Monday, June 3, 2019

தூய ஆவியாரின் பெருவிழா 09/06/2019



தூய ஆவியாரின் பெருவிழா



*இன்றைய நற்செய்தி வாசகங்கள்.*


திருத்தூதர் பணிகள் 2: 1-11
உரோமையர் 8:8-17
யோவான் 14:15-16,23-26

*திருப்பலி முன்னுரை*:


அன்புச் சகோதரச் சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுவின் துணையாளராம் தூய ஆவியாரின் பெருவிழாவைக் கொண்டாட அன்று மாடியில் கூடியிருந்தத் திருத்தூதர்கள் போல நம் ஆலயத்தில் ஒன்றிணைந்து ஆவலுடன் திருப்பலியில் பங்கேற்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் பெயரால் அன்பு வாழ்த்துக்கள்!
மரியாளோடு ஒரு மனத்தோடுகூடிச் செபிக்கும்வேளையில் துணையாளராம் தூய ஆவியின் அருட்பொழிவைப் பெற்றுக்கொண்டனர் சீடர்கள். பல வல்லசெயல்கள் அரங்கேறியது. கூடியிருந்த மக்கள் தத்தம் மொழிகளில் சீடர்கள் பேசியதைக் கேட்டு வியப்பில் ஆழ்ந்தனர். புதிய ஆற்றல் பெற்றுப் புதுபொலிவுடன் பயம் தெளிந்தச் சீடர்கள் இறையரசை அறிவிக்க உலகெங்கும் புறப்பட்டுச் சென்றார்கள்.
தூய ஆவியானவரின் வருகை நமக்குச் சொல்வது இதுதான். தூய ஆவியானவர் நம்மைத் தழுவிக்கொடுக்கும் தென்றல் அல்ல. மாறாக அவர் நம்மை வாரிச் சுருட்டும் சூறாவளி. தூய ஆவியார் நம்முள் செயல்படும்போது பழையனக் கழிகின்றன. புதியனப் புகுகின்றன. எனவே தாவீது அரசர் "கடவுளே புதுப்பிக்கும் ஆவியை என்னுள் உருவாக்கி அருளும்" என்று மன்றாடியது போல் நாமும் அவற்றைப் பெற இன்றைய திருப்பலிக் கொண்டாடங்களில் தந்தையிடம் மன்றாடுவோம்.

*வாசக முன்னுரை*:



*முதல் வாசக முன்னுரை*:

இன்றைய வாசகத்தில் திருத்தூதர்கள் தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்குப் பின் இரண்டு நிலைகளில் துணிச்சல் பெறுகின்றனர்: 1. அவர்களின் நாக் கட்டவிழ்க்கப்படுகிறது.  2. அவர்களின் இல்லக் கதவுகள் திறக்கப்படுகின்றன. இதுவரை கோழையாக அறைக்குள் அடைந்து கிடந்த திருதூதர்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பிப் பெற்று வீரர்களாக வீதிக்கு வருகின்றனர். துணிச்சலோடும், கொள்கைப்பிடிப்போடும் இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். அயல் மொழிகளில் பேசினர். இந்தத் துணிச்சலை  நாம் பெற அழைக்கும் இந்த முதல் வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.

*இரண்டாம் வாசக முன்னுரை*:

  இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல என்றும் கிறிஸ்துவின் ஆவியில் உண்மையில் இயக்கப்படுபவர்களே கிறிஸ்தவர்கள் என்றும் அறிவுறுத்துகிறார்.ஆவியைப் பெற்றிருந்தால் மட்டுமே உருவர் கடவுளின் பிள்ளை என அழைக்கப்பட முடியும் . எனவே, அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை விடுத்துக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையைப் பெற நமக்கு உறுதுணையாக இருப்பவர் தூய ஆவியார் என்று விளக்கமளிக்கும் வாசகத்தைக் கவனமுடன் கேட்போம்.

*பதிலுரைப் பாடல்*

திபா 104: 1,24. 29-30. 31,34

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! -பல்லவி

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;
மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். -பல்லவி

ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக!
நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். -பல்லவி


****தொடர் பாடல்* பாடல் இசையுடன்****


தொடர் பாடல்

 
தூய ஆவியே, எழுந்தருள்வீர்,
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.


*நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி*

அல்லேலூயா, அல்லேலூயா! *தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும்.* அல்லேலூயா.

*நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்*:


பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

 1.நாங்கள் செல்லும் இடமெல்லாமெம்மோடு பயணிக்கும் எம் இறைவா! திருஅவையின் அங்கத்தினர் அனைவரும் நீ தந்தத் தூய ஆவியால் தீமைகளை எரித்திடும் சுடராய், இருளகற்றி ஒளியுட்டு நன்மைப் பயக்கும் சுடராய், எம் பாதைக்கு வழிகாட்டும் அகல்விளக்காய், அமைதியின் ஒளிச்சுடராம் இயேசுவின் இறையரசை அறிவிக்கும் தீபங்களாய் இவ்வுலகில் அவரின் விழுமியங்களை வாழ்ந்துக் காட்டிடும் சீடர்களாய் நாங்கள் இருக்கத் தேவையான ஆற்றலை நிறைவாகப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா! உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

2.உம் பேரருளால் எம்மை வழிநடத்தும் எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் தூயஆவியை எழுந்தருள் செய்யும். எங்களை உருக்கித் துரு நீக்கி எங்களை உருமாற்றும். இயேசுவின் திருவுருவை எங்களின் உள்ளத்தில் உருவாக்கும். எம்மை ஆவியின் அக்னியால் நிரப்பும். அவரின் வரங்களாலும், கொடைகளாலும், கனிகளாலும் எங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அருட்பொழிவு செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

3. சாவின் இருள் சூழ்ப் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தால் எம்மைப் பாதுக்காக்கும் இறைவா! எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

4. எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா! தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!

5. உமது ஆவியானவரால் எம்மைப் பலப்படுத்திய அன்பு இறைவா! நீரின்றித் தவிக்கும் எங்களைக் கண்நோக்கும். விரைவில் நல்ல மழையைப் பெறவும், குடிநீர் பிரச்சனை நீங்கவு, விவசாயப் பெருமக்கள் மகிழ்வுடன் தங்கள் தொழிலைச் சிறப்புடன் செய்யவும், தவிக்கவிடப்பட்டோர் நலமம் வளமும் பெற்ற இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பதில்: ஏற்றருளும் இறைவா எம் மன்றாட்டை!


www.anbinmadal.org

 

4 comments: