்தோர் - தாழ்ந்தோர், கற்றோர் - கல்லாதோர், இருப்போர் – இல்லாதோர், ஆடவர் – பெண்டிர், சிறியவர் – பெரியவர், என்கிற எந்தவொரு பாகுபாட்டையும் பெரிதாக்காமல், ‘ஒரு தாய் மக்கள் நாமெல்லாம்’ என்கிற உணர்வோடு வாழ, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அறுவடைத் திருநாளாம் பொங்கல் பெருநாளை கொண்டாடி மகிழ்ந்த நாங்கள் எல்லோரும் “ஆண்டவரே! அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்” என்கிற இறைவாக்கின் அனுபவத்தை, எம் அன்றாட வாழ்வில் சுவைக்க, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
      
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள்’ என்கிற பவுலடியாரின் அறிவுரைக்கும், ‘‘மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற இயேசுவின் போதனைக்கும் செவிசாய்த்து, ஒற்றுமையில் பயணிக்கும் தூய மக்களாகத் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, January 11, 2026

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு 


இன்றைய  வாசகங்கள்

எசாயா 49:3,5-6
1கொரிந்தியர் 1:1-3
யோவான் 1:29-34

திருப்பலிமுன்னுரை

இன்று பொதுக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. இறைமகன் இயேசு கிறிஸ்துவுக்குச் சான்றுப் பகர்ந்திட வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
“கடவுளின் ஆட்டுடிக்குட்டி” என்று கூறும் திருமுழுக்கு யோவான் இயேசுகிறிஸ்துவிற்குச் சான்றுப் பகிர்வதின் மூலம் மெசியாவை இஸ்ரயேல் மக்களுக்கு அடையாளம் காட்டுகிறார். தூயஆவி புறாவடிவில் இறங்கி வந்து யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூயஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் என்று அடையாளம் காட்டப்பட்டவரை “நானும் கண்டேன்” என்று பதிவுச் செய்கிறார்.
இறைவனின் ஆட்டுக்குட்டி உலகின் பாவங்களைப் போக்க வந்தவர் என்று இயேசு வருணிக்கப்பட்டதை நாளும் திருப்பலியில் திருவிருந்திற்கு முன் நினைவூட்டப்படுகிறது. பாவங்களை மன்னிப்பதை மட்டுமல்ல. புண்ணியங்களாக மாற்றுவதே இயேசுவின் பணி. மனிதகுலம் பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. இந்நிலையில் இயேசு செம்மறியாக நமக்காகத் தன்னையே கையளித்தார்.
பாவத்தைச் சுமந்தவர் மட்டுமல்ல பாவத்திலிருந்து விடுதலையடைந்துப் புனித வாழ்வு வாழ அழைப்பும் விடுக்கின்றார். இயேசுவின் அழைப்புக்குச் செவிமடுத்து அவரது சீடர்களாக வாழ உறுதி எடுப்போம். அதற்குத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். வாரீர்!

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும், இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்’ (எசா 49:6) என ஒவ்வொருவரும் பணிபுரிய அழைக்கப்படுகிறோம் என்கிறார் இறைவாக்கினர் எசாயா. நாம் நம் வாழ்வில் இயேசுவின் ஒளியைப் பிரதிபலிக்கம் மினிமின்ப் பூச்சிகளாகத் திகழ்கின்றோமா?  இவ்வாசகத்தின் மனதில் பதித்துச் சிந்திப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே உம் அடியான்; உம் திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்.
திருப்பாடல் 40:1 மற்றும் 3, 6-7, 7-8, 9
நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார். புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; - பல்லவி

பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். எனவே, 'இதோ வருகின்றேன்; - பல்லவி

என்னைக்குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' - பல்லவி

என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கொரிந்து திருச்சபை நேர்மறையான புனிதமான கிறிஸ்தவர்களை உள்ளடக்கிய திருச்சபை அல்ல. ஒழுக்கக்கேடானவர்களுக்கும், பிரிவினைச் சிந்தனை உள்ளவர்களும், நீதிமன்றத்திற்குச் சென்று ஒருவருக்கெதிராகச் சண்டையிட்டுக்கொண்ட மனிதர்களும் அடங்கிய திருச்சபை. இருப்பினும் புனித பவுல் அவர்களைத் "தூயவர்கள்’ என்று அழைக்கிறார். அதாவது நாம் எவ்வளவுதான் தீமைகளிலும், பாவத்திலும் வாழ்ந்தாலும் இறைவனது பார்வையில் நாம் விலையேறப் பெற்றவர்களாகவும், தூயவர்களாகவும் இருப்பதையே சுட்டிக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்… 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :

அல்லேலூயா, அல்லேலூயா "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; "ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்." அல்லேலூயா

 நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தூய பவுலடியாரின் மடலின்படி, இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட அதன் தலைவர்களுக்காகவும், இறைமக்களாகிய எங்களுக்காகவும் மன்றாடுகிறோம். “உலகம் முழுதும் மீட்பு அடைய, உன்னை ஒளியாக ஏற்படுத்தினோம்” என்கிற இறை அழைப்பை உணர்ந்து வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகின் பாவத்தைப் போக்க வந்த கடவுளின் செம்மறியாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக அருளும் அமைதியும், இந்த உலகிற்கும், அனைத்துலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றும், உலகாளும் தலைவர்களும், எம் இந்திய தேசத்தை ஆட்சி புரிவோரும், சமத்துவம், சமயச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய விழுமியங்களின்படி ஆட்சி புரியவும், மக்கள் யாவரும் ‘ஒரு தாய் பிள்ளைகள்’ என்கிற உணர்வோடு வாழ்ந்திடவும் வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. குழந்தைப்பருவத்திலேயே கைவிடப்பட்டோரும், இளமையிலே தம் வாழ்வையும் எதிர்காலத்தையும் தொலைத்தவர்களும், குடும்பத்தின் பாசமிழந்து தவிப்போரும், முதுமையில் தனிமைப்படுத்தப்பட்டோரும், சமுதாயத்தில் புறக்கணிக்கப்- பட்டோரும், அனைத்துவகையான விளிம்பு நிலை மக்களும், மனம் சோர்ந்து போகாமல், ‘ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்’ என்கிற உத்வேகத்துடன் தொடர்ந்து போராடி வெற்றிவாகை சூட, நீர்தாமே துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எனக்குப் பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்” என்கிற மனத்தாழ்மையோடு நடந்துகொண்ட திருமுழுக்கு யோவானைப் போல, குடும்பம், நிறுவனம், சமுதாயம், பங்கு, திருஅவையெனப் பல்வேறு நிலைகளில் பொறுப்பில் இருப்போர், எந்த ஒரு சூழலிலும், தங்களை முன்னிறுத்த முயலாமல், இறைவனையும் பிறரையும் மட்டுமே முன்னிலைப்படுத்துகிற நற்பண்புடன் வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘உமது திருவுளம் நிறைவேற்ற ஆண்டவரே, இதோ வருகின்றேன்’ என்கிற திருப்பாடல் பதிலுரையை உதட்டால் உச்சரிப்பதோடு நில்லாமல், எம்வாழ்விலும் பிரதிபலித்து, எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள கடமைகளையும், பணிகளையும், சீரிய செம்மனதுடனும், உள்ளத்து உவகையுடனும் நிறைவேற்றி, எம் இறைப்பற்றையும், பற்றுறுதியையும், வாழ்க்கையில் நிரூபிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, January 4, 2026

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா - முதல் ஆண்டு

ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா

இன்றைய வாசகங்கள்

எசாயா: 42:1-4,6-7 
திருத்தூதர் பணிகள்: 10:34-38 
மத்தேயு: 3:13-17

திருப்பலி முன்னுரை:

திருவழிபாடு ஆண்டின் பொதுக் காலத்தின் முதல் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.
இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. இறைமகன் இயேசு பிறந்து முப்பது ஆண்டுகள் ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்துக் கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தவர் இப்பொழுதுப் பொதுவாழ்வில் நுழையும் முன் அவருக்குத் தேவைப்பட்டது தூய ஆவியாவனர் ஆற்றலும், துணிவுடன் தன் மூன்று ஆண்டுக் காலப் பொது வாழ்வில் மக்களைச் செம்மைப்படுத்த, தந்தையாம் கடவுளின் அருளும் தேவைப்பட்டபோது, அவர் திருமுழுக்கு யோவானிடம் சாதாரண மக்களைப் போல வந்து நின்றுத் திருமுழுக்குப் பெறும் வேளையில் ஆவியானவர் இறங்கி வர, தந்தை தன் ஓரே மகனிடம் புரிப்படைவதையும் வானத்திலிருந்து கேட்டக் குரலொலிச் சுட்டிக்காட்டுகின்றது.
திருமுழுக்குப் பெற்ற நாம் இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா இறைமகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்பட்டதைத் தெளிவாக இன்றைய வாசகத்தின் வழியாகப் பதிவுச் செய்கிறார். இதோ என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது என்ற ஆண்டவர் பெருமிதம் கொள்கின்றார். அவர் வழியாக நாம் அடையவிருக்கும் நன்மைகளை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்டுச் சிந்தித்து ஆண்டவரில் பூரிப்படைவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b)
பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!

1. இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கு ஏற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி

2. ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி

3. ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்

இந்த இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இறைமகன் இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட, பெறப்போகும் அருள்வளங்களை எடுத்துரைக்கின்றார். கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. அலகையின் சோதனைகளிலிருந்து நம்மை விடுவித்து என்றும் நன்மை செய்துகொண்டே இருக்கின்றார். இறைவாக்கினார் எசாயாவைப் போல் புனித திருத்தூதர் பேதுருவும் ஆண்டவரின் அருள்கொடைகளை ஆழமாக நம் உள்ளத்தில் பதிவுச் செய்யும் இவ்வாசகத்தைக் கவனித்து இறையருள் பெறுவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழாவை சிறப்பிக்கும் இந்த ஞாயிற்றுக் கிழமையில், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், இறைமக்களாகிய நாங்களும், திருமுழுக்கு வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அழைத்தலுக்கு ஏற்ற வாழ்க்கையை நடத்த வேண்டுமென்றும், எங்கும் நன்மை செய்துகொண்டே சென்ற இயேசுவிடம் இருந்த மனநிலையோடு, நாங்கள் ஒவ்வொருவரும் பயணிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உலகாளும் தலைவர்களும், எம்தாய்த்திருநாட்டை ஆட்சி புரிவோரும் “நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது” என்று கடவுளும், தேர்ந்தெடுத்த மக்களும் பூரிக்கும் வண்ணம் நல்லாட்சி நடத்தவும், நேர்மையாகச் செயல்படுபவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும், அமைதியை நாடுவதிலும், அனைவருக்குமான நலத்தில் முனைப்பாய் இருப்பதிலும், தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘இதோ! என் ஊழியர்!’ என ஆண்டவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட குருக்களும், துறவியரும், மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் இருந்து, பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரை மீட்கவும், இன்னபிற தொண்டுகளை ஆற்றவும், நீர் தாமே ஆசி அருள வேண்டுமென்றும், இன்னும் பல பேர், தேவ அழைத்தல் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளின் பிள்ளைகளாய் நாங்கள் இருந்து, இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை நம்பும் மக்களாகவும் திகழ்ந்து, எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும், உழைக்கும் இடங்களிலும், வாழும் சமுதாயத்திலும், அமைதியின் தூதுவர்களாகவும், இறைவனுக்கும், மனிதருக்கும் ஏற்புடையவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. எம்மில் ஒருவரைப் போல் திருமுழுக்குப் பெற்ற இயேசுவைப் போல, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் தமிழ்ச் சொந்தங்களோடு சேர்ந்து, நன்றி பாராட்டுதல், உழவரையும் உழைப்பவரையும் மதித்தல், பிற உயிரனங்களையும் மாண்புடன் நடத்துதல், காண்போரை எல்லாம் மனம் நிறைய வாழ்த்துதல் ஆகிய விழுமியங்களை உள்ளடக்கிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடி, பிறக்கின்ற தை முதல், பொங்கும் மகிழ்வுடன், வாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF