Monday, May 13, 2024

தூய ஆவியாரின் பெருவிழா 19.05.2024

தூய ஆவியாரின் பெருவிழா

 இன்றைய வாசகங்கள்:

1. திருப்பணி 2:1-11
2. 1கொரி 12:3,7,12-13  
3. நற்செய்தி யோவான் 20:19-23

திருப்பலி முன்னுரை

ஆவியிலும்‌, உண்மையிலும்‌ வழிபட வந்திருக்கும்‌ இறை இயேசுவில்‌அன்புக்குரிய சகோதரர்‌ சகோதரிகளே! தூய ஆவியாரின்‌ பெருவிழாவைக்‌ கொண்டாட கோவிலில்‌ குழுமியிருக்கும்‌ உங்கள்‌ அனைவரையும்‌ பெருமகிழ்வுடன்‌ வரவேற்கின்றோம்

இன்று தாயாம்‌ திருஅவையின்‌ பிறந்த நாள்‌ ! கிறிஸ்துவின்‌ மறையுடலாக விளங்கும்‌ திருஅவையின்‌ தொடக்க நாள்‌! அன்னை மரியாவுடன்‌ செபத்தில்‌ இணைந்திருந்த சீடர்கள்‌ நடுவில்‌ தூய ஆவியார்‌ இறங்கி வந்தபோது திருஅவை பிறந்தது. இயேசுவின்‌ உயிர்ப்பு, விண்ணேற்றம்‌, தூய ஆவியாரின்‌ வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும்‌, நமது கிறிஸ்தவ நம்பிக்கையின்‌ அடித்தளமான உண்மைகள்‌. இவை மூன்றும்‌ நம்‌ வாழ்வில்‌ நல்ல மாற்றங்களைக்‌ கொண்டுவரும்‌ பெருவிழாக்கள்‌ !

தூய ஆவியார்‌ என்பவர்‌ ஓர்‌ ஆற்றல்‌ ! வேறுபாடுகளைக்களைந்து ஒற்றுமையை ஏற்படுத்த வல்லவர்‌. தூய ஆவியார்‌ மூவொரு கடவுளின்‌ மூன்றாம்‌ ஆளாக விளங்குகிறார்‌. இவர்‌ இறைத்தந்தையுடனும்‌, இறைமகன்‌ இயேசுவுடனும்‌ ஒன்றாக ஆராதனையும்‌ மாட்சியும்‌ பெறுகின்றவர்‌. தூய ஆவியாரின்‌ வல்லமையால்தான்‌ அன்னை மரியாவின்‌ கருவில்‌ இயேசு உருவானார்‌. இயேசு திருமுழுக்குப்‌ பெற்றபோதும்‌ தாபோர்‌ மலையில்‌ தோற்றமாற்றம்‌ அடைந்தபோதும்‌ தூய ஆவியார்‌ புறா வடிவில்‌ அவர்மீது இறங்கி வந்தார்‌.

தூய ஆவியாரின்‌ பெருவிழா நாளில்‌ அவர்‌ தங்கியிருக்கும்‌ நம்‌ உடலைத் தூய்மையாகப் பேணவும்‌, ஆற்றல்களையும்‌, திறமைகளையும்‌ பொது நன்மைக்காகப்‌ பயன்படுத்தவும்‌, தூய ஆவியாரின்‌ செயல்களுக்கு இசைந்து நடந்து இயேசுவின்‌ சாட்சிகளாக வாழவும்‌ வரம்‌ வேண்டி இத்திருப்பலியில்‌ தொடர்ந்து செபிப்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை :

இறை இயேசு உயிர்த்த ஐம்பதாம்‌ நாளன்று அவர்‌ வாக்களித்தபடியே ஒரே இடத்தில்‌ கூடியிருந்த சீடர்கள்‌ அனைவரையும்‌ பிளவுபட்ட நாவு வடிவில்‌ தூய ஆவியார்‌ ஆட்கொண்டதையும்‌ அவரின்‌ தூண்டுதலால்‌ சீடர்கள்‌ பல்வேறு மொழிகளில்‌ பேசும்‌ ஆற்றல்‌ பெற்றதையும்‌ இயேசுவின்‌ நற்செய்தி உலகில்‌ பலருக்கும்‌ அவரவரது தாய்‌ மொழிகளிலேயே அறிவிக்கப்பட்டதையும்‌ எடுத்துரைக்கும்‌ முதல்‌ வாசகத்திற்கு செவிசாய்ப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1,24 29-30. 31,34
பல்லவி : ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

 
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி 


ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

தூயஆவியார் ஒருவரே செயல்பாடுகள் பல வகையுண்டு. ஊனியல்பின்‌ இச்சை தூய ஆவியாருக்கு முரணானது என்றும்‌, அந்த இச்சைகளில்‌ ஈடுபடுவோர்‌ இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்றும்‌, தூய ஆவியின்‌ துணையால்‌ வாழ்வதால்‌ அவர்‌ காட்டும்‌ நெறியில்‌ நடக்க முயலுவோம்‌ என்றும்‌ எடுத்துரைக்கும்‌ இரண்டாம்‌ வாசகத்திற்கு செவிமடுப்போம்‌.

****தொடர் பாடல்* பாடல் இசையுடன்********

 

தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின் அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர், இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே, ஆன்ம இனிய விருந்தினரே, இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே, வெம்மை தணிக்கும் குளிர் நிழலே, அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே, உம்மை விசுவசிப்போருடைய நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல் உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை, நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர். வறட்சியுற்றதை நனைத்திடுவீர், காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர், குளிரானதைக் குளிர் போக்கிடுவீர், தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து, உம்மை நம்பும் அடியார்க்குக் கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர், இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர், அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1.திருஅவைக்காக…
துணையாளரை உங்களுக்கு அனுப்புகிறேன் என்று மொழிந்த எம் இயேசுவே உமது இறையரசை கட்டி எழுப்பும் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள, குருக்கள், இருப்பதால் துறவியர், பொதுநிலையினர் அனைவரும் தாம் பெற்றுக் கொண்ட தூஆவியாரின் ஆற்றலுக்கேற்ப ஒரே சமத்துவ சமுதாயம் படைத்திட போதுமான தூயஆவியாரின் அருள்வரங்களை பொழிந்து வழிநடத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
2. நாட்டிற்காக…
எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக என்று மொழிந்த இயேசுவே எமது நாட்டுத் தலைவர்கள் சாதி - சமயம் - இனம் - மொழி கடந்து செயலாற்றவும், இறையரசை மண்ணக மாந்தர்கள் சுவைக்கும் வாய்ப்பைத் தலைவர்கள் வாயிலாக வழங்கிடும் வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகிறோம்.
3.அமைதிக்காக…
கருணை கடலே எம் இறைவா! எங்கு நோக்கினும் ஒரே குண்டு வெடிப்புகளும் - போரட்டங்களும், நிலநடுக்கங்களும் - வன்கொடுமைகள் - பாலியல் போன்ற கொடுமைகளால் பாதிக்கப்படும் உம் மக்களை உமது பாதம் அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்குத் துணையாளரின் வழி நடத்துதல் தொடர்ந்து கிடைத்திட வரம் வேண்டி இறைவா உமை மன்றாடுகின்றோம்.
4.மாணவ செல்வங்களுக்காக…
வெற்றி வேந்தனே எம்இறைவா! தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பாடங்களைக் கிடைக்கப் பெற்று அதில் சாதனைப் படைத்திட துணையாரின் துணை வேண்டியும், அனைவருக்கும் உயர்கல்வி கற்கும் வாய்ப்புகள் நல்ல தரமான கல்வி கூடங்களில் கிடைக்க வேண்டியும் இறைவா உமை மன்றாடுகின்றோம்.
5. இளைய சமுதாயத்திற்காக...
நன்மை பயக்கும்‌ இறைவா! உலகில்‌ உள்ள அனைத்து இளைஞர்களும்‌ இளம்‌ பெண்களும்‌ நல்ல பண்புகளை வளர்த்துக்‌ கொள்ளவும்‌, தீயப்‌ பழக்கங்களில்‌ சிக்காகமல்‌ விழிப்புடன்‌ இருக்கவும்‌, நாட்டுக்கும்‌ வீட்டுக்கும்‌ நன்மை பயப்பவர்களாக வாழவும்‌, எரிச்சல்‌ அடையாமலும்‌, சினம்‌ கொள்ளாமலும்‌, பொறுமையாகவும்‌, கனிவாகவும்‌, உதவும்‌ மனப்பான்மையுடனும்‌ பணியாற்றவும்‌, ஒருவர்‌ மற்றவரை மன்னித்து, மதித்து, விட்டுக்கொடுத்து வாழவும்‌ அவர்களுக்கு மனமாற்றத்தைத்‌ தந்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.வரமருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்‌.

www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding


Monday, May 6, 2024

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 12/05/2024

 ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

திருத்தூதர் பணிகள் 1: 1-11
எபிரேயர் 4: 1-13
மாற்கு 16 :15-20

திருப்பலி முன்னுரை:

குருவாகிய கிறிஸ்துவும், அவரது சீடர்களும் இணைந்து உருவாக்கிய 'நற்செய்தி' என்ற அற்புதப் படைப்பைச் சிந்திக்க இஞ்ஞாயிறு நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று, இயேசுவின் விண்ணேற்ற விழாவைக் கொண்டாடுகிறோம். அதே வேளையில், இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்றிய சீடர்களின் அர்ப்பணத்தையும், அயரா உழைப்பையும், துணிவையும் இந்நாளில் கொண்டாடுகிறோம்.

விண்ணகம் எழுந்து செல்வதற்கு முன் இயேசு கிறிஸ்து அவரது சீடர்களுக்கும், உலக மக்களுக்கும் ஓர் அருமையான இரகசியத்தை வெளிப்படுத்திச் சென்றார். அது என்ன இரகசியம்? நம்பிக்கைக்கொள்வோர் மீட்பு பெறுவர் என்பது தான் அது. ஆம். உலகத்தை எல்லாத் துன்பத் துயரங்களிலிருந்தும் விடுவித்து அதற்கு மீட்பளிக்கும் ஆற்றல் நம்பிக்கைக்கு உண்டு!

'நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறியபோது, அந்தக் குழுவில் இருந்தவர்கள் யாரும் அருள்பணியாளரோ, துறவியோ அல்ல. அவர்கள் அனைவரும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருந்த சாதாரணத் தொழிலாளிகள். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.

வார்த்தைகளை அதிகம் கூறாமல், நற்செய்தியை வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், மருத்துவர் ஆல்பெர்ட் ஸ்க்வேட்ஸர், புனித அன்னை தெரேசா என்று பல்லாயிரம் உன்னதப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

தூய ஆவியாரின் துணையோடு நம்பிக்கையை, அதாவது கடவுளின் வல்லமையால் ஆகாதது ஒன்றுமில்லை என்ற எண்ணத்தை நமது இல்லத்திற்குள்ளும். உள்ளத்திற்குள்ளும், ஆழ்மனத்திற்குள்ளும் ஊற்றிக்கொள்வோம்!

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை:

இயேசு துன்புற்று இறந்தபின் நாற்பது நாட்களாகச் சீடர்களுக்குத் தோன்றி இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார். சான்றுகள்மூலம் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார். உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சியாக இருங்கள் என்று பணித்தார். அவர்கள் கண் முன்னே விண்ணகம் சென்றார். அண்ணாந்து வானத்தைப் பார்த்தவர்களை துணிந்து உலகத்தைப் பாருங்கள்! இறையாட்சியை அறிவியுங்கள் என்று அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 47: 1-2, 5-6, 7-8
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார். ஆண்டவர்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே! - பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை:

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இயேசுவின் விண்ணேற்பில் அடங்கியள்ள மறைபொருளை வெளிப்படுத்துகிறார். மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம் என்ற ஒரே எதிர்நோக்குடன் வாழ அழைக்கும் புனித பவுலடியாரின் வார்த்தைக்குச் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி  

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.மாட்சிமைமிக்க எம் இறைவா! திருஅவையின் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் இருபால் துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் ஆண்டவர் இயேசுவின் ஆற்றலைப் பெறு இவ்வுலகில் அவரின் விழுமியங்களை உலகமெங்கும் சான்று பகர, அவர் சொல்லிக் கொடுத்தபடி வாழ்ந்து காட்டிட தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

2அன்பே உருவான எம் இறைவா! எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சி பறைசாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. இரக்கமுள்ள எம் இறைவா! உலகமெங்கும் துன்புறும் திருஅவையைக் கண்ணோக்கும். உமது பணியின் நிமித்தம் துன்பப்படும் உமது ஊழியர்களையும் மற்றும் உம்மை ஏற்றுக் கொண்ட மக்களையும் பாதுகாத்து, அவர்களை இறைநம்பிக்கையில் வேரின்றி வளர்ந்திடவும், அவர்களைத் துன்புறுத்துவர் மனமாறி நல்ல வழியில் நடத்திடவும் உமது அருளை பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அனைவருக்கும் மீட்பராகிய எம் இறைவா! எங்கள் பங்கில் உள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எங்கள் ஆண்டவராகிய தந்தையே! எம் இறைவா! இவ்வேளையில் உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடும் நாங்கள் அன்னை மரியாளைப் போல் குடும்பங்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும், பிறரன்பில் சிறந்து விளங்கவும், கலங்கரை விளக்காகவும் இருந்து எங்களை வழிநடத்திட, எங்களின் அன்னையர்களுக்குத் தேவையான இறையருளையும், உள்ளசுகமும், உடல்சுகமும் தர வேண்டுமென்று அன்னை மரியாவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF