Wednesday, December 25, 2019

திருக்குடும்பப் பெருவிழா - முதல் ஆண்டு


திருக்குடும்பப் பெருவிழா  - முதல் ஆண்டு


இன்றைய நற்செய்தி வாசகங்கள்.



சீராக் ஞானம் 3:2-7,12-14
கொலோசையர் 3:12-21
மத்தேயு 2:13-15,19-23

திருப்பலி முன்னுரை:


குடும்பம் ஒரு கோவில். அதில் கணவனும் மனைவியும் தீபங்கள். அந்தத் தீபத்தின் ஒளிதான் குழந்தைகள். இவ்வாறு அனைவரும் ஒன்றுபட்டு ஒளிமயமான வாழ்வை உருவாக்க, நமக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகத் திருக்குடும்பம் அமைந்திருக்கிறது. குழந்தை என்னும் பயிர் வளமாக வளர வேண்டுமென்றால் அதன் விளைநிலமான குடும்பம் உருப்படியாக இருக்க வேண்டும். அன்பினால் கட்டப்பட்டதாக இருக்கவேண்டும். அங்கே துன்பத்தைப் பகிரும்போது பாதியாகும். இன்பத்தைப் பகிரும்போது மிகுதியாகும். இயேசு மரியா யோசேப்பு வாழ்ந்தக் குடும்பம், இயற்கை அமைத்த அற்புதக் குடும்பம். எனவே நமது குடும்ப வாழ்வை இன்றைய இறைவார்த்தையின் ஒளியில் சிந்திப்போம்.

கணவன் மனைவி பிள்ளைகள் என்ற மூன்று சக்திகளும் அன்பில் சங்கமிக்கும் ஆலயம். அந்தச் சக்தியை உற்பத்திச் செய்கிறவர் இயேசுகிறிஸ்துவே. வசதிகளையும் செல்வங்களையும் சேர்ப்பது அல்ல. மாறாகப் பாசங்களையும், உறவுகளையும் சேர்ப்பதுதான் குடும்பம். இதற்கு அடிப்படைத் தேவை ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ளுதல், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, இரங்கும் உள்ளம். இத்தகைய உயரியப் பண்புகளை நம் உள்ளத்தில் கொண்டு நம் குடும்ப வாழ்வைத் தொடர இத் திருக்குடும்பப் பெருவிழாத் திருப்பலிக் கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு இறையருளையும் இரக்கத்தையும் மன்றாடுவோம்.


வாசகமுன்னுரை:



இன்றைய முதல் வாசகம் குடும்பத்தின் ஓர் அங்கமாகிய பிள்ளைகள் தங்கள் வயதானப் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டுமென்று கூறுகிறது. "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற தமிழ் மரபு, "தந்தை தாய் பேண்" என்றும் அறிவுறுத்துகிறது. சீராக் ஞான நூலில் ஆண்டவருக்கு அஞ்சும் மனிதர் தம் தாய் தந்தையை மதிப்பர். அவர்கள் நீண்டக் காலம் வாழ்வர் என்று கூறும் இந்த இறைவார்த்தைகளுக்குக் கவனமுடன் செவிமெடுப்போம். பெற்றோரைப் போற்றிடுவோம்.


இன்றைய இரண்டாம் வாசகத்தில் ஆண்டவருக்கு உகந்தக் குடும்ப வாழ்வு எப்படி? என்று எடுத்துரைக்கிறது. அதன்படி நடந்தால் ஒவ்வொரு குடும்பமும் திருக்குடும்பமாகத் திகழும். குடும்பத்தில் சிறந்து விளங்க வேண்டிய நற்பண்புகள் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, பொறுமை இவை அனைத்திற்கும் மேலாக இந்நற்பண்புகளளை எல்லாம் பிணைத்து நிறைவு செய்வது அன்பே என்று அழைக்கும் திருத்தூதர் பவுலடியரின் திருமுகத்திலிருந்து வாசிக்கப்படும் இவ்வாசகத்தைக் கவனமுடன் செவிமெடுப்போம். அன்பில் இணைந்திருப்போம்.

பதிலுரைப் பாடல்


திபா 128: 1-2,3,4-5

பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்.

1.ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!  உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர். -பல்லவி

2.உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி
3.ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! –பல்லவி

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:


1.உம் திருக்குடும்பம் வழியாக எமக்கு வழிகாட்டிய இறைவா! திருபேரவையாம் இத்திருசவையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், இருபால் துறவிகள், பொதுநிலையினர் அனைவரின் உள்ளத்தில் உமது அன்பையும், பரிவிரக்கத்தையும் நிறைவாகப் பொழிந்து ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இறையரசை அறிவிக்கும் கருவிகளாய் வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா! எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்குச் சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்புப் பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க ஏழைப்போல் பிறந்த இயேசுவே, உமது பிறப்பின் மகிழ்ச்சியை எங்களில் உள்ள ஏழைக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும் பகிர்ந்துக் கொள்ளவும், வறுமையினாய் அவதியுறும் மக்களுடன் பணிபுரியவும், அவர்களின் வாழ்க்கை ஆதாரங்களை உயர்த்திட உதவிடவும் வரமருள வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பைப் பகிர்ந்த அளிக்க எம்மைத் தேடிவந்த எம் அன்பு இறைவா! இந்த நல்ல நாளில் கணவன் மனைவி பிள்ளைகள் என்று மகிழ்வுடன் வாழ, இவ்வலகில் எதிர்நீச்சல் போட்டு அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்த வரம் அருள் தரம் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. குடும்பங்களை உம் அன்பில் இணைத்திடும் எம் இறைவா! எங்கள் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களை உமக்கு ஒப்படைக்கின்றோம். ஒருவரை ஒருவர் பரிந்து கொண்டு, விட்டு கொடுத்து குடும்பங்களில் நீர் விரும்பும் அன்பு, அமைதி, இறை அச்சம் நிறைந்து நல்ல கிறிஸ்தவ குடும்பங்களாக வாழ வரம் வழங்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

www.anbinmadal.org

No comments:

Post a Comment