Monday, October 21, 2024

 ஆண்டின் பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு - ஆண்டு 2

மறைபரப்பு ஞாயிறு
Bible Skit Healing of the Blind Man

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எரேமியா 31:7-9
எபிரேயர் 5:1-6
மாற்கு 10:46-52

திருப்பலி முன்னுரை:

பார்வையில்‌ பயணிக்க விரும்பும்‌ அன்பு சகோதரர்‌ சகோதரிகளே, இன்றைய திருவழிபாடு நமக்குச் சிறப்புச் செயல்‌பாட்டளர்களாக நாம்‌ வாழ அழைப்பு விடுக்கிறது. தந்தை தம்‌
தலைப்பிள்ளையைப்‌ பேணிப்‌ பாதுகாப்பது போல நமது வானகத் தந்தையும்‌ நம்மை ஒன்றாகக்‌ கூட்டி சேர்த்து கரிசனையுடன்‌ காத்து வருகின்றார்‌. அவர்‌ தம்‌ மகன்‌ இயேசுவை நமக்குத்‌ தன்னிகரற்ற தலைமைக்‌ குருவாக வழங்கியுள்ளார்‌. அவர்‌ வழியாக நம்மைப்‌ பல்வேறு இன்னல்கள்‌ மற்றும்‌ இடையூறுகளிலிருந்து விடுதலை பெறும்‌ விதத்தில்‌
வழிநடத்தி வருகிறார்‌.
தேவையிலிருக்கும்‌ பார்வையற்றவரான பர்த்திமேயுவை இயேசு தம்மிடம்‌ அழைத்து வரச்‌ செய்து, அக - புற தடைகளை அகற்றி, அவருக்குப்‌ பார்வையளித்துப் புதுப்‌பாதையைக்‌ காட்டுகிறார்‌. பார்வையற்றவரிடமிருந்த நம்பிக்கை அவரைக்‌ குணப்படுத்தியதுபோல நாமும்‌ ஆண்டவர்‌ இயேசுவிடம்‌ எல்லாச்‌ சூழ்நிலைகளிலும்‌ நம்பிக்கை கொள்வோம்‌. அவரிடமிருந்து பெறும்‌ அனைத்து நலன்களையும்‌ பிறரோடு பகிர்ந்து வாழ நல்மனம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

வாசக முன்னுரை :

முதல்‌ வாசக முன்னுரை :

வளமையோடும்‌ வலிமையோடும்‌ நாம்‌ நாளும்‌ வாழ நிறைவு நோக்கி நம்மை வழிநடத்துபவர்‌ நம்‌ ஆண்டவர்‌. அவரது செயலை நாம்‌ மகிழ்ந்து ஆர்ப்பரிக்க வேண்டும்‌. துன்பத்தில்‌ ஆறுதலும்‌ வறுமையில்‌ வளமையும்‌ வழங்கிச் சீரான பாதையில்‌ நம்மை நடத்தும்‌ ஆண்டவரைப்‌ புகழ்ந்தவண்ணம் இன்றைய முதல்‌ வாசகத்தைக்‌ கேட்போம்‌...

பதிலுரைப் பாடல்

திபா 126: 1-2. 2-3. 4-5. 6
பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்.
1 சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவுக் கண்டவர்போல இருந்தோம். அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; -பல்லவி

2 "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். -பல்லவி

3 ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். -பல்லவி

4 விதை எடுத்துச் செல்லும்போது-செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது-வரும்போது-அக்களிப்போடு வருவார்கள். -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

ஆரோனைத்‌ தலைமைக்‌ குருவாக ஆண்டவர்‌ தேர்ந்தெடுத்தார்‌. இவர்‌ வலுவின்மைக்கு ஆளானவர்‌. இவர்‌ கடவுள்‌ விதித்த நியமங்களின்படி பணி செய்யக்‌ கடமைப்பட்டிருக்கிறார்‌. இயேசுவைக்‌ கடவுள்தான்‌ தலைமைக்‌ குருவாக அழைத்து மேன்மைப்‌ படுத்தியுள்ளார்‌. இந்த இயேசு மெல்கிசெதேக்கின்‌ முறைப்படி என்றென்றும்‌ குரு என்பதை விளக்கும்‌ இன்றைய இரண்டாவது வாசகத்திற்குச்‌ செவிசாய்ப்போம்‌. சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்ற இரண்டாம் வாசகம் அழைக்கின்றது. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்:

