Thursday, December 30, 2021

ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

 ஆண்டவரின் திருக்காட்சி - பெருவிழா

 

 இன்றைய வாசகங்கள் 

எசாயா 60: 1-6
எபேசியர் 3: 2-3அ, 5-6
மத்தேயு 2: 1-12  

 திருப்பலி முன்னுரை


ஆண்டவரின் திருக்காட்சியைக் கண்குளிரக் கண்டு ஆராதிக்க ஆலயம் திரண்ட வந்துள்ள இறைமக்களே உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.
மத்தேயு நற்செய்தியில் மட்டும் வரும் இந்த மூவரும் கடந்த 21 நூற்றாண்டுகளாகப் பல கோடி மக்களின் மனங்களில் பல்வேறு தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள். முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும் இவர்களுக்கு விழா எடுப்பதற்கு...

இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். யாருக்கும் தனிப்பட்ட வகையில் அவர் சொத்தாக முடியாது. உண்மையில் பார்க்கப்போனால், இந்த உலகமே அவரது சொத்து. இப்படியிருக்க, இந்த இறைவனைப் பங்குப் போட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள்.

உண்மையான தாகத்துடன் தன்னைத் தேடும் அனைவருக்கும் தன்னை வெளிப்படுத்தும் அழகுள்ளவர் நம் இறைவன். அவர் எப்போதும் எங்கும் நம்மைச் சூழ்ந்தே இருக்கிறார். அவரைக் காண நாம் மறுத்து, அகக் கண்களை மூடிக் கொள்வதாலேயே, அவர் தூரமாய் இருப்பதைப் போல் உணர்கிறோம்.

தடைகள் பல எழுந்தாலும், தளராமல் விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு வந்த மூவரைப்போல் இப்புத்தாண்டின் துவக்கத்தில் நமக்கும் மனறுதியைத் தந்து, இறைவன் வழி நடத்த இன்றைய திருப்பலியில் வேண்டுவோம்..

வாசக முன்னுரை


முதல் வாசக முன்னுரை

மீட்பை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குக் கடவுள் தமது எளிமைக் கோலத்தை மறைத்து மாட்சிமையை வெளிப்படுத்துகிறார். வானில் தோன்றிய விண்மீனும், மூன்று ஞானிகளும், அவர்கள் கொண்டு வந்த காணிக்கைகளும் இறைமாட்சிமையின் அடையாளங்கள் தான். ஆண்டவரின் மாட்சிமை உன் மேல் உதித்துள்ளது என்ற எசாயாவின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆணடவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13.

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.  அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக!   பல்லவி

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.  ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார்.   பல்லவி

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.  எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.   பல்லவி 

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.  வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

மீட்பு என்பது யூத இனத்தார்க்கு மட்டும் உரியத் தனியுரிமை அல்ல. அது எல்லா இனத்தார்க்கும் உரியது என்பதைத் திருக்காட்சிப் பெருவிழா உணர்த்துகிறது. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புற இனத்தவரும் இறைமக்களோடு சேர்ந்து ஒரே உரிமைப்பேற்றுக்கு உரியவர்கள் என்கிறார் புனித பவுல். பிற இனத்தார் உன் ஒளியை நோக்கி வருவார்கள், மக்களினத்தார் அனைவரும் அவரை வணங்குவர் என்ற கருத்துகளை எதிர் ஒலிக்கும் பவுலடிகளாரின் இந்த வாசகத்தைக் கவனத்துடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலூயா!  ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

 
1. உம் மாட்சிமையை எம்மேல் உதிக்கச் செய்த எம் இறைவா! எமது திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் துறவியர்கள் பொதுநிலையினர் அனைவரும் உமது மாட்சிமை மிக்கத் திருக்காட்சியின் அடையாளங்களைக் கண்டுணர்ந்துத் தங்களின் நற்செயல்களாலும், நன்னடத்தையாலும் பிறர் முன் இயேசுவின் சாட்சிகளாகத் திகழும் வீண்மீனாக வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. உம்மைத் தேடியவர்களுக்கு உம்மை வெளிப்படுத்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களிலுள்ள அனைவரும் உம்மைத் தேடிக் கண்டடையவும், எமது வாழ்வு நடத்தை, செயல்கள், பேச்சு, உடைநடை பாவனை எல்லாம் உலகமாந்தர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காய் மாற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்..

3. எங்களை நேரிய வழியில் நடத்திடும் எம் இறைவா! செய்ய முடியாதவைகளைச் செய்வேன் எனக் கூறிவிட்டுப் பின்புக் கடைப்பிடிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்ற எம் அரசியல் தலைவர்கள் தங்கள் நிலையை உணர்ந்துச் சொல்லுக்கும் செயலுக்கும் வேற்றுமை இல்லாத செயல்பாடுகளின் வழியாய் மக்களுக்கு நல் வாழ்வு வழங்கிடத் தேவையான ஞானத்தை அவர்களுக்குத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5.எங்கள் வாழ்வின் இன்பமே இறைவா! பணம், சொத்து, சுகம் அல்ல.  நீரே எங்கள் உண்மையான இன்பம் என்பதை அறிந்து நீர் மட்டும் போதும் என்ற மனநிறைவுடன் வாழக்கற்றுக் கொள்ள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org

Print Friendly and PDF 

புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி

  புத்தாண்டு ஞாயிறுத் திருப்பலி



 இன்றைய நற்செய்தி வாசகங்கள்


1. எண்ணிக்கை 6:22-27
2. கலாத்தியர் 4:4-7
3. லூக்கா 2:16-21

 திருப்பலி முன்னுரை  


அன்பு இறைமக்களே!

புத்துணர்வும் புத்தாடை மகிழ்ச்சியும் உள்ளமெல்லாம் பூரிப்பில் புலர்ந்திடும் புதிய ஆண்டின் சிறப்புத் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள அன்பர்களுக்கு மூவொரு பெருவிழாகளைக் கொண்ட இன்று இத்திருஅவை அன்புடன் வரவேற்கின்றது.

பாலன் பிறந்து எட்டாம் நாள் இயேசு என்று பெயரிட்ட நன்னாள், அன்னை மரியாள் இறைவனின் தாய் என்ற சிறப்பான நன்னாள், புத்தாண்டின் முதல் நாள் என மூன்று பெருவிழாகள் இறைவனின் நன்மைத்தனத்தையும் அவருக்குள்ள பேரிரக்கத்தையும் நமக்கு மீண்டும் எடுத்துரைக்கிறது.

ஒரு புதிய ஆண்டையை நமக்காகக் கொடுத்த இறைவன் அதைச் சிறப்பிக்க இருபெரும் கொடைகளையும் தந்துள்ளார். எல்லாபெயர்களுக்கும் மேலான வல்லமையுள்ள இயேசுவின் திருநாமம். மற்றொன்றுக் கரிசனை அன்புடன் என்றும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் தாய் மரியாளின் உடனிருப்பு. இவ்விரு மாபெரும் சக்திகள் போதாத இந்த உலகை எதிர்கொள்ள…

இன்று முதல் வாசகத்திலிருந்து தொடங்கும் இறையாசீராக வரும் வார்த்தைகளின் மூலம் உலகின் ஒளியாம் இயேசுவின் திருஒளியில் ஒளிர்ந்த இடையர்களின் உள்ளத்தைப் போல நம் உள்ளங்களும் ஒளிர்வதாக! இறைஇயேசு தன் தாயாம் அன்னை மரியாளை நமக்குத் தாயாகத் தந்ததின் மூலம் எல்லா இறையாசீர்கள் ஒட்டுமொத்தமாகத் தரும் அமைதி நம் அனைவரின் உள்ளங்களில் நிறைவாய்ப் பொழிவதாக!

ஆண்டின் முதல் நாளில் அன்னை மரியாவைப் போல இயேசுவை அனைவருக்கும் வெளிப்படுத்தி இந்தப் புதிய ஆண்டில் நலமும், வளமும், நிறை அமைதியைப் பெற்றுக்கொள்ளத் திருப்பலிக் கொண்டாடங்களில் முழு உள்ளத்தோடு செபிப்போமாக! வாரீர்!

 வாசக முன்னுரை

 முதல் வாசகம்

 புலந்திருக்கும் புதிய ஆண்டின் முதல் வாசகம் எண்ணிக்கை நூலிலிருந்து வரும் பழைய ஏற்பாட்டுக் குருமரபினரின் வாழ்த்துடன் தொடங்க நம் திருச்சபை அழைக்கின்றது. இவ்வார்த்தைகளில் மூன்று வகை ஆசீர்களை உள்ளன. அருளும், அத்திருமுகத்தில் ஒளிரும் சமாதானமும் வெளிப்படும் அவரது திருப்பார்வை ஒளிரும் இடத்தில், அவரது திருமுகத்திலிருந்து வெளியாகும் ஒளியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இனிதே கேட்டு இறையாசீர் பெறுவாம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

திருப்பாடல் 67: 1-2, 4, 5,7

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். பல்லவி

வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! பல்லவி

 இரண்டாம் வாசகம்

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வரும் இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் கடவுளின் பேரிரக்கத்தைப் புடமிட்டுக் காட்டுகின்றார். தன் ஏற்றுக்கொண்ட மக்களின் மீட்புக்காகத் தன் ஒரே மகனை அனுப்புகின்றார். இவ்வாறு அன்பு செய்யும் கடவுளுக்கு நாம் திரும்பச் செய்யும் நன்றிக் கடன் என்ன? என்பதைச் சிந்திக்கத் தூண்டும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. மாட்சியையும் மேன்மையையும் எங்களுக்கு முடியாகச் சூட்டியுள்ள எம் தந்தையே இறைவா! புதிய ஆண்டில் நுழையும் திருஅவைக்கு நிறைவாக அன்பு, அமைதி, ஆசீர்களைப் பொழிந்து எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், அருட்பணியாளர்கள் உமது அமைதியின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும், அதனைக் காணும் அனைவரும் கிறிஸ்துவின் நித்திய ஒளியை இவ்வுலகிற்குச் சாட்சியாகப் பகர்வதற்கு வேண்டிய அருளைப் பொழியுமாறு இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

