Tuesday, February 25, 2020

தவக்காலம் முதல் ஞாயிறு - முதல் ஆண்டு

தவக்காலம்  முதல் ஞாயிறு  


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


தொடக்கநூல் 2:7-9,3:1-7
உரோமையர் 5:12-19
மத்தேயு 4:1-11


திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு இவை தான் நம் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையும், ஆணிவேரும் ஆகும். இவற்றைத் தான் நாம் நாள்தோறும் திருப்பலியில் நினைவுகூர்ந்துக் கொண்டாடினாலும் ஆண்டுக்கு ஒரு முறைச் சிந்தித்த சீர்தூக்கிப் பார்க்க நம்மைத் திருச்சபை அழைக்கிறது தவக்காலத்தின் வழியாக...

இவ்வாண்டின் முதல் தவக்கால ஞாயிறைச் சிறப்பிக்க இத்திருப்பலியில் பங்கேற்க உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம். தவக்காலம் என்றவுடன் ஏதோ கவலையோடும், வருத்தத்தோடும் காட்சி கொடுப்பது என்பதல்ல. மாறான இதுவே நம்பிக்கையின் காலம். இறைவனின் இரக்கத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சியின் காலம். ஒப்புரவின் நல்ல காலம். நிலைவாழ்வுக்கு உரமிடும் காலம். மனித வாழ்வில் சோதனை என்பது ஒரு தொடர்கதை. மனிதன் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது மானிடரின் உள்ளத்தை வருடிக்கொண்டேயிருக்கிறது. 

ஆனால் அந்தச் சோதனைகளையும் வென்று சாதனைப் படைத்த நிகழ்வுதான் இன்றைய நற்செய்தி. இயேசு செய்த அரும்பெரும் சாதனை. ஆதிப்பெற்றோரின் அடிமைத்தனத்தால் பாவ வாழ்வில் நாமும் பாவநிலைக்கு இட்டுச் செல்லப்படுகின்றோம். ஆனால் இரண்டாம் ஆதாமாகிய கிறிஸ்துவின் வருகையில் பாவநிலையிலிருந்து வெற்றிப் பெற்ற புதுவாழ்வுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றோம். இறைவார்த்தை இயேசுவுக்குச் சோதனைகளை வெல்ல உறுதுணையாக இருந்தது. 

எனவே நாமும் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்போம். இல்லையேல் “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்ற பரிசேயர்களைப் பார்த்துச் சொன்ன இயேசு நம்மையும் பார்த்துச் சொல்லுமுன் விழிப்புடன் செயல்படுவோம்.


வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை


தொடக்கநூலில் இறைவன் உலகைப் படைத்து அவை அனைத்தும் நல்லது என்று கண்டு மானிடரைப் படைத்தார். தனது ஆவியை ஊதித் தன் சாயலாக உருவாக்கினார். ஆனால் சாத்தனின் சூழ்ச்சியில் சிக்குண்ட மானிடம் இறைவனின் கட்டளையை மீறியதால் தன் முதல் பாவத்தால் சாவை ஏற்றுக்கொண்டது. இன்றைய முதல்வாசகத்தின் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கும் இறைவனின் வார்த்தைகளைக் கவனமுடன் மனதில் பதிவு செய்வோம்.


இரண்டாம் வாசக முன்னுரை


முதல் மனிதன் ஆதாம் செய்தப் பாவத்தால் சாவைக் கொணர்ந்தான். ஆயினும் கடவுளின் கட்டளைகளை மீறிப் பாவம் செய்யாதவரும் சாவுக்குள்ளானார்கள். ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல் ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்படியாமையால் பலர் பாவிகளானது போல் ஒருவரின் கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். இவ்வாறு நாமும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகத்தின் மூலம் பவுலடியார் அழைக்கின்றார். கேட்போம் கவனமுடன்...


பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே! இரக்கமாயிரும்: ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
திருப்பாடல்கள்: 51: 1-4. 10-12,15


கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற் கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும். என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். பல்லவி

ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன். உம் பார் வையில் தீயது செய்தேன். பல்லவி

கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும். உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னி லையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும். உமது தூய ஆவியை என்னிடமிருந்து. எடுத்துவிடாதேயும். பல்லவி

உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும். தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும். அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


 மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.



நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! தவம், செபம் பிறரன்பு என்ற இம்மூன்றுச் செயல்களால் உம் திருஅவை கிறிஸ்துவின் பாடுகளின் வெற்றியை இவ்வுலகமக்களுக்கு அறிவிக்கவும், சொல்வதைச் செயலில் காட்டி எம் விசுவாசம் உயிருள்ளதாக இருக்கவும், எம் பிறரன்புச் சேவையால் உலகமாந்தர்கள் அனைவரும் இறைமகன் இயேசுவில் நம்பிக்கைக் கொண்டு புதுவாழ்வு அடைந்திட வேண்டிய அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இதுவே தகுந்த காலம், இன்றே மீட்பு நாள் என்று அழைத்தீரே. நாங்கள் கிறிஸ்துவின் தூதர்களாய் இருக்கிறோம் என்பதை உணர்ந்து, இத்தவக்காலத்தை நன்கு பயன்படுத்திக் கடவுளோடு ஒப்புரவாகி, இயேசு கிறிஸ்துவிற்கு ஏற்படையவர்களாய் மாற நல்லமனநிலையைத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இன்றைய நாளில் தங்களின் கல்வித் தேர்வுகளை ஏழுதிக் கொண்டிருக்கும் எங்கள் அன்புப் பிள்ளைகளை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். கருத்தாய் படித்ததை நினைவில் வைக்க ஞாபக சக்தியை அளித்தருளும். அதைச் செவ்வனே எழுத வழிகாட்டும். தேர்வு நடக்கும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அன்பைப் பெருக்கிக் கரிசனையைக் காட்ட அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4 பரிவன்புமிக்க எங்கள் தந்தையே! எம் இறைவா! இக்காலச்சூழலில் இரக்கமும், தூய்மையான உள்ளம் படைத்தோர், நீதியினிமித்தம் துன்புறுத்த படுவோர், இவர்கள் அனைவரும் உம் பொருட்டுத் துன்புறுத்தப்படும் போது உமது இரக்கப்பார்வையால், அடிமைதனத்திலிருந்து அன்று எம் முன்னேரை மீட்டதுபோலக் காக்கவும், இன்று உம்மை மட்டுமே நம்பிச் சரணகதியாக வரும் எம் அனைத்து மக்களையும் உமது பேராற்றலினால், இடிந்துபோன எம் வாழ்வை வென்றெடுக்கத் தேவையான உமது இரக்கப் பார்வையை எம் மீது பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

5.மருத்துவருக்கு எல்லாம் வருத்துவராகிய எம் இறைவா! உலகமெங்கும் பரவி வரும் தொற்று நோயின் கொடுமைகளிலிருந்து எம் மக்களைக் காப்பற்றும். நோயைக் கட்டுபடுத்தவும், அவர்களுக்குப் பணிவிடைச் செய்யும் அனைவரையும் அந்த நோயின் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்து உழைக்க நல்ல ஆரோக்கியத்தையும், மன உறுதியையும் அளித்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Monday, February 17, 2020

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் ஏழாம் ஞாயிறு 



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


லேவியர் 19:1-2,17-18
1கொரிந்தியர் 3:16-23
மத்தேயு 5:38-48


திருப்பலி முன்னுரை


பொதுக் காலத்தின் ஏழாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமகன் இயேசுவின் அன்பர்களே! உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நம் மனதில் அன்பை விதைக்கின்றன. இறைமகன் இயேசுவின் விழுமியமாகிய அன்பு நம் வாழ்வில் நிலைநாட்டி அவரே நமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். அவரின் முக்கியக் கட்டளையாகிய உன்னைப்போல் உன் அயலானை நேசி. அவர் உமது எதிரியாக இருந்தாலும் அன்புச் செய். அவருக்காய் இறைவனிடம் மன்றாடு என்பதே! அதற்கான நம் வாழ்நாள் முன்னோடி  மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால், தன்னைச் சுட்டவனை மன்னித்துத் தன் நண்பனாக ஏற்றுக்கொண்ட அவர், அலி அஃகாவைச் சிறையில் சந்தித்து இறைமகன் இயேசுவின் அன்பை வெளிப்படுத்தினார்.

நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்று இறைவன் அழைக்கின்றார். புனித வாழ்வு என்பது பிறரன்பைப் பொறுத்தே அமைகின்றது.தவறுக்குத் தவறு செய்யாமல், தீமைக்குத் தீமை செய்யாமல் பிறரை மன்னிக்கும் மேலான நிலைக்கு உயர்ந்து வர இயேசு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இத்தகைய நல்ல இதயம் உள்ளவர்களாக மாறும் போதுதான் நாம் கடவுளைப் போலத் தூயவர்களாக, நிறைவுள்ளவர்களாக வாழ முடியும். இத்தகைய வாழ்வுக்கு இயேசு நம்மை அழைக்கின்றார். இயேசுவுக்கு நாம் தரும் பதில் தான் என்ன? சிந்திப்போம். இத்திருப்பலியில் இயேசுவின் அன்புடன் கலந்து விடைகாணச் செபிப்போம்.

வாசகமுன்னுரை



முதல் வாசக முன்னுரை


அன்பு வழி புனிதமும், புனிதம் வழி நிறைவும் காண வேண்டும் என நம் திருஅவை விரும்புகிறது. அநீதியை அதட்டிக் கேட்கும் அன்பும், நீதிக்குத் தோள் கொடுக்கும் அன்பும், குற்றத்தைச் சுட்டிக்காட்டும் அன்பும், அயலானின் பிரதிபலிக்கும் அன்பும் தான் ஒரு மனிதனைப் புனிதத்தின் நிறைவுக்கு அழைத்துச் செல்கிறது. நாம் புனிதராய் இருப்பதுபோல நீங்களும் புனிதராய் இருங்கள் என்கிறார் இறைவன். இக்கருத்துகளை எடுத்துரைக்கும் லேவியர் நூலிலிருந்து வரும் இன்றைய முதல்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.


இரண்டாம் வாசக முன்னுரை


நமது இதயத்திற்குள்ளே கடவுளின் ஆவியானவர் குடி கொண்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டு மக்களுக்குக் கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் பாக்கியமே நாம் பெற்றிருக்கும் தூயஆவி. ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். இவ்வுலக ஞானம் கடவுளின் முன் மடமையே மனிதரைக் குறித்து யாரும் பெருமைப் பாராட்டலாகாது. நாம் அனைவரும் கிறிஸ்துவிற்கு உரியவர்கள் என்று திருத்தூதர் பவுலடியார் இயம்பும் கொரிந்தியர்ருக்கு எழுதிய முதல் திருமுகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.


பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.
திருப்பாடல்: 103: 1-2, 3-4, 8, 10,12-13

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!  என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!  பல்லவி

அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். பல்லவி

ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர். அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ; அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார். தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.  பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


 அல்லேலூயா,அல்லேலூயா! கிறிஸ்துவின் வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது. அல்லேலூயா!



நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1 என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் அன்பும் புனிதமும் நிறைந்த தூய ஆவியாரின் ஆலயமாகவும், தீமைச் செய்வோரை அன்பால் அரவணைத்து உம் அன்பின் பாதையில் வழி நடத்திச் செல்லத் தேவையான இறைஞானத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! மாந்தர்கள் அனைவரும் தூய ஆவியானவரின் ஆலயம் என்பதை ஒருபோதும் மறவாமல் இருக்கவும், அவ்வாலயத்தின் தூய்மை ஒருபோதும் கேடாமல் பாதுகாத்து, பகைமையை வேரறுத்து அன்பை வளர்த்திடும் இல்லமாகவும்,  நன்மைகளின் ஊற்றாகவும் மாறிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! இன்றைய பதட்டமான சூழலில் தங்களின் வரவிருக்கும் தேர்வுகளுக்குத் தம்மையே தயாரித்துக் கொண்டிருக்கும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு நல்ல புரிதலையும், படித்தவற்றை மறந்திடாமல் இருக்க நல்ல ஞாபகசக்தியையும், நல்ல உடல்நிலையும் தந்துச் சிறப்பாகத் தேர்வுகள் எழுதி வெற்றிபெறத் தேவையான வரங்களை அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் சகோதரப் பிணைப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திடவும், உறவுகள் மேன்படவும், தூய ஆவியின் கொடைகள் எம் இல்லங்களில் தங்கி எம் இல்லத்திலுள்ள அனைவரையும் வழி நடத்திடவும், வேற்றுமைகள் ஒழிந்து, மன்னிப்பே மாண்பு என்பதை உணர்ந்து வாழ்ந்திட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


5.என்றும் மாறாப் பேரன்பு கொண்ட எம் இறைவா! உணவற்றோருக்கு உணவும், உடையற்றோருக்கு உடையும், உறைவிடமற்றோருக்கு உறைவிடமும்  தந்து நற்செயல்களில் தழைத்தோங்கி எமது விண்ணகத் தந்தையின் அன்பு மக்களாக நாங்கள் வாழவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


                                                                       www.anbinmadal.org


Monday, February 10, 2020

பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு -முதல் ஆண்டு


பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு  -முதல் ஆண்டு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்


சீராக் 15:15-20
1கொரிந்தியர் 2:6-10
மத்தேயு 5:17-37

திருப்பலி முன்னுரை


பொதுக் காலத்தின் ஆறாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வாழ்த்துகிறோம்.

இன்றைய வாசகங்கள் நமக்கு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க அழைக்கின்றது. நல்லது- தீயது, நெருப்பு- நீர், வாழ்வு- சாவு. இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது தான் நமது விருப்பத்தைப் பொறுத்தது.

இயேசு திருச்சட்டத்தின் வாக்குகளைப் பற்றி வெளிப்படுத்துகின்றார். திருச்சட்டத்திலிருந்து அனைத்தும் நிறைவேறாத வரை அச்சட்டத்தின் எழுத்தோ சிறுபுள்ளியோ ஒழியாது என்று பதிவு செய்கின்றார். இறைவாக்கு நமக்கு வழங்கும் அறநெறிகளின்படி நாம் வாழ அழைப்பு விடுக்கின்றார். இதனை மறந்து, மனம்போன போக்கில் வாழ்ந்து, அடுத்தவரின் வாழ்வாதரத்தை அழிக்கும் இழிச்செயல்களில் ஈடுபடுவோரையும் வன்மையாகக் கண்டிக்கின்றார்.

இயேசுவின் நெறியோ அகமனப் பக்குவத்தைச் சார்ந்தது. நற்சிந்தனைகளுக்கும் தூய எண்ணங்களுக்கும் முக்கிவத்துவம் கொடுப்பது. ஏனென்றால் அகமனப் பக்குவத்தைப் பொறுத்தே நம் வெளிச் செயல்பாடுகள் இருக்கும் என்பதை இங்கு நன்கு உணர்த்துகின்றார் இயேசு. சுயநலமற்ற, அன்புக் கலந்த அக்கறை உணர்வோடு உண்டாகும் கோபத்தைத் தான் ஆண்டவர் இயேசு பரிசேயரிடமும், ஆலயத்திலும் வெளிப்படுத்தினர். ஆகவே கோபம், பகை, வெறுப்பு இவைகளை அடியோடு ஒழிக்க முயல்வோம். மற்றவர்களைப் பற்றிய இனிமையான நினைவுகளை மட்டும் மனதில் கொண்டு இத்திருப்பலியில் கலந்து இறையருள் நாடிடுவோம் வாரீர்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


சீராக் நூலில் இருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் அன்றாட வாழ்க்கைச் சூழல்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும், வாழ்க்கை மரபு மற்றும் நெறிமுறைகளையும் தாங்கி வருகிறது. மாந்தர்கள் முன் வாழ்வும், சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ, அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். கடவுள் மனிதர்களின் அனைத்துச் செயல்களையும் காண்கின்றார். பழைய ஏற்பாடுகளில் ஞானத்தை வெளிப்படுதும் சிறந்த நூலாகிய சீராக் ஞானநூலின் வாசகத்தைக் கவனமுடன் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை


நமது வாழ்வின் வழி எளிமையானதல்ல. அது மிகக் கடினமானது. இத்தகைய வழியைத் தேர்ந்தெடுக்க நமக்கு இறைஞானம் வேண்டும். இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியாரின் வெளிப்படுத்துகின்றார். மாந்தருக்கு வேண்டியது உலக ஞானம் அல்ல. இறைஞானமே! நாம் மேன்மைப் பெற வேண்டும். வாழ்வுப் பெற வேண்டும் என்பதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டதே இறைஞானம். இறைஞானம் இறைவனை அன்புச் செய்வோருக்குத் தூய ஆவியார் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. இவற்றை விளக்கம் இவ்வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.
திருப்பாடல்: 119: 1-2, 4-5, 17-18, 33-34

மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.  அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். . பல்லவி

ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர்.  உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!. பல்லவி

உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன்.  உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும். பல்லவி

ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.  உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன்.  பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:


 அல்லேலூயா,அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா!

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1 கருணைக் கடலாகிய எம் இறைவா! எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் நீதியும் நேர்மையும் நிறைந்த இதயங்களால் நிரப்பி இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகெங்கும் அன்பையும் நல்லுரவையும் மலரச் செய்ய உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

2. கருணைக் கடலாகிய எம் இறைவா! மாந்தரின் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு நன்மைச் செய்யும் விதமாய் அமையவும், சுயநலம் பாராமல் அடுத்திருக்கும் மாந்தரின் முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் ஏற்றம் பெறச் செய்யவும். அனைவரும் இணைந்துச் செயல்பட்டு உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்றைய அரசியல் சூழலில் சிக்குண்டுத் தவிக்கும் எம் மக்களைக் கண்ணோகியருளும். தம் பயணிக்க வேண்டிய பாதைகளை நீதியுடனும் நேர்மையுடனும் தேர்வு செய்து நாட்டு மக்களைத் திறம்பட நடத்திட ஆள்பவர்களுக்கும், நடுநிலையுடன் மக்கள் சேவையில் சிறந்தது விளங்க அவர்களுக்கு . நல்ல ஞானத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கருணைக் கடலாகிய எம் இறைவா! புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் எம் இளையோர்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்கள் எதிர்பார்த்திருக்கும் வளமான வாழ்வு, சிறந்த வேலைவாய்ப்பு, உயர்கல்விக்கான தேவையான தரமான கல்விகூடங்களில் அனுமதி, பொருளாதார உதவிகள் மற்றும் உள்ள உடல் உறுதியை வழங்கிடத் வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

5. கருணைக் கடலாகிய எம் இறைவா! இன்று உலகில் எங்கள் குடும்பங்கள் சிறுவட்டத்திற்குள் சிக்கவிடாமல் உறவுகளை மதித்த அதனை வளர்க்கக் கோபம், பொறமை, பேராசை, தன்னலம் போன்ற குணங்களிலிருந்து விடப்பட்டுப் பெயரிவர் முதல் சிறியவர் வரை அனைவர் மீதும் அன்புப் பாராட்ட உம் அன்னை மரியாளைப் போலக் கரிசனை அன்புப் பெற்றிட அருள்மாரிப் பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

www.anbinmadal.org

Wednesday, February 5, 2020

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு - முதல் ஆண்டு

பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு  


இன்றைய வாசகங்கள்


எசாயா 58: 7-10
1 கொரிந்தியர் 2:1-5
மத்தேயு 5:13-16

  திருப்பலி முன்னுரை


பொதுக் காலத்தின் ஐந்தாம் ஞாயிறுத் திருப்பலிக் கொண்டாடத்தில் பங்கேற்க வந்துள்ள இறைமக்களே! உங்களை அன்புடன் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.
இன்றைய வாசகங்கள் நம்மைச் சுவையுள்ளவர்களாகவும், அனைவருக்கும் ஒளியாகவும் இருக்க அழைக்கின்றது. திருமுழுக்கின் போது நாம் உவர்ப்புடையவர்களாக உப்பைச் சுவைப்பதின் மூலமாக மாற்றப்படுகிறோம். கடவுளின் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, இன்னும் பல நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதற்குப் பலன் கொடுக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் வாழ்வான அன்பு, அமைதி, மகிழ்வு அனைத்திற்கும் இன்னும் சுவைக் கூட்டி நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுக்க வேண்டும். உப்பின் உவர்ப்புத் தன்மை மாறினால் அதை என்ன செய்வது என்று இயேசு கேட்கிறார். அதற்குப் பதில் கடவுள் நம்மை மீண்டும் உப்பாகக் கடவுள் மாற்ற நாம் அனுமதிக்க வேண்டும்.
திருமுழுக்கில் நாம் கையில் மெழுகுவர்த்தியைப் பெறும் போது அனைவருக்கும் ஒளியாக இருக்கிறோம். இயேசு நம்மை ஒளியாக இருக்க அழைக்கிறார். அது மற்றவர்களுக்குத் தெரியும்படியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
மற்றவர்களின் வாழ்வில் இயேசுவின் பிரசன்னத்தைக் கொண்டுவர, நாம் இயேசுவின் ஒளியை நம்மில் ஒளிர விட வேண்டும். இருள் நடுவே நம் ஒளி உதிக்கவேண்டும். நற்செயல்களால் கடவுளுடன் இணைந்திடுவோம். இவரின் ஞானத்தையும் வல்லமையையும் பெற்றிட இத்திருப்பலியில் உப்பாய் ஒளியாய் கலந்திடுவோம் வாரீர்.

வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை

நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக் கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்? என்று இறைவனிடம் முறையிட்டப் போலிப் பக்தர்களுக்கு, பசித்தோருக்கு உணவளித்தும் உறைவிடம் இல்லாதோருக்குத் தங்க இடமளிப்பதும், உடையற்றோருக்கு உடையை வழங்குவதுமே இறைவன் விரும்பும் நோன்பு உண்மையான நோன்பின் குறிக்கோளை விளக்கும் இறைவாக்கினர் எசாயா மூலம் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நமது நம்பிக்கையின் அடிப்படைக் கடவுளின் வல்லமையே தவிர மனித ஞானம் அல்ல. இதன் அடிப்படையில் தூய பவுலடியார் தனது பணிவாழ்வை மேற்கொண்டார். போர்வீரனாக இருந்த அவர் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகவோ அல்லது ஞானம் பெற்ற அறிஞராகவோ இருந்தது இல்லை. ஆயினும் அவர் பறைசாற்றிய நற்செய்திகள் அனைத்தும் தூய ஆவியாரின் வல்லமையான செயல்களே என்று அழுத்தமாகப் பதிவுச் செய்யும் இன்றைய இரண்டாம் வாசகமான திருத்தூதர் பவுலடியாரின் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர்க்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மளிர்வர்.
திருப்பாடல்: 112: 4-5, 6-7, 8-9

இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்.  மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். பல்லவி

எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.  தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். பல்லவி

அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.  அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்கள் நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.. பல்லவி

 நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1.  இருளில் ஒளியென ஒளிர்ந்திடு என்று அழைத்த எம் இறைவா! உம் திருச்சபையைத் தயவாய் கண்ணோக்கி, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும், எம்மையும் உலகின் மீட்புக்குத் தெளிவான அடையாளமாக உலகின் உப்பாகவும், ஒளியாகவும் எமது நற்செயல்களால் மற்றவர்களுக்கு உம் சாட்சிகளாக அமைத்தருள உம் ஞானத்தையும் வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. வல்லமையும் ஞானமும் கொண்ட எம் இறைவா! மாந்தரின் அன்பரே, மனித முன்னேற்றத்தில் தன்னலமற்ற சேவையின் மூலம் எங்களின் பங்கைச் சிறப்பாக ஆற்றிடவும், உலகத் தலைவர்களும், நாட்டுதலைவர்களும் இவ்வுலகில் உம் அன்பின் ஆட்சியைக் கட்டியெழுப்பத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வாழ்வின் வழிகாட்டியான எம் இறைவா! இன்றைய சூழலில் தேர்வுகள் எழுதத் தம்மைத் தயார் செய்து வரும் அனைத்து மாணவச் செல்வங்களை உம்மிடம் ஒப்படைக்கின்றோம். அவர்களுக்குத் தேவையான அமைதியான சூழ்நிலையும், நல்ல ஞாபகச்சக்தியையும், நல்ல உடல், உள்ள உறுதியையும் தந்து, அவர்கள் சிறப்பாகச் செயல்படப் பெற்றோர்களையும் ஊக்கிவிக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வளங்களின் நிறைவே எம் இறைவா! எம் பங்கைச் சார்ந்த அனைத்து மக்களையும் ஆண்டுப் பராமரித்து, நற்சுகமும், வளமும் பொழிந்து அனைவரின் குடும்பங்களும் உமது பேரன்னப நிறைவாய் பெற்று உம் அன்னையைப் போல உம் சீடர்களாய் வாழ்ந்திடவும் திருமுழுக்கின்போது நாங்கள் பெற்றுக் கொண்ட உப்பையும் ஒளியையும் நாங்கள் வாழும் இடங்களில் மற்றவர்களுக்கு வழங்கிடத் தேவையாக வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்

5. இரக்கமே உருவான எம் இறைவா! இன்று உலகில் உம் திருஅவைக்கும், அதன் மக்களுக்கும் எதிராக இழைக்கப்படும் அநீதிகள், குற்றசாட்டுகள், இறையச்சம்  இன்மையால் நேர்ந்திடும் ஆபத்துகள் போன்ற எல்லா இன்னல்களிலிருந்து எம்மைக் காத்து உலகமாந்தர்கள்  எங்களை இயேசுவின் சீடர்களாய் எம்மைக் கண்டு கொள்ளவும், உமது ஒளியில்  அனைவரையும் ஒன்று சேரும்படி இறையரசை அறிவிக்கத் தேவையான ஞானத்தையும் உள்ள உறுதியையும் மீது பொழியவேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.


www.anbinmadal.org