Wednesday, May 20, 2026

தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)

 தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான்  20:19-23

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளைக் குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும்  இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க  வந்துள்ள இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும், தடையும் தாண்டிக் கிறிஸ்தவம்  வளர்ந்திருக்காது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களிலிருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்! ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள். இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக்
கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


தூயஆவியின் தொடர் பாடல் : (mp3 பாடல் இசையுடன்) 


தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524) 


தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்." அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தூய ஆவியின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்கிற நற்செய்தியின் படி, நாங்கள் எந்தப் படிநிலையில் இருந்தாலும், அனைவரும் உம்மால் அனுப்பப்பட்டவர்களே என்றுணர்ந்து, ஒற்றுமையின் ஆவியை, உறுதி தரும் ஆவியை நிறைவாக உள்வாங்கி, இறையாட்சியின் உயிர் துடிப்புள்ள சாட்சிகளாக வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மிகக்குறுகிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்கிற சொற்றொடரை இரண்டுமுறை உச்சரித்த நீர், இவ்வுலகுக்கு நிலையான அமைதியை உரித்தாக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். பெந்தக்கோஸ்து பெருவிழாவின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசியோரும், நற்செய்தியை தம் சொந்த மொழிகளில் கேட்கச் செய்த ஆவியானவர், பல்வேறு பிரச்சனைகளால் முரண்பட்டுள்ள உலகத்தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், ஒருமித்த கருத்துக்கும் ஒற்றுமையின் பாதைக்கும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப் பல்லவியாகப் பகர்ந்த நாங்கள், தூய ஆவியின் நிரப்புதலால் புத்தொளி பெற வேண்டுமென்றும், எம்பிள்ளைகளும், இளையோரும் தூய ஆவியின் வழிநடத்துதலால், தங்கள் எதிர்கால வாழ்வை சரியாகத் தேர்வு செய்து, நிறை வாழ்வு வாழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அருள் கொடைகள் பலவகை உண்டு; செயல்பாடுகள் பலவகை உண்டு; திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே; கடவுள் ஒருவரே” என்றுணர்ந்து, எங்கள் பங்குகளிலும், அன்பியங்களிலும், தனிப்பட்ட குடும்பங்களிலும், நாங்கள் வாழும் சமுதாயத்திலும், நாங்கள் அனைவரும், ஒரே உடலின் பல்வேறு உறுப்புகளாய், இசைந்தும், இணைந்தும், செயல்படுகிற மனப்பக்குவத்தை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள எங்கள் அனைவர் மீதும், தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். நாங்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்தவர்களாகவும், அனைத்து அருள்வரங்களும் பெற்றவர்களாகவும், ஒன்றிப்பில் இன்புற்று வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, May 12, 2026

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026

Feast of the Ascension - Wikipedia

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. 

இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப் பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்" என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

பதிலுரைப்பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. விண்ணேற்றப் பெருவிழாவாகிய இன்று “கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்” என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் மறையுடலாகிய திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே” என்கிற திருப்பாடலைத் தியானித்த நாங்கள் உலகின் பல்வேறு நாடுகளை ஆளுகிற தலைவர்களுக்காகவும், எம்நாட்டின் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். நல்லாட்சி, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை, உலகிலும், எம்நாட்டிலும் நிலவ வேண்டுமென்றும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்கிற உமது அறைகூவலை சிரமேற்கொண்டு, மறைத்தூதுப் பணியாற்றவும், அறப்பணிகள் வழியாகத் தொண்டாற்றவும் தங்களையே கையளித்துள்ள அனைத்து துறவியருக்காகவும், சிறப்பாகப் பிற நாடுகளில் பணிபுரிவோருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களை நீர் தாமே நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறையாட்சிப் பணிக்காக மேலும் பலர் முன்வரவேண்டுமென்றும், அதற்காக நடத்தப்படும் தேவ அழைத்தல் முகாம்கள் நிறைந்த பலன் தரும்படியாகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திருமுழுக்கு வழியாகக் கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், குடும்பங்கள் ஒவ்வொன்றும், குறிப்பாகக் குழந்தைகளும், இளையோரும், தாங்கள் பெற்றுக்கொண்ட உரிமைப்பேறு, எதிர்நோக்கு, நம்பிக்கை, ஆகியவை எத்துணை மேலானவை என்பதை உணர்ந்து செயலாற்றி, நம்பிக்கை வாழ்விலும், உலகுசார் வாழ்விலும், வெற்றி பெறவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் உமக்கு அருளப்பட்டிருப்பதையும், “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்கிற வாக்குறுதியையும் இறுகப்பற்றிக்கொண்டு, விண்ணேற்றம் அடைந்த உம்மைப் போல், நாங்களும் வாழ்வில் ஏற்றம் அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 6, 2026

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 10-05-2026

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 10-05-2026

Jesus Promises the Holy Spirit ‼️ READ John 14:15-21 15 “If you love me,  keep my commands. 16 And I will ask the Father, and he will give you  another advocate to

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு ஆன இன்று  "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப் போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் “என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” என்கிற உமது குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் கீழ்ப்படிதல் மூலம். உம்மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிற அருளினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அமைதியின் அரசரே எம் இறைவா, உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டுமென்றும், அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், எங்கள் நாட்டிலும், மாநிலங்கள் அனைத்திலும், நல்லாட்சி, ஒற்றுமை, சமாதானம், சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை செழிக்க வேண்டுமென்றும்    இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உயிர்த்த ஆண்டவராகிய நீர் வாக்களித்த “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின்” துணையோடு, எம்பிள்ளைகளும், இளையோரும், தங்கள் வாழ்விற்கான நல்வழியைத் தேர்வு செய்து, கல்வியிலும், பணிகளிலும், தொழில்களிலும், மென்மேலும் உயர்ந்து, அனைத்து விதங்களிலும் வளம்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிற உமது வாக்குறுதியை இறுக்கப்பற்றியவர்களாய், எம்வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலும், இன்னல்களிலும், இடையூறுகளிலும், உறுதியாகப் போரிட்டு, “நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்” என்கிற உமது கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணமாய் ஒரு வெற்றிகரமான  வாழ்க்கையை  நடத்திட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்ற்றவும், அனைவருடனும் பணிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்ளவும், குற்றமற்ற மனச்சான்றுடன் ஒழுகவும், நன்மை செய்து துன்புறுவதில் உம்மைப் போல் விளங்கவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

Monday, April 27, 2026

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு - 03-05-2026

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு.

