Monday, June 29, 2026

பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

 பொதுக்காலம் 14-ஆம் ஞாயிறு: 05-07-2026

மத்தேயு 11:29-30 (TAOVBSI) - நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இரு - Bible App

இன்றைய வாசகங்கள்

செக்கரியா 9: 9-10
உரோமையர் 8: 9, 11-13
மத்தேயு 11: 25-30

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 14-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

"சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகக் கல்வியிலோ அல்லது அறிவிலோ தங்களை மேலானவர்களாகக் கருதிக்கொள்பவர்களுக்கு இறை இரகசியங்கள் மறைக்கப்படுகின்றன; ஆனால், எளிய உள்ளம் கொண்ட குழந்தைகளுக்கு அவை வெளிப்படுத்தப்படுகின்றன.

இறைவன் ஒரு போர் வீரனாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் அமைதியான அரசராக வருகிறார் என்பதை முதல் வாசகத்திலும், நாம் ஊனியல்புக்கு அடிமையாகாமல் ஆவியின் இயல்புக்கு ஏற்ப வாழ வேண்டும் என்பதை இரண்டாம் வாசகத்திலும் கேட்கிறோம். நம் வாழ்வின் சுமைகளை இயேசுவின் பாதத்தில் இறக்கி வைக்கவும், அவரிடமிருந்து கனிவையும் மனத்தாழ்மையையும் கற்றுக்கொள்ளவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (செக்கரியா 9: 9-10)

இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அரசர், போர் குதிரையின் மேல் ஏறி வரும் அதிகாரியாக அல்ல, மாறாக ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் நீதியுள்ள, எளிமையான அரசராக வருவார் என்று செக்கரியா இறைவாக்கினர் முன்னறிவிக்கிறார். அவர் உலகெங்கும் அமைதியை நிலைநாட்டுவார் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பல்லவி: என் கடவுளே, என் அரசே!. உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்
திருப்பாடல்: 145: 1-2, 8-9, 10-11, 13-14
என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன்.  நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். -பல்லவி

ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.  ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி

ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள்.  அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். -பல்லவி

உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது.  தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகின்றார். -பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 8: 9, 11-13)

கிறிஸ்தவர்களாகிய நாம் ஊனியல்புக்கு (உடல் இச்சைகளுக்கு) அடிமைப்படாமல், இறைவனின் ஆவியால் வழிநடத்தப்பட அழைக்கப்படுகிறோம். இயேசுவைச் சாவிலிருந்து எழுப்பிய ஆவியானவர் நம்மிலும் குடிகொண்டிருக்கிறார் என்றும், அந்த ஆவியின் வழியாகவே நாம் நிறைவாழ்வு பெறுகிறோம் என்றும் கூறும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப் படுத்தினீர். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தாயாம் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை லியோ அவர்களும், ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர் ஆகிய ஏனைய தலைவர்களும், இன்றைய முதல் வாசகம் முன்வைக்கின்ற தாழ்ச்சிநிறை தலைமைப் பண்புடன் வாழவும், பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், எளிமையின் அரசராம் உம்மை, எங்கள் வாழ்வில் பின்பற்றவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. சூழ்ந்திருக்கும் போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பலவகை அவலங்களால் அவதியுறும் இவ்வுலகிற்கு, போர்க் கருவிகள் இல்லாமல் போகும். ஆண்டவராகிய அரசரே அமைதியை அறிவிப்பார் என்கிற செக்கரியாவின் இறைவாக்கு ஆறுதல் அளிக்க வேண்டுமென்றும், இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள் பொறுப்புடன் எம்மை ஆளவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று மகிழ்ந்த இயேசுவே, கல்வி ஆண்டின் முதல் பருவத்தில் இருக்கும் எம்பிள்ளைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் மெய்யறிவையும், நிறைஞானத்தையும் தந்தருள வேண்டுமென்றும், இளையோருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றுரைத்த இறைவா, வறுமை, கடன் தொல்லை, பசி, பிணி, பிணக்கு, பிரிவு, நோய், முதுமை, தனிமை, துன்பம், துயரம் எனப் பல்வேறு சுமைகளினால் அழுத்தப்பட்டிருக்கும் அனைவருக்கும், நீர் தாமே இளைப்பாறுதலாகவும், அரணாகவும், பலமாகவும் இருந்து துணைநிற்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருக்கவும், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்து, உமக்கும் பிறருக்கும் ஏற்புடையவர்களாக வாழ்ந்து, கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குகொள்ள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

Monday, June 22, 2026

பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026

பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு 28-06-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2 அரசர் 4:8-11,14-16அ
உரோமையர் 6:3-4,8-11
மத்தேயு 10:37-42

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 13-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருவழிபாடு இரண்டு முக்கியமான கருத்துகளை நமக்கு முன்வைக்கிறது: விருந்தோம்பல் மற்றும் சீடத்துவத்தின் விலை. முதல் வாசகத்தில், இறைமனிதர் எலிசாவிற்குத் தாராள மனதோடு விருந்தளித்த சூனேம் ஊர்ப் பெண்மணி, அதன் வழியாகக் கடவுளின் ஆசீரையும் மகப்பேற்றையும் பெறுகிறார். நற்செய்தியில் இயேசு, "தன்னை விட மேலாக எவரையும் அன்பு செய்பவர் எனக்குத் தகுதியற்றவர்" என்று கூறி, ஒரு சீடராக இருப்பதன் ஆழமான அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறார்.

அதே சமயம், ஒரு சீடருக்குச் செய்யப்படும் மிகச் சிறிய உதவி கூட (ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் போல) கைம்மாறு பெறாமல் போகாது என்று இயேசு நமக்கு ஊக்கமளிக்கிறார். நாம் கிறிஸ்துவின் பெயரால் பிறரை வரவேற்கிறோமா? நமது விருந்தோம்பல் தாராளமாக இருக்கிறதா? கிறிஸ்துவுக்காகச் சிலுவையைச் சுமக்க நாம் தயாரா? எனச் சிந்திக்க இன்றைய வழிபாடு நம்மை அழைக்கிறது. இத்திருப்பலியில் தகுதியுடன் பங்கேற்கத் தடையாக இருக்கும் நம் சுயநலங்களைக் களைந்து, இறைவனிடம் மன்னிப்பு வேண்டிப் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (2 அரசர்கள் 4: 8-11, 14-16a)

சூனேம் ஊரைச் சேர்ந்த ஒரு செல்வந்தப் பெண்மணி, இறைவாக்கினர் எலிசாவைக் கடவுளின் மனிதராகக் கண்டு, அவருக்குத் தாராளமாக விருந்தளித்து, தங்குவதற்கு இடமும் கொடுக்கிறார். அந்த விருந்தோம்பலின் பயனாக, குழந்தைப் பேறு இல்லாமல் வருந்திய அந்தப் பெண்மணிக்கு ஒரு மகன் பிறப்பான் என்று எலிசா வாக்குறுதி அளிக்கிறார். பிறருக்குச் செய்யும் உதவி ஒருபோதும் வீண் போகாது என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்.
திருப்பாடல்: 89: 1-2, 15-16, 17-18

ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி

விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள். அவர்கள் நாள் முழுவதும் உம் பெயரில் களிகூர்வார்கள்; உமது நீதியால் அவர்கள் மேன்மை அடைவார்கள். பல்லவி

ஏனெனில், நீரே அவர்களது ஆற்றலின் மேன்மை; உமது தயவால் எங்கள் வலிமை உயர்த்தப்பட்டுள்ளது. நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது; நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 6: 3-4, 8-11)

திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவுடன் இறந்து, அவரோடு புதிய வாழ்வு பெற உயிர்த்தெழுந்திருக்கிறோம் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் இனி பாவத்திற்கு அடிமைகள் அல்ல, மாறாகக் கிறிஸ்துவில் கடவுளுக்காக வாழ்பவர்கள் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்' என்றார்”.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. திருமுழுக்கினால் கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருக்கும் நாம் அனைவரும், திருத்தந்தை லியோ தொடங்கி, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் வரை, நாங்கள் அனைவருமே, சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர்களாக அல்லாமல், கிறிஸ்து இயேசுவோடு இணைந்து கடவுளுக்காக வாழ்கிறவர்களாக விளங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர்-பதட்டம், வன்முறை, பகைமை, வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக சீர்கேடுகள் எனப் பல வகைகளில் அங்கலாய்க்கிற எம் உலகுக்காக மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், நல்லாட்சி நல்கவும், அமைதி நோக்கி எம்மை வழிநடத்தவும் தேவையான ஞானத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இன்றைய முதல் வாசகம் எங்களுக்கு உணர்த்துகிற பாடத்தைக் கற்றவர்களாய், எங்களுக்காக உழைக்கிற இறையடியார்களையும், அருள் பணியாளர்களையும், துறவியரையும், நாங்கள் மாண்புடன் நடத்தி, மகிழ்வுடன் பணிந்து, உவப்புடன் சேவிக்க வேண்டுமென்றும், அதற்குக் கைம்மாறாக உம்முடைய பேரருளை அபரிவிதமாய் பெற்று மகிழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், இறந்த அடியார்கள் அனைவருக்கும் நீர் தாமே நிலைவாழ்வு அருள வேண்டுமென்று மன்றாடுகிறோம். அதே நேரம், இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாங்கள் ஒவ்வொருவரும், பாவ வாழ்க்கையைப் பொறுத்தமட்டில் இறந்தவர்களாகவும், எங்களது தினசரி சிலுவைகளை சுமந்து உம்பின்னே நடக்கிறவர்களாகவும் திகழ வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், அனைத்தையும் அனைவரையும் விட உம்மை அன்பு செய்பவர்களாகவும், உம்மை ஏற்றுக்கொள்வதற்காக அனைத்தையும் இழக்கத் துணிந்தவர்களாகவும், உம் சீடர் என்பதால் மிகச் சிறியோருக்கும் உதவுபவர்களாகவும் இருந்து, உமக்கு ஏற்புடையவர்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  
 
https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, June 14, 2026

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 21.06.2026

பொதுக்காலம் ஆண்டின் பன்னிரண்டாம் ஞாயிறு 21.06.2026
12th Sunday in Ordinary Time (A) – Comboni2000 – Duc in Altum

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

எரேமியா 20:10-13
உரோமையர் 5:12-15
மத்தேயு 10:26-33

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 12-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம். "அஞ்சாதீர்கள்" - என்ற ஆறுதல் மொழிகளோடு இன்றைய நற்செய்தியில் இயேசு நம்மைச் சந்திக்கிறார். உலகம் நமக்குத் தரும் சவால்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் எதிர்ப்புகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. "உங்கள் தலைமுடி எல்லாம் கணக்கிடப்பட்டிருக்கிறது" என்று சொல்லும் அளவுக்கு இறைவன் நம் மீது அக்கறை கொண்டுள்ளார்.
முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் எதிர்ப்புகளுக்கு நடுவிலும் இறைவன் தன் பக்கம் "வலிமை மிக்க வீரராக" இருப்பதை உணர்கிறார். இரண்டாம் வாசகத்தில் ஆதாம் வழியாய் வந்த பாவத்தைவிட, கிறிஸ்து வழியாய் வந்த அருள் மேலானது எனப் பவுல் அடியார் விளக்குகிறார். நாம் உண்மையை உரக்கச் சொல்லவும், கிறிஸ்துவை உலகறிய அறிக்கை செய்யவும் அழைக்கப்படுகிறோம். அந்தத் துணிவைப் பெறவும், இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (எரேமியா 20: 10-13)

இறைவாக்கினர் எரேமியா தமக்கு நெருக்கமானவர்களாலேயே அச்சுறுத்தப்படுகிறார். சுற்றிலும் அச்சுறுத்தல் இருந்தபோதும், அவர் கலங்கவில்லை. ஆண்டவர் தம் பக்கம் இருக்கும்போது தம்மைத் துன்புறுத்துவோர் வீழ்வர் என்று நம்புகிறார். ஏழைகளின் உயிரைக் காக்கும் இறைவனைப் போற்றிப் புகழும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

திருப்பாடல்: 69: 7-9, 13, 16, 32-34
1.ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது. என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன. பல்லவி
ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும். பல்லவி
எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக. ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. வானமும் வையமும்; கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 12-15)

ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
ஒரு மனிதராகிய ஆதாம் வழியாகப் பாவம் உலகிற்குள் நுழைந்தது; ஆனால், ஒரு மனிதராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவனின் அருள் பெருகியது. பாவத்தின் விளைவைவிட, கிறிஸ்துவின் அருட்கொடை எத்துணை வலிமையானது என்பதை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள் என்றார்”.  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்” என்கிற உமது வாக்குறுதியில் நிலைத்திருந்து, எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், மக்கள் முன்னிலையில் உம்மை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டுமல்லாமல், உமக்கு ஏற்றவர்களாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘சுற்றிலும் ஒரே திகில்!’ எனத்தொடங்கிய இன்றைய முதல் வாசகக்கூற்றை உண்மையாக்குகிற நிலையில் இருக்கும் எம் உலகுக்காகவும், உலகத் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்கள், அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி எங்களை வழிநடத்துவதற்குத் தேவையான ஞானத்தை தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.” என்கிற உமது வாக்கின்படி, நாங்கள் அனைவரும், தூய ஆவியாரின் துணையோடு, அச்சம் தவிர்த்து வாழவும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்கிற நம்பிக்கையோடு வாழ்வை நடத்தவும், வாழ்வின் சிக்கல்களைத் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிடவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பதும்; அறிய முடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை.” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், எங்கள் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒளிவு மறைவற்ற, ஒழுக்கமான வாழ்வை மேற்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சாமல், ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சி, இருளின் செயல்களை விட்டொழித்து ஒளியின் மக்களாக வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, June 7, 2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு - 14-06-2026

பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு

https://miro.medium.com/v2/1*SFD4WntCSlLLnyoj-1pOSw.jpeg

இன்றைய நற்செய்தி வாசகம்

விடுதலைப் பயணம் 19: 2-6a
உரோமையர் 5: 6-11
மத்தேயு 9: 36- 10: 8

திருப்பலி முன்னுரை

ஆண்டவரின் அன்பிற்குரிய இறைமக்களே! இன்று நாம் பொதுக்காலத்தின் 11-ஆம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில், திரண்டு வந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு இயேசு பரிவு கொள்கிறார். அவர்கள் "ஆயன் இல்லாத ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டிருந்தனர்" என்று வாசிக்கிறோம். இந்த உலகளாவிய ஆன்மீகப் பசி தீரவும், மக்களை நல்வழிப்படுத்தவும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்பி வைக்கிறார்.
இயேசுவின் அந்த அன்புப் பணி இன்றும் தொடர வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இறைவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களாக அனுப்பப்பட்டுள்ளோம். "இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய் வழங்குங்கள்" என்ற கிறிஸ்துவின் கட்டளைப்படி, நம்மிடமுள்ள திறமைகளையும், அருளையும் பிறரோடு பகிர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இந்த மேய்ப்புப் பணியில் நாம் ஆர்வத்துடன் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.
முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 19: 2-6a)
இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுபட்டுச் சீனாய் பாலைவனத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே ஆண்டவர் மோசே வழியாகத் தமக்கு ஒரு 'புனிதமான மக்களினத்தை' உருவாக்க விரும்புகிறார். "நீங்கள் என் சொல்லுக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால், எல்லா மக்களுள்ளும் நீங்களே எனக்குச் சொந்தமான மக்களாய் இருப்பீர்கள்" என்று ஆண்டவர் கூறும் வாக்குறுதியை இவ்வாசகத்தில் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!

1. அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி

2. ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி

3. ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (உரோமையர் 5: 6-11)

நாம் பாவிகளாய் இருந்தபோதே, நமக்காகத் தம் உயிரைத் தந்து கடவுள் நம் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்தினார் என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் தகுதியற்றவர்களாய் இருந்தும், கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம் என்ற மேலான உண்மையை எடுத்துரைக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. ஆண்டின் பொதுக்காலத்தை மீண்டும் தொடங்கியிருக்கும் தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும், இன்றைய பதிலுரைப் பாடலில் அறிக்கையிட்டதுபோல, “நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!” என்கிற உணர்வோடு வாழுகிற வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்ட மக்கள்மேல் பரிவு கொண்ட இயேசுவே! அமைதியையும் நல்வாழ்வையும் நோக்கி வழிநடத்துகிற நல்ல தலைமையின்றி தவிக்கின்ற இவ்வுலகிற்கு, நல்ல தலைவர்களையும், ஏற்கனவே இந்த உலகையும், எம்நாட்டையும், மாநிலத்தையும் ஆட்சி செய்கின்ற தலைவர்களுக்கு நல்புத்தியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் நீங்களே என் தனிச் சொத்தாவீர்கள்” என்கிற உமது வாக்குத்தத்தத்தின் படி நாங்கள் அனைவரும் உமக்குரிய மக்களாகவே வாழவும், புதிய கல்வி ஆண்டைத் தொடங்கியுள்ள எம்பிள்ளைகளும், இளையோரும், உமக்கும், பிறருக்கும் பணிந்திருந்து, பயனுள்ள செயல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி, உயர்நிலை அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு” என்று அங்கலாய்த்த இயேசுவே!  அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளராகிய உம்மிடமே மன்றாடுகிறோம். தேவ அழைத்தல் பெருகும்படியாகவும், அழைக்கப்பட்டோரில் பலர் தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கப்பட்டோர் அனைவரும் பிரமாணிக்கத்தோடு வாழவும், இறைமக்களாகிய நாங்கள் அனைவரும், அவர்களை மாண்புடன் நடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” என்கிற உம் அறைகூவலுக்கு செவிசாய்த்து, மனம் மாறி நற்செய்தியை நம்புவதோடு நில்லாமல், நாங்கள் பாவிகளாய் இருந்தபோதே, கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியிருக்கிறோம் என்பதையும் உணர்ந்து, கடவுளுக்கும் மனிதருக்கும் ஏற்புடைய வாழ்வை மேற்கொண்டு, கொடையாகப் பெற்றதை, கொடையாகவே வழங்குகிற நல்மனது பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Thursday, June 4, 2026

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (07.06.2026)

 கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா (07.06.2026)

https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcQuCC6bVBpqvjaVyotYS7I3hK-gctKzVMLjnWMkzBMAZg&s 

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

இணைச் சட்டம் 8:2-3, 14ஆ-16அ
1 கொரிந்தியர் 10:16-17
யோவான்  6:51-58

திருப்பலி முன்னுரை

நற்கருணையில் வாழும் ஆண்டவரின் அன்புக்குரிய இறைமக்களே! இன்று நாம் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவை எழுச்சியுடன் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நம் மீது கொண்ட எல்லையற்ற அன்பினால், தம்மையே உணவாகவும் பானமாகவும் நமக்குத் தந்த மாபெரும் மறைபொருளை இன்று நாம் நன்றியோடு நினைவு கூர்கிறோம்.
"விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை உண்ணும் எவரும் என்றுமே வாழ்வர்" என்று நற்செய்தியில் இயேசு நமக்கு வாக்குறுதி அளிக்கிறார். பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் மன்னாவை வழங்கியது போல, இன்று நமது ஆன்மீகப் பயணத்திற்குத் தாகம் தீர்க்கும் பானமாகவும், பசி போக்கும் உணவாகவும் நற்கருணைத் திருவிருந்து வழங்கப்படுகிறது. நற்கருணை என்பது வெறும் சடங்கு அல்ல; அது கிறிஸ்துவின் உயிருள்ள பிரசன்னம். நாம் ஒரே அப்பத்தைப் பகிர்ந்து கொள்வதால், நாம் அனைவரும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்ற ஒற்றுமையை இது வலியுறுத்துகிறது. இந்தத் திருவிருந்தில் தகுதியுடன் பங்கேற்கவும், கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருக்கவும் வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (இணைச் சட்டம் 8: 2-3, 14b-16a)

மோசே இஸ்ரயேல் மக்களிடம் பேசும்போது, பாலைவனத்தில் அவர்கள் அனுபவித்த சோதனைகளையும், கடவுள் அவர்களுக்குச் செய்த நன்மைகளையும் நினைவுபடுத்துகிறார். "மனிதர் உணவினால் மட்டுமல்ல, ஆண்டவரின் வாய் சொல்லால் வாழ்வர்" என்பதை அவர்களுக்குப் புகட்டவே, அவர்கள் அறியாத மன்னாவைக் கொண்டு கடவுள் அவர்களுக்கு உணவளித்தார் என்று கூறும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

 பதிலுரைப்பாடல்

பதிலுரை: எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக!.
திருப்பாடல்கள்  147: 12-13, 14-15, 19-20

எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக!  அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார்; உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார். பதிலுரை

அவர் உன் எல்லைப்புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார்.  அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார்; அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. பதிலுரை

யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.  அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை; அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது. பதிலுரை

இரண்டாம் வாசக முன்னுரை (1 கொரிந்தியர் 10: 16-17)

நற்கருணைக் கிண்ணமும், அப்பமும் கிறிஸ்துவின் திருஇரத்தத்திலும் திருவுடலிலும் நாம் பங்கு கொள்வதைக் குறிக்கின்றன என்று புனித பவுல் விளக்குகிறார். நாம் பலராய் இருந்தாலும், ஒரே அப்பத்தில் பங்கு கொள்வதால் ஒரே உடலாய் மாறுகிறோம் என்ற ஒற்றுமையின் மறைபொருளை விளக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர்.  அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தப் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில், தாயாம் திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய நாங்கள் அனைவரும். ஒரே அப்பத்தில் பங்கு கொள்வதனால், பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம் என்கிற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. போர் பதட்டங்களாலும், குழப்பமான சூழல்களாலும், பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடிகளாலும் அல்லலுறும் அவனியின் மீது உமது கண்களைத் திருப்பி, உலகத் தலைவர்களுக்கும், எம்நாட்டுத் தலைவர்களுக்கும் தேவையான ஞானத்தை நல்கி, அனைவருக்குமான நல்வாழ்வு மற்றும் அமைதி நோக்கி அவர்கள் எங்களை வழிநடத்த வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஒவ்வொரு திருப்பலியும் கிறிஸ்துவின் இரத்தத்திலும், கிறிஸ்துவின் உடலிலும் பங்குகொள்ளுதல் என்பதை உணர்ந்து, தகுந்த தயாரிப்போடும், தூய உள்ளத்தோடும் நாங்கள் பங்குபெறவும், நற்கருணை இல்லையேல் திருஅவை இல்லை, குருக்கள் இல்லையேல் திருப்பலி இல்லை என்பதை உணர்ந்து, நாங்கள் அனைவரும் குருக்களை மதித்து நடக்கவும், தேவ அழைத்தலை ஊக்குவிப்பவர்களாகவும்       விளங்கிட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.” என்கிற உமது திருமொழியில் நம்பிக்கை வைத்து, எம்குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்கிலும் இறந்துபோன அடியார்களுக்காக மன்றாடுகிறோம். அவர்கள் அனைவருக்கும் நிலை வாழ்வினைத் தந்து, உயிர்ப்பின் மகிமையில் பங்குகொள்ளும் பேரின்பத்தை அருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, கடவுளின் வாய்ச் சொல் ஒவ்வொன்றாலும் உயிர் வாழ்கின்றார்” என்பதை உணர்ந்து, எங்களது வாழ்வினை இறைவார்த்தையென்னும் அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பவும், “எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்கிற இறைவாக்கிற்கேற்ப, நற்கருணை பக்தி மூலம், உம்மோடு இணைந்து வாழ்கிற பேற்றினை பெற்றிட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, May 26, 2026

மூவொரு இறைவன் பெருவிழா 31-05-2026

மூவொரு இறைவன் பெருவிழா 31-05-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்

விடுதலைப் பயணம் 34: 4-6, 8-9
2 கொரிந்தியர் 13:11-1 3
யோவான்  3:16-18

திருப்பலி முன்னுரை

பாஸ்கா காலத்தை நிறைவு செய்து, இன்று நாம் திருச்சபையின் மிக முக்கியமான மறைபொருளாகிய மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். தந்தை, மகன், தூய ஆவியானவர் என மூன்று ஆள்களாய் இருந்தாலும், அன்பினால் ஒன்றிணைந்த ஒரே கடவுளை இன்று நாம் போற்றிப் புகழ்கிறோம்.
இன்றைய நற்செய்தியில், "தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்" என்று வாசிக்கிறோம். மூவொரு இறைவன் என்பது ஒரு கணக்கு அல்ல, அது ஒரு உறவு. தந்தை - படைப்பவர், மகன் - மீட்பவர், தூய ஆவி - வழிநடத்துபவர். இந்த மூவரும் எவ்வாறு அன்பினால் பிணைக்கப்பட்டுள்ளார்களோ, அவ்வாறே நாமும் நமது குடும்பங்களிலும், சமூகத்திலும் அன்பினால் ஒன்றிணைய அழைக்கப்படுகிறோம். "தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே" என்று நாம் சிலுவை அடையாளம் வரையும் ஒவ்வொரு முறையும் இந்த உறவுக்குள் நுழைகிறோம். அந்த அன்பின் உறவில் வளர வரம் வேண்டி, இத்திருப்பலியில் பக்தியுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (விடுதலைப் பயணம் 34: 4b-6, 8-9)

சீனாய் மலையில் மோசேக்கு ஆண்டவர் காட்சி தந்தபோது, தம்மை "இரக்கமும் அருளும் கொண்ட கடவுள்" என்று வெளிப்படுத்துகிறார். மக்கள் பாவம் செய்தபோது, மோசே அவர்களை மன்னிக்கும்படி இறைவனிடம் மன்றாடுகிறார். இறைவன் கோபப்படுவதில் மெதுவானவர், பேரன்பு காட்டுவதில் வல்லவர் என்பதை விளக்கும் இவ்வாசகத்தைக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

தானி (இ) 1: 29ac. 30,31. 32,33 (பல்லவி: 29b)
பல்லவி: என்றென்றும் நீர் புகழப் பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர்.

1. எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக;
மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. - பல்லவி

2. உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக;
கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

3. உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக;
உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக. - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (2 கொரிந்தியர் 13: 11-13)

"ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக" என்ற ஆசீர்வாதத்தோடு புனித பவுல் இந்த வாசகத்தை முடிக்கிறார். நாம் ஒருவருக்கொருவர் அமைதியோடும் அன்போடும் வாழ வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் இவ்வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாருக்கு மகிமை உண்டாகுக. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும், எல்லாம் வல்லவருமான கடவுள், தந்தை, மகன், தூய ஆவியாகிய மூவொரு கடவுளின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். மூவொரு இறைவனிடம் காணப்படும் ஒருமித்த சிந்தனையும் செயல்பாடும் எங்களிலும் இருந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “வணங்காக் கழுத்துள்ள மக்களாகிய எங்கள் கொடுமையையும், எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்” என்ற மோசேயின் வேண்டுதலின்படி, போர்களாலும், வன்முறைகளாலும், தவறான முடிவுகளாலும் பாழ்பட்டுப்போயிருக்கிற எம் உலகையும், நாட்டையும், மாநிலத்தையும், நீர் தாமே கனிவோடு கண்ணோக்கி, அமைதியையும், நிம்மதியையும் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “தூய முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள். மன ஒற்றுமை கொண்டிருங்கள்; அமைதியுடன் வாழுங்கள்; அப்போது அன்பும் அமைதியும் அளிக்கும் கடவுள் உங்களோடு இருப்பார்.” என்கிற பவுலடியாரின் அறிவுரைகளைச் சிரமேற்கொண்டவர்களாக எங்கள் பங்கு த்தளமும், அன்பியங்களும், குடும்பங்களும், எப்பொழுதும் அன்பு நிறைந்த, ஒற்றுமை நிலவும் சமூகங்களாக விளங்கிட   வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “மகிழ்ச்சியாய் இருங்கள்; உங்கள் நடத்தையைச் சீர்ப்படுத்துங்கள்” என்கிற இன்றைய இரண்டாம் வாசக அறிவரையை புரிந்து கொண்டு, இன்றைய இளைஞர்களும் இளம்பெண்களும், சிற்றின்பம், உண்மையான மகிழ்ச்சி ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்தவர்களாக, பொறுப்புடனும், சுயகட்டுப்பாட்டுடனும், நன்னடத்தையுடனும், தங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கமும் பரிவும் உள்ளவரும், சினம் கொள்ளத் தயங்குபவரும், பேரன்புமிக்கவவரும்; நம்பிக்கைக்குரியவருமான கடவுள் உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே விரும்புகிறவர் என்பதை உணர்ந்து, இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைவனுக்கு உகந்த, மனமாற்றம் மிகுந்த ஒரு வாழ்க்கையை நடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 20, 2026

தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)

 தூய ஆவியாரின் வருகை பெருவிழா (24.05.2026)

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 திருத்தூதர்பணிகள் 2: 1-11,
1 கொரிந்தியர் 12: 3-7, 12-13,
யோவான்  20:19-23

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
தூயஆவியின் ஞாயிறு, திருச்சபையின் பிறந்த நாளை, புதுப்பிக்கப்பட்ட நாளைக் குறிக்கிறது. அருட்சாதனங்களின் மூலம், திருச்சபையில் நம்மை ஒரு அங்கத்தினராகச் சேர்ந்துக் கொண்டதைக் குறிக்கிறது இந்நாள் பெருவிழா. நாம் எல்லோரும் சேர்ந்துக் கொண்டாடும்  இந்நாள், நாம் பெற்ற தூயஆவியை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளவும், ஆவியின் உடனிருப்பை உறுதிபடுத்தும் இவ்விழாவில் பங்கேற்க  வந்துள்ள இறைகுலமே உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
கிறிஸ்துவின் ஆவியின் சக்தியும், அதன் பிரசன்னமும் இவ்வுலகில் இல்லை என்றால், கிறிஸ்தவன் இந்த உலகை மாற்ற முடியாது. ஆவியின் சக்தி இல்லை என்றால், இந்த இரண்டாயிரம் வருடங்களாக, பல்வேறு ஊழலிலும், தடையும் தாண்டிக் கிறிஸ்தவம்  வளர்ந்திருக்காது.
கடவுள் “எவ்வாறு இந்த உலகை மாற்றப் போகிறார் ? “நம் மூலம்! தந்தை கடவுள் அவரின் தூயஆவியை, அவரின் மகனுக்குக் கொடுத்து இந்த உலகின் இறைபணியாற்ற அனுப்பினார். இயேசு அதே ஆவியை நமக்குக் கொடுத்தார். அதன் மூலம் நாம் தூயவாழ்வில் வளர்ந்து, இந்த உலகின் மாற்றத்திற்கான ஆயத்தப் பணிகளில் நாம் ஈடுபடலாம். கடவுளின் ஆவி உங்களிலிருந்து குறைகளை நீக்கி நிறைகளாக்கும், தொடர்ந்து இந்த நம்பிக்கையோடு திருப்பலியில் பங்கேற்போம்! ஆவியின் கொடைகளைப் பெற்றுக் கொள்வோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பெந்தகோஸ்தே நாளில் தூயஆவியால் நிரப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துரைக்கிறது. ஆவியானவர் இயேசுவின் வார்த்தையால் இவ்வுலகை ஒரு புதுப்படைப்பாக மாற்றுகிறார். இன்று சீனாய் மலையில் நெருப்புவடிவில் தோன்றிப் பத்துக்கட்டளைகளை மோயீசனுக்குக் கொடுத்தார் கடவுள். இன்று தூயஆவி நெருப்பு நாக்கு வடிவில் புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இன்று மொழியாலும், இனத்தாலும் பல்வேறு வேறுபாடுகளாலும் பிரித்திருந்த மனிதக் குலத்தைக்
கடவுள் தூய ஆவியின் வழியாக இன்று சேர்க்கின்றார். சீடர்கள் பெற்ற மகிழ்ச்சியை நாம் பெற இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

பதிலுரைப்பாடல்

ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்
திருப்பாடல் 104: 1,24. 29-30. 31,34

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம்  வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாரவது கிறிஸ்தவ விசுவாசத்திற்குச் சான்று பகரவில்லை என்றாலும், திருச்சபையின் பணிக்காகத் தங்களது கொடைகளைப் பகிரவில்லையென்றாலும் அவர்களிடம் தூய ஆவியின் கொடை இல்லை என்பதைத் தெளிவுப்படுத்திகின்றார். தூய ஆவியானவர் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை வழி நடத்துவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறார். எனவே ஒவ்வொரு கிறிஸ்துவனும் தான் பெற்ற ஆவியானவரின் கொடைகள் வழியாக ஒன்றிணைந்த கிறிஸ்தவச் சமூகமாக மாற்ற வேண்டும் என்று அழைக்கும் இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.


தூயஆவியின் தொடர் பாடல் : (mp3 பாடல் இசையுடன்) 


தூயஆவியின் தொடர் பாடல் : (வாசக நூல் 1, பக்.524) 


தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! "தூய ஆவியே எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும்.  அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும்." அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. தூய ஆவியின் பெருவிழாவினைக் கொண்டாடுகிற இந்நாளில் தாயாம் திருஅவைக்காகவும், திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய எங்கள் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். “தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்கிற நற்செய்தியின் படி, நாங்கள் எந்தப் படிநிலையில் இருந்தாலும், அனைவரும் உம்மால் அனுப்பப்பட்டவர்களே என்றுணர்ந்து, ஒற்றுமையின் ஆவியை, உறுதி தரும் ஆவியை நிறைவாக உள்வாங்கி, இறையாட்சியின் உயிர் துடிப்புள்ள சாட்சிகளாக வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. மிகக்குறுகிய இன்றைய நற்செய்தி வாசகத்தில் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்கிற சொற்றொடரை இரண்டுமுறை உச்சரித்த நீர், இவ்வுலகுக்கு நிலையான அமைதியை உரித்தாக்க வேண்டுமென்று மன்றாடுகிறோம். பெந்தக்கோஸ்து பெருவிழாவின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசியோரும், நற்செய்தியை தம் சொந்த மொழிகளில் கேட்கச் செய்த ஆவியானவர், பல்வேறு பிரச்சனைகளால் முரண்பட்டுள்ள உலகத்தலைவர்களையும், எம்நாட்டுத் தலைவர்களையும், ஒருமித்த கருத்துக்கும் ஒற்றுமையின் பாதைக்கும் அழைத்துவர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்” என்கிற திருப்பாடல் வரிகளைத் தியானப் பல்லவியாகப் பகர்ந்த நாங்கள், தூய ஆவியின் நிரப்புதலால் புத்தொளி பெற வேண்டுமென்றும், எம்பிள்ளைகளும், இளையோரும் தூய ஆவியின் வழிநடத்துதலால், தங்கள் எதிர்கால வாழ்வை சரியாகத் தேர்வு செய்து, நிறை வாழ்வு வாழ வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “அருள் கொடைகள் பலவகை உண்டு; செயல்பாடுகள் பலவகை உண்டு; திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே; கடவுள் ஒருவரே” என்றுணர்ந்து, எங்கள் பங்குகளிலும், அன்பியங்களிலும், தனிப்பட்ட குடும்பங்களிலும், நாங்கள் வாழும் சமுதாயத்திலும், நாங்கள் அனைவரும், ஒரே உடலின் பல்வேறு உறுப்புகளாய், இசைந்தும், இணைந்தும், செயல்படுகிற மனப்பக்குவத்தை பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள எங்கள் அனைவர் மீதும், தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீப்பற்றியெரியச் செய்தருளும். நாங்கள் அனைவரும் இறைவனுக்கு உகந்தவர்களாகவும், அனைத்து அருள்வரங்களும் பெற்றவர்களாகவும், ஒன்றிப்பில் இன்புற்று வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, May 12, 2026

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா 17.05.2026

Feast of the Ascension - Wikipedia

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 1: 1-11
எபேசியர் 1:17-23
மத்தேயு 28:16-20

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
உயிர்ப்புப் பெருவிழா முடிந்தப் பின், வந்த ஏழாம் ஞாயிறான இன்று இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாட ஆலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று விழாக்களும் நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான உண்மைகள் முதன் முதலில் நடந்தபோது, எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அமைதியாய் நடந்தன. எப்போது எப்படி நடந்ததென்றே தெரியாமல் நடந்த ஒரு முக்கிய மறையுண்மை உயிர்ப்பு. நெருங்கிய சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம் விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப் பார்க்கும் தூய ஆவியாரின் விழாவும் மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. கிறிஸ்தவ விசுவாசத்தின் கருப்பொருளான, அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.இருபது நூற்றாண்டுகள் மேலாகியும், இந்த விழாக்களில் நாம் புதுப்புது அர்த்தங்களைக் காண்பதற்குக் காரணம்?... இவை முதல் முறைக்கொண்டாடப்பட்டபோது, ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் ஆழமான அர்த்தங்கள் விதைக்கப்பட்டன. 

இன்று அந்த விதைகள் வேரூன்றி வளர்ந்துத் தொடர்ந்து கனித் தந்து கொண்டிருக்கின்றன.அன்று வேரூன்றய மரங்கள் திக்கெங்கும் பல்கிப்பெருகி இறையரசைப் பறைச்சாற்றி வருகிறது. இன்று இயேசுவின் அழைப்பை ஏற்று நாம் அவரின் சீடர்களாய் அவர் பணிகள் செய்திட, வாழ்ந்திட, அன்பு பாரட்டத் தூயஆவியின் கனிகளைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் வேண்டிடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் லூக்கா இயேசுவின் விண்ணேற்றத்தை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். இயேசு தான் தெரிந்துக்கொண்ட திருத்தூதர்களுக்குத் தனக்குப் பின் அவர்களின் பணி என்ன என்பதை விளக்கிகூறியபின் விண்ணேற்றம் அடைந்தார். அவர்களிடம் நீங்கள் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள் என்றும் உலகின் கடைசிஎல்லை வரை என் சாட்சிகளாய் இருப்பீர்கள் என்றும் உறுதியளிக்கின்றார். இயேசு விண்ணில் மறைந்தபின் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருந்தவர்களிடம் வானதூதர்கள் “என்ன வானத்தையே பார்க்கிறீர்கள்! போதும்! கீழே பாருங்கள்!“ என்று உலகைக் காண்பித்து “அவர் பணித்த பணிகளைச் செய்ய உலகின் கடைகோடிவரைச் செல்லுங்கள்" என்று கூறுவது போல எழுதிய லூக்காவின் இலக்கிய நயத்தைச் சுவைத்தவாறு அவர் நமக்கு இட்டப்பணியை உணர்ந்துச் செல்லப்படுவோம்.வாரீர்!

பதிலுரைப்பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
திருப்பாடல் 47: 1-2. 5-6. 7-8
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே. பல்லவி

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் தந்தையாம் கடவுளை முழுமையாக அறிந்து கொள்ளுமாறு ஞானமும், வெளிப்பாடும் தரும் தூய ஆவியை உங்களுக்கு அருள்வாராக! இறைமக்களுக்கு அவர் தரும் உரிமைப்பேறு எத்துணை மாட்சிமிக்கது என்று கட்டவுளின் ஆற்றலை விளக்கும் பவுலடியார் கிறிஸ்துவுக்கு அனைவரையும் அடிபணியச் செய்து அனைத்துக்கும் மேலாகத் திருச்சபையின் தலையாகவும் திருச்சபையை அவரது உடலாகவும் தந்துள்ளதை தெளிவாகக் கூறுவதை இவ்வாசகத்தில் கவனமுடன் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. விண்ணேற்றப் பெருவிழாவாகிய இன்று “கடவுள் வலிமைமிக்க தம் ஆற்றலைக் கிறிஸ்துவிடம் செயல்படுத்தி, அவரைத் திருச்சபைக்குத் தலையாகத் தந்தருளினார். திருச்சபையே அவரது உடல்” என்கிற பவுலடியாரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர்களாய், கிறிஸ்துவின் மறையுடலாகிய திருஅவைக்காக மன்றாடுகிறோம். திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் விண்ணகத்தையே இலக்காகக் கொண்டு வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. “எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே” என்கிற திருப்பாடலைத் தியானித்த நாங்கள் உலகின் பல்வேறு நாடுகளை ஆளுகிற தலைவர்களுக்காகவும், எம்நாட்டின் தலைவர்களுக்காகவும் மன்றாடுகிறோம். நல்லாட்சி, அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை, உலகிலும், எம்நாட்டிலும் நிலவ வேண்டுமென்றும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “உலகின் கடையெல்லை வரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள். நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்” என்கிற உமது அறைகூவலை சிரமேற்கொண்டு, மறைத்தூதுப் பணியாற்றவும், அறப்பணிகள் வழியாகத் தொண்டாற்றவும் தங்களையே கையளித்துள்ள அனைத்து துறவியருக்காகவும், சிறப்பாகப் பிற நாடுகளில் பணிபுரிவோருக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களை நீர் தாமே நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டுமென்றும், இறையாட்சிப் பணிக்காக மேலும் பலர் முன்வரவேண்டுமென்றும், அதற்காக நடத்தப்படும் தேவ அழைத்தல் முகாம்கள் நிறைந்த பலன் தரும்படியாகவும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. திருமுழுக்கு வழியாகக் கடவுளுடைய அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவரும், குடும்பங்கள் ஒவ்வொன்றும், குறிப்பாகக் குழந்தைகளும், இளையோரும், தாங்கள் பெற்றுக்கொண்ட உரிமைப்பேறு, எதிர்நோக்கு, நம்பிக்கை, ஆகியவை எத்துணை மேலானவை என்பதை உணர்ந்து செயலாற்றி, நம்பிக்கை வாழ்விலும், உலகுசார் வாழ்விலும், வெற்றி பெறவேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் உமக்கு அருளப்பட்டிருப்பதையும், “இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்கிற வாக்குறுதியையும் இறுகப்பற்றிக்கொண்டு, விண்ணேற்றம் அடைந்த உம்மைப் போல், நாங்களும் வாழ்வில் ஏற்றம் அடைய வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Wednesday, May 6, 2026

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 10-05-2026

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு 10-05-2026

Jesus Promises the Holy Spirit ‼️ READ John 14:15-21 15 “If you love me,  keep my commands. 16 And I will ask the Father, and he will give you  another advocate to

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர்பணிகள் 8: 5-8, 14-17
1 பேதுரு 3:15-18
யோவான் 14:15-21

திருப்பலி முன்னுரை

அன்புடையீர்,
பாஸ்கா காலத்தின் ஆறாம் ஞாயிறு ஆன இன்று  "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்." என்று கூறிப் பிரியாவிடை தரும் இயேசு, இன்று நமக்குத் தரும் பரிசு என்ன? என்பதை அறிய ஆவலுடன் இவ்வாலயம் வந்திருக்கும் இயேசுவின் சீடர்களாகிய உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

யோவான் நற்செய்தியில் இயேசு தன் பணிக்காலம் முடிந்து தந்தையாம் இறைவனிடம் செல்லும் முன் தம் அன்புச் சீடர்களுக்குப் பல வாக்குறிதிகளைத் தனது பிரியாவிடையின் பரிசாக வழங்கினார். சென்ற வாரம் தன் சீடர்களுடன் தான் நிரந்தரமாய்த் தங்கப்போகும் தந்தையின் இல்லத்தைப் பற்றிப் பேசிய இயேசு, இரவுணவின்போது தன்னை இன்னும் அழகிய, ஆழமான வகையில், அப்ப இரச வடிவில், சீடர்களிடம் பரிசாகப் பகிர்ந்தளித்தார்.

இந்த வாரம், தான் சென்றபின், அவர்கள் பெறப்போகும் துணையாளரைப் பற்றி இயேசு பேசுகிறார்: "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்." இங்கு இயேசு கிறிஸ்து ஒரு கனிவு மிகுந்த பெற்றோரைப் போல், நண்பரைப் போல் தன் சீடர்களுக்கு இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கிறார்.

"திக்கற்றவர்களாய் உங்களை விடமாட்டேன்" என்று கூறும் இயேசுவை நம்பி நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வோம். திசைப் புரியாமல், வழித் தெரியாமல் கலங்கும் பலரை இந்த நேரத்தில் நினைத்துப் பார்ப்போம். அத்துடன் தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோரை இறைவனின் வழி நடத்துதலுக்கு ஒப்படைத்து உயிர்த்த ஆண்டவரிடம் இத்திருப்பலி வழியாக மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை

முதல் வாசக முன்னுரை

திருத்தூதர் பிலிப்பு கிறிஸ்துவை, சமாரிய மக்களுக்குப் போதித்தப்போது அம்மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். ஒருமனத்தோராய் கூடியிருந்தபோது அரும் அடையாளங்களைக் கண்டு சமாரிய நகரமே மகிழ்ந்திருந்தது. சமாரியநகர மக்களின் மனமாற்றத்தைக் கண்ட பேதுருவும் யோவானும் இணைந்துச் செபித்து அவர்களுக்குத் தூய ஆவியைப் பெற்றுத் தந்தார்கள் என்பதை விளக்கும் இம்முதல்வாசகத்திற்கு நாமும் ஒருமனதோராய் செவிமெடுப்போம் வல்லச்செயல்களை காண்போம்.

பதிலுரைப்பாடல்

திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20
பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். கடவுளை நோக்கி, ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி

‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகம் கிறிஸ்துவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டு, கிறிஸ்துவப் பண்புகளைக் கொண்டு அவருக்குச் சாட்சிப் பகிர்ந்திட நம்மை அழைக்கிறது. இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் என்பதற்கு ஏற்றவாறு கிறிஸ்துவைப் போல் மன்னித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்று வாழ அழைக்கும் திருத்தூதர் பேதுருவின் முதல் திருமுகத்திலிருந்து வரும் இவ்வார்த்தைகளைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும் “என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” என்கிற உமது குரலுக்குச் செவிசாய்த்து, எங்கள் கீழ்ப்படிதல் மூலம். உம்மீது நாங்கள் கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துகிற அருளினைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அமைதியின் அரசரே எம் இறைவா, உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டுமென்றும், அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், எங்கள் நாட்டிலும், மாநிலங்கள் அனைத்திலும், நல்லாட்சி, ஒற்றுமை, சமாதானம், சகோதரத்துவம், சமூக நீதி, ஆகியவை செழிக்க வேண்டுமென்றும்    இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உயிர்த்த ஆண்டவராகிய நீர் வாக்களித்த “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியாரின்” துணையோடு, எம்பிள்ளைகளும், இளையோரும், தங்கள் வாழ்விற்கான நல்வழியைத் தேர்வு செய்து, கல்வியிலும், பணிகளிலும், தொழில்களிலும், மென்மேலும் உயர்ந்து, அனைத்து விதங்களிலும் வளம்பெற வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன்” என்கிற உமது வாக்குறுதியை இறுக்கப்பற்றியவர்களாய், எம்வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களிலும், இன்னல்களிலும், இடையூறுகளிலும், உறுதியாகப் போரிட்டு, “நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள்” என்கிற உமது கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணமாய் ஒரு வெற்றிகரமான  வாழ்க்கையை  நடத்திட  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், எங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்ற்றவும், அனைவருடனும் பணிவோடும் மரியாதையோடும் நடந்து கொள்ளவும், குற்றமற்ற மனச்சான்றுடன் ஒழுகவும், நன்மை செய்து துன்புறுவதில் உம்மைப் போல் விளங்கவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 
 

Monday, April 27, 2026

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு - 03-05-2026

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு.

திருப்பலி முன்னுரை: 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியைத் தியானிக்கும் பாஸ்கா காலத்தின் ஐந்தாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். 
இன்றைய நற்செய்தியில், இயேசு தந்தை இறைவனிடம் செல்லவிருப்பதை முன்னிட்டு கலங்கி நின்ற சீடர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். "உங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்" என்று தொடங்கும் இயேசு, விண்ணகத்தில் பல உறைவிடங்கள் உள்ளன என்றும், அங்கேயே நாம் சேருவதற்கு "நானே வழியும் உண்மையும் வாழ்வும்" என்றும் உறுதி அளிக்கிறார். கிறிஸ்துவை நாம் வழியாய் ஏற்று நடக்கும்போது, உண்மையை அறிந்து கொள்கிறோம்; அந்த உண்மை நமக்கு நிலைவாழ்வைத் தருகிறது. 
நாம் அனைவரும் தந்தையாம் இறைவனோடு இணைந்திருக்கவும், கிறிஸ்துவின் சாட்சிகளாக உலகில் வாழவும் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 6:1-7)

திருச்சபையின் பணிப் பகிர்வு - திருத்தொண்டர்கள் நியமனம். தொடக்க காலத் திருச்சபை வளர்ச்சியடைந்தபோது, விதவைகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கலைத் திருத்தூதர்கள் எப்படித் தீர்த்தார்கள் என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. செபத்திலும் இறைவார்த்தைப் பணியிலும் திருத்தூதர்கள் கவனம் செலுத்தவும், பந்திப் பணி செய்ய ஏழு திருத்தொண்டர்களை (Deacons) அவர்கள் நியமித்தார்கள். இது திருச்சபையில் பணிப் பகிர்வின் அவசியத்தையும், தூய ஆவியின் வழிநடத்துதலையும் நமக்கு உணர்த்துகிறது. இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி : ஆண்டவரே உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

திருப்பாடல் 33:1-2,4-5, 18-19

நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்: நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்: பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள். பல்லவி

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 2:4-9)

உயிருள்ள கற்களாகிய நாம். நாம் அனைவரும் உயிருள்ள கற்களாக இருந்து, கிறிஸ்துவின் மேல் ஒரு ஆன்மீக இல்லமாகக் கட்டப்பட அழைக்கப்படுகிறோம் என்று புனித பேதுரு கூறுகிறார். கிறிஸ்துவே தலைக்கல்லாக இருக்கிறார். நாம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம், அரச குலக் குருக்கள் மற்றும் தூய மக்களினம் என்ற மேலான தகுதியை நற்செய்தியின் வழியாகப் பெற்றுள்ளோம் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை! அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. இறைவேண்டலிலும், இறைவார்த்தைப் பணியிலும் நிலைத்திருப்பதுவே தங்கள் தலையாயப் பணி என்பதை உணர்ந்து, திருத்தொண்டரைகளை தெரிவு செய்த திருத்தூதர்களைப் போலவே, இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், இறையாட்சிப் பணியினை சிரமேற்கொண்டு செயல்பட அருள்தர  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் அரசரே எம் இறைவா, நாளை விடிகின்றபோது, நல்லாட்சி தொடர்வதற்கான தேர்தல் முடிவுகள் வர வேண்டும் எனவும், தமிழ் நாடு உள்பட சில சட்டமன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள், சமயசார்பற்ற, சமூக நீதியைப் பேணுகின்ற நல்ல அரசுகள் அமைவதற்கு வழிகோல வேண்டுமென்றும், உலகம் எங்கும் அமைதி நிலவ வேண்டுமென்றும், அதற்காக உலகத் தலைவர்கள் அனைவரும் உழைக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்றுரைத்த இறைவா, எம்குடும்பங்களும், எம்பிள்ளைகளும், இளையோரும், உம்மையே தங்கள் வழியும் உண்மையும் வாழ்வுமாகக் கொண்டு, தங்கள் கல்வி, திறன்-வளர்ப்பு, பணியமர்வு, எதிர்காலம் ஆகியவற்றில் கவனத்துடன் செயல்படவும், ஒளிமயமான எதிர்காலம் அவர்கள் எல்லோருக்கும் அமைந்திட வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்” என்கிற உம் குரலைக் கேட்டு, நாங்கள் நம்பிக்கை நிறைந்தவர்களாய் வாழவும், எங்களுக்கு நேரிடும் துன்பங்களினால் உள்ளம் துவண்டுபோகாமல் இருக்கவும், “நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார்” என்கிற கூற்றின்படி, வியத்தகு செயல்களைச் செய்யக்கூடிய ஆற்றலை நீர் தாமே எங்களுக்கு அருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது எங்கள் பணி” என்பதை உணர்ந்து, திருமுழுக்கின் வழியாகப் பெற்றுக்கொண்ட பொதுக்குருத்துவத்தின் கடமைகளை நிறைவேற்றத் தேவையான வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, April 21, 2026

