பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
எசாயா 58:7-10
1கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16
திருப்பலி முன்னுரை
பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்மைச் சுவையுள்ளவர்களாகவும், அனைவருக்கும் ஒளியாகவும் இருக்க அழைக்கின்றது. திருமுழுக்கின்போது நாம் உவர்ப்புடையவர்களாக உப்பைச் சுவைப்பதின் மூலமாக மாற்றப்படுகிறோம்.
கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் வாழ்வான அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவைக் கூட்டி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உப்பின் உவர்ப்புத் தன்மை மாறினால் அதை என்ன செய்வது என்று இயேசு கேட்கிறார். அதற்குப் பதில் கடவுள் நம்மை மீண்டும் உப்பாகக் கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்.
திருமுழுக்கில் நாம் கையில் மெழுகுவர்த்தியைப் பெறும்போது அனைவருக்கும் ஒளியாக இருக்கிறோம். இயேசு நம்மை ஒளியாக இருக்க அழைக்கிறார். அது மற்றவர்களுக்குத் தெரியும்படியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். மற்றவர்களின் வாழ்வில் இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். இருள் நடுவே நம் ஒளி உதிக்க வேண்டும். நற்செயல்களால் கடவுளுடன் இணைந்திடுவோம். இவரின் ஞானத்தையும் வல்லமையையும் பெற்றிட இத்திருப்பலியில் உப்பாய் ஒளியாய் கலந்திடுவோம் வாரீர்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
நாங்கள் உண்ணா நோன்பிருந்தபொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று இறைவனிடம் முறையிட்டப் போலிப் பக்தர்களுக்கு, பசித்தோருக்கு உணவளித்தும் உறைவிடம் இல்லாதோருக்குத் தங்க இடமளிப்பதும், உடையற்றோருக்கு உடையை வழங்குவதுமே இறைவன் விரும்பும் நோன்பு உண்மையான நோன்பின் குறிக்கோளை விளக்கும் இறைவாக்கினர் எசாயா மூலம் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.
பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவர்க்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மளிர்வர்.
திருப்பாடல்: 112: 4-5, 6-7, 8-9
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்... பல்லவி
எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்... பல்லவி
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்... பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
நமது நம்பிக்கையின் அடிப்படைக் கடவுளின் வல்லமையே தவிர மனித ஞானம் அல்ல. இதன் அடிப்படையில் தூய பவுலடியார் தனது பணிவாழ்வை மேற்க்கொண்டார். போர்வீரனாக இருந்த அவர் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகவோ அல்லது ஞானம் பெற்ற அறிஞராகவோ இருந்தது இல்லை. ஆயினும் அவர் பறைசாற்றிய நற்செய்திகள் அனைத்தும் தூய ஆவியாரின் வல்லமையான செயல்களே என்று அழுத்தமாகப் பதிவுச் செய்யும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் கவனமுடன் செவிமெடுப்போம்.
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. “நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே” என்கிற திருமுக வாசகத்தின் உண்மையை உணர்ந்து, தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், மனித அறிவையும் ஆற்றலையும் மட்டுமே நம்பியிராமல், இறைஞானத்தால் வழிநடத்தப்பட, எம்மையே ஒப்புவிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகுக்கு “இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்கிற ஏசாயாவின் இறைவாக்குப் புத்தெழுச்சி தரவும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், ஒளியின் ஆட்சி நோக்கிப் பயணிக்கவும், செயல்படவும், அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. பணமும், பதவியும், பகட்டும், எம்மைக் கவர்ந்திழுக்கும் சூழலில், சிலுவையில் அறையுண்ட மெசியாவாகிய இயேசுவைத் தவிர, நாங்கள் பற்றிக்கொள்ள வேறு ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் யாவரும், குறிப்பாக இளையோரும், எங்களிடையே இருக்கும் உலகப்பற்று எனும் நுகத்தை அகற்றிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு வாழ்கின்ற ஞானத்தையும், தாழ்ச்சியையும், மனௌறுதியையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு எங்களிலே நிறைவேறி “அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்” என்பதுவும் உண்மையாகி, எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லாதோர்க்குத் துணை நிற்பதும், உடையற்றோருக்கு உடுக்கக் கொடுப்பதும், வறியோரின் தேவையை நிறைவு செய்வதும் தான், நீர் விரும்பும் நோன்பு என்றுணர்ந்து அறச்செயல்கள் புரியவும், அதன் வழியாக, இவ்வுலகிற்கு நாங்கள், ஒளியாகவும் உப்பாகவும் விளங்க வேண்டுமென்றும், எங்களது நற்செயல்களைக் காண்கின்ற எல்லோரும், விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



