Monday, October 6, 2025

பொதுக்‌ காலம்‌ 28ஆம்‌ ஞாயிறு

 பொதுக்‌ காலம்‌ 28ஆம்‌ ஞாயிறு

இன்றைய நற்செய்தி வாசகங்கள்

2அரசர்கள் 6:14-17
2திமோத்தேயு 2:8-13
லூக்கா 17:11-19

திருப்பலி முன்னுரை

அன்பு உள்ளங்களே ! நாம்‌ இறைவனிடம்‌ பெற்ற நன்மைகளுக்கு நன்றி கூறவும்‌, இறைவனுக்கு என்றும்‌ நன்றியுள்ளவர்களாக வாழவும்‌ பொதுக்காலம்‌ 28 ஆம்‌ ஞாயிறுத்‌ திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
நன்றியுணர்வு என்பது ஆழமான இறைநம்பிக்கையின்‌ அடையாளம்‌. அது அனைத்து நன்மைகளும்‌ இறைவனிடமிருந்தே வருகின்றன என்னும்‌ உறுதியைத்‌ தருகின்றது. மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிப்படைத்‌ தகுதி நன்றி நிறைந்த உள்ளம்தான்‌. நமக்குக்‌ கிடைத்த நிறைய நலன்களையும்‌ கொடைகளையும்‌ பற்றி எண்ணாமல்‌, கிடைக்காத ஒரு சிலவற்றை நினைத்துக்‌ கவலைப்பட்டுக்‌ கொண்டிருக்கிறோம்‌. நன்மைகளை எண்ணிப்‌ பாருங்கள்‌ (Count your Blessings) என்பது ஓர்‌ அழகான ஆங்கிலச்‌ சொற்றொடர்‌. தொழுநோயிலிருந்து குணம்‌ பெற்ற நாமான்‌, எலிசாவுக்கு நன்றி சொல்லிக் கைம்மாறு செய்ய வருவதை இன்றைய முதல்‌ வாசகத்திலும்‌, இயேசுவால்‌ குணம்‌ பெற்ற பத்து தொழுநோயாளருள்‌ சமாரியர்‌ ஒருவர்‌ மட்டுமே வந்து நன்றி சொல்வதை இன்றைய நற்செய்தி வாசகத்திலும்‌ வாசிக்கிறோம்‌.
நாம்‌ இதுவரைப்‌ பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு என்றும்‌ நன்றி கூறும்‌ உள்ளத்தை நமக்குத்‌ தந்திட மன்றாடி இத்திருப்பலியில்‌ பங்கேற்போம்‌.

முதல்‌ வாசக முன்னுரை: 

எலிசாவின் வாக்கிற்கு இணங்கி, தனது வேலைக்காரனின் வேண்டுதலின் பேரில் சிரியா நாட்டு அரசனின் படைத்தலைவனான நாமான் யோர்தான் ஆற்றில் ழுழ்கித் தன் தொழுநோயிலிருந்து விடுதலைப் பெற்றான். வேற்றினத்தவரான நாமான் யாவே ஒருவரே கடவுள். உண்மையின் கடவுள் என்று நம்பினான். எது உண்மை? பலி அல்ல. கீழ்படிதலே சிறந்தது எனக் கூறும் இரண்டு அரசர்கள் நூலிலிருந்து எடுக்கப்பட இம்முதல் வாசகத்திற்கு உள்ளம் திறந்துச் செவிமெடுப்போம்.

பதிலுரைப்பாடல்

பல்லவி: ஆண்டவர் தம் மீட்பை மக்களினத்தார் காண வெளிப்படுத்தினார்.
திருப்பாடல் 98: 1. 2-3-4
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. பல்லவி
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண் முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். பல்லவி
உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். பல்லவி

இரண்டாம்‌ வாசக முன்னுரை: 

இன்றைய இரண்டாவது வாசகத்தில்," இயேசுகிறிஸ்து தாவீதின் வழி வித்து எனவும், இறந்த இயேசுகிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார்” என்பது தனது நற்செய்தியென அறிவிக்கிறார். எனவே தன் வேதனைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் இயேசுகிறிஸ்துவுக்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் புனித பவுலடியாரின் மனநிலை நமக்குள் நிலைக்கவும், இயேசுகிறிஸ்துவின் போதனைகளை எவராலும் ஒருபோதும் சிறைபடுத்த முடியாது என்பதையும் உணர்ந்தவர்களாய் திமொத்தேயுவுக்கு எமுதிய இரண்டாவது திருமுகத்திலிருந்து வரும் வாசகத்திற்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

நற்செய்திக்கு முன்‌ வாழ்த்தொலி:

அல்லேலூயா, அல்லேலூயா! எல்லாச்‌ சூழ்நிலையிலும்‌ நன்றி கூறுங்கள்‌. உங்களுக்காகக்‌ கிறிஸ்து இயேசு வழியாய்க்‌ கடவுள்‌ வெளிப்படுத்திய திருவுளம்‌ இதுவே. அல்லேலூயா. 

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:

1. “தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மீட்பையும், அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும், கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு”, திருஅவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை லியோ, ஆயர் பெருமக்கள், குருகுலத்தார், துறவறத்தார் ஆகியோரும், பொதுநிலையினராகிய நாங்களும், மக்களினத்தார் காண, எம்சொல்லாலும், செயலாலும், வாழ்வாலும், உமது மீட்பினை பறைசாற்றிட அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. வேற்று நாட்டையும் இனத்தையும் சார்ந்த நாமானின் நோயைக் குணமாக்கி, “உலகெங்குமுள்ள அனைவரும் கடவுள் அருளிய விடுதலையைக்” காணச்செய்த இறைவா! உலகாளும் தலைவர்களும், எம்நாட்டினை ஆள்வோரும், அனைத்துலக மக்களும், இன, மத, மொழி வேறுபாடின்றி, அனைவரையும் ஏற்று வாழவும், பகைமைக்கு இடம் தராமல், ஒன்றுபட்ட மானுடத்தை உருவாக்க உழைக்கவும் வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. “நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சி செய்வோம்” என்கிற நம்பிக்கையில், திருமுழுக்கு பெற்றுள்ள அனைவரும், இறைவனுக்கு ஏற்ற வாழ்வு வாழவும், வாழ்க்கையின் முடிவில் விண்ணக பேற்றினை அடையவும், எம்குடும்பங்களிலும், திரு அவையிலும் வாழ்ந்து மரித்த அனைவரும், நிலைவாழ்வின் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றும், இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. கடவுளைப் போற்றிப் புகழவும், பெற்ற நன்மைக்கு நன்றி கூறவும் மனமில்லாதவர்களைக் கண்டு வருந்திய இறைவா! நன்றி மறந்தோரையும், நன்மைக்குப் பதில் தீமை செய்வோரையும், உமக்கும், பிறருக்கும், குறிப்பாக எங்களை வாழ்வில் உயர்த்திய பெற்றோர், பெரியோர், ஆசிரிய பெருமக்கள் போன்றோருக்கும் நன்றி மறந்த எங்களையும், நீர் மன்னித்தருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.       
5. இங்கே கூடியுள்ள நாங்கள் அனைவரும், “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” என்கிற பவுலடியாரின் அறிவுரைப்படி, எல்லா காலத்திலும், உமக்கும் பிறர்க்கும், நன்றியுள்ளவர்களாய் வாழவும், துன்பத்திலும் துயரத்திலும் மட்டுமே உம்மை நினைவு கூர்ந்து, உம்மிடம் ஓடி வருபவராய் இல்லாமல், எங்கள் வெற்றிகளிலும், மகிழ்ச்சியான தருணங்களிலும், ‘நன்மைகள் அனைத்தின் ஊற்றும் நீரே’ என்பதை உணர்ந்து, நன்றியுணர்வுடன் வாழ அருள்தர வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.