பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு 19-04-2026
இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35
திருப்பலி முன்னுரை.
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், எம்மாவு நோக்கிச் சென்ற இரு சீடர்களின் பயணத்தை நாம் தியானிக்கிறோம். நம்பிக்கையிழந்து, சோகத்துடன் சென்ற அந்தச் சீடர்களோடு இயேசு வழித்துணையாக நடக்கிறார். அவர் மறைநூலை விளக்கிச் சொன்னபோது அவர்களின் உள்ளம் நெருப்பாய் எரிந்தது; அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது அவர்களின் கண்கள் திறக்கப்பட்டன.
நாமும் பல நேரங்களில் கவலைகளோடும், ஏமாற்றங்களோடும் நம் வாழ்வின் பயணத்தைத் தொடர்கிறோம். ஆனால், உயிர்த்த ஆண்டவர் நம் ஒவ்வொரு திருப்பலியிலும், இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வழியாகவும் நம்மோடு தங்கி நமக்கு வலிமை அளிக்கிறார். எம்மாவு சீடர்களைப் போல நாமும் ஆண்டவரை அடையாளம் காணவும், அவர் தரும் மகிழ்ச்சியை உலகிற்கு அறிவிக்கவும் தேவையான வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.
முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:14, 22-33)
கிறிஸ்துவின் உயிர்ப்பிற்குப் பேதுருவின் சான்று. தூய ஆவியால் நிரப்பப்பட்ட புனித பேதுரு, எருசலேம் மக்கள் முன்னிலையில் ஆற்றிய முதல் உரையை இவ்வாசகத்தில் கேட்கிறோம். யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கடவுள் சாவிலிருந்து எழுப்பி, அவருக்கு மாட்சி அளித்தார் என்பதைப் பேதுரு துணிவுடன் பறைசாற்றுகிறார். தாவீது அரசரின் இறைவாக்கின்படி, கிறிஸ்து சாவிற்கு உட்பட்டவர் அல்ல, அவரே வாழ்வின் அதிபதி என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்
ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5, 7-8, 9-10, 11
1. இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன். நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி
2. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி
3. என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி
4. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:17-21)
கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டோம். நாம் அழிந்துபோகும் பொன், வெள்ளியினால் மீட்கப்படவில்லை; மாறாக, மாசற்ற ஆட்டுக்குட்டியான கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்று புனித பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். எனவே, நாம் இவ்வுலகில் வாழும் காலம்வரை இறைவனுக்கு அஞ்சி, புனிதமான வாழ்வு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம்
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம்பற்றி எரியவில்லையா அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், அச்சங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களாய் “கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” எனத் துணிவுடன் எடுத்துரைத்த பேதுருவைப் போல, உயிர்ப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும், துடிப்புள்ள திருஅவையாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுத் தரவல்லவரான உயிர்த்த இயேசு, உலகின் தலைவர்கள் அனைவரையும், பகைமை, வன்மம், வெறுப்பு போன்ற பாதாளங்களிலிருந்து தூக்கிவிட்டு, போர்களில்லா அமைதியான சூழலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்றும், அனைத்துவிதமான நெருக்கடிகளிலிருந்தும் இந்த உலகு விடுதலை பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை” என்கிற முதல்வாசகம் இயேசுவுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து மன்றாடுகிறோம். எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலுமிருந்து மரித்துப்போன அனைவர் மீதும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிற போர்களாலும் தாக்குதல்களாலும் உயிரிழக்க நேரிடும் அனைவரின் மீதும், உமது உயிர்ப்பின் வல்லமை தங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிற உம்முடைய மக்களாகிய நாங்கள், இந்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலே, “எங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அல்ல; மாசு மறுவற்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், யாருக்கும் விலை போகாமல், எந்தவிதமான கவர்ச்சிக்கும் மதிமயக்கத்திற்கும் இடம் தராமல், மதச்சார்பற்ற, மனிதாபிமானமிக்க, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைத்திட்டத்தையும், இறைவனின் வல்ல செயல்களையும் உணர இயலாத மந்த உள்ளத்தினராக இல்லாமல், இறைவார்த்தையும், திருஅப்பமும் பிடப்படுகிற திருப்பலியில், உம்மை முழுமையாய் கண்டுணரவும், 'எம்மோடு தங்கும்' என வேண்டி உம்மை எப்போதும் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வாழவும், நாங்கள் கண்டுணர்ந்த உம்மைப் பிறரோடு பகிரவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.







