Wednesday, January 29, 2025

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு

ஆண்டவரை ஆலயத்தில் காணிக்கையாக அர்ப்பணித்த விழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

மலாக்கி 3: 1-4
எபிரேயர் 2: 14-18
லூக்கா 2: 22-40

திருப்பலி முன்னுரை

இன்றைய ஞாயிறு திருப்பலியில் பங்கேற்று, இறைவனைத் தொழுதிட கூடியிருக்கின்ற இறைமக்கள் அனைவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் இறைஇயேசுவின் அன்பும் சமாதானமும் நிறைந்து நிலைத்திட வாழ்த்துகிறோம்.

"ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்னும் திருச்சட்டத்தை நிறைவேற்றும் வண்ணமாக, குழந்தை இயேசுவை ஆலயத்திற்கு எடுத்து வந்து அர்ப்பணம் செய்த நிகழ்வினை அன்னையாம் திருஅவை இன்று விழாவாகக் கொண்டாடுகின்றது. இந்த நாளில் இறைமகன் இயேசு தம்மீது நம்பிக்கை கொண்ட தம் மக்களைச் சந்தித்து, தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார். தூய ஆவியாரின் ஏவுதலால் கோவிலுக்கு வந்த முதியோரான புனிதர்கள் சிமியோனும், அன்னாவும், அதே ஆவியாரால் உள்ளொளி பெற்று, அவரை ஆண்டவர் என அறிந்து அக்களிப்புடன் அறிக்கையிட்டனர். இந்த இரு புனிதர்களின் தளராத இறைநம்பிக்கையும், ஜெபவாழ்வும், மீட்பரை அடையாளம் கண்டுகொள்ள துணை செய்தன.

ஆழமான நம்பிக்கையோடு, இடையறாத இறைவேண்டலில் கடவுளுக்கு உகந்த வாழ்வை மேற்கொண்டிருந்தால், ஆண்டவரை அடையாளம் கண்டுகொள்ளும் இறைஅனுபவத்தை நாமும் பெற்றிடுவோம் என்பது திண்ணமே. ஆண்டவரை ஆலயத்தில் அர்ப்பணித்த இன்றைய நாளில், தங்களையே ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ்கின்ற குருக்கள், துறவறத்தார் மற்றும் அருள்சகோதரிகளுக்காக இந்தத் திருப்பலியில் சிறப்பாக மன்றாடுவோம்.

வாசக முன்னுரை:

முதல் வாசக முன்னுரை

உலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற மீட்பர் எப்போது வருவார்? அவரது வல்லமை எத்தகையது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முதல் வாசகம் முன்வைக்கிறது. “நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோவிலுக்கு வருவார்; அவரது வல்லமை புடமிடுகின்ற நெருப்பு போன்றது; தம் மக்களைப் பொன், வெள்ளியைப் போலப் புடமிட்டு தூய்மையாக்குவார்” என்று இறைவாக்கினர் மலாக்கி இந்த முதல் வாசகத்தில் முன்னறிவிக்கிறார்.

பதிலுரைப் பாடல்

திபா 24: 7. 8. 9. 10 (பல்லவி: 10b)

பல்லவி: படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவர்; இவரே போரில் வல்லவரான ஆண்டவர். - பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும். - பல்லவி

மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? படைகளின் ஆண்டவர் இவர்; இவரே மாட்சிமிகு மன்னர்.  - பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை

இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமை குருவாகிய இறைமகன் இயேசு, தம் மக்களுக்குப் பாவத்திலிருந்து விடுதலை தர இவ்வுலகில் அவதரித்தபோது, இரத்தமும், சதையும் கொண்ட சாதாரண மனித உருவிலே அவர்களோடு உறவாடத் திருவுளம் கொண்டார். சாவின் மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையை, தனது சாவினாலே அழித்து, அடிமைப்பட்டிருந்த தம் மக்களை விடுவித்தார். விண்ணிலும், மண்ணிலும் எல்லா அதிகாரங்களையும் கொண்டிருந்த கிறிஸ்து, வானதூதருக்குத் துணை நிற்காமல், நம்மில் ஒருவரானார் என்று திருத்தூதர் புனித பவுல் எபிரேயருக்கு எழுதியத் திருமடலில் எடுத்துரைக்கிறார்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை. அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துக்காட்டுவதுபோல, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இரக்கமும், நம்பிக்கையும் உள்ள தலைமைக் குருவாயிருந்து நம்மைப் புனிதப்படுத்துகிறார். அவ்வாறே, திரு அவையின் தலைவர்களாகிய திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மட்டுமின்றி, நாம் யாவருமே, இந்த யூபிலி ஆண்டிலே, இரக்கமும் நம்பிக்கையின் நிறைந்த திருப்பயணிகளாய் விளங்கிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. தெரிந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலுக்குப் பெருமையாகவும், பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளியாகவும் துலங்கிடும் இறைமகன் இயேசு, உலகிற்கு அமைதி அருளவும், அனைத்துலக, மற்றும் நம் தேசத்தின் தலைவர்கள் மனதிலே, நேரிய எண்ணங்களை விதைத்து, சீரிய திட்டங்களைச் செயல்படுத்தி, அறநெறியில் ஆட்சி புரிந்து மக்களுக்கு நற்பணி ஆற்ற, அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன” என மனநிறைவு எய்திய சிமியோன் அன்னாள் போல, எம்குடும்பங்களில் வாழும் பெரியோர் மற்றும் முதியோர் மகிழவும், திருச்சட்ட நியமங்களை நிறைவேற்றுவதில் கருத்தாயிருந்த சூசை மரியாள் போல, எம்பெற்றோர் தம் கடமைகளைச் சரிவரச் செய்யவும், வளர்ந்து வலிமை பெற்று, ஞானத்தால் நிறைந்திருந்த இயேசுவைப் போல எம்குழந்தைகள் விளங்கவும், எங்கள் குடும்பங்கள் அனைத்துமே இறைவனுக்கு உகந்த திருகுடும்பங்களாய் விளங்கவும் அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவினை, அர்ப்பண வாழ்வை மேற்கொண்டுள்ள துறவறத்தாரின் நாளாக சிறப்பிக்கும் நாங்கள், துறவியர் அனைவரும், தம் அர்ப்பண வாழ்வில் பிரமாணிக்கயிருக்க மன்றாடுகிறோம். அதே வேளையில், இன்னும் பலர், தேவ அழைத்தலை உணர்ந்து, தாராள மனதோடு, தம்மையே அர்ப்பண வாழ்விற்கு ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, January 21, 2025

பொதுக்காலம் ஆண்டின் மூன்றாம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் மூன்றாம் ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

நெகேமியா 8:2-6,8-10
கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4,14-21

திருப்பலி முன்னுரை:

இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இயேசுவின் முதல் அறிக்கை! அவரின் பொதுவாழ்வில் தனது பணி என்ன? அஃது எப்படிப்பட்டதாக இருக்கும்? தான் யாருக்காகத் தரணிக்கு வந்தார்? என்னவெல்லாம் நடக்கும் என்பதை இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு வழியாக வெளிப்படுத்துகிறார். அவர் திருமுழுக்குப் பெற்றுத் தூயஆவியாரின் வல்லமையால் அதிகாரத்தெனியுடன் இறையரசை அறிவிக்கும் பணியின் தொடக்க நிகழ்வுகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.

இன்றைய முதல் வாசகம் கூறும் இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப் போகிறது. அந்த 'ஆண்டவரின் மகிழ்வு' இன்று நம்மிடையே இருக்கின்றதா? திருஅவையின் உறுப்பினர்கள் பலராக இருந்தாலும், அவர்களை ஒன்றிணைப்பது தூயஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார் வார்த்தைகளையும் நம் மனத்தில் பதிவுச்செய்து சிந்தித்து நம் வாழ்வில் மாற்றங்களைக் காண இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் முழு உள்ளத்தோடு கலந்து கொண்டு மன்றாடுவோம். வாரீர்.