2 உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகிய எம் இறைவா! இவ்வாண்டு உலகில் நிலவும் வன்முறைகள், தீவிரவாதம், மொழிபோர், இனப்படுகொலைகள், ஆயுதப்போர்கள் இவைகள் மறைந்திடவும், மனித வாழ்வு தழைக்கத் தன்னிலை உணர்ந்து வலிமை மிகுந்த நாடுகள், ஏழைநாடுகளிடம் அகிம்சை வழியில் நீதியோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளவும், உதவிக்கரம் நீட்டிட் தேவையான மாற்றங்களை ஏற்படவேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

3.எம்மைத் தேடிவந்த அன்பே! எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இப்புதிய ஆண்டில் உமது திருமுகத்தில் ஒளி என்றும் இருக்கச் செய்தருளும். எங்களின் வாழ்வாதரங்கள் சிறப்பாக அமையவும், எம் இல்லங்களில் நடைபெற வேண்டிய நல்ல காரியங்கள் எந்தக் குறைகளும் இன்றி நடைபெறவும், அதன் வழியாகக் குடும்ப உறவுகள் வலுவடைந்து, அன்பும், மகிழ்ச்சியும், அமைதியும் நிறைவாய், நிலையாகப் பெற்று உம் சாட்சிகளாக இச்சமுகத்தில் உலாவர உம் அருட்கொடைகளைப் பொழிய வேண்டுமென்று இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை வேண்டுகிறோம்.

4. உம் பாதைக்கு ஒளியாகவும் வழியாகவும் அமைந்த எம் இறைவா! உம் நீதியின் ஒளி ஏழை எளியறோர், வறுமையில் வாடுவோர், தனிமையில் தவிப்போர், ஆதரவற்றோர், வாழ்வு இழந்தோர் ஆகிய அனைவருக்கும், உம் ஒளியின் நிழலில் இளைப்பாறுதல் அடைந்திட உம் அன்பின் ஒளியில், அகில உலகம் தழைத்தோங்க வேண்டுமென்று இறைஇயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

5. அற்புதங்கள் நிறைந்த இயற்கையை எமக்காய் படைத்த எம் இறைவா, உம் படைப்பின் மகிமையை உணராமல் புதிய முயற்சி, அறிவியல் வளர்ச்சிகள், சமூக முன்னேற்றம் என்ற போர்வையில் இயற்கைக்கு எதிராக நாங்கள் அறிந்தும், அறியாமல் செய்த அனைத்துத் தவறுகளையும் மன்னித்துத் தொற்றுநோயிலிருந்து விடுதலை தந்து இயற்கையோடு நாங்கள் ஒன்றித்து வாழத் தேவையான ஞானத்தைப் பொழிந்து நல்வழி நடந்திட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

6. நெருக்கடியான வேளையில் நீர் எமக்கு அரணும் அடைக்கலமுமாயிருந்த எம் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் செய்த அனைத்து நன்மைகளுக்கும், எங்களால் ஏற்பட்ட அனைத்துத் தவறுகளையும் மன்னித்து எங்களுக்கு மீண்டும் ஒரு மறுவாழ்வுப் பெற்றிடப் புதிய ஆண்டை ஆசீராக் கொடுத்து அனைத்து மானுடம் அமைதி, மனமகிழ்வு, அன்பு என்று எல்லோரும் எல்லாமும் பெற்றுச் சமத்துவம் தழைத்தோங்கிட இறைமகன் இயேசுவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF

Wednesday, December 22, 2021

திருக்குடும்பப் பெருவிழா

திருக்குடும்பப் பெருவிழா

 


 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



சாமுவேல் 1:20-22,24-28
யோவான் 3:1-2,21-24
லூக்கா 2:41-52

திருப்பலி முன்னுரை:

குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான வாழ்வை உருவாக்க நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்தி செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சேர்ப்பது அல்ல. மாறாகப் பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பது தான் குடும்பம். இதற்கு அடிப்படைத் தேவை ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம் இத்தகைய உயரியப் பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகம் ஒன்று சாமுவேல் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அன்னா ஆண்டவரிடம் கேட்டு பெற்றுக் கொண்ட தன்  மகன் சாமுவேலை இறைவனுக்கு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கின்றார்.  தான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற தன் மகனுடன் காணிக்கைகளுடன் இறைசன்னதிக்கு வந்து நன்றியோடு சாமுவேலை ஆண்டவருக்கே அர்ப்பணித்தார் என்ற இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்:


