தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)
இன்றைய நற்செய்தி வாசகங்கள்
திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான் 20:19-23
திருப்பலி முன்னுரை
அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளைக் குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும் இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க வந்துள்ள இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும், தடையும் தாண்டிக் கிறிஸ்தவம் வளர்ந்திருக்காது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களிலிருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்! ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம்.
வாசகமுன்னுரை
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள். இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக்
கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
பதிலுரைப்பாடல்
ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.
தூயஆவியின் தொடர் பாடல் : (mp3 பாடல் இசையுடன்)
தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524)
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.
எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.
உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.
உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.
உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.
உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.
மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.
வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.
இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.
புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும். அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்." அல்லேலூயா
நம்பிக்கையாளரின் மன்றாட்டு
1. தூய ஆவியின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்கிற நற்செய்தியின் படி, நாங்கள் எந்தப் படிநிலையில் இருந்தாலும், அனைவரும் உம்மால் அனுப்பப்பட்டவர்களே என்றுணர்ந்து, ஒற்றுமையின் ஆவியை, உறுதி தரும் ஆவியை நிறைவாக உள்வாங்கி, இறையாட்சியின் உயிர் துடிப்புள்ள சாட்சிகளாக வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. மிகக்குறுகிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்கிற சொற்றொடரை இரண்டுமுறை உச்சரித்த நீர், இவ்வுலகுக்கு நிலையான அமைதியை உரித்தாக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். பெந்தக்கோஸ்து பெருவிழாவின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசியோரும், நற்செய்தியை தம் சொந்த மொழிகளில் கேட்கச் செய்த ஆவியானவர், பல்வேறு பிரச்சனைகளால் முரண்பட்டுள்ள உலகத்தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், ஒருமித்த கருத்துக்கும் ஒற்றுமையின் பாதைக்கும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப் பல்லவியாகப் பகர்ந்த நாங்கள், தூய ஆவியின் நிரப்புதலால் புத்தொளி பெற வேண்டுமென்றும், எம்பிள்ளைகளும், இளையோரும் தூய ஆவியின் வழிநடத்துதலால், தங்கள் எதிர்கால வாழ்வை சரியாகத் தேர்வு செய்து, நிறை வாழ்வு வாழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “அருள் கொடைகள் பலவகை உண்டு; செயல்பாடுகள் பலவகை உண்டு; திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே; கடவுள் ஒருவரே” என்றுணர்ந்து, எங்கள் பங்குகளிலும், அன்பியங்களிலும், தனிப்பட்ட குடும்பங்களிலும், நாங்கள் வாழும் சமுதாயத்திலும், நாங்கள் அனைவரும், ஒரே உடலின் பல்வேறு உறுப்புகளாய், இசைந்தும், இணைந்தும், செயல்படுகிற மனப்பக்குவத்தை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
5. இங்கே கூடியுள்ள எங்கள் அனைவர் மீதும், தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். நாங்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்தவர்களாகவும், அனைத்து அருள்வரங்களும் பெற்றவர்களாகவும், ஒன்றிப்பில் இன்புற்று வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.











