Tuesday, October 8, 2024

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

1சாலமோன் ஞானம் 7:7-11
எபிரேயர் 4:12-13
மாற்கு 10:17-30

முன்னுரை:

இன்று ஆண்டின் பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறைவழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை இறைமகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம். இன்றைய நற்செய்தி செல்வந்தரின் மனநிலைப் பற்றி எடுத்துரைக்கிறது. சாலமோன் கடவுளிடம் தனக்கு ஞானத்தைக் கேட்டார். ஏனென்றால் ஞானம் கடவுள் தரும் கொடையாகும். ஞானம் கிடைத்துவிட்டால் அத்துடன் அனைத்து செல்வங்களும் சேர்ந்தே வந்துவிடும். இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இறைவார்த்தையின் ஒளியில் நடப்பதே சாலச்சிறந்ததாகும்.

இன்று இயேசுவிடம் வந்த செல்வந்தன் கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய விரும்பினான். ஆனால் இயேசுவோ ‘கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழியம் செய்ய முடியாது’ என்பதை ஆணித்தரமாக உணர்த்துகின்றார். எனவே நிலைவாழ்வுக்குச் செல்லப் பற்றற்ற வாழ்வே தேவை என்பதை உணர்ந்து பரம்பொருளாம் இறைவனைப் பற்றிக் கொள்ளுவோம். பின்பு வந்து பாரும் என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து ஞானத்தைப் பெறுவோம்.

கடவுள்‌ சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும்‌, புத்தியையும்‌ கொடுத்தார்‌. நாமும்‌, அழிவைத்‌ தரும்‌ செல்வத்திற்கு அடிபணியாமல்‌, அழியா வாழ்வைத்‌ தரும்‌ ஞானத்தைப்‌ பெற ஆவல்‌ கொள்வோம்‌. ஞானத்தைக்‌ கற்று, நெறிபிறழாது நடந்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக்‌ கொள்வோம்‌. இறையருளை நாடி அருள்தரும்‌ திருப்பலியில்‌ இணைவோம்‌.

வாசகமுன்னுரை:

முதல்‌ வாசக முன்னுரை :

விலையுயர்ந்த மாணிக்கக்‌ கல்லும்‌, செல்வமும்‌ ஞானத்தின்‌ முன்‌ ஒன்றுமில்லை. ஞானமே உன்னதமானது - ஞானத்தைப்‌ பெற, ஞானத்தைத்‌ தேடுவோர்‌ ஞானத்தோடு எல்லா நலன்களையும்‌ பெற்று நிறைவு காண்பர்‌ என்பதை இன்றைய முதல்‌ வாசகம்‌ நமக்குக்‌ சுட்டிக்காட்டுகின்றது. அதிகாரத்தைவிட மேலானது செல்வத்தைவிட மேலானது உடல்நலத்தைவிட, அழகைவிட மேலானது ஞானம். அது வந்ததால் தன்னிடம் எல்லாம் வந்து சேர்ந்தன என ஞானத்திற்குப் புகழாரம் சூட்டுகின்றார் சாலமோன். கடவுளுடைய உயிருள்ள வல்லமையுள்ள இறைவார்த்தைக்குக்‌ கவனமுடன்‌ செவிமடுப்போம்‌.

பதிலுரைப் பாடல்

திபா 90: 12-13. 14-15. 16-17

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

1. எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். -பல்லவி

2. காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். -பல்லவி

3. உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். எம்கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! -பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை :

இன்றைய இரண்டாம் வாசகப் பகுதியில் இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு தந்த மீட்பை அந்த மீட்பிற்குக் கொடுக்கும் பதிலும் எப்படி இருக்க வேண்டும் என எழுதுகிறார். இறைவார்த்தை அது வெற்றுப்‌ பேச்சல்ல, உயிருள்ள கடவுளின்‌ சொற்கள்‌. வெற்று வார்த்தையல்ல இறைவார்த்தை, அது வாழ்வு தரும்‌ வார்த்தை. வெறும்‌ வெற்று மொழியல்ல இறை வார்த்தை, அது பேரன்புமிக்கக் கடவுளின்‌ அன்பு மடல்‌, என எடுத்தியம்பும்‌ கடவுளுடைய ஆற்றல்மிக்க இறைவார்த்தைக்குக்‌ கவனமுடன்‌ செவிமடுப்போம்‌.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

திருச்சபைக்காக:
ஞானமென்னும் அருட்கொடைகளைச் சாலமோனுக்குக் கொடுத்த எம் இறைவா! எம்திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும் கடவுளின் ஆசீர் பெற்றவர் என்பதை நாங்கள் உணர அல்லது பிறர்முன் துலங்க, நாங்கள் எங்கள் முழு ஆற்றலையும், திறன்களையும் பயன்படுத்த வேண்டிய வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நம் குடும்பங்களுக்காக:
என்றும் எங்களை நிறைவாய் ஆசீர்வதிக்கும் எம் இறைவா! இன்று நாங்கள் ஞானம் என்ற உம் கொடையைப் பெற்று இயேசுகிறிஸ்துவை எம்நிலைவாழ்வாகப் பெற்றவும், நீ ஆசீர்வதிக்கப்படுவாய்! என்று தினமும் நம் கண்முன் கொண்டிருக்கும் இறைவார்த்தை, நாங்களும் மற்றவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று எங்களைத் தூண்டவும், இறைவார்த்தையால் ஆசீர்பெற்ற வாழ்வை வாழவும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நாட்டு தலைவர்களுக்காக:
உறவுடன் வாழ ஒவ்வொருவரையும் அழைக்கும் உன்னத இறைவா! எங்கள் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் தங்களை அழைத்துத் தங்களுக்குப் பணி நியமனம் செய்த அரசின் நோக்கத்துக்காக விசுவாசமாய் இருக்கும் விதத்தில் சிறந்த திட்டமிடுதலுடன் பாகுபாடின்றிப் பணியாற்றி மக்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்து நற்பெயர் ஈட்ட முயலவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

சமுதாயத்திற்காக:
அகமுவந்தழைக்கும் அன்புத்தந்தையே இறைவா! இயேசுகிறிஸ்துவிடம் புன்னகையோடு வந்தவர் அனைவரும் முகவாட்டத்தோடு செல்வதில்லை என்ற நிலையும், தன்னலமற்ற சேவையால் இம்மையிலும் மறுமையிலும் எல்லாச் செல்வங்களைப் பெற்றவர்களாய் வலம் வரும் வரம் வேண்டியும், இறையாட்சிப் பணிகளை ஏற்றக் காலத்தில், ஏற்ற இடத்தில் ஏற்ற முறையில் ஆற்றவேண்டிய வரத்தையும் நல்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பியங்களுக்காக:
உறவின் ஊற்றே உன்னத இறைவா! எங்கள் பங்கில் உள்ள எல்லா அன்பியக் குடும்பங்களிலும் செபமாலைப் பக்தி முயற்சி வளரவும், அன்னை மரியாளின் பரிந்துரையைப் பெற்று, எங்கள் பங்கைச் சேர்ந்த எல்லா நிறுவனங்களும், பக்தச் சபைகளும் வளர்ந்துச் சிறந்த பலனை வெளிபடுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

youtube coding

No comments:

Post a Comment