Wednesday, July 10, 2024

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

ஆண்டின் பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு

 

இன்றைய வாசகங்கள்

ஆமோஸ் 7: 12-15
எபேசியர் 1:3-14
மாற்கு 6: 7-13

திருப்பலி முன்னுரை

இயேசுகிறிஸ்துவில் நாமத்தில் அனைவருக்கும் ஆன்பு வாழ்த்துக்கள்!
இன்று நாம் ஆண்டின் 15ஆம் ஞாயிறை கொண்டாடி மகிழ்கின்றோம். . இங்கே கிறிஸ்துவின் மறையுடலில் சங்கமான நம்அனைவரையும் இறைவன் தம் அன்புத்திட்டத்திற்கு அழைப்புவிடுக்கிறார். எவ்வாறு இயேசு தம் சீடர்களை மறைபணிக்குஅனுப்பினாரோ அவ்வாறே நம்மையும் பணிக்கிறார்.

புனித சவேரியரும், குழந்தை தெரசம்மாளும் மறைபரப்பு நாடாகிய  இந்தியாவின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள். ஒருவர் நடைபயணமாகச் சென்று இறையரசைப் பரப்பினார். மற்றவரோ அறைக்குள் இருந்தவாறே தன் செபத்தின் மூலம் அதே பணியைச் செய்தார். இன்றைய வாசகங்கள் அனைத்தும் இவற்றையே நமக்கு உணர்த்துகின்றன.  அனைவருக்கும் இறைபணி உண்டு.

காலில் படிந்த தூசியைத் தட்டுவது போல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களைத் தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு நம்மை இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பை ஏற்று இறைவனின் பணியாளராய் வாழ உறுதி கொண்ட நெஞ்சமும், அன்பு நிறை உள்ளமும் வேண்டி இத்திருப்பலியில் இறைவனை இறைஞ்சிடுவோம் வாரீர் உறுதியுடன்....

வாசக முன்னுரை

முதலாம் வாசக முன்னுரை

ஆடு மாடுகளை மேய்த்து வந்த அப்பாவியாகிய ஆமோஸை இறைவன் அழைத்துப் பெத்தேலில் இறைவாக்கு உரைக்க அனுப்புகிறார். அங்குள்ள குரு அமட்சியா தன் பிழைப்புக்கு ஆபத்து வந்து விட்டதாக  உணர்ந்து ஆமோஸை நாட்டைவிட்டே விரட்ட முற்படுகிறார். ஆனால் இறைவனால் அவர் பணிக்கு முன்குறித்த ஆமோஸ் அங்கே தன் பணியைத் தொடங்குகிறார். ஆமாஸின் இறைவாக்குப்பணிக்கு கொடுக்கப்பட்ட அழைப்பை எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தைக் கேட்டு நமது இறைஅழைப்பை நாமும் உணர்ந்து செயல்படுவோம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுள் நம்மை முன்குறித்துள்ளது நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் அவர்திருமுன் விளங்கும்படி கிறிஸ்துவின் வழியாக நம்மைத் தேர்ந்தெடுத்துள்ளார். கிறிஸ்துவின் இரத்ததால் நமக்கு மீட்பு தந்துள்ளார். நாமும் நமக்கு  மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, நம்பிக்கையின் மூலம் தூயஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளோம். அந்த தூயஆவியால் மீட்படைவோம் என்பதை அறிவுறுத்தும் இரண்டாம் வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

பதிலுரைப் பாடல்

திபா 85: 8-9. 10-11. 12-13
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

1.ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். -பல்லவி

2.பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். -பல்லவி

3.நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!  அல்லேலூயா.

நம்பிக்கையாளரின் மன்றாட்டு:

1.வாழ்க்கையில் வீழ்ந்த மக்களைத் தூக்கிவிடும் கிறிஸ்துவின் கரங்களாக, காணாமல்போன ஆடுகளைத் தேடி அலையும் கிறிஸ்துவின் கால்களாக, ஏழைகள் ஆதரவற்றோர் அழுவோரின் குரலைக்கேட்டு ஆறுதல் தரக் கிறிஸ்துவின் குரலாக, நீதிக்காகச் சமத்துவத்திற்காகச் சமுதாயத்தில் குரல் கொடுக்க எம் திருஅவையில் உள்ள அனைவரும் ஒருமனதோராய் பணியாற்றிட தேவையான அருள்வரங்களை தர வேண்டி உம்மை மன்றாடுகிறோம்.

2.காலங்களைக் கடந்த எம் இறைவா! எம்நாட்டில் உள்ள இளையோர் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3.ஒப்பற்ற நாயகனே எம் இறைவா! இன்றைய நவீன உலகில் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4.எங்கள் குடும்பங்களில் அரசராய் வீற்றிருக்கும் எம் இறைவா! எங்கள் பங்கிலும், எம்குடும்பங்களிலும் உள்ள. எங்கள் அனைவரின் உள்ளத்திலும் ஆவியானவரின் அருளும், இயேசுவின் சீடராய் மாறிட அடிப்படைத் தேவையான அர்ப்பணிப்பு வாழ்வும், அதன் மூலம் உம் அன்பின் ஒளியாய் சுடர் விட்டுப் பணியாளராய் திகழ்ந்திடத் தேவையான ஞானத்தைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5.ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் இறைவா! இன்று நாட்டில் ஏழைகளுக்கான அனைத்து வழிகளும் செல்வந்தர்களாலும், அரசியல்வாதிகளாலும் அடைக்கப்பட்டு வாழ வழியின்றித் தவிக்கும் எம் அன்புச் சகோதர சகோதரிகளுக்கு உம் இரக்கத்தைப் பொழிந்து அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

www.anbinmadal.org


Print Friendly and PDF


No comments:

Post a Comment