Monday, January 7, 2019

ஆண்டவரின் திருமுழுக்கு விழா

 

*ஆண்டவரின் திருமுழுக்கு விழா*



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*


எசாயா 40:1-5,9-11
தீத்து. 2:11-14,3:4-7
லூக்கா 3: 15-16,21-22

*திருப்பலி முன்னுரை*


ஆண்டின் பொதுக்காலம் முதல் ஞாயிறு. இறைமகனின் திருமுழுக்குப் பெருவிழா. திருமுழுக்கின் மகிமையை அறிந்துகொள்ள இத்திருப்பலிக்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறோம்.

இயேசுவின் திருமுழுக்கு அவருடைய மூன்று ஆண்டுப் பொதுப்பணியின் தொடக்கமாகவும் / அவரது முப்பது ஆண்டுகாலத் தனி வாழ்விலிருந்து மானிடரின் மீட்புத் திட்டத்திற்குத் தம்மைத் தயார்படுத்தியுள்ள நிகழ்ச்சியாகவும் / அவரது திருமுழுக்கு அமைகிறது. இறைமகன் இயேசு கிறிஸ்து பெற்ற திருமுழுக்கு/ நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவூட்டுகிறது. திருமுழுக்கு வழியாக நாம் கடவுளின் ஆலயங்களாக மாற்றப்பட்டுள்ளோம். கடவுளின் பிள்ளைகள் என்ற அடையாளம் நமக்குத் தரப்பட்டுள்ளது. நாமும் இயேசுவைப் போல/ நம் துன்பங்களின் மத்தியிலும் கடவுளின் திருவுளத்தை அறிந்து / அதை நிறைவேற்றிக் கடவுளைப் பூரிப்படையச் செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்.

திருமுழுக்குப் பெற்ற நாம் / இன்று அதை வெறும் சடங்காகப் பாராமல் / திருமுழுக்கின் வெளிப்பாடுகளை உணர்ந்து அதனை நடைமுறைப்படுத்த முயலுகிறோமா என்ற கேள்விகுறி நம் உள்ளத்தில் எதிரொலிக்கின்றது. திருமுழுக்கின் முலம் இறைவனின் பிள்ளைகளான நாம் / அதை நம் பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் இப்பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு / இறையருளையும் / இரக்கத்தையும் / தூயஆவியின் ஆற்றலையும் பெற மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:



*முதல் வாசகமுன்னுரை*


இன்றைய முதல் வாசகத்தில் ஏசாயா மூலமாக கடவுளின் அன்பு கட்டளைகளுக்கு வாழ மறுத்து அந்நியநாடுகளில் ஊதாரியாக அலைந்து திரிந்த மக்களுக்கு கடவுள் புது வாழ்வை அறிவிக்கின்றார். மன்னிப்பும் வழங்குகிறார். அவர் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டார். உங்களை மீண்டும் கூட்டிச் சேர்ப்பார் என ஆறுதல் மொழிகளைத் தருகிறார்.  இறைவனின் இரக்கமும் அன்பும் நிறைந்த இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசகமுன்னுரை*


இன்றைய இரண்டாம் வாசகத்தில் இயேசு நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார். நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,  தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும், புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார் என்ற இறைஇயேசுவின் இரக்கத்தை பதிவுச் செய்யும் திருத்தூதரின் பவுல் தீத்துவுக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம்.

*பதிலுரைப் பாடல்*


திபா 104: 1-2. 3-4. 24-25. 27-28. 29-30
*பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!*

1. என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். *-பல்லவி*

2. நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்; கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில் பவனி வருகின்றவர்! காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். *-பல்லவி*

3. ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது.
இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில் சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன. *-பல்லவி*

4. தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே நம்பியிருக்கின்றன. நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. *-பல்லவி*

5. நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;  மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -*பல்லவி*

 

*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*


அல்லேலூயா, அல்லேலூயா! *“என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்''* அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின்  மன்றாட்டுகள்*


1. நலம் தரும் புத்தாண்டை அளித்த எம் இரக்கத்தின் தந்தையே இறைவா! திருமுழுக்கு வழியாக  உமது பிள்ளைகளாக்கிய எம் திருத்தந்தை, ஆயர்கள், துறவரத்தார், பொதுநிலையினர் அனைவரின் மேல் உம் கருணைக் கண்களை திருப்பியருளும். தூய ஆவியால் நிறைவுப் பெற்ற இத்திருஅவை  இறையச்சத்திலும், ஞானத்திலும், தன்னலமற்ற சேவையிலும் தலை சிறந்து விளங்க உமது அருளைப் பொழியுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அஞ்சாதே என்று வாழ்த்தி புத்துயிர் தந்த எம் கனிவான தந்தையே எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் திருமுழுக்கின் வழியாக நாங்கள் பெற்றுக் கொண்ட அருங்கொடைகளை உணர்ந்த உம் வார்த்தைகளின்படி வாழ்க்கை நடத்தவும், வரும் தீமைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும்  விடுதலைப் பெற்றிட வேண்டிய வரத்தை எமக்கு அளித்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. புதுயுகம் படைத்திட உம் துணையாளரை எமக்கு அளித்த தந்தையே இறைவா! எம் அரசியல் தலைவர்கள் , அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் தன்னலமற்ற சேவையாலும்,  மதம், இனம், மொழி, என்ற பாகுபாடு இல்லாமல் தங்கள் பணிகளை செய்து நீர் விரும்பும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும்  வேண்டிய வரத்தை அவர்களக்குத் தரவேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எமக்கு மன்னிப்பு அளித்து எமக்கு புதுவாழ்வை வாக்களித்த தந்தையே இறைவா! எம் இளைய சமுதாயம் தனது வாலிப நாட்களில் நீர் தரும் நலன்களை கண்டுக் கொண்டு அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள தூயஆவியானவரின் அருங்கொடைகளை அபரிமிதமாகப் பொழிந்தருளவேண்டும் என்ற இறைவா உம்மை மன்றாடுகிறோம்.  


No comments:

Post a Comment