மறைபரப்பு ஞாயிறு சிறப்பு மன்றாட்டுகள்:

ஒவ்வொரு மன்றாட்டிற்குப் பிறகும், 'ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்' என்று சொல்லவும்.

அகில உலகத் திருஅவைக்காகவும் அவர்தம் தலைவர்களுக்காகவும் மன்றாடுவோம்.

1. கிறிஸ்துவின் அன்பை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக வாழும் பேரார்வத்தை மரபுரிமையாகப் பெற்றிருக்கும் நமது திருத்தந்தை, கர்தினால்கள், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினருக்காக மன்றாடுவோம். இவர்கள் ஒளிக்கு சான்று பகிர்ந்திட தேவையான உதவியினையும் நல் உடல் உடல்நலத்தையும் தந்து அவர்களை வலிமைப்படுத்த இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

மறைபரப்புப் பணியாளர்களுக்காகவும், மறைப்பணித் தளங்களுக்காகவும் மன்றாடுவோம்.

2. ஒவ்வொரு மறைத்தூது தளத்திலும் மறைத்தூதுப் பணியை மேற்கொள்கின்ற மறைத்தூதுப் பணியாளர்களுக்காகவும் மன்றாடுவோம். அவர்கள் உமது வார்த்தையை முதல் முறையாகக் கேட்பவர்களிடம் உம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பையும் இரக்கத்தையும் கருணையையும் அனுபவிக்கவும் பகிரவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

மறைபரப்பு பணிக்கு உதவிபுரியும் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.

3. எங்கள் நல்லாயனே! மறைத்தூது பணிக்காகத் தாராளமாகப் பங்களிப்புச் செய்யும் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். ஆரோக்கியத்தையும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி நிறைந்த நல்வாழ்வையும் அவர்கள் அனுபவிக்கும்பொருட்டு அவர்களை மேன் மேலும் ஆசிர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம். மேலும் எல்லாவிதமான அடக்கமுறைகள், தீமைகள் மற்றும் துன்பங்களிலிருந்து பாதுகாத்திடவும் இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.


இத்திருப்பலிக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் நம் அனைவருக்காகவும் மன்றாடுவோம்.

4. உமது அன்பையும், இரக்கத்தையும், கருணையையும் அனுபவிக்க எங்களுக்கு உதவிபுரியும். எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்தும்; நாங்கள் புரிகின்ற சின்னஞ்சிறிய செயல்களிலும், பேச்சிலும் உம்மைப் பறைசாற்றவும் எமக்கு உதவும். சிறப்பாக வாழ்வின் இருள் சூழ்ந்துள்ள இடங்களில் உமது ஒளியைத் தாங்குபவர்களாக எம்மை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.

இறந்துபோன மறைபரப்பு பணியாளர்களுக்காக உம்மை மன்றாடுவோம்.

5:உமது திராட்சைத் தோட்டத்தில்  ப யாற்றும்போது, மரித்த மறைபரப்புப்  பணியாளர்களுடைய, சிறப்பாக, சரியான உணவும்  மருந்தும் எவ்வித அடிப்படை வசதிகள் ஏதுமின்றி,  நோய்வாய்பட்டு, சிறையில் இருந்தவர்களுடைய  ஆன்மாக்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம்.  அவர்களது மறைத்தூதப் பணிக்கான ஆர்வத்திற்கு  கைமாறு அளித்து, உமது வானக அரசில் உம்மோடு  இருக்க, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  

 ஆண்டவரே! எம்மன்றாட்டைக் கேட்டு எம்மறைபரப்புப் பணியை வலிமைப்படுத்தியருளும்.
 
            

அல்லது


 1.அனைத்தையும் படைத்தாளும் எம் இறைவா!   எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவியர்கள், பொதுநிலையினர்   திருஅவையோடு மறைப்பணியச் சிறப்புடன் செய்யத் தேவையான ஞானத்தையும்,  விவேகத்தையும் பெற்றிடவும், சுயநலன்களை நோக்காமல், இயேசுவைப் பின்பற்றவும், மற்றவர்களுக்குச் சேவை புரியவும் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்கள் நம்பிக்கையான எம் இறைவா! நமக்கு எதிராக இருப்பவர்களைக் கடவுள் நம் சார்பாக மாற்றுவார். நம் குடும்பம், நண்பர்கள், ஏன் இந்த உலகமே நமக்கு எதிராக இருந்தாலும், நாம் கடவுளை இறுகப் பற்றிக்கொண்டால் அவர் எல்லாவற்றையும் நம் சார்பாக மாற்றிப்போடுவார் என்ற மேலான நம்பிக்கையும், மேலானதொன்று கிடைக்கும்போது கீழானதைத் துறக்க வேண்டும் என்ற உயரிய எண்ணங்களைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.ஏழைகளின் நண்பனே எம் இறைவாதேவையான இறைஅழைத்தல் தந்திடவும், அனைத்து கிறிஸ்தவர்களும் நற்செய்தியை அறிவுக்கும் கருவியாக மாறவும், அதற்குதேவையான ஞானத்தையும், மன உறுதியும் தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே சுயத்தை இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீயச் சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி உமது சாட்சிகளாய் வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எமக்கு இரங்கும் தாவீதின் மகனே, எம் இறைவா! தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுதலைப் பெறவும், வருங்காலத்தில் எம்சந்ததினர் நற்சுகமும், மனபலமும், பொருளாதார வளர்ச்சியும் பெற்று இவ்வுலகில் உமது செய்வீரர்களாய் பணிசெய்திட அவர்களுக்கு ஞானத்தையும், திடமான நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, October 14, 2024

பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு



கடந்த ”500” வாரங்களாக எம்மோடு பயணித்த பார்வையாளர்கள் அனைவருக்கும்  அன்பின்மடல் சார்பில் எம்இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகுக...

இணைந்து செயல்படுவோம்… இறையரசை அறிவிக்க...

 பொதுக்காலம் ஆண்டின் 29ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 53:10-11
எபிரேயர் 4:14-16
மாற்கு 10:35-45

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி உண்மையான சீடத்துவம், பிறருக்காகப் பணி செய்தல் ஆகியவற்றை மையப்படுத்துகிறது. எசாயா ஆன்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழ முடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்குப் பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதைக் காண்கிறோம்.

இயேசு சீடர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது என்பதையே விவாதித்து வருகிறார்கள். ஆனால் மனுமகனோ பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார். தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடை புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வதிலும், தாழ்ச்சிளோடு ஆறுதல் சொல்வதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம். அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.

இன்று நாம் மறைப்பரப்பு ஞாயிறுவை கொண்டாடுகிறோம். கிறிஸ்துவுக்காகப் பணி புரிய அர்ப்பணித்துள்ளவர்களுக்காகச் செபிக்கவும், பொருளுதவி, மற்ற உதவிகளைச் செய்ய அழைக்கப்படுகிறோம். துன்புறும் பணியாளர்களாகக் களத்தில் மக்கள் பொருட்டுத் துன்புறும் அவர்களுக்குத் துணை நிற்போம். செபத்தால் அவர்களை ஊக்குவிப்போம். அவர்கள் கரங்களை வலுப்படுத்துவோம்.அவர்கள் தேவைகளை நிறைவு செய்து பணி சிறக்க உதவுவோம்

வாசகமுன்னுரை:

முதல் வாசகம்:

இன்றைய முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயாவிடமிருந்து எடுக்கப்பட்டது. எசாயா இறைவாக்கினர் துன்புறும் ஊழியனைப் பற்றி நான்கு இடங்களில் குறிப்பிடுகின்றார். அவர் சிறுமைப்படுத்தப்பட்டலும் வாயைத் திறவாதிருந்தார். அவர் தம் உயிரைக் குற்ற நீக்கப்பலியாகத் தந்தார். ஆண்டவர் திருவுளம் அவர் கையில் சிறப்புறும் என்ற இயேசுவின் பாடுகளைப் பற்றி முன்னுரைக்கின்றார். இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 33: 4-5. 18-19. 20,22
பல்லவி: உம்மையே நாங்கள் நம்புவதால், உம் பேரன்பு எம்மீது இருப்பதாக!

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. -பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

இரண்டாம் வாசகம்:

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் நமது தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவுக்கூடிய அருளைக் கண்டையவும் அருள் நிறைந்த இறைஅரியணைத் துணிவுடன் அணுகிச் செல்வோம். இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி - மாற்‌ 10:45

மானிட மகன்‌ தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத்‌ தொண்டு ஆற்றுவதற்கும்‌ பலருடைய மீட்புக்கு ஈடாகத்‌ தம்‌ உயிரைக்‌ கொடுப்பதற்கும்‌ வந்தார்‌. அல்லோயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

திருச்சபைக்காக:
உம் பேரன்பால் எமக்குத் துணையும் கேடயமும் இருக்கின்ற எம் இறைவா! எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரிவதில் தான் தலைமைப் பண்பு அடங்கியிருக்கின்றது என்ற இயேசுவின் அழைப்பை உணர்ந்தவர்களாய் கிறிஸ்துவின் சீடர்களாய் இவ்வுலகில் வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்காக:

உம் பேரன்பால் பூவுலகை நிறைந்துள்ள எம் இறைவா! சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப் போலப் பணிகளைச் செய்திடவும், சிலுவையின்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, அவரின் உடனிருப்பை உணர்ந்து வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டு தலைவர்களுக்காக:

உம் பேரன்பால் உறவுகளைப் பேணிக்காக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்து பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றிக் கவனம் செலுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

துன்புறும் திருஅவைக்காக:
உம் பேரன்பால் அனைவரையும் வழிநடத்தும் அன்புத்தந்தையே! இயேசுகிறிஸ்துவின் சீடர்கள் என்பதால் மத்தியகிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கொடுமைகளுக்கு ஆளாகி நாட்டையே விட்டு வெளியேறி நாடற்றவர்களாக, எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தால் தவிக்கும் எம் திருஅவை கண்ணோக்கும். அவர்கள் எந்தப் பயமின்றி இவ்வுலகில் வாழவும் ஏற்றவேளையில் உதவுக்கூடிய அருளைக்கண்டையவும் அருள்புரியமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மறைப்பரப்புப் பணிக்காக:
நல்ல முயற்சிகளுக்கு நற்பலன் அளிக்கும் அன்பின் இறைவா! மறைபரப்பு ஞாயிறைக் கொண்டாடும்‌ இத்தருணத்தில்‌ படைப்பிற்கெல்லாம்‌ நற்செய்தி அறிவிக்க வேண்டும்‌ என்னும்‌ இயேசுவின்‌ கட்டளைப்படி நற்செய்தி அறிவிப்புப்‌ பணி தொய்வின்றி நடைபெற, மக்கள்‌ மனங்களில்‌ ஆக்கமும்‌, ஊக்கமும்‌ அளித்து உம்‌ பணிக்கென ஒற்றுமையாக உழைக்கவும்‌ உதவிகள்‌ செய்திடும்‌ நல்மனமருளிட ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.


www.anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, October 8, 2024

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1சாலமோன் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்தி செல்வந்தரின் மனநிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. சாலமோன் கடவுளிடம் தனக்கு ஞானத்தைக் கேட்டார். ஏனென்றால் ஞானம் கடவுள் தரும் கொடையாகும். ஞானம் கிடைத்துவிட்டால் அத்துடன் அனைத்து செல்வங்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையின் ஒளியில் நடப்பதே சாலச்சிறந்ததாகும்.

இன்று இயேசுவிடம் வந்த செல்வந்தன் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய விரும்பினான். ஆனால் இயேசுவோ ‘கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது’ என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றார். எனவே நிலைவாழ்வுக்குச் செல்லப் பற்றற்ற வாழ்வே தேவை என்பதை உணர்ந்து பரம்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுவோம். பின்பு வந்து பாரும் என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம்.

கடவுள்‌ சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும்‌, புத்தியையும்‌ கொடுத்தார்‌. நாமும்‌, அழிவைத்‌ தரும்‌ செல்வத்திற்கு அடிபணியாமல்‌, அழியா வாழ்வைத்‌ தரும்‌ ஞானத்தைப்‌ பெற ஆவல்‌ கொள்வோம்‌. ஞானத்தைக்‌ கற்று, நெறிபிறழாது நடந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்வோம்‌. இறையருளை நாடி அருள்தரும்‌ திருப்பலியில்‌ இணைவோம்‌.

வாசகமுன்னுரை:

முதல்‌ வாசக முன்னுரை :

விலையுயர்ந்த மாணிக்கக்‌ கல்லும்‌, செல்வமும்‌ ஞானத்தின்‌ முன்‌ ஒன்றுமில்லை. ஞானமே உன்னதமானது - ஞானத்தைப்‌ பெற, ஞானத்தைத்‌ தேடுவோர்‌ ஞானத்தோடு எல்லா நலன்களையும்‌ பெற்று நிறைவு காண்பர்‌ என்பதை இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்குக்‌ சுட்டிக்காட்டுகின்றது. அதிகாரத்தைவிட மேலானது செல்வத்தைவிட மேலானது உடல்நலத்தைவிட, அழகைவிட மேலானது ஞானம். அது வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன். கடவுளுடைய உயிருள்ள வல்லமையுள்ள இறைவார்த்தைக்குக்‌ கவனமுடன்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 90: 12-13. 14-15. 16-17

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

1. எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

2. காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி

3. உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்குக் கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இறைவார்த்தை அது வெற்றுப்‌ பேச்சல்ல, உயிருள்ள கடவுளின்‌ சொற்கள்‌. வெற்று வார்த்தையல்ல இறைவார்த்தை, அது வாழ்வு தரும்‌ வார்த்தை. வெறும்‌ வெற்று மொழியல்ல இறை வார்த்தை, அது பேரன்புமிக்கக் கடவுளின்‌ அன்பு மடல்‌, என எடுத்தியம்பும்‌ கடவுளுடைய ஆற்றல்மிக்க இறைவார்த்தைக்குக்‌ கவனமுடன்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

திருச்சபைக்காக:
ஞானமென்னும் அருட்கொடைகளைச் சாலமோனுக்குக் கொடுத்த எம் இறைவா! எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்காக:
என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசுகிறிஸ்துவை எம்நிலைவாழ்வாகப் பெற்றவும், நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களைத் தூண்டவும், இறைவார்த்தையால் ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டு தலைவர்களுக்காக:
உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்துத் தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்காக விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றிப் பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்து நற்பெயர் ஈட்ட முயலவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சமுதாயத்திற்காக:
அகமுவந்தழைக்கும் அன்புத்தந்தையே இறைவா! இயேசுகிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செல்வங்களைப் பெற்றவர்களாய் வலம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்றக் காலத்தில், ஏற்ற இடத்தில் ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பியங்களுக்காக:
உறவின் ஊற்றே உன்னத இறைவா! எங்கள் பங்கில் உள்ள எல்லா அன்பியக் குடும்பங்களிலும் செபமாலைப் பக்தி முயற்சி வளரவும், அன்னை மரியாளின் பரிந்துரையைப் பெற்று, எங்கள் பங்கைச் சேர்ந்த எல்லா நிறுவனங்களும், பக்தச் சபைகளும் வளர்ந்துச் சிறந்த பலனை வெளிபடுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding

Wednesday, October 2, 2024

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 27ஆம் ஞாயிறு

இன்றைய வாசகங்கள்

1. தொடக்க நூல் 2:18-24
2. எபிரேயர் 2:9-11
3.மாற்கு 10: 2-16

திருப்பலி முன்னுரை:

இயேசுகிறிஸ்துவின் அருமையான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் ஆண்டின் 27ஆம் ஞாயிறைக் கொண்டாடி மகிழ அன்புடன் அழைக்கின்றோம். திருமணம் என்னும் திருவருட்சாதனத்தைப் பற்றி இன்றைய வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. ஒர் ஆணும் பெண்ணும் சேர்ந்த வாழ்வதைச் சமூகம் அங்கீகரிக்கும்போது திருமணம். அதே திருமணம் திருச்சபை அங்கீகரிக்கும்போது அது திருவருட்சாதனம். குடும்பம் என்னும் குட்டித் திருச்சபை நலமாக இருந்தால் தான் உலகம் நன்றாக இருக்கும்.
கணவன் மனைவி இவர்களிடையே நிலவும் சமத்துவம் அன்பின் சின்னங்கள். இறைமகன் இயேசு அழகாகத் தெளிவாக வலியுறுத்துவதும் இதுவே. கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும் என்ற வார்த்தை தான். எனவே நாம் திருமணத்தில் நம் அழைப்பை ஏற்றுக்கொண்டு இறுதிவரைப் பிரமாணிக்கத்துடன் வாழவும், நம் குடும்பங்கள் திருக்குடும்பங்களாகத் திகழந்திடமாக அனைவரும் ஒருமனத்தவராய் திருப்பலியில் இணைந்திடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் கடவுள் முதல் படைப்பு நிகழ்வில் மனிதர்களை ஆணும், பெண்ணுமாகக் கடவுள் தன் சாயலில் படைக்கின்றார். இரண்டாம் நிகழ்வில் முதலில் ஆணும்(ஆதாமும்) இரண்டாவதாகப் பெண்ணும் (ஏவாளும்)
படைக்கப்படுகின்றனர். திருமண உறவு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடப்பது என்றும், இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட உறவு என்றும், இந்த உறவில் இறைவனே சான்றாக இருக்கின்றார் என்றும், இந்த உறவினால் ஆண்-பெண் உறவிலே பெரிய மாற்றம் இருக்கிறது என்றும் முன்வைக்கிறது தொடக்க நூல். இதனைக் கவனமுடன் வாசிக்கக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 128: 1-2. 3. 4-5. 6
பல்லவி: உம் வாழ்நாளெல்லாம் ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக!

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்! உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசிப் பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! பல்லவி
4.நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காண்பீராக! இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இரண்டாம் வாசகத்தில் ‘கடவுள் எல்லாவற்றையும் தமக்கென்று தாமே உண்டாக்கினார்.' ஆக, படைப்பு அனைத்தும் கடவுளுக்காக அவரின் திருவுளம் நிறைவேற்றுவதற்காகப் படைக்கப்பட்டது. படைப்புப் பொருளான மனிதர் மற்றவர்கள்மேல் ஆட்சி செலுத்த அல்லது அடிமைப்படுத்த அவர்களுக்கு உரிமை இல்லை. 'துன்பங்கள்மூலம் நிறைவுள்ளவராக்கினார்.' துன்பம் என்பது மனித குலத்தின் குறை அல்லது பலவீனம் அல்ல. இந்த உணர்வைத் தான் கடவுளின் மகனும் தன்மேல் சுமந்து கொண்டார். இந்தத் துன்பம் என்ற உணர்வைத் தான் இயேசு மீட்பு கொண்டுவரும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டார். இக்கருத்துக்களைப் புனித பவுல் எபேசியர்க்கு எழுதிய திருமுகத்தை வாசிக்கக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டுள்ளோம் என்றால் கடவுள் நம்மோடு இணைந்திருப்பார்; அவரது அன்பு நம்மிடம் நிறைவு பெறும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

திருச்சபைக்காக:
எம் அன்புத் தந்தையாம் இறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினரும் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ப, திருஅவையை வழிநடத்தவும், திருச்சபை நிறுவன திருச்சபையாக அல்லாமல் பணி வாழ்வே திருச்சபையின் மையம் என்னும் மனநிலை திருச்சபையில் மலர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் சமூகத்திற்காக:
இன்றைய சமூகத்தில் காணப்படும் சாதி, மதம், இனம், மொழி வேறுப்பாடு, சுயநலம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் திருச்சபையில் மறைந்து, பரந்த உண்மையான கிறிஸ்து இயேசுவின் மனநிலை எல்லோரிலும் மலர, ஏழைகளின் வாழ்வு மலர, திருச்சபையில் பல மாற்றங்களை ஏற்படுத்திப் பல முன்னேற்றப் பாதையில் மக்களை வழி நடத்த வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் குடும்பங்களுக்காக:
அன்புத் தந்தையே இறைவா! இன்றைய நற்செய்தியின் மையமாய் அமைந்துள்ள குடும்ப வாழ்வும், இவ்வாழ்விற்கு, மையமாய் விளங்கும் பெற்றோர்களைப் பேணி பாதுகாத்து, மறந்தபோன இன்றைய மனிதவாழ்வு திருமணத்தின் புனிதத் தன்மையும் குடும்ப வாழ்வின் மையத்தையும் உணர்ந்தவர்களாக, தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களிடத்தில் இருந்த ஒன்றிப்பும் வார்த்தை வழிபாடும், இன்று நம் அனைவரிலும் புதுப்பிக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

துன்பபடுவோருக்காக:
எங்கள் அன்புத் தந்தையே இறைவா! உலகில் நடைபெறும் பயங்கரவாதம் இனவாதம், பருவநிலைமாற்றங்கள், அதனால் ஏற்படும் இயற்கை அழிவுகள் இயற்கைக்கு எதிராக மனிதன் ஏற்படுத்தும் தவறுகள் இவை அனைத்தும் உமது இறை இரக்கத்தினால் மாற்றம் பெற்று, படைப்பின் மேன்மையை மனிதன் உணர்ந்து மனித வாழ்வு மேம்பட உமது அருளை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் இளம் சதமுதாயத்திற்காக:
இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே சுயத்தை இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீயச் சிந்தனைகள், இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


Friday, September 27, 2024

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எண்ணிக்கை 11:25-29
யாக்கோபு 5:1-6
மாற்கு 9:38-48

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 26ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி மனிதனின் பொறமையைப் பற்றி எடுத்துரைக்கிறது. மோசேயின் கூட்டத்தில் இல்லாமல் கூடாரத்தில் இருந்த இருவர் இறைவாக்கு உரைக்கின்றார்கள். மோசே
தடுக்கவில்லை. அது அவரின் தாராளக் குணத்தைக் காட்டுகிறது. திருத்தூதர் யாக்கோபு செல்வத்தின் நிலையாமையைப் பற்றித் தன் மடலில் விவரிக்கிறார். நாம் நலிந்தவர்களுக்கு எதிராகச் செயல்படும்போது இறைவனுக்கு எதிராய் நாம் செயல்படுகிறோம். அநீதியாகச் செல்வம் சேர்க்கும் முயற்சியை எதிர்க்கிறார்.

இன்று இயேசு மூன்று செய்திகளை முன்வைக்கிறார். பொறமையால் எழுந்த குற்றச்சாட்டு, மக்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு, இடறலாயிருந்தால் கிடைக்கும் தண்டனை. நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார். ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுத்தால்கூட அதற்குக் கைம்மாறு உண்டு. தீமை செய்யத் தூண்டுவதும் மாபெரும் தண்டனைக்குரியது. இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலியின் இறைவார்த்தைகளின் பொருள் உணர்ந்து இத்திருப்பலிக் கொண்டாடத்தில் பரந்த மனப்பான்மையுடன் பங்கேற்போம்…

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

முதல் வாசகத்தில் எண்ணிக்கை நூலில் ஆண்டவரின் ஆவி எழுபது மூப்பர்கள் மேல் இறங்கி வந்த நேரத்தில், இவர்களின் கூடாராங்களில் தங்கியிருந்த வேறு இருவர் மேலும் - எல்தாது, மேதாது - தூய ஆவி இறங்கி வருகின்றது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத யோசுவா, மோசேயிடம் அதைப் பற்றிப் புகார் தருகின்றார். ஆனால், மோசே பொறாமையினால் யோசுவா கூறியதற்கு அவரைக் கடிந்து கொள்கின்றார். அனைவரும் இறைவாக்கினராகும்படி ஆண்டவர் தம் ஆவியை அளிப்பது எத்துணைச் சிறப்பு என்னும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7,9. 11-12. 13
பல்லவி: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; இதயத்தை மகிழ்விக்கின்றன.

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன். அவற்றைக் கடைப்பிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு. தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும். -பல்லவி

ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன். –பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை: 

யாக்கோபின் திருச்சபையில் எளியோர்-பணக்காரர் பிளவு அல்லது ஏற்றத்தாழ்வு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் திருமடல் இந்தப் பிரச்சினையை அதிகமாகப் பிரதிபலிக்கின்றது. கூடிவரும் சபைகளில் பணக்காரார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனவும், எளியோர் ஒதுக்கித் தள்ளப்படுகின்றனர் என்றும் சொல்லும் யாக்கோபு இன்றைய இரண்டாம் வாசகத்தில் செல்வத்தின் நிலையாமை பற்றிப் பேசுகின்றார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தையே உண்மை. உண்மையினால் எங்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

திருச்சபைக்காக:
அருட்கொடைகளை எல்லாருக்கும் பகிர்ந்துக் கொடுக்கும் இறைவா! எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் அடுத்தவர்கள் நம்மைச் சாராதவர் என்று பார்ப்பதை விடுத்து அவர் நம் சார்பாக இருக்கிறார் என்ற நிலையை உணர்ந்து நல்லதைச் சொல்லவும், செய்யவும் வேண்டிய பரந்தமனப்பான்மைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்காக:
எங்கும் நீங்காமல் நிறைந்திருக்கும் இறைவா! இன்று நாங்கள் காணும் நிதி நெருக்கடி, பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணங்களைப் பார்த்தால், இன்று எமக்கு உடனடித் தேவையாக இருப்பது எம் ஆற்றல்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வருவதுதான். அப்படிப் பகிர்ந்து கொள்வது எம் ஆற்றலை அதிகரிக்கின்றது என்பதை உணர்ந்து செயல்படத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டுத் தலைவர்களுக்காக:
ஆள் பார்த்துச் செயல்படாத அன்பிறைவா! இயேசுவைச் சார்ந்த சீடர்கள் ஒரு கிண்ணம் தண்ணீருக்குக் கூட மற்றவர்களைச் சார்ந்து நிற்க அழைக்கப் படுகின்றனர். தங்களின் பசி மற்றும் தாகம் தீர்க்க மற்றவர்களின் உடனிருப்பு அவர்களுக்கு அதிகம் தேவை. இன்று நான் என்னை மட்டுமே சார்ந்து நிற்கும் முயற்சியில் இருக்கின்ற எம்தலைவர்கள் அடுத்திருப்பவரின்
நலன்களில் கவனம் செலுத்த, அவர்கள் மனம் மாற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சமுதாயத்திற்காக
நன்மைக்கு நாயகனே இறைவா! நம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி நம்மையே நாம் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் மறைந்துப் பொருள், குணம், செயல், பண்பு, கொடை, நட்பு - இவை எமக்குக் கிடைக்காமல் மற்றவருக்குக் கிடைக்கும்போது, அல்லது எமக்குக் கிடைத்தாலும், மற்றவருக்கும் கிடைக்கும்போது எம்மில் எழுகின்ற பொறாமை எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர இறைவா எம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF