ஞாயிறு திருப்பலி வழிகாட்டி
Sunday Mass introduction and intercession prayers in TAMIL
Wednesday, April 1, 2026
Sunday, March 22, 2026
குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டு 29-03-2026
குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டு 29-03-2026

பொது முன்னுரை:-
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, இன்று நாம் திருவழிப்பாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான 'புனித வாரத்தைத்' தொடங்குகிறோம். எருசலேம் நகருக்குள் அரசராகவும், அமைதியின் தூதராகவும் நுழைந்த இயேசு கிறிஸ்துவை வெற்றி ஆரவாரத்தோடு வரவேற்ற நிகழ்வை இன்று நாம் நினைவு கூர்கிறோம்.
இயேசு எருசலேமுக்குள் நுழைந்தது அதிகாரத்தைக் காட்ட அல்ல, மாறாகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, சிலுவைச் சாவினூடாக நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவே. இன்று நாம் கைகளில் ஏந்தியிருக்கும் இந்தக் குருத்தோலைகள் வெற்றியின் அடையாளம் மட்டுமல்ல, மாறாக இயேசுவின் பாடுகளிலும், சாவிலும் நாம் பங்கேற்கப் போகிறோம் என்பதன் அடையாளம்.
"ஓசன்னா" என்று பாடி அவரைப் புகழ்ந்த மக்கள், சில நாட்களில் "இவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். அந்த மக்களின் நிலையில் நாம் இருக்கிறோமா? அல்லது இறுதிவரை இயேசுவைப் பின்தொடரும் சீடர்களாக இருக்கிறோமா? எனச் சிந்திப்போம். இந்தத் திருப்பலியில் பங்கேற்று, நம் இதயங்களை இயேசுவின் இல்லமாக மாற்றுவோம்.
2. குருத்து ஞாயிறு: பவனி முன்னுரை
(குருத்தோலைகளை மந்திரிப்பதற்கு முன் வாசிக்க வேண்டியது)
இறைமக்கள் அனைவரும் எருசலேம் நகரில் ஒன்று திரண்டு, தங்கள் மேலாடைகளையும் மரக்கிளைகளையும் வழியில் விரித்து, தாவீதின் புதல்வனுக்கு "ஓசன்னா" முழக்கமிட்டு இயேசுவை வரவேற்ற அந்த உன்னதமான நிகழ்வை இப்போது நாம் மீண்டும் நிகழ்த்தவிருக்கிறோம்.
இந்தக் குருத்தோலைப் பவனி வெறும் சடங்கு அல்ல; இது ஒரு விசுவாசப் பயணம். இயேசுவை நம் வாழ்வின் அரசராக ஏற்றுக்கொண்டோம் என்பதன் பகிரங்கமான அறிக்கை இது. நாம் ஏந்தியிருக்கும் இந்தக் குருத்தோலைகள், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சவால்களையும் தாண்டி, கிறிஸ்துவின் அன்பினால் பெறும் வெற்றியைக் குறிக்கின்றன.
இப்போது குருவானவர் இந்தக் குருத்தோலைகளை மந்திரித்து ஆசிர்வதிப்பார். நாம் அனைவரும் பவனியாகச் செல்லும்போது, பக்தியுடனும் ஆரவாரத்துடனும் பாடல்களைப் பாடி, நம் அரசரான இயேசுவைப் பின் தொடர்வோம். எருசலேம் மக்கள் காட்டிய அதே உற்சாகத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இந்தப் பவனியில் கலந்துகொள்வோம்.
முதல் வாசக முன்னுரை (எசாயா 50: 4-7)
இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் ஊழியர் எத்தகைய மனநிலையைக் கொண்டிருந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. துன்பங்கள் சூழும்போதும், எதிரிகள் தன்னை அவமானப்படுத்தும்போதும் தளராமல், கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்துத் தன் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்ட ஒரு ஊழியரை எசாயா இறைவாக்கினர் இங்கே படம்பிடித்துக் காட்டுகிறார்.
"அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்" என்று கூறும் இந்த ஊழியர், வரவிருக்கும் இயேசுவின் பாடுகளுக்கு நிழலாகத் திகழ்கிறார். தந்தையாம் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து, மீட்புப் பணியில் உறுதியோடு இருந்த அந்த ஊழியரின் மனநிலையை நாமும் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமடுப்போம்.
