பொதுக்காலம் ஆண்டின் மூன்றாம் ஞாயிறு
இன்றைய நற்செய்தி வாசகங்கள்.
நெகேமியா 8:2-6,8-10கொரிந்தியர் 12:12-30
லூக்கா 1:1-4,14-21
திருப்பலி முன்னுரை:
இறைமகன் இயேசுவின் அன்பிற்கு இனியவர்களே! அன்பு வாழ்த்துக்கள். இன்று ஆண்டின் மூன்றாம் ஞாயிறு. இயேசுவின் முதல் அறிக்கை! அவரின் பொதுவாழ்வில் தனது பணி என்ன? அஃது எப்படிப்பட்டதாக இருக்கும்? தான் யாருக்காகத் தரணிக்கு வந்தார்? என்னவெல்லாம் நடக்கும் என்பதை இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு வழியாக வெளிப்படுத்துகிறார். அவர் திருமுழுக்குப் பெற்றுத் தூயஆவியாரின் வல்லமையால் அதிகாரத்தெனியுடன் இறையரசை அறிவிக்கும் பணியின் தொடக்க நிகழ்வுகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.இன்றைய முதல் வாசகம் கூறும் இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப் போகிறது. அந்த 'ஆண்டவரின் மகிழ்வு' இன்று நம்மிடையே இருக்கின்றதா? திருஅவையின் உறுப்பினர்கள் பலராக இருந்தாலும், அவர்களை ஒன்றிணைப்பது தூயஆவியாரும், அவரின் கொடைகளுமே என்று சொல்லும் பவுலடியார் வார்த்தைகளையும் நம் மனத்தில் பதிவுச்செய்து சிந்தித்து நம் வாழ்வில் மாற்றங்களைக் காண இன்றைய திருப்பலிக் கொண்டாடத்தில் முழு உள்ளத்தோடு கலந்து கொண்டு மன்றாடுவோம். வாரீர்.
வாசகமுன்னுரை:
முதல் வாசகமுன்னுரை:
இன்றைய முதல் வாசகத்தில் பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பின் எருசலேம் வந்த மக்கள் அழிந்த ஆலயத்தை நெகேமியா தலைமையில் மீண்டும் கட்டி எழுப்பினர். எஸ்ரா என்னும் திருச்சட்ட வல்லுநர், மோசேயின் சட்டத்தை மக்கள் கடைப்பிடிக்கும் பழக்கத்தைப் புதுப்பித்தார். ஆண்டவர் நம் காதுகளில் விழும் வார்த்தையாக மாறிவிட்டார் என்று ஆண்டவர் உடனிருப்பை உணர்ந்ததால் அழுகின்றனர்! இன்றைய வாசகத்தில் வரும் நிகழ்ச்சி, திருப்பலியில் வரும் இறைவார்த்தை வழிபாட்டின் எதிரொலியாகவும் நமதாண்டவர் நாசரேத்தூர் செபக் கூடத்தில் ஏட்டுச் சுருளை வாசிந்து விளக்கம் அறித்ததன் பின்னணி ஆகவும் அமைந்துள்ளது. ஆண்டவரின் மகிழ்வு அவர்களிடையே இருந்ததை அவர்கள் உணர்ந்தது போல நாமும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுத்து ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து கொள்வோம்.இரண்டாம் வாசக முன்னுரை
இன்றைய இரண்டாம் வாசகத்தில் அருட்கொடைகள் வெளிப்படும் வகையிலும் அவற்றின் செயல்முறையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் அனைத்து வரங்களும் ஒரே தெய்வீக ஊற்றிலிருந்தே பிறக்கின்றன, திருச்சபையின் பொது நன்மைக்காகவே இவை அளிக்கப்படுகின்றன என்பதை பவுல் நாம் கிறிஸ்துவின் உடல் உவமை வழியாகத் தெளிவுபடுத்துவதை கவனமுடன் மனம் திறந்துக் கேட்போம்.பதிலுரைப் பாடல்
திபா 19: 7. 8. 9. 14பல்லவி: ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி:
அல்லேலூயா, அல்லேலூயா! ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர் என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
1. நலம் தரும் யூபிலி ஆண்டைக் கொண்டாடும் திரு அவை, “ஆண்டவரின் மகிழ்வே நமது வலிமை'' என்கிற நெகேமியாவின் சொல்படி நடந்து, ஆண்டவரை மகிழ்விக்கும் ஒரு வாழ்வை மேற்கொள்ளவும், திருத்தத்தை, ஆயர் பெருமக்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் ஆகிய அனைவருமே, இறைவழியில் உறுதியுடன் பயணிக்கவும், அருள்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்2. “உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாய் இருப்பதுபோல” எனத் தொடங்கும் இரண்டாம் வாசகத்தின் பொருளை உணர்ந்தவர்களாய், நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடும் நாம் அனைவரும், மொழி, இன, மத பேதமின்றி, ஒருதாய் மக்களாய் வாழ்ந்திடவும், அரசியல் தலைவர்களும், குடிமக்களும், மக்களால், மக்களுக்காகவே செயல்படுவது தான் உண்மையான குடியரசு என்றுணர்ந்து வாழவும் அருள்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்க” நாசரேத்து தொழுகை கூடத்தில் தோன்றிய இயேசு, இன்றும் நம் மத்தியில் தங்கி, எளியோருக்கு நற்செய்தியும், பிணியுற்றோருக்கு உடல் நலமும், சிறைப்பட்டோர்க்கு உரிமை வாழ்வும் வழங்க வல்லவர் என்கிற நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் நிறைந்திடவும், இத்தகு நலம்தரும் நற்செய்திப் பணிகளை ஆற்றும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. “ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது” என்கிற திருப்பாடல் வரிகளை தியானப் பாடலாக ஜெபித்ததோடு நில்லாமல், இங்கே கூடியுள்ள நாம் அனைவரும், ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூய்து என்பதை உணர்ந்தவர்களாய் “என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்” என்கிற விதத்தில் வாழ்க்கையை நகர்த்திட அருள்பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
No comments:
Post a Comment