திபா 128: 1-2,3,4-5
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி
2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை எடுத்துரைக்கும் திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன்  செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1. உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய  இறைவா! திருபேரவையாம் இத்திருச்சசபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாய் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!  எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து,  எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்து கொள்ளவும், தொற்று நோயினாலும், மழையினாலும் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருளு வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பை பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! பெற்றோர்கள் தங்களது வாழ்க்கை முறையால் தங்களது குழந்தைகளுக்கு உன்னதமான ஆசிரியர்களாகத் திகழ்ந்திடவும், குழந்தைகள் பெற்றோர்க்கு உரிய மதிப்பையும் அன்பையும் வழங்கி அவர்களுக்குக் கீழ்ப்படிந்து வாழவும் வரமருளு வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

  www.anbinmadal.org

                                                                     Print Friendly and PDF

Tuesday, December 21, 2021

 கிறிஸ்து பிறப்புப் பெருவிழா-நள்ளிரவுத் திருப்பலி





கிறிஸ்து பிறப்புப் பெருவிழா

இன்றைய நாளில் நடைபெறும் மூன்று திருப்பலிகளுக்கான வாசகக்குறிப்புகள், முன்னுரைகள் மற்றும் மன்றாட்டுகள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கவனமாக தேவையான திருப்பலிக்கானவற்றைத் தேர்வு செய்துக்கொள்ளவும்.

நள்ளிரவுத் திருப்பலி வாசகங்கள்

I. எசாயா 9:2-7
II. தீத்து 2:11-14
III. லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

 
நமக்காக ஒரு பாலன் பிறந்துள்ளார்,
இருள் சூழ்ந்தப் பனிப் பெய்யும் இரவு உள்ளத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் உவகையும் பொங்கிடும் இவ்வேளையில் கிறிஸ்து பிறப்புக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள வந்துள்ள இறைமக்களே! உங்கள் வரவு நல்வரவாகுக.
திருவருகைக்காலத்தில் நான்கு வாரங்களாக இயேசுவின் பிறப்பு விழாவிற்கு நம்மையே நாம் தயாரித்து வந்துள்ள இந்நேரத்தில் இப்பிறப்பு நிகழ்வு நமக்கு எடுத்துரைக்கும் கருத்து அன்பின் பகிர்தலே! எளிமையான இடத்தில் மீட்பராம் கிறிஸ்து ஏன் பிறந்தார்? இயேசு கிறிஸ்து, தான் மீட்க வந்த மக்களுடன் நிரந்தரமாகத் தங்க வந்தக் காரணத்தினால் அவர் விடுதியில் பிறக்கவில்லை, தொழுவத்தில் பிறந்தார். தீவனத்தொட்டி என்பது கால்நடைகள் தீனிப் பெற இருக்கும் சிறு தொட்டி. ஆனால் அது தரும் சிந்தனையாவது, இயேசுகிறிஸ்து உலகின் உணவாக வந்தார் என்றும், உலக மக்கள் அனைவரும் உணவுப் பெற, குறிப்பாக ஆன்மீக ஊட்டம் பெற உலகில் பிறந்தவர் தீனத்தொட்டியில் கிடத்தப்பட்டார் போன்ற பல சீரிய ஆழ்ந்தக் கருத்துகளை லூக்கா இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார். ஆகத் தன்னையே இவ்வுலகமக்களுக்குப் பகிர்ந்தளித்த இறைமகனுக்கு நம் பகிர்வு என்ன?

துணிகளில் சுற்றித் தீவனத்தொட்டியில் கிடத்தியிருக்கும் குழந்தையின் அரசத்துவத் தன்மையையும், உலகின் உணவாக விளங்கும் மீட்பர் தன்மையையும் உணர்ந்து இன்று நமக்கு அடுத்திருப்பவர்களுடன் அன்பைப் பகிர்ந்து அனைவருடன் நல்லுறவை வளர்த்து இறைசாட்சியாக வாழ்வதுதான் பாலன் இயேசுவுக்கு நமது நன்றியாக அமையும். இன்றைய கொண்டாடங்களில் இயேசுவை மையமாக இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு நம்பிக்கை, அன்பு, அமைதி, மகிழ்ச்சி இவற்றால் இயேசுவின் வருகையில் நிறைவாழ்வடைய இத்திருப்பலியில் கலந்திடுவோம். நமக்கு ஒரு பாலன் பிறந்துள்ளார். வாரும் ஆராதிப்போம்!


வாசக முன்னுரை-

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் காண இறைவன் தரும் எல்லா நலன்களையும் எடுத்துரைக்கின்றார். பேரொளியைக் காணச் செய்து மகிழ்ச்சியுறச் செய்தார். அவர்களின் சுமைகளை நீக்கினார். அவர்களை ஆட்சி செய்ய ”வியத்தகு ஆலோசகர், அமைதியின் அரசரைக் கொடுத்துத் தன் மக்களுக்கு நிலையான, நீதியோடும். நேர்மையோடும் கூடிய ஆட்சியை உறுதிப்படுத்தினார் என்று மகிழ்ந்து எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்.

பதிலுரைப்பாடல்

திருப்பாடல் 96: 1-2,2-3,11-12,13

பதிலுரை: இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா!

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள். ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; -பல்லவி
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.  பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி
விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக; கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும். வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி
ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

இரண்டாம் வாசகம் முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் நம்மைத் தேடிவந்த இயேசுவின் அருளால் நாம் இவ்வுலக வாழ்வின் நாட்டங்களிலிருந்து விடுபடவும், எல்லா நெறிகேடுகளிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்தி நம் அனைவரையும் தமக்குறியவராய் மாற்றத் தம்மையே ஒப்படைத்த தியாகத்தை வியந்துக் கூறும் திருத்தூதா் பவுலடியின் வார்த்தைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்வோம்

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

1. உன்னதத்தில்‌ கடவுளுக்கு மாட்சியும்‌ உலகில்‌ கடவுளுக்கு உகந்தோருக்கு அமைதியையும்‌ தரும்‌ இம்மாபெரும்‌ மகிழ்ச்சி தரும்‌ கிறிஸ்து பிறப்பு நிகழ்ச்சி நம்‌ உள்ளங்களுக்கும்‌ அகில உலகத்திற்கும்‌ உண்மையான மகிழ்ச்சியையும்‌ அமைதியையும்‌ தர வேண்டுமென ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

2. நாம்‌ இறைபற்றின்மையையும்‌ உலகுசார்ந்து தீய நாட்டங்களையும்‌ மறுத்து, கட்டுப்பாட்டுடனும்‌ நேர்மையுடனும்‌ இறைப்பற்றுடனும்‌ இம்மையில்‌ வாழ பயிற்சி பெற வேண்டுமென மாட்டுத்‌ தொழுவத்தில்‌ பிறந்த மாமன்னரே, எங்கள்‌ இயேசுவே, நாங்கள்‌ எங்கள்‌ வாழ்வில்‌ போலிகளை விட்டுவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு  உண்மையுடன்‌ வாழ வரந்தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

3. இயேசுவின்‌ பிறப்பால்‌ உமது அருளை எங்களுக்கு வெளிப்படுத்தியுள்ள எங்கள்‌ அன்புத்‌ தந்தையே இறைவா, உமது அன்புக்கும்‌, அருளுக்கும்‌ உகந்த
கருவிகளாக எம்மை ஆக்கிடவேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

4. திருத்தந்தை பிரான்சிஸ்‌, ஆயர்கள்‌, குருக்கள்‌, இருபால்‌ துறவிகள்‌, பொதுநிலையினர்‌ அனைவரும்‌ இறையரசை பரப்ப தங்கள்‌ வார்த்தையாலும்‌, வாழ்க்கையாலும்‌ சாட்சியம்‌ பகர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌.

5. ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழையைப்‌ போல்‌ பிறந்த இயேசுவே, உமது பிறப்பின்‌ மகிழ்ச்சியை எங்களில்‌ உள்ள ஏழைக்‌ குடும்பங்களோடும்‌
குழந்தைகளோடும்‌ பகிர்ந்து கொள்ள வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்‌. ‌


இன்றைய வாசகங்கள்

விடியற்காலத் திருப்பலி


I. எசாயா 62:11-12
II. தீத்து 3:4-7
III. லூக்கா 2:15-20


பகல் திருப்பலி


I. எசாயா 52:7-10
II. எபிரேயர் 1:1-6
III.லூக்கா 2:15-20


திருப்பலி முன்னுரை:



விடியற்காலையில் பனிகொட்டும் இவ்வேளையில் (வாடைக்காற்று வீசும் இளம்காலைப் பொழுதில்) இறைவனின் வெற்றியின் பரிசு இயேசு கிறிஸ்துப் பாலனைக் காண அன்று இடையர்கள் போல் இன்று விரைந்து ஆலயம் வந்திருக்கும் இறைக்குலமே வருக வருக. உங்கள் வரவு நலமும், வளமும் தருவதாக!

இன்று நமக்கோர் பாலன் பிறந்துள்ளார். கடவுளின் இரக்கப்பெருக்கின் கொடையாக நமக்கு மீட்பு என்றும் வெற்றிப் பரிசுக் கிடைத்துள்ளது. மனிதர்களின் மீட்புக்காக, நலனுக்காக, தன்னையே வழங்கவந்த இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், நம்மையே அடுத்தவருக்கு வழங்கும் வழிகளை நம் இயேசுவே கற்றுத்தந்துள்ளார். அவரின் செயல்களின் என்றும் மிஞ்சி நிற்பது கடவுளின் பேரிரக்கமும், நன்மைத்தனமும், மனிதநேயமும் ஆகும். ஆம் இந்நாள்களில் மனிதநேயத்தின் மற்றோருப் பரிமாணமான அன்பின் பகிர்வை அடுத்திருக்கும் வறியவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவரிடமும் உறவின் வாழ்த்துகள் மூலமும், உதவிகள் மூலமும் வெளிப்படுத்துவோம். இப்படிச் செய்தால் எல்லா இருளும் இடிந்து இயேசுவின் பிறப்பு விடியல் ஒளிவானில் நிகழுமல்லவா? இன்பத்தைப் பங்கு போட்டால் அது  இரட்டிப்பாக மாறும் என்பதைக் கண்டு  கொள்வீா்கள். இதை நீங்கள் ஏழைகளுக்குச் செய்யவில்லை இயேசுவுக்கே செய்தீர்கள் என்பதை நினைத்து மகிழ்வீர்கள்!

இறைமகனின் அன்பின் பகிர்வாம் இத் திருப்பலிக் கொண்டாடத்தில் இடையர்கள் போல் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துப் பாடி உளமாறக் கலந்து கொண்டு இறைமகன் பாலன் இயேசுவின் அருளைப் பெற்றிடுவோம்.



முதல் வாசக முன்னுரை:-


(விடியற்காலத் திருப்பலி)

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா கடவுளின் அளவற்ற அன்பைப் பற்றிப் பெருமையுடன் மகிழ்ந்து அறிக்கையிடும் செய்திகளைக் காணலாம். ஆண்டவரின் வெற்றிப் பரிசாக மீட்பு வருகின்றது. நீயோ, தேடிக் கண்டுபிக்கப்பட்டவள் என்றும் இனி கைவிடப்படாத நகர் என்றுரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.



பகல் திருப்பலி:-

இன்றைய முதல் வாசகத்தில் எசாயா ஆண்டவரின் வாக்களித்த மீட்பு - மெசியா இவற்றைப் பற்றிப் பெரும் மகிழ்ச்சியுடன் செய்த பதிவுகளைக் காணலாம். ஆண்டவரின் செய்தியை அறிவிக்கவருவோனின் பாதங்கள் மலைகள்மேல் எத்தணை ஆழகாய் இருக்கின்றன என்று வருணிக்கும் எசாயா இடையர்களை எண்ணிதான் இப்படிச் சொல்லிருப்பரோ! ”ஆண்டவர் வருவதை அவர்கள் தம் கண்களாலேயே காண்பர். பிறஇனத்தரும் இதைக் காண்பர்.” எசாயாவின் மசிழ்ச்சியை நாமும் நாம் உள்ளத்தில் பகிர்ந்துகொள்வோம்.



இரண்டாம் வாசக முன்னுரை:-


(விடியற்காலத் திருப்பலி)

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசு கொணர்ந்தப் புதுபிறப்பாலும் தூயஆவியாலும் நிறைவாய் அளிக்கவிருக்கும் நிலைவாழ்வை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளப்போவதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


(பகல் திருப்பலி)

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுலடியார் இயேசுவின் பெருமை அருமைகளை எடுத்துரைக்கின்றார். இறைவாக்கினர்கள் மூலம் பேசி வந்த கடவள் தன் மகன் மூலம் நம்மிடம் பேசியுள்ளதையும், அவர் தந்தையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். வானத்தூதர்களை விட மேன்மையானவர். என்று அவரின் மாட்சிமையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


மன்றாட்டுகள் மூன்று திருப்பலிகளுக்கும் பொதுவானது.

www.anbinmadal.org 

 

Print Friendly and PDF


மறவாமல் அன்பின் மடலின் கிறிஸ்மஸ் மலரை பார்வையிட அன்புடன் அழைக்கிறோம்.

அனைவருக்கும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா வாழ்த்துகள்!  

 


Wednesday, December 15, 2021

திருவருகையின் நான்காம் ஞாயிறு

 திருவருகையின் நான்காம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


மீக்கா  5:1-4
எபிரேயர் 10:5-10
லூக்கா 1:39-45

திருப்பலி முன்னுரை:

இன்று  திருவருகையின் நான்காம் ஞாயிறு. இந்த ஞாயிறை அன்பின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம்.

இறைவனைத் தேடியவர்கள் மரியாவும், எலிசபெத்தும்... அவர்களுக்கு இறைவன் வெகுவாகத் தேவைப்பட்டார். குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த எலிசபெத்து, தன் சொந்த வாழ்வின் குறையைத் தீர்க்க இறைவனை இரவும் பகலும் தேடினார். இறைவனிடம் வேண்டினார். மரியா என்ற இளம்பெண்ணும் இறைவனைத் தேடினார். தன் சொந்தத் தேவைகளைக் காட்டிலும், சமுதாயத்தின் தேவைகளுக்காக அவர் இறைவனிடம் வேண்டினார். இறைவன் நம் வாழ்வில் செயலாற்றும் அழகை, இவ்விரு பெண்களின் வாழ்க்கை மூலமாக நமக்குக் கூறுகிறதே இன்றைய நற்செய்தி வாசகம்.

இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது. எலிசபெத்து மரியாவைப் புகழ்ந்த மொழிகள் மனிதர் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய, சொல்லவேண்டிய அழகான ஆசி மொழிகள்... "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" நாம் ஒவ்வொருவரும் தினமும் மற்றவர்களை உள்ளார்ந்த அன்பில் வாழ்த்தினால், ஆசீர்வதித்தால் இந்த பூமியில் எவ்வளவு நலம் வளரும்! பிறரை வாழ்த்தும்போது, ஆசீர்வதிக்கும்போது நாமும் வாழ்த்தப்பெறுகிறோம், ஆசீர் பெறுகிறோம்.

எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி நமது முழு நம்பிக்கையை நாம் கடவுள் மீது வைப்போமானால், நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு அதிகமான மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தந்து கடவுள் நம்மை வியப்பில் ஆழ்த்திடுவார் என்பது திண்ணம். அரும்பெரும் செயல்களை நமக்கு செய்வதற்காகவே கடவுள் வருகிறார். இதனை உணர்ந்தவர்களாக இத்திருப்பலியில் இறையருள் வேண்டிடுவோம்.


வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மீக்கா இஸ்ரயேல் மக்களைப் புதிய நம்பிக்கைக்கு அழைக்கின்றார். எருசலேமை இறைவன் ஒதுக்கிவிட்டு, ஒரங்கட்டப்பட்ட, சிறியதாய் இருந்த  பெத்லகேம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார் மெசியா தோன்றுவதற்கு!  இவ்வாறு மக்கள் அச்சமின்றி வாழ்வர் என்று அறிக்கையிடும் இவ்வாசகத்தை கேட்டு நம் இதயகுடிலில் இறைஇயேசுவை வரவேற்கத் தயார் ஆவோம்.

பதிலுரைப் பாடல்

திபா 80: 1-2. 14-15. 17-18

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.

இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்! உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்! உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி

உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

 இரண்டாம் வாசக முன்னுரை:

கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மரியா நம்பினார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை தான் தன்னில் இறைமகனைத் தாங்கிக் கொள்ள வைத்தது. மரியாவைப் போலவே இயேசுவும் இறைதந்தையின் திட்டத்திற்கு ஆகட்டும் என்று சொன்னதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் நினைவு கூறுகிறார். இவ்வாசகத்தை கேட்டு நம் இதயகுடிலில் இறைஇயேசுவை வரவேற்கத் தயார் ஆவோம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்.

எல்லாம் வல்லஇறைவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் உலக மீட்பரின் வருகையை எல்லோருக்கும் அறிவிக்கவும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை அதற்காக ஆயத்தப்படுத்தவும் தேவையான அருளைத் தரமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

வல்லக் கடவுளாகிய ஆண்டவரே! வியாதி, வறுமை, வருத்தம் ஆகியவகையால் வாடுவோர் அனைவரும் கிறிஸ்துவின் வருகையால் உடல் நலமும், மன நலமும் பெறவும், எளியோர் நற்செய்தி கேட்டிடவும், உள்ளம் உடைந்தோர் மன ஆறுதல் பெற்றிடவும் இறைவா உம்மை மன்றாடுவோம்.

அனைவரையும் தேற்றுபவரை எம் இறைவா! எம் இளைஞர், இளம் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் கிறிஸ்துமஸ் விழாவை தூய உள்ளத்துடன், கிறிஸ்துவ, மனமகிழ்ச்சியோடும் கொண்டாட அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எம்மை தேடிவந்த தெய்வமே! என் இறைவா! உமது முதல் வருகையை நினைவுகூர்கின்ற நாங்கள் அனைவரும், உமது விண்ணக வருகைக்காக எம்மைத் தகுந்த விதமாகத் தயாரிக்க அருள்புரியும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா! மரியாளைப் போல நாங்களும் அடுத்தவர் தேவைகளை அறிந்து, அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் உள்ளார்ந்த அன்போடு செய்திட நல்ல மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, December 9, 2021

திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு


 திருவருகைக் காலம் 3 ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.


செப்பனியா 3:14-17
பிலிப்பியர். 4:4 -7
லூக்கா 3:10-18

திருப்பலி முன்னுரை:


இன்று திருவழிபாட்டு ஆண்டின் மூன்றாம் ஞாயிறு.  இந்த ஞாயிறை மகிழ்ச்சியின் ஞாயிறு என்ற அழைக்கின்றோம். ஏனென்றால் இயேசுவின் பிறப்பு விழா நெருங்குவதால் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. அந்த மகிழ்ச்சியை நிபந்தளைகளோடு இறைவன் தருவதில்லை. மாறாக, அவருடைய வருகை நம்மிலே நிபந்தனைகளற்ற நிலையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இதைத்தான் இன்றைய இறைவாக்குகளும் நமக்கு எடுத்துரைக்கின்றன.

பேரிடராய் வந்த பெரும் மழை ஒரே இரவில் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. மக்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் திருமுழுக்கு யோவான் சொன்னது போல இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு பகிர்ந்ததையும், முடியாதவர்களுக்கு முடிந்தவர்கள் ஓடி வந்து உதவியதை பார்க்கும்போதும் சோகத்திலும் ஓர் உண்மையான மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. பகிர்வின் மகிமை வெளிப்பட்டது. இந்த பகிர்வுகளின் மகிழ்ச்சியும், ஈடுபாடும்  நம் வாழ்வில் துன்பதுயர நேரங்களில் மட்டும் இல்லாமல் எப்போதும் தக்க வைத்துக் கொள்ள நம் சுயநலங்களை மறந்து திருப்பலிக் கொண்டாட்டங்களில் மன்றாடுவோம்.

இறை ஆவியில்‌ வேரூன்றிய, இருபெரும்‌ ஆளுமைகளில்‌ வேரோடி, ஆண்டவரின்‌ ஆவியால்‌ நிரப்பப்பட்டு, நன்றியோடு கூடிய இறைவேண்டல்‌ வழியாய்‌ எப்போதும்‌ மகிழ்ந்திருப்போம்‌, எதிர்வரும்‌ கிறிஸ்து பிறப்பு இம்‌மகிழ்ச்சியை நம்மில்‌ நிறைவுபெறச்‌ செய்வதாக !



வாசகமுன்னுரை:

முதல் வாசக முன்னுரை:


இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு இருந்த தீயகாலம்  மறைந்துவிட்டது.“இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கன்றார். அவர்கள் எதற்கும் ஆஞ்சவேண்டாம்” என்று இறைவனின் உடனிருப்பை எடுத்துரைக்கும்  இறைவாக்கினர் செப்பனியாவின் வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்து  கவனமுடன் செவிமெடுப்போம். அவர் ஆசீரால் நம்மை நிரப்பி அருள்வாராக.

இரண்டாம் வாசக முன்னுரை:


இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல்நல்லதைப்‌ பற்றிக்கொண்டு தீமையை விலக்கி, எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ “நன்றியுணர்வுடன்‌. கூடிய இறைவேண்டலில்‌ மகிழ்ந்திருங்கள்‌” என்ற நடைமுறை வாழ்வுக்கான வழிகாட்டும்‌ ஞானத்தை முன்வைக்கிறார்‌ பவுலடிகளார்‌. ஆண்டவர் அண்மையில் உள்ளார். கவலைகளை விட்டுவிட்டு அகமகிழ வேண்டும். அறிவையெல்லாம் கடந்து அமைதி  நம்மை ஆட்கொள்ளும் என்று பிலிப்பியருக்கு எழுதியதைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்


எசாயா 12: 2-3, 4, 5-6
பல்லவி: ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; ஆண்டவர் சிறந்து விளங்குகின்றார்.

இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்; ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே. மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்துகொள்வீர்கள். -பல்லவி

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர்  மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக. சீயோனில்  குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். –பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.அன்பின் இறைவா திருவருகைக்காலத்தில் 3ஆம் ஞாயிறாகிய இன்று திருஅவையில் இருக்கும் மகிழ்ச்சி திருஅவையில் மட்டுமல்லாமல், உலகில் இருக்கும் அனைத்து மாந்தருக்கும் கிறிஸ்துவின் மகிழ்ச்சியின் நிறைவில் என்றும் நிலைத்து நிற்க, பிறக்கும் பாலன் இயேசு கிறிஸ்துவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2.தந்தையே எல்லோரும் ஓன்றாய் இருப்பர்களாக என்னும் இறைவார்த்தையின் அடிப்படையில் எங்கள் குடும்பங்களில் ஒற்றுமையும், அன்பின் மகிழ்ச்சியும் நிறைந்திட அருளும். விசுவாசத்தைக் காப்பதோ, அதற்காகப் போராடுவதோ எளிதான செயல் அல்ல; இருப்பினும், விசுவாசத்தின் வழியே அனைத்தும் இயலும் என்ற திருத்தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப எங்கள் வாழ அமைய வேண்டி வரங்களை அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

3.காலத்தில் அறிகுறிகளை அறிந்த எம் இறைவா, மனிதனை இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்தையும் நீ ஆண்டு கொள்வாயாக என்ற கூறி படைப்பின் மேன்மையை உணர்த்தினீர். ஆனால் இன்று நாங்கள் இயற்கைக்கு எதிராக செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து இயற்கையை நாங்கள் நேசிக்கவும், பாதுகாக்கவும் இன்றைய தலைமுறையினருக்கு நல்ல தேசத்தை கொடுக்கவும் உமது அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா, மழையினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், கைவிடப்பட்டோர் ஆகிய அனைவருக்கும் தேவையான பாதுகாப்பையும், சுகத்தையும், தொற்று நோயிலிருந்து பாதுகாப்பையும், நம் வீண்பெருமைகளின் கடினமான ஓரங்களை மிருதுவாக்கி, இயேசுவுக்கு உள்ளத்தில் இடம் உருவாக்கும் காலம், இத்திருவருகைக் காலம் என்பதை உணரும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. தோழமையின் நாயகனே எம் இறைவா! வரப்போகும் கிறிஸ்து பெருவிழாவை நாங்கள் வெறும் வெளி அடையாளங்களைத் தவிர்த்து, ஆடம்பரங்களை குறைத்து, ஆன்மீகத் தயாரிப்பில் எங்கள் கவனத்தைச் செலுத்தி சாதி மத பேதமின்றி உமது பிறப்பின் செய்தியை நற்செய்தியாக சான்ற பகிர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

Print Friendly and PDF