பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 25.06.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33
திருப்பலி முன்னுரை
ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். "அஞ்சாதீர்கள்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகம் நமக்குத் தரும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. "உங்கள் தலைமுடி எல்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது" என்று சொல்லும் அளவுக்கு இறைவன் நம் மீது அக்கறை கொண்டுள்ளார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இறைவன் தன் பக்கம் "வலிமை மிக்க வீரராக" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில் ஆதாம் வழியாய் வந்த பாவத்தைவிட, கிறிஸ்து வழியாய் வந்த அருள் மேலானது எனப் பவுல் அடியார் விளக்குகிறார். நாம் உண்மையை உரக்கச் சொல்லவும், கிறிஸ்துவை உலகறிய அறிக்கை செய்யவும் அழைக்கப்படுகிறோம். அந்தத் துணிவைப் பெறவும், இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (எரேமியா 20: 10-13)
இறைவாக்கினர் எரேமியா தமக்கு நெருக்கமானவர்களாலேயே அச்சுறுத்தப்படுகிறார். சுற்றிலும் அச்சுறுத்தல் இருந்தபோதும், அவர் கலங்கவில்லை. ஆண்டவர் தம் பக்கம் இருக்கும்போது தம்மைத் துன்புறுத்துவோர் வீழ்வர் என்று நம்புகிறார். ஏழைகளின் உயிரைக் காக்கும் இறைவனைப் போற்றிப் புகழும் இவ்வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.
திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34
1.ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 12-15)
ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார்”. அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்” என்கிற உமது வாக்குறுதியில் நிலைத்திருந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், மக்கள் முன்னிலையில் உம்மை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமல்லாமல், உமக்கு ஏற்றவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. ‘சுற்றிலும் ஒரே திகில்!’ எனத்தொடங்கிய இன்றைய முதல் வாசகக்கூற்றை உண்மையாக்குகிற நிலையில் இருக்கும் எம் உலகுக்காகவும், உலகத் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி எங்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.” என்கிற உமது வாக்கின்படி, நாங்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையோடு, அச்சம் தவிர்த்து வாழவும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்கிற நம்பிக்கையோடு வாழ்வை நடத்தவும், வாழ்வின் சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பதும்; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒளிவு மறைவற்ற, ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சி, இருளின் செயல்களை விட்டொழித்து ஒளியின் மக்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



