ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
சாலமோனின் ஞானநூல் 2:12,17-20
யாக்கோபு 3:16-4:3
மாற்கு 9:30-37
திருப்பலி முன்னுரை:
ஆண்டின் பொதுக்காலம் 25ஆம் ஞாயிறைச் சிறப்பிக்க இங்கே கூடியிருக்கும் இறைமக்களை இறைமகன் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறோம்.
இன்றைய நாளில் இறைமகன் இயேசு தனது பாடுகளைப் பற்றி இரண்டாம் முறையாக வெளிப்படையாகவே அறிவிக்கிறார். ஆனால் சீடர்களோ அவர் எண்ணங்களைப் புரிந்துக்கொள்ளாமல் தங்களில் யார் பெரியவர் என்று வாதிட்டுக்கொண்டிருந்தார்கள். முதன்மையான மேன்மையான இடத்தில் இருக்க விரும்புபவர் கடைசி இடத்தில் இருக்க வேண்டும் என்று அவர்களைக் கடிந்துக்கொண்டார். திருவிவிலியத்தில் சிறுவன் ஆபேலின் காணிக்கை, சிறுவன் தாவீதின் விடுதலைப் போராட்டம், சிறுவன் சாமுவேலின் இறைபணி அர்ப்பணிப்பு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் அளித்த சிறுவனின் பிறநலமும் என்று சிறுபிள்ளைகளின் என்று சிறுவர்களின் எளிய நல்மனதினைக் காட்டுகிறது. சிறுகுழந்தையின் உள்ளத்தைக் கொண்டிருக்கவும், அவர்களை ஏற்றுக் கொண்டால் என்னையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று அறிவுறுத்துகின்றார்.
இன்றைய இறைவார்த்தை வழிபாடு நம்மை “உமது வார்த்தையின் படியே எனக்கு ஆகட்டும்” என்ற அன்னை மரியாவைப் போலத் தொண்டாற்ற, பிறர் நலன் விரும்பிகளாக வாழ அழைப்பு விடுக்கின்றது. “உங்களுள் பெரியவராக? இருக்க விரும்புகிறவர் பணிவிடை புரிபவராகவும், தொண்ட ஆற்றுபவராகவும் இருக்கட்டும்” என்ற கிறிஸ்துவின் மனநிலை நமதாகட்டும். நாம் வாசிக்கின்ற நற்செய்தி, கேட்கின்ற இறைவார்த்தைகள் நம்மைப் பணிவிடை புரியத் தூண்டட்டும். நாம் பெற்றுக் கொண்ட இறையன்பை பிறரன்பின் வழியாய் வெளிப்படுத்த இறையருள் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.
வாசகமுன்னுரை:
முதல் வாசக முன்னுரை
இன்றைய முதல்வாசகத்தில் பிறரை அடக்கி ஆள்பவர்கள் தற்காலிக வெற்றி அடைந்தாலும், இறுதியில் தோல்வியைத் தழுவுவார். மாறாகப் பணிந்து போகிறவர்கள் தற்காலிகமாகத் தோல்வியடைந்தாலும் இறுதியில் வெற்றி அடைவர். நல்லவர்களின் பொறுமையை நீதிமான்களின் பணியை உலகம் ஏளனம் செய்தாலும் கடவுள் நிச்சயம் அவர்களை உயர்த்துவார் என்று எடுத்துரைக்கின்ற இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.
பதிலுரைப் பாடல்
திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b)
பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்.
கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி
ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி
இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. –பல்லவி
இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யாக்கோபு விண்ணக ஞானத்தையும் மண்ணக ஞானத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார். பொறாமை, மனக்கசப்பு, கட்சி மனப்பான்மை, வெறுப்பு ஆகியவை கொண்ட மண்ணக ஞானம். விண்ணக ஞானமோ அமைதி, பொறுமை, விட்டுகொடுத்தல் இணக்கம் ஆகிய தெய்வீக பண்புகளில் மிளிர்கிறது எடுத்துரைக்கிறார். இவ்வாசகத்தின் கவனமுடன் செவிமெடுப்போம்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலூயா.
நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்
1. தொண்டாற்றத் துணை நிற்கும் தய இறைவா! “தொண்டு ஏற்பதற்கன்று, தொண்டு ஆற்றுவதற்கே வந்தேன்” என்று கூறிய உம் திருமகன் இயேசுவின் அடிச்சுவட்டைப் பின்பற்றித் தங்களது வாழ்வை அமைத்துக் கொண்டுள்ள எம்திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவோர், இறைமக்கள் அனைவருக்கும் உமது ஆசியை வழங்கியருளும். இவர்கள் செய்யும் தொண்டு உம் வார்த்தைகளை நாங்கள் வாழ்வாக்கும் விதத்தில் அமைந்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. தொண்டு செய்வோரை எமக்கு வழங்கிய இறைவா! எம்நாடு எதிர்நோக்கியுள்ள தொண்டுகள் ஏராளமாய் உள்ளன. இவற்றை எம்நாட்டுத் தலைவர்கள் உணர்ந்து, முறைப்டுத்தி எங்களுக்கு ஆற்ற முன் வரவும் ஏழை - எளிய தாழ்வுக்கு உட்பட்ட, கைவிடப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்த முன்னேற்றம் காண உழைக்க வேண்டுமென்றும் உம்மை மன்றாடுகிறோம்.
3. விழிப்புணர்வு கொடுத்து வெற்றியை நோக்கி வழிநடத்தும் இறைவா! இன்று எம்மிடையே அறியாமை, மூடநம்பிக்கை, தலைவர் வழிபாடு, நுகர்வு வெறி, தாழ்வு மனப்பான்மை போன்ற குறைபாடுகள் மலிந்துள்ளன. இவற்றைக் களைய திறந்த மனத்துடன் சமூக அமைப்புகள் முன் வந்து தொண்டாற்றி அதன் வழியாக நாங்கள் சமூக, பொருளாதார, ஆன்மீக முன்னேற்றங்களுக்கான வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. முயற்சிக்கு ஆசியளிக்கும் மூவொரு இறைவா! எங்கள் பங்கு விவிலியக் குடும்பமாக மாற வேண்டும் என்ற இலக்கோடு உழைக்கும் இனிய பணியாளர்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்களது உழைப்பின் பயனாக எங்கள் பங்குச் சிறுவர்கள், இளையோர், முதிர்நிலையினர், முதியோர் அனைவரும் இறைவார்த்தையின் சான்றாளர்களாக மாற வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா! உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும் அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment