பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31
திருப்பலி முன்னுரை:-
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) இன்று நாம் 'இறை இரக்கத்தின் ஞாயிறை' சிறப்பிக்கின்றோம்.
இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்தி, அவர்களுக்குத் தூய ஆவியையும், பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறார். அதே வேளையில், இயேசுவின் உயிர்ப்பை நம்பத் தயங்கிய தோமையாரிடம், தம் காயங்களைக் காட்டி அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்காகவே சொல்லப்பட்டுள்ளன.
நமது பலவீனங்கள் மற்றும் சந்தேகங்களின் மத்தியிலும், இறைவனின் இரக்கம் அளவிட முடியாதது என்பதை உணர்வோம். உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதியையும் மன்னிப்பையும் இதயத்தில் ஏந்தியவர்களாய், இந்தப் பலியில் பக்தி உணர்வுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:42-47)
தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு. உயிர்த்த ஆண்டவரின் வல்லமை தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படிப் பிரதிபலித்தது என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. அவர்கள் ஒருமித்த மனத்தோடு திருத்தூதர்களின் போதனையிலும், அப்பம் பிட்குவதிலும், செபத்திலும் நிலைத்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்ந்த அந்த அன்புறவு வாழ்வு நமக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது. சமூகமாக இணைந்து இறைவனைப் புகழும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
பதிலுரைப்பாடல்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24
1. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி
2. அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி
3.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:3-9)
அழியாத வாழ்வின் நம்பிக்கை. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுள்ள புதிய வாழ்வைப் பற்றிப் புனித பேதுரு இவ்வாசகத்தில் மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கிறார். நாம் இப்போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானாலும், நம்முடைய விசுவாசம் நெருப்பினால் புடம் போடப்பட்ட பொன்னை விட மேலானது. நாம் இயேசுவைக் காணாமலே அன்பு செய்கிறோம், அவரை நம்புகிறோம். இதுவே நமக்கு முடிவில்லாத மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-
அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-
1. திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்த, தொடக்க கால நம்பிக்கையாளர்களைப் போலவே, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், நம்பிக்கை கொண்டோராக ஒன்றாய் இருந்து, எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்று வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அச்சத்தின் பிடியிலும் ஐயத்தின் பிடியிலும் சிக்கித் தவித்த தோமா உள்ளிட்ட திருத்தூதர்களுக்குத் தோன்றி “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்திய இறைவா, போர் பதட்டத்திலும் அதனால் ஏற்படும் பல்வேறு தீய விளைவுகளாலும் அல்லலுறும் அவனிக்கு, நீர்தாமே நிலையான அமைதி அருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அமைதியை நாடும் நல்லோராய் மாறிட, ஒன்றிப்பின் ஆற்றலான உமது தூய ஆவியை அவர்கள்மேல் நீர் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ள நம் கடவுளும் தந்தையுமானவரின் பேரிரக்கத்தின்படி, தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தல்களில், பிற்போக்கு சக்திகள் தோற்கடிக்கப்பட்டு சமூக நீதியை உயர்த்திப்பிடிக்கும் சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ஒரே மனத்தோடு கோவிலில் கூடுவதோடு நில்லாமல், பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் கூடி, இறைவேண்டலிலும், கடவுளைப் போற்றிப் புகழ்வதிலும், பகிர்தலிலும் நிலைத்திருந்த தொடக்க கால நம்பிக்கையாளர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி நாங்களும் எங்கள் அன்பியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுத்து, உண்மையான அன்பிற்கும் எங்களின் உள்ளார்ந்த ஒற்றுமைக்கும் சான்றுபகர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்மைக் கண்டதால் அல்லாமல் காணாமலே நம்புகிற பேறுபெற்றதற்காக நன்றிகூறும் அதே வேளையில், பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொண்டு, குன்றாத எதிர்நோக்குடன் வாழவும், தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களாய் பிறரை மன்னிக்கவும், ஒப்புரவு அருட்சாதனத்தை தாழ்ச்சியுடன் அணுகி மன்னிப்புப் பெறவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.