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு 26.04.2026

 பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு 26.04.2026

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

திருத்தூதர் பணிகள் 2:14அ, 36-41
1 பேதுரு 2:20ஆ-25
யோவான்: 10:1-10

திருப்பலி முன்னுரை:

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) இன்று திருச்சபை "நல்ல ஆயன் ஞாயிறைச் சிறப்பிக்கின்றது.
இன்றைய நற்செய்தியில், இயேசு தம்மை ஒரு "நல்ல ஆயனாகவும்", ஆடுகள் உள்ளே நுழையும் "வாயிலாகவும்" உருவகப்படுத்துகிறார். ஒரு நல்ல ஆயன் தன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைக்கிறார்; அவற்றிற்காகத் தன் உயிரையே கொடுக்கிறார். நாம் அவருடைய மந்தையைச் சார்ந்த ஆடுகள். உலகில் பல குரல்கள் நம்மைக் திசைதிருப்ப முயன்றாலும், நமது உண்மையான ஆயனின் குரலை மட்டும் கேட்டுப் பின்பற்றிட இன்று நாம் அழைக்கப்படுகிறோம்.
மேலும், இன்று திருச்சபையின் அழைத்தல்களுக்காகச் செபிக்கும் நாள். நல்ல ஆயனின் குரலைக் கேட்டு, இறைப்பணி செய்யப் பலர் முன்வர வேண்டும் என்று சிறப்பாக வேண்டுவோம். நாம் அனைவரும் அந்த நல்ல ஆயனின் பராமரிப்பில் பாதுகாப்புடனும், நிறைவான வாழ்வுடனும் வாழத் தேவையான அருளை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:14, 36-41)

மனமாற்றத்திற்கான அழைப்பு. புனித பேதுருவின் முதல் உரையைக் கேட்ட மக்கள், "சகோதரர்களே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று இதயத்தில் குத்தப்பட்டவர்களாய்க் கேட்கிறார்கள். அதற்குப் பேதுரு, "மனம் மாறுங்கள், இயேசுவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள்" என்று அறிவுறுத்துகிறார். அன்று மூவாயிரம் பேர் அந்த ஆயனின் மந்தையில் இணைந்தது போல, நாமும் நம் பாவ வழிகளை விடுத்து ஆண்டவரிடம் திரும்பி வர இவ்வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேனும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3a. 3b-4. 5. 6.

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேனும் குறையில்லை.  பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.  அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.  பல்லவி

தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திவிடுவார்.  மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சின்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்.  பல்லவி

என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.  பல்லவி

உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.  பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 2:20-25)

நம் ஆன்மாக்களின் ஆயராகிய கிறிஸ்து. கிறிஸ்து நமக்காகத் துன்புற்று நமக்கு ஒரு முன்மாதிரியை விட்டுச் சென்றார். நாம் சிதறிப்போன ஆடுகளைப் போல இருந்தோம்; ஆனால் இப்போது நம் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமான அவரிடம் திரும்பி வந்துள்ளோம் என்று புனித பேதுரு கூறுகிறார். அவர் தம் காயங்களால் நமக்குக் குணமளித்தார் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குப் பக்தி உணர்வுடன் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், அச்சங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களாய் “கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” எனத் துணிவுடன் எடுத்துரைத்த பேதுருவைப் போல, உயிர்ப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும், துடிப்புள்ள திருஅவையாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுத் தரவல்லவரான உயிர்த்த இயேசு, உலகின் தலைவர்கள் அனைவரையும், பகைமை, வன்மம், வெறுப்பு போன்ற பாதாளங்களிலிருந்து தூக்கிவிட்டு, போர்களில்லா அமைதியான சூழலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்றும், அனைத்துவிதமான நெருக்கடிகளிலிருந்தும் இந்த உலகு விடுதலை பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை” என்கிற முதல்வாசகம் இயேசுவுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து மன்றாடுகிறோம். எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலுமிருந்து மரித்துப்போன அனைவர் மீதும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிற போர்களாலும் தாக்குதல்களாலும் உயிரிழக்க நேரிடும் அனைவரின் மீதும், உமது உயிர்ப்பின் வல்லமை தங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிற உம்முடைய மக்களாகிய நாங்கள், இந்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலே, “எங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அல்ல; மாசு மறுவற்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், யாருக்கும் விலை போகாமல், எந்தவிதமான கவர்ச்சிக்கும்   மதிமயக்கத்திற்கும் இடம் தராமல், மதச்சார்பற்ற, மனிதாபிமானமிக்க, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைத்திட்டத்தையும், இறைவனின் வல்ல செயல்களையும் உணர இயலாத மந்த உள்ளத்தினராக இல்லாமல், இறைவார்த்தையும், திருஅப்பமும் பிடப்படுகிற திருப்பலியில், உம்மை முழுமையாய் கண்டுணரவும், 'எம்மோடு தங்கும்' என வேண்டி உம்மை எப்போதும் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வாழவும், நாங்கள் கண்டுணர்ந்த உம்மைப் பிறரோடு பகிரவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  

https://anbinmadal.org

Print Friendly and PDF

Sunday, April 12, 2026

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு 19-04-2026

பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு 19-04-2026


இன்றைய நற்செய்தி வாசகங்கள்:-

திருத்தூதர் பணிகள் 2:14,22-33
1 பேதுரு 1:17-21
லூக்கா 24:13-35

திருப்பலி முன்னுரை. 

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் உடனிருப்பைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு வழிபாட்டிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

இன்றைய நற்செய்தியில், எம்மாவு நோக்கிச் சென்ற இரு சீடர்களின் பயணத்தை நாம் தியானிக்கிறோம். நம்பிக்கையிழந்து, சோகத்துடன் சென்ற அந்தச் சீடர்களோடு இயேசு வழித்துணையாக நடக்கிறார். அவர் மறைநூலை விளக்கிச் சொன்னபோது அவர்களின் உள்ளம் நெருப்பாய் எரிந்தது; அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது அவர்களின் கண்கள் திறக்கப்பட்டன.

நாமும் பல நேரங்களில் கவலைகளோடும், ஏமாற்றங்களோடும் நம் வாழ்வின் பயணத்தைத் தொடர்கிறோம். ஆனால், உயிர்த்த ஆண்டவர் நம் ஒவ்வொரு திருப்பலியிலும், இறைவார்த்தை வழியாகவும் நற்கருணை வழியாகவும் நம்மோடு தங்கி நமக்கு வலிமை அளிக்கிறார். எம்மாவு சீடர்களைப் போல நாமும் ஆண்டவரை அடையாளம் காணவும், அவர் தரும் மகிழ்ச்சியை உலகிற்கு அறிவிக்கவும் தேவையான வரத்தை வேண்டி இந்தப் பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:14, 22-33)

கிறிஸ்துவின் உயிர்ப்பிற்குப் பேதுருவின் சான்று. தூய ஆவியால் நிரப்பப்பட்ட புனித பேதுரு, எருசலேம் மக்கள் முன்னிலையில் ஆற்றிய முதல் உரையை இவ்வாசகத்தில் கேட்கிறோம். யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைக் கடவுள் சாவிலிருந்து எழுப்பி, அவருக்கு மாட்சி அளித்தார் என்பதைப் பேதுரு துணிவுடன் பறைசாற்றுகிறார். தாவீது அரசரின் இறைவாக்கின்படி, கிறிஸ்து சாவிற்கு உட்பட்டவர் அல்ல, அவரே வாழ்வின் அதிபதி என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

பதிலுரைப்பாடல் 

ஆண்டவரே வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்
திருப்பாடல் 16:1-2, 5,  7-8, 9-10, 11

1. இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.  நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன். ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே. பல்லவி

2. எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது. ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். பல்லவி

3. என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும். ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர். பல்லவி

4. வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு. உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:17-21)

கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் மீட்கப்பட்டோம். நாம் அழிந்துபோகும் பொன், வெள்ளியினால் மீட்கப்படவில்லை; மாறாக, மாசற்ற ஆட்டுக்குட்டியான கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்று புனித பேதுரு நமக்கு நினைவூட்டுகிறார். எனவே, நாம் இவ்வுலகில் வாழும் காலம்வரை இறைவனுக்கு அஞ்சி, புனிதமான வாழ்வு வாழ வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று இவ்வாசகத்தைக் கேட்போம்

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வழியிலே அவர் நம்மோடு பேசி, மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம்பற்றி எரியவில்லையா அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு

1. எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினராகிய நாங்கள் அனைவரும், அச்சங்கள் அனைத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களாய் “கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள்” எனத் துணிவுடன் எடுத்துரைத்த பேதுருவைப் போல, உயிர்ப்பின் உயிருள்ள சாட்சிகளாகவும், துடிப்புள்ள திருஅவையாகவும் வாழ வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுத் தரவல்லவரான உயிர்த்த இயேசு, உலகின் தலைவர்கள் அனைவரையும், பகைமை, வன்மம், வெறுப்பு போன்ற பாதாளங்களிலிருந்து தூக்கிவிட்டு, போர்களில்லா அமைதியான சூழலுக்கு அழைத்துச்செல்ல வேண்டுமென்றும், அனைத்துவிதமான நெருக்கடிகளிலிருந்தும் இந்த உலகு விடுதலை பெற வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை” என்கிற முதல்வாசகம் இயேசுவுக்கு மட்டுமல்லாது எங்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்ந்து மன்றாடுகிறோம். எங்கள் குடும்பங்களிலும், அன்பியங்களிலும், பங்குகளிலுமிருந்து மரித்துப்போன அனைவர் மீதும், உலகின் பல்வேறு இடங்களில் நடந்துவருகிற போர்களாலும் தாக்குதல்களாலும் உயிரிழக்க நேரிடும் அனைவரின் மீதும், உமது உயிர்ப்பின் வல்லமை தங்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆளைப் பார்த்தல்ல, அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குகிற உம்முடைய மக்களாகிய நாங்கள், இந்த வாரம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலே, “எங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை பொன்னும் வெள்ளியும் அல்ல; மாசு மறுவற்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தம்” என்கிற உண்மையை உணர்ந்தவர்களாய், யாருக்கும் விலை போகாமல், எந்தவிதமான கவர்ச்சிக்கும்   மதிமயக்கத்திற்கும் இடம் தராமல், மதச்சார்பற்ற, மனிதாபிமானமிக்க, சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், இறைத்திட்டத்தையும், இறைவனின் வல்ல செயல்களையும் உணர இயலாத மந்த உள்ளத்தினராக இல்லாமல், இறைவார்த்தையும், திருஅப்பமும் பிடப்படுகிற திருப்பலியில், உம்மை முழுமையாய் கண்டுணரவும், 'எம்மோடு தங்கும்' என வேண்டி உம்மை எப்போதும் எங்கள் வாழ்க்கையில் கொண்டு வாழவும், நாங்கள் கண்டுணர்ந்த உம்மைப் பிறரோடு பகிரவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

https://anbinmadal.org

Print Friendly and PDF

Tuesday, April 7, 2026

பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு 12-04-2026

 பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு
 இறை இரக்கத்தின் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


திருத்தூதர்பணிகள் 2:24-47
1பேதுரு 1:3-9
யோவான் 20:19-31

 திருப்பலி முன்னுரை:-

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டிற்கு (உங்களை அன்போடு வரவேற்கிறோம்.) இன்று நாம் 'இறை இரக்கத்தின் ஞாயிறை' சிறப்பிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக" என்று வாழ்த்தி, அவர்களுக்குத் தூய ஆவியையும், பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தையும் வழங்குகிறார். அதே வேளையில், இயேசுவின் உயிர்ப்பை நம்பத் தயங்கிய தோமையாரிடம், தம் காயங்களைக் காட்டி அவருடைய விசுவாசத்தை உறுதிப்படுத்துகிறார். "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று நமக்காகவே சொல்லப்பட்டுள்ளன.

நமது பலவீனங்கள் மற்றும் சந்தேகங்களின் மத்தியிலும், இறைவனின் இரக்கம் அளவிட முடியாதது என்பதை உணர்வோம். உயிர்த்த ஆண்டவர் தரும் அமைதியையும் மன்னிப்பையும் இதயத்தில் ஏந்தியவர்களாய், இந்தப் பலியில் பக்தி உணர்வுடன் பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 2:42-47)

தொடக்க காலத் திருச்சபையின் வாழ்வு. உயிர்த்த ஆண்டவரின் வல்லமை தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் வாழ்வில் எப்படிப் பிரதிபலித்தது என்பதை இவ்வாசகம் விவரிக்கிறது. அவர்கள் ஒருமித்த மனத்தோடு திருத்தூதர்களின் போதனையிலும், அப்பம் பிட்குவதிலும், செபத்திலும் நிலைத்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் பகிர்ந்து வாழ்ந்த அந்த அன்புறவு வாழ்வு நமக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகிறது. சமூகமாக இணைந்து இறைவனைப் புகழும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

 பதிலுரைப்பாடல்

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

திருப்பாடல் 118:2-4, 13-15, 22-24

1. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! பல்லவி

2. அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. பல்லவி

3.கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். 
பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 பேதுரு 1:3-9)

அழியாத வாழ்வின் நம்பிக்கை. இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக நாம் பெற்றுள்ள புதிய வாழ்வைப் பற்றிப் புனித பேதுரு இவ்வாசகத்தில் மகிழ்ச்சியுடன் எடுத்துரைக்கிறார். நாம் இப்போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானாலும், நம்முடைய விசுவாசம் நெருப்பினால் புடம் போடப்பட்ட பொன்னை விட மேலானது. நாம் இயேசுவைக் காணாமலே அன்பு செய்கிறோம், அவரை நம்புகிறோம். இதுவே நமக்கு முடிவில்லாத மகிழ்ச்சியைத் தரும் என்பதை உணர்த்தும் இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா, அல்லேலூயா! "தோமா, என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'' என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:-

1. திருத்தூதர் கற்பித்தவற்றிலும், நட்புறவிலும், அப்பம் பிடுவதிலும், இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்த, தொடக்க கால நம்பிக்கையாளர்களைப் போலவே, பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கும் இன்றைய திருஅவையும், திருத்தந்தை லியோ உள்ளிட்ட திருஅவைத் தலைவர்களும், மறைப்பணியாளர்களும், இறைமக்களாகிய நாங்களும், நம்பிக்கை கொண்டோராக ஒன்றாய் இருந்து, எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்று வாழ  வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அச்சத்தின் பிடியிலும் ஐயத்தின் பிடியிலும் சிக்கித் தவித்த தோமா உள்ளிட்ட திருத்தூதர்களுக்குத் தோன்றி “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்திய இறைவா, போர் பதட்டத்திலும் அதனால் ஏற்படும் பல்வேறு தீய விளைவுகளாலும் அல்லலுறும் அவனிக்கு, நீர்தாமே நிலையான அமைதி அருள வேண்டுமென்றும், உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அமைதியை நாடும் நல்லோராய் மாறிட, ஒன்றிப்பின் ஆற்றலான உமது தூய ஆவியை அவர்கள்மேல் நீர் பொழிந்தருள வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப் பிறப்பு அளித்துள்ள நம் கடவுளும் தந்தையுமானவரின் பேரிரக்கத்தின்படி, தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தல்களில், பிற்போக்கு சக்திகள் தோற்கடிக்கப்பட்டு சமூக நீதியை உயர்த்திப்பிடிக்கும் சமயசார்பற்ற அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஒரே மனத்தோடு கோவிலில் கூடுவதோடு நில்லாமல், பேருவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் கூடி, இறைவேண்டலிலும், கடவுளைப் போற்றிப் புகழ்வதிலும், பகிர்தலிலும் நிலைத்திருந்த தொடக்க கால நம்பிக்கையாளர்களின் முன்னுதாரணத்தை பின்பற்றி நாங்களும் எங்கள் அன்பியங்களில் ஈடுபாட்டோடு பங்கெடுத்து, உண்மையான அன்பிற்கும் எங்களின் உள்ளார்ந்த ஒற்றுமைக்கும் சான்றுபகர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், உம்மைக் கண்டதால் அல்லாமல் காணாமலே நம்புகிற பேறுபெற்றதற்காக நன்றிகூறும் அதே வேளையில், பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருப்பினும், ஐயம் தவிர்த்து நம்பிக்கை கொண்டு, குன்றாத எதிர்நோக்குடன் வாழவும், தூய ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களாய் பிறரை மன்னிக்கவும், ஒப்புரவு அருட்சாதனத்தை தாழ்ச்சியுடன் அணுகி மன்னிப்புப் பெறவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

https://anbinmadal.org

Print Friendly and PDF