Tuesday, April 7, 2026

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு 12-04-2026

 பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு 


 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31

 திருப்பலி முன்னுரை:-

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) இன்று நாம் 'இறை இரக்கத்தின் ஞாயிறை' சிறப்பிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்தி, அவர்களுக்குத் தூய ஆவியையும், பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறார். அதே வேளையில், இயேசுவின் உயிர்ப்பை நம்பத் தயங்கிய தோமையாரிடம், தம் காயங்களைக் காட்டி அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்காகவே சொல்லப்பட்டுள்ளன.

நமது பலவீனங்கள் மற்றும் சந்தேகங்களின் மத்தியிலும், இறைவனின் இரக்கம் அளவிட முடியாதது என்பதை உணர்வோம். உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதியையும் மன்னிப்பையும் இதயத்தில் ஏந்தியவர்களாய், இந்தப் பலியில் பக்தி உணர்வுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:42-47)

தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு. உயிர்த்த ஆண்டவரின் வல்லமை தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படிப் பிரதிபலித்தது என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. அவர்கள் ஒருமித்த மனத்தோடு திருத்தூதர்களின் போதனையிலும், அப்பம் பிட்குவதிலும், செபத்திலும் நிலைத்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்ந்த அந்த அன்புறவு வாழ்வு நமக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது. சமூகமாக இணைந்து இறைவனைப் புகழும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

 பதிலுரைப்பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24

1. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

2. அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

3.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:3-9)

அழியாத வாழ்வின் நம்பிக்கை. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுள்ள புதிய வாழ்வைப் பற்றிப் புனித பேதுரு இவ்வாசகத்தில் மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கிறார். நாம் இப்போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானாலும், நம்முடைய விசுவாசம் நெருப்பினால் புடம் போடப்பட்ட பொன்னை விட மேலானது. நாம் இயேசுவைக் காணாமலே அன்பு செய்கிறோம், அவரை நம்புகிறோம். இதுவே நமக்கு முடிவில்லாத மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-

1. திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்த, தொடக்க கால நம்பிக்கையாளர்களைப் போலவே, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், நம்பிக்கை கொண்டோராக ஒன்றாய் இருந்து, எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்று வாழ  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அச்சத்தின் பிடியிலும் ஐயத்தின் பிடியிலும் சிக்கித் தவித்த தோமா உள்ளிட்ட திருத்தூதர்களுக்குத் தோன்றி “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்திய இறைவா, போர் பதட்டத்திலும் அதனால் ஏற்படும் பல்வேறு தீய விளைவுகளாலும் அல்லலுறும் அவனிக்கு, நீர்தாமே நிலையான அமைதி அருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அமைதியை நாடும் நல்லோராய் மாறிட, ஒன்றிப்பின் ஆற்றலான உமது தூய ஆவியை அவர்கள்மேல் நீர் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ள நம் கடவுளும் தந்தையுமானவரின் பேரிரக்கத்தின்படி, தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தல்களில், பிற்போக்கு சக்திகள் தோற்கடிக்கப்பட்டு சமூக நீதியை உயர்த்திப்பிடிக்கும் சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒரே மனத்தோடு கோவிலில் கூடுவதோடு நில்லாமல், பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் கூடி, இறைவேண்டலிலும், கடவுளைப் போற்றிப் புகழ்வதிலும், பகிர்தலிலும் நிலைத்திருந்த தொடக்க கால நம்பிக்கையாளர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி நாங்களும் எங்கள் அன்பியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுத்து, உண்மையான அன்பிற்கும் எங்களின் உள்ளார்ந்த ஒற்றுமைக்கும் சான்றுபகர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்மைக் கண்டதால் அல்லாமல் காணாமலே நம்புகிற பேறுபெற்றதற்காக நன்றிகூறும் அதே வேளையில், பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொண்டு, குன்றாத எதிர்நோக்குடன் வாழவும், தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களாய் பிறரை மன்னிக்கவும், ஒப்புரவு அருட்சாதனத்தை தாழ்ச்சியுடன் அணுகி மன்னிப்புப் பெறவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, April 1, 2026

புனித வார சிறப்பு திருவழிப்பாட்டு வழிகாட்டி 2026

 புனித வார நிகழ்வுகள்


https://anbinmadal.org/lentseason/lentpart4/holyweek-feb2026.pdf 

02-04-2026 முதல் 05-04-2026 வரையான திருவழிப்பாட்டின் அனைத்து நிகழ்வுகளின் வழிகாட்டி

மேற்கண்ட  இணைப்பிலிருந்து

பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் 

அனைவருக்கும் விழாக் கால வாழ்த்துகள்!!! 

Sunday, March 22, 2026

குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டு 29-03-2026

குருத்து ஞாயிறு  முதலாம் ஆண்டு  29-03-2026
palm sunday the icon

பொது முன்னுரை:-

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே,  இன்று நாம் திருவழிப்பாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான 'புனித வாரத்தைத்' தொடங்குகிறோம். எருசலேம் நகருக்குள் அரசராகவும், அமைதியின் தூதராகவும் நுழைந்த இயேசு கிறிஸ்துவை வெற்றி ஆரவாரத்தோடு வரவேற்ற நிகழ்வை இன்று நாம் நினைவு கூர்கிறோம்.

இயேசு எருசலேமுக்குள் நுழைந்தது அதிகாரத்தைக் காட்ட அல்ல, மாறாகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, சிலுவைச் சாவினூடாக நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவே. இன்று நாம் கைகளில் ஏந்தியிருக்கும் இந்தக் குருத்தோலைகள் வெற்றியின் அடையாளம் மட்டுமல்ல, மாறாக இயேசுவின் பாடுகளிலும், சாவிலும் நாம் பங்கேற்கப் போகிறோம் என்பதன் அடையாளம்.

"ஓசன்னா" என்று பாடி அவரைப் புகழ்ந்த மக்கள், சில நாட்களில் "இவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். அந்த மக்களின் நிலையில் நாம் இருக்கிறோமா? அல்லது இறுதிவரை இயேசுவைப் பின்தொடரும் சீடர்களாக இருக்கிறோமா? எனச் சிந்திப்போம். இந்தத் திருப்பலியில் பங்கேற்று, நம் இதயங்களை இயேசுவின் இல்லமாக மாற்றுவோம்.

2. குருத்து ஞாயிறு: பவனி முன்னுரை

(குருத்தோலைகளை மந்திரிப்பதற்கு முன் வாசிக்க வேண்டியது)
இறைமக்கள் அனைவரும் எருசலேம் நகரில் ஒன்று திரண்டு, தங்கள் மேலாடைகளையும் மரக்கிளைகளையும் வழியில் விரித்து, தாவீதின் புதல்வனுக்கு "ஓசன்னா" முழக்கமிட்டு இயேசுவை வரவேற்ற அந்த உன்னதமான நிகழ்வை இப்போது நாம் மீண்டும் நிகழ்த்தவிருக்கிறோம்.

இந்தக் குருத்தோலைப் பவனி வெறும் சடங்கு அல்ல; இது ஒரு விசுவாசப் பயணம். இயேசுவை நம் வாழ்வின் அரசராக ஏற்றுக்கொண்டோம் என்பதன் பகிரங்கமான அறிக்கை இது. நாம் ஏந்தியிருக்கும் இந்தக் குருத்தோலைகள், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சவால்களையும் தாண்டி, கிறிஸ்துவின் அன்பினால் பெறும் வெற்றியைக் குறிக்கின்றன.

இப்போது குருவானவர் இந்தக் குருத்தோலைகளை மந்திரித்து ஆசிர்வதிப்பார். நாம் அனைவரும் பவனியாகச் செல்லும்போது, பக்தியுடனும் ஆரவாரத்துடனும் பாடல்களைப் பாடி, நம் அரசரான இயேசுவைப் பின் தொடர்வோம். எருசலேம் மக்கள் காட்டிய அதே உற்சாகத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இந்தப் பவனியில் கலந்துகொள்வோம்.

முதல் வாசக முன்னுரை (எசாயா 50: 4-7)

இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் ஊழியர் எத்தகைய மனநிலையைக் கொண்டிருந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. துன்பங்கள் சூழும்போதும், எதிரிகள் தன்னை அவமானப்படுத்தும்போதும் தளராமல், கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்துத் தன் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்ட ஒரு ஊழியரை எசாயா இறைவாக்கினர் இங்கே படம்பிடித்துக் காட்டுகிறார்.

"அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்" என்று கூறும் இந்த ஊழியர், வரவிருக்கும் இயேசுவின் பாடுகளுக்கு நிழலாகத் திகழ்கிறார். தந்தையாம் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து, மீட்புப் பணியில் உறுதியோடு இருந்த அந்த ஊழியரின் மனநிலையை நாமும் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமடுப்போம்.

பதிலுரைத் திருப்பாடல் முன்னுரை (திருப்பாடல் 22)

இன்றைய திருப்பாடல், சிலுவையில் தொங்கிய இயேசுவின் இதயத் துடிப்பாக ஒலிக்கிறது. தான் நேசித்த மக்களால் கைவிடப்பட்டு, ஏளனத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளான ஒரு நீதிமானின் குரலை இங்கே கேட்கிறோம்.

"என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்... என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள்" என்று வரும் வரிகள், இயேசு அனுபவித்த சொல்லொண்ணாத் துயரத்தை முன்னறிவிக்கின்றன. அதே வேளையில், இப்பாடல் வெறும் புலம்பல் மட்டுமல்ல; துன்பத்தின் நடுவிலும் கடவுள்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு. நாமும் இயேசுவின் பாடுகளில் பங்கேற்று, இந்தப் பல்லவியைப் பக்தியுடன் பாடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை (பிலிப்பியர் 2: 6-11)

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்து இயேசுவின் மனநிலையைத் தங்களுக்குள் கொண்டிருக்குமாறு புனித பவுல் அடியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார். கடவுள் வடிவில் இருந்த இயேசு, தம்மைத் தாமே தாழ்த்தி, ஒரு அடிமையின் உருவை ஏற்று, சிலுவைச் சாவினை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்ததை இப்பாடல் அழகாக விவரிக்கிறது.
இயேசுவின் இந்தத் தாழ்ச்சியையும் கீழ்ப்படிதலையும் கண்ட தந்தை இறைவன், அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் பணியும் உன்னத பெயரை அவருக்கு வழங்கினார். "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என நாம் அறிக்கையிடவும், அவருடைய தாழ்ச்சியை நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வோடு செவிமடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. குருத்து ஞாயிறு என்றும் திருப்பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிற இத்தினத்தில், “ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!” என்கிற வாழ்த்தொலிக்கும் “அவரைச் சிலுவையில் அறையும்” என்கிற வசைபாடலுக்கும், அசைந்துகொடுக்காத இயேசு கிறிஸ்துவைப் போல, எங்கள்  திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும் உறுதியான நம்பிக்கையுடனும், தளராத எதிர்நோக்குடனும், தியாகம் நிறைந்த பிறரன்புடனும் எங்கள் வாழ்க்கையை மேற்கொள்வதற்கு அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்துபோவர்” என்கிற உண்மையை உணராமல், போர்கள் தொடுத்தும், ஏவுகணைகள் வீசியும், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தியும், இந்த உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற நாடுககையும், நாடுகளின் தலைவர்களையும், அமைதியின் அரசராகிய நீர்தாமே, உம்முடைய  திருப்பாடுகள், மரணம் ஆகியவற்றின் பலனாக, அமைதியின் பாதைக்கு அழைத்துவர வேண்டுமென்றும், பரந்துபட்ட எம் உலகிலும், எங்கள் பாரத தேசத்திலும், சகோதரத்துவம், சமயச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவை நிலைபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?”  எனக் குமுறினாலும், கடைசியில் "எல்லாம் நிறைவேறிற்று" என்றுரைத்து, உமது இன்னுயிரை கையளித்த இறைவா, இன்னல்கள் ஆயிரம் வந்தாலும், துன்பங்கள் எங்களைத் துளைத்து எடுத்தாலும், அவற்றை எல்லாம் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளவும், துணிவோடு எதிர்கொள்ளவும்,  இறுதி வெற்றி உமக்கும் உம் வழியாக எங்களுக்கும் உரித்தானது என்கிற நம்பிக்கையை இந்தப் புனித வாரமும், புனிதவாரத் திருநிகழ்வுகளும் ஏற்படுத்த வேண்டுமென்றும், அனைத்து திருவழிபாட்டுத் திருநிகழ்வுகளிலும் நாங்கள் அனைவரும் பயபக்தியோடு பங்குபெற்று இறையருள் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண் டதனால், இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளின தந்தையாம் கடவுளின் கனிவான பார்வை எங்கள்மீதும் திரும்பிடும் வண்ணம், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘கீழ்ப்படிதல், தாழ்ச்சி, பணிவிடை புரிதல், தியாகத்துக்குத் தயாராயிருத்தல், இறைச்சித்தத்திற்குப் பணிந்திருத்தல் ஆகிய நற்பண்புகளோடு எங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஒரு உண்மையான பாஸ்கா பயணமாக மாற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, March 15, 2026

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026 
The Gospel: 26th March 2023 – Keash Parish

திருப்பலி முன்னுரை 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, 

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) பாஸ்கா பெருவிழாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் நாம், இன்று சாவையே வெல்லும் கிறிஸ்துவின் வல்லமையைத் தியானிக்கிறோம். இன்றைய நற்செய்தியில், நான்கு நாட்கள் கல்லறையில் அழுகிய நிலையில் இருந்த லாசரை இயேசு உயிர்த்தெழச் செய்கிறார். "உயிர்ப்பும் வாழ்வும் நானே" என்று பிரகடனம் செய்யும் இயேசு, நம்முடைய பாவங்களினால் ஆவிக்குரிய நிலையில் செத்துப்போயிருக்கும் நம்மையும் எழுப்ப விரும்புகிறார். நம்முடைய தவறான பழக்கங்கள், விரக்தி மற்றும் பாவங்கள் எனும் கல்லறைகளிலிருந்து வெளியே வர இயேசு இன்று நமக்குக் கட்டளையிடுகிறார்.
 "லாசரே, வெளியே வா!" என்று அழைத்த அதே குரல் இன்று நம்மையும் அழைக்கிறது. அந்த உயிருள்ள குரலுக்குச் செவிசாய்த்து, புதிய வாழ்வு பெறத் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

 

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 37:12-14) 

கல்லறைகளைத் திறக்கும் இறைவன். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கையற்று இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் ஒரு மாபெரும் வாக்குறுதியைத் தருகிறார். "நான் உங்கள் கல்லறைகளைத் திறப்பேன், என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்" என்று அவர் கூறுகிறார். இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதையும், அவர் இழந்த வாழ்வை மீண்டும் தரவல்லவர் என்பதையும் உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

பதிலுரைப்பாடல் 

பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது. 
திருப்பாடல்: 130: 1- 8.
 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம் முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி 
ஆண்டவரே! நீர் எம்குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி 
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின் றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். பல்லவி 
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி 
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8:8-11)  

உங்களில் குடிகொண்டிருக்கும் தூய ஆவி. புனித பவுல் அடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையை விளக்குகிறது. இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய அதே ஆவி நமக்குள் குடிகொண்டிருந்தால், நம்முடைய சாவுக்குரிய உடல்களுக்கும் அது உயிர் அளிக்கும். நாம் ஊனியல்புக்குக் கட்டுப்படாமல், தூய ஆவிக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம். 

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1. “என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” என்கிற இயேசுவின் கூற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு, திருஅவை என்கிற படகில் பயணிக்கும் இறைமக்களாகிய நாங்களும், எங்களை வழிநடத்தும் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு, ஆகியவற்றில் நிலைத்திருந்து, நிறைவாழ்வை நோக்கிப் பயணிக்கிற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

2. இரவில் நடப்பவர் இடறி விழுவது போல, இன்றைய உலகு, போர்கள், வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றால் தடுமாறுகிற வேளையில், நீர் தாமே ஒளியாய் இருந்து, அமைதியின் பாதையில் வழிநடத்திட வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் அறவழியில் ஆட்சி புரியவும், தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில், சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3. ‘என் ஆவியை உங்கள்மீது பொழிவேன்; நீங்களும் உயிர் பெறுவீர்கள்’ என எசேக்கியேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதுபோல, எங்கள் பிள்ளைகளும், பொதுத் தேர்வுகளையும் ஆண்டு இறுதி தேர்வுகளையும் எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களும், தூய ஆவியால் நிரப்பப்படவும், அவர்கள் அனைவரும் தாங்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் சிறந்ததொரு வெற்றிபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4. ‘கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்’ என்று கூறியதோடு “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய்” என்றும் சொல்லி, இறந்த இலாசரை உயிர்த்தெழச்செய்த இறைவா, நீர் எம்மோடு இருந்தால், நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும், எம்மை விட்டு விலகும் என்பதோடு, இறுதி நாளில் உம்மோடு கூட உயிர்ப்போம் என்கிற நம்பிக்கையுடன் நாங்கள் வாழ்ந்திட, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது’ என்று இரண்டாம் வாசகம் கூறுகிற உண்மையை உணர்ந்தவர்களாய், ஆவிக்குரிய வாழ்வை மேற்கொள்ளவும், தவக்காலத்தின் சிறப்பு முயற்சிகளான ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் இன்னும் முனைப்பாக ஈடுபட்டு புனிதம் நோக்கிப் பயணிக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Monday, March 9, 2026

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026
Daily Reading: 22 June – The Miracles of Jesus: Healing a Blind Man – John  9:1-41 – The Peanut Gallery

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ
1 எபேசியா 5:8-14
யோவான் 9:1-41

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. பாஸ்கா பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, திருச்சபை இன்று மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது.

இன்றைய நற்செய்தியில், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை அளிக்கும் புதுமையை நாம் காண்கிறோம். இது வெறும் உடல் சார்ந்த பார்வை மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையைப் பற்றியது. நாம் பல நேரங்களில் பாவம், பொறாமை மற்றும் அறியாமை எனும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "நானே உலகின் ஒளி" என்றுரைத்த இயேசு, நம் இதயக் கண்களைத் திறந்து, உண்மையை உணரச் செய்கிறார்.

இந்தத் திருப்பலியில் பங்கேற்கும் நாம், நம்முடைய அகக்கண்கள் திறக்கப்படவும், இருளின் செயல்களை விட்டு ஒளியின் மக்களாக வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (1 சாமுவேல் 16:1, 6-7, 10-13)

மனிதர் முகத்தைப் பார்க்கிறார், இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலின் அரசராகத் தாவீதை இறைவாக்கினர் சாமுவேல் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். மனிதர்கள் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குகிறார்கள், ஆனால் இறைவன் இதயத்தைப் பார்க்கிறார் என்பதை இவ்வாசகம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. வெளிவேடங்களைத் தவிர்த்து, தூய்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேட இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை!
திருப்பாடல்கள்: 23: 1-3, 3-4,5,6

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார், மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (எபேசியர் 5:8-14)

