Wednesday, August 25, 2021

  ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

 


  இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

 
  இணைச்சட்டம் 4:1-2, 6-82.  
  யாக்கோபு 1:17-18,21-22, 273.   
  மாற்கு 7:1-8, 14-15, 21-23
 

  திருப்பலி முன்னுரை:  

 
  ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க ஆலயத்தில் கூடியிருக்கும் இறைமக்களே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள். பெயரளவில் மட்டும் வாழாமல் உள்ளத்தில் தூய்மை பெற இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.  கடவுள் தந்த சட்டங்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை மறந்துவிட்டு அவற்றை சடங்களாக மாற்றினர் இஸ்ரயேல் மக்கள்.
கடவுளின் பார்வையில் மாசற்றவர்களாகவும், தேவையிலிருப்போருக்கு உதவிடவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்து கொள்ளவும் திருத்தூதர் யாக்கோபு நம்மை அழைக்கிறார்.  தீதும் நன்றும் பிறர்தர வாரா! என்ற தமிழ் புலவரின் வார்த்தைகளையே இறைமகன் இயேசுவும் வாழ்வுதரும் வார்த்தைகளாக நமக்கு இன்று தருகிறர். உள்ளத்திலுள்ள எண்ணங்களே வார்த்தைகளாக வெளியே வருகின்றன.  சட்டங்கள் மனிதனை புனிதனாக மாற்றத்தான். மனிதநேயம் வளர்வதற்க்கும், அர்த்தமுள்ள வாழ்வுக்கு அடித்தளம் உருவாக்குவதற்கும், உள்ளத்தில் தூய்மை பெற்று அதைச் செயலில் வெளிப்படுத்துகின்ற உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலி கொண்டாடத்தில் முழுமனதுடன் பங்கேற்போம்..  

வாசகமுன்னுரை:

 

முதல் வாசக முன்னுரை:  

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பணயம் செய்து கானான் நாட்டிற்கு வந்த போது மோசே கடவுளின் சட்டங்களை தொகுத்து வழங்கிய பேருரைகளிருந்து தம் மக்களுக்கு கடவுளின் சட்டங்களை பின்பற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும் என்ற வாசகத்திற்கு செவிமெடுப்போம்.  

பதிலுரைப் பாடல்

திபா 15: 2-3. 3-4. 5  
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? 

மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுவர்; 3ய தம் நாவினால் புறங்கூறார். -பல்லவி

தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர். -பல்லவி

தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். -பல்லவி  

இரண்டாம் வாசக முன்னுரை:  

இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு கடவுளிடம் இருந்தே நல்லவைகள் வருகின்றன. அவர் நல்லவர். சினமற்ற வாழ்வு மேலானது. பொதுநலம் கொண்டு அடுத்தவர்களின் வாழ்வு சிறக்க உழைப்பதே இறைவனுக்கு ஏற்புடையது என்று அறிவுறுத்தும் இவ்வாசகத்தைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.   

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:  

அல்லேலூயா, அல்லேலூயா! " தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார் " அல்லேலூயா.  

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.  

உண்மையான கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கும் அன்பு இறைவா! எம் திருச்சபையின் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் சுயநலமறந்து மனித நேயத்திலும், ஞானத்திலும், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டி வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..  

நலம் காண நல்வழி நடத்தும் எம் இறைவா, உள்ளங்களில் மாற்றங்கள் இல்லாமல் சட்டங்களை கடமைக்காகக் கடைப்பிடிப்பதால் பயனில்லை என்பதை எங்கள் நாட்டுத்தலைவர்கள் உணர்ந்து சுயநலமற்ற சேவைகளில் ஈடுபட வேண்டிய வரத்தை தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..  

அன்பினால் அனைவரையும் ஒன்றிணைத்த எம் அருள் நாதா! எங்கள் குடும்பங்களில் உமது மதிப்பீகளை அறிந்து கடவுளின் பார்வையில் மாசற்றதுமான சமயவாழ்வு வாழவும், உலகத்தால் கறைபடாதபடி தம்மை காத்துக் கொள்ள வேண்டிய வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..  

எல்லாரும் எல்லாம் பெற விரும்பும் அன்பு இறைவா! இச்சமுதாயத்தால் கைவிடப்பட்டு வாடும் அநாதைகள், கைம்பெண்கள் அவர்களின் குடும்பங்கள் சமுதாயத்தில் ஏற்றம் பெற வேண்டியும் அவர்களுக்காய் தன்னலமற்ற சேவை செய்யும் நல் உள்ளகளுக்காகவும் அதற்கானப் பொருளாதர உதவிகள் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

அனைவரையும் ஆதரிக்கும் எம் இறைவா! அரசியல் மாற்றங்கள்  காரணமாக அல்லப்படும் எம் மக்களை உம் கரங்களில் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்கு ஆறுதலும், தேற்றவும் தர, நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கப் பெற்று, புதுவாழ்வு தொடங்க, நிறைவாய் உமதருள் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்..     

 www.anbinmadal.org 

Print Friendly and PDF

Monday, August 16, 2021

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் ஞாயிறு

 



இன்றைய வாசகங்கள்


யோசுவா 24:1-2, 15-18
எபேசியர். 5:21-32
யோவான். 6:60-69

திருப்பலிமுன்னுரை


 ஆண்டின் பொதுக்காலம் 21 ஆம் ஞாயிறுத் திருப்பலிக்கு வந்துள்ள இயேசுவின் இனிய நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துகள்.

இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் வழியே நமக்கு உணர்த்தப்படும் ஒரு மனிதத் திறமை... அதுதான், முடிவெடுக்கும் திறமை. மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்தத் திறமையை நமக்கு நினைவுறுத்துவது... இன்றைய வாசகங்களில், யோசுவா, மற்றும் புனித பேதுரு ஆகியோர் கூறும் இரு கூற்றுகள்:

"நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்" என்று யோசுவா சொல்கிறார்.ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" என்ற புகழ்பெற்ற வார்த்தைகளைப் பதிலாகச் சொல்கிறார், சீமோன் பேதுரு. உறுதிகொண்ட நெஞ்சுடன் இருவர் எடுத்த முடிவைப் பறைசாற்றும் கூற்றுகள் இவை.

சீடர்கள் வாழ்ந்துவந்த அந்தப் பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்தப் பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பைக் கொடுத்தது. இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. பேதுருவும், ஏனைய சீடர்களும், இயேசுவுடன் தங்குவதற்கு எடுத்த அந்த முடிவு, சக்திமிகுந்த சாட்சிகளாக இன்றும் வாழ்கின்றனர்.

யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை


இஸ்ரயேல் மக்கள் உண்மையான கடவுளுக்கு ஊழியம் புரிந்தாலும் பிற இனத்தெய்வங்களையும் வழிபட்டு, இருமனத்தோராய் திகழ்ந்தனர். இந்நிலையில் யோசுவா அம்மக்களிடம், "நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். இதைக் கேட்ட மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 15-16. 17-18. 19-20. 21-22

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். -பல்லவி

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். -பல்லவி

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது. -பல்லவி

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; ஆண்டவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


திருத்தூதர் பவுலடியார் இன்றைய வாசகத்தில் எபேசிய மக்களிடம் கிறிஸ்துவையும், திருஅவையையும் கணவன் மனைவியுடன் ஒப்பிட்டு, எவ்வாறு நாம் அன்பு செய்ய வேண்டுமென்று கற்றுக் கொடுக்கின்றார். இயேசு கிறிஸ்துவும் திருஅவைப் போல இனிதே வாழ்ந்திடக் கணவன் மனைவியர்க்கு விடுக்கும் அழைப்பைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.


1.அன்பின் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் முழுமனதுடனும், உறுதியுடனும் ஒருவரை ஒருவர் அன்புச் செய்யவும், அவர்கள் எடுக்கும் முடிவுகளைத் திறம்படச் செய்து இறை இயேசுவின் அன்புச் சீடர்களாகச் சான்றுப் பகரும் வாழ்க்கை வாழத் தேவையான அருள் வளங்களைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

2.அன்பின் இறைவா! மனிதக் குலத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள முடிவெடுக்கும் இந்தத் திறமையை எமக்கு நினைவுறுத்திய யோசுவாவைப் போல, பேதுருவைப் போல எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் ஒருமித்த கருத்தோடு முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயலாக்க வேண்டிய ஞானத்தையும், நம்பிக்கையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

3.அன்பின் இறைவா! வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோர்களை இப்போது உம் திருபாதத்திற்குக் கொணர்ந்துள்ளோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்துத் தம் வாழ்வின் முடிவுகள் நிலைவாழ்விற்கு வழி வகுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

4.அன்பின் இறைவா! இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

5.அன்பின் இறைவா! பெரும் தொற்றுநோயால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் உலக மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

  www.anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, August 12, 2021

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா


மரியாளின் விண்ணேற்பு பெருவிழா

 இன்றைய வாசகங்கள்:-

திருவெளிப்பாடு. 11:19, 12:1-6,10
1கொரிந்தியர். 15:20-26 
லூக்கா. 1:39-56 

 திருப்பலி முன்னுரை:-

இன்று நாம் அன்னை மரியா விண்ணேற்றம் அடைந்த பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நமது நாடு அடைந்த சுதந்திரத்தையும் நினைத்து ஒரு விழா எடுக்கின்றோம். மேற்கூறிய இரண்டு விழாக்களும் சாத்தியமான தன் காரணம் நம்பிக்கை! 

அன்னை மரியாவுக்கு இறைவனது பராமரிப்பின் மீது நம்பிக்கை இருந்ததனால் தான் அவர் இறைவனின் தாயாகும் பேற்றினைப் பெற்றார். மங்கள வார்த்தை அவருக்குச் சொல்லப்பட்டபோது இறைவனின் வாக்கில் நம்பிக்கை வைத்து 'ஆம்' என்று சொன்னார். இறைவனின் தாயானதால் அவரை இறைவன் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார் என்று திரு அவை நம்புகிறது.

ஒரு நாள் நாம் சுதந்திரம் பெறுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால்தான் நம் முன்னோர்கள் தங்கள் உயிரையே தியாகம் வைத்து, சுதந்திரத்திற்காகப் போராடினார்கள்.


எபிரேயருக்கு எழுதிய நூலில் இது விளக்கிக் கூறப்படுகின்றது: "நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவைக் கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவைப் பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்றுப் பெற்றனர்" (எபிரேயர் 11:1-2).


மரி(அன்னை)க்கு விழா எடுத்து அவரை மகிமைப்படுத்தும் இந்த நாளில் நம்மோடு வாழும் நம் அன்னையருக்கும் நாம் மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். அன்னையின் ஆலயங்களுக்குச் சென்று, அவர் முன்பாக உருகி நிற்கின்றோம். ஆனால் நம் அன்னையரை நாம் சரியாகக் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். இது ஒருவிதத்தில் வெளிவேடம்தான். 


மரியன்னையின் மீது அன்பு வைத்திற்கும் நாம், நம்மைப் பெற்றெடுத்த அன்னையின்மீது அன்புகொண்டு அவருக்கு தக்க உதவிகளைச் செய்யவேண்டும். அப்போது தான் நாம் அன்னையின் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளமுடியும்.

ஆகவே, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவான இன்று மரியன்னைக்கு மகிமைச் செலுத்துவோம், அதே நேரங்களில் நம்முடைய அன்னையருக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் செலுத்துவோம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 
வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா. அவருக்கு ஏற்ற மாட்சியையும், துன்பங்களையும் அதன் வழியாக நாம் கண்ட மீட்பையும் எடுத்துக் கூறும் திருத்தூதர் யோவானின் வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்
திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)
பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:


இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டார். இந்த நிகழ்வு அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது மரியாளின் விண்ணேற்பு வழியாக. சாவே கடைசி பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்று இயேசுவின் இரண்டாம் வருகையை எடுத்துக் கூறும் இன்றைய இரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்..

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:-

1. அனைத்தையும் ஆண்டு நடத்தும் இறைவா! எம் திருஅவையிலுள்ள அனைவரும் அடுத்தவருடன் பகிர்ந்துத் தன்னலமற்ற தொண்டுள்ளத்தோடு உம் பணியைச் சிறப்புச் செய்திடவும், உம் உண்மைச் சீடராய் வாழ்ந்திடவும், ஏழைகளின் மகிழ்ச்சியில் இயேசுவைக் காண உமது ஆற்றலைப் பொழிந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எம் மகிழ்ச்சியும், எம் புதையலுமாய் உள்ளவரே எம் இறைவா! உம்மிடம் நாங்கள் பெற்ற ஆன்மீக மற்றும் பொருளாதர வளங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து, நன்மைகள் செய்யும் தாராள மனதைத் தருமாறும். மரியாளைப்போல தாழ்ச்சியிலும், இறைநம்பிக்கையிலும் சிறந்து விளங்க அருள்வரம் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களுக்காகக் காத்திருக்கும் எம் இறைவா! நாங்கள் உம் ஞானத்தையும், இரக்கத்தையும், உம் அன்பையும் தேடக்கூடியவர்களாய், நிலையற்றச் செல்வத்தை விடுத்து நிலையான உம் இறையரசை நாடவும், நீர் எமக்குக் கொடுத்த சுதந்திரக்காற்றை  அனுபவிக்கவும் தேவையான வரங்களை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் இந்தியத் திருநாட்டில் 75ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் எம் நாட்டு அரசியல்வாதிகள்  நாட்டின் மக்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவநலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி தன்னலமற்ற சேவைமனப்பான்மையுடன் உழைத்திட தேவையான உள்ளத்தை அவர்களுக்கு அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
             
www.anbinmadal.org
Print Friendly and PDF

Wednesday, August 11, 2021

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு

பொதுக்காலம் ஆண்டின் 20ஆம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி 

வாசகங்கள். 

1. நீதிமொழிகள் 9:1-62.
2.எபேசியர் 5:15-20
3.யோவான் 6:51-58 

திருப்பலி முன்னுரை: 

இறைஇயேசுவில் அன்பு வாழ்த்துக்கள்! நாம் இன்று ஆண்டின் பொதுக்காலம் 20ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கிறோம். உண்மையான அழியாத உணவை தேர்ந்துக்கொள்ள இன்றைய திருப்பலி வாசகங்கள் நமக்கு வழி காட்டுகிறது.

 அறிவிலியாக இல்லாமல் விவேகமுள்ளவர்களாக வாழ அழைக்கின்றது ஞானம். பகுத்து உணரும் பண்பை அணிந்து கொள்ளுங்கள். அதுதான் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நமக்கு துணை நிற்கும் என்று பவுலடியார் சுட்டிக் காட்டுகிறார். ஆம் அன்பர்களே! இறைமகன் இயேசுவின் தன்னையே அழியாத உணவாக நமக்கு தருகிறார். இத்திருவுடலை உண்டு இரத்தத்தைக் குடிப்பது என்பது நற்கருணை உட்கொள்வது மட்டுமல்ல, இயேசுவின் உணர்வுகளையும், மதிப்பீடுகளையும் உள்வாங்கி அதற்கேற்ப வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைக்கிறார்.

 கடவுளின் கொடைகளில் ஒப்பற்ற மிக மேலான கொடை ஒன்று உண்டு என்றால் அது நற்கருணை மட்டுமே. இத்தகைய கொடையின் அருமை பெருமைகளை உணர்ந்து இத்திருப்பலியில் மன்றாடுவோம். வாருங்கள் இறைமக்களே! 

வாசகமுன்னுரை: 

முதல் வாசக முன்னுரை

முதல் வாசகத்தில் இறைவனின் ஞானம் நம்மை அறிவிலிகளாய் இராமல் ஞானமுள்ளவர்களாக வாழ அழைக்கிறது. அதுபோல மதிகேடர்களையும் தான் கட்டிய வீட்டிற்கு வந்து விருந்துண்ண அழைக்கிறது. வாழ்வைச் சுவைக்க புத்தியுடன் ஞானமும் தேவை என வலியுறுத்தும் நீதிமொழிகள் நூலிருந்து எடுக்கப்பட்ட வாசகத்திற்கு செவிமெடுப்போம். 

  பதிலுரைப் பாடல் 

திபா 34: 1-2. 9-10. 11-12. 13-14 

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். 

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி 

ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு நன்மை ஏதும் குறையாது. -பல்லவி 

 வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப் பற்றி உங்களுக்குக் கற்பிப்பேன். வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா? -பல்லவி 

அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை உன் வாயைவிட்டு விலக்கிடு! தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு. -பல்லவி

இரண்டாம் வாசக  முன்னுரை

இரண்டாம் வாசகத்தில் இந்த நாட்கள் பொல்லாதவை. காலத்தை முற்றும் பயன்படும் முறை அறியவும், தாறுமாறான வாழ்வுக்கு வழிவகுக்கமால் பார்த்து கொள்ளவும், ஆவியால் ஆட்க்கொள்ளப்பட்டு இயேசுவின் பெயரால் கடவுளுக்கு நன்றி கூறி ஞானத்துடன் வாழ அறிவுரைகளை எபேசியர் திருமுகத்தின் வழியாக பவுலடிகளார் இங்கே பதிவு செய்கிறார். கவனமுடன் கேட்போம். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

 ஞானமுள்ளவர்களாக வாழ எங்களை அழைக்கும் அன்பு இறைவா! பொல்லாத காலத்தில் தவிக்கும் திருச்சபையை திறம்பட நடத்திச் செல்ல எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவருக்கும் ஞானத்தையும் விவேகத்தையும் கொடுத்து இயேசுவின் விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

கரிசனை அன்பு கொண்ட எம் இறைவா, தெளிவில்லாத அரசியல் சூழல் காரணமாக பரிதவிக்கும் எம் மக்களுக்கு ஞானத்தையும், விவேகத்தையும் அளித்து, எதிர்வரும் பொல்லாத காலத்தை சமாளிக்கவும், என்றும் மறவாமல் உமக்கு நன்றி கூறும் நல்ல உள்ளத்தைத் தருமாறு உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம் இறைவா.. 

நற்கருணை வழியாக எங்கள் மத்தியில் வாழும் இறைமகன் இயேசுவே! நாங்கள் உமது அன்பின் கட்டளைகளை கடைபிடித்து நிறைவாழ்வு தரும் உணவாகிய உமது சதையையும், இரத்தத்தையும் நீர் எமக்கு அளித்த உன்னத கொடை என்பதை உணர்ந்து, அந்த அன்பை எமக்கு அடுத்திருப்பவருடன் பகிர்ந்து, இணைந்து வாழ வழிநடத்திமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.. 

  உலகை மனிதனுக்காக படைத்த அன்பு இறைவா! நீர் படைத்த வளங்கள் நிறைந்த இவ்வுலகில் வாழ்வது கொஞ்கக்காலம் என்று, பேராசையால் தானே எல்லாவற்றையும் அனுபவிக்காமல் உலகின் இயற்கை செல்வங்களை வருங்கால தலைமுறையினருக்கும் விட்டுக்கொடுத்து வாழவும், இவற்றின் வளங்களைப் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள நல்ல ஞானத்தை தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, August 5, 2021

ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் வாரம்


ஆண்டின் பொதுக்காலம் 19ஆம் வாரம்


இன்றைய வாசகங்கள்


1 அரசர்கள் 19: 4-8
எபேசியர் 4: 30 - 5: 2
யோவான் 6: 41-51

திருப்பலி முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 19ம் ஞாயிறு நற்கருணை விருந்தில் பங்கெடுக்க வந்துள்ள இறை இயேசுவின் நண்பர்களே உங்கள் அனைவருக்கும் இயேசுவின் திருப்பெயரால் இனிய நல்வாழ்த்துகள்.

பிறப்பு என்று என்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருந்தே தீரும் என்பது இயற்கையின் நியதி. காலத்தின் கட்டாயம். இதற்கு யாரும் விதிவிலக்குப் பெற முடியாது. ஆனால் நம்மைச் சாகாமைக்குஇட்டுச் செல்லும் வழியையும் அந்த வழியில் உதவும் உணவையும் பற்றி இன்றைய வாசகங்கள் பேசுகின்றன.

இயேசுவை நாம் உண்டால் மட்டும் போதாது. நாம் இயேசுவாக மாற வேண்டும். என்னை உண்போர் என்னால் வாழ்வர் என்ற வார்த்தை அந்த உண்மையை உணர்த்துகிறது. வாழ்வது நானல்ல. இயேசுவே என்னில் வாழ்கிறார் என்று கூற வேண்டும். எனவே இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு, அவர் தந்த அருள்வாக்கைக் கடைப்பிடித்து, அவரது திருவுடலை உண்டு, சாகா வரம் பெற்றவர்களாக நாம் வாழ்வோம். தொற்று நோய் காலத்தில் அவரின் நல்ல சமாரியனாக வாழ்ந்திட இத்திருப்பலியில் இறைவனிடம் மன்றாடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை


போலி தெய்வங்களோடும் அவற்றை வழிபடும் மனிதரோடும் மேற்கொள்ளும் போராட்டம் நீண்டது என்றும், அப்போராட்டத்திலிருந்து தப்பித்துச் செல்லாமல், அதைத் துணிவுடன் சந்திக்க, இறைவன் நமக்குத் தேவையான சக்தியை, தன் வானதூதர் வழியாக, உணவாக வழங்குவார் என்று இறைவாக்கினர் எலியாவின் வழியாக இன்றைய முதல் வாசகம் சொல்லித் தருகிறது.

பதிலுரைப் பாடல்


திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். -பல்லவி

அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்து நின்று காத்திடுவர். ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை


மீட்பு நாளை முன்னிட்டு நாம் மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக இருக்கும் தூயஆவியாரை வருவிக்காதீர்கள். தீமை அனைத்தையும் விட்டுவிடுங்கள். நன்மை செய்து பரிவு காட்டுங்கள். இறைஇயேசுவைப் போல் அன்பு கொண்டு வாழுங்கள் என்ற திருத்தூதர் பவுலடியார் எபேசியருக்கு எழுதிய  திருமுகத்தின் வழியாக விடுக்கும் அழைப்பைக் கவனமுடன் கேட்போம். அதனை வாழ்வாக்குவோம்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.தோழமையின் நாயகனே எம் இறைவா! எம் திருத்தந்தைத் தொடங்கிப் பொதுநிலையினர் வரை அனைவரும் கிறிஸ்துவில் நம்பிக்கைக் கொண்டு அவருடைய வார்த்தையின்படி நடந்து அவருடைய திருவுடலை உண்டு நிலைவாழ்வு பெற்றுக்கொள்ளத் தேவையான இறைப்பற்றுதலும், ஆவியாரின் துண்டுதலும் பெற வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கிச் சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், ஒவ்வொரு குடும்பமும் மனுகுலத்தின் புதையல் என்பதை உணர்ந்து, இத்தொற்றுநோய் காலத்ததில் பொறுப்புள்ள உம் பணியாளராக வாழ வேண்டிய வரங்களைத் தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3.இன்றைய நவீன காலத்தில் உலகில் ஏற்படும் நவீன மாற்றத்திற்குத் தங்களையே இழந்துக் கலாச்சாரச் சீர்கேடுகள், சமூகத்திற்கு எதிரான தீய சிந்தனைகள் இளமையில் இறைபிரசன்னத்தை உணராமல் எதிர்கால வாழ்வை இழந்த எம் இளையோர், சிறியோர் ஆகிய அனைவரும் கிறிஸ்தவ வாழ்வின் நெறிகளைப் பின்பற்றி வாழ வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.உம் பேரன்பால் உறவுகளைப் பேணிக்காக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் உமது விழுமியங்களை உணர்ந்துப் பணி செய்யவே என்ற உன்னத நோக்கத்தை வாழ்வில் கடைபிடித்து மக்களின் நல்வாழ்வில் சுயநலமின்றிக் கவனம் செலுத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

5. வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே! மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org
Print Friendly and PDF