Thursday, September 26, 2019

பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறு





இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


ஆமோஸ் 6:1,3-7
1திமோத்தேயு 6:11-16
லூக்கா 16:19-31


திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் இனிய நண்பர்களே! விசுவாச வாழ்வில் வெற்றியைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 26ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
இந்த உலகவாழ்வில் ஆடம்பரத்திலும், இன்பங்களிலும் செலவிடும்போது அடுத்திருப்பவரின் துன்பதுயரங்களில் பங்கு கொள்ள மனமில்லாமல் அவர்களை வெறுத்து ஒதுக்கி வாழ்பவரின் நிலையை அருமையாகப் படம் பிடித்துக்காட்டுகின்றார் இறைமகன் இயேசு. இறைவன் கொடுத்த செல்வங்களையும், திறமையையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்தாவிடினும் அச்செயல்கள் இறைவனுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. இதனை வலியுறுத்தும் செல்வந்தர், இலாசர் உவமையே இன்றைய நற்செய்தி வாசகமாகும்.
ஏழைகளிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் யூதர்களை யாவே கடவுள் கடிந்து கொண்டு அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களை எடுத்துரைக்கின்றார். நிலை வாழ்வைப் பற்றிக்கொள்ள விசுவாச வாழ்வில் போராட்டம் நடத்திடத் திருத்தூதர் பவுலடிகளார் நம்மை அழைக்கின்றார்.
பொருளாசையிலிருந்து விலகிச் செல்லவும், இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி ஆகியவற்றை நாடி நிலைவாழ்வைப் பற்றிக்கொள்ளவும், நாம் பெற்ற செல்வங்களையும் திறமைகளையும் அடுத்தவரின் நலனுக்காகப் பயன்படுத்திடவும், இயேசுகிறிஸ்துவைப் போல் விசுவாசத்தின் சாட்சிகளாக இவ்வுலகில் வலம் வர இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. பேரின்பம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


பழைய ஏற்பாட்டின் காலத்தில் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாகக் கடவுள் கடின உள்ளத்தைக் கொண்ட இஸ்ரயேல் மக்களின் மேல் சினம் கொள்ளுகிறார். உண்டுக் கொழுத்து ஆடம்பரத்திலும், சொகுசான வாழ்விலும் திளைத்துப் போன மாந்தர்களை மனம் மாற, அவர்களுக்கு நிகழப்போகும் அவலங்களையும் தண்டனையையும் எடுத்துக் கூறியுள்ளார். இந்நிலை மாற இறைவனின் அழைப்பை எடுத்துரைக்கும் இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வரும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாவது வாசகத்தில், "விசுவாசத்திற்காகப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்" என்று கூறுகிறது. யாரோடு போட்டிப் போடுகிறோம்? நம்மோடு நம் விசுவாசத்திற்காக. நீ நேற்றை விட, இன்று பரிசுத்தமாகவும், அதிகம் தாராளமாகவும் இருக்கிறாயா? நீ தேங்கிய நிலையில், அழுகிய நிலையில் இருக்கிறாயா? அல்லது, பரிசுத்த வாழ்வில், வலிமையோடு உங்கள் பாவங்களிலிருந்து மாற முயற்சிச் செய்கிறீர்களா? நம்மை நாம் சோதிக்கத் திருத்தூதர் பவுல் அழைக்கின்றார். கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர் என்று போற்றிப் புகழ்ந்திடும் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்



திபா 146: 7. 8-9. 9-10
பல்லவி: என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு .

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலை நாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி

ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி

அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இறைஇரக்கத்தின் சாயலாக இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் மகிழ்ச்சியும், எம் புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! எம்மை உம் இறையரசில் செல்வந்தராய் மாற்றிடும், உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, தீமையை வெறுத்து நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும், அதனால் ஏழை எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற்றவும், நிலைவாழ்வில் இடம் பெறவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எத்தகைய இடுக்கண்களில் உம்மைக் கூவி அழைத்தவருக்குச் செவிசாய்ப்பவரே, எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் உள்ளவர்கள் தங்களின் திறமைகளை அறிந்து அதற்கேற்ப எம் பங்கு நிகழ்வுகளில் பங்கேற்று உம்மை மகிமைப்படுத்தவும், எங்களைச் சுற்றியுள்ளவர்களின் துன்பதுயரவேளைகளில் சொல்லாலும், பொருள் உதவியாலும் இவர்களை ஆற்றுப்படுத்தும் நல்ல இதயங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றும் வாழும் எல்லாம் வல்ல எம் இறைவா! உலக நாட்டில் நடைபெறும் தீவிரவாதச் செயல்களால் ஏற்படும் குழப்பங்கள், மனக்கசப்புகள், பொருளாதார இழப்புகள் மற்றும் உயிர் இழப்புகள் ஆகியவற்றால் பரிதவிக்கும் மக்களுக்காய் உம்மை இறைஞ்சுகிறோம். அவர்களுக்குத் தேற்றுதலும் ஆற்றுதலுமாய் இருந்து நிம்மதியான, மனநிறைவான, அமைதியான வாழ்க்கை வாழவும், மக்களை வழி நடத்தும் எம் அரசியல் தலைவர்கள் அனைத்தையும் உணர்ந்துச் சமத்துவச் சமூதாயத்தை உருவாக்க அருள் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. நன்மைக்கு நாயகனே இறைவா! எம்மிடம் இல்லாத ஒன்று மற்றவரிடம் இருக்கும்போது, அந்தக் குறையைப் பெரிதாக்கி எம்மையே நாங்கள் தாழ்வாக மதிப்பிடும் பொறாமை என்னும் குணம் எம்மிடமிருந்து ஒழிந்து ஒரு நல்ல குணமாகிய சகிப்புத்தன்மை எம்மில் வளர, விட்டுக்கொடுப்பவர்கள் வீழ்ந்ததில்லை என்பதை உம் மூலம் அறிந்து வாழ  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

                        www.anbinmadal.org


Monday, September 16, 2019

பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறு


பொதுக்காலம் ஆண்டின் 25 ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



ஆமோஸ் 8:4-7
1திமோத்தேயு 2:1-8
லூக்கா 16:1-13

திருப்பலி முன்னுரை:


இறைஇயேசுவின் அன்பர்களே! நிலைவாழ்வைத் தேடிப் பொதுக்காலம் ஆண்டின் 25ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யாருக்குப்பணிச் செய்வது?, நிறைவாழ்வு அடையத் தேவையான முன்மதி என்ன?, செல்வத்திற்காக விவேகத்துடன் வாழ தெரிந்த நாம் அருள் வாழ்வு வாழ எடுக்கும் முயற்சி என்ன? நம் வாழ்வின் இலக்கு - பணமா? இறைவனா? என்று பல கேள்விகளுக்கு இன்றைய வாசகங்கள் பதில் தேட உதவுகின்றது.

வாழ்க்கைக்குப் பணம் தேவை. ஆனால் விவேகமாய்ப் பணம் தேடும்போது நாம் அருள்வாழ்வை இழந்து விடுகிறோம். நாம் எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்துக் கொள்வதை விட, சொத்துக்களைச் சேர்ப்பது, நம்முடைய குறிக்கோளாக இருந்தால், கடவுள் நமது தலைவர் அல்ல. இந்த உண்மை, நம்மிடம் உள்ளச் சொத்துக்களுக்கும் மட்டுமல்ல, நம்மிடம் உள்ள மற்றத் திறமைகளையும் சேர்த்துத் தான் குறிப்பிடப்படுகிறது. நாம் எல்லாரும், ஏதாவது ஒரு திறமையோடு, ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். நாம் அந்தத் திறமைகளை எப்படி மற்றவர்களுக்காக உபயோகிக்கப் போகிறோம்?

நிரந்தரமற்ற இவ்வுலகப் பொருள்களையும், நிலைவாழ்வுக்குரிய திடமான நம்பிக்கை, ஞானம், நம்பிக்கை அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ளும்போது, நமது நம்பகத்தன்மை உறுதிபடுத்தப் படுகிறது. இந்த நாளில் இறைவனுக்குப் பணிசெய்யும் மக்களாக மாறிடப் பொறுப்புள்ள பணியாளராக வாழ்ந்திட இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. நம்பதக்கவராய், பெறுப்புள்ள பணியாளராய் வாழ்ந்திடுவோம்...

வாசகமுன்னுரை:



முதல் வாசக முன்னுரை:



பழைய ஏற்பாட்டின் காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இறைவாக்கினர் ஆமோஸ் இஸ்ரயேலரிடமிருந்த சமுதாயச் சீர்கேடுகளைப் பற்றித் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். வறியோரை ஏமாற்றி அவர்களைக் கொள்ளையடித்தவர்களுக்கு, கள்ளத் தராசினைப் பயன்படுத்துவோர்க்கு எதிராக யாவே கடவுள் தனது கோபத்தைக் வெளிக்காட்டுகின்றார். எச்சரிக்கை விடுக்கின்றார். அதே நிலையில் தான் இன்றும் நம்மில் பலர் தங்கள் வாழ்க்கையை நடத்தி, அடுத்தவரை ஏமாற்றுபவர்களுக்குக் கடவுளின் கோபத்தை எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பவுல் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் அனைவருக்காகவும் பரிந்துரைத்து இறைவனை மன்றாட, நன்றி கூறிட அன்புடன் அழைக்கின்றார். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்படையதாமாகும் என்கிறார். கடவுளுக்கும் மானிடருக்கும் இடையே அமைந்துள்ள பாலம் தான் இறைமகன் இயேசுகிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் திருத்தூதராகவும், நற்செய்திப் போதகராகவும் பணியாற்றும் திருத்தூதர் பவுல் தூய உள்ளத்தோடு, கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்ய அழைக்கும் திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்திலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்




ஏழைகளைத் தூக்கிவிடும் ஆண்டவரைப் போற்றுங்கள்.
திருப்பாடல் 113: 1-2. 4-6. 7-8


ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி


மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி


ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடிமக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. எங்கள் மீட்பராகிய இறைவா! வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களிலும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது என்ற இறைவாக்குக்கு இணங்கச் செயல்படும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் துறவறத்தார் அனைவரையும் தீயசக்திகளிடமிருந்து பாதுகாத்து நல்ல உடல் சுகத்தையும் ஆன்மீகப் பலத்தையும் பாதுகாப்பையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கல்வாரியை நோக்கி வாருங்கள், கல்வாரியைப் பாருங்கள் என்று புனித எஞ்சலினா கூறியதுபோல் நாங்கள் உம் கல்வாரி நோக்கி வரவும், நல்ல கள்வனின் சிலுவையில் மீட்பு பெற்றது போல நாங்களும் மீட்படையவும், சிலுவையை உற்று நோக்கிப் பாவங்களிலிருந்தும், நோயிலிருந்தும் விடுதலை அடையவும் அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த திறமைகளைப் பிறருக்காய் பயன்படுத்தவும் அதற்குத் தேவையான ஞானத்தை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 4. அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா! நேர்மையானவாழ்வு வாழவும்,  ஆணவபோக்கை விட்டு விட்டு குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும் அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..


www.anbinmadal.org

Tuesday, September 10, 2019

பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



விடுதலைப் பயணம் 32:7-11,13-14
1திமொத்தேயு 1:12-17
லூக்கா 15:1-32



திருப்பலி முன்னுரை:


 காணாமல் போன ஆட்டைக் கண்டு மனமகிழ்ச்சி கொள்ளும் இறைவனைத் தேடி இன்று ஆலயம் வந்துள்ள இறைஇயேசுவின் மகிழ்ச்சிக்குரிய அன்பர்களே! உங்கள் அனைவரையும் பொதுக்காலம் ஆண்டின் 24ஆம் ஞாயிறுத் திருவழிப்பாட்டில் மனமாற்றத்தோடு, மன்னிப்பையும் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.

பொதுவாக நாம் ஒரு பொருள் காணாமல் போய், மீண்டும் தேடிக் கண்டு, அதைப் பெறும் போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்படி இருக்கத் தான் படைத்த மானிடர் தன்னை விட்டு வெகுதூரம் சென்றவர் மீண்டும் மனமாற்றம் அடைந்துத் தன்னிடம் வருதைக் காணும் தந்தையாம் கடவுளின் மகிழ்ச்சிக்கு எப்படி இருக்கும் என்பதை இன்றைய வாசகங்கள் தெள்ளத்தெளிவாகப் பதிவு செய்கின்றன.

விடுதலைப் பயணநூலில் மோசே கடவுளின் கோபம் இஸ்ரயேல் மக்களின் மேல் உள்ளதை அறிந்து அவர் கொடுத்த வாக்குறுதியை நினைவுட்டி மக்களைக் காப்பாற்றினார். திருத்தூதர் பவுல் இயேசுவிற்கு எதிராய் நடந்தாலும் கடவுள் தனக்காக மனமிரங்கியதை நினைவுகூர்கின்றார்.

இந்த நாளில் இறைவனின் மகிழ்ச்சிக்குக் காரணமான நம் மனமாற்றத்தையும் அதன் பலனாக மன்னிப்பையும் பெற்றுக் கொள்ள இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இறைவனை மன்றாடுவோம்.. இறைஇரக்கத்தை வேண்டுவோம்..


வாசகமுன்னுரை:



முதல் வாசக முன்னுரை:


இஸ்ரயேல் மக்கள் யாவே கடவுளுக்கு எதிராகக் கன்றுக்குட்டியை வழிபாட ஆரம்பித்தனர். உண்மைக் கடவுளிடமிருந்து வெகுதொலைவுக்குச் சென்றனர். எனவே கோபம்  கொண்ட கடவுள் மோசேயிடம் தன் மக்களை அழிக்கப்போவதாகக் கூறியபோது, மோசே கடவுளிடம் அவரின் அன்புக்குரிய இறையடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும் நினைவுக் கூர்ந்து மக்களுக்காக மன்றாடித் தண்டனையிலிருந்து காப்பாற்றியதை எடுத்துரைக்கும் முதல்
வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை:

திருத்தூதர் பவுல் இயேசு கிறிஸ்துவுக்கு எதிராய் நடத்திய போரட்டத்தை உணர்ந்தும் கடவுள் அவருக்குக் காட்டிய இரக்கத்தை நன்றியோடு பதிவுச் செய்கிறார். நிலைவாழ்வை அடைய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கைக் கொள்ள இருப்போருக்கு அவர் முன்மாதிரியாய் விளங்க அருள் புரிந்ததைப் பெருமிதத்துடன் நமக்கு விவரிக்கும்  இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எமுதிய முதல் திருமுகத்தலிருந்து வரும் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..



பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 51:1-2,10-11,15,17
பல்லவி: நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்.

கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.  என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்-பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.  உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை.  -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:



1. என்றென்றும் இரக்கமுள்ள எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர்கள் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உமது இரக்கத்தையும், மன்னிப்பின் மாண்பையும் உணர்ந்தவர்களாய், அடுத்திருப்பவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளும் தந்தையின் மனபாக்குவத்தையும், அன்பையையும் பெற்றுச் சாட்சியவாழவு வாழத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அருளே உருவான எம் இறைவா! புனித அன்னை தெரசாள் போல் நற்கருணையில் வீற்றிருக்கும் உம்மீது அளவில்லா அன்பும், நம்பிக்கையும் கொண்டு தன்னலமற்ற சேவையில் அவரைப் போல் எமக்கு அடுத்திருப்பவர்களை இறைமகன் இயேசுவாகப் பாவித்துத் தொண்டுள்ளம் தொண்டவர்களாய் பணிவிடைச் செய்து வாழ்ந்திட அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அன்போடு எம்மை ஆதரிக்கும் எம் இறைவா! கைவிடப்பட்ட சிறார், நோயாளர், வயதானவர்கள், உணவு அல்லது வேலையின்றி இருப்போர், வீடற்றவர், கைதிகள், அகதிகள், புலம்பெயர்ந்தோர், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்பட்டோர் என, உதவி தேவைப்படும் அனைவருக்கும், பணிபுரிந்து வருபவர்கள் நல்ல ஆரோக்கியத்தையும், பொருளாதார உதவிகளைப் பற்றிடவும்,  உம் அன்பில் என்றும் நிலைத்திருந்துப் பணியாற்றிட வேண்டிய நல்ல சூழல் அமைந்திடத் தேவையான வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றும் வாழும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். தேவையில் இருக்கும் எம் சகோதர, சகோதரிகள் முன்பாக, எங்கள் பார்வையைக் குறைத்து, எம் இதயங்களைக் கடினப்படுத்தும் தன்னலத்தைத் தோற்கடிக்கவும், குடும்பங்களில் ஆரோக்கியமும், நட்புறவும், சமாதானமும், ஒற்றுமையும் ஓங்கி வளர்ந்திட வரங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. பரிவன்புமிக்க எம் இறைவா! எம் இளையோர், இளம் பெண்கள், சிறுவர், சிறுமியர் இவர்களின் மனங்களில் இறுமாப்பு, ஆடம்பரம் என்ற இருள் சூழ்ந்துக் கொள்ளமால் அன்பு, பிறர்நலம் காணும் நல்லெண்ணம் வளர்ந்திடவும், தாழ்வுமனப்பான்மை அகற்றித் தாழ்ச்சியில் உயர்ந்து ஓங்கிடத் தேவையான வரமருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Thursday, September 5, 2019

பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு


 பொதுக்காலம் ஆண்டின் 23ஆம் ஞாயிறு




இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 

சாலமோனின் ஞானம் 9:13-19
பிலமோன் 1:9b-10,12-17
லூக்கா  14:25-33

அன்னை மரியாளின் பிறப்புப் பெருவிழா  
திருப்பலி முன்னுரை


நமது தாய் திருச்சபை அன்னை மரியாளின் மகத்துவத்தை ஐந்து பெருவிழாக்கள் – மூன்று திருவிழாக்கள் – பதினேழு நினைவு நாட்கள் மூலம் பறைசாற்றிக் குதுகலிக்கிறது. நாம் மகிழ்ந்துக் கொண்டாடும் விழாக்களில் ஒன்றுதான் அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா.

“அன்னை மரியாவை நாடாமல் இறையருளைப் பெறுவதற்கான விருப்பம் என்பது சிறகுகளின்றிப் பறக்க விரும்புவதைப் போன்றது.” என்றார் திருத் தந்தை 12ம் பத்தி நாதர்.

அமல உற்பவியாய் – அழகின் முழுமைக் கொண்டவளாய் – அலகையின் தலை மிதிக்க முன் குறிக்கப் பட்டவளாய் – அகிலம் உருவாகும் முன்னரே ஆண்டவரின் திட்டத்தில் இடம் பெற்றவளாய்த் திகழ்ந்தவள் நம் அன்னை,

‘’ அருள் நிறைந்தவரே வாழ்க “ என்று ஆண்டவரின் தூதராலும் – ‘’ பெண்களுக்குள் பேறு பெற்றவர் நீரே “ என்று அன்பு உறவினர் எலிசபெத்தாலும் அன்னை புகழ்ந்தேற்றப் படுகிறார்.

தாழ் நிலை நின்றத் தன்னை, தலைமுறைகள் போற்றும் பேறுடையாளாக உயர்த்திய இறைவனின் கருணையை எண்ணி, இதயம் களி கூர்ந்து அன்னையின் இதழ்கள் உதிர்த்தவையே இவ்வார்த்தைகள். “ என் ஆன்மா ஆண்டவராம் கடவுளை ஏற்றிப் போற்றுகிறது.”

தாழ்ச்சியையும் நன்றி உணர்வையும் நமக்கு உணர்த்தும் இவ்வார்த்தைகளை , நாமும் நமது உள்ளத்தில் இறுத்தி ஆவியிலும் உண்மையிலும் அதனைத் தியானிப்பவர்களாய் இத்திருப்பலியில் பங்கேற்போம். இறையருளைப் பெற்றுச் செல்வோம்.



வாசகமுன்னுரை:


முதல் வாசக முன்னுரை:


” நான் உம் அடியான்: வலுவற்ற மனிதன்: குறுகிய வாழ்வினன்: நீதித்தீர்ப்பும் திருச்சட்டமும் பற்றிச் சிற்றறிவுப் படைத்தவன்” என்று தன்னிலை உணர்ந்து அதே வேளையில் யூதர்களின் முரட்டுத் தனத்தையும் உணர்ந்துக் கடவுளிடம் ஆசிரியர் கேட்ட ஒரு வேண்டுதல் என்னவாகயிருக்கும்? அது தான் இறைவனின் அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும் என்பதே. சாலமோனுக்குச் சிறப்புப் பெற்றுத் தந்த ஞானத்தை நிறைவாய் நாமும் பெற்றிட இந்த முதல் வாசகத்தில் கேட்டு மனதில் பதிவு செய்து இறைவனை வேண்டுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை:


திருத்தூதர் பவுல் உரோமைச் சிறையிலிருந்தபோது கொலோசை நகர நண்பரான பிலமோன் என்பவருக்கு எழுதிய இக்கடிதத்தில் பிலமோனின் அடிமை ஒனேசிம் என்பவரை மன்னித்து அன்புடன் சகோதரக் கிறிஸ்தவராகவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரி இப் பரிந்துரைக் கடிதத்தை எழுதி அனுப்புகிறார். கிறிஸ்தவ அன்பு மன்னிப்பு மிகுந்ததாய், தீமைச் செய்தோரையும் அன்புடன் ஏற்றுக் கொள்வதாய் அமைய வேண்டும் எனும் உயரியக் கருத்தை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

பதிலுரைப்பாடல்


திருப்பாடல் 90: 3-4. 5-6. 12-13. 14,17
பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.


மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. -பல்லவி

வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;  அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். -பல்லவி

எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.  எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! - பல்லவி


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:



1. அனைவரும் மீட்படைய விரும்பும் எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை முதல் பொதுநிலையினர் வரை உள்ள அனைவரும் உமது திட்டத்தையும், உமது திருவுளத்தையும் உய்த்துணர்ந்துத் திருஅவையைத் திறம்பட நடத்திடத் தேவையான ஞானத்தையும், தூய ஆவியாரின் அருளும் பெற்றிடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. புனிதரின் பேரின்பமாகிய எம் இறைவா! அன்னை மரியாளைப் போல தாழ்ச்சியும், பொறுமையும், அன்பும், தொண்டுள்ளமும் பெற்று அவரைப்போல் என்றும் தொண்டாற்றி அன்னைப் போல் உம்மை எம் உள்ளத்தில் வைத்துக் கொள்ள அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. மரியாளை அன்னையாக எமக்கு தந்த இறைவா! பெண்மையைப் போற்றி மதித்து, பெண்சிசுக்களும் சமூகத்தில் வாழ உரிமைப் பெற்றவர்களே என்பதனை உணர்ந்து, கரு அழிப்பு, கலைப்புச் செய்யாது நீர் தரும் பரிசினைப் போற்றிப் பாதுகாத்திடவும், பிறப்பின் அர்த்தம் நிலைநாட்டப்பட, உமது திருவுளம் அறிந்து நடந்திடவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கை, எம் குடும்பங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், அன்னைg; பக்தனாக இல்லாமல் சீடராய் வாழ்ந்து, உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டும் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.எல்லாரும் எல்லாம் ஆன எம் அன்பு இறைவா! இச்சமுதாய முன்னேற்றத்தில் உறுதுணையாக உள்ள எம் ஆசிரியர் பெருமக்களை உம் அன்பு அரவணைப்பில் ஒப்படைக்கின்றோம். அவர்களை நிறைவாக ஆசீர்வதித்து அவர்கள் அருள் வாழ்வில் சிறந்து விளங்கிடவும், நலமும், வளமும் பெற்றுச் சிறப்புடன் உழைக்கவும், சிறந்த நல்சான்றோர்களை இவ்வுலகிற்கு இன்னும் அதிகமாக வழங்கிடத் தேவையான ஞானத்தையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org