ஒளியின் மக்களாக வாழுங்கள். ஒரு காலத்தில் இருளாக இருந்த நாம், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாக மாறியிருக்கிறோம் என்று புனித பவுல் அடியார் கூறுகிறார். ஒளியின் பிள்ளைகளுக்குரிய நற்பண்புகள், நீதி மற்றும் உண்மை ஆகியவற்றில் நாம் நிலைத்திருக்க வேண்டும். தூக்கத்திலிருந்து விழித்து, கிறிஸ்துவின் ஒளியில் பிரகாசிக்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வுடன் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்கிறார் ஆண்டவர்!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எப்படி நீர் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த தாவீதின் மீது, ஆண்டவரின் ஆவி நிறைவாக இருந்ததோ, அதே போல உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, திருப்பொழிவு செய்யப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்கள்மீதும், மறைப்பணியாளர்கள் மீதும், இறைமக்களாகிய எங்கள்மீதும், ஆவியானவர் நிறைவாகப் பொழியப்படவும், அவர் தரும் ஒளியில், நாங்கள் அனைவரும், நேரிய பாதையில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆண்டவர் ஆயனாய் இருக்கிறபோது இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையெனப் பறைசாற்றும் திருப்பாடல் இருப்பது மூன்றை பதிலுரையாகப் பகர்ந்த நாங்கள், வாழ்வின் பாதையைத் தெரிவு செய்து வாழவும், போர்கள், சண்டைகள், வன்முறை, தீவிரவாதம் போன்ற சாவுக்கு இட்டுச்செல்லும் இருளின் செயல்களை, உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் கைவிட வேண்டுமென்றும், எதிர்வரும் சட்டமன்ற  தேர்தலின் முடிவில், சமயசார்பற்ற நல்லாட்சி அமைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘தூங்குகிறவனே, விழித்தெழு … கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்கிற பவுலடியாரின் அறைகூவல், பொதுத் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களையும், ஏனைய எம்பிள்ளைகள் அனைவரையும், சோம்பலிலிருந்து தட்டி எழுப்பி, உத்வேகத்துடன் உழைக்கச் செய்து, அவர்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும், கிறிஸ்துவின் ஒளியில் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை ஒளிமயமானதாக அமைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும் பாவத்தின் காரணமாய் விளைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படும்பொருட்டு கடவுளால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்து, மனஉறுதியுடன் கூடிய மனந்திரும்புதல் மூலமாக, இந்தத் தவக்காலத்தில் நல்வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்பதை உணர்ந்தவர்களாய், தவக்கால அடையாளாச் செயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பார்த்து, பயனற்ற இருளின் செயல்களைச் செய்யாது, ஒளியின் செயல்களாகிய ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் ஈடுபட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, March 3, 2026

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 08.03.2026

தவக்காலம்  மூன்றாம் ஞாயிறு  08.03.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 17:3-7
உரோமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய திருவழிபாடு நம்முடைய ஆன்மீகத் தாகத்தைப் பற்றிப் பேசுகிறது.
உடல் தாகத்தைத் தணிக்க கிணற்று நீரைத் தேடி வந்த சமாரியப் பெண்ணிடம், "வாழ்வு தரும் தண்ணீரை" வாக்களிக்கிறார் இயேசு. அந்தத் தண்ணீர் ஒருமுறை பருகினால் மீண்டும் தாகம் எடுக்காத, நிலைவாழ்வு தரும் இறைவருள் ஆகும். சமாரியப் பெண் தன் குடத்தை விட்டுவிட்டு, ஊர் மக்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கச் சென்றது போல, நாமும் நம்முடைய பழைய பாவப் பழக்கங்களை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்ற அழைக்கப்படுகிறோம்.
நம் உள்ளத்தில் உள்ள கசப்பு, வெறுப்பு, உலக ஆசைகள் எனும் தாகங்களைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே என்பதை உணர்ந்து, இந்தத் திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 17:3-7)

பாறையிலிருந்து சுரந்த தண்ணீர். இஸ்ரயேல் மக்கள் பாலைவனப் பயணத்தின்போது தாகத்தால் தவித்து, மோசேக்கும் இறைவனுக்கும் எதிராக முணுமுணுக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையின்மையைப் பொருட்படுத்தாமல், இறைவன் பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்து அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். நம்முடைய துன்ப நேரங்களில் நாம் இறைவனைச் சோதிக்காமல், அவரே நம் வாழ்வின் ஊற்று என்பதை நம்ப வேண்டும் என்று இவ்வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. பக்தி உணர்வுடன் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

பல்லவி : உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர் ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-7,7-9

1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.  நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

3. இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5:1-2, 5-8)

தூய ஆவியின் வழியாக ஊற்றப்படும் அன்பு. இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு பெரியது என்பதை புனித பவுல் அடியார் இவ்வாசகத்தில் விளக்குகிறார். நாம் இன்னும் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அந்த அன்பு தூய ஆவியின் வழியாக நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது. இந்த அன்பு தரும் நம்பிக்கையே நம்மை வாழ்விக்கிறது என்பதை உணர்ந்து இவ்வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-

ஆண்டவரே! நீர் உண்மையில் உலகின் மீட்பர். நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே” என்கிற திருமுக வாசகத்தின் உண்மையை உணர்ந்து, தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், மனித அறிவையும் ஆற்றலையும் மட்டுமே நம்பியிராமல், இறைஞானத்தால் வழிநடத்தப்பட, எம்மையே ஒப்புவிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகுக்கு “இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்கிற ஏசாயாவின் இறைவாக்கு புத்தெழுச்சி தரவும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், ஒளியின் ஆட்சி நோக்கிப் பயணிக்கவும், செயல்படவும், அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பணமும், பதவியும், பகட்டும், எம்மைக் கவர்ந்திழுக்கும் சூழலில், சிலுவையில் அறையுண்ட மெசியாவாகிய இயேசுவைத் தவிர, நாங்கள் பற்றிக்கொள்ள வேறு ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் யாவரும், குறிப்பாக இளையோரும், எங்களிடையே இருக்கும் உலகப்பற்று எனும் நுகத்தை அகற்றிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு வாழ்கின்ற ஞானத்தையும், தாழ்ச்சியையும், மனஉறுதியையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு எங்களிலே நிறைவேறி “அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்” என்பதுவும் உண்மையாகி, எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லாதோர்க்கு துணை நிற்பதும், உடையற்றோருக்கு உடுக்கக் கொடுப்பதும், வறியோரின் தேவையை நிறைவு செய்வதும் தான், நீர் விரும்பும் நோன்பு என்றுணர்ந்து அறச்செயல்கள் புரியவும், அதன் வழியாக, இவ்வுலகிற்கு நாங்கள், ஒளியாகவும் உப்பாகவும் விளங்க வேண்டுமென்றும், எங்களது நற்செயல்களைக் காண்கின்ற  எல்லோரும்,  விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, February 23, 2026

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 01.03.2026

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 01.03.2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

தொடக்கநூல் 12:1-4
திமோத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9

திருப்பலி முன்னுரை: -

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). முதல் ஞாயிறன்று இயேசு பாலைவனத்தில் சோதனைகளை வென்றதைத் தியானித்தோம். இன்று, தாபோர் மலையில் இயேசுவின் மாட்சிமை பொருந்திய உருமாற்றத்தைத் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் பாடுகளும் மரணமும் நெருங்கி வந்த வேளையில், தம் சீடர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும், சிலுவைச் சாவிற்கு அப்பால் ஒரு மகிமையான உயிர்ப்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தவும் இயேசு உருமாறிக் காட்டினார். இந்தத் தவக்காலம் நம்முடைய வாழ்விலும் ஒரு 'உருமாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும். நம்முடைய பழைய பாவ இயல்புகளைத் தவிர்ந்து, கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்பட்ட புதிய மனிதர்களாக நாம் மாற வேண்டும் என்பதே இன்றைய வழிபாட்டின் அழைப்பு.
"இவர் என் அன்பார்ந்த மைந்தர், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற தந்தையாம் இறைவனின் கட்டளைக்கு இணங்க, கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை :-

(தொடக்க நூல் 12:1-4)
ஆபிரகாமின் அழைப்பும் கீழ்ப்படிதலும். இன்றைய முதல் வாசகத்தில், விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமை இறைவன் அழைக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். தன் நாடு, இனம் மற்றும் தன் தந்தையின் வீட்டை விட்டுவிட்டு, இறைவன் காட்டும் நிலத்திற்குச் செல்ல ஆபிரகாம் துணிந்தார். அவருடைய அந்தப் பயணமும் கீழ்ப்படிதலுமே அவருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. நாமும் நம்முடைய வசதி மண்டலங்களை (Comfort Zone) விட்டு வெளியேறி, இறைவன் காட்டும் புனிதப் பாதையில் நடக்க இவ்வாசகம் நமக்கு ஊக்கமளிக்கிறது.

பதிலுரைப் பாடல்:-

பல்லவி : ஆண்டவரே! உமது பேரன்பு எங்கள் மீத இருப்பதாக!
திருப்பாடல்கள்: 33: 4-5, 18-19, 20, 22
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.  அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :-

(2 திமொத்தேயு 1:8-10)
நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தை ஏறுங்கள். புனித பவுல் அடியார் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், நாம் பெற்றுள்ள அழைப்பு நம்முடைய தகுதியினால் வந்ததல்ல, மாறாக இறைவனின் அருளினால் வந்தது என்பதை உணர்த்துகிறது. சாவினை அழித்து, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிரச் செய்த கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயங்க வேண்டாமென இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-

ஒளிரும் மேகத்தினின்று, தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-

1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், “நீயே ஆசியாக விளங்குவாய் … உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, அனைவருக்கும் ஆசியாக விளங்கும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை, இந்தத் தவக்காலத்தில் உருமாற்றம் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், மாந்தர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், ஒப்புரவுடன் பயணிக்கவும், தலைமைப்பணியில் இருப்போர் அனைவரும், பகைமையின் பாதையைத் துறந்து, நீதியின் வழியிலும், சமாதானத்தின் திசையிலும் பயணிக்க வேண்டுமென்றும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அரசுத் தேர்வுகளையும், ஆண்டுத் தேர்வுகளையும் எழுதவிருக்கும் எம்பிள்ளைகளும், அனைத்து மாணவ மாணவியரும், முழு ஈடுபாட்டுடன் எல்லாப் பாடங்களையும் கற்று, தகுந்த முறையில் தங்களையே தயாரித்து, துணிவுடன் தேர்வுகளைச் சந்தித்து, சிறந்த வெற்றியினை சுவைக்க, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்றும், தூய ஆவியாரின் ஆற்றலை அவர்களுக்குப் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சாவை அழித்து, அழியா வாழ்வை, நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்த கிறிஸ்து இயேசு வழியாக அளிக்கப்பட்ட அருளின்படி, மீட்கப்பட்ட நாங்கள் அனைவரும், எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தூய அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ளவும், “உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்” என ஆபிரகாமுக்கு நீர் வழங்கிய ஆசீரை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வின் உட்பொருளை உணர்ந்தவர்களாய், உன்னத இறை அனுபவங்களோடு வாழ்க்கை நிறைவுறுவதில்லை; துன்பங்கள் நிறைந்த சிலுவைப் பாதையின் வழியாகத்தான் உயிர்ப்பின் மாட்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, எங்களது ஜெப, தவ, அன்புச் செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி “இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என விண்ணகம் அறிக்கையிடும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

 

https://anbinmadal.org

Print Friendly and PDF