வாசகமுன்னுரை:

முதல்  வாசகமுன்னுரை:

இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப்‌ பின்‌ எருசலேம்‌ வந்த மக்கள்‌ அழிந்த ஆலயத்தை நெகேமியா தலைமையில்‌ மீண்டும்‌ கட்டி எழுப்பினர்‌. எஸ்ரா என்னும்‌ திருச்சட்ட வல்லுநர்‌, மோசேயின்‌ சட்டத்தை மக்கள்‌ கடைப்‌பிடிக்கும்‌ பழக்கத்தைப்‌ புதுப்பித்தார்‌. ஆண்டவர் நம் காதுகளில் விழும் வார்த்தையாக மாறிவிட்டார் என்று ஆண்டவர் உடனிருப்பை உணர்ந்ததால் அழுகின்றனர்! இன்றைய வாசகத்தில்‌ வரும்‌ நிகழ்ச்சி, திருப்பலியில்‌ வரும்‌ இறைவார்த்தை வழிபாட்டின்‌ எதிரொலியாகவும்‌ நமதாண்டவர்‌ நாசரேத்தூர்‌ செபக்‌ கூடத்தில்‌ ஏட்டுச்‌ சுருளை வாசிந்து விளக்கம்‌ அறித்ததன்‌ பின்னணி ஆகவும்‌ அமைந்துள்ளது. ஆண்டவரின் மகிழ்வு அவர்களிடையே இருந்ததை அவர்கள் உணர்ந்தது போல நாமும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் அருட்கொடைகள்‌ வெளிப்படும்‌ வகையிலும்‌ அவற்றின்‌ செயல்முறையிலும்‌ வேறுபாடுகள்‌ இருந்தாலும்‌ அனைத்து வரங்களும்‌ ஒரே தெய்வீக ஊற்றிலிருந்தே பிறக்கின்றன,  திருச்சபையின்‌ பொது நன்மைக்காகவே இவை அளிக்கப்படுகின்றன என்பதை பவுல்‌ நாம் கிறிஸ்துவின் உடல் உவமை வழியாகத்‌ தெளிவுபடுத்துவதை கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14
பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. நலம் தரும் யூபிலி ஆண்டைக் கொண்டாடும் திரு அவை, “ஆண்டவரின் மகிழ்வே நமது வலிமை'' என்கிற நெகேமியாவின் சொல்படி நடந்து, ஆண்டவரை மகிழ்விக்கும் ஒரு வாழ்வை மேற்கொள்ளவும், திருத்தத்தை, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருமே, இறைவழியில் உறுதியுடன் பயணிக்கவும், அருள்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

2. “உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல” எனத் தொடங்கும் இரண்டாம் வாசகத்தின் பொருளை உணர்ந்தவர்களாய், நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடும் நாம் அனைவரும், மொழி, இன, மத பேதமின்றி, ஒருதாய் மக்களாய் வாழ்ந்திடவும், அரசியல் தலைவர்களும், குடிமக்களும், மக்களால், மக்களுக்காகவே செயல்படுவது தான் உண்மையான குடியரசு என்றுணர்ந்து வாழவும் அருள்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. “ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க” நாசரேத்து தொழுகை கூடத்தில் தோன்றிய இயேசு, இன்றும் நம் மத்தியில் தங்கி, எளியோருக்கு நற்செய்தியும், பிணியுற்றோருக்கு உடல் நலமும், சிறைப்பட்டோர்க்கு உரிமை வாழ்வும் வழங்க வல்லவர் என்கிற நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் நிறைந்திடவும், இத்தகு நலம்தரும் நற்செய்திப் பணிகளை ஆற்றும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும்  இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. “ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது” என்கிற திருப்பாடல் வரிகளை தியானப் பாடலாக ஜெபித்ததோடு நில்லாமல், இங்கே கூடியுள்ள நாம் அனைவரும், ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூய்து என்பதை உணர்ந்தவர்களாய் “என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்” என்கிற விதத்தில் வாழ்க்கையை நகர்த்திட அருள்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, January 14, 2025

பொதுக் காலம் ஆண்டின் இரண்டாம் ஞாயிறு

 பொதுக் காலம் ஆண்டின் இரண்டாம் ஞாயிறு 


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 62:1-5
கொரிந்தியர் 12:4-11
யோவான் 2:1-12

