Friday, April 30, 2021

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு



இன்றைய வாசகங்கள்:


திருத்தூதர் பணிகள் 9: 26-31
1யோவான் 3: 18-24
யோவான் 15: 1-8

திருப்பலி முன்னுரை:


அன்பார்ந்த இறைமக்களே!
இன்று பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு - மரத்தோடு கிளைகள் இணைந்திருந்தால் மட்டுமே கனி தரமுடியும். அவ்வாறே இயேசுவோடு நாம் இணைந்திருந்தால் தான் நாமும் நம் வாழ்வில் பலன் அளிக்க முடியும் என்பதை வலியுறுத்துகின்றது இன்றைய நற்செய்தி.

நெருக்கடியான ஒரு சூழலில் இயேசு தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்திப் பேசுகிறார், இன்றைய நற்செய்தியில். இயேசு தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது சொல்லப்பட்ட வார்த்தைகள் தான் இவை. அந்த இறுதி இரவுணவு கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்குக் காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

திராட்சைத் தோட்டத்திலிருந்து இறுதியில் கிடைப்பது சுவைமிக்க திராட்சைக்கனி. திராட்சைக் கனியும், இரசமும் எவ்வளவுக்கு எவ்வளவு சுவையாக இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றின் பின்னணியில் கவனம், கரிசனை, கடின உழைப்பு இருக்கும் என்பதை நாம் அறிவோம். இறுதி முடிவு இனிமையாக அமைய வேண்டுமென்றால், எத்தனையோ இடர்களை, சவால்களைச் சந்திக்க வேண்டும் என்பதை இயேசு தன் சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார்.

நமது வாழ்வெனும் திராட்சைத் தோட்டத்தில் இறைவனே நம்மைப் பயிரிட்டு, கண்காணித்து வளர்ப்பவர். இறைவனுடன் இணைந்து, அவரது கண்காணிப்பில் வாழும்வரை நாம் மிகுந்த கனி தருவோம். இந்த இறைநம்பிக்கையில் இத்திருப்பலியில் பங்கேற்போம்.

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை:

கிறிஸ்தவர்களை துன்புறுத்தும் சவுலாக அடையாளம் காணப்பட்டவர் இறைமகன் இயேசு கிறிஸ்துவால் ஆட்கொள்ளப்பட்ட மனமாற்றம் பெற்று பவுலாக மாறிய இயேசுவின் மற்ற சீடர்களுடன் இணைந்து இயேசுவுக்குச் சாட்சியம் பகருவதை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்டு இயேசுவின் சாட்சியாக மாற இவ்வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.  

பதிலுரைப் பாடல்


திபா 22: 25b-26. 27,29. 30-31 (பல்லவி: 25a)

பல்லவி: ஆண்டவரே, நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக!

அல்லது: அல்லேலூயா.

1. உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக! - பல்லவி

2. பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர். மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர். - பல்லவி

3. வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி அறிவிக்கப்படும். அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு ‘இதை அவரே செய்தார்’ என்பர். - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை:

நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். நாம் உண்மையைச் சார்ந்தவர்கள். இறைவனிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம். அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. இதன்மூலமாக நாம் கடவுளுடன் இணைந்திருப்பதை ஆவியானவரின் மூலமாக அறிந்துக் கொள்வோம் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருதூதர் யோவான் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வசனம்


அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடன் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



 1.அன்பின் இறைவா!  உம் அன்பு குழந்தைகளாகிய  திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் இயேசுவின் அன்புக் கட்டளையின் பொருள் உணர்ந்து அவரின் அன்பில் இறுதி வரை நிலைத்து நின்று பிறரை அன்பு செய்து வாழும் வரத்தைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.எம்மோடு என்றும் பயணிக்கும் எம் இறைவா, எங்கள் வாழ்க்கையில் எல்லாநிலைகளிலும் கலப்படங்களையே பார்த்து பழகிய நாங்கள் களங்கமில்லாத, கலப்படமற்ற அன்பை எங்கள் குடும்பங்களிலும், நாங்கள் வாழ்கின்ற சமுதாயத்தில்  விதைத்த புதியதொரு விண்ணகத்தை  இன்றே இவ்வையகத்தில் கண்டு மகிழ தேவையான அருள் வரங்களை அன்புடன் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அன்பே உருவான எம் இறைவா, இன்று உலகில் உள்ள தீவிரமான தொற்றுநோய் 2ஆம் அலை, 3ஆம் அலை என்று எங்களை ஆட்டிப்படைக்கும் இவ்வேளையில் உமது வல்லமை மிக்க உறுதியான கரங்களால் மீட்டு இயேசுவின் இரத்தம் எங்களை காக்கும் என்ற நம்பிக்கையை நம் மனங்களில் பதிவு செய்து உலகமக்கள்  அனைவரும் நற்சுகம் பெற்று அமைதியில் வாழ தேவையான வரங்களை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நம்மை அன்பு செய்வதும், நாம் செய்யும் வேலையை அன்பு செய்வதும், நம் படிப்பை அன்பு செய்வதும், நம் பயணங்களை அன்பு செய்வதும், நம் இலக்கை அன்பு செய்வதும், நம் வெற்றியை அன்பு செய்வதும் போன்ற இவற்றின் மூலம் அடுத்தவர்களை அன்பு செய்து 'நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லோரும் அறிந்து கொள்வர்' என்ற இயேசுவின் உயிருள்ள வார்த்தைகளை வாழ்வாக்க உமது அன்பு மழையை பொழியவேண்டுமென்று உயிர்த்த இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம் இளையசமுதாயம் வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. இந்த தொற்றுநோய் காலத்தில் பல இளையோர் தங்கள் பள்ளிப் படிப்பை, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். அவர்கள் இயேசுவின் உடனிருப்பை உணர்ந்து அவரில் நம்பிக்கைக் கொண்டு புதுமாற்றங்களையும் வாழ்க்கைப் பயணத்தையும் காண தேவையான  ஞானத்தையும், ஆற்றலையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

Tuesday, April 20, 2021

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு


 இன்றைய வாசகங்கள்:


திருத்தூதர் பணிகள் 4: 8-12
1 யோவான் 3: 1-2
 யோவான் 10: 11-18

திருப்பலி முன்னுரை:


அன்பார்ந்த இறைமக்களே!
உயிர்ப்புக்காலம் நான்காம் ஞாயிறு - நல்லாயன் ஞாயிறு என்று திருஅவைக் கொண்டாடி வருகிறது. இன்றைய அவசர உலகில் ஒவ்வொருவரையும் வழி நடத்த ஓர் ஆயன் தேவைப்படுகிறார். நமது வாழ்க்கைப் பயணத்தில் யார் நமது ஆயன் என்று சிந்திக்க அழைக்கிறது இந்த ஞாயிறு.

நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தலுக்காகச் செபிக்கும் உலக நாளையும் திருஅவை அறிவித்துள்ளது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், "நம் சுயநலத்திலிருந்து வெளியேறிச் செல்வதே, நம் அனைவருக்கும் தரப்பட்டுள்ள முக்கியமான மறைபோதகப் பணி" என்று கூறியுள்ளார். சுயநலம் என்ற சுழல்காற்றில் சிக்கி இவ்வுலகம் சின்னாபின்னமாகி வருவதை நாம் அறிவோம். சுயநலம் அற்றத் தலைவர்கள் நம் குடும்பங்களில் உருவாகின்றனர் என்பதை உறுதிசெய்தால், இவ்வுலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வுக் கிடைக்கும் என்பதும் உறுதி.

பிஞ்சு மனங்களில் வெறுப்பு என்ற நஞ்சைக் கலந்து ஊட்டுவது குழந்தைகளுக்கு மிக நெருங்கியவர்களான பெற்றோரும், உற்றாரும் என்ற உண்மை, நம் அனைவரையும் குற்ற உணர்வோடு தலைகுனியச் செய்கிறது. நல்லாயன் ஞாயிறைக் கொண்டாடும் இன்று, நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் சூழல்களில் மற்றவர்களை நல்வழியில் நடத்தும் வழிகாட்டிகளாக, நல்ல ஆயர்களாக வாழ்கிறோமா என்ற ஆன்மத் தேடலை மேற்கொள்வோம்.

பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு ஆகியவற்றை முடித்துவிட்டு, வாழ்வில் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் காத்திருக்கும் இளையோரை இன்று சிறப்பாக இறைவனின் திருப்பாதம் கொணர்வோம். நல்லாயனாம் இயேசுவின் அழைத்தலை ஏற்று, மக்கள் பணிக்குத் தங்களையே அளிக்க முன்வரும் இளையோரை, இறைவன் வழிநடத்த வேண்டுமென்று, நல்லாயன் ஞாயிறன்று, இறையழைத்தல் ஞாயிறன்று மன்றாடுவோம்.

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை:

இகழ்ந்து விலக்கப்பட்ட கல் இன்று முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகின்று. இயேசுவாலேயன்றி வேறு எவராலும் மானிடருக்கு மீட்பு கிடையாது. நாம் மீட்புப் பெறுவதற்காகவே இயேசு அவருடைய வாழ்க்கையை ஒரு முன் உதாரணமாக்கினர். இந்த உண்மையை உணர்ந்துச் செயல்பட நமக்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிட இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்கவிருக்கும் திருத்தூதர் பேதுருவின் வார்த்தைகளை மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 118: 1,8-9. 21-23. 26,28,29 (பல்லவி: 22)
பல்லவி: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! உயர்குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! -பல்லவி

என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!  ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! -பல்லவி

ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இறைவன் நம்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் அவரது மக்கள் என நாம் அழைக்கப்படுகின்றோம். இறைமக்களாகவே இருப்போம். இயேசு குற்றமற்றவராய் இருப்பதுபோல நாமும் குற்றமற்றவர்களாய் நம்மைக் காத்துக் கொள்ள அழைக்கும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஒலிக்கும் திருதூதர் யோவனின் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்போம்.


நற்செய்திக்கு முன் வசனம்

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக் கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆற்றல் மிக்கத் தலைவரே எம் இறைவா! திருஅவையில் தங்கள் வாழ்வில் தம் சொல்லாலும், செயலாலும், தலைமை என்பது பணிப் பெறுவதற்கன்று, பணிபுரியவே என்று எம் கிறிஸ்துவின் போதனைகளைத் தனதாக்கிக் கொண்டு செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்வைச் சாட்சிய வாழ்வாக்கிட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் நாயகரே! எம் இறைவா!எம் நாட்டை ஆளும் தலைவர்கள் இனம், மொழி, சாதிச் சமய வேறுபாடுகளைக் களைந்துச் சமூக அக்கரையுள்ள நல் மேய்ப்பர்களாக இருந்து நாட்டை நல்வழியில் நடத்தவும், ஏழைப் பணக்காரன் என்ற இருளை அகற்றித் தேவையான அருள் ஒளியை எம் தலைவர்களுக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. படைப்பின் நாயகனே இவ்வுலகில் நிலவும், தொற்றுநோயால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், பொருளாதரத்தில் முன்னேறிய நாடுகள் ஏழைநாட்டு மக்களை நசுக்கி, அதனால் தங்கள் வாழ்வை இழந்துத் தவிக்கும் மக்களின் துயரினைப் போக்கிப், போட்டி மனப்பான்மையை நீக்கிச் சமத்துவச் சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4 ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே! எம் இறைவா! விதவைகள், அனாதைகள், கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகிய அனைவருக்கும் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும், உள்நாட்டுப் போரால் தவிக்கும் மக்களுக்கு உமது உதவிக் கரம் நீட்டி அவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5 இரக்கத்தின் ஆற்றலே! எம் இறைவா! இன்றைய சூழலில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும், இளையோர் இவ்வுலக மாயைகளால் தங்களை இழந்த விடாமலும் இருக்கவும், உமது இறையழைத்தலை அனைவரும் உணர்ந்து இயேசுவின் சீடர்களாக வாழ்ந்திட அருள் புரியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org

Thursday, April 15, 2021

பாஸ்கா காலத்தின் 3ஆம் ஞாயிறு

 பாஸ்கா காலத்தின் 3ஆம் ஞாயிறு



இன்றைய திருப்பலியின் வாசகங்கள்


திருத்தூதர் பணிகள் 3:13-15, 17-19
1 யோவான் 2:1-5
லூக்கா 24:35-48

திருப்பலி முன்னுரை


வெற்றி வேந்தனாம் உயிர்த்தெழுந்த இறைமகன் இயேசுவின் பெயரால் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள். இன்று பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு.
நம்‌ ஆண்டவர்‌ உயிர்த்த பின்‌ தன்‌ சீடர்களுக்குக்‌ காட்சித்‌ தந்தார்‌. அவர்களோ ஐயோ! இது ஆவி என்றெல்லாம்‌ அச்சம்‌ அடைந்து நடுங்கினார்கள்‌. இயேசு காட்டிய அடையாள அட்டை என்ன? என்‌ கைகளைப்‌ பாருங்கள்‌. கால்களைப்‌ பாருங்கள்‌. என்னைத்‌ தொட்டுப்‌ பாருங்கள்‌, எனக்கு எலும்பும்‌ தசையும்‌ இருப்பதைக்‌ காண்கிறீர்களே! இவை ஆவிக்கு கிடையாதே என்றார்‌ (லூக்‌. 24:89). என்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌ என்று இயேசு கூறவில்லை. தன்‌ கைகளிலும்‌, கால்களிலும்‌ ஏற்பட்டத்‌ தழும்பைப்‌ பார்க்கும்படி சொல்கிறார்‌. ஏனெனில்‌ மகிமையுடன்‌ உயிர்த்த நம்‌ ஆண்டவர்‌ இயேசு பாடுகளின்‌ தழும்புகளுடன்‌ உயிர்த்தார்‌ என்பதை ஒருபோதும்‌ மறக்க முடியாது. அவரது விழுப்புண்கள்தான்‌ நமக்கு வாழ்வு தந்தது.

உயிர்த்த இயேசு பலஉருவங்களில் காட்சியளித்தார். ஆனால் சீடர்கள் மந்த‌ புத்தியுடன்‌ மதி மயங்கியவர்களாக இருந்தார்கள்‌. எனவே அவர்கள் இயேசுவை கண்டுக்கொள்ளவில்லை. அவர்களின் மனக்கண்களை திறந்தார். தன்னைப் பற்றிய மறைநூலில் கூறப்பட்டவைகளை கூறி இவைகள் அனைத்துக்கும் நீங்கள் சாட்சிகள் என்று அறிவிக்கின்றார்.

இன்றும் இயேசு நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு வடிவங்களில் தோன்றி, "நான்தான்" என்கிறார். நாமே அவரை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு நமது பயஉணர்வு, பகைமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு. தன்னலம், ஆணவம், முன் சார்பு எண்ணங்கள் போன்றவை நமது விசுவாசப் பார்வையை மறைக்கின்றன.

இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை மறைநூலிலும் அருளடையாளங்களிலும் அப்பம் பகிர்வதிலும் இன்னும் சிறப்பாக ஏழை எளிய மக்களிலும் நமது இன்பதுன்பங்களிலும் கவலை கண்ணீரிலும் ஏக்கங்கள் ஏமாற்றத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்பழகிக் கொள்வோம்.

மனமாற்றம் காண்போம். இயேசுவின் சாட்சிகளாக இவ்வுலகில் வாழ்ந்திட இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாரீர்..

வாசக முன்னுரைகள்


முதல் வாசக முன்னுரை


இன்றைய முதல் வாசகத்தில் யூதர்களின் செபக்கூடத்தில் திருத்தூதர் பேதுரு இயேசு உண்மையிலே உயிர்த்தார் எனச் சான்று பகர்கிறார். நீங்கள் அறியாமையால் இயேசுவைக் கொன்று விட்டீர். பாவங்கள் போக்கப்படும் பொருட்டு மனம் மாறி  இயேசுவிடம் திரும்புங்கள் என்று அழைப்பு விடுவதை உணர்ந்தவர்களாக நாமும் மனமாற்றம் பெறுவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 4: 1. 6. 8 (பல்லவி: 6b காண்க)

பல்லவி: உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும் ஆண்டவரே. அல்லது: அல்லேலூயா.

எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்; நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி, என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும். - பல்லவி

‘நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’ எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும். - பல்லவி

இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாய் இருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். - பல்லவி


இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘நம் பாவங்களுக்கு மட்டுமல்ல; அனைத்துலக பாவங்களுக்கும் கழுவாய் அவரே’ என்கிறார் யோவான். செம்மறியான கிறிஸ்துவின் இரத்தம் நம் பாவங்களுக்காகச் சிந்தப்பட்டது என்பதை நாம் அறிந்தும், பாவச் செயல்களில் மீண்டும் ஈடுபடுகிறோம். இறை இயேசுவின் அன்பினால் பாவம் அகற்றப்பட்டது போல நமது அன்பினால் உறவுகளும், உண்மையும் உறுதியாக்கப்படட்டும்.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய இயேசுவே, மறைநூலை எங்களுக்கு விளக்கியருளும். நீர் எம்மோடு பேசும்போது எம் உள்ளம் பற்றி எரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. அன்புத் தந்தையே எம் இறைவா! உம் திருஅவையில் அதன் பணியாளர்களாகிய திருத்தந்தையின் ஆன்மீக வாழ்வு, வளம் பெறவும், அருள்நிலையினர், பொதுநிலையினர் என்ற வேறுபாடுகளைக் களைந்து உயிர்த்த ஆணடவரின் உடனிருப்புத் தொடர்ந்து திருஅவையில் பயணித்திடத் தேவையான அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அருட்கொடை வள்ளலே எம் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதித் தருபவரே இறைவா, உலகெங்கும் துன்புரும் உம் திருச்சபைக் கண்நோக்கியருளும். அவர்கள் தீவிரவாதம், அடக்குமுறை, நோய், பசி, வறுமைப் போன்றவற்றால் தங்கள் வாழவாதரங்களை இழந்து மனம் உடைந்து உம்மில் நம்பிக்கை இழக்காமல் இருக்க அனைவருக்கும், உமது அன்பின் அரவணைப்பில் அமைதியை அளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னதரான தந்தையே! திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Thursday, April 8, 2021

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு - ஆண்டு 2



இன்றைய வாசகங்கள் 


I திருத்தூதர் பணிகள் 4: 32-35
II 1 யோவான் 5: 1-6
III யோவான் 20: 19-31

முன்னுரை


அன்புடையீர்,
அன்பு சகோதர சகோதரிகளே உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் அன்பு வாழ்த்துக்கள்! பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறும், இறைஇரக்கத்தின் ஞாயிறுமான இன்று உள்ளத்தில் எழும் ஐயங்கள் நீங்கி இறைமகன் இயேசுவின் உயிர்ப்பின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் இறைவனிடம் நம்பிக்கைக் கொள்ளவும், பகிர்ந்து வாழ்ந்திடவும் நம்மை அழைக்கின்றது. இயேசுவின் வார்த்தைகளை அருகிலிருந்து கேட்டுணர்ந்தச் சீடர்கள் யூதர்களுக்குப் பயந்து நடுங்கி முடங்கிக் கிடந்தபோது, மகதலா மரியா இயேசுவின் உயிர்ப்பின் செய்தியை அறிவித்தும், நம்பிக்கையில்லாக் கோழைகளாக இருந்த தம் சீடர்களைக் காண, அவர்களைத் தேற்ற, இயேசு அவர்கள் முன் தோன்றித் தன் சமாதானத்தை அளிக்கின்றார். இரக்கத்தின் தேவனாகிய இயேசு அவர்களின் தவறுகளை மன்னித்து அவர்களை ஏற்றுக்கொண்டு நம்பிக்கை ஒளியை ஏற்றி, தான் இரக்கத்தின் தேவன் என்பதை உணரச் செய்தார். தோமாவின் ஐயம் களையப்பட்டபோது உயிர்ப்புக்கு அடித்தளம் கிடைத்தது. அவர் அவரோடு தன்னை இணைத்துக்கொண்டார். இறுதி மூச்சுவரை அவருக்காய் சாட்சிப் பகிர்ந்திடும் உறுதியான உள்ளத்தின் உந்துத்தால் நம் இந்திய நாட்டில் இறைசாட்சியாக மரிக்க முடிந்தது.

ஐயம் தவித்து நம்பிக்கைக் கொண்டவர்களாய், அச்சம் நீங்கி ஆனந்தம் அடைந்தவர்களாய், கண்டவர்களை விடக் காணாமல் நம்புகிறவர்களாய், பகிர்ந்துண்டு வாழும் நல்லெண்ணங்கள் கொண்டவர்களாய், இறைஇரக்கத்தைப் பெற்றவர்களாய் வாழ்ந்திடச் சமாதானத்தின் தேவனாம் உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை


நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்து, அனைவரோடும் அன்புப் பாராட்டிச் சமத்துவம், சகோதரத்துவம், பொதுஉடமை போன்ற தத்தவங்களை அறிவுறுத்தும் திருத்தூதர் லூக்காவின் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாசகத்திற்குச் செவிமெடுத்து நாம் வாழ்வில் கடைப்பிடிப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 118: 2-4. 16ab-18. 22-24

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!


‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! - பல்லவி

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன். கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. - பல்லவி

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் கட்டளைகள் நமக்குச் சுமையாய் இருப்பதில்லை. கடவுளையும் பிறரையும் நாம் அன்புச் செய்யும்போதும் நாமும் கடவுளாலும், பிறராலும் அன்பு செய்யப்படுகிறோம் என்பதை உணரத்தும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகம் வழியாக அழைக்கப்படுகிறோம் மனதில் பதிவு செய்து வாழ முயற்சிப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 1. ஒன்று கூடி வாழ எம்மை அழைக்கும் அன்பு இறைவா! திருத்தூதர்கள் வழியாகச் செயலாற்றுபவர் இயேசு. திருத்தூதர்கள் வெறும் கருவிகள் தாம். இன்று வரை தொடரும் இந்தத் திருத்தூதர் மரபில், திருத்தந்தை, ஆயர்கள் மற்றும் அவர்களின் உடன் பணியாளர்கள் அருள்பணியாளர்கள் நினைவில் கொண்டு, இதனை உணர்ந்து உம் திருஅவையைச் சிறப்புடன் வழிநடத்த வேண்டிய வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.காணமால் நம்புவோர் பேறுபெற்றோர் என்று ஆசீர் வழங்கிய எங்கள் இறைவா! இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு கூடிவரும் நாங்கள் எங்கள் நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு உதவிச் செய்ததோடு, நம்பிக்கைக் குன்றியவர்களுக்குத் துணிவையும் தந்து, எங்களின் குடும்பம் பின்புலம், சமூக அந்தஸ்து, வேலைப் போன்றவற்றில் வேறுபட்டிருந்தாலும், இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை ஒருமனத்தோடு வாழ வழிசெய்ய வேண்டிய வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.அரசர்களுக்கெல்லாம் அரசராகிய எம் இறைவா! எம் நாட்டின் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். அணிகள் சேர்த்துக் கொண்டு மற்றவர்களை வெறுத்து ஒதுக்கமால் அனைவரும் இந்நாட்டு மக்கள், அனைவருக்கும் சேவைச் செய்யவே தெரிந்துக் கொள்ளப்பட்டோம் என்பதனை உணர்ந்திடக் கூடிய நல்ல மனதினைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.விண்ணும் மண்ணும் அழிந்துப் போகும் என் வார்த்தைகள் ஒருபோதும் அழியாது என்று இயம்பிய எம் இறைவா, மீண்டும் வந்துள்ள தொற்றுநோய்க் காலத்தில் எங்கள் முதியோர்களை உமது வார்த்தையால் வளமை படுத்திச் சோர்ந்துபோகும் தருவாயில் உமது வாக்கு அவர்களுக்குப் பாதுகாப்பாய் அமைந்திவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து நல்ல உடல்நிலைத் தரவும் வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.