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியைத் தியானிக்கும் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். 
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தை இறைவனிடம் செல்லவிருப்பதை முன்னிட்டு கலங்கி நின்ற சீடர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். "உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்" என்று தொடங்கும் இயேசு, விண்ணகத்தில் பல உறைவிடங்கள் உள்ளன என்றும், அங்கேயே நாம் சேருவதற்கு "நானே வழியும் உண்மையும் வாழ்வும்" என்றும் உறுதி அளிக்கிறார். கிறிஸ்துவை நாம் வழியாய் ஏற்று நடக்கும்போது, உண்மையை அறிந்து கொள்கிறோம்; அந்த உண்மை நமக்கு நிலைவாழ்வைத் தருகிறது. 
நாம் அனைவரும் தந்தையாம் இறைவனோடு இணைந்திருக்கவும், கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகில் வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 6:1-7)

திருச்சபையின் பணிப் பகிர்வு - திருத்தொண்டர்கள் நியமனம். தொடக்க காலத் திருச்சபை வளர்ச்சியடைந்தபோது, விதவைகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் திருத்தூதர்கள் எப்படித் தீர்த்தார்கள் என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. செபத்திலும் இறைவார்த்தைப் பணியிலும் திருத்தூதர்கள் கவனம் செலுத்தவும், பந்திப் பணி செய்ய ஏழு திருத்தொண்டர்களை (Deacons) அவர்கள் நியமித்தார்கள். இது திருச்சபையில் பணிப் பகிர்வின் அவசியத்தையும், தூய ஆவியின் வழிநடத்துதலையும் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி : ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

திருப்பாடல் 33:1-2,4-5, 18-19

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 2:4-9)

உயிருள்ள கற்களாகிய நாம். நாம் அனைவரும் உயிருள்ள கற்களாக இருந்து, கிறிஸ்துவின் மேல் ஒரு ஆன்மீக இல்லமாகக் கட்டப்பட அழைக்கப்படுகிறோம் என்று புனித பேதுரு கூறுகிறார். கிறிஸ்துவே தலைக்கல்லாக இருக்கிறார். நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரச குலக் குருக்கள் மற்றும் தூய மக்களினம் என்ற மேலான தகுதியை நற்செய்தியின் வழியாகப் பெற்றுள்ளோம் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்பதுவே தங்கள் தலையாயப் பணி என்பதை உணர்ந்து, திருத்தொண்டரைகளை தெரிவு செய்த திருத்தூதர்களைப் போலவே, இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், இறையாட்சிப் பணியினை சிரமேற்கொண்டு செயல்பட அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் அரசரே எம் இறைவா, நாளை விடிகின்றபோது, நல்லாட்சி தொடர்வதற்கான தேர்தல் முடிவுகள் வர வேண்டும் எனவும், தமிழ் நாடு உள்பட சில சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள், சமயசார்பற்ற, சமூக நீதியைப் பேணுகின்ற நல்ல அரசுகள் அமைவதற்கு வழிகோல வேண்டுமென்றும், உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டுமென்றும், அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்றுரைத்த இறைவா, எம்குடும்பங்களும், எம்பிள்ளைகளும், இளையோரும், உம்மையே தங்கள் வழியும் உண்மையும் வாழ்வுமாகக் கொண்டு, தங்கள் கல்வி, திறன்-வளர்ப்பு, பணியமர்வு, எதிர்காலம் ஆகியவற்றில் கவனத்துடன் செயல்படவும், ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் எல்லோருக்கும் அமைந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்கிற உம் குரலைக் கேட்டு, நாங்கள் நம்பிக்கை நிறைந்தவர்களாய் வாழவும், எங்களுக்கு நேரிடும் துன்பங்களினால் உள்ளம் துவண்டுபோகாமல் இருக்கவும், “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்கிற கூற்றின்படி, வியத்தகு செயல்களைச் செய்யக்கூடிய ஆற்றலை நீர் தாமே எங்களுக்கு அருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது எங்கள் பணி” என்பதை உணர்ந்து, திருமுழுக்கின் வழியாகப் பெற்றுக்கொண்ட பொதுக்குருத்துவத்தின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, April 21, 2026

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு 26.04.2026

 பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு 26.04.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 2:14அ, 36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

திருப்பலி முன்னுரை:

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) இன்று திருச்சபை "நல்ல ஆயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றது.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம்மை ஒரு "நல்ல ஆயனாகவும்", ஆடுகள் உள்ளே நுழையும் "வாயிலாகவும்" உருவகப்படுத்துகிறார். ஒரு நல்ல ஆயன் தன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார்; அவற்றிற்காகத் தன் உயிரையே கொடுக்கிறார். நாம் அவருடைய மந்தையைச் சார்ந்த ஆடுகள். உலகில் பல குரல்கள் நம்மைக் திசைதிருப்ப முயன்றாலும், நமது உண்மையான ஆயனின் குரலை மட்டும் கேட்டுப் பின்பற்றிட இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
மேலும், இன்று திருச்சபையின் அழைத்தல்களுக்காகச் செபிக்கும் நாள். நல்ல ஆயனின் குரலைக் கேட்டு, இறைப்பணி செய்யப் பலர் முன்வர வேண்டும் என்று சிறப்பாக வேண்டுவோம். நாம் அனைவரும் அந்த நல்ல ஆயனின் பராமரிப்பில் பாதுகாப்புடனும், நிறைவான வாழ்வுடனும் வாழத் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:14, 36-41)

மனமாற்றத்திற்கான அழைப்பு. புனித பேதுருவின் முதல் உரையைக் கேட்ட மக்கள், "சகோதரர்களே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று இதயத்தில் குத்தப்பட்டவர்களாய்க் கேட்கிறார்கள். அதற்குப் பேதுரு, "மனம் மாறுங்கள், இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். அன்று மூவாயிரம் பேர் அந்த ஆயனின் மந்தையில் இணைந்தது போல, நாமும் நம் பாவ வழிகளை விடுத்து ஆண்டவரிடம் திரும்பி வர இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேனும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேனும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.  பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திவிடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சின்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.  பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.  பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.  பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 2:20-25)

நம் ஆன்மாக்களின் ஆயராகிய கிறிஸ்து. கிறிஸ்து நமக்காகத் துன்புற்று நமக்கு ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்றார். நாம் சிதறிப்போன ஆடுகளைப் போல இருந்தோம்; ஆனால் இப்போது நம் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமான அவரிடம் திரும்பி வந்துள்ளோம் என்று புனித பேதுரு கூறுகிறார். அவர் தம் காயங்களால் நமக்குக் குணமளித்தார் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வுடன் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், அச்சங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களாய் “கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” எனத் துணிவுடன் எடுத்துரைத்த பேதுருவைப் போல, உயிர்ப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும், துடிப்புள்ள திருஅவையாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுத் தரவல்லவரான உயிர்த்த இயேசு, உலகின் தலைவர்கள் அனைவரையும், பகைமை, வன்மம், வெறுப்பு போன்ற பாதாளங்களிலிருந்து தூக்கிவிட்டு, போர்களில்லா அமைதியான சூழலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்றும், அனைத்துவிதமான நெருக்கடிகளிலிருந்தும் இந்த உலகு விடுதலை பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை” என்கிற முதல்வாசகம் இயேசுவுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து மன்றாடுகிறோம். எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலுமிருந்து மரித்துப்போன அனைவர் மீதும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிற போர்களாலும் தாக்குதல்களாலும் உயிரிழக்க நேரிடும் அனைவரின் மீதும், உமது உயிர்ப்பின் வல்லமை தங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிற உம்முடைய மக்களாகிய நாங்கள், இந்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலே, “எங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அல்ல; மாசு மறுவற்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், யாருக்கும் விலை போகாமல், எந்தவிதமான கவர்ச்சிக்கும்   மதிமயக்கத்திற்கும் இடம் தராமல், மதச்சார்பற்ற, மனிதாபிமானமிக்க, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைத்திட்டத்தையும், இறைவனின் வல்ல செயல்களையும் உணர இயலாத மந்த உள்ளத்தினராக இல்லாமல், இறைவார்த்தையும், திருஅப்பமும் பிடப்படுகிற திருப்பலியில், உம்மை முழுமையாய் கண்டுணரவும், 'எம்மோடு தங்கும்' என வேண்டி உம்மை எப்போதும் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வாழவும், நாங்கள் கண்டுணர்ந்த உம்மைப் பிறரோடு பகிரவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, April 12, 2026

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு 19-04-2026

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு 19-04-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35

திருப்பலி முன்னுரை. 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், எம்மாவு நோக்கிச் சென்ற இரு சீடர்களின் பயணத்தை நாம் தியானிக்கிறோம். நம்பிக்கையிழந்து, சோகத்துடன் சென்ற அந்தச் சீடர்களோடு இயேசு வழித்துணையாக நடக்கிறார். அவர் மறைநூலை விளக்கிச் சொன்னபோது அவர்களின் உள்ளம் நெருப்பாய் எரிந்தது; அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது அவர்களின் கண்கள் திறக்கப்பட்டன.

நாமும் பல நேரங்களில் கவலைகளோடும், ஏமாற்றங்களோடும் நம் வாழ்வின் பயணத்தைத் தொடர்கிறோம். ஆனால், உயிர்த்த ஆண்டவர் நம் ஒவ்வொரு திருப்பலியிலும், இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வழியாகவும் நம்மோடு தங்கி நமக்கு வலிமை அளிக்கிறார். எம்மாவு சீடர்களைப் போல நாமும் ஆண்டவரை அடையாளம் காணவும், அவர் தரும் மகிழ்ச்சியை உலகிற்கு அறிவிக்கவும் தேவையான வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:14, 22-33)

கிறிஸ்துவின் உயிர்ப்பிற்குப் பேதுருவின் சான்று. தூய ஆவியால் நிரப்பப்பட்ட புனித பேதுரு, எருசலேம் மக்கள் முன்னிலையில் ஆற்றிய முதல் உரையை இவ்வாசகத்தில் கேட்கிறோம். யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கடவுள் சாவிலிருந்து எழுப்பி, அவருக்கு மாட்சி அளித்தார் என்பதைப் பேதுரு துணிவுடன் பறைசாற்றுகிறார். தாவீது அரசரின் இறைவாக்கின்படி, கிறிஸ்து சாவிற்கு உட்பட்டவர் அல்ல, அவரே வாழ்வின் அதிபதி என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல் 

ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

1. இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

2. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

3. என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

4. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:17-21)

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டோம். நாம் அழிந்துபோகும் பொன், வெள்ளியினால் மீட்கப்படவில்லை; மாறாக, மாசற்ற ஆட்டுக்குட்டியான கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்று புனித பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். எனவே, நாம் இவ்வுலகில் வாழும் காலம்வரை இறைவனுக்கு அஞ்சி, புனிதமான வாழ்வு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம்பற்றி எரியவில்லையா அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், அச்சங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களாய் “கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” எனத் துணிவுடன் எடுத்துரைத்த பேதுருவைப் போல, உயிர்ப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும், துடிப்புள்ள திருஅவையாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுத் தரவல்லவரான உயிர்த்த இயேசு, உலகின் தலைவர்கள் அனைவரையும், பகைமை, வன்மம், வெறுப்பு போன்ற பாதாளங்களிலிருந்து தூக்கிவிட்டு, போர்களில்லா அமைதியான சூழலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்றும், அனைத்துவிதமான நெருக்கடிகளிலிருந்தும் இந்த உலகு விடுதலை பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை” என்கிற முதல்வாசகம் இயேசுவுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து மன்றாடுகிறோம். எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலுமிருந்து மரித்துப்போன அனைவர் மீதும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிற போர்களாலும் தாக்குதல்களாலும் உயிரிழக்க நேரிடும் அனைவரின் மீதும், உமது உயிர்ப்பின் வல்லமை தங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிற உம்முடைய மக்களாகிய நாங்கள், இந்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலே, “எங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அல்ல; மாசு மறுவற்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், யாருக்கும் விலை போகாமல், எந்தவிதமான கவர்ச்சிக்கும்   மதிமயக்கத்திற்கும் இடம் தராமல், மதச்சார்பற்ற, மனிதாபிமானமிக்க, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைத்திட்டத்தையும், இறைவனின் வல்ல செயல்களையும் உணர இயலாத மந்த உள்ளத்தினராக இல்லாமல், இறைவார்த்தையும், திருஅப்பமும் பிடப்படுகிற திருப்பலியில், உம்மை முழுமையாய் கண்டுணரவும், 'எம்மோடு தங்கும்' என வேண்டி உம்மை எப்போதும் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வாழவும், நாங்கள் கண்டுணர்ந்த உம்மைப் பிறரோடு பகிரவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, April 7, 2026

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு 12-04-2026

 பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு
 இறை இரக்கத்தின் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31

 திருப்பலி முன்னுரை:-

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) இன்று நாம் 'இறை இரக்கத்தின் ஞாயிறை' சிறப்பிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்தி, அவர்களுக்குத் தூய ஆவியையும், பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறார். அதே வேளையில், இயேசுவின் உயிர்ப்பை நம்பத் தயங்கிய தோமையாரிடம், தம் காயங்களைக் காட்டி அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்காகவே சொல்லப்பட்டுள்ளன.

நமது பலவீனங்கள் மற்றும் சந்தேகங்களின் மத்தியிலும், இறைவனின் இரக்கம் அளவிட முடியாதது என்பதை உணர்வோம். உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதியையும் மன்னிப்பையும் இதயத்தில் ஏந்தியவர்களாய், இந்தப் பலியில் பக்தி உணர்வுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:42-47)

தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு. உயிர்த்த ஆண்டவரின் வல்லமை தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படிப் பிரதிபலித்தது என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. அவர்கள் ஒருமித்த மனத்தோடு திருத்தூதர்களின் போதனையிலும், அப்பம் பிட்குவதிலும், செபத்திலும் நிலைத்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்ந்த அந்த அன்புறவு வாழ்வு நமக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது. சமூகமாக இணைந்து இறைவனைப் புகழும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

 பதிலுரைப்பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24

1. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

2. அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

3.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:3-9)

அழியாத வாழ்வின் நம்பிக்கை. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுள்ள புதிய வாழ்வைப் பற்றிப் புனித பேதுரு இவ்வாசகத்தில் மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கிறார். நாம் இப்போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானாலும், நம்முடைய விசுவாசம் நெருப்பினால் புடம் போடப்பட்ட பொன்னை விட மேலானது. நாம் இயேசுவைக் காணாமலே அன்பு செய்கிறோம், அவரை நம்புகிறோம். இதுவே நமக்கு முடிவில்லாத மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-

1. திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்த, தொடக்க கால நம்பிக்கையாளர்களைப் போலவே, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், நம்பிக்கை கொண்டோராக ஒன்றாய் இருந்து, எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்று வாழ  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அச்சத்தின் பிடியிலும் ஐயத்தின் பிடியிலும் சிக்கித் தவித்த தோமா உள்ளிட்ட திருத்தூதர்களுக்குத் தோன்றி “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்திய இறைவா, போர் பதட்டத்திலும் அதனால் ஏற்படும் பல்வேறு தீய விளைவுகளாலும் அல்லலுறும் அவனிக்கு, நீர்தாமே நிலையான அமைதி அருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அமைதியை நாடும் நல்லோராய் மாறிட, ஒன்றிப்பின் ஆற்றலான உமது தூய ஆவியை அவர்கள்மேல் நீர் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ள நம் கடவுளும் தந்தையுமானவரின் பேரிரக்கத்தின்படி, தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தல்களில், பிற்போக்கு சக்திகள் தோற்கடிக்கப்பட்டு சமூக நீதியை உயர்த்திப்பிடிக்கும் சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒரே மனத்தோடு கோவிலில் கூடுவதோடு நில்லாமல், பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் கூடி, இறைவேண்டலிலும், கடவுளைப் போற்றிப் புகழ்வதிலும், பகிர்தலிலும் நிலைத்திருந்த தொடக்க கால நம்பிக்கையாளர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி நாங்களும் எங்கள் அன்பியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுத்து, உண்மையான அன்பிற்கும் எங்களின் உள்ளார்ந்த ஒற்றுமைக்கும் சான்றுபகர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்மைக் கண்டதால் அல்லாமல் காணாமலே நம்புகிற பேறுபெற்றதற்காக நன்றிகூறும் அதே வேளையில், பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொண்டு, குன்றாத எதிர்நோக்குடன் வாழவும், தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களாய் பிறரை மன்னிக்கவும், ஒப்புரவு அருட்சாதனத்தை தாழ்ச்சியுடன் அணுகி மன்னிப்புப் பெறவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, April 1, 2026

புனித வார சிறப்பு திருவழிப்பாட்டு வழிகாட்டி 2026

 புனித வார நிகழ்வுகள்


https://anbinmadal.org/lentseason/lentpart4/holyweek-feb2026.pdf 

02-04-2026 முதல் 05-04-2026 வரையான திருவழிப்பாட்டின் அனைத்து நிகழ்வுகளின் வழிகாட்டி

மேற்கண்ட  இணைப்பிலிருந்து

பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும் 

அனைவருக்கும் விழாக் கால வாழ்த்துகள்!!! 

Sunday, March 22, 2026

குருத்து ஞாயிறு முதலாம் ஆண்டு 29-03-2026

குருத்து ஞாயிறு  முதலாம் ஆண்டு  29-03-2026
palm sunday the icon

பொது முன்னுரை:-

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே,  இன்று நாம் திருவழிப்பாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான 'புனித வாரத்தைத்' தொடங்குகிறோம். எருசலேம் நகருக்குள் அரசராகவும், அமைதியின் தூதராகவும் நுழைந்த இயேசு கிறிஸ்துவை வெற்றி ஆரவாரத்தோடு வரவேற்ற நிகழ்வை இன்று நாம் நினைவு கூர்கிறோம்.

இயேசு எருசலேமுக்குள் நுழைந்தது அதிகாரத்தைக் காட்ட அல்ல, மாறாகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, சிலுவைச் சாவினூடாக நம்மைப் பாவத்திலிருந்து மீட்கவே. இன்று நாம் கைகளில் ஏந்தியிருக்கும் இந்தக் குருத்தோலைகள் வெற்றியின் அடையாளம் மட்டுமல்ல, மாறாக இயேசுவின் பாடுகளிலும், சாவிலும் நாம் பங்கேற்கப் போகிறோம் என்பதன் அடையாளம்.

"ஓசன்னா" என்று பாடி அவரைப் புகழ்ந்த மக்கள், சில நாட்களில் "இவனைச் சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். அந்த மக்களின் நிலையில் நாம் இருக்கிறோமா? அல்லது இறுதிவரை இயேசுவைப் பின்தொடரும் சீடர்களாக இருக்கிறோமா? எனச் சிந்திப்போம். இந்தத் திருப்பலியில் பங்கேற்று, நம் இதயங்களை இயேசுவின் இல்லமாக மாற்றுவோம்.

2. குருத்து ஞாயிறு: பவனி முன்னுரை

(குருத்தோலைகளை மந்திரிப்பதற்கு முன் வாசிக்க வேண்டியது)
இறைமக்கள் அனைவரும் எருசலேம் நகரில் ஒன்று திரண்டு, தங்கள் மேலாடைகளையும் மரக்கிளைகளையும் வழியில் விரித்து, தாவீதின் புதல்வனுக்கு "ஓசன்னா" முழக்கமிட்டு இயேசுவை வரவேற்ற அந்த உன்னதமான நிகழ்வை இப்போது நாம் மீண்டும் நிகழ்த்தவிருக்கிறோம்.

இந்தக் குருத்தோலைப் பவனி வெறும் சடங்கு அல்ல; இது ஒரு விசுவாசப் பயணம். இயேசுவை நம் வாழ்வின் அரசராக ஏற்றுக்கொண்டோம் என்பதன் பகிரங்கமான அறிக்கை இது. நாம் ஏந்தியிருக்கும் இந்தக் குருத்தோலைகள், நம் வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்களையும் சவால்களையும் தாண்டி, கிறிஸ்துவின் அன்பினால் பெறும் வெற்றியைக் குறிக்கின்றன.

இப்போது குருவானவர் இந்தக் குருத்தோலைகளை மந்திரித்து ஆசிர்வதிப்பார். நாம் அனைவரும் பவனியாகச் செல்லும்போது, பக்தியுடனும் ஆரவாரத்துடனும் பாடல்களைப் பாடி, நம் அரசரான இயேசுவைப் பின் தொடர்வோம். எருசலேம் மக்கள் காட்டிய அதே உற்சாகத்தோடும், தூய்மையான உள்ளத்தோடும் இந்தப் பவனியில் கலந்துகொள்வோம்.

முதல் வாசக முன்னுரை (எசாயா 50: 4-7)

இன்றைய முதல் வாசகம், ஆண்டவரின் ஊழியர் எத்தகைய மனநிலையைக் கொண்டிருந்தார் என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. துன்பங்கள் சூழும்போதும், எதிரிகள் தன்னை அவமானப்படுத்தும்போதும் தளராமல், கடவுள்மீது முழு நம்பிக்கை வைத்துத் தன் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்ட ஒரு ஊழியரை எசாயா இறைவாக்கினர் இங்கே படம்பிடித்துக் காட்டுகிறார்.

"அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடையையும் ஒப்புக்கொடுத்தேன்" என்று கூறும் இந்த ஊழியர், வரவிருக்கும் இயேசுவின் பாடுகளுக்கு நிழலாகத் திகழ்கிறார். தந்தையாம் இறைவனின் திருவுளத்திற்குப் பணிந்து, மீட்புப் பணியில் உறுதியோடு இருந்த அந்த ஊழியரின் மனநிலையை நாமும் பெற்றிட இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமடுப்போம்.

பதிலுரைத் திருப்பாடல் முன்னுரை (திருப்பாடல் 22)

இன்றைய திருப்பாடல், சிலுவையில் தொங்கிய இயேசுவின் இதயத் துடிப்பாக ஒலிக்கிறது. தான் நேசித்த மக்களால் கைவிடப்பட்டு, ஏளனத்திற்கும் துன்பத்திற்கும் உள்ளான ஒரு நீதிமானின் குரலை இங்கே கேட்கிறோம்.

"என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்... என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள்" என்று வரும் வரிகள், இயேசு அனுபவித்த சொல்லொண்ணாத் துயரத்தை முன்னறிவிக்கின்றன. அதே வேளையில், இப்பாடல் வெறும் புலம்பல் மட்டுமல்ல; துன்பத்தின் நடுவிலும் கடவுள்மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு. நாமும் இயேசுவின் பாடுகளில் பங்கேற்று, இந்தப் பல்லவியைப் பக்தியுடன் பாடுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை (பிலிப்பியர் 2: 6-11)

இன்றைய இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்து இயேசுவின் மனநிலையைத் தங்களுக்குள் கொண்டிருக்குமாறு புனித பவுல் அடியார் நமக்கு அழைப்பு விடுக்கிறார். கடவுள் வடிவில் இருந்த இயேசு, தம்மைத் தாமே தாழ்த்தி, ஒரு அடிமையின் உருவை ஏற்று, சிலுவைச் சாவினை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்ததை இப்பாடல் அழகாக விவரிக்கிறது.
இயேசுவின் இந்தத் தாழ்ச்சியையும் கீழ்ப்படிதலையும் கண்ட தந்தை இறைவன், அவரை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி, விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைவரும் பணியும் உன்னத பெயரை அவருக்கு வழங்கினார். "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என நாம் அறிக்கையிடவும், அவருடைய தாழ்ச்சியை நம் வாழ்வின் முன்மாதிரியாகக் கொள்ளவும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வோடு செவிமடுப்போம்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. குருத்து ஞாயிறு என்றும் திருப்பாடுகளின் ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிற இத்தினத்தில், “ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!” என்கிற வாழ்த்தொலிக்கும் “அவரைச் சிலுவையில் அறையும்” என்கிற வசைபாடலுக்கும், அசைந்துகொடுக்காத இயேசு கிறிஸ்துவைப் போல, எங்கள்  திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும் உறுதியான நம்பிக்கையுடனும், தளராத எதிர்நோக்குடனும், தியாகம் நிறைந்த பிறரன்புடனும் எங்கள் வாழ்க்கையை மேற்கொள்வதற்கு அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்துபோவர்” என்கிற உண்மையை உணராமல், போர்கள் தொடுத்தும், ஏவுகணைகள் வீசியும், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்தியும், இந்த உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற நாடுககையும், நாடுகளின் தலைவர்களையும், அமைதியின் அரசராகிய நீர்தாமே, உம்முடைய  திருப்பாடுகள், மரணம் ஆகியவற்றின் பலனாக, அமைதியின் பாதைக்கு அழைத்துவர வேண்டுமென்றும், பரந்துபட்ட எம் உலகிலும், எங்கள் பாரத தேசத்திலும், சகோதரத்துவம், சமயச்சார்பின்மை, சமூக நீதி ஆகியவை நிலைபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?”  எனக் குமுறினாலும், கடைசியில் "எல்லாம் நிறைவேறிற்று" என்றுரைத்து, உமது இன்னுயிரை கையளித்த இறைவா, இன்னல்கள் ஆயிரம் வந்தாலும், துன்பங்கள் எங்களைத் துளைத்து எடுத்தாலும், அவற்றை எல்லாம் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ளவும், துணிவோடு எதிர்கொள்ளவும்,  இறுதி வெற்றி உமக்கும் உம் வழியாக எங்களுக்கும் உரித்தானது என்கிற நம்பிக்கையை இந்தப் புனித வாரமும், புனிதவாரத் திருநிகழ்வுகளும் ஏற்படுத்த வேண்டுமென்றும், அனைத்து திருவழிபாட்டுத் திருநிகழ்வுகளிலும் நாங்கள் அனைவரும் பயபக்தியோடு பங்குபெற்று இறையருள் பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண் டதனால், இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளின தந்தையாம் கடவுளின் கனிவான பார்வை எங்கள்மீதும் திரும்பிடும் வண்ணம், இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘கீழ்ப்படிதல், தாழ்ச்சி, பணிவிடை புரிதல், தியாகத்துக்குத் தயாராயிருத்தல், இறைச்சித்தத்திற்குப் பணிந்திருத்தல் ஆகிய நற்பண்புகளோடு எங்கள் வாழ்க்கைப் பயணத்தை ஒரு உண்மையான பாஸ்கா பயணமாக மாற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, March 15, 2026

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு முதலாம் ஆண்டு 22-3-2026 
The Gospel: 26th March 2023 – Keash Parish

திருப்பலி முன்னுரை 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, 

தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) பாஸ்கா பெருவிழாவிற்கு மிக அருகாமையில் இருக்கும் நாம், இன்று சாவையே வெல்லும் கிறிஸ்துவின் வல்லமையைத் தியானிக்கிறோம். இன்றைய நற்செய்தியில், நான்கு நாட்கள் கல்லறையில் அழுகிய நிலையில் இருந்த லாசரை இயேசு உயிர்த்தெழச் செய்கிறார். "உயிர்ப்பும் வாழ்வும் நானே" என்று பிரகடனம் செய்யும் இயேசு, நம்முடைய பாவங்களினால் ஆவிக்குரிய நிலையில் செத்துப்போயிருக்கும் நம்மையும் எழுப்ப விரும்புகிறார். நம்முடைய தவறான பழக்கங்கள், விரக்தி மற்றும் பாவங்கள் எனும் கல்லறைகளிலிருந்து வெளியே வர இயேசு இன்று நமக்குக் கட்டளையிடுகிறார்.
 "லாசரே, வெளியே வா!" என்று அழைத்த அதே குரல் இன்று நம்மையும் அழைக்கிறது. அந்த உயிருள்ள குரலுக்குச் செவிசாய்த்து, புதிய வாழ்வு பெறத் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

 

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 37:12-14) 

கல்லறைகளைத் திறக்கும் இறைவன். பாபிலோனிய அடிமைத்தனத்தில் நம்பிக்கையற்று இருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாக இறைவன் ஒரு மாபெரும் வாக்குறுதியைத் தருகிறார். "நான் உங்கள் கல்லறைகளைத் திறப்பேன், என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்" என்று அவர் கூறுகிறார். இறைவனால் முடியாதது ஒன்றுமில்லை என்பதையும், அவர் இழந்த வாழ்வை மீண்டும் தரவல்லவர் என்பதையும் உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

பதிலுரைப்பாடல் 

பல்லவி : ஆண்டவரிடமே பேரன்பும் மீட்பும் உள்ளது. 
திருப்பாடல்: 130: 1- 8.
 ஆண்டவரே! ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். என் விண்ணப்பக் குரலை உம் முடைய செவிகள் கவனத்துடன் கேட்கட்டும். பல்லவி 
ஆண்டவரே! நீர் எம்குற்றங்களை மனத்தில் கொண்டிருந்தால், யார்தான் நிலைத்து நிற்க முடியும்? நீரோ மன்னிப்பு அளிப்பவர். மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர். பல்லவி 
ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன். என் நெஞ்சம் காத்திருக்கின் றது. அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். பல்லவி 
விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட, என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது. பல்லவி 
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது. மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு. எல்லாத் தீவினைகளினின்றும் இஸ்ரயேலரை மீட்பவர் அவரே! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8:8-11)  

உங்களில் குடிகொண்டிருக்கும் தூய ஆவி. புனித பவுல் அடியார் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையை விளக்குகிறது. இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய அதே ஆவி நமக்குள் குடிகொண்டிருந்தால், நம்முடைய சாவுக்குரிய உடல்களுக்கும் அது உயிர் அளிக்கும். நாம் ஊனியல்புக்குக் கட்டுப்படாமல், தூய ஆவிக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம். 

 நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

உயிர்த்தெழுதலும் வாழ்வு நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் எவரும் என்றுமே சாகமாட்டார்" என்கிறார் ஆண்டவர். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள் 

1. “என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்” என்கிற இயேசுவின் கூற்றை உறுதியாய் பற்றிக்கொண்டு, திருஅவை என்கிற படகில் பயணிக்கும் இறைமக்களாகிய நாங்களும், எங்களை வழிநடத்தும் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு, ஆகியவற்றில் நிலைத்திருந்து, நிறைவாழ்வை நோக்கிப் பயணிக்கிற அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

2. இரவில் நடப்பவர் இடறி விழுவது போல, இன்றைய உலகு, போர்கள், வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றால் தடுமாறுகிற வேளையில், நீர் தாமே ஒளியாய் இருந்து, அமைதியின் பாதையில் வழிநடத்திட வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் அறவழியில் ஆட்சி புரியவும், தமிழகத்திலும் ஏனைய மாநிலங்களிலும் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல்களில், சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3. ‘என் ஆவியை உங்கள்மீது பொழிவேன்; நீங்களும் உயிர் பெறுவீர்கள்’ என எசேக்கியேல் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதுபோல, எங்கள் பிள்ளைகளும், பொதுத் தேர்வுகளையும் ஆண்டு இறுதி தேர்வுகளையும் எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களும், தூய ஆவியால் நிரப்பப்படவும், அவர்கள் அனைவரும் தாங்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் சிறந்ததொரு வெற்றிபெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4. ‘கடவுளின் மாட்சி விளங்கவே இவன் நோயுற்றான்’ என்று கூறியதோடு “நீ நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்பாய்” என்றும் சொல்லி, இறந்த இலாசரை உயிர்த்தெழச்செய்த இறைவா, நீர் எம்மோடு இருந்தால், நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும், எம்மை விட்டு விலகும் என்பதோடு, இறுதி நாளில் உம்மோடு கூட உயிர்ப்போம் என்கிற நம்பிக்கையுடன் நாங்கள் வாழ்ந்திட, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ‘ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது’ என்று இரண்டாம் வாசகம் கூறுகிற உண்மையை உணர்ந்தவர்களாய், ஆவிக்குரிய வாழ்வை மேற்கொள்ளவும், தவக்காலத்தின் சிறப்பு முயற்சிகளான ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் இன்னும் முனைப்பாக ஈடுபட்டு புனிதம் நோக்கிப் பயணிக்கவும், அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Monday, March 9, 2026

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு முதலாம் ஆண்டு 15-3-2026
Daily Reading: 22 June – The Miracles of Jesus: Healing a Blind Man – John  9:1-41 – The Peanut Gallery

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

1 சாமுவேல் 16:1ஆ,6-7,10-13அ
1 எபேசியா 5:8-14
யோவான் 9:1-41

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. பாஸ்கா பெருவிழா நெருங்கி வருவதை முன்னிட்டு, திருச்சபை இன்று மகிழ்ச்சியைக் கொண்டாடுகிறது.

இன்றைய நற்செய்தியில், பிறவியிலேயே பார்வையற்ற ஒருவருக்கு இயேசு பார்வை அளிக்கும் புதுமையை நாம் காண்கிறோம். இது வெறும் உடல் சார்ந்த பார்வை மட்டுமல்ல, ஆன்மீகப் பார்வையைப் பற்றியது. நாம் பல நேரங்களில் பாவம், பொறாமை மற்றும் அறியாமை எனும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். "நானே உலகின் ஒளி" என்றுரைத்த இயேசு, நம் இதயக் கண்களைத் திறந்து, உண்மையை உணரச் செய்கிறார்.

இந்தத் திருப்பலியில் பங்கேற்கும் நாம், நம்முடைய அகக்கண்கள் திறக்கப்படவும், இருளின் செயல்களை விட்டு ஒளியின் மக்களாக வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

வாசக முன்னுரைகள்

முதல் வாசக முன்னுரை (1 சாமுவேல் 16:1, 6-7, 10-13)

மனிதர் முகத்தைப் பார்க்கிறார், இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார். இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலின் அரசராகத் தாவீதை இறைவாக்கினர் சாமுவேல் தேர்ந்தெடுக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். மனிதர்கள் வெளித்தோற்றத்தைப் பார்த்துத் தீர்ப்பு வழங்குகிறார்கள், ஆனால் இறைவன் இதயத்தைப் பார்க்கிறார் என்பதை இவ்வாசகம் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. வெளிவேடங்களைத் தவிர்த்து, தூய்மையான உள்ளத்தோடு இறைவனைத் தேட இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

பதிலுரைப் பாடல்

பல்லவி : ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை!
திருப்பாடல்கள்: 23: 1-3, 3-4,5,6

ஆண்டவரே என் ஆயர், எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார், அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார், மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன், உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (எபேசியர் 5:8-14)

ஒளியின் மக்களாக வாழுங்கள். ஒரு காலத்தில் இருளாக இருந்த நாம், இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாக மாறியிருக்கிறோம் என்று புனித பவுல் அடியார் கூறுகிறார். ஒளியின் பிள்ளைகளுக்குரிய நற்பண்புகள், நீதி மற்றும் உண்மை ஆகியவற்றில் நாம் நிலைத்திருக்க வேண்டும். தூக்கத்திலிருந்து விழித்து, கிறிஸ்துவின் ஒளியில் பிரகாசிக்க அழைப்பு விடுக்கப்படும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வுடன் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்' என்கிறார் ஆண்டவர்!

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எப்படி நீர் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்த தாவீதின் மீது, ஆண்டவரின் ஆவி நிறைவாக இருந்ததோ, அதே போல உம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, திருப்பொழிவு செய்யப்பட்டுள்ள எங்கள் திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்கள்மீதும், மறைப்பணியாளர்கள் மீதும், இறைமக்களாகிய எங்கள்மீதும், ஆவியானவர் நிறைவாகப் பொழியப்படவும், அவர் தரும் ஒளியில், நாங்கள் அனைவரும், நேரிய பாதையில் நடந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆண்டவர் ஆயனாய் இருக்கிறபோது இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையெனப் பறைசாற்றும் திருப்பாடல் இருப்பது மூன்றை பதிலுரையாகப் பகர்ந்த நாங்கள், வாழ்வின் பாதையைத் தெரிவு செய்து வாழவும், போர்கள், சண்டைகள், வன்முறை, தீவிரவாதம் போன்ற சாவுக்கு இட்டுச்செல்லும் இருளின் செயல்களை, உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும் கைவிட வேண்டுமென்றும், எதிர்வரும் சட்டமன்ற  தேர்தலின் முடிவில், சமயசார்பற்ற நல்லாட்சி அமைய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘தூங்குகிறவனே, விழித்தெழு … கிறிஸ்து உன்மீது ஒளிர்ந்தெழுவார்’ என்கிற பவுலடியாரின் அறைகூவல், பொதுத் தேர்வுகளை எழுதிக்கொண்டிருக்கும் எம்மாணவச்செல்வங்களையும், ஏனைய எம்பிள்ளைகள் அனைவரையும், சோம்பலிலிருந்து தட்டி எழுப்பி, உத்வேகத்துடன் உழைக்கச் செய்து, அவர்கள் சந்திக்கும் தேர்வுகள் அனைத்திலும் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும், கிறிஸ்துவின் ஒளியில் அவர்கள் தங்கள் எதிர்காலத்தை ஒளிமயமானதாக அமைத்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நாங்கள் சந்திக்கும் துயரங்களும் நோய்களும் பாவத்தின் காரணமாய் விளைந்திருக்க வேண்டிய அவசியமில்லை, கடவுளின் செயல் இவை வழியாக வெளிப்படும்பொருட்டு கடவுளால் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்ந்து, மனஉறுதியுடன் கூடிய மனந்திரும்புதல் மூலமாக, இந்தத் தவக்காலத்தில் நல்வாழ்வு நோக்கிப் பயணிக்கும் அருள் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்” என்பதை உணர்ந்தவர்களாய், தவக்கால அடையாளாச் செயல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பார்த்து, பயனற்ற இருளின் செயல்களைச் செய்யாது, ஒளியின் செயல்களாகிய ஜெபம், தவம், தானம் ஆகியவற்றில் ஈடுபட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, March 3, 2026

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 08.03.2026

தவக்காலம்  மூன்றாம் ஞாயிறு  08.03.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 17:3-7
உரோமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). இன்றைய திருவழிபாடு நம்முடைய ஆன்மீகத் தாகத்தைப் பற்றிப் பேசுகிறது.
உடல் தாகத்தைத் தணிக்க கிணற்று நீரைத் தேடி வந்த சமாரியப் பெண்ணிடம், "வாழ்வு தரும் தண்ணீரை" வாக்களிக்கிறார் இயேசு. அந்தத் தண்ணீர் ஒருமுறை பருகினால் மீண்டும் தாகம் எடுக்காத, நிலைவாழ்வு தரும் இறைவருள் ஆகும். சமாரியப் பெண் தன் குடத்தை விட்டுவிட்டு, ஊர் மக்களிடம் இயேசுவைப் பற்றி அறிவிக்கச் சென்றது போல, நாமும் நம்முடைய பழைய பாவப் பழக்கங்களை விட்டுவிட்டு, கிறிஸ்துவின் அன்பைப் பறைசாற்ற அழைக்கப்படுகிறோம்.
நம் உள்ளத்தில் உள்ள கசப்பு, வெறுப்பு, உலக ஆசைகள் எனும் தாகங்களைத் தணிக்க வல்லவர் இயேசு ஒருவரே என்பதை உணர்ந்து, இந்தத் திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 17:3-7)

பாறையிலிருந்து சுரந்த தண்ணீர். இஸ்ரயேல் மக்கள் பாலைவனப் பயணத்தின்போது தாகத்தால் தவித்து, மோசேக்கும் இறைவனுக்கும் எதிராக முணுமுணுக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையின்மையைப் பொருட்படுத்தாமல், இறைவன் பாறையிலிருந்து தண்ணீரை வரவழைத்து அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். நம்முடைய துன்ப நேரங்களில் நாம் இறைவனைச் சோதிக்காமல், அவரே நம் வாழ்வின் ஊற்று என்பதை நம்ப வேண்டும் என்று இவ்வாசகம் நமக்கு அறிவுறுத்துகிறது. பக்தி உணர்வுடன் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப் பாடல்

பல்லவி : உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர் ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-7,7-9

1. வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.  நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

2. வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி

3. இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.   பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5:1-2, 5-8)

தூய ஆவியின் வழியாக ஊற்றப்படும் அன்பு. இறைவன் நம் மீது கொண்டுள்ள அன்பு எவ்வளவு பெரியது என்பதை புனித பவுல் அடியார் இவ்வாசகத்தில் விளக்குகிறார். நாம் இன்னும் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். அந்த அன்பு தூய ஆவியின் வழியாக நம் இதயங்களில் ஊற்றப்பட்டுள்ளது. இந்த அன்பு தரும் நம்பிக்கையே நம்மை வாழ்விக்கிறது என்பதை உணர்ந்து இவ்வாசகத்தைக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-

ஆண்டவரே! நீர் உண்மையில் உலகின் மீட்பர். நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும். 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே” என்கிற திருமுக வாசகத்தின் உண்மையை உணர்ந்து, தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், மனித அறிவையும் ஆற்றலையும் மட்டுமே நம்பியிராமல், இறைஞானத்தால் வழிநடத்தப்பட, எம்மையே ஒப்புவிக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும், இயற்கை சீற்றங்களாலும், மானுடப்பண்பு மங்கி வருவதாலும் இருண்டிருக்கும் இவ்வுலகுக்கு “இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்” என்கிற ஏசாயாவின் இறைவாக்கு புத்தெழுச்சி தரவும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டின் ஆட்சியாளர்களும், அனைத்துலக மக்களும், ஒளியின் ஆட்சி நோக்கிப் பயணிக்கவும், செயல்படவும், அருள்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. பணமும், பதவியும், பகட்டும், எம்மைக் கவர்ந்திழுக்கும் சூழலில், சிலுவையில் அறையுண்ட மெசியாவாகிய இயேசுவைத் தவிர, நாங்கள் பற்றிக்கொள்ள வேறு ஆதாரம் இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் யாவரும், குறிப்பாக இளையோரும், எங்களிடையே இருக்கும் உலகப்பற்று எனும் நுகத்தை அகற்றிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டு வாழ்கின்ற ஞானத்தையும், தாழ்ச்சியையும், மனஉறுதியையும் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும்” என்கிற முதல் வாசக இறைவாக்கு எங்களிலே நிறைவேறி “அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்” என்பதுவும் உண்மையாகி, எங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், பசித்தோர்க்கு உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லாதோர்க்கு துணை நிற்பதும், உடையற்றோருக்கு உடுக்கக் கொடுப்பதும், வறியோரின் தேவையை நிறைவு செய்வதும் தான், நீர் விரும்பும் நோன்பு என்றுணர்ந்து அறச்செயல்கள் புரியவும், அதன் வழியாக, இவ்வுலகிற்கு நாங்கள், ஒளியாகவும் உப்பாகவும் விளங்க வேண்டுமென்றும், எங்களது நற்செயல்களைக் காண்கின்ற  எல்லோரும்,  விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Monday, February 23, 2026

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு - முதலாம் ஆண்டு - 01.03.2026

தவக்காலம் இரண்டாம் ஞாயிறு 01.03.2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

தொடக்கநூல் 12:1-4
திமோத்தேயு 1:8-10
மத்தேயு 17:1-9

திருப்பலி முன்னுரை: -

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்). முதல் ஞாயிறன்று இயேசு பாலைவனத்தில் சோதனைகளை வென்றதைத் தியானித்தோம். இன்று, தாபோர் மலையில் இயேசுவின் மாட்சிமை பொருந்திய உருமாற்றத்தைத் தியானிக்க அழைக்கப்படுகிறோம்.
இயேசுவின் பாடுகளும் மரணமும் நெருங்கி வந்த வேளையில், தம் சீடர்கள் சோர்ந்து போகாமல் இருக்கவும், சிலுவைச் சாவிற்கு அப்பால் ஒரு மகிமையான உயிர்ப்பு உண்டு என்பதை உறுதிப்படுத்தவும் இயேசு உருமாறிக் காட்டினார். இந்தத் தவக்காலம் நம்முடைய வாழ்விலும் ஒரு 'உருமாற்றத்தை' ஏற்படுத்த வேண்டும். நம்முடைய பழைய பாவ இயல்புகளைத் தவிர்ந்து, கிறிஸ்துவின் ஒளியால் நிரப்பப்பட்ட புதிய மனிதர்களாக நாம் மாற வேண்டும் என்பதே இன்றைய வழிபாட்டின் அழைப்பு.
"இவர் என் அன்பார்ந்த மைந்தர், இவருக்குச் செவிசாயுங்கள்" என்ற தந்தையாம் இறைவனின் கட்டளைக்கு இணங்க, கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியும் வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை :-

(தொடக்க நூல் 12:1-4)
ஆபிரகாமின் அழைப்பும் கீழ்ப்படிதலும். இன்றைய முதல் வாசகத்தில், விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமை இறைவன் அழைக்கும் நிகழ்வைச் செவிமடுக்கிறோம். தன் நாடு, இனம் மற்றும் தன் தந்தையின் வீட்டை விட்டுவிட்டு, இறைவன் காட்டும் நிலத்திற்குச் செல்ல ஆபிரகாம் துணிந்தார். அவருடைய அந்தப் பயணமும் கீழ்ப்படிதலுமே அவருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. நாமும் நம்முடைய வசதி மண்டலங்களை (Comfort Zone) விட்டு வெளியேறி, இறைவன் காட்டும் புனிதப் பாதையில் நடக்க இவ்வாசகம் நமக்கு ஊக்கமளிக்கிறது.

பதிலுரைப் பாடல்:-

பல்லவி : ஆண்டவரே! உமது பேரன்பு எங்கள் மீத இருப்பதாக!
திருப்பாடல்கள்: 33: 4-5, 18-19, 20, 22
ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை.  அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!  பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை :-

(2 திமொத்தேயு 1:8-10)
நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தை ஏறுங்கள். புனித பவுல் அடியார் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இவ்வாசகம், நாம் பெற்றுள்ள அழைப்பு நம்முடைய தகுதியினால் வந்ததல்ல, மாறாக இறைவனின் அருளினால் வந்தது என்பதை உணர்த்துகிறது. சாவினை அழித்து, நற்செய்தியின் வழியாக வாழ்வையும் அழியாமையையும் ஒளிரச் செய்த கிறிஸ்துவுக்காகத் துன்பங்களை ஏற்கத் தயங்க வேண்டாமென இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-

ஒளிரும் மேகத்தினின்று, தந்தையின் குரலொலி கேட்டது ;என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-

1. தாயாம் திரு அவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திரு அவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், “நீயே ஆசியாக விளங்குவாய் … உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்கிற முதல் வாசக கூற்றின்படி, அனைவருக்கும் ஆசியாக விளங்கும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை, இந்தத் தவக்காலத்தில் உருமாற்றம் செய்ய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஒப்புரவின் காலமாகிய இந்தத் தவக்காலத்தில், மாந்தர் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவும், ஒப்புரவுடன் பயணிக்கவும், தலைமைப்பணியில் இருப்போர் அனைவரும், பகைமையின் பாதையைத் துறந்து, நீதியின் வழியிலும், சமாதானத்தின் திசையிலும் பயணிக்க வேண்டுமென்றும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில், நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அரசுத் தேர்வுகளையும், ஆண்டுத் தேர்வுகளையும் எழுதவிருக்கும் எம்பிள்ளைகளும், அனைத்து மாணவ மாணவியரும், முழு ஈடுபாட்டுடன் எல்லாப் பாடங்களையும் கற்று, தகுந்த முறையில் தங்களையே தயாரித்து, துணிவுடன் தேர்வுகளைச் சந்தித்து, சிறந்த வெற்றியினை சுவைக்க, நீர் தாமே அருள்புரிய வேண்டுமென்றும், தூய ஆவியாரின் ஆற்றலை அவர்களுக்குப் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சாவை அழித்து, அழியா வாழ்வை, நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்த கிறிஸ்து இயேசு வழியாக அளிக்கப்பட்ட அருளின்படி, மீட்கப்பட்ட நாங்கள் அனைவரும், எங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தூய அழைப்புக்கு ஏற்ற வாழ்வினை மேற்கொள்ளவும், “உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்” என ஆபிரகாமுக்கு நீர் வழங்கிய ஆசீரை உரிமையாக்கிக் கொள்ளவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.    
   
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆண்டவரின் தோற்றமாற்ற நிகழ்வின் உட்பொருளை உணர்ந்தவர்களாய், உன்னத இறை அனுபவங்களோடு வாழ்க்கை நிறைவுறுவதில்லை; துன்பங்கள் நிறைந்த சிலுவைப் பாதையின் வழியாகத்தான் உயிர்ப்பின் மாட்சி சாத்தியம் என்பதை உணர்ந்து, எங்களது ஜெப, தவ, அன்புச் செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாகி “இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என விண்ணகம் அறிக்கையிடும் வண்ணம், எங்கள் வாழ்க்கையை உருமாற்ற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

 

https://anbinmadal.org

Print Friendly and PDF