Tuesday, December 27, 2022

 புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி 01-01-2023

 புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி

அன்னை மரியாள் இறைவனின் தாய்

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1. எண்ணிக்கை6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

 திருப்பலி முன்னுரை

அன்பு இறைமக்களே!
புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.
பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாளென மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.
ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!
இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்:
நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இரையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!
ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நிறை அமைதியைப் பெறுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!

 வாசக முன்னுரை

 முதல் வாசகம்

 புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. ஒன்று கடவுளை ஆண்டவர் என்று திரும்பத் திரும்ப அழைப்பதால் வரும் ஆசீர்!  இரண்டு அவரது முகத்தின் திருவுருவின் காட்சி ஓர் ஆசீர்! மூன்று நிறைஒளி ஆசீர்!  அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில் அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
திருப்பாடல் 67: 1-2, 4, 5,7
கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

 இரண்டாம் வாசகம்

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம்தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

2 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்முறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

3.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளுமின்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

4. எம்பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், நாடு இழந்தோர், புலம்பெயர்ந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட, உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துப் படைப்பின் மேன்மை உணர்ந்து, இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி. எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து, எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராகக் கொடுத்து, அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பின் அடையாளமாகவும் எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...


www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, December 19, 2022

கிறிஸ்து பிறப்புப் பெருவிழா 25-12-2022

 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா-
இரவில் திருப்பலி



இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

இரவுத் திருப்பலி வாசகங்கள்

I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,
இருள் சூழ்ந்த பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அஃது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?
துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம்.
நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!

வாசக முன்னுரை-

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1-2a. 2b-3. 11-12. 13 (பல்லவி: லூக் 2: 11)
பல்லவி: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா.
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். - பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். - பல்லவி
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். - பல்லவி
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். - பல்லவி

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்றத் தம்மையே ஒப்படைத்தத் தியாகத்தை வியந்து கூறும் திருத்தூதர் பவுலடியாரின்  வார்த்தைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் நமக்காகப் பிறந்திருக்கிறார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. எங்கள் வாழ்வின் மீட்பராக இயேசு கிறிஸ்து கொடுத்த எம் இறைவா! விண்ணகம், மண்ணகத்தை நோக்கி அடியெடுத்து வைத்த 2023ஆம் ஆண்டில் உலகமாந்தர்கள் அனைவருக்கும் நலமும், அமைதியும், மகிழ்ச்சியையும் அளித்து ஒரே மந்தையாய் உம் திருஅவையின் வழிநடத்தும் அனைத்துத் தலைவர்களுக்கும் எமது அருட்பொழிவை நிறைவாய் பொழிந்துப் பாதுகாத்து வழி நடத்திச் செல்லத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை
மன்றாடுகின்றோம்.

2. ஏழ்மையில் இனிமைக் காணும் நாயகனே எம் இறைவா! இவ்வருடத்தின் இறுதிநாள்களில் இருக்கும் எங்களைக் கடும் வெயில், வறட்சி, புயல், பெரும்மழை போன்ற பல்வேறு இயற்கைசீற்றங்கள் அனைத்திலிருந்து எங்கள் அனைவரையும் காத்து, பராமரித்து, உம் அன்பில் நிலைத்து நிற்க, உம் பணியைத் தொடர்ந்து ஆற்றிடத் தேவையான அருளைப்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்! இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம்முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. விடுதலையும் வாழ்வுக் கொடுக்க இறங்கி வந்த எம் இறைவா இன்று இவ்வுலகில் உம் பிறப்பிற்காகவும், புதிய ஆண்டில் நல்வரவிற்காகவும் காத்திருக்கும் அனைத்து மாந்தருக்கும் பழமையைக் களைந்துப் புதிய சிந்தனைகள் நல்லெண்ணங்கள், ஒருவர் மற்றவருக்கு உதவக்கூடிய பிறரன்புச் சிந்தனைகளைப் பொழிந்து நல்லுலகம் காணவும், உமது பிறப்பின் வழியாக ஏழை எளியவர்கள் வாழ்வு வளம் பெறத் தேவையாக அருள் வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5.திருக்குடும்ப நாயகனே என் இறைவா! இன்றைய உலகம் பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப மாற்றங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இந்நாட்களில் குடும்பங்களில் ஏற்படும் உறவின் விரிசல்களிலிருந்து விடுபட்டு, மனிதர்கள், மனிதர்களோடு பேசக்கூடிய நிலைமாறிக் கைப்பேசி, தொலைதொடர்புச் சாதனங்கள் இவை தான் இன்று முக்கியமானவை என்ற சிந்தனைகளோடு நில்லாமல் இவற்றைக் கடந்து, இவையெல்லாம் நம்வாழ்வின் ஓர் அங்கம் தான் என்ற உண்மை நிலையை உய்துணர்ந்து வாழ உமது ஆவியின் அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

விடியற்காலத் திருப்பலி

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:

விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செயல்கள் வழிவகுக்கும்.!
இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமார கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக்கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 97: 1,6. 11-12
பல்லவி: பேரொளி இன்று நம்மேல் ஒளிரும்; ஏனெனில் நமக்காக ஆண்டவர் பிறந்துள்ளார்.
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். - பல்லவி
நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன.
நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:-

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்த புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமை பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக! அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

பகல் திருப்பலி

இன்றைய வாசகங்கள்

I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.லூக்கா 2:15-20

திருப்பலி முன்னுரை:

விடியற்காலையில் வாடைக்காற்று வீசும் இளம்காலை பொழுதில் இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!
இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றி பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நாம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோரு பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். உண்மையில் இன்று நம் உள்ளங்களில் வந்து பாலன் இயேசு பிறப்பதற்கு இந்நற்செயல்கள் வழிவகுக்கும்!
இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத்திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமார கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளைக் காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை அழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படி சொல்லிருப்பரோ!  ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதைக் காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.

பதிலுரைப் பாடல்

திபா 98: 1. 2-3a. 3cd-4. 5-6
பல்லவி: உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
 
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக் கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. - பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். - பல்லவி
உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். - பல்லவி
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள். ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவுள்  தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! புலர்ந்தது நமக்குப் புனித நாள்; பிற இனத்தாரே, வருவீர், இறைவன் மலரடி தொழுவீர்; ஏனெனில் உலகின்மீது எழுந்தது பேரொளி இன்றே. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

💌 வாட்ஸ்ஆப் வாழ்த்து மடல்கள் 💌
உங்கள் நண்பர்களுக்கான வாழ்த்துமடல்கள் வாட்ஸ் ஆப் மூலம் அனுப்புதற்காக...
whatsapp-greetings in Tamil


மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.


அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்! 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, December 12, 2022

 திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு 18/12/2022

திருவருகைக் காலம் நான்காம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 7:10-14
உரோமையர் 1:1-7
மத்தேயு1:18-24

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் நான்காம் ஞாயிறு -அமைதியின் ஞாயிறு. இறைவனின் ஆசீரை நாடி அவரின் இல்லம் வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.

திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிற்றில் நாம் ஏற்றும் மெழுகுதிரி 'அமைதி' என்ற மதிப்பீட்டைக் குறிக்கிறது. இயேசுவின் வாழ்க்கை 'அமைதி' என்ற வார்த்தையில் தொடங்கி, அதே வார்த்தையில் நிறைவு பெறுவதாக இரக்கத்தின் நற்செய்தியாளர் லூக்கா எழுதுகின்றார். இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அமைதியின் செய்தியாக வழங்கப்படுகிறது. தான் விண்ணேற்பு அடையும் முன் இயேசு தன் சீடர்களுக்குத் தன் அமைதியை விட்டுச் செல்கின்றார்.

இயேசு யார் யாரைச் சந்தித்தாரோ அவர்களின் வாழ்வில் உடல் நலம் பொங்கியது. உள்ள அமைதிப் பொங்கியது. உயிர்ப்புப் பொங்கியது. உன்னத வாழ்வு பொங்கியது. இதே இயேசு நம்மையும் சந்திக்க வருகிறார். நாம் தயாராக உள்ளோமா?

'நமக்காக, நம்மோடு அவர்' என்பதே அவரின் வாக்குறுதி. எனவே அவர் தரும் அமைதியான நிலைவாழ்வை நோக்கிப் பயணிக்க, அவரைச் சந்திக்கத் தேவையான வரங்களை வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் அமைதி என்றும் நம்மில் நிலைப் பெறுமே!

 வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் யூதா நாட்டைப் போர் மேகம் சூழ்ந்திருக்கும் நேரத்தில் ஆகாசு அரசன் அமைதி இழந்தச் சூழலை வாசிக்கின்றோம். வெளியிலிருந்து வந்த பகைவர்களால் தன் அமைதியை இழந்தார் ஆகாசு. ஆண்டவரிடம் அடையாளம் கேட்கத் தயங்கிய ஆகாசுக்கு 'இம்மானுவேல்' எசாயா மூலம் அடையாளம் தரப்படுகிறது. கடவுள் நம்மோடு என்றால் நம் செயல்கள் கடவுளுக்குரிய செயல்களாக இருக்க வேண்டும். இதனை மனதில் கொண்டு இவ்வார்த்தைகளை அமைதியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் எழுந்தருள்வார்: மாட்சிமிகு மன்னர் இவரே.
திருப்பாடல்: 24:1-2. 3-4. 5-6
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை: நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம். ஏனெனில், அவரே கடல்கள்மீது அதற்கு அடித்தளமிட்டார்: ஆறுகள்மீது அதை நிலை நாட்டினவரும் அவரே. பல்லவி

ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்: பொய்த் தெய்வங்களை நோக்கித் தம் உள்ளத்தை உயர்த்தாதவர்: பல்லவி

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்: தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் அருளும் அமைதியும் உரித்தாகுக என்று உரோமை வாழ்மக்களை வாழ்த்திடும் திருத்தூதர் பவுல் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு அனைத்து இனத்தவரையும் இயேசுகிறிஸ்துக்கு உரியவர்களாய் இருக்க அழைக்கவிடுக்கிறார். இறைவாக்கினர் வழியாக நற்செய்தியைத் தருவதாகத் திருமறை நூலில் வாக்களித்திருந்தார் இறைவன். அந்த நற்செய்தியே மீட்ராம் இயேசுகிறிஸ்து என்பதை உணர்ந்து அமைதியுடன் இவ்விரண்டாம் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல், அதாவது ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ எனப் பெயரிடுவர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. என் இதய தெய்வமே! அமைதியின் இறைவா! உமது வருகையை எதிர்நோக்கியுள்ள உம் திருஅவையில் நீர் தரும் அமைதியைத் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் மற்றும் பொதுநிலையினர் பெற்று மகிழவும், அந்த அமைதியை இவ்வுலகம் பெற்றிட அனைவரும் இணைந்துச் செயல்பட உமது உடனிருப்பையும், சேவைமனப்பான்மையையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நேர்மையின் சிகரமே எம் இறைவா!  எம்குடும்பங்களில் அனைவரும் 'யோசேப்பு போல் நேர்மையாளராய், வெளியே இருந்து கொடுக்கப்பட்ட சட்டத்தையும் தாண்டிய மனச்சான்றின் சட்டத்தையும், சக மனிதரின் மாண்பையும் உயர்வாக நினைக்கின்ற நல்ல இதயத்தையும், சுயநலமற்று உறவுகளைப் போற்றிட வளர்த்திட வேண்டிய நல்வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் காக்கின்ற எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எம் இளையோர் சட்டங்களையும் தாண்டித் தங்கள் மனச்சான்றுக்கும், பிறரது மாண்புக்கும் மதிப்புக் கொடுத்து, அதன்படி நலமும் வளமும் அருளும் உம்முடைய உண்மை ஊழியர்களாய் எம்சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை நீக்கி உழைத்திடும் சேனையாய் மாறிட வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எந்நாளும் எங்களோடு இருக்கும் இறைவா! உலகெங்கும் திக்கற்றவர்களாய் பல்வேறு காரணங்களால் தவிக்கும் உம் மக்களைக் கண்ணேக்கியருளும். அவர்களின் தேவைகள் நிறைவுப் பெற்றவும், வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாடங்களில் நிறைவான மன அமைதியைப் பெற்றுத் தாங்கள் இருக்குமிடத்தில் முழுஅங்கிகாரம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ்ந்திட வேண்டிய வரங்களைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



www.anbinmadal.org
 
Print Friendly and PDF

Monday, December 5, 2022

திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு 11/12/2022

 திருவருகைக் காலம் மூன்றாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 35:1-6,10
யாக்கோபு 5:7-10
மத்தேயு 11:2-11

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு - மகிழ்ச்சியின் ஞாயிறு. இறைவனின் ஆசீரை நாடி அவரின் இல்லம் வந்துள்ள இறைமக்களே! இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க அன்புடன் வரவேற்கிறோம்.
மீண்டும் இறைவாக்கினர் எசாயா அகமகிழ்ந்து பூரித்துக் கூறுவதாவது பாழ்நிலங்கள் புத்துயிர் பெற்றுப் பூத்துக் குலுங்கும். ஆண்டவரின் மாட்சியையும் நம் கடவுளின் பெருமையையும் காண்பார்கள். மக்கள் அனைவரும் நலமும் வளமான வாழ்வும் பெற்றுப் பெரும் மகிழ்ச்சியில் சீனோனுக்கு வருவார்கள். துன்பமும் துயரமும் பறந்தோடும் என்றார்.
பயிரிடுபவரைப் போலக் காலம் கனியும் வரை பொறுமையோடு காத்திருங்கள். தண்டனைத்தீர்ப்பு ஆளாகாதவாறு உங்களைக் காத்துகொள்ளுங்கள் என்று திருத்தூதர் யாக்கோபு நமக்கு அறிவுரை வழங்குகிறார்.
இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவான் மெசியாவைக் கண்டு கொண்டதின் மகிழ்ச்சியில் தம் சீடர்களை உறுதிசெய்ய அனுப்பிவைக்கின்றார். இறைவாக்கினரை விட மேலானவர் என்றும் மனிதராய் பிறந்தவர்களில் மிகப் பெரியவர் என்றும் தன் முன்னோடிக்குப் புகழ்மாலைச் சூட்டுகிறார். ஆம் அன்பர்களே யோவாயைப் போல் மெசியாவைக் கண்டுணர்ந்துக் கரடுமுரடான பாதையை வெற்றிகரமாகக் கடந்து அவர்தரும் நிலைவாழ்வை மகிழ்ச்சியோடு நோக்கிப் பயணிக்க அவரின் உடனிருப்பை தேடி, வேண்டி இத்திருப்பலியில் செபிப்போம். தேடுவோம் - நம் தேடலும், தேடுபொருளும் மெசியாவானால் மகிழ்ச்சியே!

மகிழ்ச்சி 

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

எசாயா நூலிருந்த எடுக்கப்பட்டுள்ள இந்த வாசகம் அடிமைத்தனத்தலிருந்து விடுபட்டுத் திரும்பும் இஸ்ரயேலரின் மனநிலையைப் பிரதிப்பலிக்கின்றது. யாவே கடவுள் பாழ்நிலங்களைச் சோலையாக மாற்றுகிறார். நலிவுற்றோரைப் புதுபலன் பெற்றவைத்துப் பயணிக்க வைக்கிறார். மகிழ்ந்து பாடிக்கொண்டே சீயோனுக்கு வருவர். பெரும் மகிழ்ச்சியால் அவர்கள் முகம் மலர்ந்திருக்கும். மெசியாவை நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கும் எசாயாவின் இவ்வார்த்தைகளை மகிழ்ச்சியுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

 ஆண்டவரே, எங்களை மீட்க வந்தருளும்.
திருப்பாடல் 146: 7,8,9,-10

ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.  பதிலுரை

 ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். பதிலுரை

ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார். சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா! பதிலுரை


இரண்டாம் வாசக முன்னுரை

பயிர்செய்வோர் எப்படிப் பொறுமைக் காத்துக் காலம் கனியும் வரை காத்திருந்து தன் உழைப்பின் பயனைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைவாரோ, அதைபோல் நாம் ஆண்டவரின் வருகைக்கு நம் உள்ளங்களை உறுதிபடுத்திக்கொள்ள அறிவுரைக் கூறும் திருத்தூதர் யாக்கோபு, ”நடுவர்கள் வந்து விட்டார்கள். எனவே நிலைவாழ்வைக் காத்துக்கொள்ள நம்பிக்கையோடு பயணியுங்கள்” என்று விடுக்கும் மகிழ்சிசியின் அழைப்பைக் கவனமுடன் செவிமெடுப்போம்.


நற்செய்திக்கு முன்  வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தி அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. அனைத்தையும் 'கடந்தவர்.' இருந்தாலும் எம் 'உள் உறைபவரான கடவுளே'! மெசியாவின் வருகையின்போது ஒரு தலைகீழ் மாற்றம் உருவாகிறது. அல்லது ஒரு புதிய பிறப்பு உண்டாகிறது. . இப்படியாக, மாற்றம், புதிய பிறப்பு, நிறைவு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்பதை உணர்ந்துக் கொள்ளவும், உமது வருகையை எதிர்நோக்கியுள்ள உம் திருஅவைக்குத் தேவையான ஞானத்தையும், உம் வழிகாட்டுதலையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. பொறுமையின் சிகரமே எம் இறைவா! உழைப்பின் பயனைஅடையப் பொறுமையையும், துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தையும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கி இறுதியில் நிலைவாழ்வு என்றும் மகிழ்ச்சியைப் பெற்றிட, இந்த வருகைக் கால்த்தில் எங்களை நாங்கள் உமது வருகைக்காகத் தயாரிக்க, பகைமை மறந்து உறவுகளைப் புதுப்பிக்கத் தேவையான உம் ஆசீர் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, மகிழ்ச்சியை உருவாக்கிக் கொள்வது என் உள்மன வேலைதான் என்பதை உணர்ந்து எம் இளைய சமுதாயம் அந்த மகிழ்ச்சியைப் பெற்றிடத் தங்கள் பொறமை, கோபம், வெறுப்புகள், பொய்மை, சுயநலம் ஆகியவற்றை விடுத்துப் புதிய உருவெடுக்கவும், அவர்களின் உள்மனம்காயங்கள் மறைந்திடவும் வேண்டியாருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உமது நலன்களால் நிரப்பிடும் எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் மகிழ்ச்சி. பொறுமையாக வரும். நிலைத்து நிற்கும். மகிழ்ச்சி ஆழமானது. அஃது உள்ளம் சார்ந்தது. நம் புலன்களுக்குப் புலப்படாத அவரில் இருப்பதுதான் மகிழ்ச்சி என்பதை உலகமக்கள் அனைவரும் உணர்ந்துக் கிறிஸ்துவின் பிறப்பு விழாவைக் கொண்டாடி எங்கள் தயாரிக்க வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, November 29, 2022

 திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு 04/12/2022


 திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 11:1-10
உரோமையர் 15:4-9
மத்தேயு 3:1-12

திருப்பலி முன்னுரை

இன்று இயேசுவின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு.
இயேசுவின் முன்னோடியான திருமுழுக்கு யோவானின் மனமாற்றத்திற்கான அழைப்பை ஏற்றுத் தெய்வத்தின் திருவடியை நோக்கி வந்துள்ள இறைகுலமே வருக. உங்கள் வரவு உங்களுக்கு நலமும் வளமும் தருவதாக.
கிறிஸ்துவின் வருகை நீதி, அமைதி, நேர்மை, ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டிய காலம். இத்தகைய உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வுக்கு உயிர்த்தெழ எசாயா இறைவாக்கினர் வேறுவேறான இயல்புகளைக் கொண்ட மிருகங்களே இணைந்து வாழ்வதாக இயம்புகிறார். இத்தகைய கனவு வாழ்வை நீங்கள் செயலாக்க, கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவரை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார் பவுலடியார்.
மனமாற்றத்தை நம்மிடையே விரும்பும் திருமுழுக்கு யோவான் அந்த மனமாற்றத்திற்கேற்றச் செயல்களால் வாழ்ந்துக்காட்டுங்கள் என்று வலியுறுத்துகின்றார். அமைதியையும் உறவையும் நிலைநாட்ட வந்த இயேசுவின் பிறப்பு நம் முறிந்த உறவுகளை ஒன்றிணைக்க வேண்டும். நம் குடும்பங்களில் உறவுமுறிவுகளையும், தவறுகளையும் சீர்படுத்த முன்வருவோம். இவ்வாறு நாம் வாழும் இடங்களில் அமைதியையும் அன்பையும் நிலைநாட்டும்போது அங்கே ஆண்டவர் இயேசு பிறக்கின்றார். இவ்வாறு ஆண்டவர் வழியை ஆயத்தம் செய்து பயனுள்ள விதத்தில் கிறிஸ்துவின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுவோம். வாரீர்.

அமைதி

                                                 

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

உறவுச் சிக்கலை நீக்கி உறவு வாழ்வு உயிர்த்தெழ இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் ஏசாயா அழைப்பு விடுக்கின்றார். சிங்கக்குட்டியும் கொழுத்த காளையும் கூடிவாழும், பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும், பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். அதேபோல் பல்வேறு இயல்புகளைக் கொண்ட நாம் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாக வாழ வேண்டும் என்பதே எசாயாவின் எதிர்பார்ப்பும், கனவும் ஆகும்.  எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

அகமகிழ்வோடு  ஆண்டவருடைய காலத்தில் நீதி தழைத்தோங்கும்.
திருப்பாடல்72: 1-2, 7-8, 12-13,17

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பதிலுரை
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். பதிலுரை
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பதிலுரை
அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! பதிலுரை

 இரண்டாம் வாசக முன்னுரை

எசாயாவின் கனவுகளை நினைவாக்க நீங்கள் கிறிஸ்து இயேசு உங்களை ஏற்றுக் கொண்டதுபோல, நீங்களும் ஒருவர் ஒருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் அழைப்பு விடுக்கின்றார் பவுல் அடிகளார். மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. எனவே இயேசு கிறிஸ்துவைப் போல நாமும் அனைவரும் ஒரு மனத்தினராய்ச் செயல்படுமாறு எடுத்துரைக்கும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1. மனமாற்றத்தை இன்று என்றுரைத்த எம் இறைவா! உறவுகளாலும் தவறுகளாலும் உடைந்துக் கிடக்கும் இத்திருஅவை உமது மறைநூல் தரும் அறிவுரைகளால் நம்பிக்கைப் பெற்று இயேசுவைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு எல்லா நிலைகளிலும் உமது அன்பை உணர்ந்தவர்களாய் தந்தை மகன்போல் ஒன்றித்துச் சாட்சியவாழ்வு வாழ வேண்டிய அருளைஉம் திருஅவைக்குப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! எசாயா மூலம் எங்களுக்கு நீர்  உரைத்தது போல் எங்கள் குடும்பங்களிலும் அன்பு, சமாதானம், விட்டுகொடுக்கும் நல்ல உள்ளங்கள், உம்மைப் போல் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் போன்ற நற்செயல்களால் உறவுகள் மேன்படவும், பலப்படவும்  அருள்பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம்மைத் தேடிவந்த அன்பே எம் இறைவா, உலகமெங்கும் நிகழ்ந்த இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்காவும், அவைகள் விரைவில் தங்களின் இயல்பு வாழ்க்கையைத் தொடரவும், புலம்பெயர்ந்தோர் மற்றம் குடிபெயர்ந்தோர் மற்றவர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுப் புனர்வாழ்வுப் பெற்றிட உமது இரக்கத்தை அவர்களில் மேல் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எதிர்பார்ப்பின் நமபிக்கையான எம் இறைவா! இத்திருவருகைக்காலத்தில் எங்கள் இளைய சமுதாயம் உம்மைப் போல் தமக்கு அடுத்திருப்போரை ஏற்று அவர்கள் வாழ்வு மேன்படவும், அறிவுப்பூர்வமான உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் செய்து அதன் மூலம் தங்கள் கரடுமுரடான, கோணலான வாழ்க்கை முறையை மாற்றிடத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, November 22, 2022

 திருவருகைக் காலம் முதல் ஞாயிறு 27/11/2022

திருவருகைக் காலம் முதல் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எசாயா 2:1-5
உரோமையர் 13:11-14
மத்தேயு 24:37-44

திருப்பலி முன்னுரை

திருவழிப்பாட்டின் புதிய ஆண்டைத் தொடங்கும் இவ்வேளையில் திருவருகைக்கால முதல்ஞாயிறு ஆன இன்று இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பு வாழ்த்துகள்.
கிறிஸ்துவின் முதல் வருகையைக் கொண்டாடத் தயாராகும் நாம் அவரின் இரண்டாம் வருகைக்கு நம்மை நாமே தயாரிக்க வேண்டியநிலையில் உள்ளோம். இன்றைய மூன்று வாசகங்களும் இறைமகனின் வருகைக்காக இறைமக்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும். இறைமகனின் வருகையை எதிர்நோக்கி வாழ வேண்டும் என்ற கருத்துகளை வலிறுத்திக் கூறுகின்றன. நற்செய்தி வாசகம் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து, விழிப்பாய் இருக்க அழைப்பு விடுக்கின்றது.
இன்று ஏற்றப்படும் திருவருகைக் கால முதல் மெழுகுவர்த்தி நம்பிக்கையைக் குறிக்கின்றது. இருள் ஒளி அகற்றி அக ஒளி ஏற்றி இறைவனின் ஒளியின் மக்களாய் இந்தக் கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்குத் தயாராகும் வேளையில் அவரின் இரண்டாம் வருகை எதிர்நோக்கிப் புனிதப் பயணம் மேற்கொள்வோம். இயேசுவின் வருகை எப்போது என்று தெரியாதநிலையில் நாம் விழிப்புடன் இருந்திட வேண்டிய ஞானத்தையும், இறுதிகாலத்தை நினைவில் கொண்டு நாம் மீட்பிற்கான செயல்களில் ஈடுபடவேண்டிய அருளையும் பெற்றிட உருக்கமுடன் வேண்டி இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

எதிர்நோக்கு

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

மெசியா வரும்போது எல்லா மக்களுடைய கதியையும் நிர்ணயிப்பதில் எருசலேமுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என இன்றைய வாசகம் தெரிவிக்கிறது. மனிதரிடையே அமைதியைக் கொணர மனிதருடைய முயற்சி மட்டுமே போதாது. கடவுள் தம்முடைய அருளை நமக்கு அளித்து, மனித உள்ளங்களில் அமைதி உணர்வை எழுப்பி, மனிதர் ஒருவர் ஒருவர் மட்டில் அன்புறவு கொண்டு வாழ்ந்திட அழைக்கின்றார். எசாயா விடுக்கும் அழைப்பை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

அகமகிழ்வோடு  ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல்122: 1-2, 4-5, 6-7, 8-9

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன்.  எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.  பல்லவி

 ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.  அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; "உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!  உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக!  பல்லவி

உன்னுள் சமாதானம் நிலவுவதாக!" என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.  நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

உரோமை நகரக் கிறிஸ்தவ சபைக்குப் பவுல் எழுதிய கடிதத்தில் பவுல் ''இறுதிக்காலம்'' பற்றிப் பேசுகின்றார். இயேசு கிறிஸ்து வருகையால் உலகில் கடவுளின் உடனிருப்பு ஒரு சிறப்பான நிலையை எய்தியது. உலகில் ஒரு புதிய விடியல் தோன்றியது. என்றாலும், மனித வாழ்க்கையிலிருந்து இருள் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. பாவத்தின் சக்தியும் நம்மைவிட்டு முழுமையாகப் பிரியவில்லை. இருளையும் பாவத்தையும் அறுதியாக முறியடித்து வெற்றிகொள்ளும் கட்டம் இயேசுவின் இரண்டாம் வருகையின்போதே நிறைவுறும் என்று எடுத்துரைக்கும் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உம்மை எதிர்பார்த்திருப்போர் எவருமே ஏமாற்றம் அடையார் என்றுரைத்த  எம் இறைவா!  உம் இரண்டாம் வருகையை எதிர்நோக்கியிருக்கும் இத்திருஅவை உமது ஒளியில் பயணிக்கும் திருஅவையாய், இறைமகன் இயேசுவை அணிந்தவர்களாய், ஊனியல்பின் நாட்டங்களை விடுத்து, விழிப்புடன் இருந்து,  உம்மை வரவேற்க ஆயத்தமாய் இருக்க வேண்டிய ஞானத்தையும், விழிப்புணர்வோடு இருக்கவேண்டிய அருளையும் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களின் நலமும் வளமும் நிலைவாழ்வுமான எம் இறைவா! புதிய திருவழிபாட்டு ஆண்டில் வரவிருக்கும் உமது வருகைக்குத் தயாராகவும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கு எங்களைத் தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ளவும், தன்னலமற்றுப் பிறருடன் பெற்ற வளங்களைப் பகிர்ந்திடவும், நற்செயல்களால் ஏழைஎளியோர்களின் நலங்களைப் பேணும் உறுதியான நல்மனதினை அருளவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் குற்றங்களை மறந்தாலும் எங்களை ஒருபோதும் மறவாத எம் இறைவா! மரித்தோரை நினைவுகூறும் இந்நாட்களில் அவர்களின் குற்றங்குறைகளை மறந்து, மன்னித்து அவர்களை உமது புனிதர்கள் கூட்டத்தில் சேர்த்து உம்மைப் போற்றிடவும், எமக்காய் மன்றாடவும் அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! எம்நாட்டில் நிகழும் இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், பொருளாதாரச் சீர்கேடுகளால் தம் இன்னுயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்காய் மன்றாடுகின்றோம். அக்குடும்பத்தினருக்கு ஆறுதலும் தேற்றுதலுமாய் இருந்து மீண்டும் நல்வாழ்வுப் பெற்று, உமது இரக்கம் என்றும் அவர்க்கு உண்டு என்ற நம்பிக்கையை அவர்களது இதயத்தில் விதைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. உமது அளவற்ற இரக்கத்தால் எம்மை ஆட்கொண்ட  எம் இறைவா! நாங்கள் ஒப்புரவு மற்றும் மன்னிப்பிற்கான கதவுகளை ஒரு நாளும் மூடாமல், மற்றவர்க்கு நம்பிக்கையின் பாதையாகச் செயல்படவும், இந்த ஆண்டில் பெற்றுக் கொண்ட கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து இறைஇயேசுவின் சீடர்களாய் தொடர்ந்து வாழ்ந்திடத்  தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, November 15, 2022

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு 20/11/2022

பொதுக்காலம் ஆண்டின் 34ஆம் ஞாயிறு

 கிறிஸ்து அரசர் பெருவிழா


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2 சாமுவேல் 5:1-3
கொலேசையர் 1:12-20
லூக்கா 23: 35-43

திருப்பலி முன்னுரை

கிறிஸ்து அரசரின் அன்பில் வளர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 34ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் அன்புடன் வரவேற்கின்றோம்…

இன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவை தாய் திருச்சபைக் கொண்டாடி மகிழ்கின்றது. கிறிஸ்துவின் திருப்பாடுகளின் நினைவுக் கூறப்படுகின்ற வேளையில் அன்று “”நீ யூதரின் அரசனானால் உன்னையே நீ விடுவித்துக்கொள்“ என்று எள்ளி நகையாடியக் காட்சியை நாம் நினைவுகூறுகின்றோம். “இவர் யூதர்களின் அரசன்”“ என்று கிறிஸ்து அரசருக்கு அன்றே முடி சூட்டி அவரது சிலுவையில் எழுதி வைத்தார்கள். அதனை நினைவுகூறும் வகையில் பொதுக் காலம் இறுதிநாளில் கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடி மகிழ்கின்றோம். என்றும் அரசர் கிறிஸ்துவின் பெயரைச் சொன்னால் மூவுலகமும் ஆர்ப்பரிக்கும். கிறிஸ்து அரசர் பெருவிழா பொருளுள்ளதாகவும், பொருத்தமானதாகவும் அமைந்திருக்கின்றது என்பதை நமது மனதில் பதிவு செய்து திருவருகைக் காலத்தை வரவேற்க ஆயத்தமாவோம்.

கிறிஸ்து அரசர் பெருவிழாவை கொண்டாடும் நாம் இயேசுவை நம் தலைவராக ஏற்று ஏழைகளின் வாழ்வு ஏற்றம் பெற இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து கிறிஸ்து அரசரின் நல்லாசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

தாவீதை இஸ்ரயேலின் அரசராக இஸ்ரயேலின் பெரியவர்கள் திருப்பொழிவுச் செய்கின்றனர். அரசர் என்பவர் ஆள்பவர், தலைவர், வழிகாட்டி, வழிநடத்துபவர் என்ற பொருள் கொள்ள வேண்டும். ஆள்பவர்கள் சுயநலம் இல்லாமல் ஆண்டவரின் உதவியோடு தலைமைத் தாங்கி வழிநடத்தும் நல்ல ஆயனாகச் செயல்பட முன்வர வேண்டும். இதைத்தான் இன்றைய முதல் வாசகம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இவ்வாசகத்தைக் கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.
திருப்பாடல் 122: 1-2, 4-5

"ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்", என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன் எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்த செல்வார்கள். அங்கே நீதி வழங்க அரிணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை
பிளவுகளும், பரிவுகளும் ஏற்படுவதைத் தவிர்த்து இயேசுவை முன் மாதிரியாக் கொண்டு தன்னையே அர்ப்பணித்த உடைந்துபோன உறவுகளப் புதுப்பித்து ஒப்புரவுப் பணியில் ஈடுபட வேண்டும். இந்தக் கருத்தைத்தான் இன்றைய இரண்டாம் வாசகம் நமக்கு எடுத்துரைக்கின்றது. புனித பவுலடியாரின் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நாமும் இறையரசில் நுழைவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. உலகைப் படைத்தாளும் இறைவா! உம் திருஅவையில் உள்ள அனைவரும் இயேசு கிறிஸ்துவை தம் இதய அரசராக ஏற்று அவரின் இறையரசு இவ்வுலகின் எத்திசையிலும் பறைசாற்றவும், உலகமக்கள் அனைவரையும் அவரின் அரசில் இணைத்திட ஒரு மனதினராய் உழைக்கத் தேவையான வரங்களைப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. அனைவருக்கும் வாழ்வளிக்கும் இறைவா! உங்கள் பங்கில் உள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் உமது மகத்துவத்தை அறிந்து உம்மைத் தங்கள் இல்லங்ளின் அரசராக ஏற்றுத் தங்களின் வாழ்க்கை முறையால் தமக்கு அருகில் இருப்போருக்கு உம் இறையரசின் சாட்கிகளாய் வாழ்ந்துக் காட்டிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அன்புக்கும் ஒற்றுமைக்கும் ஊற்றான இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் எம் இளைய தலைமுறையினர் இறையரசின் விழுமியங்களைத் தங்களுக்குள் பெற்று இச்சமுதாயத்திற்குப் புனிதர்களைப் போல் முன்மாதிரியான நல்வாழ்வு வாழ்ந்திடவும், தன்னலமற்ற சேவையால் உமது இரக்கத்தைக் காட்டும் நல் உள்ளங்கள் உடையவராக மாறிடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான எம் இறைவா! இயற்கைப் பேரிடராலும், பொருளாதார மாற்றங்களால் அவதிபடும் மக்களுக்கு நலமும் வளமும் நிறைவான வாழ்வும் கிடைத்திடவும், ஆள்வோரின் கரிசனையும், பாதுகாப்பும் பெற்றடவும், சிரம்மின்றிப் பொருளாதார ஏற்றம் பெற்றடத் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, November 7, 2022

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு 13/11/2022

பொதுக்காலம் ஆண்டின் 33ஆம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

மலாக்கி 4: 1-2
2தெசலோனிக்கர் 3: 7-12
லூக்கா 21: 5-19

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவின் அன்பில் மலர்ந்த இறைகுலமே! ஆண்டின் பொதுக்காலம் 33ஆம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடங்களில் பங்கேற்க வந்துள்ள அனைவரின் வரவு நல்வரவு ஆகுக…

இறைவாக்கு வழிபாடு இன்று நம் முன்வைக்கும் கருத்துகள் யாதெனில் இறைவனில் மனௌறுதியடன் கடைசிவரை இருந்தால் நிலைவாழ்வு என்னும் வெற்றியைப் பெற முடியும் என்பதே…

இதையே மலாக்கி இறைவாக்கினர் கூறுகிறார் "ஆண்டவரின் பெயருக்கு அஞ்சி நடக்கின்ற உங்கள்மேல் நீதியின் கதிரவன் எழுவான். அவனுடைய இறக்கையில் நலம் தரும் மருந்து இருக்கும்" என்று உழைத்து உண்ணப் பவுலடியார் கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிடுகிறார்.
 
எருசலேம் ஆலயத்திற்கு வரவிருக்கும் பேரழிவை எடுத்துரைக்குக் கிறிஸ்து, அவரின் முன்னிட்டு நமக்கு வரும் நிந்தனைகளைப் பற்றியும், அதை எப்படி எதிர்க்கொள்வது எனபதைப் பற்றியும் ஆழமாகப் பதிவுச் செய்கிறார். அதேவேளையில் அவர் நமக்கு நாவன்மையையும், ஞானத்தையும் தந்துப் பலப்படுத்துவதைப் பற்றி எடுத்துரைக்கும் அவர் நாம் மன உறுதியோடு இருந்து நம் வாழ்வைக் காத்துக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார். ஆண்டவரில் மன உறுதியுடன் இருந்து நிலைவாழ்வைக் காத்துக் கொள்ள இன்றைய திருப்பலியில் முழுமையாகக் கலந்து இறைஇயேசுவின் ஆசீர் பெறச் செபிப்போம். வாரீர்.

வாசக முன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில்  மலாக்கி நூலில் ஆண்டவரின் நாள் வருவதைப் பற்றி முன்னுரைக்கின்றார். இரு கருத்துகளை நம் கண் முன்னே வரைகின்றார். ஒன்று ஆணவக்கார்ர்களுக்கும், கொடுமை செய்வோருக்கும் நிகழபோவதையும், இரண்டு கடவுளை மனவுறுதியுடன் பற்றிக்கொள்பவர்களின் வெற்றியைப் பற்றியும் ஆகும். இந்தச் சிறிய வாசகம் “சரியானப் பாதையில் உறுதியுடன் நடந்தால் வெற்றி நமதே” என்பதை விளக்கிக்கூறுவதை கவனமுடன் மனதினில் பதிவுசெய்வோம்.

பதிலுரைப்பாடல்

 மக்களினங்களை ஆண்டவர் நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
திருப்பாடல் 98: 5-6, 7-8, 9

யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.  ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கிக் கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,  பல்லவி

கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!  ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்;   பல்லவி

ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் உழைக்காதவன் உண்ணலாகாது. நாங்கள் உழைப்பது போல் நீங்களும் உழைக்க வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். பிறர் உழைப்பில் வாழ்வதைக் கண்டிக்கும் அவர் கிறிஸ்துவின் பெயரால் உழைக்க மனமில்லாத அனைவரையும் உழைத்து உண்ணவேண்டுமென்று கட்டளையிடும் தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் வார்த்தைகளைக் கவனமுடன் கேட்டு நம் வாழ்வை வளமாக்குவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நீதியின் கதிரவனை எம்மேல் எழச் செய்யும் இறைவா! உம் திருஅவை இயேசு கிறிஸ்துவின் பெயரின் நிமித்தம் எதிர்க்கொள்ளும் எல்லாவிதமான நிந்தனைகளையும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களையும் கடந்து எம்திருத்தந்தை, ஆயர்கள், திருப்பணியாளர்கள் அனைவரையும் காத்து, அவர்களுக்கு வேண்டிய மன உறுதியையும், ஞானத்தையும் அருள்மாரிப் பொழிந்து வழிநடத்தவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. நாவன்மையையும் ஞானத்தையும் எம்மேல் பொழியும் இறைவா! உங்கள் பங்கில் உள்ள குடும்பங்களில் உள்ள அனைவரும் தம் சொந்த உழைப்பில் வாழவும், அதில் உண்மையுடனும் நேர்மையுடனும் இருந்து உமது விழுமியங்களை வாழ்வாக்கவும், உழைக்கமுடியாத நிலையிலுள்ளவர்களைப் பேணிக்காக்கவும், மனித மாண்பை நிலைநாட்டவும் தேவையான வரங்களைப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அருட்கொடைவள்ளலே இறைவா! புனிதர்கள் மற்றும் மரித்த ஆன்மாக்களை நினைவுகூறும் இந்நாள்களில் புனிதர்களின் வாழ்விலிருந்து நல்லவற்றை நாங்கள் எங்கள் வாழ்வில் கடைபிடிக்கவும், உத்திரிக்கிற ஸ்தலத்தில் உள்ள ஆன்மாக்கள் விரைவில் ஈடேற்றம் பெற்று உமது புனிதர்களின் கூட்டத்தில் இணைந்து உம்மைப் போற்றிட வேண்டிய அருள் வரங்களைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. புனிதர்களின் பேரின்பமாகிய எம் இறைவா! எங்கள் அருகில் உள்ள ஏழைகள், துயருறுவோர், தனிமையில் விடப்பட்டோர், நோயாளிகள், அனைவருக்கும் இறைவனின் அன்பையும் பரிவையும் அளிக்கும் அன்புக் கருவியாக எம் இளைய சமுதாயம் மாறிவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, November 2, 2022

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு 06/11/2022


பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2மக்கபேயர் 7:1-2,9-14
2தெசலோனிக்கர் 2:16-3:5
லூக்கா 20:27-38

திருப்பலி முன்னுரை

திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க மறுவாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு, மறுவாழ்வு பற்றிய சீரிய கருத்துகளை நம் முன் வைக்கின்றது. கடந்த இரு வார வாசகங்களில் பரிசேயர்களைப் பற்றியும், வரிதண்டுபவர் பற்றியும் அறிந்த நமக்கு, இன்று சதுசேயர்களின் கேள்விகள்மூலம் உயிர்தெழுதலைப் பற்றியும், மறுஉலக வாழ்வைப் பற்றியும் இயேசு நல்ஆசானாகப் போதிக்கின்றார். இவ்வுலக வாழ்வில் திருமணம் - பிள்ளைபேறு இவை உண்டு. ஆனால் மறுமையில் அங்கே உறவுகள் இல்லை. அனைவரும் இறைவனில் ஒன்றே. அங்கே கொடுப்பதுமில்லை. வாங்குவதுமில்லை. அங்கு அனைவரும் சமம் என்பதைப் பதிவு செய்கின்றார். இவ்வுலக வாழ்வின் அடிதளமே நமது மறுமையின் அளவுகோல். எனவே இவ்வுலகில் வாழும்போதே அறச்செயல்களினால் மறுமைவாழ்வின் மேன்மைக்கு அடிதளமிடுபோம். நாம் வாழ்வோரின் கடவுளைக் கொண்டுள்ளோம் நம் நிலைவாழ்வில் என்பதை உள்ளத்தில் பதிவு செய்துகொள்வோம்.
உயிர்த்தெழுதலும், வாழ்வு நானே என்ற இயேசுவிடம் மறுஉலகில் நிலைவாழ்வை பெற்றிட உருக்கமுடன் வேண்டி  இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் அடிப்படையில் தான் அன்று யூத வீரதாயும், அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்துச் சாகத் தயங்கவில்லை. இரண்டாவது மகன் பலியாகுமுன் இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று விர முழக்கமிட்டு மடிந்ததைப் பதிவு செய்யும் மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.
திருப்பாடல்17: 1, 5-6, 8, 15

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.  பல்லவி
என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். பல்லவி
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் மீது நம்பிக்கை கொண்ட நாம் நல்லதையே சொல்லவும், செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பவுலடியார் நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆகையால் ஆணடவர் நம்பிக்கைக்குரியவர். கடவுளின் அன்பும், கிறிஸ்துவின் மனஉறுதியும் நம்மிடையே இருக்க வேண்டும் என்று ஆவலாய் வேண்டும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆதியும் அந்தமும் ஆன எம் இறைவா! இன்றைய காலக்கட்டத்தில் திருச்சபையில் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்நிலைச் சார்ந்த அனைவரும் எதிர்கொள்ளும், பிரச்சினைகளால் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வேதனையுறும் எம் அருள்நிலை தலைவர்கள் அனைவருக்கும் தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் வேதனைப்பட்டபோது நீர் அவர்களுடன் இருந்து பாதுகாத்து வழிநடத்தியது போல இன்றும் நீர் உம் உடனிருப்பைத் தொடர்ந்து வாரி வழங்கிப் பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒளியான எம் இறைவா! எங்கள் நாட்டிலும் உலகளவிலும் நடைபெறும் தீவிரவாதத் தாக்குதல்களால் பல்வேறுபாதிப்புக்குள்ளாகி உறவுகளை இழந்து உடமைகளை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள எம் உடன்பிறவாச் சகோதரசகோதரிகளுக்கு ஆவியின் அருளைப் பொழிந்துத் தேவையான நலன்களையும் வளங்களையும் தந்திட இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எம் இந்தியத் திருநாட்டில் விபத்துகளாலும், மழையினாலும் மக்களும் படும் வேதனைகளைப் பாரும். தங்கள் வாழ்வை இழந்து, குடும்பத்தினரை இழந்து தவிக்கும் எம்மக்களின் கவலைகளைப் போக்கி நலமும், வளமும் பெற்று அவர்களின் வாழ்வை மேம்படச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4ஏழைகளின் பெலனே எம் இறைவா! உம்மை மட்டும் நம்பி வாழும் இவர்களுக்கு, தேவையில் உழல்வோருக்குச் செல்வம் படைத்தவர்கள் தங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து இவர்களின் வாழ்வுச் சிறக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நிறைவாழ்வை வழங்கிய எம் இறைவா எம்குடும்பங்களில் உள்ள முதியேவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, சுதந்திர இழந்து அகதிகளாக அவர்கள் படும் வேதனைகளை, உம் பார்வையினால் அவர்களின் வாழ்வுத் துலங்கவும், ஊதியம் இல்லாத வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் அவலநிலை மாறி, அவர்கள் அமைதியோடும், நிம்மதியோடும் உம் திருஇல்லம் வந்து சேரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, October 25, 2022

பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு 30/10/2022

  பொதுக்காலம் ஆண்டின் 31ஆம் ஞாயிறு

 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சாலமோனின் ஞானம் 11: 22 - 12: 2
2திமோத்தேயு 1:11 – 2:2
லூக்கா 19:1-14

திருப்பலி முன்னுரை

திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 31ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு, இரு கண்களாக நம் மனமாற்றம், இறைவனின் மீட்பு இவ்விரண்டையும் நம் சிந்தனைக்கு விருந்தாகத் தருகின்றது! ஒன்று சக்கேயுவின் கண்கள் மற்றென்று இயேசுவின் கண்கள். கண்கள் சந்தித்தன. மனமாற்றம் விரைவாக ஏற்பட்டது. இயேசுவின் வரவால் அவர் இல்லத்திற்கு மீட்பு உண்டானது. குள்ளமான சக்கேயு இன்று உயர்த்தப் பட்டார். எழுந்து நின்று தவறுகளை ஏற்றுக்கொண்டு அதற்குக் கைம்மாறுச் செய்யவும் தயாரானார். சக்கேயு காட்டு மரத்தில் ஏறினார் எரிக்கோவில். இயேசு கல்வாரி மரத்தில் ஏறினார் எருசலேமில். சக்கேயு ஏறியதால் அவருக்கு மீட்பு கிடைத்தது. இயேசு ஏறியதால் மனுக்குலம் அனைத்திற்கும் மீட்பு கிடைத்தது.

இறைவழிப்பாட்டு ஆண்டின் இறுதி கட்டத்திருக்கும் நமக்கு இந்நிகழ்வுகள் எத்துணை அற்புதமாக உணர்வுகளைத் தருகின்றது.  இந்த நிலை வர வேண்டுமென்றால் முதலில் இயேசுவின் கண்களும், நம் கண்களும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும். அதற்காக இத்திருப்பலியில் நற்கருணை நாதரை உற்று நோக்குவோம். நிலைவாழ்வுக்கான மீட்பை அவரிடம் பெற்றிடுவோம்.


வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இறைவனின் கண்பார்வை மனுக்குலத்தின் மேல் உள்ளது. தீமை, பாவம், குற்றம் என விரிசல் விழும் நேரங்களில் அங்கே அவரின் பரிவிரக்கம் நிறைவையும், முழுமையையும் கொண்டுவருகிறது. உயிர்கள் மீது அன்பு கூர்கின்றவர் எல்லாவற்றையும் வாழ விடுகின்றார். தவறு செய்பவர்களை மெல்ல மெல்ல திருந்த அவகாசம் தருகிறார் என்று சாலமோன் கடவுளின் பரிவிரக்கத்தை எடுத்துரைக்கும் சாலமோன் ஞானநூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

என் கடவுளே, என் அரசே! உம் பெயரை என்றும் போற்றுவேன்.
திருப்பாடல்145: 1-2. 8-9. 10-11. 13

என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.  பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர்.   பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

உன் ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும் உண்மையானவர்; தம் செயல்கள் அனைத்திலும் தூய்மையானவர்.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்குடன் காத்திருந்த தெசலோனிக்கிய திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுலும் இன்று உங்கள் அழைப்புக்கு ஏற்ப உங்களைத் தகுதியாக்குங்கள் என்றும் நல்லெண்ணத்தால் தூண்டப்பெறும் நற்செயல்களில் நிலைத்திருங்கள். ஆண்டவரின் நாள் வந்துவிட்டது என்ற கூறினால் உள்ளம் கலங்கவேண்டாம் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில்  எழுதுகின்றார். தூய பவுலடியாரின் இவ்வேண்டுகோளைக் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார். அல்லேலூயா.

நம்பிக்கையின் மன்றாட்டுகள்

1. அன்பு இறைவா! எம் திருஅவை தனது சொல்லாலும் செயலாலும் தன் கடமையிலும், நெறிதவராது, இவ்வுலகில் எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் கிறிஸ்த வாழ்ந்த வாழ்வை இவ்வலகிற்குப் பிரதிபலிக்கக் கூடியவர்களாகத் தங்களைப் புதுபித்துக் கொள்ளத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நேர்மையின் நாயகனான எம் இறைவா! எங்கள் நாட்டில் நிலவும் மதம், மொழி, இனவேறுபாடுகள் இவைகளைக் களைந்து நாட்டு நலனில் அக்கறை கொண்டு மக்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான, வேலைவாய்ப்புகள், கல்வியறிவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்துச் சமத்துவச் சகோதரத்துவ வாழ்வு துலங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. உலகில் நிலவும் பொருளாதார வேறுபாடுகள், பஞ்சம் கொலை, கொள்ளை, தீவிரவாதம், மதச்சண்டைகள் இவை அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்காக. இப்படிபட்ட தீமையான செயல்களில் தங்களை ஈடுபடுத்தாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் வாழத் தேவையான நல்ல மனதினைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியான எம் இறைவா! இளைஞர், இளம்பெண்கள்தங்கள் வாழவில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கி மவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    

www.anbinmadal.org


Print Friendly and PDF

Monday, October 17, 2022

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு 23/10/2022

பொதுக்காலம் ஆண்டின் 30ஆம் ஞாயிறு

                Icon of the Publican and the Pharisee. This is the second of five Sundays  in preparation for the Great Fast. | Ícones, Ícone, Quaresma      

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

சீராக் : 35: 12-14, 16-18
2திமோத்தேயு 4: 6-8, 16-18
லூக்கா 18:9-14

திருப்பலி முன்னுரை

திருவழிபாட்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க வந்துள்ள இறைகுலமே! உங்கள் அனைவரையும் இறை இயேசுவின் நாமத்தில் அன்புடன் வாழ்த்துகிறோம். இன்றைய வார்த்தை வழிபாடு இறைவனுக்கு ஏற்புடையோரின் மன்றாட்டைப் பற்றிய சிந்தனைகளைப் பதிவு செய்கின்றது.
ஆண்டவர் நடுவராய் உள்ளார். அவரிடம் ஒரு தலைச்சார்பு இல்லை. அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறுப் பணிபுரிவரின் மன்றாட்டு முகில்களை எட்டும் என்பதைச் சீராக் ஞான நூல் எடுத்துரைக்கின்றது.  திருத்தூதர் பவுலடியார் தனது பணியை முடித்து விட்ட மகிழ்ச்சியில் ஆண்டவரின் ஆற்றல் தன்னை எவ்வாறு வழிநடத்தியது என்பதை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.
இறைமகன் இயேசு பரிசேயர் – வரிதண்டுபவர் உவமை மூலம் இறைவன் முன்னிலையில் எப்படி நம் செபங்களை அவருக்கு ஏற்புடையவனாக அமைப்பது என்று நல் ஆசானாகப் போதிக்கின்றார். தன்னையே உயர்த்தித் தம்பட்டம் அடித்து பெருமையுடன் செபிப்பதைக் காட்டிலும் தாழ்ச்சியுடன் தன்னைப் பாவி என்று தாழ்த்திச் செபித்த செபமே இறைவனுக்கு ஏற்புடையது. அதுவே முகில்களை ஊடுருவி செல்லும். இக்கருத்துகளை மனதில் பதிவு செய்து இன்றைய வழிபாட்டில் தாழ்ச்சியுடன் நம்மையே இறைவனிடம் ஒப்புக் கொடுத்து அவரின் ஆற்றலை வேண்டி நம்பிக்கையுடன் பங்கு கொள்வோம்.

பணிவைப் பற்றி சிந்திக்கும் இந்த ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவை மறைபரப்பு ஞாயிறு அல்லது, அனுப்பப்படும் ஞாயிறைக் கொண்டாடுவது, பொருத்தமாக உள்ளது. உண்மை இறைவனை அறிவிக்க பல கோடி உன்னத உள்ளங்கள் உலகெங்கும் சென்றனர் என்பதை, பல நூற்றாண்டுகளாக, மறைபரப்பு ஞாயிறன்று பெருமையுடன் கொண்டாடி வந்துள்ளோம். இன்றைய காலக்கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியை பணிவான உள்ளத்துடன் சுமந்து சென்று, அனைவரோடும் பகிர்ந்துகொள்ள உலகெங்கும் செல்வதற்கு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்புகளுக்கத் தள்ளப்பட்டுள்ளவர்களிடம் செல்வதற்கு, இறைவன் வரம் தரவேண்டுமென்று சிறப்பாக வேண்டிக்கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

முதல் ஏற்பாட்டில் முதல் சகோதரர்கள் காயினும், ஆபேலும் கடவுள்முன் காணிக்கைகள் கொண்டு வருகின்றனர். ஆபேல் ஏற்புடையவராகிறார். காயின் ஆகவில்லை. ஒருவரை ஏற்புடையவராக்குவது கடவுளே அன்றி, தனிநபரின் செயல்கள் அல்ல.  இன்றைய முதல் வாசகத்தில் சீராக்கும், 'ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பணிசெய்வோர் ஏற்றுக் கொள்ளப்படுவர். அவர்களின் மன்றாட்டு முகில்களை எட்டும்' என்று சொல்கின்றார்.  ஆண்டவரின் விருப்பத்தை புரிந்தவர்களாய் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.
திருப்பாடல் 34: 1-2. 16-17. 18,22


ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி
ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். பல்லவி
உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

தூய பவுலடியார் தன் நண்பர் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய வாசகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.  'மற்றவர்கள் தன்னைவிட்டு அகன்றாலும், இறைவனின் அருட்கரம் தன்னை வழிநடத்தியதற்காக நன்றி நவில்கின்றார். விண்ணரசில் சேர்வதற்கான மீட்பைப் பெற்றுவிட்டதை நம்பிக்கையுடன் இங்குப் பதிவுச் செய்கிறார். இந்த வெற்றி வாகையைப் பகிர்ந்து கொள்ளும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. செம்மையான வழியை எமக்குக் காட்டும் எம் இறைவா! எம் திருஅவையை நடத்திவரும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் திருதூதர் பவுலடியார் தம் பணியைச் சிறப்பாக முடித்து வெற்றிவாகைப் பெற்றவும், அவரைபோல் இறைபணியில் தாங்களையே பலியாக அர்ப்பணிக்கவும் தேவையான ஞானத்தை, ஆற்றலையையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனைவருக்கும் நீதி வழங்கும் எம் இறைவா! ஒருவர் நேர்மையாளர் என்பது அவரின் நற்செயல்களில் அல்ல. மாறாக, அவர் கடவுளுக்கு ஏற்புடையவரா என்பதில் தான் அடங்கியிருக்கிறது என்பதை எங்களில் குடும்பத்தில் அனைவரும் உணர்ந்து அதன்படி தாங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவும், நேர்மையாளராக இருக்கவும் நல்மனதினைத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. அருளும் இரக்கமும் கொண்ட எம் இறைவா! தாழ்ச்சியுள்ள இதயத்தோடு செபிக்கும் எங்கள் அனைவரின் செபத்தை ஏற்று எங்கள் வாழ்வு நலமும் வளமும் அடையவும், எம் தலைவர்கள்  தம் மக்களின் மீது தொண்டுள்ளம் கொண்டு தன்னலமற்றுப் பணியாற்றிட தேவையான ஆற்றலையும், உமது இரக்கம் எம் மீது பொழிந்தட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா! தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும் பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.