Wednesday, September 16, 2015

ஞாயிறு வாசக முன்னுரைகளும் - மன்றாட்டுகளும். - 20-09-2015



ஆண்டின் 25ஆம் ஞாயிறு

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்.





முன்னுரை:


ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் அனைவரும் பிறப்பால் நல்லவர்கள்தாம். ஆனால், காலப்போக்கில் நம் செயல்களால் இந்த கடவுளின் பிள்ளை என்ற நிலையில் இருந்து, கடவுளை அறிந்து கொள்ளும் நிலையிலிருந்து, கடவுளிடமிருந்து உதவிபெறும் நிலையிலிருந்து நாம் தள்ளிச்செல்லும் அபாயம் ஒட்டிக்கொண்டே இருக்கின்றது. ஆக, நல்லவராக அல்லது நீதிமானாக இருப்பது என்பது ஒரு வாழ்க்கைப் பயணம். இன்று அல்லது இப்போது என நிகழும் ஒருபொழுது நிகழ்வு அன்று. இந்த நிலையைத் தக்க வைக்க நமக்கு நிறைய விடாமுயற்சியும், கடின உழைப்பும், சோர்வற்ற நிலையும் தேவை.



என் கைகளோ சிறியது. ஆனால் அவர் கரங்களோ பெரியது. எனவே நாம் எடுத்தால் குறைவாக வரும். அவராகக் கொடுத்தால் நம் கைகளில் நிறைய விழும்! என்று எதிர்நோக்கோடு காத்திருப்பதில் குழந்தையுள்ளம் மட்டுமல்ல, நன்மை தேடும் உள்ளமும், சிற்றின்ப நாட்டங்களைத் தள்ளிப்போடும் உள்ளமும் இருக்கின்றது. இந்த உள்ளம் உங்களிலும் இருக்கிறது! என்னிலும் இருக்கிறது! இதை நாம் உணர்ந்து கொள்ள இறைவன் நம் அகக்கண்களுக்கு ஒளிதருவாராக! என்ற எதிர்பார்ப்புடன்  இத்திருப்பலி கொண்டாடத்தில் திறந்த உள்ளத்துடன் பங்கேற்போம்..





வாசகமுன்னுரை:


இன்றைய முதல்வாசகத்தில் நன்மைக்கும், தீமைக்கும் இடையே நடக்கும் போரட்டம் இயேசுவின் வாழ்வில் மட்டுமல்ல, நம் வாழ்விலும் நடக்கலாம். நாமும் மற்றவர்களின் கைகளில் ஒப்புவிக்கப்படலாம். நாமும் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். நாமும் நிராகரிக்கப்படலாம். நம்மையும் மானிடர்கள் வெறுத்து ஒதுக்கலாம். இந்த நேரங்களில் நம் மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?   கடலளவு கிடைத்தாலும் மகிழ்ந்துவிடாமல், அல்லது கையளவே கிடைத்தாலும் வாடிவிடாமல்  இருப்பதே மேன்மை. இந்த மனநிலை நமக்கும் இருந்தால் எத்துணை நலம்! இவற்றையே எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.



இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு  தங்கள் கொள்கையில் தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பவர்கள் மட்டுமே நாட்டங்களைத் தள்ளிப்போட முடியும். மற்றவர்கள் வெறும் காற்றில் அடித்துச் செல்லப்படும் காகிதம் போலத்தான். பறந்து கொண்டே இருப்பார்கள். ஆனால், எங்கே போகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால், நாட்டங்களைத் தள்ளிப்போடுபவர்கள் கற்பாறை போன்றவர்கள். அவர்கள் என்றும் உறுதியாக நிலைத்து நிற்பார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் அமைதியும், பாதுகாப்பும் இருக்கும் என்று உறுதியாக எடுத்துரைக்கிறார்.  இவ்வாசகத்தின்  கவனமுடன் செவிமெடுப்போம்.





 

பதிலுரைப் பாடல்

திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்;
உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்;  என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்;  அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;  தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி

                                     

மன்றாட்டுகள்


திருச்சபைக்காக:


ஆசிகள் வழங்கும் ஆற்றலின் ஊற்றே இறைவா!

எம் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களாகிய நாங்கள் பணிவிடை பெறுவதைவிட பணி புரிவதே மேல் என்பதனை உணர்ந்து தன்னலமற்றவர்களாய் உம் மக்களுக்காய் உழைத்திட , கடவுளின் பிள்ளைகளாக வாழ வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


நம் குடும்பங்களுக்கா:


அல்லனவற்றை அழித்து நல்லன செய்யும் இறைவா!

நேர்மையானவாழ்வு வாழவும்,  ஆணவபோக்கை விட்டு விட்டு குழந்தை உள்ளம் கொண்டவராய் வாழவும் அதனால் ஏற்படும் தற்காலிகமான தோல்வியை வென்று நிரந்திரமான வெற்றிப் பெற்றிட உழைப்பையும் உறுதியையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..



நாட்டு தலைவர்களுக்காக:


முன்னேற்றப் பாதையில் வழிநடத்தும் மூவொரு இறைவா!

பேராசையும் பொறாமையுமே சண்டை சச்சரவுக்கக் காரணம் என்பதை உணர்ந்து எம் நாட்டுத் தலைவர்கள் தீயசக்திகளின் வெளிபாடான பேராசையையும் பொறாமையையும் முற்றிலும் அவர்கள் உள்ளத்திலிருந்து நீக்கி எம் மக்கள் நலம் வாழ அவர்கள் உழைத்திட வேண்டி வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்..



இளையோருக்காக :


வாழ்வை வெற்றியாக்கும் விண்ணகத் தந்தையே!

மனிதருடைய வழியோ சுயநலத்தின் வழி. ஆனால் கடவுளின் வழியோ பொறுமையின் வழி, தாழ்ச்சியின் வழி என்பதை அறிந்து அடுத்தவன் வாழ்ந்தால் தானும் வாழ முடியும் என்ற நல்லெண்ணத்தை எம் இளையோரின் உள்ளத்தில் பதிவு செய்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



 பதிலுரைப்பாடலுக்கு இசையமைத்துப் பாடி கொடுத்து உதவிய  திரு. ஆனந்தகீதன்  ( +91 97 91 045575 ) அவர்களுக்கு நன்றி...

No comments:

Post a Comment