பதிலுரைத் திருப்பாடல் முன்னுரை (திருப்பாடல் 22)
இன்றைய திருப்பாடல், சிலுவையில் தொங்கிய இயேசுவின் இதயத் துடிப்பாக ஒலிக்கிறது. தான் நேசித்த மக்களால் கைவிடப்பட்டு, ஏளனத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளான ஒரு நீதிமானின் குரலை இங்கே கேட்கிறோம்.
"என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்... என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள்" என்று வரும் வரிகள், இயேசு அனுபவித்த சொல்லொண்ணாத் துயரத்தை முன்னறிவிக்கின்றன. அதே வேளையில், இப்பாடல் வெறும் புலம்பல் மட்டுமல்ல; துன்பத்தின் நடுவிலும் கடவுள்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு. நாமும் இயேசுவின் பாடுகளில் பங்கேற்று, இந்தப் பல்லவியைப் பக்தியுடன் பாடுவோம்.
இரண்டாம் வாசக முன்னுரை (பிலிப்பியர் 2: 6-11)
இன்றைய இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்து இயேசுவின் மனநிலையைத் தங்களுக்குள் கொண்டிருக்குமாறு புனித பவுல் அடியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார். கடவுள் வடிவில் இருந்த இயேசு, தம்மைத் தாமே தாழ்த்தி, ஒரு அடிமையின் உருவை ஏற்று, சிலுவைச் சாவினை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்ததை இப்பாடல் அழகாக விவரிக்கிறது.
இயேசுவின் இந்தத் தாழ்ச்சியையும் கீழ்ப்படிதலையும் கண்ட தந்தை இறைவன், அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் பணியும் உன்னத பெயரை அவருக்கு வழங்கினார். "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என நாம் அறிக்கையிடவும், அவருடைய தாழ்ச்சியை நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வோடு செவிமடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. குருத்து ஞாயிறு என்றும் திருப்பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிற இத்தினத்தில், “ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!” என்கிற வாழ்த்தொலிக்கும் “அவரைச் சிலுவையில் அறையும்” என்கிற வசைபாடலுக்கும், அசைந்துகொடுக்காத இயேசு கிறிஸ்துவைப் போல, எங்கள் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும் உறுதியான நம்பிக்கையுடனும், தளராத எதிர்நோக்குடனும், தியாகம் நிறைந்த பிறரன்புடனும் எங்கள் வாழ்க்கையை மேற்கொள்வதற்கு அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. “வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்துபோவர்” என்கிற உண்மையை உணராமல், போர்கள் தொடுத்தும், ஏவுகணைகள் வீசியும், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தியும், இந்த உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற நாடுககையும், நாடுகளின் தலைவர்களையும், அமைதியின் அரசராகிய நீர்தாமே, உம்முடைய திருப்பாடுகள், மரணம் ஆகியவற்றின் பலனாக, அமைதியின் பாதைக்கு அழைத்துவர வேண்டுமென்றும், பரந்துபட்ட எம் உலகிலும், எங்கள் பாரத தேசத்திலும், சகோதரத்துவம், சமயச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவை நிலைபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” எனக் குமுறினாலும், கடைசியில் "எல்லாம் நிறைவேறிற்று" என்றுரைத்து, உமது இன்னுயிரை கையளித்த இறைவா, இன்னல்கள் ஆயிரம் வந்தாலும், துன்பங்கள் எங்களைத் துளைத்து எடுத்தாலும், அவற்றை எல்லாம் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளவும், துணிவோடு எதிர்கொள்ளவும், இறுதி வெற்றி உமக்கும் உம் வழியாக எங்களுக்கும் உரித்தானது என்கிற நம்பிக்கையை இந்தப் புனித வாரமும், புனிதவாரத் திருநிகழ்வுகளும் ஏற்படுத்த வேண்டுமென்றும், அனைத்து திருவழிபாட்டுத் திருநிகழ்வுகளிலும் நாங்கள் அனைவரும் பயபக்தியோடு பங்குபெற்று இறையருள் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண் டதனால், இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளின தந்தையாம் கடவுளின் கனிவான பார்வை எங்கள்மீதும் திரும்பிடும் வண்ணம், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘கீழ்ப்படிதல், தாழ்ச்சி, பணிவிடை புரிதல், தியாகத்துக்குத் தயாராயிருத்தல், இறைச்சித்தத்திற்குப் பணிந்திருத்தல் ஆகிய நற்பண்புகளோடு எங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஒரு உண்மையான பாஸ்கா பயணமாக மாற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Sunday, March 15, 2026
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026

திருப்பலி முன்னுரை
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே,
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) பாஸ்கா பெருவிழாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் நாம், இன்று சாவையே வெல்லும் கிறிஸ்துவின் வல்லமையைத் தியானிக்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், நான்கு நாட்கள் கல்லறையில் அழுகிய நிலையில் இருந்த லாசரை இயேசு உயிர்த்தெழச் செய்கிறார். "உயிர்ப்பும் வாழ்வும் நானே" என்று பிரகடனம் செய்யும் இயேசு, நம்முடைய பாவங்களினால் ஆவிக்குரிய நிலையில் செத்துப்போயிருக்கும் நம்மையும் எழுப்ப விரும்புகிறார். நம்முடைய தவறான பழக்கங்கள், விரக்தி மற்றும் பாவங்கள் எனும் கல்லறைகளிலிருந்து வெளியே வர இயேசு இன்று நமக்குக் கட்டளையிடுகிறார்.
"லாசரே, வெளியே வா!" என்று அழைத்த அதே குரல் இன்று நம்மையும் அழைக்கிறது. அந்த உயிருள்ள குரலுக்குச் செவிசாய்த்து, புதிய வாழ்வு பெறத் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 37:12-14)
பதிலுரைப்பாடல்
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8:8-11)
உங்களில் குடிகொண்டிருக்கும் தூய ஆவி. புனித பவுல் அடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையை விளக்குகிறது. இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய அதே ஆவி நமக்குள் குடிகொண்டிருந்தால், நம்முடைய சாவுக்குரிய உடல்களுக்கும் அது உயிர் அளிக்கும். நாம் ஊனியல்புக்குக் கட்டுப்படாமல், தூய ஆவிக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
4. ‘கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்’ என்று கூறியதோடு “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய்” என்றும் சொல்லி, இறந்த இலாசரை உயிர்த்தெழச்செய்த இறைவா, நீர் எம்மோடு இருந்தால், நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும், எம்மை விட்டு விலகும் என்பதோடு, இறுதி நாளில் உம்மோடு கூட உயிர்ப்போம் என்கிற நம்பிக்கையுடன் நாங்கள் வாழ்ந்திட, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது’ என்று இரண்டாம் வாசகம் கூறுகிற உண்மையை உணர்ந்தவர்களாய், ஆவிக்குரிய வாழ்வை மேற்கொள்ளவும், தவக்காலத்தின் சிறப்பு முயற்சிகளான ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் இன்னும் முனைப்பாக ஈடுபட்டு புனிதம் நோக்கிப் பயணிக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Monday, March 9, 2026
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்
1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ
1 எபேசியா 5:8-14
யோவான் 9:1-41
திருப்பலி முன்னுரை:
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. பாஸ்கா பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, திருச்சபை இன்று மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது.
இன்றைய நற்செய்தியில், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை அளிக்கும் புதுமையை நாம் காண்கிறோம். இது வெறும் உடல் சார்ந்த பார்வை மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையைப் பற்றியது. நாம் பல நேரங்களில் பாவம், பொறாமை மற்றும் அறியாமை எனும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "நானே உலகின் ஒளி" என்றுரைத்த இயேசு, நம் இதயக் கண்களைத் திறந்து, உண்மையை உணரச் செய்கிறார்.
இந்தத் திருப்பலியில் பங்கேற்கும் நாம், நம்முடைய அகக்கண்கள் திறக்கப்படவும், இருளின் செயல்களை விட்டு ஒளியின் மக்களாக வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.
வாசக முன்னுரைகள்
முதல் வாசக முன்னுரை (1 சாமுவேல் 16:1, 6-7, 10-13)
மனிதர் முகத்தைப் பார்க்கிறார், இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலின் அரசராகத் தாவீதை இறைவாக்கினர் சாமுவேல் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். மனிதர்கள் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குகிறார்கள், ஆனால் இறைவன் இதயத்தைப் பார்க்கிறார் என்பதை இவ்வாசகம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. வெளிவேடங்களைத் தவிர்த்து, தூய்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேட இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
பதிலுரைப் பாடல்
பல்லவி : ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை!
திருப்பாடல்கள்: 23: 1-3, 3-4,5,6
ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார், மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (எபேசியர் 5:8-14)
ஒளியின் மக்களாக வாழுங்கள். ஒரு காலத்தில் இருளாக இருந்த நாம், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாக மாறியிருக்கிறோம் என்று புனித பவுல் அடியார் கூறுகிறார். ஒளியின் பிள்ளைகளுக்குரிய நற்பண்புகள், நீதி மற்றும் உண்மை ஆகியவற்றில் நாம் நிலைத்திருக்க வேண்டும். தூக்கத்திலிருந்து விழித்து, கிறிஸ்துவின் ஒளியில் பிரகாசிக்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வுடன் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்கிறார் ஆண்டவர்!
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. எப்படி நீர் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த தாவீதின் மீது, ஆண்டவரின் ஆவி நிறைவாக இருந்ததோ, அதே போல உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, திருப்பொழிவு செய்யப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்கள்மீதும், மறைப்பணியாளர்கள் மீதும், இறைமக்களாகிய எங்கள்மீதும், ஆவியானவர் நிறைவாகப் பொழியப்படவும், அவர் தரும் ஒளியில், நாங்கள் அனைவரும், நேரிய பாதையில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆண்டவர் ஆயனாய் இருக்கிறபோது இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையெனப் பறைசாற்றும் திருப்பாடல் இருப்பது மூன்றை பதிலுரையாகப் பகர்ந்த நாங்கள், வாழ்வின் பாதையைத் தெரிவு செய்து வாழவும், போர்கள், சண்டைகள், வன்முறை, தீவிரவாதம் போன்ற சாவுக்கு இட்டுச்செல்லும் இருளின் செயல்களை, உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் கைவிட வேண்டுமென்றும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் முடிவில், சமயசார்பற்ற நல்லாட்சி அமைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. ‘தூங்குகிறவனே, விழித்தெழு … கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்கிற பவுலடியாரின் அறைகூவல், பொதுத் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களையும், ஏனைய எம்பிள்ளைகள் அனைவரையும், சோம்பலிலிருந்து தட்டி எழுப்பி, உத்வேகத்துடன் உழைக்கச் செய்து, அவர்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும், கிறிஸ்துவின் ஒளியில் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை ஒளிமயமானதாக அமைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும் பாவத்தின் காரணமாய் விளைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படும்பொருட்டு கடவுளால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்து, மனஉறுதியுடன் கூடிய மனந்திரும்புதல் மூலமாக, இந்தத் தவக்காலத்தில் நல்வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்பதை உணர்ந்தவர்களாய், தவக்கால அடையாளாச் செயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பார்த்து, பயனற்ற இருளின் செயல்களைச் செய்யாது, ஒளியின் செயல்களாகிய ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் ஈடுபட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Tuesday, March 3, 2026
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 08.03.2026
தவக்காலம் மூன்றாம் ஞாயிறு 08.03.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
விடுதலைப் பயணம் 17:3-7
உரோமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42
திருப்பலி முன்னுரை:
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய திருவழிபாடு நம்முடைய ஆன்மீகத் தாகத்தைப் பற்றிப் பேசுகிறது.
உடல் தாகத்தைத் தணிக்க கிணற்று நீரைத் தேடி வந்த சமாரியப் பெண்ணிடம், "வாழ்வு தரும் தண்ணீரை" வாக்களிக்கிறார் இயேசு. அந்தத் தண்ணீர் ஒருமுறை பருகினால் மீண்டும் தாகம் எடுக்காத, நிலைவாழ்வு தரும் இறைவருள் ஆகும். சமாரியப் பெண் தன் குடத்தை விட்டுவிட்டு, ஊர் மக்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கச் சென்றது போல, நாமும் நம்முடைய பழைய பாவப் பழக்கங்களை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்ற அழைக்கப்படுகிறோம்.
நம் உள்ளத்தில் உள்ள கசப்பு, வெறுப்பு, உலக ஆசைகள் எனும் தாகங்களைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே என்பதை உணர்ந்து, இந்தத் திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 17:3-7)
பாறையிலிருந்து சுரந்த தண்ணீர். இஸ்ரயேல் மக்கள் பாலைவனப் பயணத்தின்போது தாகத்தால் தவித்து, மோசேக்கும் இறைவனுக்கும் எதிராக முணுமுணுக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையின்மையைப் பொருட்படுத்தாமல், இறைவன் பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்து அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். நம்முடைய துன்ப நேரங்களில் நாம் இறைவனைச் சோதிக்காமல், அவரே நம் வாழ்வின் ஊற்று என்பதை நம்ப வேண்டும் என்று இவ்வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. பக்தி உணர்வுடன் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி : உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர் ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-7,7-9
1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி
2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி
3. இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5:1-2, 5-8)
தூய ஆவியின் வழியாக ஊற்றப்படும் அன்பு. இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு பெரியது என்பதை புனித பவுல் அடியார் இவ்வாசகத்தில் விளக்குகிறார். நாம் இன்னும் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அந்த அன்பு தூய ஆவியின் வழியாக நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது. இந்த அன்பு தரும் நம்பிக்கையே நம்மை வாழ்விக்கிறது என்பதை உணர்ந்து இவ்வாசகத்தைக் கேட்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-
ஆண்டவரே! நீர் உண்மையில் உலகின் மீட்பர். நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. “நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே” என்கிற திருமுக வாசகத்தின் உண்மையை உணர்ந்து, தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், மனித அறிவையும் ஆற்றலையும் மட்டுமே நம்பியிராமல், இறைஞானத்தால் வழிநடத்தப்பட, எம்மையே ஒப்புவிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகுக்கு “இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்கிற ஏசாயாவின் இறைவாக்கு புத்தெழுச்சி தரவும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், ஒளியின் ஆட்சி நோக்கிப் பயணிக்கவும், செயல்படவும், அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பணமும், பதவியும், பகட்டும், எம்மைக் கவர்ந்திழுக்கும் சூழலில், சிலுவையில் அறையுண்ட மெசியாவாகிய இயேசுவைத் தவிர, நாங்கள் பற்றிக்கொள்ள வேறு ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் யாவரும், குறிப்பாக இளையோரும், எங்களிடையே இருக்கும் உலகப்பற்று எனும் நுகத்தை அகற்றிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு வாழ்கின்ற ஞானத்தையும், தாழ்ச்சியையும், மனஉறுதியையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு எங்களிலே நிறைவேறி “அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்” என்பதுவும் உண்மையாகி, எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லாதோர்க்கு துணை நிற்பதும், உடையற்றோருக்கு உடுக்கக் கொடுப்பதும், வறியோரின் தேவையை நிறைவு செய்வதும் தான், நீர் விரும்பும் நோன்பு என்றுணர்ந்து அறச்செயல்கள் புரியவும், அதன் வழியாக, இவ்வுலகிற்கு நாங்கள், ஒளியாகவும் உப்பாகவும் விளங்க வேண்டுமென்றும், எங்களது நற்செயல்களைக் காண்கின்ற எல்லோரும், விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Monday, February 23, 2026
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 01.03.2026
தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 01.03.2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-
தொடக்கநூல் 12:1-4
திமோத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9
திருப்பலி முன்னுரை: -
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). முதல் ஞாயிறன்று இயேசு பாலைவனத்தில் சோதனைகளை வென்றதைத் தியானித்தோம். இன்று, தாபோர் மலையில் இயேசுவின் மாட்சிமை பொருந்திய உருமாற்றத்தைத் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் பாடுகளும் மரணமும் நெருங்கி வந்த வேளையில், தம் சீடர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும், சிலுவைச் சாவிற்கு அப்பால் ஒரு மகிமையான உயிர்ப்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தவும் இயேசு உருமாறிக் காட்டினார். இந்தத் தவக்காலம் நம்முடைய வாழ்விலும் ஒரு 'உருமாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும். நம்முடைய பழைய பாவ இயல்புகளைத் தவிர்ந்து, கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்பட்ட புதிய மனிதர்களாக நாம் மாற வேண்டும் என்பதே இன்றைய வழிபாட்டின் அழைப்பு.
"இவர் என் அன்பார்ந்த மைந்தர், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற தந்தையாம் இறைவனின் கட்டளைக்கு இணங்க, கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை :-
(தொடக்க நூல் 12:1-4)
ஆபிரகாமின் அழைப்பும் கீழ்ப்படிதலும். இன்றைய முதல் வாசகத்தில், விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமை இறைவன் அழைக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். தன் நாடு, இனம் மற்றும் தன் தந்தையின் வீட்டை விட்டுவிட்டு, இறைவன் காட்டும் நிலத்திற்குச் செல்ல ஆபிரகாம் துணிந்தார். அவருடைய அந்தப் பயணமும் கீழ்ப்படிதலுமே அவருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. நாமும் நம்முடைய வசதி மண்டலங்களை (Comfort Zone) விட்டு வெளியேறி, இறைவன் காட்டும் புனிதப் பாதையில் நடக்க இவ்வாசகம் நமக்கு ஊக்கமளிக்கிறது.
பதிலுரைப் பாடல்:-
பல்லவி : ஆண்டவரே! உமது பேரன்பு எங்கள் மீத இருப்பதாக!
திருப்பாடல்கள்: 33: 4-5, 18-19, 20, 22
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை :-
(2 திமொத்தேயு 1:8-10)
நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தை ஏறுங்கள். புனித பவுல் அடியார் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், நாம் பெற்றுள்ள அழைப்பு நம்முடைய தகுதியினால் வந்ததல்ல, மாறாக இறைவனின் அருளினால் வந்தது என்பதை உணர்த்துகிறது. சாவினை அழித்து, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிரச் செய்த கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயங்க வேண்டாமென இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-
ஒளிரும் மேகத்தினின்று, தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-
1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், “நீயே ஆசியாக விளங்குவாய் … உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, அனைவருக்கும் ஆசியாக விளங்கும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை, இந்தத் தவக்காலத்தில் உருமாற்றம் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், மாந்தர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், ஒப்புரவுடன் பயணிக்கவும், தலைமைப்பணியில் இருப்போர் அனைவரும், பகைமையின் பாதையைத் துறந்து, நீதியின் வழியிலும், சமாதானத்தின் திசையிலும் பயணிக்க வேண்டுமென்றும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அரசுத் தேர்வுகளையும், ஆண்டுத் தேர்வுகளையும் எழுதவிருக்கும் எம்பிள்ளைகளும், அனைத்து மாணவ மாணவியரும், முழு ஈடுபாட்டுடன் எல்லாப் பாடங்களையும் கற்று, தகுந்த முறையில் தங்களையே தயாரித்து, துணிவுடன் தேர்வுகளைச் சந்தித்து, சிறந்த வெற்றியினை சுவைக்க, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்றும், தூய ஆவியாரின் ஆற்றலை அவர்களுக்குப் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. சாவை அழித்து, அழியா வாழ்வை, நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்த கிறிஸ்து இயேசு வழியாக அளிக்கப்பட்ட அருளின்படி, மீட்கப்பட்ட நாங்கள் அனைவரும், எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தூய அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ளவும், “உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்” என ஆபிரகாமுக்கு நீர் வழங்கிய ஆசீரை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வின் உட்பொருளை உணர்ந்தவர்களாய், உன்னத இறை அனுபவங்களோடு வாழ்க்கை நிறைவுறுவதில்லை; துன்பங்கள் நிறைந்த சிலுவைப் பாதையின் வழியாகத்தான் உயிர்ப்பின் மாட்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, எங்களது ஜெப, தவ, அன்புச் செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி “இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என விண்ணகம் அறிக்கையிடும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
Monday, February 16, 2026
தவக்காலம் முதல் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 22-02-2026
தவக்காலம் முதல் ஞாயிறு - முதலாம் ஆண்டு- 22-02-2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
தொடக்கநூல் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். இவற்றைத் தான் நாம் நாள்தோறும் திருப்பலியில் நினைவுகூர்ந்து கொண்டாடினாலும் ஆண்டுக்கு ஒரு முறை சிந்தித்த சீர்தூக்கிப் பார்க்க நம்மைத் திருச்சபை அழைக்கிறது தவக்காலத்தின் வழியாக...
இவ்வாண்டின் முதல் தவக்கால ஞாயிறைச் சிறப்பிக்க இத்திருப்பலியில் பங்கேற்க உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தவக்காலம் என்றவுடன் ஏதோ கவலையோடும், வருத்தத்தோடும் காட்சி கொடுப்பது என்பதல்ல. மாறான இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். ஒப்புரவின் நல்ல காலம். நிலைவாழ்வுக்கு உரமிடும் காலம். மனித வாழ்வில் சோதனை என்பது ஒரு தொடர்கதை. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது மானிடரின் உள்ளத்தை வருடிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் அந்தச் சோதனைகளையும் வென்று சாதனை படைத்த நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி. இயேசு செய்த அரும்பெரும் சாதனை. ஆதிப்பெற்றோரின் அடிமைத்தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில் பாவநிலையிலிருந்து வெற்றிப் பெற்ற புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். இறைவார்த்தை இயேசுவுக்குச் சோதனைகளை வெல்ல உறுதுணையாக இருந்தது. எனவே நாமும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இல்லையேல் “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்ற பரிசேயர்களைப் பார்த்துச் சொன்ன இயேசு நம்மையும் பார்த்துச் சொல்லுமுன் விழிப்புடன் செயல்படுவோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
தவக்காலத்தின் முதல் ஞாயிறாகிய இன்று தொடக்கநூல் வாசகம் மனிதனின் படைப்பு, அவனது வீழ்ச்சிபற்றிக் கூறுகிறது. தவக்காலத்தின் குறிக்கோள் மனிதன் தன் பாவ வாழ்க்கையை உணர்ந்து மனம் திரும்பி, இறைவனின் புதுப் படைப்பு என்ற நிலைக்குத் திரும்பி வருதலேயாகும். இந்நிலைக்கு வர வேண்டுமாயின் அவன் முந்திய நிலையை உணர வேண்டும் என்ற கருத்திலே இன்றைய வாசகம் பொருந்தி அமைகிறது. இவ்வாசகத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனின் வார்த்தைகளைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.
பதிலுரைப் பாடல்
பல்லவி : ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள்: 51: 1-4. 10-12,15
கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார் வையில் தீயது செய்தேன். பல்லவி
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னி லையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்துவிடாதேயும். பல்லவி
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
முதல் மனிதன் ஆதாம் செய்தப் பாவத்தால் சாவைக் கொணர்ந்தான். ஆயினும் கடவுளின் கட்டளைகளை மீறிப் பாவம் செய்யாதவரும் சாவுக்குள்ளானார்கள். ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். இவ்வாறு நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் பவுலடியார் அழைக்கின்றார். கேட்போம் கவனமுடன்...
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. திரு அவையின் ஆட்சிபீடத்தில் இருப்போர் முதல், கடைசி பொதுநிலையினர் வரை, அனைவருமே, “கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்வதுதான்’ தங்களுக்கான அழைத்தலும் கடமையும் என்பதை உணர்ந்து செயல்பட, அருளின் காலமாகிய இந்தத் தவக்காலம் பயன்பட வேண்டுமென்று, திருத்தந்தை லியோ, அனைத்து அருள் பணியாளர்கள் மற்றும் துறவியவருக்காகவும், எங்கள் ஒவ்வொருவருக்காகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ஆசை, அகந்தை, அதிகார வேட்கை போன்ற அலகையின் வலைகளில் சிக்கி, அமைதியின் பாதையைத் துறந்து, அலங்கோலப்பட்டு நிற்கும் அவனிக்கு, மனந்திரும்புதலின் பதையில் பயணிக்கும் வரமருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், தீமையின் வழிகளைத் துறந்து நன்மையின் செயல்களில் ஈடுபடவும், மக்கள் அனைவரையும் அறவழியில் வழிநடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உண்பதற்குச் சுவையானதாகவும், கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும், அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருப்பதாகக் கருதி, கடவுளின் கட்டளையை மீறிய எம் ஆதிப்பெற்றோர் போலவே, இன்றைக்கும், உலகின் மாயக் கவர்ச்சிகளாலும், அறிவியல் வளர்ச்சி தருகிற அதீத சுகத்தாலும், வசதிகளாலும், நுகர்வுக் கலாச்சாரம் என்கிற நயவஞ்சக வலையில் சிக்குவதாலும், படைத்தவராம் கடவுளை மறந்து, படைப்புகளில் தன்னைத் தொலைத்துவிட்ட நவீன உலகின் மக்களாகிய நாங்கள், ஒறுத்தல், தவம், ஜெபம், புண்ணியம் போன்றவற்றின் மேன்மையை உணர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ‘ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள்’ ஆனதை, கிறிஸ்துவின் வழியாய் அனுபவிக்கும் நாங்கள், ‘அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் நாங்கள் வாழ்கிறோம்’ என்பதை உணர்ந்து, கடவுளின் கட்டளைகளுக்கும், சமூக நன்னெறிகளுக்கும் கீழ்ப்படிந்து வாழுகிற நல்லொழுக்கம் பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது” என்கிற பவுலடியாரின் கூற்றினால் திடம்பெற்று, எம்பாவங்களை உணர்ந்து, நல்ல பாவ சங்கீர்த்தனம் செய்து, இறையருளை நிரம்பப் பெறுகிற காலமாக இந்தத் தவக்காலத்தை மாற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.




