Wednesday, November 6, 2019

பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு

 பொதுக்காலம் ஆண்டின் 32ஆம் ஞாயிறு



இன்றைய நற்செய்தி வாசகங்கள்

 

2மக்கபேயர் 7:1-2,9-14
2 தெசலோனிக்கர் 2:16-3:5
லூக்கா 20:27-38

திருப்பலி முன்னுரை

 

திருவழிப்பாட்டின் பொதுக்காலம் 32ஆம் ஞாயிறுத் திருப்பலியைச் சிறப்பிக்க மறுவாழ்வை எதிர்நோக்கியிருக்கும் சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவரையும் இயேசுவின் அன்பில் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறோம்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு, மறுவாழ்வு பற்றிய சீரியக் கருத்துகளை நம் முன் வைக்கின்றது. கடந்த இரு வார வாசகங்களில் பரிசேயர்களைப் பற்றியும், வரிதண்டுபவர் பற்றியும் அறிந்த நமக்கு, இன்று சதுசேயர்களின் கேள்விகள் மூலம் உயிர்தெழுதலைப் பற்றியும், மறூலக வாழ்வைப் பற்றியும் இயேசு நலாசானாகப் போதிக்கின்றார்.

இவ்வுலக வாழ்வில் திருமணம் - பிள்ளைபேறு இவை உண்டு. ஆனால் மறுமையில் அங்கே உறவுகள் இல்லை. அனைவரும் இறைவனில் ஒன்றே. அங்கே கொடுப்பதுமில்லை. வாங்குவதுமில்லை. அங்கு அனைவரும் சமம் என்பதைப் பதிவு செய்கின்றார். இவ்வுலக வாழ்வின் அடிதளமே நமது மறுமையின் அளவுகோல். எனவே இவ்வுலகில் வாழும்போதே அறச்செயல்களினால் மறுமைவாழ்வின் மேன்மைக்கு அடிதளமிடுபோம். நாம் வாழ்வோரின் கடவுளைக் கொண்டுள்ளோம் நம் நிலைவாழ்வில் என்பதை உள்ளத்தில் பதிவு செய்துகொள்வோம்.

உயிர்த்தெழுதலும், வாழ்வு நானே என்ற இயேசுவிடம் மறு உலகில் நிலைவாழ்வைப் பெற்றிட உருக்கமுடன் வேண்டி இத்திருப்பலியில் பங்குகொள்வோம்.


வாசகமுன்னுரை


முதல் வாசக முன்னுரை


உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் அடிப்படையில் தான் அன்று யூத வீரத்தாயும், அவரது ஏழு மகன்களும் பன்றி இறைச்சியை உண்ண மறுத்துத் தாங்கள் சாகத் தயங்கவில்லை. இரண்டாவது மகன் பலியாகுமுன் இறந்தபின், என்றென்றும் வாழும் அனைத்துலக அரசர் எங்களை உயிர்த்தெழச் செய்வார் என்று வீர முழக்கமிட்டு மடிந்ததைப் பதிவுச் செய்யும் மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வரும் இவ்வாசகத்திற்குச் செவிமெடுப்போம்.


*இரண்டாம் வாசக முன்னுரை*


ஆண்டவரின் மீது நம்பிக்கைக் கொண்ட நாம் நல்லதையே சொல்லவும், செய்யவும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று பவுலடியா நம்மை ஊக்கப்படுத்துகின்றார். நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை. ஆகால் ஆணடவர் நம்பிக்கைக்குரியவர். கடவுளின் அன்பும், கிறிஸ்துவின் மனஉறுதியும் நம்மிடையே இருக்கவேண்டும் என்று ஆவலாய் வேண்டும் தூய பவுலடியாரின் வார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம்.

 பதிலுரைப்பாடல்

திருப்பாடல்17: 1, 5-6, 8, 15
விழித்தெழும்போது, ஆண்டவரே உம் உருவம் கண்டு நிறைவடைவேன்.


ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.  பல்லவி

என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவி சாய்த்தருளும். பல்லவி
உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன்.   பல்லவி

நற்செய்திக்க முன் வாழ்த்தொலி:-

அல்லேலூயா அல்லேலூயா! கிறிஸ்துவே இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர் .இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன.. அல்லேலூயா.


நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்



1. ஆதியும் அந்தமும் ஆன எம் இறைவா! இன்றைய காலக்கட்டத்தில் திருச்சபையில் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்நிலைச் சார்ந்த அனைவரும் எதிர்கொள்ளும், பிரச்சினைகளால் உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வேதனையுறும் எம் அருள்நிலைத் தலைவர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாரி வழங்கிப் பாதுகாத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களைக் காத்துப் பராமரித்து வரும் அன்பு தெய்வமே இறைவா! இன்றைய சூழலில் மதவாத அரசியல் மறைந்து மனிதநேயமும் உமது விழுமியங்களாகிய அன்பு, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம், நீதி, நேர்மையான உழைப்பு ஆகியவற்றை எம் ஆட்சியாளர்களும், மக்களும் உணர்ந்த வாழும் நிலையை அடையத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்

3. எங்களை நீதியுடன் வழிநடத்தும் வெற்றி வேந்தனே! இன்றைய சமூகத்தில் காணப்படும் வேறுபாடுகள் நீங்கிச் சோம்பித் திரியாமல் எங்கள் கடின உழைப்பின் மூலம் குடும்பங்களின் வாழ்வு மலரவும், எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் நல்லவராய் வாழ்ந்துத் தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்ட உமக்குரியவர்களாக வேண்டிய வரங்களைத் தரும்படியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4இளையோரின் ஆற்றலே எம் இறைவா! இளையோர் திருச்சபைக்காகத் திருச்சபை இளையோருக்காக என்ற வார்த்தைக்கு இணங்க இளைமையில் இறைவனைத் தேட, தேவையான ஞானத்தை நிறைவாகப் பொழிந்து, அவர்கள் ஆன்மீக வாழ்விலும் சமூகத்தின் அனைத்து நிலையிலும் மாண்பிலும், மகத்துவத்திலும் சிறந்த விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. நிறைவாழ்வை வழங்கிய எம் இறைவா எம் குடும்பங்களில் உள்ள முதியேவர்கள் தனிமைபடுத்தப்பட்டு, சுதந்திர இழந்து அகதிகளாக அவர்கள் படும் வேதனைகளை, உம் பார்வையினால் அவர்களின் வாழ்வுத் துலங்கவும் ஊதியம் இல்லாத வேலைக்காரர்களாக அவர்களைப் பயன்படுத்தும் அவலநிலை மாறி, அவர்கள் அமைதியோடும், நிம்மதியோடும் உம் திருஇல்லம் வந்து சேரத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment