Monday, March 9, 2020

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு முதல் ஆண்டு



தவக்காலம் மூன்றாம் ஞாயிறு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்


விடுதலைப் பயணம் 17:3-7
உரோமையர் 5:1-2,5-8
யோவான் 4:5-42

திருப்பலி முன்னுரை


அன்புடையீர்,
தவக்காலம் மூன்றாம் ஞாயிறான இன்று ஆலயம் வந்துள்ள இறைமக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
இயேசுவுடன் உரையாடியச் சமாரியப் பெண் அவரை மீட்பராக, மெசியாவாகக் கண்டு கொண்டு வியந்துபோனவர், தான் பெற்ற அந்த இறையனுபவத்தைத் தன் இனத்தவருடன் பகிர்ந்து கொள்ள ஊருக்குள் ஒடிச் செல்கிறார்.
ஆம் அன்பர்களே ! இயேசுவின் முதல் இறையரசு நற்செய்தி அறிவிப்பாளராகச் செயல்பட்டார் என்றால் அது மிகையகாது. அப்பெண்ணின் பாவ வாழ்க்கையைப் பற்றி இயேசு கூறியபோது அதைக் கண்டு அஞ்சவில்லை. அதனை ஏற்றுக் கொணடதன் மூலமாக மீட்பைப் பெற்றார். இயேசுவின் பொங்கி எழும் ஜீவஊற்று அவரது பாலைவனமாக இருந்த வாழ்க்கை மகிழ்ச்சிப் பொங்கும் பூங்காவனமாக மாறியது. அவரின் ஊரார் அனைவரும் அவரால் மீட்பைக் கண்டனர்.
ஆம்! இயேசு சமாரியப்பெண்ணுக்காகக் கிணற்றின் அருகில் காத்திருந்தது போல் எந்நாளும் ஆலயத்தில் நற்கருணை வடிவில் நம் வருகைக்காகக் காத்திருக்கிறார். இறைவார்த்தை வழியாகவும், திருப்பலி வழியாகவும் தனிச் செபங்கள் வழியாகவும் இயேசுவோடு உரையாடும் போது தன்னை அப்பெண்ணுக்கு வெளிப்படுத்தியது போல, நமக்கும் வெளிப்படுத்துவார். நாமும் அவரின் இறையன்பைக் கண்டுணர்வோம். அவர் கூறியத் தாகத்தை, நிலைவாழ்வை நாமும் பெற்றிட இன்றைய திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று வாழ்வுத் தரும் வற்றாத ஊற்றில் நீர் அருந்துவோம். வாரீர்.....


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


தொடக்கநூலில் இஸ்ரயேல் மக்களை வாக்களித்த நர்ட்டிற்குப் பாலைவனத்தின் வழியாக இறைவன் அழைத்துவந்தபோது சலிப்படைந்தார்கள். மோசேவிற்கு எதிராய் முணுமுணுத் தொடங்கினர். தேர்ந்கு கொண்ட இனம் அடிமைகளாய் எகிப்தில் துன்பட்டு அழிந்து விடாமல் இருக்க மோசேயின் தலைமையில் அறுபுதமாய்க் கடல் கடந்து தேனும் பாலும் ஒடும் கானான் நாட்டிற்கு அழைத்து வந்தார். ஆனாலும் மக்கள் ஆண்டவரைச் சோதிக்க அவரும் அவர்களிடம் பரிவோடு இருந்தார் என்பதைக் கூறும் இன்றைய முதல் வாசகத்திற்குக் கவனமுடன் கேட்போம்.


