Monday, July 20, 2026

பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 26-07-026

 பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு 

What does Matthew 13:45-46 mean? | Bible Art

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1.அரசர்கள். 12:13, 16-19
உரோமையர் 8: 28 -30
மத்தேயு 13: 44-52

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 17-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு 'ஞானம்' மற்றும் 'மதிப்புமிக்கத் தேர்வு' குறித்த சிந்தனைகளை நமக்கு முன்வைக்கிறது. முதல் வாசகத்தில், சாலமோன் அரசர் இறைவனிடம் செல்வத்தையோ அல்லது நீண்ட ஆயுளையோ கேட்காமல், நீதியோடு ஆட்சி செய்யத் தேவையான 'ஞானத்தை' மட்டுமே கேட்கிறார்.
நற்செய்தியில் இயேசு, விண்ணரசை நிலத்தில் மறைந்திருக்கும் புதையலுக்கும், விலைஉயர்ந்த முத்துக்களுக்கும் ஒப்பிடுகிறார். அந்தப் புதையலைப் பெறுவதற்காகத் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்கத் துணிந்த அந்த மனிதனைப் போல, நாமும் இறைவார்த்தையையும் இறையாட்சியையும் நமது வாழ்வின் முதன்மையான செல்வமாகக் கருத அழைக்கப்படுகிறோம். உலகப் பொருள்கள் தரும் தற்காலிக மகிழ்ச்சியை விட, இறைவனின் அன்பு தரும் நிலையான மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கத் தேவையான ஞானம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (1 அரசர்கள் 3: 5, 7-12)

இளம் வயதில் அரசராகப் பொறுப்பேற்ற சாலமோனிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று ஆண்டவர் கேட்கிறார். சாலமோன் உலகச் செல்வங்களைக் கேட்காமல், நன்மை தீமை எதுவென்று ஆய்ந்தறியும் 'ஞானத்தை'க் கேட்கிறார். சாலமோனின் இந்தத் தாழ்மையான வேண்டுதலால் மகிழ்ந்த ஆண்டவர், அவருக்கு நிகரற்ற ஞானத்தை வழங்கியதை விவரிக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: உமது திருச்சட்டத்தின்மீது எத்துணைப் பற்றுக் கொண்டுள்ளேன்!
திபா 119: 57,72. 76-77. 127-128. 129-130

ஆண்டவரே! நீரே எனக்குரிய பங்கு; உம் சொற்களைக் கடைப்பிடிப்பதாக நான் வாக்களித்துள்ளேன். நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளைவிட எனக்கு மேலானது. பல்லவி
எனக்கு ஆறுதலளிக்குமாறு உமது பேரன்பு எனக்குக் கிடைக்கட்டும்; உம் ஊழியனுக்கு வாக்குறுதி அளித்தீர் அன்றோ! நான் பிழைத்திருக்கும்படி உமது இரக்கம் என்னை வந்தடையட்டும்; ஏனெனில், உமது திருச்சட்டமே எனக்கு இன்பம். பல்லவி
பொன்னிலும் பசும்பொன்னிலும் மேலாக உம் கட்டளைகளை விரும்புகின்றேன். உம் நியமங்களை எல்லாம் நீதியானவை என்று ஏற்றுக் கொண்டேன்; பொய்யான வழி அனைத்தையும் வெறுக்கின்றேன். பல்லவி
உம் ஒழுங்குமுறைகள் வியப்புக்குரியவை; ஆகவே, நான் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றேன். உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 28-30)

கடவுளிடம் அன்புகூருபவர்களுக்கும், அவருடைய திட்டத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் எல்லாமே நன்மைக்கே நடக்கும் என்று புனித பவுல் உறுதி கூறுகிறார். நாம் அவருடைய மகனின் சாயலுக்கு ஏற்ப உருமாற்றப்பட வேண்டும் என்பதே கடவுளின் திட்டம் என்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம். 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர் அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாம் முன்குறித்து வைத்தோரை அழைப்பவரும், தாம் அழைத்தோரைத் தமக்கு ஏற்புடையோராக்குபவருமான கடவுள், தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களையும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


2. சாலமோன் அரசனுக்கு நீர் அருளியதுபோலவே, உலகாளும் தலைவர்களுக்கும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களுக்கும் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள், தம் மகனின் சாயலுக்கேற்றவாறு இருக்க வேண்டுமெனக் கடவுள் முன்குறித்துள்ள மறைப்பணியாளர்கள் மற்றும் துறவியர் அனைவரும், தம் அழைத்தலுக்கு ஏற்ற வாழ்வை மேற்கொள்வும், மேலும் பல இளைஞர், இளம்பெண்கள் இறை அழைத்தலுக்கு செவிமடுத்து, பணிவாழ்வில் சிறக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் அனைவரும் எத்தகைய இடர்கள் நிறைந்த சூழலில் இருந்தாலும், இடுக்கண் நிறைந்த வாழ்வை மேற்கொண்டாலும், கடவுளிடம் அன்பு கூர்பவர்களோடு, அவர்கள் நன்மைக்காகவே ஆவியார் அனைத்திலும் ஒத்துழைக்கிறார் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாக, நம்பிக்கையுடனும் துணிவுடனும் செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், நிலத்தில் மறைந்திருக்கும் புதையலை கண்டுபிடிப்பவர் போலவும், விலை உயர்ந்த ஒரு முத்தைத் தனதாக்க  அனைத்தையும் இழக்கத் தயாராயிருப்பவர் போலவும், விண்ணரசை உரிமையாக்கிக்கொள்ள உம்மையும், உமக்குரியவற்றையும் மட்டுமே நாடுகின்ற நல்லுள்ளம் பெற்றவர்களாய் விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, July 13, 2026

பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு 19-07-2026

 பொதுக்காலம் 16-ஆம் ஞாயிறு 


இன்றைய வாசகங்கள்:-

சாலமோனின் ஞானம் 12: 13, 16-19
உரோமையர் 8: 26-27
மத்தேயு 13: 24-43

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 16-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு கோதுமையும் களைகளும் உவமையின் வழியாக இறைவனின் எல்லையற்ற பொறுமையையும் நீதியையும் நமக்கு எடுத்துரைக்கிறார். தீமையை உடனடியாக வேரோடு பிடுங்கி எறியாமல், கோதுமை மணிகள் வளர்ந்து பலன் தரும் வரை இறைவன் காத்திருக்கிறார். இது நாம் மனம் மாற அவர் தரும் வாய்ப்பு.
கடவுள் வலிமை மிக்கவராக இருந்தாலும், அவர் நீதியோடும் கனிவோடும் தீர்ப்பு வழங்குகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நமது பலவீனங்களில் தூய ஆவியானவர் நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். தீய எண்ணங்கள் என்னும் களைகள் நம் இதயத்தில் வளர இடம் கொடுக்காமல், கோதுமை மணிகளாக இறைவனின் களஞ்சியத்தில் சேரத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (சாலமோனின் ஞானம் 12: 13, 16-19)

ஆண்டவர் எல்லாவற்றிற்கும் மேலான அதிகாரம் கொண்டவர். இருப்பினும், அவர் தம் வலிமையைக் கடுமையாகப் பயன்படுத்தாமல், மிகுந்த கனிவோடும் பொறுமையோடும் நம்மை ஆளுகிறார். நாம் பாவம் செய்தாலும் மனம் வருந்தித் திரும்பி வர அவர் வழிவகை செய்கிறார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 86: 5-6. 9-10. 15-16
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர். 

என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். -பல்லவி

என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! -பல்லவி

என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 26-27)

நாம் எப்படிச் செபிக்க வேண்டும் என்று தெரியாமல் தவிக்கும்போது, தூய ஆவியானவர் நமது பலவீனங்களில் நமக்குத் துணையாக வருகிறார். அவர் சொல்வதற்கரிய பெருமூச்சுகளோடு நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே,  உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. “உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்” எனச் சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசிக்கப்பட்ட முதல் வாசக கூற்றுப்படி தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், நன்னம்பிக்கையால் நிரப்பப்பட்டு, எதிர்நோக்கினால் உந்தப்பட்டு, அன்புச்செயல்களில் ஈடுபட்டு, இறையரசை நோக்கிப் பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமையிலும் நீதியின் ஊற்ற்றாகிய உமது ஆற்றலிலும் நம்பிக்கை கொண்டு, போர்கள் இல்லாத உலகிற்காகவும் ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்கிற்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்கள் நல்லாட்சியை வழங்க நீர் தாமே அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றல் மிக்கவராகவும், கனிவோடு தீர்ப்பு வழங்குகிறவராகவும் நீர் இருப்பதால்-தான் நாங்கள் மன்னிப்புப்பெற்றவர்களாகவும், ஆசி பெற்றவர்களாகவும் வாழ முடிகிறது என்பதை உணர்ந்து, நாங்களும், அனைவருடனும் கனிவோடு நடந்துகொள்ளவும், எமது ஆற்றலை, ஆணவச் செயல்களுக்கும், வன்செயல்களுக்கும் பயன்படுத்தாமல் அன்புச்செயல்களுக்காகவும் அறச்செயல்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தவும், வன்கொடுமைகளுக்கு ஆளாவோருக்கு ஆறுதலாக, ஆதரவாக இருக்கவும் நல்மனம் தந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. துன்பங்களாலும் துயர்களாலும் நோய்களாலும் தனிமையினாலும், வறுமையினாலும் வேலையில்லா திண்டாட்டத்தினாலும், பொருளாதார பிரச்சனைகளாலும் கடன் தொல்லைகளாலும், வேதனையுற்று, வலுவற்ற நிலையில் உள்ளோரின் உள்ளங்களைத் துருவி ஆய்பவரும் துணைநிற்பவருமான தூய ஆவியாரை அனுப்பி, அவர்களது வாழ்வை, நீர் தாமே மேம்படுத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், சிறு கடுகாகவும், புளிப்பு மாவு போன்றவர்களாகவும் இருந்தாலும், விண்ணரசுக்கு நாங்களும் இன்றியமையாதவர்கள் என்பதை உணர்ந்து செயலாற்றவும், தீயோன் விதைக்கும் களைகளுக்கு இடம் கொடுக்காமல், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாகவே வாழ வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, July 7, 2026

பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

 பொதுக்காலம் ஆண்டின் 15ஆம் ஞாயிறு 14.07.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள் 

எசாயா 55:10-11
உரோமையர் 8: 18-23 
மத்தேயு 13: 1-23

திருப்பலி முன்னுரை :-

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 15-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய திருவழிபாடு "இறைவார்த்தை" என்னும் விதையைப் பற்றியும், அதை ஏற்கும் "இதயம்" என்னும் நிலத்தைப் பற்றியும் நமக்கு எடுத்துரைக்கிறது. வானிலிருந்து பொழியும் மழையும் பனியும் நிலத்தை நனைக்காமல் திரும்புவதில்லை என்று ஏசாயா இறைவாக்கினர் முதல் வாசகத்தில் கூறுகிறார். அதுபோலவே, ஆண்டவரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தையும் அவரது திருவுளத்தை நிறைவேற்றாமல் அவரிடம் திரும்புவதில்லை.
நற்செய்தியில், இயேசு விதைப்பவர் உவமையைக் கூறி, நம் இதயம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறது எனச் சிந்திக்க அழைக்கிறார். வழி ஓரமா? பாறை நிலமா? முட்செடி சூழ்ந்த இடமா? அல்லது நூறு மடங்குப் பலன் தரும் நல்ல நிலமா? நாம் உலகக் கவலைகளிலும் செல்வம் என்னும் மாயையிலும் சிக்கி இறைவார்த்தையை நசுக்கிவிடாமல், அதை ஆழமாக ஏற்றுப் பலன் தரும் நல்ல நிலமாக மாறத் தேவையான அருளை வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

வாசகமுன்னுரை 

முதல் வாசக முன்னுரை (ஏசாயா 55: 10-11)

மழையும் பனியும் நிலத்தை நனைத்து, பயிர்கள் வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும் உண்பவருக்கு உணவையும் தருகின்றன. அதுபோலவே, இறைவனின் திருவாயிலிருந்து வரும் வார்த்தையும் தமக்குரிய பணியைச் செம்மையாக நிறைவேற்றும் என ஆண்டவர் உறுதியளிக்கிறார். இறைவார்த்தையின் வல்லமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல் 

பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
திருப்பாடல்: 65:9.9-10.11-12.13 
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. பல்லவி
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிரு துவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். பல்லவி
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. பல்லவி
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங் களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 18-23)

இக்காலத்தில் நாம் அனுபவிக்கும் துன்பங்கள், இனி நம்மிடம் வெளிப்படப்போகும் மாட்சியோடு ஒப்பிடத்தக்கவை அல்ல என்று புனித பவுல் கூறுகிறார். படைப்பு அனைத்தும் அழிவுக்கு உட்பட்டிருந்தாலும், கடவுளின் பிள்ளைகளாகிய நாமும், ஒட்டுமொத்தப் படைப்பும் மீட்புக்காகவும் விடுதலையாகவும் ஏங்கித் தவிப்பதை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் பெற்றுக்கொள்ளும் எதிர்நோக்கோடு பயணிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றுரைத்த இறைவா, போர்கள் இல்லாத உலகிற்கான ஏக்கக்குரல்களையும், ஏற்றத்தாழ்வுகளற்ற சமூகத்துக்கான  பெரு-மூச்சுகளையும், வன்கொடுமை இல்லாத மாநிலத்துக்கான கதறல்களையும், கேட்கச் செவியுள்ளவர்களாக, இந்த உலகையும், எம்நாட்டையும், தமிழ் நாட்டையும் ஆட்சி செய்கின்றவர்களை மாற்றி, அனைவருக்குமான நல்லாட்சியை வழங்க அவர்களுக்கு நீர் தாமே ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அதீத அறிவியல் வளர்ச்சி, எந்திரமயமாக்கல், வணிகவயமாக்கல், நகரமயமாக்கல், கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம், நெகிழிப்பயன்பாடு போன்ற செயலகளால் “படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது” என்கிற பவுலடியாரின் கூற்று, இந்த நவீன உலகின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.  மாந்தர் அனைவரும் சமூகப் பொறுப்புடனும், சுற்றுச்சூழலைப் பேணுகிற அக்கறையுடனும் செயல்பட்டு, எங்கள் எதிர்கால சந்ததியரும் வாழத் தகுந்த உலகை விட்டுச்செல்ல   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்கிற வான்மழை தவறாது பெய்யவும், தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக்கூடிய பிரமாநில தடுப்பு அணைத் திட்டங்கள் தடுக்கப்படவும், வேளாண் பெருமக்கள் வாழ்வு சிறக்க வேண்டுமென்றும், ஏனைய தொழிலாளர்கள், உழைக்கும் வர்கத்தினர், விளிம்பு நிலையில் வாழ்வோர் ஆகிய அனைவருமே நிறை வாழ்வைப் பெற   வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இக்காலத்தில் படுகிற துன்பங்கள் எதிர்காலத்தில் வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என்பதை உணர்ந்து, துன்பதுயரங்களைக் கண்டு துவண்டுபோகாமல், துணிவுடன் செயலாற்றவும், பலன் தராத பாறை நிலமாகவோ, வழியோரமாகவோ, முட்புதராகவோ எங்கள் வாழ்க்கையை வீணாக்காமல், நூறு மடங்கு பலன்தருகிற நல்ல நிலமாக நாங்கள் திகழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

வருகின்ற ஞாயிறு 12.07.2026 நற்செய்தி மத்தேயு 13:1-23 விதை விதைப்பவன் உவமையை அடிப்படையாகக் கொண்ட ஒரு பழைய பாடல்

Monday, June 29, 2026

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

 பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

மத்தேயு 11:29-30 (TAOVBSI) - நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இரு - Bible App

இன்றைய வாசகங்கள்

செக்கரியா 9: 9-10
உரோமையர் 8: 9, 11-13
மத்தேயு 11: 25-30

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகக் கல்வியிலோ அல்லது அறிவிலோ தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொள்பவர்களுக்கு இறை இரகசியங்கள் மறைக்கப்படுகின்றன; ஆனால், எளிய உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கு அவை வெளிப்படுத்தப்படுகின்றன.

இறைவன் ஒரு போர் வீரனாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் அமைதியான அரசராக வருகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நாம் ஊனியல்புக்கு அடிமையாகாமல் ஆவியின் இயல்புக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். நம் வாழ்வின் சுமைகளை இயேசுவின் பாதத்தில் இறக்கி வைக்கவும், அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (செக்கரியா 9: 9-10)

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அரசர், போர் குதிரையின் மேல் ஏறி வரும் அதிகாரியாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் நீதியுள்ள, எளிமையான அரசராக வருவார் என்று செக்கரியா இறைவாக்கினர் முன்னறிவிக்கிறார். அவர் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுவார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 9, 11-13)

கிறிஸ்தவர்களாகிய நாம் ஊனியல்புக்கு (உடல் இச்சைகளுக்கு) அடிமைப்படாமல், இறைவனின் ஆவியால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகிறோம். இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய ஆவியானவர் நம்மிலும் குடிகொண்டிருக்கிறார் என்றும், அந்த ஆவியின் வழியாகவே நாம் நிறைவாழ்வு பெறுகிறோம் என்றும் கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர் ஆகிய ஏனைய தலைவர்களும், இன்றைய முதல் வாசகம் முன்வைக்கின்ற தாழ்ச்சிநிறை தலைமைப் பண்புடன் வாழவும், பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், எளிமையின் அரசராம் உம்மை, எங்கள் வாழ்வில் பின்பற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சூழ்ந்திருக்கும் போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பலவகை அவலங்களால் அவதியுறும் இவ்வுலகிற்கு, போர்க் கருவிகள் இல்லாமல் போகும். ஆண்டவராகிய அரசரே அமைதியை அறிவிப்பார் என்கிற செக்கரியாவின் இறைவாக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்றும், இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள் பொறுப்புடன் எம்மை ஆளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று மகிழ்ந்த இயேசுவே, கல்வி ஆண்டின் முதல் பருவத்தில் இருக்கும் எம்பிள்ளைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மெய்யறிவையும், நிறைஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும், இளையோருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றுரைத்த இறைவா, வறுமை, கடன் தொல்லை, பசி, பிணி, பிணக்கு, பிரிவு, நோய், முதுமை, தனிமை, துன்பம், துயரம் எனப் பல்வேறு சுமைகளினால் அழுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும், நீர் தாமே இளைப்பாறுதலாகவும், அரணாகவும், பலமாகவும் இருந்து துணைநிற்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்கவும், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்து, உமக்கும் பிறருக்கும் ஏற்புடையவர்களாக வாழ்ந்து, கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

Monday, June 22, 2026

பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026

பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2 அரசர் 4:8-11,14-16அ
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10:37-42

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருவழிபாடு இரண்டு முக்கியமான கருத்துகளை நமக்கு முன்வைக்கிறது: விருந்தோம்பல் மற்றும் சீடத்துவத்தின் விலை. முதல் வாசகத்தில், இறைமனிதர் எலிசாவிற்குத் தாராள மனதோடு விருந்தளித்த சூனேம் ஊர்ப் பெண்மணி, அதன் வழியாகக் கடவுளின் ஆசீரையும் மகப்பேற்றையும் பெறுகிறார். நற்செய்தியில் இயேசு, "தன்னை விட மேலாக எவரையும் அன்பு செய்பவர் எனக்குத் தகுதியற்றவர்" என்று கூறி, ஒரு சீடராக இருப்பதன் ஆழமான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறார்.

அதே சமயம், ஒரு சீடருக்குச் செய்யப்படும் மிகச் சிறிய உதவி கூட (ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் போல) கைம்மாறு பெறாமல் போகாது என்று இயேசு நமக்கு ஊக்கமளிக்கிறார். நாம் கிறிஸ்துவின் பெயரால் பிறரை வரவேற்கிறோமா? நமது விருந்தோம்பல் தாராளமாக இருக்கிறதா? கிறிஸ்துவுக்காகச் சிலுவையைச் சுமக்க நாம் தயாரா? எனச் சிந்திக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. இத்திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்கத் தடையாக இருக்கும் நம் சுயநலங்களைக் களைந்து, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (2 அரசர்கள் 4: 8-11, 14-16a)

சூனேம் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வந்தப் பெண்மணி, இறைவாக்கினர் எலிசாவைக் கடவுளின் மனிதராகக் கண்டு, அவருக்குத் தாராளமாக விருந்தளித்து, தங்குவதற்கு இடமும் கொடுக்கிறார். அந்த விருந்தோம்பலின் பயனாக, குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திய அந்தப் பெண்மணிக்கு ஒரு மகன் பிறப்பான் என்று எலிசா வாக்குறுதி அளிக்கிறார். பிறருக்குச் செய்யும் உதவி ஒருபோதும் வீண் போகாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 6: 3-4, 8-11)

திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவுடன் இறந்து, அவரோடு புதிய வாழ்வு பெற உயிர்த்தெழுந்திருக்கிறோம் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் இனி பாவத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாகக் கிறிஸ்துவில் கடவுளுக்காக வாழ்பவர்கள் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும், திருத்தந்தை லியோ தொடங்கி, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் வரை, நாங்கள் அனைவருமே, சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக அல்லாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்களாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பல வகைகளில் அங்கலாய்க்கிற எம் உலகுக்காக மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், நல்லாட்சி நல்கவும், அமைதி நோக்கி எம்மை வழிநடத்தவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகம் எங்களுக்கு உணர்த்துகிற பாடத்தைக் கற்றவர்களாய், எங்களுக்காக உழைக்கிற இறையடியார்களையும், அருள் பணியாளர்களையும், துறவியரையும், நாங்கள் மாண்புடன் நடத்தி, மகிழ்வுடன் பணிந்து, உவப்புடன் சேவிக்க வேண்டுமென்றும், அதற்குக் கைம்மாறாக உம்முடைய பேரருளை அபரிவிதமாய் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், இறந்த அடியார்கள் அனைவருக்கும் நீர் தாமே நிலைவாழ்வு அருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். அதே நேரம், இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் ஒவ்வொருவரும், பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்களாகவும், எங்களது தினசரி சிலுவைகளை சுமந்து உம்பின்னே நடக்கிறவர்களாகவும் திகழ வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அனைத்தையும் அனைவரையும் விட உம்மை அன்பு செய்பவர்களாகவும், உம்மை ஏற்றுக்கொள்வதற்காக அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாகவும், உம் சீடர் என்பதால் மிகச் சிறியோருக்கும் உதவுபவர்களாகவும் இருந்து, உமக்கு ஏற்புடையவர்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 
https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, June 14, 2026

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 21.06.2026

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 21.06.2026
12th Sunday in Ordinary Time (A) – Comboni2000 – Duc in Altum

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். "அஞ்சாதீர்கள்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகம் நமக்குத் தரும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. "உங்கள் தலைமுடி எல்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது" என்று சொல்லும் அளவுக்கு இறைவன் நம் மீது அக்கறை கொண்டுள்ளார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இறைவன் தன் பக்கம் "வலிமை மிக்க வீரராக" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில் ஆதாம் வழியாய் வந்த பாவத்தைவிட, கிறிஸ்து வழியாய் வந்த அருள் மேலானது எனப் பவுல் அடியார் விளக்குகிறார். நாம் உண்மையை உரக்கச் சொல்லவும், கிறிஸ்துவை உலகறிய அறிக்கை செய்யவும் அழைக்கப்படுகிறோம். அந்தத் துணிவைப் பெறவும், இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (எரேமியா 20: 10-13)

இறைவாக்கினர் எரேமியா தமக்கு நெருக்கமானவர்களாலேயே அச்சுறுத்தப்படுகிறார். சுற்றிலும் அச்சுறுத்தல் இருந்தபோதும், அவர் கலங்கவில்லை. ஆண்டவர் தம் பக்கம் இருக்கும்போது தம்மைத் துன்புறுத்துவோர் வீழ்வர் என்று நம்புகிறார். ஏழைகளின் உயிரைக் காக்கும் இறைவனைப் போற்றிப் புகழும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34
1.ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 12-15)

ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார்”.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்” என்கிற உமது வாக்குறுதியில் நிலைத்திருந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், மக்கள் முன்னிலையில் உம்மை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமல்லாமல், உமக்கு ஏற்றவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘சுற்றிலும் ஒரே திகில்!’ எனத்தொடங்கிய இன்றைய முதல் வாசகக்கூற்றை உண்மையாக்குகிற நிலையில் இருக்கும் எம் உலகுக்காகவும், உலகத் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி எங்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.” என்கிற உமது வாக்கின்படி, நாங்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையோடு, அச்சம் தவிர்த்து வாழவும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்கிற நம்பிக்கையோடு வாழ்வை நடத்தவும், வாழ்வின் சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பதும்; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒளிவு மறைவற்ற, ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சி, இருளின் செயல்களை விட்டொழித்து ஒளியின் மக்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, June 7, 2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு - 14-06-2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு

https://miro.medium.com/v2/1*SFD4WntCSlLLnyoj-1pOSw.jpeg

இன்றைய நற்செய்தி வாசகம்

விடுதலைப் பயணம் 19: 2-6a
உரோமையர் 5: 6-11
மத்தேயு 9: 36- 10: 8

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில், திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். அவர்கள் "ஆயன் இல்லாத ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டிருந்தனர்" என்று வாசிக்கிறோம். இந்த உலகளாவிய ஆன்மீகப் பசி தீரவும், மக்களை நல்வழிப்படுத்தவும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்பி வைக்கிறார்.
இயேசுவின் அந்த அன்புப் பணி இன்றும் தொடர வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களாக அனுப்பப்பட்டுள்ளோம். "இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய் வழங்குங்கள்" என்ற கிறிஸ்துவின் கட்டளைப்படி, நம்மிடமுள்ள திறமைகளையும், அருளையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இந்த மேய்ப்புப் பணியில் நாம் ஆர்வத்துடன் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 19: 2-6a)
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுபட்டுச் சீனாய் பாலைவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆண்டவர் மோசே வழியாகத் தமக்கு ஒரு 'புனிதமான மக்களினத்தை' உருவாக்க விரும்புகிறார். "நீங்கள் என் சொல்லுக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், எல்லா மக்களுள்ளும் நீங்களே எனக்குச் சொந்தமான மக்களாய் இருப்பீர்கள்" என்று ஆண்டவர் கூறும் வாக்குறுதியை இவ்வாசகத்தில் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1. அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

2. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

3. ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 6-11)

நாம் பாவிகளாய் இருந்தபோதே, நமக்காகத் தம் உயிரைத் தந்து கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் தகுதியற்றவர்களாய் இருந்தும், கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என்ற மேலான உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆண்டின் பொதுக்காலத்தை மீண்டும் தொடங்கியிருக்கும் தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், இன்றைய பதிலுரைப் பாடலில் அறிக்கையிட்டதுபோல, “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!” என்கிற உணர்வோடு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்கள்மேல் பரிவு கொண்ட இயேசுவே! அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி வழிநடத்துகிற நல்ல தலைமையின்றி தவிக்கின்ற இவ்வுலகிற்கு, நல்ல தலைவர்களையும், ஏற்கனவே இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்களுக்கு நல்புத்தியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் நீங்களே என் தனிச் சொத்தாவீர்கள்” என்கிற உமது வாக்குத்தத்தத்தின் படி நாங்கள் அனைவரும் உமக்குரிய மக்களாகவே வாழவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்கியுள்ள எம்பிள்ளைகளும், இளையோரும், உமக்கும், பிறருக்கும் பணிந்திருந்து, பயனுள்ள செயல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, உயர்நிலை அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்று அங்கலாய்த்த இயேசுவே!  அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய உம்மிடமே மன்றாடுகிறோம். தேவ அழைத்தல் பெருகும்படியாகவும், அழைக்கப்பட்டோரில் பலர் தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கப்பட்டோர் அனைவரும் பிரமாணிக்கத்தோடு வாழவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்களை மாண்புடன் நடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற உம் அறைகூவலுக்கு செவிசாய்த்து, மனம் மாறி நற்செய்தியை நம்புவதோடு நில்லாமல், நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் ஏற்புடைய வாழ்வை மேற்கொண்டு, கொடையாகப் பெற்றதை, கொடையாகவே வழங்குகிற நல்மனது பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF