Thursday, June 1, 2023

மூவொரு இறைவன் பெருவிழா (4.06.2023)

மூவொரு இறைவன் பெருவிழா (4.06.2023)


 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 34: 4-6, 8-9
2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
கடந்த ஆறு வாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாம் விழாக்களைக் கொண்டாடி வந்தோம். இவ்விழாக்களின் சிகரமாக இன்று மூவொரு இறைவனின் திருவிழாவை நாம் கொண்டாடுகிறோம். "அன்பைக் காண முடிந்தால், மூவொரு இறைவனையும் காண முடியும்" என்று அந்த இறைவனைப் பற்றி, புனித அகுஸ்தின் அவர்களின் கூற்றுக்கேற்ப இறைஅன்பில் இணைந்து இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறோம்.
நம் இறைவன் மூவொரு கடவுள் என்பதையே நமக்கு அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் கூறியது, பலரை வியப்பில் ஆழ்த்தியது. இயேசுவின் காலம்வரை இஸ்ரயேல் மக்களுக்கு அறிமுகமான கடவுள், தானாக இருக்கும், தனித்திருக்கும், தனித்து இயங்கும் ஒரு கடவுள். தனித்திருக்கும் கடவுளை, தந்தை, மகன், தூய ஆவியார் என்ற ஒரு கூட்டுக் குடும்பமாய் அறிமுகம் செய்தவர் இயேசு. இயேசு இவ்விதம் நமக்கு அறிமுகம் செய்துவைத்த மூவொரு இறைவனின் இலக்கணம் நமக்குச் சொல்லித்தரும் பாடம் என்ன? நாம் வழிபடும் இறைவன் உறவுகளின் ஊற்று என்றால், நாமும் உறவுகளுக்கு முக்கியமான, முதன்மையான இடம் தர அழைக்கப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்தப் பாடம்!
உறவுகளுக்கு நம் வாழ்வில் எந்த இடத்தைத் தந்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய இன்று நல்லதொரு தருணம். உறவுகளை வளர்ப்பதைக் காட்டிலும், செல்வம் சேர்ப்பது, புகழ் தேடுவது என்று மற்ற அம்சங்களுக்கு நாம் வாழ்வில் முதன்மை இடங்களைக் கொடுத்திருந்தால், மீண்டும் உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் நமக்குச் சொல்லித் தர வேண்டும் என்று இன்று இப்பெருவிழாத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் விடுதலைப்பயணத்தின்போது “என் மக்களே” என்று தாம் அழைத்த இஸ்ரயேல் மக்களை இறைவன் மோசேயின் தலைமையில் எகிப்து நாட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்து வாக்களிக்கப்பட்ட வளமான பூமியில் வழிநடத்துகையில் ஏற்பட்ட நிகழ்வுகளில் ஒன்றைப் பற்றிய செய்தியை நாம் இப்போது செவிமெடுக்க இருக்கிறோம். இறைவன் எத்தகைய மகத்துவம் மிக்கவர் என்பதையும் இறைவனால் தலைமைப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்ட மோசேயின் குணநலன்கள் எத்துணைச் சிறப்பானவை என்பதையும் கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பிரிவு மனப்பான்மை கொண்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டிருந்த கொரிந்து நகரமக்களை மூன்றாம் முறையாகச் சந்தித்து, நேரில் அவர்களுக்கு அறிவுரைக் கூறுமுன், திருத்தூதர் பவுல் எழுதும் இரண்டாம் திருமுகத்திலிருந்து வரும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் கொரிந்து மக்களின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட அறிவுரைகளைத் தாங்கிய திருத்தூதரின் வார்த்தைகளையும், அன்பு மேலோங்கி அவர் வழங்கும் வாழ்த்துரையையும் இப்போது வாசிக்கக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப்பெறவும் தகுதியுள்ளவர்.
திருப்பாடல்கள் தானி. 1: 29-33

எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

உமது தூய மாட்சிவிளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். கெருபுகள்மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப்பெறுவீராக. உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1.அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் உமது ஒன்றிப்பிலும், அன்பிலும் உம்மை உய்த்துணர்ந்தவர்களாய் அன்பிலும், ஒற்றுமையிலும் நிறைவாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2. உறவுகளின் ஊற்றான இறைவன்! எங்கள் குடும்பங்களின் உறவுகளிலேயே மிக அதிகமாகப் பழுதடைந்திருப்பது பெற்றோர்மீது, அதுவும், வயதானப் பெற்றோர்மீது நாம் கொண்டுள்ள உறவு. இந்த உறவை மீண்டும் அலசிப் பார்க்க, பழுதடைந்துள்ள அந்த உறவை மீண்டும் சரிசெய்ய, உறவுகளுக்கு முதலிடம் வழங்கும் வழிகளை மூவொரு இறைவன் எமக்குச் சொல்லித் தர வேண்டும்மென்று உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்பால் இணைந்திட அழைக்கும் மூவொரு இறைவா! உலகெங்கும் எழுந்துள்ள உள்நாட்டுப் போரினால், வன்முறையாலும் பல்லாயிரம் குடும்பங்கள் சிதைந்துள்ளன. உறவின் ஊற்றான மூவொரு இறைவா! அங்கெல்லாம் அமைதியை விரைவில் கொணர வேண்டும் என்றும், சிதைந்துபோன குடும்பங்கள் மீண்டும் இழந்துபோன உறவுகளில் பலப்படவும், அன்பில் மேன்படவும் நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உறவுகளின் ஊற்றான இறைவன்! இப்புதிய கல்வியாண்டில் பாடசாலைச் சென்று கல்வி பயிலவிருக்கும் எம் இளையோர் அனைவரையும் புதுப்படைப்பாய் மாற்றி, தங்கள் பெற்றோர்களின் துயரங்களை உணர்ந்துப் படிப்பிலும், நல்லெழுக்கத்திலும் சிறந்து விளங்க ஞானத்தையும் புத்தியையும் அன்பையும் அவர்களுக்கு வழங்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, May 22, 2023

தூய ஆவியாரின் பெருவிழா 28-5-2023

  தூய ஆவியாரின் பெருவிழா 28-5-2023

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

    1. திருப்பணி 2:1-11
    2. 1கொரி 12:3,7,12-13
    3. யோவான் 20:19-23

திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவில் அன்பார்ந்த இறைகுலமே! இன்றைய வழிபாடு நமக்கு உணர்த்தும் செய்தி கிறிஸ்துவின் விண்ணேற்றத்திற்கு பிறகு சோர்வுற்றிருந்த சீடர்களுக்கு "அஞ்சாதீர்கள். உங்களுக்குத் துணையாளரை அனுப்புகிறேன். அவர் உங்களை உண்மையின் வழியில் வழி நடத்துவார். அவரது ஆட்சிக்கு முடிவே இராது" என்னதே ! தூய ஆவியாரை நம்மில் பொழிந்து அருளடையாளங்கள் நிறைவு செய்யப்பட்டு இயங்குகின்றோம்.

தூய ஆவியார் துணையால் துணிவுடன் ஏழுச்சிப் பெற்றனர் சோர்ந்திருந்த திருத்தூதர்கள். தூய ஆவியார் ஒருவரே! செயல்பாடுகள் பல வகையுண்டு! கடவுள் ஒருவரே! இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை ஆழப்படுத்தி மானிடரை அன்புறவில் வாழ்ந்து வளர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு செய்து இறையனுபவத்தில் ஊன்றிட இன்றைய தூய ஆவியாரின் பெருவிழா நமக்கு அழைப்பு விடுக்கின்றது.

வாசக முன்னுரை

முதல் வாசக முதல் முன்னுரை

1.முதல் வாசகத்தில் தூயஆவியாரின் வருகை சீடர்கள்மீதும் அன்னை மரியாள் மீது பொழியப்பட்டு அனைவரையும் அக்னி நாக்குவடிவில் ஆவியார் இறங்கி பலரும் பல மொழிகளில் பேசியதையும் வந்தவர்கள் அவரவர்கள் மொழியில் கேட்டுப் பரவசம் அடைந்ததையும் தங்கள் சொந்த மொழியில் பேசியதை கேட்டு வியந்ததை குறித்துத் திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
        
தூயஆவியின் தொடர் பாடல் : ஒலிவடிவில் (வாசக நூல் 1, பக்.524)
(
MP3 SONG)



தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524)

 
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

இரண்டாம் வாசக முன்னுரை

2.இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கொரிந்து மக்களுக்கு தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. கடவுள் உருவரே. ஆனால் சிலருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தையும், வேறுசிலருக்கு அறிவு செறிந்த சொல்வளத்தையும் வழங்குகிறார். அவரவர் தகுதிக்கு ஏற்ப அருள்வரங்களை வழங்குகிறார் என்ற சிந்தனைக்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூயஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பைத் தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3. அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் அரசியல் மாற்றங்களால் போராட்டங்களும், சமுதாயத்தில் வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்குத் துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.

4. மாணவ செல்வங்களுக்காக…
வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைக் கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.

5. பங்கு மக்களுக்காக...
எங்களுக்காய் பரிந்து பேசும் இயேசுவே! எம்பங்கு மக்கள் அனைவரும் நீர் பரிசளித்த தூய ஆவியாரின் துணை கொண்டு இறையரசை அறிவிக்கும் கடமையையும், உமது சாட்சிகளாய் உலகில் திகழ்ந்திட வேண்டிய அருள்வளங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, May 16, 2023

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 21.05.2023


 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 21.05.2023



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்.
இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள். இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன.
இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன. அன்று வேரூன்றிய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டுவோம்.

 வாசகமுன்னுரை

 முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப் பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்“ என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

பதிலுரைப்பாடல்

 பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 7: 1-2. 5-6. 7-8

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே.  பல்லவி
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.  பல்லவி
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார்.  பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கடவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதைத் தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே இறைவா! இயேசு விட்டுச் சென்ற இறையரசுப் பணியைக் காலத்தின் அறிகுறிகளுக்கேற்பவும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் தொடர்ந்து ஆற்றிடத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் தேவையான ஞானத்தையும் உறுதியான நம்பிக்கையும் வழங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.விண்ணில் வாழ்பவராம் இறைவா! எங்கள் குடும்பத்தினர்கள் அனைவரும் சாட்சிகளாக வார்த்தையால் மட்டுமல்ல, வாழ்க்கை மூலமாகவும் வெளிப்படுத்தவும், இயேசுவின் சிந்தனைகள், பணிவாழ்வு இவற்றை நமதாக்கி இருக்குமிடத்தில் விண்ணகத்தை உருவாக்கத் தேவையான நல்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா! உலகெங்கும் துன்புறும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவா தரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவர்களின் வாழ்க்கைப் பாதைக்கு வழிகாட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, May 9, 2023

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 14-05-2023

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 14-05-2023

 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு. "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 

 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப் போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திரு அவையை வழி நடத்தும் எம்திருத்தந்தை, அவர் வழியாய் மந்தைகளைச் செவ்வனே பராமரித்து வழி நடத்தும் ஆயர்கள், அருட்பணியாளர்கள், துறவியர்கள், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக மீண்டும் தங்கள் பணிவாழ்வைக் கிறிஸ்துவின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப இறைசமூகத்தை ஆன்மீக வாழ்விற்கு அழைத்துச் செல்லத் தேவையான உம் அருளை நிறைவாய் வழங்கிட இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2.ஏழைகளின் துணையாளரே எம் இறைவா! வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள கலவரங்களால் மரித்தவர்களை நினைவு கூர்கின்றோம். இன்று அந்தப் பகுதி மக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து அவர்கள் விடுப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரங்கள் மேன்பட்டு, நற்சான்றோர்களாக வாழவும், அரசியல், மதக்கலவரங்கள் முடிவுக்கு வரவும், அமைதியான வாழ்க்கை மீண்டும் மலரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.குழந்தைகள் விண்ணரசின் செல்வங்கள் என்று மொழிந்த எம் இறைவா! நீர் கொடுத்த செல்வங்களாகிய எங்கள் பிள்ளைகளை நாங்கள் பொறுப்புடன் வளர்க்கவும், அவர்களுக்கு இறை அச்சத்தையும் தூய வாழ்வுக்கான சிந்தனைகளை அறியச் செய்திடவும், தம் கடமைகளை உணர்ந்துத் தூயக் கிறிஸ்துவ வாழ்வு வாழ வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்குப் புதுப்பாதையை அமைத்துத் தரும் என் இறைவா! இந்தக் கல்வி ஆண்டில் எம் இளையோர்களைக் கரம்பிடித்து வழிநடத்தும். தொற்றுநோயின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள குழப்பங்களிலிருந்து காத்து அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிடவும், நவீன உலக மாயையால் கவனம் சிதறிவிடாமல் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிடவும், உமது உன்னதச் சாட்சிகளாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டிய ஞானத்தை பொழிந்தட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே எம் இறைவா! புதியதாய் குருத்துவப்பணிகளுக்குத் தங்களை அப்பணியிருக்கும் அருட்பணியாளர்கள் அனைவரையும் குருக்களாய் அருட்பொழிவு செய்து, அவர்களின் மனவுறுதியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்கி, உம் பணியை வளமையாகச் செய்திட உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, May 2, 2023

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 07-05-2023

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு 07-05-2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 6:1-7
1 பேதுரு 2:4-9
யோவான் 14:1-12

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு. ‘நானே உங்களுக்கு எல்லாம்’ என்று இறைமகன் இயேசு ஆணித்தரமாகத் தன் வார்த்தைகள்மூலம் தன் உடனிருப்பைப் பதிவுச் செய்யும் இன்று கிறிஸ்துவின் சீடர்களாய் ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு ஏழு முறைத் தன்னைப் பற்றி "நானே..." என்ற வாக்கியங்களைக் கூறியுள்ளார். எனினும் நம் அனைவரின் உள்ளங்களில் ரீங்காரமிடும் மிகவும் பிரபலமான இயேசுவின் வாக்கியமாய் இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே..." என்ற வாக்கியம் என்றால் அது மீகையாது. இயேசு தன்னைப் பற்றிக் கூறிய "நானே..." வாக்கியங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால், எல்லாமே எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு கூறிய வார்த்தைகள் என்பதை உணரலாம். தன்னைச் சுற்றிப் போராட்டமும், குழப்பமும் நெருக்கும்போது ஒருவர் 'நான் இப்படிப்பட்டவன்' என்று கூறுவதில் நல்ல பாடங்களைக் கற்றுக் கொள்ள முடியும். இயேசு இன்று அத்தகைய பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறார்.

இது மேமாதம். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பலருக்கு வேலை மாற்றம், இடம் மாற்றம், வீடு மாற்றம், கல்விக்கூட மாற்றம் என்று பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் எழுந்திருக்கலாம். பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில் தெரியும்போது, இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக் காட்ட வேண்டும் என்று நம் வழியும், உண்மையும், வாழ்வும் ஆன உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர்கள் இறைபணியிலும், இறைவேண்டலிலும் அதிகமாய் ஈடுபட்டு அதில் உறுதியாய் நிலைத்திருக்க, மற்றப்பணிகளில் ஈடுபடுவது சரியல்ல என்பதை எடுத்துரைக்கும் வகையில் இறைஞானம் நிறைந்த எழுவரை அப்பணியில் ஈடுபடுத்தினர். இதன் மூலம் திருத்தூதர்கள் இறையரசை அறிவிக்கும் பணியைச் செவ்வனே செய்து திரளான மக்களை இயேசுவின் சீடர்களாக்கினர். நாமும் இறைவேண்டலிலும் நற்செய்திப் பணிகளில் சிறந்து விளங்க இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி : ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33:1-2,4-5, 18-19
நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் உயிருள்ள கல்லாகிய ஆண்டவரை அணுகுங்கள் என்று அழைக்கின்றது. அதன் மூலம் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட இனமாகவும், தூய மக்களினத்தினராகவும், கடவுளின் உரிமைச்சொத்தாகவும் ஆக்கப்படுகிறோம். எனவே வியத்தகு ஒளிக்கு அழைத்துவந்தவரின் மேன்மைகளை அறிவிப்பது நம் கடமை என்று வலியுறுத்தும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. எம்மைப் படைத்து  ஆளும் எம் இறைவா! எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகி வரும் இவ்வுலகில் உம் திருஅவையின் ஆயனாம் திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற இயேசுவின் வார்த்தைகளைத் தங்கள் உள்ளத்தில் பதித்து உம் உயிருள்ள சாட்சிகளாய் வலம் வரவும், பிறரன்பில் நிலைத்திருந்து நல் வழிகாட்டிகளாய் வாழ்ந்திடத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மனமாற்றத்தை விரும்பும் எம் அன்புத் தந்தையே இறைவா! எம்குடும்பத்தில் நிகழவிருக்கும் பலவேறு மாற்றங்களான எங்கள் பணிமாற்றம், இடமாற்றம், பாடசாலை மாற்றங்கள், திருமணங்கள் போன்ற மாற்றங்களைச் சந்திக்கத் தூயஆவின் கொடைகளாம் உறுதி, துணிவு, ஞானம் ஆகியவற்றைத் தந்து எங்கள் குடும்பங்கள் மகிழ்வுட பயணிக்கச் சரியான வழியை, சரியான திசையை எமக்குக் காட்ட வேண்டும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமக்கு நல்வழிக் காட்டும் எம் இறைவா! எம்குடும்பங்களில் பல இளையோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத் தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் இயேசு கூறும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற வார்த்தைகள் அவர்களை நல் வழிக்கு, ஒளிமிக்க, உண்மையான வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று இறைவா உமை மன்றாடுகிறோம்.

4. உம் அன்பால் எம்மை ஒன்றிணைக்கும் இறைவா! அனம் பறக்கும் இவ்வெயில் காலத்தில் இவ்வையகமும், நாங்களும் சிந்தைக் குளிர்ந்திட, வறட்சியும் வறுமையும் நீக்கிட, வெயிலின் தாக்கத்தால் துன்புறும் எம்முதியோர், நோயுற்றோர், குழந்தைகள் அனைவரின் நலம் காக்கப்பட எங்களுக்கு உமது இரக்கத்தை அருள்மாரிப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்பு நிறை பார்வையாளர்களுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள். கடந்த பத்தாண்டுகள் தொடர்ந்து இந்தச் சேவையைச் செய்திட எமக்கு ஊக்கமளித்த இறைவனுக்கு, உங்கள் அனைவருக்கும் எம் இதயம் கனிந்த நன்றிகளும், செபங்களும் என்றும்...

எமது பணிகள் தடையின்றி தொடர எம்மை உங்கள் செபத்தில் தாங்கிட அன்புடன் வேண்டுகிறோம்

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, April 26, 2023

பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு 30.04.2023

  பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு 30.04.2023

                                        


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 2:14அ, 36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் நான்காம் ஞாயிறான இன்று நல்ஆயன் ஞாயிறாகக் கொண்டாட இறைவனின் திருவடி நாடி நம் ஆலயம் வந்துள்ள இயேசுவின் அன்பார்ந்த இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இயேசு தன் ஆடுகளுக்கு முன்னே பாதுகாப்பாகச் செல்லும் நல்ஆயனாக இருக்கின்றார். இந்த நல் ஆயன் மானிடராகிய நம் வாழ்விற்காகத் தன்னையே தியாகம் செய்யும் தாயுள்ளம் படைத்தவராகத் தான் இருப்பதை இறைமகன் இயேசு இன்றைய நற்செய்தியில் பதிவு செய்கின்றார்.
இயேசுவின் அன்புக்கு உரிய நாம் அவருடைய குரலைக் கேட்கின்றோம். அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். அவரது அழைப்பை ஏற்று நாமும் இயேசுவைப் போல் தந்தையுடன் இறைவேண்டலில் நிலைத்திருந்து அவரின் சீரியப் பார்வையில் நம்மிடம் காணப்படும் அனைத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்து செயல்படுவோம் இறையரச அறிவிக்க…
இறையவைத்தல் ஞாயிறான இன்று அவரவர் இருக்கும் நிலையிலிருந்து இறைவனின் அழைத்தலை உணர்ந்து எத்தனை தோல்விகள் வந்து வாட்டினாலும் அதனை வெற்றிக்குள்ள இத்திருப்பலியின் வழியாக நம் ஆயனாம் இறைமகன் இயேசுவிடம் மன்றாடுவோம் ஒர் அணியாக...

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைமகன் இயேசுவைக் கொலை செய்த  இஸ்ரேல் மக்களுக்குச் சீடர்கள் விடுக்கும் அழைப்பான ”மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும் பொருட்டுத் திருமுழுக்குப் பெறுங்கள். அப்போது தூய ஆவியைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதே ஆகும். இவ்வாறு மனம் மாற இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது. இவ்வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேனும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேனும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.  பல்லவி
தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திவிடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சின்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.  பல்லவி
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.  பல்லவி
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

நன்மை செய்தும் துன்பத்திற்கு ஆளாகும் நாம் அதைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்போது அவை கடவுளுக்கு ஏற்றதாக உள்ளது. இவ்வாறே இயேசுவும் துன்புற்று ஒரு மாதிரியை விட்டுச் சென்றுள்ளார். இதைப் பின்பற்றி நீதிக்காகவே வாழ நாம் அழைக்கப்பட்டுள்ளோம். எனவே ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் வந்துள்ளோம் என்பதை எடுத்துக்கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் மனத்தில் உள்வாங்கிச் சிந்திப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நல்ல ஆயன் நானே என்ற இறைமகனின் இறைப்பயணத்தில் இணைந்து இறைப்பணியாற்றிட திருப்பொழிவு செய்து தேர்ந்து கொண்ட திருத்தந்தை பிரான்ஸ், ஆயர்கள், திருப்பணியாளர்கள் அருட் சகோதரர்கள், சகோதரிகள் பொதுநிலையினர் அனைவரும் நல்மேய்ப்பனாகத் தன் ஆடுகளுக்காகத் தன்னையே தருகின்ற ஆற்றல் கொண்டவர்களாகிட, தங்களின் அழைப்பை உணர்ந்து உழைத்திட வேண்டிய அருள்வாராம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

2. எம்மை ஆளும் எம்தலைவா! நாட்டில் செயல்படும் தலைமை பொறுப்பாளர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலம் காணவும் ஏற்றத் தாழ்வு இல்லா சமத்துவச் சமுதாயம் படைத்திட அவர்களுக்குப் போதுமான ஞானத்தையும் அருள் வாழ்வையும் அவர்கள்மீது பொழிந்து  உம் மக்களைப் பேணிக் காக்கும் நல்ல ஆயனாகச் செயல்படவேண்டிய வரத்திற்காக இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

3.நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை என்று இயம்பிய இயேசுவே! உமது திருப்பணியாளர்கள் சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை வெகுவாக ஏற்றுக் கொண்டு உம் திருப்பணியைத் திறம்பட ஆற்றிட உம் துணையாளரின் துணை அவர்களோடு இணைந்து இறைமக்களை இறைவனிடம் அழைத்துச் செல்லும் ஆற்றலை இவர்களுக்கு நிறைவாய் பொழிந்து அவர்கள் உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
 

4. வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன் என்றுரைத்த இயேசுவே! இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை நாங்கள் உணர்ந்து உன்பாதம் அவர்களை அர்ப்பணிக்கின்றோம். இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறையவைத்தலை உணர்ந்து நல்ல கனி தரும் உமது ஊழியர்களாக அவர்கள் வளர்ந்திட வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே! எம் இறைவா! இறைஅழைத்தல் ஞாயிறான இந்நாளில் பொதுநிலையினரான நாங்கள் எங்களின் அழைத்தல் எத்தகையது என்று உணர்ந்து, ஆக்கப்பூர்வமாக இறையரசை அறிவிக்கும் பணி எமக்கும் உண்டு என்பதை உணர்ந்து, எங்கள் வாழ்க்கையின் மூலம் உலகமக்களுக்கு எடுத்துரைக்கத் தேவையான அருள் வளங்களைத் தரும்படி இறைவா உம்மை மன்றாடுகிறோம் 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, April 18, 2023

பாஸ்கா காலம் மூன்றாம் ஞாயிறு 23.04.2023

பாஸ்கா காலம்  மூன்றாம் ஞாயிறு  23.04.2023


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
உயிர்ப்பின் காலம் மூன்றாம் ஞாயிறான இன்று இறைஅழைத்தல் ஞாயிறைச் சிறப்பிக்க, எம்மாவு சீடர்களைப் போல உயிர்த்த இயேசுவுடன் வழி நடந்து இத்திருப்பலியில் பங்கேற்க நம் ஆலயம் வந்துள்ள இயேசுவின் அன்புச்சீடர்களாகிய இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுயில் நம்பிக்கைக் கொள்ளவும், அவரின் சாட்சியாக இவ்வுலகில் வலம் வரவும் நம்மை அழைக்கின்றது. எம்மாவு சீடர்கள்போல் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்களாக வாழாமல், இறைநம்பிக்கையே நம் வாழ்வு என்பதை உணர்ந்திட வேண்டும். மனிதன் சுவாசிப்பதால் மட்டும் உயிர் வாழவதில்லை. மாறாக அவன் நம்பிக்கையைச் சுவாசிப்பதாலும் உயிர் வாழ்கிறான்.