இரண்டாம் வாசக முன்னுரை


கிறிஸ்துவ விசுவாசத்தைக் கொடையாகக் கொண்டு பாவத்திற்கும், வேதனைக்கும் மத்தியில் இறைவனுக்கு ஏற்புடையவராக வாழும்போது அளவிட முடியாத ஆண்டவரின் அன்பைக் கொடையாகப் பெறுகிறோம். ஏனென்றால் தன் ஓரே பேரான மகனை, பாவத்தில் வாழும் மனித இனத்தின் மத்தியில் இறைவன் அனுப்பினார். அவரது விலைமதிப்பற்றத் திருஇரத்தத்தின் வழியாக நம்மை மீட்டுத் தம் கொடைகளால் நம்மை நிரப்புகிறார். இந்த அளவுகடந்த இறைவனின் அன்பையும், இரக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்தும் நிகழ்வைச் சிந்திக்க இன்றைய இரண்டாம் வாசகம் தூண்டுகிறது

பதிலுரைப் பாடல்

பல்லவி : உங்கள் இதயத்தைக் கடினப்படுத்தாதீர் ஆண்டவர் குரலைக் கேட்டிடுவீர்
திருப்பாடல்கள்: 95: 1-2, 6-7,7-9

வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.  நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். பல்லவி
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.  அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர்.   பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி :-


ஆண்டவரே! நீர் உண்மையில் உலகின் மீட்பர். நான் தாகம் கொள்ளாதபடி வாழ்வு தரும் தண்ணீரை எனக்கு அளித்தருளும்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்


1 நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! எம் திருஅவையின் திருத்தந்தை, ஆயர்கள், அருட்பணியாளர்கள், பொது நிலையினர் ஆகிய அனைவரும் இறைஇயேசுவின் பணிவாழ்வைத் தங்கள் சொல்லாலும், செயலாலும் அனைத்து மாந்தருக்கும் வேறுபாடின்றி, நீதி உண்மை ஆகியவற்றை இவ்வுலக வாழ்வில் அனைவரும் மதிக்கத்தக்க வகையில் வழங்கிடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகிறோம்.

2. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! இன்றைய சமூக வாழ்வில் நாங்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் உம்பாதம் வைக்கின்றோம். பாவ வாழ்வில் மூழ்கிப் போன எங்கள் அனைவரையும் உமது கருணையாம் வாழ்வு தரும் தண்ணீரால் மீட்டிட உம் பெலனை, ஆற்றலை, சக்தியை நாங்கள் நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! வேதனை நிறைந்த எங்கள் மனங்களில் எதிர்கால வாழ்வை நினைத்து, கிடைத்த வாழ்வை, பெற்ற மகிழ்ச்சியை, உறவுகளை இழக்காமல் எம் குடும்பங்களில் ஒற்றுமையையும், மற்றவாகளை மன்னித்து எம் சகோதரச் சகோதரிகளாய் பாவித்துச் சாமாரியப் பெண்ணைப் போல எங்கள் தவறுகளை ஏற்று அனைவரையும் அன்புப் பாரட்ட வேண்டிய மனஉறுதியையும், அவற்றைச் செயலில் காட்டு விவேகத்தையும் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! சமாரியப் பெண் உம்மை மீட்பர், நிலைவாழ்வுத் தரும் ஊற்று என்பதைக் கண்டு கொண்டு மற்றவர்களுக்கும் உம்மை அறிவித்தது போல நாங்களும் உமது இரக்கத்தையும், அன்பையும் இத்தவக்காலத்தில் உய்த்துணர்ந்து, உம் சீடர்கள் என்ற உணர்வைப் பெற்றுச் செபம், தவம், தர்மம் ஆகியவற்றின் மூலம் இறையரசை அறிவிக்க இணைந்துச் செயல்பட வேண்டிய வரங்களை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...

5. நிலைவாழ்வுத் தரும் ஊற்றாகிய எம் இறைவா! கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் மக்களைக் கண்ணோக்கியருளும். அவர்கள் அனைவரும் விரைவில் குணமடையவும், இந்நோய் முற்றிலும் நீங்கிடவும், இத்தவக்காலத்தில் உம் மக்கள் அனைவரும் ஆலயம் சென்று, ஒன்றிணைந்துச் செபிக்கவும் தேவையான அருளை வழங்கிட இறைவா உம்மிடம் மன்றாடுகிறோம்...
                                    www.anbinmadal.org

No comments:

Post a Comment