திருப்பலி முன்னுரை

இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் இரண்டாம் ஞாயிறு. இயேசுவின் முதல் புதுமை! அவரின் பொதுவாழ்வில் அன்னை மரியாளின் கரிசனை அன்பால் ஓர் இனிய சுவையாகப் புதுமையுடன் வெளிப்படுகின்றார். அடுத்தவரின் துயரம் அறிந்த அன்னையாக "அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்" என்று அழைக்கின்றார். ஆம் அன்னையின் அழைப்போடு இயேசுவும் தன் பொதுவாழ்வைத் தொடங்குவதாக இந்த நிகழ்வு அமைகின்றது.
வெறும் தண்ணீரை, குணம் மணம் இல்லாத் தண்ணீரை இரசமாக மாற்றி மகிழ்ச்சி நிறைந்தோட செய்கிறார். இயேசுவின் வருகைச் சோகத்தை இன்பமாக மாற்றுகிறது. நம் உப்புச் சப்பற்ற வாழ்வை இயேசுவிடம் ஒப்படைத்தால் மட்டும் போதும் அதை இரசனையுள்ள வாழ்வாக, மகிழ்ச்சி நிறைந்த, குறிக்கோள் நிறைந்த வாழ்வாக மாற்றுவார். இயேசு வந்தால் நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் நிறைவாகக் கலந்து கொண்டு மன்றாடுவோம். யூபிலி  ஆண்டில் மாற்றத்தைக் காண்போம். வாரீர்.

வாசகமுன்னுரை

முதல் வாசகமுன்னுரை

சீயோன் கடவுள் வாழும் உறைவிடம். எனவே அதன் மீட்பும், வெற்றியும் மீட்பின் செயல்கள் அனைத்தும் வெளிப்படும் வரை கடவுளின் மௌனம் வெளிப்படுகின்றது. அந்த மீட்பினால் வரும் மகிழ்ச்சியைப் பிற இனத்தார் மன்னர் அனைவரும் காண்பது பற்றியும், கடவுளின் திருக்கரத்தில் மணிமகுடமாய் விளங்குவது பற்றி ஒரு நாளும் கைவிடப்பட்ட நிலையால் இருக்கப்போவதில்லையென நலம் நல்கும் நம்பிக்கையின் வாக்குறுதியைத் தரும் முதல் வாசகமான எசாயாவின் இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 96: 1,2. 2-3. 7-8. 9-10
பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.

ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; ஆண்டவரைப்  போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள். -பல்லவி

அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;  மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.  ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள். -பல்லவி

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள். வேற்றினத்தாரிடையே  கூறுங்கள்; ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

இரண்டாம் வாசகமுன்னுரை

இறைவன் தன்மகன் இயேசு வழியாகப் புதுயுகம் ஒன்று நம் மத்தியில் புலரச் செய்கிறார்… அவர் தூயஆவியின் கொடைகளால் நம்மை நிரப்புகிறார். அவைகள் வலுக்குறைந்த நமக்கு வலிமையூட்டுகின்றன. நம்பிக்கைத் தருகின்றன. பல்வேறு அருள்கொடைகளைத் தூய ஆவி வழங்குவது திருஅவையின் பொது நலனுக்காகவே, அதன் வளர்ச்சிக்காகவே. எனவே இவ்வரங்களைப் பெற்ற எவரும் இறுமாப்புக் கொள்ளவோ, தம்மைத்தாமே உயர்ந்தவராகக் கருதவோ கூடாது என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் வெளிப்படுத்தப்பட்டும் கருத்துகளைக் கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:

அல்லேலுயா அல்லேலுயா நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும் பொருட்டே, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார். அல்லேலுயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்” என்கிற முதல் வாசக ஆசியின்படி, யூபிலி ஆண்டினைக் கொண்டாடும் திரிவையை, எதிர்நோக்கின திருப்பணிகளாய் வழி நடத்தும் திருத்தந்தை உள்ளிட்ட திரு அவை தலைவர்கள், இறைவனுக்கு ஏற்புடையவர்களாய் வாழவும், இறைமக்களாகிய எங்களைக் கட்டியெழுப்பவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

2. “ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும்” என்கிற ஏசாயாவின் கூற்றுப்படி, எங்கள் தாய்த் திருநாடும், குறிப்பாக, தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ள எம்தமிழ் நாடும், சகோதரத்துவம், சமத்துவம், சமூக நீதி, சமயச் சார்பின்மை ஆகிய விழுமியங்களைப் பேணிக்காத்து, 'தைப்பிருந்தால் வழி பிறக்கும்' என்ற எதிர்நோக்கு மிக்கவர்களாய் வாழ, வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

3. “அருள் கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே” என்கிற பவுலடியாரின் வார்த்தைகளை உணர்ந்தவர்களாய், நாங்கள் எல்லோரும், எங்கள் திறமைக்கேற்ப எம்மடமைகளை ஆற்றி, எல்லோரும் எல்லாமும் பெற்றிட வழிவகை செய்யவும், சேற்றில் இறங்கி எமக்குச் சோறு படைக்கும் விவசாயிகள் உள்ளிட்ட அத்துணை உழைப்பாளிகளையும் மதித்து மாண்புடன் நடத்தவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.   

4. ``அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்கிற அன்னை மரியாவின் அறிவுரைப்படி நாம் நடந்தால், அதே அன்னையின் பரிந்துரையை, ஆண்டவராம் இயேசு ஒருபோதும் தட்ட மாட்டார் என்கிற நம்பிக்கையும் எதிர்நோக்கும் உள்ளவர்களாய்,  இங்கே கூடியுள்ள நாம் அனைவரும் திகழவும், குறைகள் யாவும் நீங்கப்பெற்று, சுவைமிகு திராட்சை ரசம் போல் நம் வாழ்வு இனிக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Tuesday, January 7, 2025

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

இன்றைய நற்செய்தி வாசகங்கள்.

எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22

திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. திருமுழுக்கின் மகிமையை அறிந்துகொள்ள இத்திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இயேசுவின் திருமுழுக்கு அவருடைய மூன்று ஆண்டுப் பொதுப்பணியின் தொடக்கமாகவும் / அவரது முப்பது ஆண்டுகாலத் தனி வாழ்விலிருந்து மானிடரின் மீட்புத் திட்டத்திற்குத் தம்மைத் தயார்படுத்தியுள்ள நிகழ்ச்சியாகவும் / அவரது திருமுழுக்கு அமைகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து பெற்ற திருமுழுக்கு/ நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவூட்டுகிறது. திருமுழுக்கு வழியாக நாம் கடவுளின் ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளோம். கடவுளின் பிள்ளைகள் என்ற அடையாளம் நமக்குத் தரப்பட்டுள்ளது. நாமும் இயேசுவைப் போல/ நம் துன்பங்களின் மத்தியிலும் கடவுளின் திருவுளத்தை அறிந்து / அதை நிறைவேற்றிக் கடவுளைப் பூரிப்படையச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

திருமுழுக்குப் பெற்ற நாம் / இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் / திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் / அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு / இறையருளையும் / இரக்கத்தையும் / தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.

வாசகமுன்னுரை:

முதல் வாசகமுன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாகக் கடவுளின் அன்புக் கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்துத் திரிந்த மக்களுக்குக் கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பாரென ஆறுதல் மொழிகளைத் தருகிறார். இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசகமுன்னுரை

இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்த தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும், புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்ற இறைஇயேசுவின் இரக்கத்தைப் பதிவுச் செய்யும் திருத்தூதரின் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். -பல்லவி

2. நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். -பல்லவி

3. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. -பல்லவி

4. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. -பல்லவி

5. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்'' அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்

1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக உமது பிள்ளைகளாக்கிய எம்திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலைச் சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்திப் புத்துயிர் தந்த எம்கனிவான தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள் , அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும், மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளைச் செய்து நீர் விரும்பும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கவும் வேண்டிய வரத்தை அவர்களக்குத் தர வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்குப் புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களைக் கண்டு கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ளத் தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருள வேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF

Wednesday, January 1, 2025

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா 

 இன்றைய நற்செய்தி வாசகங்கள்:

1.ஏசாயா 60: 1-6.
எபேசியர் 3: 2-3, 5-6.
மத்தேயு 2:1-12 

திருப்பலி முன்னுரை :

இறைமகன் இயேசு கிறிஸ்துவிற்குப் பிரியமானவர்களே! 

நமக்காகக் பிறந்த கோமகனின் திருக்காட்சியைக் காண நெஞ்சமெல்லாம் நிறைந்த மகிழ்ச்சியுடன் ஆலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம். 

மூன்று ஞானிகள் என்ற இந்த மூவரும் பல கோடி மக்களின் மனங்களில் தாக்கங்களை உருவாக்கியிருக்கிறார்கள்; முக்கியமாக, இறைவனைத் தேடும் தாகத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த ஒரு காரணம் போதும், இவர்களுக்கு விழா எடுப்பதற்கு. 

இன்று நாம் கொண்டாடும் மூன்று ஞானிகள் திருநாள், இறைவன் தன்னை அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்திய திருக்காட்சிப் பெருவிழா எனக் கொண்டாடப்படுகிறது. இறைவன் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடிவந்த யூத குலத்தவருக்கு இந்தத் திருநாளும், இதில் பொதிந்திருக்கும் உண்மையும் அதிர்ச்சியைத் தந்திருக்கும். வானதூதர்கள் வழியாக, எரியும் புதர் வழியாக தங்களுக்கு மட்டுமே தோன்றிய இறைவன், இன்று பிற இனத்தவருக்கும் தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதே அக்கருத்து ஆகும். இறைவன் அனைத்து மக்களுக்கும் பொதுவானவர். இந்த இறைவனைப் பங்குபோட்டு, பிரித்து, அதனால், மக்களையும் பிரிக்கும் பல எண்ணங்கள் தவறானவை என்பதைச் சுட்டிக்காட்டும் விழா இந்தத் திருக்காட்சித் திருநாள். 

உண்மையான விண்மீன்களை அடையாளம் கண்டதால், அந்த விண்மீன் காட்டிய பாதையில் சென்று, இறைவனைக் கண்டதால், தங்கள் வாழ்க்கைப் பாதையையே மாற்றிய ஞானிகளைப் போல், தடைகள் பல எழுந்தாலும், தளராமல், உன்னத குறிக்கோள்களான விண்மீன்களைத் தொடர்ந்து, இறைவனைக் காண்பதற்கு, இன்றையத் திருப்பலியில் முயல்வோம். 

 வாசக முன்னுரை :

முதல் வாசக முன்னுரை :

இறைவாக்கினர் எசாயா இன்றைய முதல் வாசகத்தில் மெசியா வருகையின்போது எருசலேம் நகரில் நடைபெறும் நிகழ்வுகளை இங்கே அழகாகப் பதிவுச் செய்கிறார். கடவுளின் மாட்சிமை ஒளியைக் கண்டு பிற இனத்தவர்கள் அந்த ஒளியைத் தேடிவருவார்கள். செல்வங்கள் தேடிவரும். அவர்களைக் கண்டு எருசலேம் நகர் அகமகிழ்ந்திடும். அவர்கள் கடவுளைப் புகழ் பாடுவார்கள் என்று முன்னுரைத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். 

பதிலுரைப்பாடல் :

பல்லவி: ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள் . 

திருப்பாடல் 72: 1-2,7-8,10-11,12-13. 

கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! பல்லவி . 

அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லைவரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி 

தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாலவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி 

தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி 

இரண்டாம் வாசக முன்னுரை 

திருத்தூதர் பவுலடியார் இன்றைய இரண்டாம் வாசகத்தில் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளைப் பற்றி எடுத்துரைக்கின்றார். நற்செய்தியின் வழியாகப் பிற இனத்தாரும் இயேசுகிறிஸ்துவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும் வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்று இயம்பும் இக்கருத்தினைக் கவனமுடன் செவிமெடுப்போம். 

 நற்செய்திக்கு முன் வாழ்த்தோலி:

அல்லேலுயா. அல்லேலுயா ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம் . அல்லேலுயா 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1.எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா! உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

 2.உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா! நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப் போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்தில் உள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள் உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

3.எமைப் படைத்து ஆளும் எம்தலைவா! பொருளாதார மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துப் பொதுநலம் காத்திடவும், வறட்சியாலும், புயல்களாலும் நாள்தோறும் அவதிக்குள்ளாகிய விவசாயப் பெருமக்களுக்கு வேண்டிய உதவிகள் விரைவில் அவர்களுக்கு முழுமையாகச் சென்று அடையவும், அவர்களின் அகால மரணங்கள் தடுக்கப்படவும், மீண்டும் அவர்கள் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்பிட உம் வரங்களை அருள்மாரிப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

4.எமைப் படைத்து ஆளும் எம் இறைவா! வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம். 

5. அன்பு இறைவா! எங்கள் அருகில் உள்ள ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், உடல நலம் குன்றியோர் ஆகியோரை ஆதரித்து அவர்களுக்கு உமது அன்பையும், இரக்கத்தையும் நாங்கள் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.