எம்மாவு சீடர்களுடன் பந்தியமர்ந்தப் போது அங்கிருந்த அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்துப் பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். அப்போது அவர்கள் கண்கள் கண்டு கொண்டன. இயேசு எப்போதும் நம்மிடம் இருப்பதை ஆசீர்வதித்து நம்மைத் தன் நலன்களால் நிரப்பிக்கூடியவர். எனவே, குடும்பமாக இணைந்து இயேசுவிடம் “எங்களோடு தங்கும்” என அவரை மன்றாடி நம் வாழ்வில் எந்நிலையிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் வரத்தை இத்திருப்பலியில் உயிர்த்த இயேசுவிடம் மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக எருசலேம் நகரத்தில் வாழும் இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் இறைமகனின் உயிர்ப்பின் மகிமைக்கும் மகிழ்ச்சிக்கும் தாங்களே போதுமானச் சாட்சிகள் என்று சீடர்கள் ஆணித்தரமாகப் பதிவுச் செய்கின்றனர். பேதுருவின் வீறுக்கொண்ட இந்தச் சொற்பொழிவைக் கவனமுடன் கேட்டு உயிர்த்த இயேசுவின் மீது நமக்குள் விசுவாசத்தை உறுதிபடுத்திக்கொள்ள இன்றைய முதல் வாசகம் நம்மை அழைக்கின்றது.

இரண்டாம் வாசக முன்னுரை

வானகத்தந்தை ஆளைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குவதில்லை மாறாக அவரவர் செயல்களின்படி தீர்ப்பு வழங்குவார். இறையச்சத்தோடு வாழ அழைக்கிறார். மாசு மறுவற்ற ஆட்டுக்குட்டியைப் போன்ற இயேசுவின் விலையில்லாத இரத்ததால் நமக்கு மீட்பு கிடைத்தது. இறந்த அவரை உயிர்ப்பிக்கச் செய்து பெருமைப்படுத்தினார். இதனால் நாம் இயேசுகிறிஸ்துவை எதிர்நோக்கி இருக்க அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் உள்ளத்தில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம்பற்றி எரியவில்லையா அல்லேலூயா
 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! திருஅவை உள்ளத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவரின் உள்ளங்கள்  இறைவார்த்தையால் பற்றி எரியவும், திருப்பலி எனும் அருட்சாதனத்தால் இறைவனைக் கண்டு கொள்ளவும், அவரின் சாட்சிகளாக வளர வேண்டிய அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! எம்வாழ்வில் உம் வார்த்தைகளாலும், நீர் செய்யும் அற்புதங்களாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள நாங்கள் அனைவரும் இறைநம்பிக்கை மேன்மேலும் வளரவும், எம்மாவு சீடர்களை வழி நடத்தி அவர்களுடன் தங்கியது போல எம் இல்லங்களில் தங்தி எங்களுக்கும் உம் ஆசீர் வழங்கிட வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.

3.உம் வார்த்தைகளால் எம் உள்ளத்தைத் திறந்த எம் இறைவா! பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். உயிர்த்த இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே வழங்க முன் வரும் இளையோரை இறைவன் வழிநடத்த வேண்டுமென்று இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

4 உம்மைக் கண்டு கொள்ள எம் இதயத்தைத் திறந்த எம் இறைவா! தமிழகம் முழுவதும் விடுமுறை காலப் பள்ளியில் பங்குகொண்ட எம்பிள்ளைகளின் இதயத்தில் இறையச்சத்தையும், இறைவார்த்தைகளையும் அளித்து, அவர்களுடன் என்றும் தங்கி வழி நடத்தவும், இப்பணிக்காய் உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் நீர் நிறைவாய் ஆசீர்வதித்து எம் இளையசமுதாயம் உம்மை விட்டுவிலகாமல் இருக்க வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF